Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » நபி (ஸல்) அவர்களின் மிஃராஜ் பயணம் பற்றி…

நபி (ஸல்) அவர்களின் மிஃராஜ் பயணம் பற்றி…

102- நான் மக்காவில் இருந்த போது என்னுடைய வீட்டு முகடு திறக்கப்பட்டது. (அது வழியாக) ஜிப்ரீல் (அலை) இறங்கி என்னுடைய நெஞ்சைப் பிளந்தார்கள். அதை ஸம் ஸம் தண்ணீரால் கழுவினார்கள். பின்னர் ஈமான் மற்றும் ஞானத்தினால் நிரப்பப்பட்ட ஒரு தங்கத் தட்டைக் கொண்டு வந்து என்னுடைய நெஞ்சில் கொட்டி விட்டு, அதை மூடி விட்டார்கள். பிறகு ஜிப்ரீல் கையைப் பிடித்து முதல் வானத்திற்கு என்னை ஏற்றிச் சென்றார்கள். முதல் வானத்தை அடைந்ததும் அந்த வானத்தின் காவலரிடம் திற என்றார்கள். அவ்வானவர், யார் அவர்? என்று வினவினார். அதற்கு நான் தான் ஜிப்ரீல் என்று பதில் கூறினார். அதற்கு அவ்வானவர், உம்முடன் யாராவது இருக்கிறார்களா? எனக் கேட்டார். ஜிப்ரீல் ஆம்! என்னுடன் முஹம்மது இருக்கிறார்கள், என்ற கூறினார்கள். அதற்கு வானவர் அவர் அழைக்கப்பட்டிருக்கிறாரா? என்று கேட்டார், ஜிப்ரீல் ஆம் என்றார்கள். (இந்தக் கேள்விகளுக்குப் பின்னர்) வானவர், முதல் வானத்தைத் திறந்து கொடுத்ததும் நாங்கள் அவ்வானத்தில் ஏறிச் சென்றோம். அப்போது அங்கு ஒரு மனிதர் அமர்ந்திருந்தார். அவரின் வலது பக்கம் சில மனிதர்களும் இடது பக்கம் சில மனிதர்களும் காணப்பட்டார்கள். அவர் தமது வலது பக்கமுள்ள மனிதர்களைப் பார்த்தால் சிரிக்கிறார். தமது இடதுப் பக்கமுள்ளவர்களைப் பார்த்தால் அழுகிறார். இந்நிலையிலுள்ள அம்மனிதர் நல்ல நபியே! வருக! நல்ல மகனே வருக! என்று கூறினார். அப்போது ஜிப்ரீல் (அலை) அவர்களிடம் இவர் யார்? என நான் கேட்டேன். இவர் தான் ஆதம். அவருடைய வலது பக்கமும் இடது பக்கமும் உள்ளவர்கள் அவருடைய சந்ததிகளிலுள்ள மனிதர்கள். வலது பக்கமுள்ளவர்கள் சுவர்க்கவாசிகள், இடது பக்கமுள்ளவர்கள் நரகவாசிகள்ஆவர். அவர் தமது வலது பக்கம் பார்த்துச் சிரிக்கிறார், தமது இடது பக்கம் பார்த்து அழுகிறார் என்று கூறினார்கள்.

பின்னர் ஜிப்ரீல்(அலை)என்னை இரண்டாவது வானத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அந்த வானத்தின் காவலரிடம் திற எனக் கூறினார். முதல் வானத்தின் காவலர் கேட்ட கேள்வியைப் போலவே இவரும் கேட்டு விட்டுத் திறந்தார். இந்த ஹதீஸை அறிவிக்கும் அனஸ் (ரலி) கூறுகிறார்கள்: –

வானங்களில் ஆதம், இத்ரீஸ், மூஸா, ஈஸா, இப்ராஹீம் (அலை) ஆகிய நபிமார்களைக் கண்டதாக நபி (ஸல்) குறிப்பிட்டார்கள். ஆனால் முதல் வானத்தில் ஆதம் (அலை) அவர்களையும் ஆறாவது வானத்தில் இப்ராஹீம் (அலை) அவர்களையும் கண்டதாகக் குறிப்பிட்டார்கள். மற்ற நபிமார்களைக் கண்ட இடத்தைக் கூறவில்லை- ஜிப்ரீல் (அலை) என்னை அழைத்துக் கொண்டு இத்ரீஸ் (அலை) பக்கமாகச் சென்ற போது நல்ல நபியே! வருக! நல்ல சகோதரரே வருக! என இத்ரீஸ் (அலை) கூறினார்கள். அப்போது இம்மனிதர் யார்? என நான் கேட்டேன். இவர் இத்ரீஸ் (அலை) என ஜிப்ரீல் (அலை) பதில் கூறினார்கள்.

பின்னர் மூஸா (அலை) பக்கமாகச் சென்றபோது நல்ல நபியே வருக! நல்ல சகோதரரே வருக! எனக் கூறினார்கள். இவர் யார்? என நான் கேட்டேன். இவர் தான் மூஸா (அலை) என ஜிப்ரீல் (அலை) கூறினார்கள். பின்னர் ஈஸா (அலை) பக்கமாகச் சென்றபோது நல்ல நபியே! வருக! நல்ல சகோதரரே வருக! எனக் கூறினார்கள். இவர் யார்? என நான் கேட்டேன். இவர் ஈஸா (அலை) என ஜிப்ரீல் (அலை) கூறினார்கள். பின் இப்ராஹீம் (அலை) பக்கமாக நான் சென்றேன். அப்போது நல்ல நபியே வருக! நல்ல மகனே வருக! என்றார்கள். இவர் யார்? என ஜிப்ரீல் (அலை) இடம் கேட்டேன். இவர் இப்ராஹீம் (அலை) என்று கூறினார்கள்.

-இப்னு அப்பாஸ் (ரலி) அபூஹப்பா அல் அன்ஸாரி (ரலி) ஆகியோர் அறிவிக்கும் வேறு ஒரு அறிவிப்பில் பின்னர் நான் மேலே கொண்டு செல்லப்பட்டேன். நான் ஏணியில் ஏறிச்சென்ற போது எழுது கோல்களால் எழுதும் சப்தத்தை செவியுற்றேன் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உள்ளது. அல்லாஹ் உனது உம்மத்தின் மீது ஜம்பது நேரத் தொழுகையைக் கடமையாக்கினான் (அதை ஏற்றுத்) திரும்பி நான் வந்து கொண்டிருந்தபோது, மூஸா (அலை) பக்கமாகச் சென்றேன். அப்போது உங்கள் சமுதாயத்திற்கு அல்லாஹ் எதைக் கடமையாக்கினான்? என்று கேட்டார்கள். ஜம்பது நேரத் தொழுகையை கடமையாக்கினான் என்றேன். நீங்கள் இறைவனிடம் திரும்பச் செல்லுங்கள். உங்கள் உம்மத்தினர் அதற்கு சக்தி பெற மாட்டார்கள். என மூஸா (அலை) அவர்கள் கூறினார்கள். நான் திரும்பச் சென்றேன். அப்போது அதில் கொஞ்சத்தை அல்லாஹ் குறைத்தான். (அதைப் பெற்றுக் கொண்டு) நான் மூஸா (அலை) இடம் வந்து கொஞ்சம் குறைத்துள்ளான் என்றேன். நீங்கள் உங்கள் இறைவனிடம் திரும்பச் செல்லுங்கள். உங்கள் உம்மத்தினர் அதற்குச் சக்தி பெற மாட்டார்கள் என்றார்கள். நான் திரும்பிச் சென்றேன். அதில் கொஞ்சம் குறைத்தான். நான் மூஸா (அலை) இடம் வந்தேன். (கொஞ்சம் குறைத்தான் என்றேன்) நீங்கள்உங்கள் இறைவனிடம் திரும்பச்செல்லுங்கள். உங்கள் உம்மத்தினர் இதற்கு சக்திபெற மாட்டார்கள். என்றார்கள். நான் திரும்பச் சென்றேன் அப்போது ஜந்து நேரத் தொழுகையை கடமையாக்குகிறேன். அது ஜம்பதிற்குச் சமம். எனது சொல்லில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை என்று அல்லாஹ் கூறினான். நான் மூஸா (அலை) இடம் வந்தேன். அப்போது உங்கள் இறைவனிடம் சென்று இதையும் குறைக்குமாறு கூறுங்கள் என்றார்கள். இனிமேல் எனது இறைவனிடம் (குறைத்துக் கேட்பதற்கு) நான் வெட்கப்படுகிறேன் என்று கூறினேன்.

பின்னர் ஜிப்ரீல் (அலை) என்னை ஸித்ரதுல் முன்தஹா என்னும் இடத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அதைப் பல வண்ணங்கள் சூழ்ந்திருந்தன.அது என்ன என்பது எனக்குப் புலப்படவில்லை. பின்னர் சுவர்க்கத்தில் நான் நுழைக்கப்பட்டேன். அதில் முத்துக்களினால் உள்ள கயிறுகளைப் பார்த்தேன். சுவர்க்கத்தின் மண் கஸ்தூரியாக இருந்தது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புகாரி-349: அபூதர் (ரலி)

One comment

  1. இப்ராஹிம்

    நபியவர்கள் அல்லஹுடன் மிஃராஜ் இரவில் தொடையோடு தொடையாக நெருங்கி சந்தித்தார்கள் என கூறப்படும் ஹதீஸ் உன்மையா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *