Featured Posts
Home » இஸ்லாம் » அல்குர்ஆன் » முகத்தால் நடப்பவன்!

முகத்தால் நடப்பவன்!

முகம் மனித உடலில் ஒரு முக்கியப் பகுதியாகும். தலையின் முன் பகுதியாக அமைந்திருப்பது முகம். பலவித புலன்களுக்குரிய உறுப்புக்கள் அதாவது பார்க்கும் திறன்கொண்ட கண், உயிர் வாழச் சுவாசிக்கும் திறன்கொண்ட மூக்கு, கேட்கும் திறன்கொண்ட காது, உண்ணுபதற்கும் அழகாகப் பேசுவதற்கும் பயன்படுத்தப்படும் வாய், அழகிய தோற்றத்தை வெளிப்படுத்தும் கன்னங்கள், இன்னும் சிரம் பணிவதில் முதலிடம் வகிக்கும் நெற்றி, போன்ற முக்கிய உருப்புக்களைக் கொண்டது முகம்.

மனிதன் தன் குணம் சார்ந்த சில உணர்ச்சிகளைத் தனது முகத்தின் மூலமாக வெளிப்படுத்துவதால் முகபாவம் என்ற சொல் வந்தது. மனிதனை அடையாளப்படுத்துவது முகம். மனிதன் தன்னை அழகுபடுத்திக்கொள்வதில் முதன்மைப் பகுதி முகம். அடையாள அட்டைகளில் முகம், சொல் வழக்கிலும் முகவர், முகன்மை, முகமன், முகவரி, முகவுரை, முகமலர்ச்சி, முகப்பொலிவு, முகத்திரை, முகமூடி, துறைமுகம்…, இப்படியாக முகத்தின் சிறப்புக்களைச்  சொல்லிக்கொண்டே போகலாம்.

போர் சமயங்களில் எதிரிகளின் முகத்தைக் காயப்படுத்திச் சிதைப்பதையும், மனைவியைக் கண்டிக்கும் சமயம் முகத்தில் அடிப்பதையும் இஸ்லாம் தடைசெய்துள்ளது, ஆக மனித உடலில்

சிறப்பும் முக்கியத்துவமும் வாய்ந்த பகுதி முகம்.

மனிதன் மிகவும் மோசமான கரடுமுரடான பாதையில் பயணிக்கும்போது தலையைக் கீழே குனிந்து முகங்குப்புற பார்வையை தாழ்த்தித் தள்ளாடித் தள்ளாடிப் போவான். தான் எங்கே செல்கின்றோம் என்பதுகூட அவனுக்குத் தெரியாது தான் செல்லும் வழியறியாது திசைமாறிப் போய்விடுவான்.  எத்தனையோ பேர் அந்தக் கரடுமுரடான பாதையைக் கடக்க முடியாமல் கீழே விழுந்து அடிபட்டுப்போவர்.

ஆனால் ஒருவன் சமதளமான பாதையில் பயணிக்கும்போது அவன் தலை குனிய வேண்டியதில்லை, முகத்தைக் குப்புறத் தாழ்த்த வேண்டியதில்லை, நெஞ்சியை நிமிர்த்தி நேர்கொண்ட பார்வையோடு, நிமிர்ந்தவாறு விரைவாகப் பயணிப்பான், சிரமங்கள் இல்லாமல் தன் இலக்கை எளிதாக அடைந்துவிடுவான்.

இந்த இருவரும் சமமானவர்களா?

اَفَمَنْ يَّمْشِىْ مُكِبًّا عَلٰى وَجْهِهٖۤ اَهْدٰٓى اَمَّنْ يَّمْشِىْ سَوِيًّا عَلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ

(சற்று சிந்தித்துப் பாருங்கள்) கரடுமுரடான பாதையில் முகங்குப்புற குனிந்தவாறு நடந்துசெல்பவன் நேர்வழியில் உள்ளவனா? அல்லது சமதளப் பாதையில் தலை நிமிர்ந்தவாறு நடந்துசெல்ப(வன் நேர்வழியில் உள்ள)வனா? (அல்குர்ஆன்:- 67:22) 

கரடுமுரடான பாதையில் முகங்குப்புற பயணித்துத் தட்டுத்தடுமாறித் திசைமாறிச் செல்லக் கூடியவனை இறைநிராகரிப்பாளனுக்கும், சமதளப்பாதையில் நேரானப்  பார்வைகொண்ட, தலை நிமிர்ந்தவாறு பயணிப்பவனை இறை நம்பிக்கையாளனுக்கும் அல்லாஹ் உதாரணம் கூறி புரியவைக்கின்றான்.

அல்குர்ஆன் இறங்கிய காலகட்டத்தில் வாழ்ந்த மக்கள் தங்களின் பயணங்களுக்காக ஒட்டகம் குதிரை கோவேறு கழுதைகளைப் பயன்படுத்தினாலும், அவர்கள் தங்கள் கால்களால் நடந்து அதிக தூரங்களைக் கடந்தார்கள். கால்நடைகளில் அவர்கள் பயணித்ததைவிட தங்கள் கால்களால் நடந்து பயணித்த தூரங்கள் அதிகம். ஆகவே அவர்களின் அனுபவங்களிலிருந்தே அழகான உதாரணங்களைச் சொல்லி அல்லாஹ் அவர்களுக்குப் புரியவைக்கின்றான்.

இறைநிராகரிப்பாளனைப் பொறுத்தவரை மறுமை நாளில் முகங்குப்புற குனிந்தவாறுதான் நரகத்தை நோக்கி இழுத்துச் செல்லப்படுவான்! இறைநம்பிக்கையாளனோ சமதளமான விரிவான பாதையில் தலை நிமிர்ந்து சுவனத்தை நோக்கி நடந்து செல்வார்.

கால்களால் நடக்கும் மனிதர்களை நாம் கண்டுள்ளோம், இன்னும் (தலைகீழாக) அதாவது கரங்களைத் தரையில் ஊன்றியவாறு நடப்பவனையும் கண்டுள்ளோம். ஆனால் தங்களின் முகங்களால் நடப்பவர்களை யாராவது பார்த்ததுண்டா..? அதுவும் இவ்வளவு சிறப்பம்சங்கள்கொண்ட முகத்தால் நடப்பவர்கள் யார் என்பதை இன்ஷாஅல்லாஹ் அடுத்த தொடரில் பார்ப்போம்.

***

S.A.Sulthan

17/09/1441h

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *