Featured Posts
Home » வரலாறு » ஷிஆக்கள் » கிலாபத்திற்கு எதிரான ஷீஆவின் புரட்சி | தொடர்-02

கிலாபத்திற்கு எதிரான ஷீஆவின் புரட்சி | தொடர்-02

கிலாபத்திற்கு எதிரான ஷீஆவின் புரட்சி – 02
-மாளிகாவத்தை ஸலபி

கலீபா அபூபகர்(ரலி) தெரிவில் அலி(ரலி) அவர்களின் பங்கு
உஸ்மான்(ரலி) அவர்களின் தலைமைத்துவத்திற்கு எதிராக அலி(ரலி) அவர்களை ஆட்சியில் அமர்த்ததல் கோஷத்துடன் புரட்சியை -கிளர்ச்சியை- தோற்றுவித்து இறுதியில் உஸ்மான்(ரலி) அவர்களை பழியெடுத்தார்கள் இப்னு ஸபாவின் செல்லப்பிள்ளைகளான ஷீஆக்கள். இன்று வரை அப்படுகொலையை நியாயப்படுத்திக் கொண்டுமிருக்கிறார்கள். இதே பணியில் இன்றும் சுன்னி ஆட்சிகளை முடக்கவும் முயற்ச்சி செய்து கொண்டுமிருக்கிறார்கள்.

தனக்குப் பின் ஆட்சியாளராக யார் வரவேண்டும் என்பது குறித்து எவரையும் குறிப்பிட்டு நபி(ஸல்) அவர்கள் சொல்லியிருக்கவில்லை. எனவே நபிகளாரின் மரணத்திற்குப் பின் சஹாபாக்கள் தங்களது ஒரு மித்த கருத்தின் அடிப்படையில் அபூபக்கர்(ரலி) அவர்களை கலீபாவாக நியமித்தார்கள்.

தனக்குப் பின் அலி(ரலி) அவர்களுக்கு கிலாபத் பொறுப்பு கொடுக்கப்பட வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் வஸீயத் செய்திருந்தால் சஹாபாக்கள் அக்கட்டளையை தலைக்கு மேல்வைத்து நிறை வேற்றியிருப்பார்கள். உண்மையான முஃமின்கள் வாய்மையுள்ளவர்கள் சுவனத்தின் வாரிசுகள் என்றெல்லாம் அல்லாஹ்வினால் நற்செய்தி சொல்லப்பட்டு புகழப்பட்ட ஒட்டுமொத்த சஹாபாக்கள் ஒரு போதும் அநியாயத்திற்கு துணை நிற்கமாட்டார்கள்.

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார்கள்.  “இறைத்தூதர்(ஸல்) எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது அவர்களிடமிருந்து அலி இப்னு அபீ தாலிப்(ரலி) (அவர்களை நலம் விசாரித்துவிட்டு) வெளியேறினார்கள். உடனே மக்கள், அபுல் ஹசனே! இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எப்படியுள்ளார்கள்? என்று (கவலை யுடன்) விசாரிக்க, அதற்கு அவர்கள், அல்லாஹ்வின் அருளால் நலமடைந்து விட்டார்கள் என்று கூறினார்கள். உடனே அப்பாஸ் இப்னு அப்தில் முத்தலிப்(ரலி), அலி(ரலி) அவர்களின் கையைப் பிடித்துக்கொண்டு, அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் மூன்று நாட்களுக்குப் பிறகு, (பிறரின்) அதிகாரத்திற்குப் பணிந்தவராக ஆகிவிடப்போகிறீர்கள். இறைத் தூதர்(ஸல்) அவர்கள் விரைவில் தங்களது இந் நோயின் காரணத்தால் இறந்துவிடப் போகிறார்கள் என்றே கருதுகிறேன். மரணத்தின்போது அப்துல் முத்தலிபுடைய மக்களின் முகங்களை(ப் பார்த்து மரணக் கலையை) அடையாளம் கண்டுகொள்பவன் நான். எனவே, எங்களை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் அழைத்துச் செல்லுங்கள். இந்த ஆட்சியதிகாரம் (அவர்கள் இறந்த பிறகு) யாரிடமிருக்கும்? என்று கேட்டுக் கொள்வோம். நம்மிடம்தான் இருக்கும் என்றால் அதை நாம் அறிந்துகொள்வோம். அது பிறரிடம் இருக்கும் என்றால் அதையும் நாம் அறிந்துகொள்வோம். (தமக்குப் பின் யார் பிரதிநிதி என்பதை அறிவித்து) அவர்கள் நமக்கு மரணசாசனம் (வஸீயத்து)செய்வார்கள் என்று கூறினார்கள். அதற்கு அலீ(ரலி) அவர்கள், நபி(ஸல்) அவர்கள் நமக்கு அதைத் தர மறுத்துவிட்டால் அவர்களுக்குப் பிறகு மக்கள் நமக்கு (ஒருபோதும்) அதைத் தரமாட்டார்கள அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அதை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கேட்கமாட்டேன் என்று பதிலளித்தார்கள்.” (நூல்: புகாரி 4447)

நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன் நடந்த சம்பவம் இது. ஆட்சி அதிகாரம் குறித்து நபி (ஸல்) அவர்களிடம் பேசி பெற்றுக் கொள்வோம் என அப்பாஸ இப்னு அப்தில் முத்தலிப்(ரலி) அவர்கள் கூறியபோது அலி(ரலி) மறுத்து விட்டார்கள். உண்மையில் அலி(ரலி) அவர்களுக்கு ஆட்சி பொறுப்பு குறித்து நபியவர்கள் ஏலவே முன்னறிவிப்பு செய்திருந்தால் இவர்கள் இப்படி அவஸ்தைப் பட்டிருப்பார்களா?
நபிகளாரின் இறுதி நேரத்தின் போது அலி(ரலி) அவர்களுக்கு ஆட்சி பொறுப்பை கொடுக்கும் படி வஸீயத்து சொல்லப்பட்டதா என்று ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், இதைச் சொன்னவர் யார்? என்று கேட்டுவிட்டு, (நபி(ஸல்) அவர்கள் மரணிக்கின்ற இறுதி வேளையில்) நான் அவர்களை என் நெஞ்சோடு அணைத்துக் கொண்டிருந்தேன். அப்போது அவர்கள் (எச்சில் துப்புவதற்காகப்) பாத்திரம் கொண்டு வரும்படி கூறிவிட்டு அப்படியே ஒரு பக்கம் சரிந்தார்கள். அப்போது வபாத் ஆகி விட்டார்கள். (அவர்கள் இறந்ததைக் கூட) நான் உணரவில்லை. (நடந்தது இவ்வாறிருக்க) அலி(ரலி) அவர்களுக்கு (ஆட்சிப் பொறுப்பை) எப்படி அவர்கள் வஸீயத்து செய்திருப்பார் கள்? என்று ஆயிஷா(ரலி) அவர்கள் கேட்டார்கள்.
அறிவிப்பவர்: அஸ்வத் இப்னு யஸீத்(ரஹ்) | நூல்: புகாரி 2741

அலி(ரலி) அவர்களுக்கு ஆட்சியைக் கொடுங்கள் என்ற நபிகளாரின் வஸீயத்தோ அல்லது தனக்கு அதிகாரம் குறித்து நபிகளாரின் வஸீயத்து உள்ளது என்ற அலி(ரலி) அவர்களின் அறிவித்தலோ இறுதி நேரம் வரை இருக்கவில்லை. உண்மை இவ்வாறு இருக்கும் போது அலிக்கு கொடுக்கப்பட வேண்டிய தலைமைப் பொறுப்பை(விலயத்தை) அபூபக்ர்(ரலி) உமர்(ரலி) அவர்களும் தட்டிப் பறித்தார்கள் என ஷீஆக்கள் ஒப்பாரி வைப்பதில் எந்த நியாயமுமில்லை.

நபி(ஸல்) அவர்களின் நேரடியான கட்டளை எதுவுமில்லாததனால் இஸ்லாமிய சமூகம் தலைமைத்துவமின்றி இருப்பது அபாயகரமானது. எப்பிரச்சனை வந்த போதும் அதற்கு முகம் கொடுத்து சமூகத்தை வழிநடாத்திட தலைமை அவசியம். தலைமை இல்லையென்றால் சமூகம் கட்டுப்பாடின்றி சிகறுண்டு விடும் நபிகளாரின் இறுதி நல்லடக்கம் விடயத்தில் முடிவுசெய்து முன்னெடுப்பதற்கும் தலைமை அவசியம் என்பதால் பனூஸகீபாவில் அன்சாரின்கள் மற்றும் முஹாஜிர்கள் ஒன்று கூடி நீண்ட கருத்து பறிமாறல்களுக்குப்பின் அபூபக்ர்(ரலி) அவர்களை கலீபாவாக தெரிவு செய்தனர். இத்தெரிவையடுத்து மக்கள் அமைதியடைநதனர். நபி(ஸல்) அவர்களை எங்கே நல்லடக்கம் செய்வது என்ற பிரச்சனை எழுந்த போது நபியவர்கள் வபாத்தானஇடத்திலே அடக்கம் செய்யப்பட வேண்டும் என்ற செய்தியை கலீபா அபூபக்ர்(ரலி) கூறி மக்களை இணக்கப்பாட்டுக்கு கொண்டுவந்தார்கள்.

பனூஸகீபாவில் நடந்த தலைமைத் தெரிவு முறைப்பற்றி உமர்(ரலி) அவர்கள் பின்வருமாறு விளக்கப்படுத்துகிறார்கள்.
உமர்(ரலி) அவர்கள் வெள்ளிக்கிழமையன்று சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது அமர்ந்தார்கள். பாங்கு சொல்பவர் பாங்கு சொல்லி மௌனமானதும் உமர்(ரலி) அவர்கள் எழுந்து அல்லாஹ்வை அவனுக்குத் தகுதியான பண்புகளைக் கூறி புகழ்ந்தார்கள். பிறகு, ‘நான் (இன்று) எதைச் சொல்ல வேண்டுமென்று ஏற்படுத்தப்பட்டுள்ளதோ அதை நான் உங்களுக்குச் சொல்லிவிடுகின்றேன். இது என் இறப்புக்கு சமீபத்திய பேச்சாக இருக்கக்கூடும் (உறுதியாக) எனக்குத் தெரியாது. இதை (கேட்டு) விளங்கி நினைவில் நிறுத்திக் கொள்கிறவர் தம் வாகனம் செல்லும் இடங்களிலெல்லாம் இதை எடுத்துரைக்கட்டும்! இதை(ச் சரியாக) விளங்க முடியாது என அஞ்சுகிற (எவரும்) என் மீது பொய்யுரைப்பதை நான் அனுமதிக்கமாட்டேன்’

‘அல்லாஹ்வின் மீதாணையாக! உமர் இறந்துவிட்டிருந்தால் இன்னாருக்கு நான் வாக்களிப்புப் பிரமாணம் செய்து கொடுத்திருப்பேன்’ என்று கூறுவதாக எனக்குச் செய்தி எட்டியது. ‘(கலீஃபா) அபூபக்ர்(ரலி) அவர்களின் வாக்களிப்புப் பிரமாணம் அவசரக் கோலமாகத்தான் நடைபெற்று முடிந்தது’ என்று கூறி எந்த மனிதரும் தம்மைத்தாமே ஏமாற்றிக் கொள்ள வேண்டாம்.

ஆம்! அது அப்படி த்தான் நடந்தது. ஆனால், அதன் தீமைகளிலிருந்து அல்லாஹ் (நம்மைப்) பாதுக்காத்துவிட்டான். உங்களில் ஒட்டகங்களில் அதிகமாகப் பயணிக்கும் (-அரபுகள்) எவரும் (மூப்பிலும் மேன்மையிலும்) அபூபக்ர்(ரலி) அவர்களைப் போன்று இல்லை. முஸ்லிம்களின் (சம்மதம் மற்றும்) ஆலோசனையின்றி ஒரு மனிதருக்கு பைஅத் வாக்களிப்புப் பிரமாணம் செய்து கொடுக்கிறவரும் அவர்யாருக்கு வாக்களித்தாரோ அவரும் ஏற்கப்பட மாட்டார்கள். எச்சரிக்கை! அவ்விருவரும் கொல்லப்படவும் செய்யலாம். அல்லாஹ் தன் தூதரை இறக்கச் செய்தபோது நம்மிடையே நடந்த சம்பவங்களில் ஒன்று: அன்சாரிகள் நமக்கு மாறாக பனூசாஇதா சமுதாயக் கூடத்தில் அனைவரும் ஒன்று திரண்டனர். (ஆனால், முஹாஜிர்களான) அலீ(ரலி), ஸுபைர்(ரலி) ஆகியோரும் அவர்களுடன் வேறு சிலரும் நமக்கு மாறுபட்ட நிலையை மேற்கொண்டனர். (நம்முடன் அந்த அரங்கிற்கு அவர்கள் வரவில்லை.) முஹாஜிர்கள் அபூபக்ர்(ரலி) அவர்களிடம் போய் ஒன்று கூடினர். நான் அபூபக்ர்(ரலி) அவர்களிடம், ‘அபூபக்ர் அவர்களே! நம் சகோதரர்களான அன்சாரிகளிடம் நாம் செல்வோம்’ என்று கூறிவிட்டு, அவர்களை நாடிச் சென்றோம்.

அன்சாரிகளை நாங்கள் நெருங்கியபோது அவர்களில் இரண்டு நல்ல மனிதர்கள் எங்களைச் சந்தித்தனர். அவர்களிருவரும் (அன்சாரி) மக்கள் (தங்களில் ஒருவரான ஸஅத் இப்னு உபாதா(ரலி) அவர்களுக்கு வாக்களிப்பதென) ஒரு மனதாக முடிவு செய்திருப்பது குறித்து தெரிவித்துவிட்டு, ‘முஹாஜிர்களே! நீங்கள் எங்கே செல்கிறீர்கள்?’ என்று கேட்டனர். அதற்கு நாங்கள், ‘எங்கள் சகோதரர்களான அன்சாரிகளை நோக்கிச் செல்கிறோம்’ என்றோம். அதற்கு அவர்கள் இருவரும், ‘அவர்களை நீங்கள் நெருங்க வேண்டாம். உங்கள் நிலையை நீங்கள் (இங்கேயே) தீர்மானித்துக்கொள்ளுங்கள். என்றார்கள். உடனே நான், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! கட்டாயம் நாங்கள் அவர்களிடம் செல்லத்தான் போகிறோம்’ என்று கூறிவிட்டு நடந்தோம். பனூசாஇதா சமுதாயக் கூடத்திலிருந்த அன்சாரிகளிடம் சென்றோம்.

அங்கு அவர்களின் நடுவே போர்வை போர்த்திய மனிதர் ஒருவர் இருந்தார். நான், ‘இவர் யார்?’ என்று கேட்டேன். மக்கள், ‘இவர் தாம் ஸஅத் இப்னு உபாதா?’ என்று பதிலளித்தனர். ‘அவருக்கென்ன நேர்ந்துள்ளது?’ என்று கேட்டேன். மக்கள், ‘அவருக்குக் குளிர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது’ என்று கூறினர். நாங்கள் சிறிது நேரம் அமர்ந்திருந்தபோது அன்சாரிகளின் பேச்சாளர் ஏகத்துவ உறுதிமொழி கூறி அல்லாஹ்வுக்குத் தகுதியான பண்புகளைக் கூறி புகழ்ந்துவிட்டு, ‘பின்னர், நாங்கள் (-அன்சாரிகள்) அல்லாஹ்வுடைய (மார்க்கத்தின்) உதவியாளர்கள்; இஸ்லாத்தின் துருப்புகள். முஹாஜிர்களே! நீங்கள் சொற்பமானோர் தாம். உங்கள் கூட்டத்திலிருந்து சிலர் இரவோடிரவாக (மதீனா) வந்துசேர்ந்தார்கள். (இன்றோ) அவர்கள் எங்கள் பூர்வீகத்தைவிட்டுமே எங்களைப் பிரித்துவிடவும், ஆட்சியதிகாரத்திலிருந்து எங்களை வெளியேற்றிவிடவும் எண்ணுகின்றனர்’ என்று கூறினார்.

அன்சாரிகளின் பேச்சாளர் பேசி முடித்து அமைதியானபோது நான் பேச நினைத்தேன். மேலும், நான் எனக்குப் பிடித்த ஓர் உரையை அழகாகத் தயாரித்து வைத்திருந்தேன். அதனை அபூபக்ர்(ரலி) அவர்களுக்கு முன்பே எடுத்துரைத்துவிடவேண்டும் என்றும், (அன்சாரிகளின் பேச்சால்) அபூபக்ர்(ரலி) அவர்களுக்கு ஏற்பட்டிருந்த உஷ்ணத்தில் சிறிதளவையேனும் தணித்திடவேண்டும் என்றும் விரும்பினேன். நான் பேச முற்பட்டபோது அபூபக்ர்(ரலி) அவர்கள், ‘நிதானத்தைக் கையாளுங்கள்’ என்றார்கள். எனவே, நான் அவர்களுக்குக் கோபத்தை உண்டாக்க விரும்பவில்லை.

அதையடுத்து அபூபக்ர்(ரலி) அவர்கள் பேசினார்கள். அன்னார் என்னைவிடப் பொறுமைசாலியாகவும் நிதானமிக்கவராகவும் இருந்தார்கள். நான் எனக்குப் பிடித்த வகையில் அழகுபடத் தயாரித்து வைத்திருந்த உரையில் எதையும்விட்டுவிடாமல் அதைப் போன்று அல்லது அதைவிடவும் சிறப்பாகத் தயக்கமின்றி அன்னார் பேசி முடித்தார்கள்.

அபூபக்ர்(ரலி) அவர்கள் (தம் உரையில்) குறிப்பிடும் போது:
(அன்சாரிகளே!) உங்களைப் பற்றி நீங்கள் குறிப்பிட்ட நலன்களுக்கு நீங்கள் உரியவர்களே. இந்த ஆட்சியதிகாரம் என்பது இந்தக் குறைஷிக் குலத்தாருக்கே அறியப்பட்டுவருகிறது. அவர்கள்தாம் அரபுகளிலேயே சிறந்த பாரம்பரியத்தையும் ; (மக்கா எனும்)சிறந்த ஊரையும் சேர்ந்தவர்கள். நான் உங்களுக்காக இந்த இருவரில் ஒருவரை திருப்திப்படுகிறேன். இவர்களில் நீங்கள் விரும்பிய ஒருவருக்கு வாக்களி (த்து ஆட்சித் தலைவராகத் தேர்வு செய்)யுங்கள். இவ்வாறு கூறிவிட்டு, என் கையையும் அங்கு அமர்ந்திருந்த அபூ உபைதா இப்னு அல்ஜர்ராஹ்(ரலி) அவர்களின் கையையும் பற்றினார்கள். அபூபக்ர்(ரலி) அவர்கள்அவர்கள் கூறிய இந்த வார்த்தையைத் தவிர வேறெதையும் நான் வெறுக்கவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அபூபக்ர்(ரலி) அவர்கள் போன்ற தகுதியுள்ளவர்) இருக்கும் ஒரு சமுதாயத்திற்கு நான் ஆட்சித் தலைவராகஆவதைவிட, நான் எந்தப் பாவமும் செய்யாமலேயே மக்கள் முன் கொண்டு வரப்பட்டு என் கழுத்து வெட்டப்படுவதையே விரும்பினேன்.

அப்போது அன்சாரிகளில் ஒருவர் ‘நான் சிரங்கு பிடித்த ஒட்டகம் சொறிந்து கொள்வதற்கான மரக்கொம்பு ஆவேன்; முட்டுக் கொடுக்கப்பட்ட பேரீச்சமரம் ஆவேன். (அதாவது பிரச்சினையைத் தீர்ப்பவன் ஆவேன். நான் ஒரு நல்ல யோசனை கூறுகிறேன்: (அன்சாரிகளான) எங்களில் ஒரு தலைவர்; குறைஷி குலத்தாரே! உங்களில் ஒரு தலைவர் என்றார். அப்போது கூச்சல் அதிகரித்தது. குரல்கள் உயர்ந்தன. பிளவு ஏற்பட்டுவிடுமோ என்று நான் அஞ்சினேன். எனவே, ‘அபூபக்ர் அவர்களே! உங்கள் கையை நீட்டுங்கள். என்று நான் சொன்னேன். அப்போது அபூபக்ர்(ரலி) அவர்கள் தங்களின் கரத்தை நீட்டினார்கள். உடனே நான் அவர்களுக்கு (நீங்கள் தாம் ஆட்சித் தலைவர் என்ற பைஅத்தை) வாக்குப் பிரமாணத்தை செய்து கொடுத்தேன். (அவ்வாறே) முஹாஜிர்களும் அபூபக்ர்(ரலி) அவர்களுக்கு வாக்குப் பிரமாணம் செய்தனர். பிறகு, அவர்களுக்கு அன்சாரிகளும் வாக்குப் பிரமாணம் செய்து கொடுத்தனர். நாங்கள் ஸஅத் இப்னு உபாதா(ரலி) அவர்களிடம் (அன்னாரைச் சமாதானப்படுத்துவதற்காக) விரைந்து சென்றோம். அப்போது அன்சாரிகளில் ஒருவர், ‘நீங்கள் ஸஅத் இப்னு உபாதா அவர்களை கொன்றுவிட்டீர்கள்’ என்றார்.
உடனே நான், ‘அல்லாஹ்தான் ஸஅத் இப்னு உபாதவைக் கொன்றான் (நாங்களல்ல)’ என்று கூறினேன். மேலும், அல்லாஹ்வின் மீதாணையாக! (இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறந்தபோது) நாங்கள் சந்தித்த பிரச்சினைகளில் அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு வாக்களிப்புப் பிரமாணம் செய்து கொடுத்ததை விட மிகவும் சிக்கலான பிரச்சினை வேறெதையும் நாங்கள் கண்டதில்லை என்றார் உமர்(ரலி) அவர்கள் (நூல்: புகாரி)

புகாரியில் வரக் கூடிய அனஸ்(ரலி) அவர்களின் மற்றொரு அறிவிப்பில்,
நபி(ஸல்) அவர்கள் இறந்த நாளுக்கு மறுநாள் (அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு பனூ சாஇதா மண்டபத்தில் பிரமுகர்கள் வாக்களித்து ‘பைஅத்’ செய்த பிறகு பள்ளிவாசலுக்குள் வந்து) சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது அமர்ந்தபடி உமர்(ரலி) அவர்கள் ஆற்றிய இரண்டாம் உரையை நான் செவியேற்றேன். உமர்(ரலி) அவர்கள் ஏகத்துவ உறுதிமொழி கூறினார்கள். (அப்போது) அபூ பக்ர்(ரலி) அவர்கள் ஏதும் பேசாமல் மௌனமாயிருந்தார்கள். உமர்(ரலி) கூறினார்: நமக்கெல்லாம் இறுதியாகத்தான் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறப்பார்கள்; அதுவரை உயிர் வாழ்வார்கள் என்றே நான் எதிர்பார்த்திருந்தேன். ஆனால், முஹம்மத்(ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள்; என்றாலும், மேலான அல்லாஹ் நீங்கள் நல்வழியில் செல்ல உங்களிடையே (குர்ஆன் எனும்) ஒர் ஒளியை அமைத்துள்ளான்; முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு அதன் மூலமே அல்லாஹ் நேர்வழி காண்பித்தான். இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தோழரும் (ஸவ்ர் மலைக்குகையில் இருந்த) இரண்டு பேரில் இரண்டாமவருமான அபூ பக்ர்(ரலி) அவர்களே உங்களின் (ஆட்சியதிகார) விவகாரங்களுக்கு மக்களிலேயே மிகவும் தகுதி வாய்ந்தவர்க ஆவார்கள். எனவே, அன்னாரிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்து) விசுவாசப் பிரமாணம் செய்து கொடுங்கள் நபித்தோழர்களில் ஒரு சாரார் அதற்கு முன்பே பனூ சாஇதா மண்டபத்தில் அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு விசுவாசப் பிரமாணம் செய்து கொடுத்துவிட்டிருந்தார்கள். ஆனால், பொதுமக்களின் விசுவாசப் பிரமாணம் (இரண்டாம் நாள்) சொற்பொழிவு மேடையில் வைத்தே நடந்தது.

‘அன்றைய தினம் உமர்(ரலி) அவர்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம், சொற்பொழிவு மேடையில் ஏறுங்கள் என்று வற்புறுத்திக் கொண்டே இருந்தார்கள்; இறுதியில், அபூ பக்ர்(ரலி) அவர்கள் சொற்பொழிவு மேடையில் ஏற அவர்களுக்குப் மக்கள் விசுவாசப் பிரமாணம் செய்தார்கள்.
அபூசயீதுல் குத்ரி (ரலி) அவர்கள் அறிவிக்கும் இன்னுமொரு அறிவிப்பன் படி, அன்சாரி பேச்சாளர் பேசும் போது முஹாஜிரின்களே! நபி(ஸல்) அவர்கள் உங்களில் ஒருவரை ஆட்சியாளராக நியமித்திருந்தால் எங்களிலும் ஒருவரை நியமித்திருப்பார்கள். எனவே உங்களில்ஒருவர் எங்களில் ஒருவர் இந்த ஆட்சிக்குரியவராக இருப்பதை நல்லதென கருதுகிறேன் என்றார். அப்போது அன்சாரின்கள் ஒவ்வொருவராக பேசத்துவங்கினர். உடனே ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்கள் எழுந்து நிச்சயமாக அல்லாஹ்வின் துhதர்(ஸல்) அவர்கள் முஹாஜிர்களில் ஒருவராவார். எனவே ஆட்சியாளரும் முஹாஜிர்களில் ஒருவராக இருப்பார். அல்லாஹ்வின் தூதருக்கு நாம் உதவியாளர்களாக (அன்சாரின்களாக) இருந்தது போல் அவருக்கும் உதவியாளர்களாக இருப்போம் என்றார். அப்போது அபூபக்கர்(ரலி) அவர்கள் எழுந்து அன்சாரின்களே அல்லாஹ் உங்களுக்கு நலவை கூலியாக தருவானாக இந்த முடிவல்லாத வேறு முடிவை நீங்கள் எடுத்திருந்தால் நாம் சமாதானமாகி இருக்க மாட்டோம் என்றார். பிறகு ஸைத் இப்னு ஸாபித் (ரலி) அவர்கள் அபூபக்கர்(ரலி) அவர்களின் பையைப் பிடித்து இதோ இவர் தான் உங்கள் தோழர்(கலீபா) அவருக்கு பைஅத் செய்யுங்கள் என்று சொன்னார் பிறகு மக்கள் (பைஅத் செய்து விட்டு களைந்து போய்விட்டார்கள்)

அபூபக்கர்(ரலி) அவர்கள் மஸ்ஜிததுக்கு வந்து மிம்பரில் ஏறி உட்கார்ந்து மக்களை பார்த்தார்கள். அங்கு அலி(ரலி) அவர்களை காணவில்லை. அவரைப்பற்றி விசாரித்தார்கள். அப்போது அன்சாரின்களில் சிலர் அவரை அழைத்து வந்தார்கள். அல்லாஹ்வின் துhதரின் மருமகனும் சிறிய தந்தையின் மகனுமாகிய நீங்கள் முஸ்லிம்களின் ஒற்றுமையை குழைக்கப் பார்க்கிறீர்களா? எனக் கேட்டார்கள் அதற்கு அலி(ரலி) அவர்கள் அல்லாஹ்வின் துhதரின் கலீபாவே அப்படி எதுவுமில்லை என்று கூறிவிட்டு அபூபக்கர்(ரலி) அவர்களுக்கு பைஅத்செய்து கொடுத்தார்கள். பிறகு சுபைர் இப்னு அவ்வாம்(ரலி) அவர்களைப் பார்த்தார்கள். அவரையும் காணவில்லை மக்கள் அவரை அழைத்து வந்தார்கள். அல்லாஹ்வின் துhதரின் உதவியாளரும் சிற்றன்னையின் மகனுமாகிய நீங்கள் முஸ்லிம்களின் ஒற்றுமையை குழைக்கப் பார்க்கிறீர்களா? எனக் கேட்டார்கள் அதற்கு சுபைர் இப்னு அவ்வாம் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் துhதரின் கலீபாவே அப்படி எதுவுமில்லை என்று கூறிவிட்டு அபூபக்கர்(ரலி) அவர்களுக்கு பைஅத்செய்து கொடுத்தார்கள். ( நூல் :ஹாகிம்)

இன்னுமொரு அறிவிப்பின் படி,
மக்களே! நீங்கள் விரும்புகின்ற ஒருவருக்கு இந்த அதிகாரத்திற்கு நியமியுங்கள். நான் உங்களில் ஒருவராக இருக்க விரும்புகின்றேன் என அபூபக்கர்(ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது மக்கள் அபூபக்கரே நாம் உங்களை பொருந்திக் கொண்டோம். நீங்கள் (ஸவ்ர்)குகையில் அல்லாஹ்வின் துhதருடன் இரண்டு பேரில் இரண்டாவதாக இருந்தீர்கள் எனக் கூறினார்கள்.
மக்களே எந்த மனிதனாவது எனக்கு பைஅத் செய்து தருவதில் கைசேதப்பட்டால் அவருக்கு அல்லாஹ்வை நினைவூட்டுகின்றேன் என அபூபக்ர்(ரலி) அவர்கள் கூறிய போது அலி(ரலி) அவர்கள் கையில் வாளுடன் அபூபக்கர்(ரலி) அவர்களை நெருங்கி வந்து, ஒரு காலை மிம்பர் படியிலும் மற்ற காலை தரையிலும் வைத்து அபூபக்கரே உங்களை பதவி நீக்கவும்; மாட்டோம் பதவியை விட்டு நீங்கும் படி கோரவும் மாட்டோம். அல்லாஹ்வுடைய துhதர் உங்களை முற்படுத்தியிருக்கும் போது உங்களை பின்தள்பவர் யார் என்று கேட்டார்கள்.
(நூல்: அவ்ராகுன் மினத் தாரிக்; 28)

ஹாகிமில்வரக்கூடிய வேறொரு அறிவிப்பில், அப்துல்லாஹ் இப்னு மஸ்ஹூத் (ரலி) அவர்கள் பின்வருமாறு அறிவிக்கிறார்கள்:
நபி(ஸல்) அவர்களின் மரணத்தின் பின் தலைமைத் தெரிவின் பேர்து எங்களில் ஒருவரும் உங்களில் ஒருவரும் தலைவராக இருப்போம் என அன்சாரிகள் கூறினார்கள். அப்போது அன்சாரின்களிடம் வந்த உமர்(ரலி) அவர்கள், அன்சாரின்களே! (நபிகளாரின் இறுதி வேளையில்) மக்களுக்கு தொழுகை நடாத்தும் படி அபூபக்கர்(ரலி) அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டதை நீங்கள் அறியமாட்டீர்களா? அபூபக்கரை விட ஒருவரை முற்படுத்த உங்களுக்கு எப்படி மனம் வந்தது என கேட்டார்கள். உடனே அன்சாரின்கள் அபூபக்கரை நாங்கள் முந்திச் செல்வதை விட்டும் நாம் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகின்றோம் என்றார்கள். (நூல்: ஹாகிம்)

பிரிதொரு அறிவிப்பில்,
அபூபக்ர்(ரலி) அவர்கள் பனூ ஸகீபாவில் பேசும போது அன்சாரின்களின் சிறப்புக்களை எடுத்துக் கூறி மக்கள் ஒரு பாதைவழியாக செல்ல அன்சாரிகள் வெறொரு வழியாக செல்வார்களேயானால் நான் அன்சாரிகள் செல்லும் பாதையில் செல்வேன் என நபி (ஸல்) அவர்கள் கூறியதை நீங்கள் நன்கு அறிவீர்கள். ஸஹ்தே! நீங்கள் உட்கார்நது இருக்கும் போது இந்த ஆட்சிஅதிகாரம் குறைஷிகளுக்குரியது மக்களில் நல்லவர்கள் அவர்களில் நல்லவர்களை பின்பற்றுவார்கள் மக்களில் கெட்டவர்கள் அவர்களில் கெட்டவர்களை பின்பற்றுவார்கள் என நபி (ஸல்)அவர்கள் கூறியதை அறிவீர்கள் தானே என அபூபக்கர்(ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது ஸஹ்த் (ரலி) அவர்கள் நீங்கள் உண்மை சொன்னீர்கள். நீங்கள் ஆட்சியாளர்கள் நாங்கள் அமைச்சர்கள் என கூறினார்கள். (நூல்: அஹ்மத்)

குறைஷிகளிலிருந்து தான் தலைமைத்துவம் வர வேண்டும் என்ற செய்தியை அன்சாரிகள் அறியாதது அல்லது மறந்ததன் காரணமாக தங்களுக்கும் தலைமைத்துவம் வேண்டும் என்று ஆரம்பத்தில் பேசினாலும் முஹாஜிர்கள் தரப்பில் தக்க காரணங்கள் முன்வைத்ததும்; ஒதுங்கிக் கொண்hடார்கள். இறுதியில் சுமுகமாக மக்கள் ஆதரவில் அபூபக்ர்(ரலி) தெரிவானார்கள். (ஆட்சி தலைமைத்துவம் குறைஷிகளுக்குரியது என்ற செய்திகள் புகாரி முஸ்லிம் உட்பட பல கிரங்கதங்களில் பதிவாகியுள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *