Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » கஃப் பின் அஷ்ரஃப் என்ற யூத வெறியனைக் கொன்றது.

கஃப் பின் அஷ்ரஃப் என்ற யூத வெறியனைக் கொன்றது.

1179. இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘கஅப் இப்னு அஷ்ரஃபைக் கொல்வதற்கு (தயாரயிருப்பவர்) யார்? ஏனெனில், அவன் அல்லாஹ்வுக்கும், அல்லாஹ்வின் தூதருக்கும் தொல்லை கொடுத்துவிட்டான்” என்று கூறினார்கள். உடனே முஹம்மது இப்னு மஸ்லமா (ரலி) எழுந்து, ‘நான் அவனைக் கொல்ல வேண்டுமென்று தாங்கள் விரும்புகிறீர்களா? இறைத்தூதர் அவர்களே!” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், ‘ஆம்” என்று பதிலளித்தார்கள். உடனே, முஹம்மத் இப்னு மஸ்லமா (ரலி), ‘நான் (அவனைக் குதூகலப்படுத்தி நம்ப வைப்பதற்காக உங்களைக் குறைகூறி) ஏதேனும் சொல்ல எனக்கு அனுமதி தாருங்கள்” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘(சரி) சொல்” என்றார்கள். உடனே முஹம்மத் இப்னு மஸ்லமா (ரலி) கஅப் இப்னு அஷ்ரஃபிடம் சென்று, ‘இந்த மனிதர் (முஹம்மத் – ஸல்), எங்களிடம் (மக்களுக்குத் தருவதாக) தர்மம் கேட்டார். எங்களுக்குக் கடும் சிரமம் தந்துவிட்டார்” என்று (நபி – ஸல் அவர்களைக் குறை கூறி சலித்துக் கொள்ளும் விதத்தில்) கூறிவிட்டு, ‘உன்னிடத்தில் கடன் கேட்பதற்காக நான் வந்துள்ளேன்” என்றும் கூறினார்கள். கஅப் இப்னு அஷ்ரஃப், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! இன்னும் அதிகமாக நீங்கள் அவரிடம் சலிப்படைவீர்கள்” என்று கூறினான். (அதற்கு) முஹம்மத் இப்னு மஸ்லமா அவர்கள், ‘நாங்கள் (தெரிந்தோ தெரியாமலோ) அவரைப் பின்பற்றி விட்டோம்.

அவரின் விவகாரம் எதில் முடிகிறது என்று பார்க்காமல் அவரைவிட்டு (விலகி) விட நாங்கள் விரும்பவில்லை. (எனவேதான் அவருடன் இன்னும் இருந்து கொண்டிருக்கிறோம்)” என்று (சலிப்பாகப் பேசுவது போல்) கூறிவிட்டு, ‘நீ எங்களுக்கு ஒரு வஸக்கு… அல்லது இரண்டு வஸக்கு… (பேரீச்சம் பழம்) கடன் தர வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம்” என்று கூறினார்கள். அப்போது கஅப் இப்னு அஷ்ரஃப், ‘சரி! (நான் கடன் தரத் தயார்.) என்னிடம் (எதையேனும்) அடைமானம் வையுங்கள்” என்று கூறினான். அதற்கு அவர்கள், ‘நீ எதை விரும்புகிறாய் (கேள்)?’ என்று கூறினர். கஅப் இப்னு அஷ்ரஃப், ‘உங்கள் பெண்களை என்னிடம் அடைமானமாக உன்னிடம் தர முடியும். நீயோ அரபுகளிலேயே மிகவும் அழகானவன். (அடைமானம் வைத்துத் தான் பெண்களை அடைய வேண்டிய அவசியம் உனக்கு இல்லை)” என்று கூறினார்கள்” (அப்படியானால்) உங்கள் ஆண் மக்களை என்னிடம் அடைமானம் வையுங்கள்” என்று கூறினான். அதற்கு அவர்கள், ‘எங்கள் ஆண் மக்களை உன்னிடம் எப்படி அடைமானம் வைப்பது? அவர்களில் ஒருவன் (கலந்துறவாடும் போது) ஏசப்பட்டால் அப்போது, ‘இவன் ஒரு வஸக்கு அல்லது இரண்டு வஸக்குகளுக்கு பதிலாக அடைமானம் வைக்கப்பட்டவன்’ என்றல்லவா ஏசப்படுவான்? இது எங்களுக்கு அவமானமாயிற்றே! எனவே, உன்னிடம் (எங்கள்) ஆயுதங்களை அடைமானம் வைக்கிறோம்” என்று கூறினார்கள். (அவன் சம்மதிக்கவே) முஹம்மத் இப்னு மஸ்லமா (ரலி), அவனிடம் (பிறகு) வருவதாக வாக்களித்துவிட்டுச் சென்றார்கள்.

(பிறகு) அவர்கள் தம்முடன் அபூ நாயிலா (ரலி) இருக்க இரவு நேரத்தில் கஅபிடம் வந்தார்கள். – அபூ நாயிலா (ரலி), கஅப் இப்னு அஷ்ரஃபிற்கு பால்குடிச் சகோதரராவார் – அவர்களைத் தன்னுடைய கோட்டைக்கு (வரச் சொல்லி) கஅப் இப்னு அஷ்ரஃப் அழைத்தான். பிறகு அவர்களை நோக்கி அவனும் இறங்கிவந்தான். அப்போது கஅபின் மனைவி அவனிடம், ‘இந்த நேரத்தில் எங்கே போகிறீர்கள்?’ என்று கேட்டாள். அதற்கவன், அவர் (வேறு யாருமல்ல) முஹம்மத் இப்னு மஸ்லமாவும் என்னுடைய (பால்குடிச்) சகோதரர் அபூ நாயிலாவும் தான்” என்று பதிலளித்தான். அப்போது முஹம்மத் இப்னு மஸ்லமா (ரலி) (தம் சகாக்களிடம்), ‘கஅப் இப்னு அஷ்ரஃப் வந்தால் நான் அவனுடைய (தலை) முடியை பற்றியிழுத்து அதை நுகருவேன். அவனுடைய தலையை என்னுடைய பிடியில் கொண்டு வந்துவிட்டேன் என்று நீங்கள் கண்டால் (அதை சைகையாக எடுத்துக் கொண்டு) அவனைப் பிடித்து (வாளால்) வெட்டி விடுங்கள்” என்று (உபாயம்) கூறினார்கள். பிறகு கஅப் இப்னு அஷ்ரஃப் (தன்னுடைய ஆடை அணிகலன்களை) அணிந்து கொண்டு நறுமணம் கமழ இறங்கி வந்தான். அப்போது முஹம்மத் இப்னு மஸ்லமா (ரலி), ‘இன்று போல் நான் எந்த உயர்ந்த நறுமணத்தையும் (நுகர்ந்து) பார்த்ததில்லை” என்று கூறினார்கள். மேலும், முஹம்மது இப்னு மஸ்லமா (ரலி), ‘(கஅபை நோக்கி) உன் தலையை நுகர்ந்து பார்க்க என்னை அனுமதிக்கிறாயா?’ என்று கேட்டார்கள். அவன், ‘சரி (நுகர்ந்து பார்)” என்று கூறினான். அப்போது முஹம்மத் இப்னு மஸ்லமா அவர்கள் அவனுடைய தலையை நுகர்ந்தார்கள். பிறகு தம் சகாக்களையும் நுகரக் கூறினார்கள். ‘(மீண்டுமொருமுறை நுகர) என்னை அனுமதிக்கிறாயா? என்று கேட்டார்கள். அவன் ‘சரி (அனுமதிக்கிறேன்)” என்று கூறினான். முஹம்மத் இப்னு மஸ்லமா அவர்கள் அவனைத் தம் வசம் கொண்டு வந்தபோது, ‘பிடியுங்கள்” என்று கூறினார்கள். உடனே (அவர்களின் சகாக்கள்) அவனைக் கொன்றுவிட்டனர். பிறகு அவர்கள் (அனைவரும்) நபி (ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததைத் தெரிவித்தனர்.

புஹாரி :4037 ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *