Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » ஹஜ்ஜில் இஹ்ராமை அணிதலும் களைதலும்….

ஹஜ்ஜில் இஹ்ராமை அணிதலும் களைதலும்….

755. ஹஜ்ஜத்துல் விதாவில் நபி (ஸல்) அவர்களோடு சென்றிருந்தபோது உம்ராவிற்காக இஹ்ராம் (ஆடையை) அணிந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘யாருடன் குர்பானிப் பிராணி உள்ளதோ அவர் உம்ராவோடு ஹஜ்ஜுக்கும் இஹ்ராம் அணிந்து கொள்ளட்டும். இன்னும் அவர் இவ்விரண்டையும் நிறைவேற்றும் வரை இஹ்ராமிலிருந்து விடுபடக் கூடாது” என்றார்கள். ஆனால் நான் மக்கா வந்தபோது மாதவிடாய்க்காரியானேன். இதனால் கஅபாவைத் தவாஃபும் செய்யவில்லை. இன்னும் ஸஃபா, மர்வாவுக்கிடையே ஓடவுமில்லை. இதை நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். அதற்கு அவர்கள் ‘உன்னுடைய தலைமுடியை அவிழ்த்துவிட்டு தலைவாரிக் கொள். பிறகு ஹஜ்ஜிற்காக மட்டும் இஹ்ராம் (ஆடையை) அணிந்து உம்ராவைவிட்டு விடு!” என்றார்கள். நானும் அவ்வாறே செய்தேன். நாங்கள் ஹஜ்ஜை முடித்தபோது, (என் சகோதரர்) அப்துர் ரஹ்மானுடன் என்னை தன்யீம் எனும் இடத்திற்கு நபி (ஸல்) அவர்கள் அனுப்பினார்கள். நான் உம்ரா செய்தேன். ‘இது உன்னுடைய விடுபட்ட உம்ராவுக்குப் பகரமாகும்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்தவர்கள் கஅபாவை வலம் வந்து ஸஃபா, மர்வாவுக்கிடையே ஓடி (ஸயீ செய்து) விட்டு இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிட்டார்கள். மினாவிலிருந்து திரும்பியபோது மீண்டும் ஒரு முறை வலம் வந்தார்கள். ஹஜ், உம்ரா இரண்டுக்கும் சேர்த்து இஹ்ராம் அணிந்தவர்கள் ஒருமுறை மட்டுமே வலம் வந்தார்கள்.

புஹாரி : 1556 ஆயிஷா (ரலி).

756. நான் நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜதுல் விதாவின்போது இஹ்ராம் அணிந்தேன். அறுத்துக் கொடுப்பதற்குரிய கால்நடையைக் கொண்டு வராத ஹஜ்ஜின் ‘தமத்துவ்’ என்ற வகையை நிறைவேற்றுபவர்களுடன் இருந்தேன். மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதை உணர்ந்தேன். அரஃபாவின் இரவு வரும்வரை நான் சுத்தமாகவில்லை. அப்போது நான் நபி (ஸல்) அவர்களிடம் இறைத்தூதர் அவர்களே! இன்று அரஃபாவின் இரவு. நான் ‘உம்ரா’ச் செய்துவிட்டுத் திரும்ப இஹ்ராம் அணிந்து ஹஜ் செய்வதாக நினைத்திருந்தேன் என்றேன். ‘உன்னுடைய தலைமுடியை அவிழ்த்து அதை வாரிவிட்டு உம்ரா செய்வதை நிறுத்தி விடு. (ஹஜ்ஜிற்கு இஹ்ராம் அணிந்து கொள்)’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவ்வாறே நானும் செய்தேன். ஹஜ்ஜின் கிரியைகளை முடித்த பின்பு, ஹஸ்பாவில் தங்கிய இடத்திலிருந்து தன்யீம் என்ற இடத்திற்குச் சென்று, எனக்கு விடுபட்ட உம்ராவிற்கு அங்கிருந்து இஹ்ராம் அணிந்து வருவதற்காக என்னை கூட்டிச் செல்லுமாறு (என் சகோதரர்) அப்துர்ரஹ்மானிடம் நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்” என ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

புஹாரி :316 ஆயிஷா (ரலி).

757. ‘நாங்கள் ஹஜ் செய்வதற்காக மதீனாவிலிருந்து புறப்பட்டுச் சென்றோம். ‘ஸரிஃப்’ என்ற இடத்தை அடைந்ததும் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், நான் இருந்த இடத்திற்கு வந்தார்கள். அழுது கொண்டிருந்த என்னைப் பார்த்து, ‘உனக்கு என்ன? மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா?’ என்று கேட்டார்கள். நான் ‘ஆம்!’ என்றேன். ‘இந்த மாதவிடாய் ஆதமுடைய பெண் மக்களின் மீது அல்லாஹ் ஏற்படுத்தியது. எனவே கஅபதுல்லாஹ்வைத் வலம் வருவதைத் தவிர ஹாஜிகள் செய்கிற மற்ற அனைத்தையும் நீ செய்து கொள்’ என்று கூறிவிட்டு நபி (ஸல்) அவர்கள் தங்களின் மனைவியருக்காக மாட்டைக் ‘குர்பானி கொடுத்தார்கள்”.

புஹாரி :294. ஆயிஷா (ரலி).

758. நாங்கள் ஹஜ்ஜின் மாதங்களில், ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்து, ஹஜ்ஜுக்குரிய கட்டுப்பாடுகளுடன் (மதீனாவிலிருந்து) புறப்பட்டு, ‘ஸரிஃப்’ என்னும் இடத்திற்கு வந்து தங்கினோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் தங்களின் தோழர்களிடம், ‘பலிப்பிராணி கொண்டு வராமல் ஹஜ்ஜை உம்ராவாகச் செய்ய விரும்புகிறவர் அவ்வாறே செய்து கொள்ளட்டும்! பலிப்பிராணி வைத்திருப்பவர் அவ்வாறு செய்ய வேண்டாம்!’ எனக் கூறினார்கள். நபி (ஸல்) அவர்களிடமும் அவர்களின் தோழர்களில் ஓரளவு வசதி படைத்தவர்களிடமும் பலிப்பிராணிகள் இருந்தன. எனவே, அவர்கள் உம்ராவுக்கெனத் தனியாக வலம் வரவில்லை. பிறகு நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தபோது நான் அழுது கொண்டிருந்தேன். அவர்கள் ‘ஏன் அழுகிறாய்?’ எனக் கேட்டார்கள். ‘நீங்கள் உங்கள் தோழர்களிடம் கூறியதை செவியுற்றேன்; ஆனால், நான் உம்ரா செய்வதிலிருந்து தடுக்கப்பட்டு விட்டேன்!” என்றேன். அதற்கவர்கள் ‘என்ன காரணம்?’ எனக் கேட்டதும், ‘நான் தொழக்கூடாது நிலைமைக்கு ஆளாகிவிட்டேன்! (எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது!) என்றேன். அவர்கள், ‘உனக்கொன்றுமில்லை! நீ ஆதமின் பெண்மக்களில் ஒருத்தியே! அப்பெண் மக்களுக்கு விதிக்கப்பட்டதே உனக்கும் விதிக்கப்பட்டுள்ளது! எனவே, ஹஜ் செய்பவளாகவே இரு! அல்லாஹ் உனக்கு (உம்ரா செய்யவும்) வாய்ப்பளிக்கக் கூடும்!” என்றார்கள். நாங்கள் ஹஜ்ஜை முடித்துவிட்டு மினாவிலிருந்து புறப்படும்வரை நான் அப்படியே (மாதவிடாயுடன்) இருந்தேன். பிறகு முஹஸ்ஸப் வந்து தங்கியபோது நபி (ஸல்) அவர்கள் அப்துர் ரஹ்மானை அழைத்து, ‘உன்னுடைய சகோதரியை ஹரமுக்கு வெளியே அழைத்துப் போ! அவள் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்து கொள்ளட்டும்! பிறகு நாங்களிருவரும் தவாஃபை முடித்துக் நடுநிசியில் வந்தபோது ‘(தவாஃபை) முடித்து விட்டீர்களா?’ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான் ‘ஆம்!” என்றேன். நபி (ஸல்) அவர்கள் தங்களின் தோழர்களிடம் புறப்படுமாறு அறிவித்தார்கள். மக்களும், ஸுப்ஹுக்கு முன்பே தவாஃபுஸ் ஸியாரத் செய்தவர்களும் புறப்படத் தயாரானதும் நபி (ஸல்) அவர்கள் மதீனாவை நோக்கிப் பயணமானார்கள்.

புஹாரி: 1788 ஆயிஷா (ரலி).

759. நாங்கள் நபி (ஸல்) அவர்களோடு சென்றோம். அவர்கள் ஹஜ்ஜைத் தவிர வேறெதையும் செய்ய நாங்கள் காணவில்லை. மக்காவை வந்தடைந்ததும் கஅபாவை வலம் வந்தோம். அதன் பிறகு குர்பானிப் பிராணியைக் கொண்டு வராதவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபடுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். உடனே பிராணியைக் கொண்டு வராதவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டார்கள். நபி (ஸல்) அவர்களின் மனைவியரும் பிராணியைக் கொண்டுவராததால் அவர்களும் இஹ்ராமிலிருந்து விடுபட்டார்கள். ஆனால் நான் மாதவிடாய்க்காரியாக இருந்ததால் வலம் வரவில்லை. (முஹஸ்ஸப் எனும் இடத்தில் தங்கும்) இரவு வந்தபோது நான் நபி (ஸல்) அவர்களிடம், இறைத்தூதர் அவர்களே! மக்கள் ஹஜ், உம்ரா இரண்டையும் முடித்துத் திரும்புகின்றனர்; ஆனால் நானோ ஹஜ்ஜுடன் மட்டும் திரும்புகிறேன் என்றேன். நபி (ஸல்) அவர்கள், ‘நாம் மக்காவை வந்தடைந்தபோது நீ வலம் வரவில்லையா?’ எனக் கேட்டார்கள். நான் இல்லை என்றேன். ‘அப்படியானால் உன்னுடைய சகோதரனுடன் தன்யீம் எனும் இடத்திற்குச் சென்று உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்து அதனை முடித்து இன்ன இன்ன இடத்திற்கு வந்துவிடு” எனக் கூறினார்கள். ஸஃபிய்யா (ரலி) நபி (ஸல்) அவர்களிடம், ‘நானும் உங்கள் அனைவரின் பயணத்தையும் தடுத்துவிட்டதாக உணர்கிறேன்’ என்று சொன்னபோது, நபி (ஸல்) ‘காரியத்தைக் கெடுத்துவிட்டாயே! பத்தாம் நாளில் நீ வலம் வரவில்லையா?’ என்று கேட்டார்கள். ஸஃபிய்யா ‘ஆம், செய்து விட்டேன்!” என்றார். ‘பரவாயில்லை! புறப்படு!’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதன் பிறகு என்னை நபி (ஸல்) அவர்கள் சந்தித்தபோது, அவர்கள் மக்காவிலிருந்து புறப்பட்டு ஒரு குன்றில் ஏறிக் கொண்டிருந்தார்கள். நான் இறங்கிக் கொண்டிருந்தேன் அல்லது அவர்கள் இறங்கிக் கொண்டிருந்தார்கள்; நான் ஏறிக் கொண்டிருந்தேன்.

புஹாரி:1784 ஆயிஷா (ரலி).

760. நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி)வை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சென்று தன்யீம் என்னுமிடத்தில் உம்ராவுக்காக இஹ்ராம் அணியச் செய்ய வேண்டும் என எனக்குக் கட்டளையிட்டார்கள்.

புஹாரி: 1784 அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர்(ரலி).

761. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் தம்முடன் இருந்த மக்களிடையே அறிவித்தார்.(‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது) இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களான நாங்கள் உம்ராவைச் சேர்க்காமல் ஹஜ்ஜுக்காக மட்டும் இஹ்ராம் கட்டினோம். நபி (ஸல்) அவர்கள் துல்ஹஜ் மாதம் நான்காவது நாள் காலையில் (மக்கா) வந்து சேர்ந்தார்கள். நாங்கள் (உம்ரா முடித்து) வந்தவுடன் இஹ்ராமிலிருந்து விடும்படி எங்களுக்கு உத்தரவிட்ட நபி (ஸல்) அவர்கள், ‘இஹ்ராமிலிருந்து விடுபட்டு விடுங்கள்; (உங்கள்) துணைவியருடன் தாம்பத்திய உறவு கொள்ளுங்கள்” என்றார்கள். ஆனால், அதைக் கட்டாயமாகச் செய்தாக வேண்டும் என்று எங்களுக்குக் கட்டளையிடவில்லை. மாறாக, தாம்பத்திய உறவு கொள்ளலாம் என எங்களுக்கு அனுமதியளித்தார்கள். ‘நாம் அரஃபாவை அடைய இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில் நம் துணைவியருடன் நாம் தாம்பத்திய உறவுகொள்ளும்படி நபியவர்கள் நமக்குக் கட்டளையிட்டார்களே! அப்படியானால், நாம் தாம்பத்திய உறவு கொண்ட கையோடா அரஃபா செல்ல வேண்டும்?’ என்று நாங்கள் பேசிக் கொள்வதாக நபி (ஸல்) அவர்களுக்குச் செய்தி எட்டியது.—‘நாம் தாம்பத்திய உறவு கொண்ட கையோடா?’ என்று சொல்லும்போது ஜாபிர் (ரலி) அவர்கள், ‘இப்படி’ என்று சைகை செய்து கை அசைத்தார்கள். உடனே இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து, ‘நானே உங்களில் அல்லாஹ்வுக்கு அதிகம் அஞ்சுபவனும், உங்களில் அதிகம் வாய்மையானவனும், உங்களில் அதிகமாக நற்செயல் புரிபவனும் ஆவேன் என்று நீங்கள் அறிந்துள்ளீர்கள். என்னுடைய குர்பானிப் பிராணி (என்னுடன்) இல்லாமலிருந்தால் உங்களைப் போன்றே நானும் இஹ்ராமிலிருந்து விடுபட்டிருப்பேன். எனவே, நீங்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டுக் கொள்ளுங்கள். நான் பின்னால் தெரிந்து கொண்டதை முன்பே அறிந்திருந்தால் குர்பானிப் பிராணியை என்னுடன் கொண்டு வந்திருக்கமாட்டேன்” என்றார்கள். எனவே, நாங்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டோம். நபி (ஸல்) அவர்களின் கட்டளையைச் செவியேற்று கீழ்ப்படிந்தோம்.

புஹாரி :7367 அதா (ரலி).

762. நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களுக்கு, (அவர்கள் யமன் நாட்டிலிருந்து ஹஜ் செய்ய தியாகப் பிராணியுடன் வந்தபோது) தம் இஹ்ராமிலேயே நீடித்திருக்கும்படி உத்தரவிட்டார்கள். அலீ (ரலி) யமன் நாட்டின் நிர்வாகியாக இருக்கும் நிலையிலேயே வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் அவரிடம், ‘அலீயே! எதற்காக நீங்கள் இஹ்ராம் அணிந்தீர்கள்” என்று கேட்டார்கள். அலீ அவர்கள், ‘நபி (ஸல்) அவர்கள் எதற்காக இஹ்ராம் அணிந்தார்களோ அதற்காகவே நானும் இஹ்ராம் அணிந்துள்ளேன்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘நீங்கள் இஹ்ராமிலேயே நீடித்து (ஹஜ்ஜையும் உம்ராவையும் முடித்த பின்) குர்பானி கொடுங்கள்” என்று கூறினார்கள். அலீ (ரலி) நபி (ஸல்) அவர்களுக்காக ஒரு தியாகப் பிராணியை குர்பானி கொடுத்தார்கள்.

புஹாரி :4352 ஜாபிர் (ரலி).

763. நபி (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்தார்கள். நபி (ஸல்) மற்றும் தல்ஹா (ரலி) ஆகிய இருவரைத் தவிர வேறு யாரிடமும் குர்பானிப் பிராணி இல்லை. யமனிலிருந்து அலீ (ரலி) குர்பானிப் பிராணியுடன் வந்தார்கள். ‘நபி (ஸல்) அவர்கள் எதற்காக இஹ்ராம் அணிந்தார்களோ அதற்காகவே நானும் அணிந்தேன்!” என அவர்கள் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் குர்பானிப் பிராணி கொண்டு வராதவர்களிடம், இதை (ஹஜ்ஜை) உம்ராவாக ஆக்கிக் கொள்ளுமாறும் வலம்வந்து, தலைமுடியைக் குறைத்து, இஹ்ராமிலிருந்து விடுபடுமாறும் கட்டளையிட்டார்கள். (மக்கள் சிலர்) ‘நம் இன உறுப்பில் விந்து சொட்டிக் கொண்டிருக்கும் நிலையில் (மனைவியுடன் கூடிய பின் உடனடியாக) நாம் மினாவுக்குச் செல்வதா?’ என்று பேசிய செய்தி, நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியதும் அவர்கள் ‘(ஹஜ் மாதங்களில் உம்ரா செய்ய அனுமதியுண்டு என) நான் இப்போது அறிந்ததை முன் கூட்டியே அறிந்திருந்தால் நான் குர்பானிப் பிராணி கொண்டு வந்திருக்க மாட்டேன்; நான் குர்பானிப் பிராணி மட்டும் கொண்டு வந்திருக்கவில்லையாயின் இஹ்ராமிலிருந்து விடுபட்டிருப்பேன்!” என கூறினார்கள். மேலும், ஆயிஷா (ரலி) அவர்களுக்கு மாதவிடாய் வந்திருந்தது. எனவே அவர்கள், இறையில்லம் கஅபாவை வலம்வருவதைத் தவிர, ஹஜ்ஜின் மற்றெல்லா வழிபாடுகளையும் நிறைவேற்றினார்கள். மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்ததும் கஅபாவை வலம் வந்தார்கள். மேலும் ஆயிஷா (ரலி) ‘இறைத்தூதர் அவர்களே! நான் ஹஜ்ஜை மட்டுமா நிறைவேற்றிவிட்டுச் செல்ல. நீங்கள் (எல்லோரும்) ஹஜ்ஜையும் உம்ராவையும் நிறைவேற்றிவிட்டுச் செல்கிறீர்களா?’ என (ஏக்கத்துடன்) கூறியதும், நபி (ஸல்) அவர்கள் அப்துர் ரஹ்மான் இப்னு அபீபக்ரை, ஆயிஷா (ரலி) அவர்களுடன் (உம்ரா செய்திட இஹ்ராம் அணிவதற்காக) தன்யீம் என்ற இடத்திற்குச் செல்லுமாறு கட்டளையிட்டார்கள். ஆயிஷா (ரலி) ஹஜ் செய்தபின், துல்ஹஜ் மாதத்திலேயே உம்ராவையும் நிறைவேற்றினார்கள். நபி (ஸல்) அவர்கள் ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறிந்து கொண்டிருந்தபோது அவர்களைச் சந்தித்த சுராக்கா இப்னு மாலிக் இப்னு ஜுஃஷும் (ரலி) ‘இறைத்தூதர் அவர்களே! இது (ஹஜ் மாதத்தில் உம்ரா செய்வது) உங்களுக்கு மட்டுமுள்ள தனிச் சட்டமா?’ எனக் கேட்டதற்குவர்கள், ‘இல்லை! இது எப்போதைக்கும் உரியதே!” என்று பதிலளித்தார்கள்.

புஹாரி :1785 ஜாபிர் (ரலி).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *