Featured Posts
Home » மதங்கள் ஆய்வு » விமர்சனம் விளக்கம் » போலித் தனமான உறவுகளை இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை!

போலித் தனமான உறவுகளை இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை!

மாற்றாரால் காமுராக சித்தரித்த நபி – ஸைனப் திருமணம். சென்ற பதிவின் தொடர்ச்சி

முஹம்மது நபி(ஸல்) அவர்கள், தமது உள்ளத்தில் எதையோ மறைத்தார்கள் என்பது உண்மையே. அது எது என்பதை அவர்களும் சொல்லவில்லை. இதனாலேயே இப்படிக் கதை கட்டி விட்டு விளக்கம் என்ற பெயரால் களங்கத்தை ஏற்படுத்தி விட்டனர்.

கதைகளை அடிப்படையாகக் கொண்டு அதைத் தீர்மானிப்பதை விட நபி(ஸல்) அவர்களின் பரிசுத்த வாழ்வையும், இது போன்ற சந்தர்ப்பங்களில் சகஜமாக மனித உள்ளங்கள் எவ்வாறு இயங்கும் என்பதையும் அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தால் நபி(ஸல்) அவர்கள் தம் உள்ளத்தில் மறைத்து வைத்த எண்ணம் எதுவென்பது தெளிவாகும். இதற்குப் பெரிய ஆராய்ச்சியோ, ஆதாராமோ தேவைப்படாது. ஒவ்வொருவருக்கும் ஏற்படும் அனுபவங்களே அதை அனுமானிக்கப் போதுமானதாகும்.

ஸைத்(ரலி) அவர்கள் இயல்பிலேயே கோஞ்சம் முன் கோபியாக இருந்தார்கள். ஸைனபைத் திருமணம் செய்வதற்கு முன் நபி(ஸல்) அவர்களுக்குப் பாலூட்டிய உம்முஐமன் என்ற பெண்ணை ஸைத்(ரலி) திருமணம் செய்திருந்தார். இவ்விருவருக்கும் ‘உஸாமா’ என்ற மகன் பிறந்தார். ஸைதைப் போலவே உஸாமாவையும் நபி(ஸல்) அவர்கள் நேசித்தார்கள். அதன் பின்னர் ஸைத்(ரலி) ஸைனபைத் திருமணம் செய்தார். ஸைனபைத் தலாக் – விவாகரத்துக் கூறிவிட்டு உக்பாவின் மகள் உம்முகுஸ்ஸுமைத் திருமணம் செய்தார். அவ்விருவருக்கும் இரண்டு குழந்தைகள் பிறந்ததும் உம்முகுஸ்ஸுமையும் விவகாரத்துக் கூறினார். அதன் பிறகு அபூலஹபுடைய மகள் துர்ரா என்பவரைத் திருமணம் செய்தார். (அல் இஸாபா)

இந்த விவரங்களை இங்கே கூறுவதற்குக் காரணம் ஸைத்(ரலி) அவர்களின் முன் கோபத்தை எடுத்துக்காட்டவே. ஒரே சமயத்தில் நான்கு மனைவியரை மணக்கலாம் என்று மார்க்கம் சலுகை அளித்திருந்தும். ஒரே சமயத்தில் இத்தனை பேரையும் அவர் மணக்க வாய்ப்பிருந்தும் ஒருவர் பின் ஒருவராக ஸைத்(ரலி)அவர்கள் தொடர்ந்து விவாகாரத்து விட்டுக்கொண்டிருந்தது அவர்களின் முன் கோபத்தையே எடுத்துக் காட்டுகிறது.

ஸைனப்(ரலி) அவர்களோ ஆரம்பத்திலிருந்தே ஸைதை விரும்பவில்லை. அவர்களது சுபாவத்திலும் தமது குரைஷி குலம் பற்றி உயர்ந்த எண்ணம் இருந்தது. அவ்விருவருக்குமிடையே சுமுகமான உறவு ஏற்படாமல் போனதற்கு இந்த இருவரின் முரண்பட்ட இந்த சுபாவமே காரணமாகியது. இதையெல்லாம் கவனமாக நபி (ஸல்)அவர்கள் கவனிக்கிறார்கள். அவ்விருவரின் சுபாவங்களும் ஒத்துப் போகாது என்பதை அறிகிறார்கள். இருவரும் அடிக்கடி சண்டையும் சச்சரவும் செய்து அமைதி இழந்து போவதை விட அவ்விருவரும் பிரிந்து விடுவது நல்லது என்று எண்ணுகிறார்கள். இது போன்ற நிலையைக் காணும் ஒவ்வொரு மனிதரும் இவ்வாறே எண்ணுவார்கள். ஆனாலும் அவர் விவாகரத்து விடுவதாகக் கூறியவுடன் அவர்களால் அதை வெளிப்படையாக ஆதரிக்க முடியவில்லை. அவ்விருவரும் பிரிந்து விடுவதுதான் அவ்விருவருக்கும் நல்லது (தாம் திருமணம் செய்வதற்காக அல்ல) என்று எண்ணினாலும் அதை வெளிப்படையாகச் சொல்லத் தயங்குகிறார்கள். கணவன் மனைவியரிடையே பிளவு ஏற்பட தான் காரணமாகி விட்டோம் என்று மக்கள் எண்ணுவார்களோ என்று அஞ்சுகிறார்கள். இதுதான் உண்மையில் நடந்திருக்க முடியும். இதனடிப்படையில் இந்த வசனத்தைக் காண்போம்.

”உம் மனைவியைத் தலாக் கூறாது தடுத்துக் கொள்! என்று கூறினீர், அல்லாஹ் வெளிப்படுத்துக் கூடிய ஒன்றை உம் மனதில் மறைத்துக் கொண்டீர். மேலும் மக்களுக்கு அஞ்சினீர்! அல்லாஹ்வே நீர் அஞ்சுவதற்கு மிகவும் தகுதியானவன்”. (அல்குர்ஆன் 33:37)

ஒரு தம்பதியினரிடையே சேர்ந்து வாழ முடியாத நிலை ஏற்படும் போது அவ்விருவரும் பிரிந்து வாழ்வதே நல்லது என்று விரும்பக் கூடிய எந்த மனிதரும் வெளிப்படையாக அதைக் கூறத் துணிவது இல்லை. அவ்விருவரும் பிரிந்து வாழ்வது என்ற முடிவுக்கு வந்து விட்ட நேரத்திலும் அவ்விருவரும் பிரிந்து விடுவதே அவ்விருவருக்கும் நல்லது என்று மனப்பூர்வமாக விரும்புகின்ற ஒருவர், அதை மனதுக்குள் மறைத்து விட்டு அவ்விருவரும் சேர்ந்து வாழுமாறு தான் வாயளவில் உபதேசம் செய்வார். இது நடிப்பு என்றாலும் எந்த மனிதரும் பகிரங்கமாக அதை வெளிப்படுத்தத் துணிவதில்லை. அனுபவப் பூர்மாக பலரும் இந்த நிமையைச் சந்திக்கின்றனர்.

இந்த இடத்தில் நபி(ஸல்) அவர்களுக்கும் சராசரி மனிதனுக்கு ஏற்படக் கூடிய ஒரு எண்ணம் தான் ஏற்பட்டதே தவிர, அடுத்தவர் மனைவியை ஆசைப் படக் கூடிய அளவுக்கு கீழ்தரமான எண்ணம் நிச்சயமாக ஏற்படவில்லை. அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. நபி(ஸல்) அவர்களின் பரிசுத்த வாழ்க்கையும், இந்தப் பொய்ச் செய்தியை முற்றாக நிராகரித்து விடுகிறது.

இனி விஷயத்துக்கு வருவோம். நபி(ஸல்) அவர்களின் ஆலோசனைக்குப் பின்னரும் ஸைத் தம் மனைவியை விவகாரத்துச் செய்வதில் உறுதியாக இருந்து அதைச் செயல் படுத்தி விட்டார். இந்த நிலையில் ஸைனப்(ரலி) அவர்களை நபி(ஸல்) அவர்களுக்குத் தானே மனைவியாக ஆக்கியதாக அல்லாஹ் குறிப்பிடுகிறான். அதன் காரணத்தையும் அவனே கூறுகிறான்.

நபி(ஸல்) அவர்கள் வாழ்ந்த பகுதியிலும் உலகில் பல்வேறு பகுதிகளிலும் போலியான உறவு முறை ஒன்று நடைமுறையில் இருந்து வந்தது. சந்ததியற்றவர்களும், அல்லது ஆண் சந்ததியற்றவர்களும், சில சமயங்களில் உதவாக்கரையான ஆண் சந்ததிகளைப் பெற்றவர்களும் பிறரது மகனை வளர்ப்பு மகனாக – சுவீகாரப் புத்திரனாக எடுத்துக் கொள்வர். ‘வளர்ப்பு மகன்’ எனப் பிரகடனம் செய்யப்பட்டவர் பெற்ற மகனுக்கு இருப்பது போன்ற எல்லா உரிமைகளையும் பெற்றவராக கருதப்படுவார்.

வளர்த்தவர் இறந்து விட்டால் அவரது சொத்துக்களுக்கு வளர்ப்பு மகன் வாரிசாவார். பெற்ற மகனுக்கு கிடைப்பது போன்ற அதே சொத்துரிமை, கூடுதல் குறைவின்றி அவருக்கும் கிடைத்து வந்தது. தந்தையின் பெயரைக் குறிப்பிட வேண்டிய கட்டங்களில் அவர் தமது தந்தையாக அவரை வளர்த்தவரையே குறிப்பிட வேண்டும் என்பது நடைமுறையில் இருந்து வந்தது ”தந்தை மகன்” உறவு அவ்விருவருக்குமிடையே உண்மையில் ஏற்பட்டு விட்டதாக அவர்கள் நம்பினர்.

இதனால் இன்னும் சில சம்பிரதாயங்களும் ஏற்படுத்தப்பட்டன. வளர்ப்பு மகன் தன் மனைவியை விவாகரத்துச் செய்த பின், அவன் இறந்த பின், அவனது மனைவியை வளர்ப்புத் தந்தை, திருமணம் செய்வது கூடாத ஒன்றாகக் கருதப்பட்டு வந்தது. ஏனெனில் அப்பெண் உண்மையிலேயே வளர்ப்புத் தந்தைக்கு மருமகளாகி விட்டதாக அவர்கள் நம்பி வந்தனர். இது போல் வளர்ப்புத் தந்தைக்கு மகள் ஒருத்தி இருந்தால் அவளை அவரது வளர்ப்பு மகன் திருமணம் செய்ய முடியாது ஏனெனில் அவ்விருவரும் உடன் பிறந்தவர்களாகிவிட்டனர். என்பது இவர்களது நம்பிக்கை.

போலித்தனமான இந்த உறவு முறையையும், முட்டாள் தனமான இந்த சம்பிரதாயங்களையும் தகர்க்க வேண்டுமென்பது இறைவனின் விருப்பம். தெளிவான – தீர்க்கமான சிந்தனை உடையவர்களின் பார்வையிலும் இது தகர்க்கப்பட வேண்டிய உறவாகவே இருந்தது. இறைவனுக்கு எதிரான நடவடிக்கையாக இறைவனாலும் இது கருதப்பட்டு வந்தது. இத்தகைய உறவுகளை அனுமதித்தால் அது ஏற்படுத்தக்கூடிய தீய விளைவுகள் ஏராளம். இதைத் தகர்த்தெறிவதற்காக நபி(ஸல்) அவர்களின் வளர்ப்பு மகனான ‘ஸைது’டைய மனைவியை ‘ஸைது’ விவகாரத்துச் செய்த பின், நபி(ஸல்) அவர்களுக்கு இறைவனே மணமுடித்து வைத்ததாகக் கூறுகின்றான். அது பற்றி இறைவன் கூறும் வசனங்களைப் பார்க்குமுன், இந்த போலித்தனமான உறவுகள் தகர்க்கப்பட வேண்டியவை தாம், என்பதற்கான காரணங்களை நாம் பார்ப்போம்.

முதல் காரணம்!

தந்தை மகன், அண்ணன் தம்பி போன்ற உறவுகள் இறைவனால் தீர்மானிக்கப்படுபவை. இவன்தான் எனக்கு மகனாகப் பிறக்க வேண்டும் என்று எந்தத் தந்தையும் தீர்மானிக்க இயலாது. இவர்தான் எனக்குத் தந்தையாக இருக்க வேண்டுமென்று எந்த மகனும் தீர்மானம் செய்ய முடியாது. எனக்கு அண்ணனாக இவர்தான் இருக்க வேண்டும். எனக்குத் தம்பியாக இவர்தான் இருக்க வேண்டும் என்றெல்லாம் எவரும் முடிவு செய்ய முடியாது. அது இறைவனின் தீர்மானப்படி நடக்கக் கூடியதாகும். இது போன்ற போலித் தனமான உறவு முறைகள் செயற்கையை இயற்கையை போல் ஆக்கும் ஏமாற்று வேலையாக உள்ளது.

இரண்டாவது காரணம்!

யாருடைய உயிரணுவின் மூலமும், எவருடைய சினை முட்டை மூலமும் ஒருவன் பிறந்தானோ, அந்த இரத்த உறவை ரத்து செய்து விட்டு ஒரு சம்மந்தமுமில்லாதவர்களைப் பெற்றோர் எனப் பிரகடனம் செய்வது இரத்த சம்மந்தத்தை அர்த்தமற்றதாக ஆக்கிவிடுகின்றது. பத்து மாதம் சுமந்து பெற்ற தாயும், பாசத்தைப் பொழிந்து வளர்த்த தந்தையும், தாம் பெற்ற பிள்ளையை ‘மகன்’ என்று உரிமையுடன் அழைக்க முடியாமல் போவதைவிட வேறு கொடுமை என்ன இருக்க முடியும்? வசதி இல்லை என்ற காரணத்திற்காக வசதியான இடத்தில் நம்பிள்ளை வளரட்டுமே என்று சுவீகாரம் வழங்கினாலும், அதனால் அவர்கள் படும் வேதனை..

எவ்வளவு கஷ்டம் வந்தாலும் நம் பிள்ளையை நாமே வளர்க்க வேண்டும் என்ற இயல்பாகவே இருக்கின்ற நல்ல பண்பு நாளடைவில் மறைந்து, யாராவது செல்வந்தர்கள் ‘தத்து’ எடுக்க மாட்டார்களா? என்ற வியாபார நோக்கம் பெற்றோர்களிடம் மேலோங்கிவிடும். இதனால் இதை அடியோடு கிள்ளி எறிய வேண்டும் என்று இஸ்லாம் கருதியது.

மூன்றாவது காரணம்!

எவ்வளவுதான் பாசத்தைப் பொழிந்து ஒருவனைத் ‘தத்து’ எடுத்து வளர்த்தாலும் பெற்ற மகன் போல் வளர்பபு மகன் தந்தை மீது உண்மையான பாசம் கொள்ள முடியாது. வசதியான இடத்தில் வாழ வேண்டுமென்பதற்காக அவரைத் தந்தை என ஏற்கத் துணிந்தவனிடம் இதயப் பூர்வமான நேசத்தை எதிர்பார்க்க முடியாது. இதனால் ஏற்படும் விளைவு என்ன?

வளர்ப்புத் தந்தைக்குப் பின், அவரது வாரிசாகப் போகிறோம் என்று கருதும் வளர்ப்பு மகன் அவர் சீக்கிரமாக சாகமாட்டாரா? என்று எதிர்பார்ப்பான். இரத்தம் சம்மந்தம் இல்லாததாலும், இதயப் பூர்வமான நேசம் இல்லாததாலும் சுவீகாரத்தின் நோக்கமே வசதியான வாழ்வைப் பெறுவதுதான் என்று ஆகிவிட்டதாலும் இதைத் தான் சுவீகாரப் புத்திரனிடமிருந்து எதிர்பார்க்க முடியும்.

நான்காவது காரணம்!

ஒருவனுக்கு அண்ணன், தம்பி, அக்கா, தங்கை போன்ற ஆயிரம் உறவினர்கள் இருந்தாலும். அவன் இறந்த பின் அவனது சொத்துக்களை அவனது பெற்ற மகனே அடைவான். இவ்வாறு அவன் அடையும் போது, அவனது தந்தையின் அண்ணன் தம்பிகளோ, அக்கா தங்கைகளோ பொறாமைக் கண்ணுடன் பார்க்க மாட்டார்கள். தமெக்கெல்லாம் கிடைக்காமல் இவனுக்கு கிடைத்து விட்டதே என்று எண்ண மாட்டார்கள். எண்ணுவதற்கு எந்த நியாயமும் இல்லை. எனெனில் மகன் என்ற உறவு மற்ற உறவுகளை விட மேலானது என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

ஆனால் யாருக்கோ பிறந்தவன், திடீரென நுழைந்து ‘மகன்’ என்ற போலி உறவின் மூலம் சொத்துக்களை அடையும் போது வசதிகளை அனுபவிக்கும் போது இரத்த சம்மந்தமுடைய அவனுடைய அண்ணன் தம்பி போன்றவர்கள். பொறாமைக் கண்ணுடனேயே நோக்குவார்கள். இவ்வாறு நோக்குவதில் நியாயமும் இருக்கிறது. உண்மையிலேயே இந்த போலி மகனை விட உண்மையான சகோதர சகோதரிகள் நெருக்கமானவர்கள் அல்லவா?

ஐந்தாவது காரணம்!

மேற்கூறிய காரணங்களால் எப்போழுது ஒருவன் யாரோ ஒருவனைத் தத்து எடுக்கின்றானோ அப்போதிருந்தே அவனது ஏனைய உறவினர்களை அவன் பகைக்கும் நிலை உருவாகும். உறவினர்களைப் பகைத்துக் கொள்ள, இந்த சுவீகாரம் முக்கிய காரணமாகி விடுகின்றது. ஒரு போலித்தனமான உறவுக்காக உண்மையான உறவுகளைத் துறக்க வேண்டுமா? என்று இஸ்லாம் கேட்கிறது.

ஆறாவது காரணம்!

தன் தந்தை அல்லாதவர்களைத் தந்தை என ஒருவன் கூறுவது மனிதனது ரோஷ உணர்வை மழுங்கச் செய்து விடும். யாரோ ஒருவரைத் தந்தை என்று அதுவும் உண்மையான தந்தை போன்று கருதுவதை விட ரோஷங்கெட்ட நிலை என்ன இருக்க முடியும். மனித சமுதாயத்தில் இருந்து வருகின்ற – இருக்க வேண்டிய இந்த ரோஷ உணர்வை இது போன்ற போலித்தனமான உறவுகள் அடியோடு நாசப்படுத்தி விடுகின்றன.

இது போன்ற இன்னும் பல காரணங்களால் இந்த போலித்தனமான உறவை அடியோடு ஒழித்திட இறைவன் எண்ணுகிறான். வளர்ப்பு மகனுடைய முன்னாள் மனைவியை நபி(ஸல்) அவர்களுக்கு இறைவனே மனைவியாக்கியதாகச் சொல்லிக் காட்டுகிறான். இது பற்றி இறைவன் கூறுவதை இப்போது பார்க்கலாம்.

”ஸைது அவளை விவாக விலக்கு செய்து விட்ட பின்னர் நாம் அவளை உமக்கு திருமணம் செய்வித்தோம். ஏனென்றால் மூஃமீன்களால் சுவீகரித்து வளர்க்கப்பட்டவர்கள். தம் மனைவியரை விவாகரத்து செய்து விட்டால் அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாத என்பதற்காக இது நடை பெற்று தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும். (அல்குர்ஆன் 33:37)

எந்த மனிதனுக்கும் இரண்டு உள்ளங்ளை அல்லாஹ் உண்டாக்கவில்லை. உங்கள் மனைவியரில் எவரையும் நீங்கள் தாயைப் போன்றவள் என்று கூறுவதால் அவர்களை அல்லாஹ் உங்கள் தாய்களாக ஆக்கமாட்டான். உங்களுடைய சுவீகாரப் புத்திரர்களை உங்களுடைய புதல்வர்களாக அல்லாஹ் ஆக்கவில்லை. இவையாவும் உங்களுடைய வாய்களால் சொல்லும் (வெறும்) வார்த்தைகளேயாகும். அல்லாஹ் உண்மையே கூறுகிறான். இன்னும் அவன் நேர் வழியையே காட்டுகிறான். (அல்குர்ஆன் 33:4)

(எனவே) நீங்கள் (எடுத்து வளர்த்த) அவர்களை அவர்களின் தந்தைய(ரின் பெய)ர்களைச் சொல்லி (இன்னாரின் பிள்ளையென) அழையுங்கள். அதுவே அல்லாஹ்விடம் நீதமுள்ளதாகும். (அல்குர்ஆன் 33:5)

உங்களில் சிலர் தம் மனைவியரைத் தாய்கள் எனக் கூறி விடுகின்றனர். அதனால் அவர்கள் இவர்களுடைய தாய்களாக ஆவதில்லை. இவர்களைப் பெற்றெடுத்தவர்கள் தாம், இவர்களுடைய தாய்கள் ஆவார்கள். எனினும் இவர்கள் சொல்லில் வெறுக்கத் தக்கதையும் பொய்யானதையுமே கூறுகிறார்கள். (அல்குர்ஆன் 58:2)

உங்களுக்குப் பிறந்த குமாரர்களின் மனைவியரையும் நீங்கள் விவாகம் செய்யலாகாது. (அல்குர்ஆன் 4:23)

இந்த வசனங்களில் போலித் தனமான உறவுகளை இறைவன் அங்கீகரிக்கவில்லை என்பதையும், நபி (ஸல்) அவர்கள் ஸைனபை இதனாலேயே திருமணம் செய்தனர் என்பதையும் மிகத் தெளிவாக இறைவன் அறிவித்து விடுகிறான்.

இங்கே ஒரே ஒரு சந்தேகம் மட்டும்தான் சிலருக்கு இன்னமும் இருக்கலாம்! அந்த உறவுகள் தகர்க்கப்படத்தான் வேண்டும். ஆனால் நபி(ஸல்) அவர்கள் செய்து காட்டித்தான் தகர்க்க வேண்டுமா? வெறும் ஆணையிட்டால், அல்லது அதற்கு அனுமதி உண்டு என்று சொன்னாலே போதுமே! மற்றவர்கள் செய்து விடுவார்களே, என்பதே அந்தச் சந்தேகம்.

மேலோட்டமான பார்வையில் இது நியாயம் போலத் தோன்றினாலும் சிந்திக்கும் போது தவறு என்பது தெளிவாகும்.

திருமணத்தைப் பொருத்தவரை இவரைத் தான் திருமணம் செய்ய வெண்டுமென ஆணையிட முடியாது. அது தனிப்பட்ட நபர்களின் விருப்பத்தின்பாற்பட்டது. அனுமதிக்கத்தான் முடியும். அவர்களை மணம் செய்ய அனுமதி உண்டு என்று சொன்னவுடன் செய்து காட்ட முன் வரமாட்டார்கள். அனுமதிக்கப்பட்டவர்களை செய்து தான் ஆக வெண்டுமென்ற கட்டாயம் எதுவுமில்லை.

காலம் காலமாக ‘மகனுடைய மனைவி’ என்றே நம்பி வந்திருக்கும் போது, அனுமதிக்கப்பட்ட பின்னரும் கூட அவர்களை மணக்கத் தயங்கவே செய்வர். மனைவியாகப் பாவித்து உடலுறுவு கொள்ள அவர்கள் உள்ளம் எளிதில் இடம் தராது, தங்கள் உள்ளத்தில் அப்படி ஒரு எண்ணத்தைத் தலைமுறை தலைமுறையாக வளர்த்துக் காண்டு விட்டார்கள். சமுதாயம் பரிகசிக்குமோ என்ற அச்சம் வேறு அவர்களின் தயக்கத்தை அதிகமாக்கும்.

உலகத்தின் விமர்சனத்தைப் பற்றிக் கவலைப் படாமல், பாரம்பரியத்துக்கு எள்ளளவும் இடம் தராமல் அதைச் செய்து காட்ட நபி(ஸல்) அவர்களே தகுதியானவர்கள் என்று கருதியே இறைவன் இதற்கு நபி(ஸல்) அவர்களையே தேர்வு செய்தான். இதனால் சமுதாயத்தின் பலத்த எதிர்ப்புக்கு ஆளாக நேரிடும் என்பதையும் அதற்கடுத்த வசனத்தில் இறைவன் மறைமுகமாகச் சொல்கிறான்.

(”இறைத்தூதர்கள்) இறைவனின் செய்திகளை எடுத்துச் சொல்ல வேண்டும். அவனுக்கு அஞ்ச வேண்டும், அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் அஞ்சக் கூடாது. (அல்குர்ஆன் 33:39)

எவருக்கும் அஞ்சலாகாது என்று இங்கே இறைவன் குறிப்பிடுவதிலிருந்து ‘அஞ்சுவதற்குரிய’ ஒன்றாக இத்திருமணம் இருந்தது என்று அறியலாம்.

இனி..

நபி(ஸல்) அவர்கள் தமது அறுபதாம் வயதில் (ஹிஜ்ரி ஏழாம் ஆண்டு) ஹுயய் என்பவரின் மகள் ஸஃபிய்யா(ரலி) அவர்களை மணமுடித்தார்கள். இது பற்றி அடுத்த பதிப்பில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *