Featured Posts
Home » இஸ்லாம் » பெண்கள் » மாதவிடாய் பெண்களும் ஒழுங்கு முறைகளும்

மாதவிடாய் பெண்களும் ஒழுங்கு முறைகளும்

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர்-
மாதவிடாய் காலங்களில் பெண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் அழகான வழிமுறையை காட்டி தந்துள்ளது. அவைகளை கட்டாயம் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

மாதவிடாய் பெண்ணும், கணவனும்
மாதவிடாய் பெண்களை அன்றைய காலத்தில் யூதர்கள் ஒதுக்கி வந்தார்கள்.அந்த ஹதீஸை முதலில் கவனியுங்கள்.

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
யூதர்கள் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களுடன் அமர்ந்து சாப்பிடமாட்டார்கள்; வீடுகளில் அவர்களுடன் ஒட்டி உறவாடாமல் (ஒதுங்கி) இருப்பார்கள். எனவே, நபி (ஸல்) அவர்களுடைய தோழர்கள் (இது குறித்து) நபியவர்களிடம் கேட்டனர். அப்போது, (நபியே!) அவர்கள் மாதவிடாய் பற்றி உம்மிடம் வினவுகின்றார்கள். அது ஓர் (இயற்கை) உபாதை என்று நீர் கூறுவீராக! எனவே, மாதவிலக்குற்ற போது பெண்களை (தாம்பத்திய உறவு கொள்வதை) விட்டு விலகியிருங்கள்… என்று தொடங்கும் (2:222ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான். அதையடுத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாம்பத்திய உறவைத் தவிர மற்ற காரியங்களைச் செய்துகொள்ளுங்கள் என்று கூறினார்கள்.
இந்தச் செய்தி யூதர்களுக்கு எட்டியபோது, நம்முடைய காரியங்களில் எந்த ஒன்றுக்கும் மாறு செய்யாமல் விடக்கூடாது என்பதே இந்த மனிதரது விருப்பம் என்று கூறினர். எனவே உசைத் பின் ஹுளைர் (ரலி), அப்பாத் பின் பிஷ்ர் (ரலி) ஆகியோர் வந்து, அல்லாஹ்வின் தூதரே! யூதர்கள் இன்னின்னவாறு கூறுகின்றனர். எனவே, (மாதவிடாய் ஏற்பட்டுள்ள) பெண்களுடன் நாமும் ஒட்டி உறவாடாமல் இருந்தாலென்ன? என்று கேட்டனர்.

(இதைக் கேட்டதும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் (கோபத்தால்) நிறமாறிவிட்டது. ஆகவே, (கேள்வி கேட்ட) அவர்கள் இருவர்மீதும் நபியவர்களுக்குக் கோபம் ஏற்பட்டுவிட்டதோ என்று நாங்கள் எண்ணினோம். அவர்கள் இருவரும் புறப்பட்டுச் சென்றதும் நபி (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாக அனுப்பி வைக்கப்பட்ட பால் அவ்விருவரையும் எதிர்கொண்டது. உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்விருவரையும் பின்தொடர்ந்து ஆளனுப்பி அவர்களை அழைத்துவரச் சொன்னார்கள். (அவர்கள் வந்ததும்) அவர்கள் இருவருக்கும் (அந்தப் பாலை) பருகக் கொடுத்தார்கள். தங்கள் மீது நபியவர்களுக்குக் கோபமில்லை என்று அவர்கள் இருவரும் புரிந்துகொண்டனர். முஸ்லிம் 507

இஸ்லாம் மார்க்கத்தில் மாதவிடாய் பெண்களுடன் தாராளமாக ஒன்றாக இருந்து சாப்பிடலாம், தங்கலாம் என்பதை பின் வரும் ஹதீஸ்கள் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.
‘ஒருவர் ‘தம் மனைவி குளிப்புக் கடமையான நிலையில் தம்முடன் நெருங்கலாமா? மாதவிடாய்க்காரி தமக்குப் பணிவிடை செய்யலாமா?’ என்று உர்வாவிடம் கேட்டதற்கு உர்வா ‘அது எல்லாமே என்னிடம் சிறிய விஷயம்தான். (என் மனைவியர்) எல்லோருமே எனக்குப் பணிவிடை செய்வார்கள். அவ்வாறு செய்வதில் யார் மீதும் எந்தக் குற்றமுமில்லை. ஆயிஷா(ரலி)வுக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் அவர்கள் நபி(ஸல்) அவர்களின் தலை முடியைச் சீவி விடுவார்கள். என ஆயிஷா(ரலி) என்னிடம் கூறினார்’ என்றார்” என ஹிஷாம் அறிவித்தார். புகாரி 296

‘நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் ‘இஃதிகாப்’ இருக்கும்போது அங்கிருந்தவாறே என் (அறையின்) பக்கம் தலையைக் காட்டுவார்கள். நான் மாதவிடாய்க் காரியாக இருக்கும் நிலையில் அவர்களின் தலையைக் கழுவுவேன்” என ஆயிஷா(ரலி) அறிவித்தார். புகாரி 301 முஸ்லிம் 497, 499

இந்த ஹதீஸ்கள் மூலம் மாதவிடாய்க் காலத்தில் மனைவியுடன் நெருக்கமாக இருக்கலாம் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். தெடர்ந்து வரும் ஹதீஸை கவனியுங்கள்

‘எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் என்னுடைய மடியில் சாய்ந்து கொண்டு குர்ஆனை ஓதும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள்” என ஆயிஷா(ரலி) அறிவித்தார். புகாரி 297 முஸ்லிம் 506

‘எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது என் இடுப்பில் ஆடையைக் கட்டிக் கொள்ளுமாறு நபி(ஸல்) அவர்கள் என்னிடம் கூறுவார்கள். (நான் அவ்வாறே செய்வேன்) அவர்கள் என்னை அணைத்துக் கொள்வார்கள்” என ஆயிஷா(ரலி) அறிவித்தார். புகாரி 300

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது நான் (ஏதேனும் பானத்தைப்) பருகிவிட்டு அதை நபி (ஸல்) அவர்களிடம் கொடுப்பேன். அப்போது அவர்கள் நான் வாய் வைத்த இடத்தில் தமது வாயை வைத்து அருந்துவார்கள். மாதவிடாய் எற்பட்டிருந்த நான் இறைச்சியுள்ள எலும்புத் துண்டைக் கடித்துவிட்டு அதை நபியவர்களிடம் கொடுப்பேன். நான் வாய் வைத்த இடத்தில் அவர்கள் தமது வாயை வை(த்துப் புசி)ப்பார்கள். முஸ்லிம் 505.

கணவன் மனைவி சேர்ந்து குளித்தல்
பொதுவாக கணவன் மனைவி தாராளமாக ஒன்றாக ஒரே நேரத்தில் சேர்ந்து குளிக்கலாம் . அதே நேரம் மாதவிடாய் காலங்களிலும் சேர்ந்து குளிப்பதற்கான ஆதாரத்தை அவதானியுங்கள்.

‘நானும் நபி(ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்தில் (ஒன்றாக நீரள்ளி) கடமையான குளிப்பைக் குளித்தோம்” என ஆயிஷா(ரலி) அறிவித்தார். புகாரி 299

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் பெருந்துடக்குடையவர்களாய் இருக்கும் போது ஒரே பாத்திரத்திலிருந்து (தண்ணீர் அள்ளிக்) குளிப்போம். அது எனக்கும் அவர்களுக்கும் இடையே இருக்கும். அப்போது அவர்கள் என்னை முந்திக்கொண்டு தண்ணீர் அள்ளுவார்கள். அப்போது நான் எனக்கும் விட்டுவையுங்கள்; எனக்கும் விட்டு வையுங்கள் என்று கூறுவேன். முஸ்லிம் 537

மாதவிடாய் மனைவியுடன் சேர்ந்து உறங்குதல்
‘நான் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு போர்வையைப் போர்த்திப் படுத்துக் கொண்டிருந்தபோது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது. மாதவிடாய்க் காலத்தில் அணியும் துணியை எடுப்பதற்காக நபி(ஸல்) அவர்களுக்குத் தெரியாதவாறு அந்த இடத்தைவிட்டு நகர்ந்தேன். ‘உனக்கு நிஃபாஸ் (மாதவிடாய்) ஏற்பட்டுவிட்டதா?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். ‘ஆம்’ என்றேன். ஆயினும் அவர்கள் என்னை அருகில் வரக் கூறினார்கள். நான் அவர்களோடு போர்வைக்குள் படுத்துக் கொண்டேன்” என உம்முஸலமா(ரலி) அறிவித்தார். புகாரி 298

மாதவிடாய் பெண் குளித்தல் முறை
மாதவிடாய் பெண் எப்படி குளிக்க வேண்டும் என்று கேட்ட நேரத்தில் பின்வருமாறு நபியவர்கள் கூறினார்கள்.

‘ஒரு பெண், நபி(ஸல்) அவர்களிடம் வந்து ‘மாதவிடாய் நின்ற பின்பு எப்படிக் குளிக்க வேண்டும்?’ என கேட்டபோது, நபி(ஸல்) அவர்கள் அவள் குளிக்கும் முறையை அவளுக்குக் கூறிவிட்டு, ‘கஸ்தூரி வைக்கப்பட்ட பஞ்சை எடுத்து அதனால் நீ சுத்தம் செய்’ என்றார்கள். அப்போது ‘நான் எப்படிச் சுத்தம் செய்ய வேண்டும்?’ என அப்பெண் கேட்டார். ‘அதைக் கொண்டு நீ சுத்தம் செய்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மீண்டும் அந்தப் பெண் ‘எப்படி?’ என்று கேட்டபோது ‘ஸுபஹானல்லாஹ்! சுத்தம் செய்து கொள்!’ என்று கூறினார்கள். உடனே நான் அந்தப் பெண்ணை என் பக்கம் இழுத்து ‘கஸ்தூரி கலந்த பஞ்சைக் கொண்டு இரத்தம் பட்ட இடத்தில் வைத்துச் சுத்தம் செய்’ என்று அவளிடம் கூறினேன்” என ஆயிஷா(ரலி) அறிவித்தார். புகாரி 314

‘இறந்தவர்களுக்காக மூன்று நாள்களுக்கு மேல் துக்கத்தை வெளிப்படுத்துவதற்கு தடுக்கப்பட்டுள்ளோம். ஆனால் கணவன் இறந்த பின்னர் அவனுடைய மனைவி நான்கு மாதம் பத்து நாள்கள் துக்கத்தை வெளிப்படுத்த வேண்டும். இந்த நாள்களில் நாங்கள் சுருமா இடவோ, மணப் பொருட்களைப் பூசவோ, சாயமிடப் பட்ட ஆடைகளை அணியவோ கூடாது. ஆனால் நெய்வதற்கு முன் நூலில் சாயமிடப்பட்டு தயாரிக்கப்பட்ட ஆடைகளை அணியலாம். எங்களில் ஒருத்தி மாதவிடாயிலிருந்து நீங்கக் குளிக்கும்போது மணப் பொருளைப் பயன்படுத்துவது அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செல்வதைவிட்டும் தடுக்கப்பட்டுள்ளோம்” என உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார்.. ‘இறந்தவர்களுக்காக மூன்று நாள்களுக்கு மேல் துக்கத்தை வெளிப்படுத்துவதற்கு தடுக்கப்பட்டுள்ளோம். ஆனால் கணவன் இறந்த பின்னர் அவனுடைய மனைவி நான்கு மாதம் பத்து நாள்கள் துக்கத்தை வெளிப்படுத்த வேண்டும். இந்த நாள்களில் நாங்கள் சுருமா இடவோ, மணப் பொருட்களைப் பூசவோ, சாயமிடப் பட்ட ஆடைகளை அணியவோ கூடாது. ஆனால் நெய்வதற்கு முன் நூலில் சாயமிடப்பட்டு தயாரிக்கப்பட்ட ஆடைகளை அணியலாம். எங்களில் ஒருத்தி மாதவிடாயிலிருந்து நீங்கக் குளிக்கும்போது மணப் பொருளைப் பயன்படுத்துவது அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செல்வதைவிட்டும் தடுக்கப்பட்டுள்ளோம்” என உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார். புகாரி 313 முஸ்லிம் 551

மாதவிடாய் பட்ட ஆடை?
தான் அணிந்திருக்கும் ஆடை எப்போதும் சுத்தமாகவே வைத்திருக்க வேண்டும். அதே நேரம் மாதவிடாயிலிருந்து சுத்தமான பிறகு, குளித்து விட்டு மாதவிடாய் பட்ட ஆடையை அணியலாமா ? என்பதை நபிமொழிகள் மூலம் அறிந்து கொள்வோம்.

‘ஒரு பெண் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! எங்களில் ஒரு பெண்ணின் துணியில் மாதவிடாய் இரத்தம் பட்டால் அவள் எவ்வாறு (சுத்தம்) செய்ய வேண்டும்?’ என்று கேட்டதற்கு, ‘உங்களில் ஒருத்தியின் ஆடையில் மாதவிடாய் இரத்தம் பட்டால் அதைச் சுரண்டிவிட்டுப் பின்னர் அந்த இடத்தில் தண்ணீர் தெளித்து விடட்டும். அதன் பின்னர் அந்த ஆடையுடன் தொழுது கொள்ளலாம்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவித்தார். புகாரி 307

எங்களில் ஒருவருக்கு மாதவிடாய் ஏற்படும்போது அவர் தன்னுடைய ஆடையில் இரத்தம் பட்ட இடத்தைச் சுத்தம் செய்வதற்காகஆடையிலிருந்து இரத்ததைச் சுரண்டிவிட்டு, அந்த இடத்தைக் கழுவியப் பின்னர் ஆடையின் இதர இடங்களிலும் தண்ணீர் தெளித்து அந்த ஆடையுடன் தொழுவார்” என ஆயிஷா(ரலி) அறிவித்தார். புகாரி 308

‘எங்களில் ஒருவருக்கு ஓர் ஆடை மட்டுமே இருக்கும். அதில்தான் அவரின் மாதவிடாய் ஏற்படும். ஏதாவது இரத்தம் அந்த ஆடையில் பட்டால் தங்களின் எச்சிலைத் தொட்டு அந்த இடத்தில் வைத்துத் தங்களின் நகத்தால் சுரண்டி விடுவார்கள்” என ஆயிஷா(ரலி) அறிவித்தார். புகாரி 312

எனவே வேறு ஆடை இருக்கு்ம் என்றால் ஆடையை மாற்றி அணிந்து கொள்ள முடியும். வேறு ஆடை இல்லா விட்டால் இரத்தம் பட்ட இடத்தை கழுவி விட்டு அதே ஆடையை அணிந்து கொளள்ள முடியும்.

தொடர் உதிரப் போக்கு
சில பெண்களுக்கு மாதவிடாய் வழமையான நாட்களை விட தொடராக உதிரப் போக்கு ஏற்பட்டால் அவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை பின் வரும் ஹதீஸ்கள் தெளிவுப் படு்த்துவதை காணலாம்.

‘பாத்திமா பின்த் அபீ ஹுபைஷ் என்ற பெண் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் (இரத்தப் போக்கிலிருந்து) சுத்தமாவதே இல்லை. எனவே நான் தொழுகையைவிட்டு விடலாமா?’ என்று கேட்டதற்கு, ‘அது ஒரு நரம்பு நோய். அது மாதவிடாயன்று. மாதவிடாய் ஏற்படும்போது தொழுகையைவிட்டு விடு. மாதவிடாய்க் காலம் கழிந்ததும் இரத்தத்தைச் சுத்தம் செய்துவிட்டுத் தொழுது கொள்’ என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்” என ஆயிஷா(ரலி) அறிவித்தார். புகாரி 306

‘உம்மு ஹபீபா என்ற பெண் ஏழு ஆண்டுகள் உதிரப் போக்குடையவராக இருந்தார். இது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்டபோது, குளிக்குமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டு, ‘இது ஒரு நோய்’ என்று கூறினார்கள். (இதனால்) ஒவ்வொரு தொழுகைக்கும் அப்பெண் குளிப்பவராக இருந்தார்” என ஆயிஷா(ரலி) அறிவித்தார். புகாரி 327 முஸ்லிம் 553

மேற்ச் சுட்டிக்காட்டிய ஹதீஸின் படி வழமையான நாட்களை விட தொடராக உதிரப் போக்கு ஏற்ப்படுமேயானால் அது மாதவிடாய் அல்ல, மாதவிடாயிலிருந்து சுத்மான பிறகு ஒவ்வொரு வக்து தொழுகைக்கும் வுளு செய்து கொள்ள வேண்டும். அல்லது குளித்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு வக்துக்கும் குளித்து நோயை இழுத்தக் கொள்ளக் கூடாது. உடல் நிலையை கவனித்து நடந்து கொள்ள வேண்டும்.

மாதவிடாய் பெண்களும், தொழுகையும்
மாதவிடாய் பெண்கள் அந்த நாட்களில் எந்த தொழுகையையும் தொழுக் கூடாது. அது போல அந்த நாட்களில் விடுப்பட்ட தொழுகைகளை களா செய்யவும் கூடாது. என்பதை பின் வரும் ஹதீஸ் தெளிவுப் படுத்துகிறது.

‘பெண்கள் மாதவிடாயிலிருந்து சுத்தமான பின்னர் தொழுதால் மட்டும் போதுமா?’ என்று ஒரு பெண் ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்டதற்கு, ‘நீ ‘ஹரூர்’ எனும் இடத்தைச் சார்ந்த பெண்ணா? நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருக்கும்போது எங்களுக்கு மாதவிடாய் ஏற்படும். அப்போது எங்களிடம் விடுபட்ட தொழுகையைத் தொழுமாறு ஏவ மாட்டார்கள்’ என்று அல்லது அத்தொழுகையை நாங்கள் தொழ மாட்டோம்” என்று ஆயிஷா(ரலி) கூறினார்” என முஆதா அறிவித்தார். புகாரி 321

மாதவிடாய் பெண்களும் அமல்களும்
மாதவிடாய் பெண்கள் தொழத் தான் கூடாது ஆனால் வேறு ஏனைய அமல்களை தாராளமாக செய்யலாம் என்பதை பின் வரும் ஹதீஸ்கள் உறுதிப் படுத்துவதை கனியுங்கள்.

நபி(ஸல்) அவர்களின் மனைவியரில் ஒருவர் உதிரப் போக்கினால் இரத்தத்தைக் காண்பவராக இருந்த நிலையில் நபி(ஸல்) அவர்களுடன் இஃதிகாப் இருந்தார்கள். சில வேளை இரத்தத்தின் காரணமாக தமக்குக் கீழே ஒரு தட்டை வைத்துக் கொள்வார்கள்” என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
“மஞ்சள் நிற நீரைப் பார்த்ததாகவும் ‘இது இன்னவளுக்கு ஏற்படுகிற ஒன்றைப் போன்றே’ என்று ஆயிஷா(ரலி) கூறினார்” என்றும் இக்ரிமா கூறினார். புகாரி 309

நாங்கள் இரண்டு பெருநாள்களிலும் தொழும் இடத்திற்குச் செல்வதைவிட்டும் எங்கள் குமரிப் பெண்களைத் தடுத்துக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு பெண் வந்து பனீ கலஃப் வம்சத்தினரின் இல்லத்தில் தங்கியிருந்தார். அவர் தங்களின் சகோதரி (உம்மு அதிய்யா) வழியாக வந்த செய்தியை அறிவித்தார். அவரின் சகோதரி (உம்மு அதிய்யா) நபி(ஸல்) அவர்களோடு தம் கணவர் பங்கெடுத்த பன்னிரண்டு போர்களில் ஆறு போர்களில் கணவரோடு இருந்தார்.

‘நாங்கள் போர்க்களத்தில் காயமுற்றவர்களுக்குச் சிகிச்சையளிப்போம். நோயாளியைக் கவனிப்போம். நான் நபி(ஸல்) அவர்களிடம் எங்களில் ஒருத்திக்கு மேலங்கி இல்லாவிட்டால் (பெரு நாள் தொழுகைக்கு) செல்லாமல் இருப்பது குற்றமா?’ என நான் கேட்டதற்கு, ‘அவளுடைய தோழி தன்னுடைய உபரியான மேலங்கியை அவளுக்கு அணியக் கொடுக்கட்டும். அவள் நன்மையான காரியங்களிலும் முஸ்லிம்கதளின் பிரச்சாரத்திலும் கலந்து கொள்ளட்டும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ என்றார்.

உம்மு அதிய்யா(ரலி) வந்தபோது ‘நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூற நீங்கள் கேட்டீர்களா?’ என நான் கேட்டதற்கு ‘என்னுடைய தந்தை அர்ப்பணமாகட்டும்; ஆம்! கேட்டேன்’ எனக் கூறினார். இவர் நபி(ஸல்) அவர்களின் பெயரைக் கூறும் போதெல்லாம் ‘என்னுடைய தந்தை அர்ப்பணமாகட்டும்’ என்பதையும் சேர்த்தே கூறுவார்.

‘கன்னிப் பெண்களும் மாதவிடாய்ப் பெண்களும் (பெருநாளன்று) வெளியே சென்று நன்மையான காரியங்களிலும் முஸ்லிம்களின் பிரச்சாரத்திலும் பங்கு கொள்வார்கள். பெருநாள் தொழுகை நடக்கும் இடத்திற்குச் செல்லும் மாதவிடாய்ப் பெண்கள் தொழும் இடத்தைவிட்டு ஒதுங்கி இருப்பார்கள்’ என்றும் உம்மு அதிய்யா(ரலி) கூறினார். இதைக் கேட்ட நான் மாதவிடாய்ப் பெண்களுமா? எனக் கேட்டதற்கு, ‘மாதவிடாய்ப் பெண் அரஃபாவிலும் மற்ற (மினா முஸ்தலிஃபா போன்ற) இடங்களுக்கும் செல்வதில்லையா?’ என்று உம்மு அதிய்யா(ரலி) கேட்டார்” என ஹஃப்ஸா அறிவித்தார். புகாரி 324

நபி(ஸல்) அவர்களின் இறுதி ஹஜ்ஜின்போது நபி(ஸல்) அவர்களோடு சென்றோம். எங்களில் உம்ரா செய்வதற்காக இஹ்ராம் அணிந்தவர்களும் இருந்தனர். ஹஜ் செய்வதற்காக இஹ்ராம் அணிந்தவர்களும் இருந்தனர். நாங்கள் மக்காவை அடைந்ததும் ‘உங்களில் குர்பானிப் பிராணியைத் தம்முடன் கொண்டு வராமல் உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்தவர்கள் (உம்ரா கடமைகளை நிறைவேற்றிவிட்டு) இஹ்ராமிலிருந்து விலகி கொள்ளலாம். உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்து தங்களுடன் குர்பானிப் பிராணியைக் கொண்டு வந்திருப்பவர்கள் தங்களின் குர்பானியைப் பத்தாவது நாளன்று அறுக்கும் வரை தங்களின் இஹ்ராமிலிருந்து விலக வேண்டாம். ஹஜ்ஜிற்காக மட்டும் இஹ்ராம் அணிந்திருப்பவர்கள் தங்களின் ஹஜ்ஜை நிறைவேற்றட்டும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. அது அரஃபா நாள் வரை நீடித்தது. நான் உம்ராவிற்காகத்தான் இஹ்ராம் அணிந்திருந்தேன். (இதை நபி(ஸல்) அவர்களிடம் தெரிவித்தேன்) என்னுடைய தலை முடியை அவிழ்த்துவிட்டு அதை வாரி விடுமாறும், நான் உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்ததைவிட்டுவிட்டுத் திரும்ப ஹஜ்ஜிற்காக இஹ்ராம் அணிந்து கொள்ளுமாறும் எனக்குக் கட்டளையிட்டார்கள். நான் அவ்வாறே செய்தேன். என்னுடைய ஹஜ்ஜை நிறைவேற்றிய பின்னர் என்னுடன் (என்னுடைய சகோதரர்) அப்துர்ரஹ்மானை அனுப்பி, தன்யீம் என்ற இடத்திலிருந்து எனக்குவிடுபட்ட உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்து வருமாறு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்” என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

சில பெண்கள் மாதவிடாய் செல்லும் இடத்தில் வைத்துக் கட்டிய பஞ்சு மஞ்சள் நிறமாக இருக்கும்போது அதை ஆயிஷா(ரலி) அவர்களிடம் அனுப்பி மாதவிடாய் இரத்தம் நின்றுவிட்டதா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்வார்கள். அப்போது ‘மாதவிடாய் செல்லும் இடத்தில் வைக்கப்படும் பஞ்சு வெள்ளை நிறமாகக் காணும் வரை நீங்கள் அவசரப்பட்டு மாதவிடாயிலிருந்து சுத்தமாகி விட்டீர்கள் என்று கருதவேண்டாம்’ என்று அப்பெண்களுக்கு ஆயிஷா(ரலி) கூறினார். சில பெண்கள் நடு இரவில் விளக்குகளைக் கொண்டு வரச் செய்து மாதவிடாயிலிருந்து சுத்தமாகி விட்டோமா என்பதைப் பார்ப்பார்கள் என்ற செய்தி ஜைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்களின் மகளுக்குக் கிடைத்தபோது, ‘நபி(ஸல்) காலத்துப் பெண்மணிகள் இப்படியெல்லாம் செய்ய மாட்டார்கள்’ என்று இப்படி செய்யும் பெண்களைக் குறை கூறினார்கள்”. புகாரி 319

விந்து பட்ட ஆடைய கழுவ வேண்டுமா?
துாக்கத்தில் கனவின் மூலம் விந்து வெளிப்பட்டால் என்ன செய்ய வேண்டும். இது ஆண்களுக்கும், பெண்களுக்கும். ஏற்படும். பின் வரக்கூடிய ஹதீஸை அவதானியுங்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு பெண்மணி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ஒரு பெண்ணுக்குத் தூக்கத்தில் ஸ்கலிதம் ஏற்பட்டுத் தம்மீது அவள் (மதன)நீரைக் கண்டால் அவள்மீது குளியல் கடமையாகுமா? என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆம் என்று பதிலளித்தார்கள்.
அப்போது நான் அந்தப் பெண்ணிடம், உன் கைகள் மண்ணைக் கவ்வட்டும்; காயமடையட்டும் என்று கூறினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவரை விட்டுவிடு! (தாயுக்கும் சேயுக்குமிடையே) இதை முன்னிட்டுத் தானே உருவ ஒற்றுமையே (சாயல்) ஏற்படுகிறது! பெண்ணுடைய நீர் (கருமுட்டை) ஆணுடைய நீரை (விந்தணுவை) விட மேலோங்கி (முந்தி) விட்டால் குழந்தை தன் தாயின் சகோதரர்களது (மாமன்) சாயலில் பிறக்கிறது. ஆணுடைய நீர் பெண்ணுடைய நீரைவிட மேலோங்கிவிட்டால் அது தன் தந்தையின் சகோதரர்களது (பெரியப்பன், சிற்றப்பன்) சாயலில் பிறக்கிறது என்று கூறினார்கள். முஸ்லிம் 524

மேலும் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அடிமையாயிருந்த ஸவ்பான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் நின்று கொண்டிருந்தேன். அப்போது யூத அறிஞர் ஒருவர் வந்து, முஹம்மதே! அஸ்ஸலாமு அலைக்க! என்று (முகமன்) கூறினார். உடனே நான் அவரைப் பிடித்து ஒரு தள்ளு தள்ளினேன். அவர் நிலை தடுமாறி விழப்போனார். அவர், ஏன் என்னைத் தள்ளுகிறாய்? என்று கேட்டார். நான்,அல்லாஹ்வின் தூதரே! என்று நீர் சொல்லக்கூடாதா (முஹம்மத் என்று பெயர் கூறி அழைக்கிறீரே)? என்று கேட்டேன். அதற்கு அந்த யூதர், அவருடைய குடும்பத்தார் அவருக்கு இட்ட பெயரால்தான் அவரை நாம் அழைக்கின்றோம் என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எனது பெயர் முஹம்மத் தான். இதுவே என் குடும்பத்தார் எனக்கு இட்ட பெயர் என்று சொன்னார்கள். அந்த யூதர், உங்களிடம் நான் (சில விஷயங்கள் குறித்து) கேட்பதற்காகவே வந்தேன் என்று கூறினார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நான் கூறப்போகும் எந்த விஷயமும் உமக்குப் பயனளிக்குமா? என்று கேட்டார்கள். அவர், நான் காது கொடுத்துக் கேட்பேன் என்றார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்மிடமிருந்த ஒரு குச்சியால் தரையைக் கீறியவாறு (ஆழ்ந்த சிந்தனையுடன்), கேளுங்கள்! என்றார்கள்.

அந்த யூதர், இந்த பூமியும் வானங்களும் இப்போதுள்ள அமைப்பல்லாத வேறோர் அமைப்பிற்கு மாற்றப்படும் (விசாரணை) நாளில் மக்கள் எங்கே இருப்பார்கள்? என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அஸ்ஸிராத் எனும்) பாலத்திற்கு அருகே இருளில் அவர்கள் இருப்பார்கள் என்று பதிலளித்தார்கள். அவர்,மக்களிலேயே முதன்முதலில் (அந்தப் பாலத்தைக்) கடப்பவர்கள் யார்? என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஏழை முஹாஜிர்கள் என்று பதிலளித்தார்கள். அந்த யூதர், அவர்கள் சொர்க்கத்துக்குள் நுழையும்போது அவர்களுக்கு வழங்கப்படும் வெகுமதி என்ன? என்று கேட்டார். அதற்கு மீனின் ஈரலில் ஒட்டிக்கொண்டிருக்கும் தனித்துண்டு என்று பதிலளித்தார்கள். அதற்கடுத்து அவர்களுக்கு வழங்கப்படும் உணவு என்ன? என்று அவர் கேட்க,சொர்க்கத்தின் ஓரங்களில் மேய்ந்துகொண்டிருக்கும் காளைமாடு அவர்களுக்காக அறு(க்கப்பட்டு விருந்தளி)க்கப்படும் என்று பதிலளித்தார்கள். அதற்குப் பின் அவர்கள் எதை அருந்துவார்கள்? என்று அவர் கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அங்குள்ள ஸல்ஸபீல் என்றழைக்கப்படும் நீரூற்றிலிருந்து (அருந்துவார்கள்) என்று பதிலளிக்க, அவர் நீர் கூறியது உண்மையே என்று கூறினார்.

பிறகு பூமியில் வசிப்பவர்களில் ஓர் இறைத்தூதர் அல்லது ஓரிரண்டு மனிதர்கள் தவிர வேறெவரும் அறிந்திராத ஒரு (குறிப்பிட்ட) விஷயத்தைப் பற்றிக் கேட்கவே நான் உம்மிடம் வந்தேன் என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நான் கூறப்போகும் விஷயம் உமக்குப் பயன் தருமா? என்று கேட்டார்கள். அவர் நான் காது கொடுத்துக் கேட்பேன் என்றார். பிறகு அவர், குழந்தை(யின் பிறப்பு) குறித்துக் கேட்பதற்காக நான் உம்மிடம் வந்தேன் என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆணின் நீர் (விந்து) வெண்ணிறமுடையதும் பெண்ணின் (மதன)நீர் மஞ்சள் நிறமுடையதுமாகும். அவையிரண்டும் சேரும்போது ஆணின் நீர் (விந்து உயிரணு) பெண்ணின் நீரை (சினை முட்டையை) மிகைத்துவிட்டால், அல்லாஹ்வின் நியதிப்படி ஆண் குழந்தை பிறக்கும். (இதற்கு மாறாக) பெண்ணின் நீர் (சினை முட்டை), ஆணின் நீரை (விந்து உயிரணுவை) மிகைத்துவிட்டால் அல்லாஹ்வின் நியதிப்படி பெண் குழந்தை பிறக்கும் என்று பதிலளித்தார்கள்.

அந்த யூதர், நீர் சொன்னது உண்மைதான். நிச்சயமாக நீர் ஓர் இறைத்தூதர் (நபி)தாம் என்று கூறிவிட்டுத் திரும்பிச் சென்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இவர் எவற்றைக் குறித்து என்னிடம் கேட்டாரோ அவற்றைக் குறித்து நான் ஏதும் அறியாதவனாகத்தான் இருந்தேன். அல்லாஹ்தான் அவற்றை எனக்கு அறிவித்துத்தந்தான் என்று கூறினார்கள்.
– மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருகில் அமர்ந்துகொண்டிருந்தேன் என்று ஸவ்பான் (ரலி) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது. மேலும், (மீனில் ஈரலில் ஒட்டிக்கொண்டிருக்கும் தனித்துண்டு என்பதைக் குறிக்க ஸியாதத் எனும் சொல்லுக்கு பதிலாக) ஸாயிதத் எனும் சொல்லும், (ஆண் குழந்தை பிறக்கும்; பெண் குழந்தை பிறக்கும் என்பதைச் சுட்ட) அத்கரா மற்றும் ஆனஸா எனும் இருமை வாசகத்திற்கு பதிலாக, அத்கர மற்றும் ஆனஸ எனும் ஒருமை வாசகமும் இடம் பெற்றுள்ளன. முஸ்லிம் 525

மேலும் “அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு பெண்மணி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ஆண் உறக்கத்தில் காண்பதைப் பெண் கண்டால் (அவள் என்ன செய்ய வேண்டும்)? என்று கேட்டார். அதற்கு அவர்கள், ஆணுக்கு ஏற்படுவதைப் போன்றே பெண்ணுக்கும் (ஸ்கலிதம்) ஏற்பட்டால் அவள் குளிக்க வேண்டும் என்று பதிலளித்தார்கள். முஸ்லிம் 522

எனவே கனவின் மூலம் விந்து வெளிப்பட்டு ஈரத்தை பெற்றுக் கொண்டால் குளிக்க வேண்டும் என்பதை தான் அந்த ஹதீஸ் தெளிவுப் படுத்துகிறது. இது ஆண்களுக்கும், பெண்களுக்கம் ஏற்படும்.

விந்து நீரின் தன்மை
ஆணின் விந்துவின் தன்மை வெண்மையாகவும், பெண்ணின் நீரின் தன்மை மஞ்சள் நிறமாகவும் காணப்படும், என்பதை பின் வரும் ஹதீஸின் மூலம் அறியலாம்.

உம்மு சுலைம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ஓர் ஆண்மகன் தூக்கத்தில் காண்பதைப் போன்று தனது தூக்கத்தில் காணும் பெண்ணைப் பற்றி (அவள்மீது குளியல் கடமையாகுமா? என்று) கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவ்வாறு ஒரு பெண் கண்டால் அவள் குளித்துக் கொள்ளவேண்டும் என்று கூறினார்கள். (இவ்வாறு நான் கேட்டுவிட்டு) அதற்காக நானே வெட்கப்பட்டேன். மேலும், இவ்வாறு (பெண்ணுக்கும் தூக்கத்தில் ஸ்தலிதம்) ஏற்படுமா? என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஆம்; பிறகு எப்படி (தாயின்) சாயல் (சேயில்) ஏற்படுகிறது? ஆணின் நீர் (விந்து) வெள்ளை நிறத்தில் கெட்டியானதாய் இருக்கும்; பெண்ணின் (மதன) நீர் மஞ்சள் நிறத்தில் இளகலானதாய் இருக்கும். இவ்விரு(வரின்) நீரில் எது மேலோங்கிவிடுகிறதோ அல்லது முந்திக்கொண்டுவிடுகிறதோ அந்தச் சாயலில்தான் குழந்தை பிறக்கிறது என்று கூறினார்கள். முஸ்லிம் 521

இந்திரத் துளி ஆடையில் பட்டால்…
விந்து ஆடையில் பட்டால் அது ஈரமாக இருந்தால் அதை எப்படி சுத்தம் செய்ய வேண்டும், காய்ந்து இருந்தால் அதை எப்படி சுத்தம் செய்ய வேண்டும் என்பதை பின் வரும் ஹதீஸ்கள் மூலம் நாம் அறியலாம்.

அம்ர் பின் மைமூன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் சுலைமான் பின் யசார் (ரஹ்) அவர்களிடம் ஒருவரது ஆடையில் இந்திரியம் பட்டு விட்டால் அ(து பட்ட இடத்)தை (மட்டும்) கழுவ வேண்டுமா? அல்லது அந்த ஆடையையே கழுவ வேண்டுமா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாக (பின்வருமாறு) கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது ஆடையில் பட்ட) இந்திரியத்தை (மட்டும்) கழுவிவிட்டு அதே ஆடையில் தொழுகைக்காகப் புறப்பட்டுச் செல்வார்கள். அந்த ஆடையில் கழுவியதற்குரிய அடையாளத்தை (ஈரத்தை) நான் காண்பேன்.

– மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் இப்னு அபீஸாயிதா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் இந்திரிய(ம் பட்ட இட)த்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கழுவுவார்கள் என்று இடம்பெற்றுள்ளது.
இப்னுல் முபாரக் (ரஹ்) மற்றும் அப்துல் வாஹித் பின் ஸியாத் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆடையிலிருந்து அதை நான் கழுவுவேன் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது. முஸ்லிம் 488

மேலும் “ அஸ்வத் (ரஹ்) மற்றும் ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) ஆகியோர் கூறியதாவது:
இந்திரியம் பற்றி ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகையில், அதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆடையிலிருந்து சுரண்டிவிடுவேன் என்று குறிப்பிட்டார்கள்.

மேலும் “ அல்கமா (ரஹ்) மற்றும் அஸ்வத் (ரஹ்) ஆகியோர் கூறியதாவது:
ஒரு மனிதர் (அன்னை) ஆயிஷா (ரலி) அவர்களிடம் (விருந்தினராகத்) தங்கினார். அவர் காலையில் தமது ஆடையைக் கழுவினார். (இதைக் கண்ட) ஆயிஷா (ரலி) அவர்கள், அது உமது ஆடையில் தென்பட்டால் அந்த இடத்தைக் கழுவினால் போதும். அவ்வாறு அது தென்படாவிட்டால் அந்த இடத்தைச் சுற்றிலும் தண்ணீர் தெளித்துவிடுவீராக! நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆடையில்பட்ட இந்திரியத்தை நன்கு சுரண்டிவிடுவேன். அந்த ஆடையை அணிந்துகொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுவார்கள் என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. முஸ்லிம் 485

மேலும் “அப்துல்லாஹ் பின் ஷிஹாப் அல்கவ்லானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் (அன்னை) ஆயிஷா (ரலி) அவர்களிடம் (ஒரு நாள் விருந்தினராகத்) தங்கியிருந்தேன். இரு ஆடைகளில் (உறங்கிய) எனக்கு உறக்கத்தில் ஸ்கலிதம் ஏற்பட்டது. எனவே, அவ்விரு ஆடைகளையும் (கழுவுவதற்காகத்) தண்ணீரில் முக்கி வைத்தேன். இதை ஆயிஷா (ரலி) அவர்களின் பணிப்பெண் பார்த்துவிட்டு(ப் போய்) ஆயிஷாவிடம் தெரிவித்துவிட்டார். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் என்னை வரச்சொல்லி ஆளனுப்பினார்கள். (நான் சென்றேன்.) அப்போது அவர்கள், உங்கள் ஆடைகளை இவ்வாறு நீங்கள் செய்யக் காரணமென்ன? என்று கேட்டார்கள். நான்,தூங்கக்கூடியவர் கனவில் எதைக் காண்பாரோ அதை நான் கண்டேன் என்று கூறினேன். அந்த ஆடைகளில் ஏதேனும் (இந்திரியம் பட்டிருக்கக்) கண்டீர்களா? என்று கேட்டார்கள். நான் இல்லை என்றேன். அப்படியே எதையேனும் நீங்கள் பார்த்திருந்தாலும்கூட அதைக் கழுவத்தான் வேண்டுமா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆடையில் பட்டுக் காய்ந்துவிட்டிருந்த இந்திரியத்தை நான் என் நகத்தால் சுரண்டித் தான்விடுவேன் (கழுவமாட்டேன்) என்று கூறினார்கள். முஸ்லிம் 489

மேலும் “அஸ்வத் (ரஹ்) மற்றும் ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) ஆகியோர் கூறியதாவது:
இந்திரியம் பற்றி ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகையில், அதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆடையிலிருந்து சுரண்டிவிடுவேன் என்று குறிப்பிட்டார்கள். முஸ்லிம் 486

எனவே மேற்ச் சென்ற ஹதீஸ்கள் மூலம் விந்து ஈரமாக இருந்தால் அந்த இடத்தை மட்டும் கழுவினால் போதும் என்பதாகவும், விந்து காய்ந்து இருந்தால் காய்ந்த இடத்தை மட்டும் நன்றாக சுரண்டி விட்டால் போதும் என்பதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். அதற்காக ஆடை முழுவதையும் கழுவ வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.

மதீ (மதன நீர்)
விந்து வெளிப்பட்டால் கட்டாயம் குளிக்க வேண்டும்.ஆனால் மதீஎன்ற நீர்வெளியானால் குளிப்பு கடமை கிடையாது அந்த நேரத்தில் வுளுவுடன் இருந்தால் வுளு முறிந்து விடு்ம்.

மதீ என்பது ஆசையின் உச்சக் கட்டத்தில் விந்து வெளிப்படுவதற்கு முன் கசியக் கூடிய நீராகும்.
இந்த மதீ வெளியானால் என்ன செய்ய வேண்டும் என்பதை பின் வரும் ஹதீஸ்கள் மூலம் நாம் அறிந்துக் கொள்வோம்.

அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் பாலுணர்வு கிளர்ச்சி நீர் (மதீ) அதிகமாக வெளிப்படும் ஆடவனாக இருந்தேன். இது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்க வெட்கப்பட்டுக் கொண்டிருந்தேன். நபியவர்களின் புதல்வியார் (ஃபாத்திமா) என் துணைவியாராக இருந்ததே இதற்குக் காரணம். எனவே, நான் மிக்தாத் பின் அல்அஸ்வத் (ரலி) அவர்களிடம் (இது குறித்து நபியவர்களிடம் கேட்குமாறு) கூறினேன். அவர் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், பிறவி உறுப்பைக் கழுவிக்கொண்டு அங்கத் தூய்மை (உளூ) செய்துகொள்ள வேண்டும் (குளிக்க வேண்டியதில்லை) என்று கூறினார்கள். முஸ்லிம் 508

மேலும் “அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களிடம் பாலுணர்வு கிளர்ச்சி நீர் (மதீ) பற்றிக் கேட்க வெட்கப்பட்டேன். (நபி (ஸல்) அவர்களின் புதல்வி) ஃபாத்திமா என் துணைவியாராக இருந்ததே இதற்குக் காரணம். எனவே, நான் மிக்தாத் (ரலி) அவர்களிடம் (இது பற்றிக் கேட்கச்) சொன்னேன். அவர் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு அவர்கள், அதற்காக அங்கத் தூய்மை (உளூ) செய்தல் வேண்டும் (குளிக்க வேண்டியதில்லை) என்று பதிலளித்தார்கள். முஸ்லிம் 509

பெருந்தொடக்கு ஏற்ப்பட்டவர் குளிக்கும் முறை
நாம் குளிப்பது என்பது சாதரரண விடயம் தான். ஆனால் குளிப்பு கடமையானால் அதற்கு என்று சில வழிமுறைகளை நபியவர்கள் நமக்கு காட்டித்தருகிறார்கள்.
“ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருந்துடக்கிற்காகக் குளிக்கும்போது முதலில் தம் கைகளை (மணிக்கட்டுவரை) கழுவுவார்கள். பிறகு வலக் கையால் (தண்ணீர் அள்ளி) இடக் கையின் மீது ஊற்றிப் பிறவி உறுப்பைக் கழுவுவார்கள். பின்னர் தொழுகைக்காக அங்கத் தூய்மை (உளூ) செய்வதைப் போன்று அங்கத் தூய்மை செய்வார்கள். அதன் பின்னர் தண்ணீரை அள்ளி மயிர்க்கால்களுக்கு இடையே விரல்களை நுழை(த்துத் தலையைத் தேய்)ப்பார்கள். தலைமுடி முழுவதும் நனைந்துவிட்டதாகத் தெரிந்ததும் இரு கைகளிலும் மூன்று தடவை தண்ணீர் அள்ளி தலையில் ஊற்றுவார்கள். பிறகு மேனி முழுவதிலும் தண்ணீர் ஊற்றுவார்கள். பின்னர் கால்களைக் கழுவுவார்கள். முஸ்லிம் 526

மேலும் “ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருந்துடக்கிற்காகக் குளிப்பார்களானால் பால் கறக்கும் குவளை போன்ற ஒன்றைக் கொண்டு வரச் சொல்லி, ஒரு கையால் தண்ணீர் அள்ளி முதலில் தமது தலையின் வலப் பக்கத்திலும் பிறகு இடப் பக்கத்திலும் ஊற்றுவார்கள். பின்னர் இரு கைகளால் தண்ணீரை அள்ளித் தமது தலையின் மீது ஊற்றுவார்கள். முஸ்லிம் 530. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருந்துடக்கிற்காகக் குளிப்பார்களானால் பால் கறக்கும் குவளை போன்ற ஒன்றைக் கொண்டு வரச் சொல்லி, ஒரு கையால் தண்ணீர் அள்ளி முதலில் தமது தலையின் வலப் பக்கத்திலும் பிறகு இடப் பக்கத்திலும் ஊற்றுவார்கள். பின்னர் இரு கைகளால் தண்ணீரை அள்ளித் தமது தலையின் மீது ஊற்றுவார்கள். முஸ்லிம் 530, புகாரி 258.

பெருந்தொடக்கு ஏற்பட்டால் குளிக்கும் முன் துாங்குவது
குளிப்பு கடமையானவர்கள் சற்று தாமதித்து குளிக்கலாம், அல்லது மீண்டு்ம் துாங்கி எழுந்து குளிக்கலாம் என்று நினைத்தால்,என்ன செய்ய வேண்டும் என்பதை பின் வரும் ஹதீஸ்கள் தெளிவுப் படுத்துவதை காணலாம்.

“ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருந்துடக்கு ஏற்பட்டு (குளியல் கடமையாகி) இருக்கும் நிலையில் உறங்க விரும்பினால் உறங்கப் போவதற்கு முன் தொழுகைக்காக அங்கத் தூய்மை (உளூ) செய்வதைப் போன்று அங்கத் தூய்மை செய்துகொள்வார்கள். முஸ்லிம் 512

மேலும் “ இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இரவு நேரத்தில் தமக்குப் பெருந்துடக்கு ஏற்பட்டுவிடுவது பற்றிக் கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அங்கத் தூய்மை (உளூ) செய்து கொள்ளுங்கள்; பிறவி உறுப்பைக் கழுவிக் கொள்ளுங்கள். பிறகு உறங்குங்கள் என்று கூறினார்கள். முஸ்லிம் 516

மேலும் “ முஆவியா பின் சாலிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் அபீகைஸ் (ரஹ்) அவர்கள் நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வித்ர் தொழுகை பற்றிக் கேட்டேன் என்று கூறி விட்டு அது தொடர்பான ஹதீஸை அறிவித்தார்கள். (மேலும் அவர்கள் கூறினார்கள்:)
நான் (ஆயிஷா (ரலி) அவர்களிடம்), பெருந்துடக்கு விஷயத்தில் நபி (ஸல்) அவர்கள் எப்படி நடந்துகொண்டர்கள்? உறங்குவதற்கு முன் குளிப்பார்களா? அல்லது குளித்துவிட்டு உறங்குவார்களா? என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், இரண்டு முறைகளையும் கையாண்டுவந்தார்கள். சில நேரங்களில் குளித்துவிட்டுப் பின்னர் உறங்கினார்கள். சில நேரங்களில் (குளிக்காமல்) அங்கத் தூய்மை (உளூ) செய்துவிட்டு உறங்கினார்கள் என்று பதிலளித்தார்கள். நான், (மார்க்க) விஷயங்களில் தாராளத்தை ஏற்படுத்திய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என்று கூறினேன். முஸ்லிம் 517

மேலும் “ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தம் இல்லாளிடம் பாலுறவு கொண்டுவிட்டுப் பின்னர் மீண்டும் (உறவுகொள்ள) விரும்பினால் அவர் (இடையில்) அங்கத் தூய்மை (உளூ) செய்து கொள்ளட்டும். முஸ்லிம் 518

2 comments

  1. மாதவிடாய் காலம் முற்றிலும் முடிந்த பிறகு அதாவது (வயது அதிகமான) நிலையில் கணவன் மனைவி சேர்ந்து இருக்க (தாம்பத்யம்) இஸ்லாத்தில் அனுமதி இருக்கா

  2. Periode timela kulicha Ennamum pirachina waruma sir

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *