Featured Posts
Home » இஸ்லாம் » அல்ஹதீஸ் » சுன்னா » ஜும்ஆ தொழுகையின் பின் சுன்னத்துகள் எத்தனை?

ஜும்ஆ தொழுகையின் பின் சுன்னத்துகள் எத்தனை?

என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள். என்ற ஹதீஸின் படி ஒவ்வொரு பர்ளான, மற்றும் சுன்னத்தான தொழுகைகளை நபியவர்கள் தொழுது நமக்கு வழிக்காட்டியுள்ளார்கள். என்பதை நாமெல்லாம் நன்கு அறிவோம்.

ஐவேளை பர்ளான தொழுகைகளுக்கு முன், பின் சுன்னத்துகள் எத்தனை என்பது ஹதீஸ்களில் தெளிவாக பதியப்பட்டுள்ளது. அவற்றில் ஜும்ஆ உடைய பர்ளுக்கு பின்னால் சுன்னத்தான தொழுகைகள் எத்தனை ரக்அத்துகள் தொழ வேண்டும் என்பதை பின் வரும் ஹதீஸ்கள் மூலம் நாம் விளங்கிக் கொள்ள முடியும்.

இரண்டு ரக்அத்துகள்
“அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் லுஹருக்கு முன் இரண்டு ரக்அத்களும் பின் இரண்டு ரக்அத்களும் தொழுபவர்களாகவும் மஃரிபுக்குப் பிறகு தம் வீட்டில் இரண்டு ரக்அத்கள் தொழுபவர்களாகவும் இஷாவுக்குப் பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுபவர்களாகவும் இருந்தனர். ஜும்ஆவுக்குப் பின் (வீட்டுக்குப்) புறப்பட்டுச் சென்று இரண்டு ரக்அத்கள் தொழுபவர்களாகவும் இருந்தனர். ( புகாரீ 937)

மேற்சுட்டிக்காட்டிய ஹதீஸின் மூலம் ஜும்ஆவுக்கு பின் இரண்டு ரக்அத்துகள் தொழ வேண்டும் என்பதை ஹதீஸ் தெளிவுப்படுத்துகிறது. அதே நேரம் பின் வரும் ஹதீஸ் ஜும்ஆவுக்கு பின் நான்கு ரகஅத்துகள் தொழ வேண்டும் என்பதை தெளிவுப்படுத்துவதை காணலாம்.

நான்கு ரம்அத்துகள்
மேலும் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் ஜுமுஆ தொழுத பின் நான்கு ரக்அத்கள் (சுன்னத்) தொழட்டும்!
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் 1597)

இரண்டு விதமான ஹதீஸ்கள் வந்துள்ளன. எனவே சந்தர்ப்ப சூழ்நிலைகளை பொருத்து இரண்டையும் வாழ்க்கையில் நடை முறைப்படுத்தலாம். அவசர பயணங்கள் போக இருந்தால் ஜும்ஆக்குப் பின் இரண்டு ரக்அத்துகள் தொழுது விட்டு போகலாம். அல்லது நிதானமாக இரண்டு, இரண்டு ரக்அத்துகளாக மொத்தம் நான்கு ரக்அத்துகள் தொழுது விட்டு போகலாம்.

இரண்டு சுன்னத்துகளையும் மாறி, மாறி நமது வாழ்க்கையில் நடைமுறைப்படுத்திய பாக்கியம் நமக்கு கிடைக்கும்.

நாங்கள் ஷாஃபி மத்ஹபினர் ஜும்ஆ தொழுகைக்குப் பின் நான்கு ரக்அத்துகள் சுன்னத் தொழமாட்டோம், இரண்டு ரக்அத்துகள் தான் தொழுவோம் என்று நபியவர்களால் சொல்லப்பட்ட ஹதீஸை நிராகரித்து விடாதீர்கள்.

அதே போல நாங்கள் ஹனபி மத்ஹபினர் ஜும்ஆ தொழுகைக்குப் பின் எங்களுக்கு நான்கு ரக்அத்துகள் தான் சுன்னத் தொழ வேண்டும், நாங்கள் இரண்டு ரக்அத்துகள் தொழ மாட்டோம் என்று கூறி நபியவர்களால் சொல்லப்பட்ட ஹதீஸை நிராகரித்து விடாதீர்கள்?

மத்ஹபை காரணம் காட்டி ஹதீஸ்களை நிராகரித்து விடாதீர்கள், ஹதீஸூக்கு முக்கியத்துவம், முன்னுரிமையும் கொடுங்கள். சந்தர்ப்பத்திற்கேற்ப இரண்டு சுன்னாக்களையும் நடை முறைப்படுத்த ஆர்வம் காட்டுங்கள்.

பொதுவாக சுன்னத்தான தொழுகைகளை நமது வீடுகளில் தொழுவது தான் சிறப்பாகும். ஆனால் தொழில் ரீதியாக நாம் அடிக்கடி வெளியே இருப்பதால் பர்ளுடைய முன், பின் சுன்னத்துகளை பள்ளியில் தொழுது கொள்ள வேண்டிய நிலை இருந்தாலும், சுப்ஹுடைய சுன்னத்தை வீட்டில் தொழுது விட்டு பள்ளிக்கு போகலாம். ஏன் என்றால் சுப்ஹு தொழுகைக்கு பாங்கு சொல்லி இருபது அல்லது இருப்பத்தி ஐந்து நிமிடங்கள் கழித்து இகாமத் சொல்லப்படுகிறது, எனவே தாராளமான நேரம் இருப்பதால் சுப்ஹு நேரதத்தில் பாங்கு கேட்டவுடன் வீட்டிலேயே உளூ செய்து வீட்டு, சுப்ஹுடைய சுன்னத் இரண்டு ரக்அத்துகளை வீட்டில் தொழுத பின் உளூவுடன் பள்ளிக்குச் சென்று இகாமத் சொல்ல நேரம் இருக்கும் என்றால் பள்ளி காணிக்கை தொழுகையான தஹ்யத்துல் மஸ்ஜித் இரண்டு ரக்அத்துகள் தொழக் கூடிய பழக்கத்தை நடைமுறைப் படுத்த வேண்டும்.

அந்த வரிசையில் ஜும்ஆவுக்கப் பின் வீட்டில் போய் தொழக்கூடிய சந்தர்ப்பம் இருந்தால் வீட்டிற்கு சென்று சுன்னத்தை வீட்டில் தொழுலாம். அல்லது பள்ளியிலே தொழுது கொள்ள வேண்டும்.

எனவே அல்லாஹ்வும் அல்லாஹ்வுடை துாதர் அவர்களும் எந்த அமல்களை நமக்கு எப்படி காட்டித் தந்துள்ளார்களோ அவைகளை அப்படியே நடை முறைப்படுத்த ஆர்வம் காட்டுவோமாக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *