Featured Posts

மதமாற்றம் ஏன்? -2

ஹாரிதின் மகள் ஜுவைரியா (ரலி) அவர்களின் நிலையை எண்ணி மனசு கஷ்டப்படுவதாக தருமி குறிப்பிட்டுள்ளார். பெண்ணென்றால் பேயும் இரங்கும் என்பார்கள், பெண்களுக்கெதிரான வன்கொடுமைகளைக் கண்டால் யாருக்குத்தான் இரக்கம் ஏற்படாது? பெண்ணொருத்தி துன்பத்தையனுபவிக்கிறாள் என்பதைப் பார்க்கும் போதும், கேள்விப்படும் போதும் மனிதம் கொண்ட எவரது உள்ளத்திலும் ”அடடா இது என்ன அநியாயம்” என்று நெஞ்சிரக்கம் கொள்ளும். இரக்கத்தின் மேலிட்டால் மனது கஷ்டத்திற்குள்ளாவதும் இயல்பு. –

(//3. ஜுவேரியா – இந்தப் பெண்ணின் கதை மனசுக்குக் கொஞ்சம் கஷ்டமாயிருந்தது. போரில் தோற்றவனின் மனைவி விரும்பாத ஒருவனின் மனைவியாவதைத் தவிர்க்க, பேரம் பேசப்பட்டு, முகமதின் மனைவியாகிறாள். எந்த நூற்றாண்டாயிருந்தால் என்ன..பெண்கள் நிலை எங்கும் எப்போதும் ஒரே மாதிரிதான் போலும்!//)

– ஆனால், ஜுவைரியாவுக்காக தருமியின் மனசுக் கஷ்டப்படுகிறது என்பதில் நியாயமிருக்கிறதா? என்பதை பார்ப்போம்.

பனூ முஸ்தலிக் என்ற கூட்டத்தினர் இஸ்லாத்தின் பரம எதிரிகளாகத் திகழ்ந்தவர்கள். முஸ்லிம்களுக்கு பல வகையிலும் தொல்லை தந்து கொண்டிருந்தனர். இதன் காரணமாக பனூ முஸ்தலிக் என்ற கூட்டத்தினருடன் ஹிஜ்ரி ஆறாம் ஆண்டு – அதாவது நபி (ஸல்) அவர்களின் 59வது வயதில் – நபி (ஸல்) அவர்கள் போரிட்டனர்.

இந்தப் போரில் முஸ்லிம்கள் வெற்றி பெற்றனர். அந்தக் கூட்டத்திலேயே கடுமையான எதிரியாக இருந்த முஸாபிஃ பின் ஸஃப்வான் என்பவர் கொல்லப்பட்டார். போர்களத்தில் உயிருடன் பிடிக்கப்பட்டவர்கள் கைது செய்யப்பட்ட போது ‘முஸாபிஃ பின் ஸஃப்வான்’ என்பவரின் மனைவியும், அந்தக் கூட்டத்தின் தலைவர் ஹாரித் என்பவரின் மகளுமான ஜுவைரியாவும் அவர்களில் ஒருவராக இருந்தார். அன்றைய போர் வழக்கப்படி பிடிக்கப்பட்ட கைதிகள் போர் வீரர்களுக்குப் பங்கிட்டு கொடுக்கப்பட்டனர். ஜுவைரியா அவர்கள் ஸாபித் இப்னு கைஸ் (ரலி) என்ற நபித்தோழருக்குக் கொடுக்கப்பட்டார்.

இதன் பின்..

(அபூ தாவூதில் இடம்பெற்ற நபிவழிச் செய்தியின் சுருக்கமிது)

ஜுவைரியா நபி (ஸல்) அவர்களை அணுகி: ”யா ரஸூலல்லாஹ் – ஓ அல்லாஹ்வின் தூதரே! நான் ஹாரிதின் மகள் ஜுவைரியா… என் விடுதலைக்கு தாங்கள் உதவுங்கள்” என்று கேட்டார்.

அல்லாஹ்வின் தூதர்: ”நல்லதை நீ கேட்பாயா?” என்றார்கள்.

ஜுவைரியா: ”சொல்லுங்கள் யா ரஸூலல்லாஹ்.”

அல்லாஹ்வின் தூதர்: ”உன்னை விடுவித்து நான் திருமணம் செய்து கொள்வேன்” என்றார்கள்

ஜுவைரியா: ”சம்மதிக்கிறேன்” என்றார்.

இந்த சம்பவத்திலிருந்து தெரிந்து கொள்ளும் விஷயங்கள் – அக்காலப் போர் முறைப்படி, போரில் சிறைப் பிடிக்கப்பட்டவர்கள் சிறைப் பிடித்தவர்களுக்கு அடிமைகள் என்பதை ஆணும், பெண்ணும் அறிந்து வைத்திருந்தனர். பனூ முஸ்தலிக் என்ற கூட்டத்தின் தலைவரின் மகளாகிய ஜுவைரியா அந்த சூழ்நிலையிலிருந்து, தற்போது தானொரு அடிமை என்பதை விளங்கிக் கொள்கிறார். அடிமைத் தளையிலிருந்து சுதந்திரம் பெறவே நபி (ஸல்) அவர்களின் உதவியை நாடுகின்றார்.

”ஓ அல்லாஹ்வின் தூதரே” என்ற ஜுவைரியாவின் அழைப்பிலிருந்து முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட ”இறைத்தூதர்” என்ற அந்த மாபெரும் பதவியை அவர் ஏற்றுக் கொண்டு பிரகடனப்படுத்துகிறார். ”சொல்லுங்கள் யா ரஸூலல்லாஹ்” என இறைத்தூதரின் கட்டளைக்கு செவி சாய்க்கிறார். ”சம்மதிக்கிறேன்” என்று இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களை திருமணம் செய்து கொள்ள ஒப்புதலளிக்கிறார். இங்கே ஜுவைரியா மீது சிறிதும் வன்முறையோ – பலவந்தமோ நடத்தப்படவில்லை (அப்படி நடத்தப்பட்டதாக வரலாற்று தகவல்களில் அறிந்திருந்தால் தருமி சமர்ப்பிக்கலாம்)

ஜுவைரியா எவ்விதத்திலும் பாதிக்கப்படவில்லை, அவருக்கு அநீதியும் இழைக்கப்படவில்லை ஜுவைரியாவின் சம்மதத்தின் பின்பே நபி (ஸல்) அவர்கள் ஜுவைரியாவை மணமுடித்தார்கள் என்பதே வரலாற்று உண்மையாகும்.

//ஜுவேரியா – இந்தப் பெண்ணின் கதை மனசுக்குக் கொஞ்சம் கஷ்டமாயிருந்தது.// என்ற தருமியின் கூற்றில் எந்த உண்மையும் இல்லை. ஜுவைரியாவுக்கு துளியும் அநியாயம் இழைக்கப்படாத நிலையில் ஜுவைரியாவுக்காக தருமியின் மனம் கஷ்டப்படுகிறதென்றால் – மன்னிக்கவும், ”பிறர் நன்றாக வாழ்வதை பொறுக்காத சில மனங்களும் கஷ்டப்படத்தான் செய்யும்” என்பதை எண்ணிப் பார்ப்பதிலிருந்து என்னால் தவிர்க்க முடியவில்லை.

இந்தக் கேள்வி..

//53வயதான நபி(ஸல்) அவர்களை மணந்ததால் என் வாழ்க்கையே பாழாகி விட்டது என்று ஆயிஷா (ரலி) எங்காவது சொல்லியிருக்கிறார்களா?//

ஜுவைரியாவுக்கும் பொருந்தும்

59வயதான நபி(ஸல்) அவர்களை மணந்ததால் என் வாழ்க்கையே பாழாகி விட்டது என்று ஜுவைரியா (ரலி) எங்காவது சொல்லியிருக்கிறார்களா?

————–

//2. Zaynab bint Jahsh- ஜேனாப் என்ற இந்தப் பெண்மணி முகமதின் வளர்ப்பு மகனின் மனைவி; வளர்ப்பு மகன் விவாகரத்து செய்த பின் இப்பெண்ணை முகமது மணம் முடிக்கிறார்.// இந்த செய்தியின் மூலம் தருமி என்ன சொல்ல வருகிறார்?

”ஸைது அவளை விவாக விலக்கு செய்து விட்ட பின்னர் நாம் அவளை உமக்கு திருமணம் செய்வித்தோம். ஏனென்றால் மூஃமீன்களால் சுவீகரித்து வளர்க்கப்பட்டவர்கள். தம் மனைவியரை விவாகரத்து செய்து விட்டால் அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாத என்பதற்காக இது நடை பெற்று தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும். (அல்குர்ஆன் 33:37)

இது பற்றி ஏற்கெனவே முன்பு விளக்கப்பட்டிருக்கிறது.
—————-
இனி தருமியின் மற்ற விமர்சனங்களைத் தொடந்து அவரது ஐயங்களையும் பார்ப்போம்.

ஐயம்: 1.)பழைய ஏற்பாடு இரு (கிறித்துவம், இஸ்லாம்)மதத்தினருக்கும் பொது எனப்படுகின்றது. கிறித்துவர்களின் பைபிளில் ஆதாம் – ஏவாள் படைப்பைப் பற்றி சொல்லும்போது ஆணின் விலா எலும்பிலிருந்து பெண் படைக்கப்பட்டாள் என்பதை, இது ஓர் ஆணாதிக்க விளக்கம் என்று கூறியிருந்தேன். ஆனால், முஸ்லீம் எழுத்துக்களில் அந்த முதல் பெண்ணுக்குப் பெயரே இல்லை. பெயர் தரும் அளவிற்குக்கூட பெண்ணுக்கு முக்கியம் இல்லையோ?

தெளிவு: ஆதாமின் – ஆதமின் மனைவியாகிய முதல் பெண்மணியின் பெயர், ”ஹவ்வா” என்று இஸ்லாம் பெயரிட்டு அழைக்கிறது. (பார்க்க: தமிழ் புகாரி ஹதீஸ் எண், 3330)

(வளரும் இன்ஷா அல்லாஹ்)

5 comments

  1. அட்றா சக்கை

    தங்களின் இந்தப் பதிவையும் தருமி என்று புனைபெயர் கொண்டவரின் எழுத்தையும் படித்தவுடன் ஒன்று புரிகிறது.. இவர் சொல்லிக் கொள்வது போல கிறிஸ்தவராக இருக்க இயலாது. அவ்வாறெனின் ஆதாமின் மனைவி ஏவாள் என்று இவர் படித்ததாகச் சொல்லிக் கொள்ளும் பள்ளியில் சொல்லித் தந்துள்ளார்கள். இதனை அவ்வா என்று இஸ்லாமியர் அழைப்பதைப் பற்றி அறியாத அளவுக்கு இருப்பதைப் பார்த்தால், மண்டபத்தில் யாரோ எழுதிக் கொடுத்ததைத் தான் இவர் சபையில் வைக்கிறார் எனத் தெளிவாகிறது. இந்த லட்சணத்தில் கிறிஸ்தவத்தில் வெளியேற இஸ்லாம் காரணம் என வாதிடுவது நகைப்புக்குரியது

  2. நல்லடியார்

    முஸ்லீம் எழுத்துக்களில் அந்த முதல் பெண்ணுக்குப் பெயரே இல்லை. பெயர் தரும் அளவிற்குக்கூட பெண்ணுக்கு முக்கியம் இல்லையோ?-கேட்டவர்:தருமி

    நபிகளாரின் இறுதிப் பேருரையில் மனிதர்கள் அனைவரும் ஆதம்+ஹவ்வா – விடமிருந்தே படைக்கப்பட்டார்கள் என்று உரைத்தார்கள்.

    http://www.usc.edu/dept/MSA/fundamentals/prophet/lastsermon.html

  3. \\(பார்க்க: தமிழ் புகாரி ஹதீஸ் எண், 3330)\\
    http://www.rahmath.net/View.asp?RECORDNO=3330

    (பார்க்க: தமிழ் புகாரி ஹதீஸ் எண், 3399)
    http://www.rahmath.net/View.asp?RECORDNO=3399

    என்று சுட்டி கொடுக்கலாமே!

    தருமி நேர்மையானவராக இருப்பின், தம் அறியாமையை இங்கு ஒப்புக் கொள்ள வேண்டும். செய்வாரா?

  4. 'தஞ்சை' கண்ணன்

    என்னைப் பொருத்தவரை தருமி அவர்களின் பிற கட்டுரைகளிலுள்ள முதிர்ச்சி மதங்கள் குறித்த கட்டுரையில் இல்லை.

    கிரித்தவத்திலிருந்து சென்றதற்கான காரணங்கள் ஒரு கிறித்தவரின் பார்வையாகப்படவில்லை.இசுலாம் குறித்த புரிந்து கொள்ளலும் அப்படித்தான் இருக்கிறது. (உ.ம்) கன்னிமேரி கதையும் ஆதாம்-ஏவாள் கதையும் இசுலாம்-கிரித்தவம் இரண்டிற்கும் சற்று வித்தியாசங்களுடன் பிரபல்யம்.

    ஏவாளுக்கு இசுலாம் மதத்தில் பெயர் இல்லை என்று சொல்வது தருமி அறியாமையைக் காட்டுகிறது. தனக்கு தெரியாத விஷயங்களில் முந்திக் கொண்டு கருத்துச் சொல்வதை தவிர்த்திருக்கலாம்.

    இந்து மதம் குறித்து சொன்னது தந்தை பெரியார் சொல்லியதைத்தான் தருமியும் சொல்லியுள்ளார்.

    சாதிய முறைகளுக்கு எதிரான விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் கலங்காலமாக நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஜாதிய ரீதியிலான இடஒதுக்கீட்டிற்கும் போராடிக் கொண்டு இன்னொரு பக்கம் ஜாதியை ஒழிக்க வேண்டும் என்பது நம் மக்களின் இரட்டை நிலைப்பாட்டைக் காட்டுகிறது.

    மிசைக்கும் ஆசை; கூழுக்கும் ஆசை கதைதான் போங்க.

  5. சத்யம்

    //’தஞ்சை’ கண்ணன் said…
    .. தனக்கு தெரியாத விஷயங்களில் முந்திக் கொண்டு கருத்துச் சொல்வதை தவிர்த்திருக்கலாம்…//

    எனது கருத்தும் இதுதான். இசுலாமிய மதத்தில் எவ்வளவோ நல்ல விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கையில், தருமி போன்றவர்கள் குற்றம் குறைகளை ஏன்தான் தேடி அலைகிறார்களோ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *