Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » தொழுகை நேரம் தவறி விட்டால்..

தொழுகை நேரம் தவறி விட்டால்..

396-நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் (கைபரிலிருந்து திரும்பிக் கொண்டு) இருந்தோம். இரவின் ஆரம்பத்தில் நாங்கள் சென்று கொண்டிருந்தோம். அதிகாலை நேரத்தின் முகப்பை (இரவின் கடைசிப் பகுதியை) நாங்கள் அடைந்த பொழுது ஓய்வெடுப்பதற்காக (ஓரிடத்தில்) தங்கினோம். சூரியன் உச்சிக்கு வரும் வரை நாங்கள் எங்களையும் மீறிக் கண்ணயர்ந்து விட்டோம். உறக்கத்திலிருந்து கண்விழித்தவர்களில் அபூபக்ரே முதலாமவராக இருந்தார். இறைத்தூதர் தாமாகக் கண்விழிக்காத வரை அவர்களை உறக்கத்திலிருந்து எவரும் எழுப்புவதில்லை. அடுத்து உமர் (ரலி) அவர்களும் கண் விழித்தார்கள். அபூபக்ர் (ரலி) நபி (ஸல்) அவர்களின் தலைமாட்டில் அமர்ந்து கொண்டு குரலை உயர்த்தி ‘அல்லாஹு அக்பர் – அல்லாஹ் மிகப்பெரியவன்’ என்று கூறலானார்கள். உடனே, நபி (ஸல்) அவர்கள் கண்விழித்து (சிறிது தொலைவு சென்றதன்) பின் (தம் வாகனத்திலிருந்து) இறங்கி எங்களுக்கு அதிகாலைத் தொழுகையைத் தொழுகை நடத்தினார்கள். அப்போது ஒருவர் எங்களுடன் தொழாமல் கூட்டத்தாரை விட்டுத் தனியே விலகியிருந்தார். நபி (ஸல்) அவர்கள் (தொழுகையை முடித்து) திரும்பியவுடன், ‘இன்னாரே! எங்களுடன் நீ ஏன் தொழவில்லை?’ என்று கேட்டார்கள். அவர் ‘எனக்குப் ‘பெருந்தொடக்கு’ ஏற்பட்டுவிட்டது” என்று கூறினார். உடனே, நபி (ஸல்) அவர்கள் மண்ணில் ‘தயம்மும்’ செய்யும்படி அவருக்குக் கட்டளையிட்டார்கள். பிறகு அவர் தொழுதார்.

நபி (ஸல்) அவர்கள் என்னை ஒரு வாகனத்தில் தமக்கு முன்னால் அமர்த்தினார்கள். எங்களுக்குக் கடுமையானத் தாகம் ஏற்பட்டது. நாங்கள் பயணம் சென்று கொண்டிருக்கும்போது (ஒட்டகத்தின் மீது) தோலினாலான தண்ணீர்ப் பைகள் இரண்டிற்கிடையே தன் இரண்டு கால்களையும் தொங்கவிட்டிருந்த பெண்ணொருத்தியை நாங்கள் கண்டோம். அவளிடம் நாங்கள், ‘தண்ணீர் எங்கே (உள்ளது)?’ என்று கேட்டோம். அதற்கு அவள், ‘தண்ணீர் (இங்கு) இல்லை” என்று சொன்னாள். நாங்கள், ‘உன் வீட்டாரு(ள்ள இந்தப் பகுதி)க்கும் தண்ணீ(ருள்ள இடத்து)க்கும் இடையே உள்ள தூரம் எவ்வளவு?’ என்று கேட்டோம். அவள், ‘ஒரு பகலும் ஓர் இரவும் (பயணம் செய்யும் தூரம்)” என்று சொன்னாள். நாங்கள், ‘இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் நீ நட” என்று சொன்னோம். அவள், ‘இறைத்தூதர் (ஸல்) என்றால் யார்?’ என்று கேட்டாள். அவளை (தண்ணீர் தரச்) சம்மதிக்க வைக்க எங்களால் முடியவில்லை. இறுதியில் அவளை அழைத்துக் கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் நாங்கள் சென்றோம். அவள் நபி (ஸல்) அவர்களிடமும் எங்களிடம் பேசியதைப் போன்றே பேசினாள்; தான் அனாதைக் குழந்தைகளின் தாய் என்று நபி (ஸல்) அவர்களிடம் சொன்னதைத் தவிர. உடனே, நபி (ஸல்) அவர்கள் அவளுடைய தண்ணீர்ப் பைகள் இரண்டையும் கொண்டு வரச் சொல்லிக் கட்டளையிட்டு அவற்றின் வாய்கள் இரண்டிலும் (தம் கரத்தால்) தடவினார்கள். தாகமுடனிருந்த நாங்கள் நாற்பது பேரும் தாகம் தீரும் வரை (அவற்றிலிருந்து) தண்ணீர் பருகினோம். எங்களுடன் இருந்த ஒவ்வொரு தோல்ப் பையையும் ஒவ்வொரு தோல் பாத்திரத்தையும் நாங்கள் நிரப்பிக் கொண்டோம். (எங்கள்) ஒட்டகம் ஒன்றுக்கு மட்டும் (அதனால் தாக்குப் பிடிக்க முடியும் என்பதால்) தண்ணீர் குடிப்பாட்டவில்லை. அந்தத் தோல்ப்பை (தண்ணீர்) நிரம்பி வழிந்த காரணத்தால் (அதன்) வாய் பிளந்து போகவிருந்தது. பிறகு நபி (ஸல்) அவர்கள், ‘உங்களிடம் இருக்கும் (உணவுப்) பொருள்களைக் கொண்டு வாருங்கள்” என்று (தம் தோழர்களுக்கு) உத்திரவிட்டார்கள். (தோழர்களும் கொண்டு வந்து தர), நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணுக்காக ரொட்டித் துண்டுகளையும் பேரீச்சம் பழங்களையும் ஒன்று திரட்டி (அவளுக்கு வழங்கி)னார்கள். இறுதியில், ‘அவள் தன் வீட்டாரிடம் சென்று, ‘நான் மக்களிலேயே மிக வசீகரமான ஒருவரை, அல்லது அவர்கள் (முஸ்லிம்கள்) நம்புவதைப் போல் ஓர் இறைத்தூதரைச் சந்தித்தேன்” என்று சொன்னாள். அல்லாஹ் (அவளுடைய) அந்தக் குலத்தாருக்கு அப்பெண்ணின் வாயிலாக நேர்வழி அளித்தான். எனவே, அவளும் இஸ்லாத்தை ஏற்றாள்; அவர்களும் இஸ்லாத்தை ஏற்றார்கள்.

புஹாரி: 3571 இம்ரான் பின் ஹூஸைன் (ரலி).


397– யாரேனும் ஒரு தொழுகையை மறந்து விட்டால் நினைவு வந்ததும், அவர் அதை தொழட்டும்! இதைத் தவிர அதற்கு வேறு பரிகாரம் எதுவும் இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். என்னைத் தியானிப்பதற்காக தொழுகையை நிலை நிறுத்துவீராக! (அல்குர்ஆன்: 20: 14) என்ற வசனத்தை எடுத்து ஓதிக் காட்டினார்கள்.

புகாரி-597: அனஸ்(ரலி)

One comment

  1. please complete this hadeeth

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *