Featured Posts
Home » பொதுவானவை » பிற கட்டுரைகள் » ஆயுத கலாச்சாரம் [ARTICLE]

ஆயுத கலாச்சாரம் [ARTICLE]

இஸ்லாம் மனித சமுதாயத்திற்கு அமைதியையும், சகிப்புத்தனமையும் போதிக்கும் மார்க்கம் என்பதாக முஸ்லிம்கள் உலக அரங்கில் பறைசாட்டி கொண்டிருக்கிறார்கள். உண்மையில் இந்த அழைப்பு இஸ்லாமிய மார்க்கத்தின் தனித்தன்மை என்பதை நாம் அறிந்திருக்கிறோம். ஆனாலும், முஸ்லிம்களுக்கு மத்தியில் இன்று நடக்கும் நிகழ்வுகள் இஸ்லாமிய மார்க்கத்தின் அழைப்புக்கு முரணாக முஸ்லிம்கள் தங்களது செயல்களை அமைத்துக்கொண்டிருப்பதைகாட்டுகிறது. அந்நியர்கள் மூலம் முஸ்லிம்கள் தாக்கப்படுவது ஒரு புறமிருக்க, முஸ்லிம்கள் தங்களுக்குள்ளேயே ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்வதும், வன்முறையை அரங்கேற்றி சகோதர முஸ்லிமின் மீது கொலைவெறி தாக்குதல் நடத்துவதும், சர்வ சாதாரணமாக அரங்கேறிக்கொண்டிருக்கிறது.

முஸ்லிம் நாடுகளில் இவ்வாறான நிகழ்வுகள் நாள்தோறும் வாடிக்கையாக நிகழ்ந்து கொண்டிருப்பதை பார்த்து மனம் நொந்து கொண்டிருக்கும் முஸ்லிம் சமுதாயம் அவர்கள் ஒற்றுமையாக இருக்கக்கூடாதா! முஸ்லிம் சமுதாயம் ஒன்றுபடக்கூடாதா! என்று ஏங்கிக்கொண்டிருக்கும் அதே வேளையில் தங்களுக்கு மத்தியில் ஒற்றுமையில்லாமல் மோதிக் கொண்டிருப்பதைப்பார்க்கிறோம்.

இன மோதல்களுக்கும் மொழிச்சண்டைகளுக்கும் இடமளிக்காத மார்க்கத்தில் இயக்க சண்டைகளுக்கு பஞ்சமில்லை என்பதர்க்கு நிகழ்வுகள் சான்றாக உள்ளது. முஸ்லிம்களுக்கு இயக்க உணர்வை ஊட்டி வளர்த்த அளவிர்க்கு இஸ்லாமிய உணர்வை ஊட்டி வளர்க்கவில்லை என்பது தான் இதற்குக் காரணம். ஒரு முஸ்லிமிற்கு இன்னொரு முஸ்லிமின் மானம், உயிர் ,செல்வம் ஆகிய அனைத்தும் ஹராமாகும் என்று இஸ்லாம் கூறுகிறது. இத்தகைய அறிவுரைகளையும் போதனைகளையும் போதித்து வளர்க்கப்படவேண்டிய முஸ்லிம்கள் சக முஸ்லிமின் கண்ணியத்தையும், மானத்தையும் ஏன் இவை எல்லாவற்றையும்விட மேலான உயிரையும் பறிக்க முயல்கிறார்கள் என்பது வேதனைக்குறிய விஷயமாகும். முஸ்லிமை கொல்வது பெரும்பாவமாகும் அதனைச்செய்வோருக்கு நரகம் தான் என்று அல்லாஹ் கூறுகிறான்.

ஓர் இறை நம்பிக்கையாளரை ஒருவன் வேண்டுமென்றே கொலை செய்து விட்டால், அவனுக்குரிய கூலி நரகமாகும். அதில் அவன் நிலையாக வீழ்ந்துகிடப்பான். மேலும், அவன் மீது அல்லாஹ்வின் கோபமும் அவனுடைய சாபமும் திணிக்கப்பட்டிருக்கிறது. மேலும், மிகப் பெரிய வேதனையும் அவனுக்காகத் தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது. [அல்குர்ஆன் 4:93]

நரகத்தையும் அல்லாஹ்வின் கோபத்தையும், சாபத்தையும் இத்தகைய பாவிகளுக்கு தண்டமையாக கொடுக்கப்படும் என்று அல்லாஹ் இவ்வசனத்தில் கூறி எச்சரிக்கிறான்

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்,
மனிதர்களிலேயே அல்லாஹ்வின் (கடுமையான) கோபத்திற்கு ஆளானோர் மூவர் ஆவர்.

1. (மக்கா) புனித எல்லைக்குள் பெரும் பாவம் புரிகிறவன்.

2. இஸ்லாத்தில் இருந்துகொண்டு அறியாமைக் காலக் கலாசாரத்தை விரும்புகிறவன்.

3. ஒரு மனிதனின் இரத்தத்தைச் சிந்தச் செய்வதற்காக நியாயமின்றி அவனைக் கொலை செய்யத் தூண்டுகிறவன்.

என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். [ஸஹீஹுல் புஹாரி 6882]

அல்லாஹ்வின் கருணையை விட்டு தூரமாக்கப்படுபவன், அதிகமாக தண்டனைக்கு ஆளாக்கப்படுபவன் அவனது வெறுப்பிற்கு பாத்திரமானவனைக்குறித்தும் அவர்களுக்குறிய இழிவான அந்தஸ்த்தையும் இந்நபி மொழிசுட்டிக்காட்டுகிறது கொலையாளிக்கு அல்லாஹ்விடம் இழிவும்,  நரக வேதனையும் இருப்பது ஆச்சரியமான விஷயமல்ல ஏனெனில் நியாயமின்றி யார், யாரை கொலை செய்தாலும் அத்தகைய பாவிகளுக்கு அல்லாஹ்விடம் தண்டனையுள்ளது. ஆனால் ஆச்சரியம் என்னவெனில் கொலையுண்டவனுக்கும் நரகம் என்று சொல்லப்பட்டது தான். முஸ்லிம்கள் தங்களுக்கு மத்தியில் சண்டையிட்டு அதனால் ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை கொன்றால் கொன்றவருக்கும் கொல்லப்பட்டவருக்கும் நரகம் தான் என்று அல்லாஹ்வின் தூதர் எச்சரித்துள்ளார்கள்

நான் அலீ(ரலி)க்கு உதவுவதற்காகப் போய்க் கொண்டிருந்தேன். அப்போது அபூ பக்ரா(ரலி) என்னைச் சந்தித்து ‘எங்கே செல்கிறீர்?’ எனக் கேட்டார். நான் இவருக்கு உதவப் போகிறேன் என்றேன். அதற்கவர் ‘நீர் திரும்பிச் செல்லும்; ஏனெனில், ‘இரண்டு முஸ்லிம்கள் தம் வாட்களால் சண்டையிட்டால் அதில் கொன்றவர், கொல்லப்பட்டவர் இருவருமே நரகத்திற்குத்தான் செல்வார்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அப்போது, ‘இறைத்தூதர் அவர்களே! இவரோ கொலை செய்தவர்; (நரகத்திற்குச் செல்வது சரி) கொல்லப்பட்டவரின் நிலை என்ன? (அவர் ஏன் நரகம் செல்ல வேண்டும்?) என்று கேட்டதற்கு, ‘அவர் அவரைக் கொல்ல வேண்டுமென்று பேராசை கொண்டிருந்தார்’ என்று கூறினார்கள்’ என கூறினார்’

என அஹ்னஃப் இப்னு கைஸ் அறிவித்தார். [ஸஹீஹுல் புஹாரி 31]

முஸ்லிகள் ஒருவருக்கு ஒருவர் எதிராக ஆயுதம் ஏந்துவது இருதரப்பினரையும் நரகில் தள்ளிவிடும் என்பதை அல்லாஹ்வின் தூதர் அவர்கள் தெளிவுபடுத்தினார்கள் அல்லாஹ்வின் தூதர் அவர்களின் எச்சரிக்கையை காற்றில் பறக்கவிட்ட முஸ்லிம்கள் ஆயுதமேந்தி சகோதர முஸ்லிமை கொல்லத்துடிக்கிறான் என்பதை காணொளிகளில் பார்க்க முடிகிறது.

முஸ்லிமுக்கு எதிராக ஆயுதம் ஏந்துவது

சகோதரனுக்கு எதிராக ஆயுதமேந்துவதை நபி கண்டித்தார்கள்

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள் ஒரு முஸ்லிம் தனது சகோதரனுக்கு எதிராக ஆயுதமேந்தினால் அவனை அவன் அந்த ஆயுதத்தை மறைத்து வைக்காதவரை அல்லாஹ்வின் மலாயிக்க சபித்துக்கொண்டிருப்பார்கள்

அறிவிப்பாளர்: அபீபக்ரா  [முஸ்னத் பஸ்ஸார் 3641, தப்ரானி 2661]

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ நமக்கெதிராக ஆயுதம் ஏந்தியவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்.

என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். [ஸஹீஹுல் புஹாரி 7070,7071]

சகோதரனுக்கு எதிராக விளையாட்டிற்காக கூட ஆயுதமேந்தக்கூடாது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’
நீங்கள் உங்கள் சகோதரரை நோக்கி ஆயுதத்தைக் காட்டி சைகை செய்யவேண்டாம். ஏனெனில், உங்களுக்குத் தெரியாமலேயே ஷைத்தான் உங்கள் கையிலிருந்து அதைப் பிடுங்கி (சகோதரர் மீது தாக்குதல் நடத்தி) விடக்கூடும். அதனால் நீங்கள் நரகத்தில் வீழ்ந்துவிடக் கூடும்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.  [ஸஹீஹுல் புஹாரி 7072]

உயிர் அல்லாஹ்விடம் மதிப்பு மிக்கது எனவே தான் கொல்லப்பட்டவர்களின் விஷயத்தில் தான் மறுமையில் முதல் தீர்ப்பு இருக்கும் என்பதாக அல்லாஹ்வின் தூதர் அவர்கள் தெளிவுபடுத்தினார்கள்.

அப்துல்லாஹ் பின் மஸ் ஊத் அவர்கள் அறிவித்தார்கள்,

மறுமையில் முதலாவதாக மனிதர்களுக்கு மத்தியில் தீர்ப்பளிக்கப்படுவது இரத்தங்கள் (கொலைகள்) தொடர்பாகத்தான் இருக்கும்

என்று நபி அவர்கள் கூறினார்கள். [ஸஹீஹுல் முஸ்லிம் 1678]

அநியாயமாக கொல்லப்பட்ட நிரபராதிகள், இரத்தம் சிந்தப்பட்டவர்கள் ஆகியோருக்காக நியாய தீர்ப்பு நாளில் உரிமைகள் கோரப்படும் என்பது முஸ்லிம்களின் இரத்தம் அல்லாஹ்விடம் எந்த அளவு மதிப்பு மிக்கது என்பதை காட்டுகிறது.

அபூஸஈத் அல்குத்ரி அவர்கள் அறிவித்தார்கள்,
வனத்திலிருப்போரும் பூமியில் வாசிப்போரும் ஒரு முஃமினின் கொலையில் பங்கெடுத்தார்களேயானால் அவர்கள் அனைவரையும் அல்லாஹ் நரகில் முகம் குப்புற தள்ளுவான் என நபி அவர்கள் கூறினார்கள். [சுனனுத்திர்மிதி 1938]

ஒற்றுமை

எதனால் முஸ்லிம்கள் இன்றைக்கு பல பிரிவுகளாக பிரிந்து ஒவ்வொருவரும் தங்களுக்கென்று சில கோட்பாடுகளை அமைத்துக்கொண்டு அதனை நோக்கி மக்களை அழைத்து அதன் மூலம் ஒற்றுமை உறுவாக்க வேண்டுமென்று முழங்குகிறார்கள்.

இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் – உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் – நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை – வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான். [அல்குர்ஆன் 3:103]

மேற்கூறப்பட்ட வசனம் அனைத்து குழுக்களும் தங்களது மேடைகளில் முழங்குவார்கள் அதன் மூலம் தங்களை ஒற்றுமையை விரும்பக்கூடியவர்கள் என்பதாக காட்டிக்கொள்வார்கள் உண்மையில் ஒற்றுமையை என்பது அல்லாஹ்வும் அவனது தூதரும் வழங்கிய கொள்கையின் அடிப்படையில் இருக்கவேண்டுமே தவிர ஒவ்வொருவரும் தங்களுக்கென உறுவாக்கிக்கொண்ட வழிமுறையின் அடிப்படையில் இருக்கக்கூடாது.

நபி அவர்கள் உறுவாக்கிய சத்திய ஸஹாபாக்கள் பல கொள்கையில் இருக்கவில்லை நபி அவர்கள் வரைத்துக்காட்டிய கொள்கையின் அடிப்படையில் வாழ்ந்தார்கள் எனவேதான் பல்வேறு கருத்துவேறுபாடுகளையும், பகைமையும் கொண்டிருந்த அம்மக்கள் சத்தியத்தை ஏற்றுக்கொண்ட பின்னர் அல்லாஹ்வின் கட்டளைக்கும் அல்லாஹ்வின் தூதரின் வார்த்தைக்கும் கட்டுப்பட்டு நடந்தார்கள்

வரலாற்றில் ஒர் நிகழ்வு!
முஸ்லிம்கள் மீது பகைமைகொண்டிருந்த “ஷாஸ் இப்னு கைஸ்’ என்ற யூதன். அன்சாரிகளில் அவ்ஸ், கஸ்ரஜ் ஆகிய இரு கிளையினரும் ஒற்றுமையாக ஒன்றுகூடி ஓரிடத்தில் பேசியதைப் பார்த்தான்.  இவ்வளவு ஒற்றுமையாகவும் அன்பாகவும் இஸ்லாமின் அடிப்படையில் இவர்கள் ஒன்றுகூடி இருந்ததை அவனால் பொறுக்க முடியவில்லை. இவர்கள் ஒற்றுமையுடன் இருந்தால் நம்மால் இங்கு தங்க முடியாது” என்று கூறி தன்னுடன் இருந்த யூத வாலிபனிடம் “நீ சென்று அவர்களுடன் உட்கார்ந்து, பிறகு புஆஸ் போரைப் பற்றியும் அதற்கு முன் நிகழ்ந்த நிகழ்ச்சியையும் அவர்களுக்கு நினைவூட்டு, போர் சமயத்தில் அவர்கள் தங்களுக்குள் கூறிய கவிதைகளை அவர்களுக்குப் பாடிக்காட்டு” என்று கூறினான்.

ஷாஸ் கூறியவாறே அவனும் செய்தான். நல்ல பலன் கிடைத்தது. இரு கூட்டத்தினரும் தத்தம் பெருமையைப் பற்றி பேச ஆரம்பித்தனர். இரு கூட்டத்திலிருந்தும் இருவர் மண்டியிட்டு வாய்ச் சண்டை போட, அதில் ஒருவர் நீங்கள் நாடினால் அந்தப் போரை இப்போதும் நாம் அப்படியே தொடங்கலாம் என்றார். மற்றவன் கூட்டத்தினர் “வாருங்கள்! மதீனாவிற்கு வெளியில் ஹர்ராவில் சென்று நாம் சண்டையிடுவோம். ஆயுதங்களை எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறியவாறு ஹர்ராவை நோக்கிக் கிளம்பினர். இரு கூட்டத்தினரும் கோபத்தால் பொங்கி எழுந்தனர். அவர்களுக்குள் கடுமையான சண்டை நடக்க நெருங்கி விட்டது.

இச்செய்தி நபி (ஸல்) அவர்களுக்குக் கிடைத்தவுடன் தங்களுடன் இருந்த முஹாஜிர் தோழர்களை அழைத்துக் கொண்டு அன்சாரிகளிடம் விரைந்தார்கள். அவர்களை நோக்கி முஸ்லிம்களே! அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்! நான் உங்களுக்கு மத்தியில் இருக்கும்போதே அறியாமைக் கால வாதங்களை நீங்கள் செய்து கொள்கிறீர்களா? அல்லாஹ் உங்களுக்கு இஸ்லாமின் பக்கம் நேர்வழி காட்டினான் அதன் மூலம் உங்களைக் கண்ணியப்படுத்தினான் உங்களை விட்டு அறியாமைக்கால விஷயங்களை அகற்றி இருக்கின்றான் இறை நிராகரிப்பிலிருந்து உங்களைப் பாதுகாத்து இருக்கின்றான் உள்ளங்களுக்கு மத்தியில் அன்பை ஏற்படுத்தி இருக்கின்றான். இதற்கு பின்புமா நீங்கள் சண்டை செய்து கொள்கிறீர்கள்?” என்று அறிவுரை கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்களின் உருக்கமான உரையைக் கேட்ட அம்மக்கள் தங்களின் இச்செயலை ஷைத்தானின் ஊசலாட்டமே எனவும் தங்கள் எதிரியின் சூழ்ச்சியுமே எனவும் புரிந்து கொண்டு அழுதனர். அவ்ஸ், கஸ்ரஜ் கிளையினர் ஒருவர் மற்றவரைக் கட்டித் தழுவினார். பின்பு நபி (ஸல்) அவர்களுடன் தங்கள் இல்லங்களுக்குத் திரும்பிச் சென்றனர். அல்லாஹ்வின் எதிரி “ஷாஸ் இப்னு கைஸ்” உடைய சூழ்ச்சியிலிருந்து முஸ்லிம்களை அல்லாஹ் இவ்வாறு பாதுகாத்தான்.

-(இப்னு ஹிஷாம்) அர்ரஹீகுல் மக்தூம்

நாம் ஒன்றுபட வேண்டும்
அல்லாஹ்விற்காக ஒன்றுபடவேண்டும், மறுமைக்காக நாம் ஒன்றுபடவேண்டும், எதிரிகளில் சூழ்ச்சியை வெல்ல ஒன்றுபடவேண்டும்.

இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் – நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்; (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் – நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான். [அல்குர்ஆன் 8:46]

நாம் ஒன்றுபட்டால் தான் நமக்கு அல்லாஹ்வின் உதவி கிடைக்கும்

(முஃமின்களே!) அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வானானால், உங்களை வெல்பவர் யாருமில்லை; அவன் உங்களைக் கைவிட்டு விட்டால், அதன் பிறகு உங்களுக்கு உதவி செய்வோர் யார் இருக்கிறார்கள்? எனவே, முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே (முழுமையாக நம்பிக்கை பூண்டு) பொறுப்பேற்படுத்திக் கொள்ளட்டும். [அல்குர்ஆன் 3:160]

ஆக்கம் மவ்லவி. பஷீர் ஃபிர்தௌஸி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *