Featured Posts
Home » நூல்கள் » உண்மை உதயம் மாத இதழ் » நோன்பும் மருத்துவமும்

நோன்பும் மருத்துவமும்

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்
நோன்பாளி சில மருந்துகளைப் பயன்படுத்தலாமா என்ற சந்தேகம் பலருக்குள்ளது.
குறிப்பாக ஆஸ்துமா, பீனிஸ வருத்தம் உள்ளவர்கள் சுவாசிப்பதை இலகு படுத்துவதற்காக இன்ஹேலர் போன்றவற்றைப் பயன்படுத்துவர். நோன்பு இருக்கும் போது வீசிங் பிரச்சினை ஏற்பட்டால் இதைப் பயன்படுத்தலாமா என்றால் தாராளமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறே ஆவி பிடிப்பதாக இருந்தாலும் பிடிக்கலாம். பெக்லேட் போன்ற டெப்லட் துகல்களைப் பொருத்த வரையில் தவிர்ப்பது சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாகும். ஏனெனில், மருந்து துகல்கள் வாய்வழியே உள்ளே செல்கின்றது. எனவே, இதைத் தவிர்ப்பதே நல்லது.

இவ்வாறே ஊசி மூலம் மருந்து ஏற்றுவதிலும் தப்பில்லை. சேலைன் ஏற்றுவதைப் பொருத்தமட்டில் சேலைன் வழியாக உணவும் ஊட்டப்படுவதுண்டு. சேலைன் மூலமாக மனித உடலுக்குத் தேவையான சத்தும் ஊட்டப்படுகின்றது. எனவே, ஊசி மூலம் மருந்து ஏற்றுவதில் பிரச்சினை இல்லை. சேலைன் என்பது உணவிற்குப் பகரமாகவும் பயன்படுத்தப் படுவதால் அதைத் தவிர்ப்பதே நல்லதாகும். அத்துடன், சேலைன் ஏற்றும் அளவிற்கு நோயாளியாக இருந்தால் அவர் சந்தேகத்துடன் செயற்படுவதை விட நோன்பை விட்டுவிடலாம்.

நோன்பு காலத்தில் மாதத்தீட்டைத் தள்ளிப் போடுவதற்காக மருந்துகளைப் பயன்படுத்த முடியுமா என்ற சந்தேகம் அநேக பெண்களுக்கு ஏற்படுவதுண்டு. நோன்பு காலத்தில் அமல் செய்வதிலுள்ள ஆர்வம், குடும்பத்துடன் நோன்பு நோற்பதில் உள்ள இலகு, பின்னர் நோன்பைக் கழாச் செய்வதில் உள்ள சிரமம் போன்ற காரணங்களால் மாதத்தீட்டை தள்ளிப் போடுவதற்கு மாத்திரைகளைப் பயன்படுத்த விரும்புகின்றனர்.

பொதுவாக மாதத்தீட்டு என்பது அல்லாஹ் பெண்களுக்கு ஏற்படுத்திய இயற்கை நிகழ்வாகும். இயற்கையுடன் இணைந்து செல்வதே சிறந்ததாகும். விடுபடும் நோன்புகளைக் கழாச் செய்து கொள்ள முடியும். இதுவே சிறந்த வழிமுறையுமாகும்.

இதற்கு மாற்றமாக மாத்திரைகளைப் பயன்படுத்துவதாக இருந்தால் அதனால் எந்தப் பக்கவிளைவுகளும் இல்லை என்பது மருத்துவ ரீதியில் உறுதி செய்யப்பட வேண்டும். வேறு உபாதைகள் அதனால் ஏற்படும் என்றால் இஸ்லாம் அதை அனுமதிக்காததுடன் தடுக்கவும் செய்கின்றது.
ஹஜ்ஜுடைய காலங்களில் பெண்களின் மாதத்தீட்டைத் தடுக்கும் விதத்தில் சில செடிகளின் சாறுகளை ஸலபுகள் கொடுப்பார் கள் என்ற செய்தியின் அடிப்படையில் நோன்புக்கும் இப்படி மாதத்தீட்டைத் தள்ளிப் போடலாம் என சில அறிஞர்கள் குறிப்பிட் டுள்ளனர் என்பதும் கவனிக்கத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *