Featured Posts
Home » சட்டங்கள் » தொழுகை » தொழுகையாளிகளைத் தவிர…! (1)

தொழுகையாளிகளைத் தவிர…! (1)

மனிதனின் என்னென்ன கீழ்த்தரமான குணங்களைக் கொண்டவன் அவன் எப்படிப்பட்ட குணங்களைக் கொண்டவனாக படைக்கப்பட்டிருக்கின்றான் என்பதை படைத்த இறைவன் விவரிக்கின்றான்.

اِنَّ الْاِنْسَانَ خُلِقَ هَلُوْعًا ۙ‏ ✳️ اِذَا مَسَّهُ الشَّرُّ جَزُوْعًا ۙ‏ ✳️ وَاِذَا مَسَّهُ الْخَيْرُ مَنُوْعًا ✳️ اِلَّا الْمُصَلِّيْنَۙ ✳️

நிச்சயமாக மனிதன் பேராசையும் – பதற்றமும் நிறைந்தவனாக படைக்கப்பட்டிருக்கின்றான். ஏதேனும் துன்பம் அவனுக்கு வந்தால் பொறுமை இழந்தவனாக அவன் ஆகின்றான். ஆனால் அவனுக்கு வளம் (வசதி) வந்துவிட்டால் கடும் கஞ்சனாக ஆகிவிடுகின்றான். ஆனால் தொழுகையாளிகளைத் தவிர! (அல்குர்ஆன்: 70:19 – 22)

மனிதனின் இயல்பான மோசமான கெட்ட குணங்களை உபதேசங்கள் மூலமாகவும் – இஸ்லாமிய வணக்க வழிபாடுகள் மூலமாகத்தான் மாற்றமுடியும்.

ஆசை – பேராசை இந்த இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை முதலில் புரிந்துகொள்ளவேண்டும். ஒரு பொருளை அடைவதற்காக அதைப் பெறுவதற்காக நியாயமாக முயற்சி செய்வது ஆசையாகும்.

ஆனால் எள்ளளவு கீழ்த்தரமான காரியங்களைச் செய்தேனும் அப்பொருளை அடையவேண்டும் என்று முயற்சிப்பதும், இறைவன் வகுத்த வரம்புகளை மீறி அதை அடைய முயற்சி செய்வதும் பேராசையாகும்.

உதாரணமாக ஒருவருக்கு மருத்துவ சிகிச்சைக்காகப் பத்து லட்சம் ருபாய் தேவை, இவர் சுயமரியாதையோடு அதை அடைய முயற்சிக்கின்றார், இது ஆசை. ஆனால் இன்னொருவர் பத்து ருபாய் பெறுவதற்கும் கூனிக்குறுகி சுயமரியாதையை இழந்து பெறுகின்றார் இது பேராசையாகும்!

ஒருவன் தொழில் செய்து பொருளாதாரத்தை திரட்டுவதை இஸ்லாமை அங்கீகரித்துள்ளது. தனது கையால் உழைத்து பொருளீட்டுபவனை விட சிறந்தவன் யாருமில்லை என்ற அளவுக்கு சிறந்த உழைப்பாளர்களை இஸ்லாம் அடையாளப்படுத்துகின்றது. தொழில் செய்து பணம் சேர்ப்பது ஆசையாகும்.

ஆனால் நியாயமாகவும், நேர்மையாகவும் தொழில் செய்யும் ஒருவன் தொழுகை நேரத்தில் அதைக் கண்டுகொள்வதே இல்லை! அவனது கவனம் முழுவதும் பொருளீட்டுவதிலேயே இருக்கிறது, அல்லாஹுவை வணங்குவதை தொழுவதை விட்டும் பொருளாதாரம் ஈட்டுவதிலேயே மூழ்கிப்போய் இருக்கின்றான் இவன் பேராசைக்காரனாவான்!

தொழுகையை விட்டுவிட்டு ஒரு காரியத்தில் ஈடுபடுவதால் ஒருவனுக்குப் பணம் கிடைக்கும் என்றால் தொழுகையை விட்டுவிட்டு அந்தப் பணத்திற்கு ஆசைப்படுவது பேராசை. தொகை சிறிதாக இருந்தாலும் அது பேராசைதான். காரணம் பணத்தை அடைவதற்காக அதைவிட முக்கியமானதை அவன் விட்டு விட்டான்.

அவன் சேமித்த சொத்துக்கு ஏதாவது சேதாரம் வந்துவிட்டால், அல்லது அதற்கு ஏதாவது அழிவு வந்துவிட்டால் அவனால் அதைத் தாங்கிக்கொள்ள முடியாமல் பதறி துடிதுடித்துப் பலஹீனமாகி விரைவாகவே நோயாளியாகிப் போகின்றான். அல்லாஹுவின் நாட்டப்படி அது நடந்துவிட்டது என்ற முடிவுக்கு வர மறுக்கின்றான் ஆனால் தொழுகையாளிகளைத் தவிர!

அல்லாஹுவின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மனிதனிடம் உள்ள குணங்களில் மிகவும் கெட்ட குணம் என்னவெனில் அவனைப் பதற்றத்திற்கு உள்ளாகும் கஞ்சத்தனமும், இதயம் நொடிந்துபோகச் செய்யும் கோழைத்தனமும் ஆகும். (நூல்: அபூ தாவூத்)

அடுத்ததாக மனிதனுக்கு இன்னொரு கெட்டப் பழக்கம் உண்டு! ஒன்றுமே இல்லாதவனாக இருந்தவன் – பேராசைக்காரனாக இருந்தவன், அவனுக்கு செல்வம் கொழிக்கும்போது, அவன் செல்வச் செழிப்பானவனாக ஆகும்போது அவனிடம் கஞ்சத்தனமும், கருமித்தனமும் குடி கொண்டுவிடுகின்றது. தனக்கு மிகவும் நெருக்கமானவர்கள் எவ்வளவுதான் சிரமப்பட்டாலும், எப்படிக் கஷ்டப்பட்டாலும் அதைக் கண்டு கொள்ள மறுக்கின்றான். அல்லாஹுவின் பாதையில் சிலவு செய்ய மறுக்கின்றான், தர்மம் செய்ய மறுக்கின்றான். ஆனால் தொழுகையாளிகளைத் தவிர!

ஆக கெட்ட குணங்களிலிருந்தும், இழிவான செயல்களிலிருந்தும், கருமித்தனத்திலிருந்தும் ஒருவனை தொழுகை பாதுகாக்கின்றது. தொழுகை நற்காரியங்களின் பக்கம் தூண்டுகிறது. தொழுகை விசாலமான, தாரளான உள்ளத்தை ஏற்படுத்துகிறது.

அவர்கள் எப்படிப்பட்ட தொழுகையாளிகள்? என்பதை இன்ஷாஅல்லாஹ் அடுத்த தொடரில் பார்ப்போம்..,

*
Sulthan Seaport
10/04/1443h
Muthupettai

One comment

  1. 5 வேலைய தொழுகைக்கூடியவர் கூட இன்று செய்த உதவியை சொல்லி காட்டுகிறார் . வயதில் பெரியவர் என்று கூட பார்க்காமல் நாவினால் வேதனை செய்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *