Featured Posts
Home » நூல்கள் » உண்மை உதயம் மாத இதழ் » மூஸா நபியும் மலக்குல் மௌத்தும் (தொடர்-1)

மூஸா நபியும் மலக்குல் மௌத்தும் (தொடர்-1)

மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் (பகுதி 2, தொடர் 1) குறிப்பு: சகோதரர் பீஜே அவர்கள் தனது தர்ஜமாவில் மறுத்துள்ள நான்கு ஹதீஸ்கள் தொடர்பான உண்மை நிலையை விளக்கும் எண்ணத்துடன்தான் ‘மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள்’ தொடரை நாம் எழுதினோம். அதன் முதல் கட்டமாக எழுதப்பட்ட சூனியம் தொடர்பான ஹதீஸ் குறித்த எமது தொடர்தான் முற்றுப் பெற்றது. அடுத்த பகுதியை நாம் இப்போது ஆரம்பித்துள்ளோம்.

சகோதரர் பீஜே அவர்கள் இது வரை தான் செய்த தனிப்பட்ட விமர்சனங்களைத் தவிர்க்கப் போவதாக அறிவித்துள்ளார். இந்த முடிவு வரவேற்கத்தக்கது. எனினும், எனது பெயரையும் குறிப்பிட்டு நாம் தனிப்பட்ட விமர்சனம் செய்ததால்தான் அவரும் தனி நபர் தாக்குதலில் ஈடுபடும் நிலை ஏற்பட்டதாகக் கூறுவதில் நமக்கு உடன்பாடு இல்லை. என்னைப் பொறுத்தவரை நான் தனிப்பட்ட விமர்சனம் செய்யவில்லை. கருத்து விமர்சனம்தான் செய்துள்ளேன். தனிப்பட்ட விமர்சனத்தில் நான் ஆர்வம் காட்டவும் இல்லை. அவரது ‘இஸ்மாயில் ஸலபிக்கு மறுப்பு தொடர் மூன்று, நான்கு என்பவற்றுக்கு நான் எழுதிய மறுப்பைக் கூட இணையத்திற்கு அனுப்பவில்லை. தொடர்ந்தும் நாகரிகமான முறையில் கருத்து விமர்சனம் செய்யப்படுவதை நான் வரவேற்கின்றேன். இந்த அடிப்படையில் ‘மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள்’ பகுதி இரண்டை உங்கள் முன் வைக்கின்றோம். இன்ஷா அல்லாஹ் ஏற்கனவே அவர் முன் வைத்துள்ள பால்குடி ஹதீஸ் உட்பட அனைத்துக்கும் விரிவான விளக்கமளிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

மூஸா நபியும், மலக்குல் மௌத்தும் (தொடர்-1)

இது வரை நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதாக வரும் ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்பட்டதல்ல என்பது குறித்து விபரித்தோம். இதே போன்று மற்றும் பல ஹதீஸ்களும் பல்வேறுபட்ட தவறான காரணங்களைக் காட்டி மறுக்கப்படுகின்றன. அவ்வாறு மறுக்கப்படும் அறிவிப்புக்களில் மூஸா நபியும், மலக்குல் மௌத்தும் சம்பந்தப்பட்ட ஹதீஸும் ஒன்றாகும்.

ஹதீஸும் கவாரிஜ்களும்:
இந்த ஹதீஸ் குறித்த சர்ச்சைக்குள் நாம் நுழையும் முன்னர் மற்றுமொறு விடயத்தை நினைவூட்டுவது நல்லது எனக் கருதுகின்றேன். வழிகெட்ட பல பிரிவினரும் ஹதீஸ்களை மறுத்துள்ளனர். அவர்கள் ஹதீஸை மறுப்பதற்குக் கூட குர்ஆனின் சில வசனங்களையும், பகுத்தறிவு வாதங்களையும் முன்வைத்தே மறுத்தனர். வெறுமனே காரண-காரியம் எதையும் காட்டாமல் அவர்கள் மறுக்கவில்லை.

கவாரிஜ்கள், “நரகம் சென்ற முஸ்லிம்கள் மீண்டும் சுவனம் நுழைவிக்கப்படுவர்” என்ற கருத்தில் வரும் ஹதீஸ்களை மறுத்தனர். இவற்றைச் சும்மா அவர்கள் மறுக்கவில்லை, குர்ஆன் வசனங்கள் சிலவற்றைத் தவறாக விளங்கித்தான் மறுத்தார்கள். இதனை ஸஹீஹ் முஸ்லிமில் இடம்பெறும் பின்வரும் அறிவிப்பு உறுதி செய்கின்றது.

‘நான் கவாரிஜிகளின் கருத்தால் தாக்கப்பட்டிருந்தேன். நாங்கள் சிலர் ஹஜ்ஜுக்காகப் புறப்பட்டோம். நாம் மதீனாவைக் கடந்து செல்லும் போது ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் மக்களுக்கு ஹதீஸ்களைக் கூறிக்கொண்டிருந்தார். அவர் (நரகத்திலிருந்து வெளியேற்றப்படும்) நரகவாதிகள் குறித்து நினைவூட்டிய போது நான் அவரைப் பார்த்து, ‘அல்லாஹ்வின் தூதரின் தோழரே! யாரை நீ நரகில் நுழைவித்தாயோ, அவரை நிச்சயமாக நீ கேவலப்படுத்தி விட்டாய் என அல்லாஹ் கூறுகின்றான். அதே போன்று ‘நரகவாதிகள் அதிலிருந்து வெளியேற முயற்சிக்கும் போதெல்லாம் மீண்டும் அதில் போடப்படுவார்கள்’ என்றும் குர்ஆனில் கூறுகின்றான். அதற்கு மாற்றமாக நீங்கள் என்ன கூறிக்கொண்டிருக்கின்றீர்கள்?’ எனக் கேட்டேன். அதற்கவர், ‘நீ குர்ஆனை ஓதுகின்றாயா?’ எனக் கேட்டார். நான், ‘ஆம்!’ என்று கூறினேன். அதற்கவர், ‘நீ மகாமும் மஹ்மூத்’ பற்றி அதில் ஓதியுள்ளாயா?’ எனக் கேட்டார். நான் ‘ஓதியுள்ளேன்’ என்றேன். புகழத் தக்க அந்த இடத்தால் நரகிலிருந்து அல்லாஹ் வெளியாக்க நாடுபவர்களை வெளியேற்றுவான்…’ என்று விளக்கமளித்தார்கள். (யஸீதுல் பகீர், ஸஹீஹ் முஸ்லிம்)

‘நீ யாரை நரகில் நுழைவித்தாயோ அவர்களை நீ இழிவுபடுத்தி விட்டாய்’ என்ற குர்ஆன் வசனத்திற்கு “நரகம் சென்றவர்கள் மீண்டும் சுவனம் நுழைவிக்கப்படுவார்கள்’ என்ற ஹதீஸ் முரண்படுகின்றது. எனினும் அவர்களது அந்த அணுகுமுறை வழிகெட்ட அணுகுமுறையாக இருந்ததே தவிர ‘ அஹ்லுஸ் ஸுன்னா’வின் நிலைப்பாடாக இருக்கவில்லை.

இவ்வாறே, ‘நாம் நபிமார்கள்; நாம் யாருக்கும் வாரிசுகளாகவும் மாட்டோம்; நமது சொத்து வாரிசு சொத்தாகப் பங்கிடப்படவும் மாட்டாது’ என்ற கருத்தில் நபி(ஸல்) அவர்களின் பல அறிவிப்புக்கள் அமைந்திருக்கின்றன.

ஃபாத்திமா(ரலி)அவர்கள், நபி(ஸல்) அவர்கள் விட்டுச் சென்ற சொத்தில் பங்கு கேட்ட போது, இந்த ஹதீஸைக் கூறித்தான் ஃபாத்திமா(ரலி)அவர்களுக்குப் பங்கு கொடுக்க அபூபக்கர்(ரலி) அவர்கள் மறுத்து விட்டார்கள்.

எனினும் ஷீஆக்கள், இந்த ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி மறுத்தனர். (அவர்கள் இதை மட்டுமல்ல, மற்றும் பல்லாயிரம் ஹதீஸ்களைக் காரணம் கூறாமலேயே மறுக்கின்றனர்.)

”அவர் எனக்கு வாரிசாகவும், யஃகூபின் சந்ததியினருக்கு வாரிசாகவும் இருப்பார். எனது இரட்சகனே! அவரைப் பொருந்திக் கொள்ளப்பட்டவராக நீ ஆக்குவாயாக!” (என்றும் பிரார்த்தித்தார்.)’ (19:6)

என்ற வசனங்களை ஆதாரங் காட்டி நபிமார்களின் குடும்பத்திற்கும் வாரிசுரிமை உள்ளது. அபூபக்கர்(ரலி) அவர்கள் ஃபாத்திமா(ரலி)அவர்கள் மீது கொண்ட வெறுப்புக் காரணமாகத்தான் இந்தக் குர்ஆன் வசனங்களுக்கு முரணான ஹதீஸை இட்டுக் கட்டினார் என்றும் அவதூறு கூறினர்.

இவ்வாறே, கவாரிஜ்கள் எனும் வழிகேடர்கள் பகுத்தறிவு வாதத்தை முன்வைத்துப் பல ஹதீஸ்களை மறுத்துள்ளனர். மாதத் தீட்டுடன் உள்ள பெண்கள் அக்காலத்தில் விடுபடும் நோன்பைக் கழா செய்ய வேண்டும், தொழுகையைக் கழாச் செய்ய வேண்டியதில்லை. இதுதான் சட்டம். இது குறித்துப் பல ஹதீஸ்கள் பேசுகின்றன. ஆனால் கவாரிஜ்கள், ‘நோன்பை விடத் தொழுகை முக்கியமான வணக்கம். நோன்பைக் கழாச் செய்ய வேண்டும் என்றால் அதை விட முக்கியமான தொழுகையைக் கழாச் செய்யாமல் விட முடியுமா?’ என்ற பகுத்தறிவுக் கேள்வி மூலம் ஹதீஸை மறுத்தனர்.

இதனைப் பின்வரும் அறிவிப்பு உணர்த்துகின்றது:
ஒரு பெண்மணி ஆயிஷா(ரலி) அவர்களிடம் ‘மாதத் தீட்டுடைய பெண் நோன்பைக் கழாச் செய்கிறாள். தொழுகையைக் கழாச் செய்யக் கூடாது. இது ஏன்?’ என்று கேட்டாள். அதற்கு ஆயிஷா(ரலி)அவர்கள், ‘நீ ஒரு கவாரிஜீயப் பெண்ணா?’ எனக் கேட்டார்கள். அதற்கவள் ‘அப்படி இல்லை. இருப்பினும் (அறிந்துகொள்வதற்காகக்) கேட்கிறேன்’ என்றாள். அதற்கு ஆயிஷா(ரலி)அவர்கள், நபி(ஸல்) அவர்கள் காலத்தில் அது எமக்கும் ஏற்பட்டது. நாம் நோன்பைக் கழாச் செய்ய ஏவப்பட்டோம். தொழுகையைக் கழாச் செய்ய ஏவப்படவில்லை’ என்று கூறினார்கள்.

மேற்படி அறிவிப்பு புகாரி, முஸ்லிம் உட்படப் பல்வேறு கிரந்தங்களில் ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே, ‘ஹதீஸை மறுத்தல்’ என்ற இந்த வழிகேடு சமூகத்தில் ஊடுருவி வளர்ந்து விடக் கூடாது. இந்தக் கோணத்தில் ஆய்வு செய்தால் ஹதீஸ்களை மட்டுமல்ல, எதிர்காலத்தில் குர்ஆன் வசனங்களைக் கூட விஞ்ஞானத்திற்கு முரண்படுகிறது, பகுத்தறிவுக்கு முரண்படுகிறது என்று மறுக்கும் நிலைக்குக் கொண்டு சென்று விடும் என்பதால், இது குறித்து விவரிக்க வேண்டியுள்ளது. அதிலும் குறிப்பாக தமிழுலகில் தவ்ஹீத் வட்டாரத்தில்தான் இந்த நோய் பரவி வருகிறது. இந்த வகையில் தவ்ஹீத் வட்டாரத்தைச் சென்றடையும் ஊடகத்தின் மூலமே இந்தத் தெளிவை வழங்கும் தேவை உள்ளது. இந்தத் தவறான கருத்து தமிழுலகில் அறிஞர் பிஜே அவர்கள் மூலமாகத்தான் முன்வைக்கப்பட்டது. அவர் முன்வைக்கும் வாதத்தை அவரது நூலிலிருந்தே எடுத்துக் காட்டி விளக்கம் அளிக்கும் தேவை இருப்பதால் அவரது பெயரையும், வாதங்களையும் அதிலுள்ள முரண்பாடுகளையும், அவர் ஹதீஸ்களில் சில இடைச் செறுகல்-நீக்கம் செய்திருப்பதையும் சுட்டிக் காட்டி விளக்குவது அவசியமாகின்றது என்பதை வாசகர்கள் கவனத்திற்கொள்ளவும்.

குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள் குறித்து அவர் தனது தர்ஜமாவில் 1304 (நான்காம் பதிப்பு) இல் குறிப்பிடும் போது, ‘ஒரு ஹதீஸ் எந்த வகையிலும் குர்ஆனுடன் அறவே ஒத்துப் போகவில்லை. திருக்குர்ஆனுடன் நேரடியாக மோதுவது போல் அமைந்துள்ளது. இரண்டையும் எந்த வகையிலும் இணைத்து விளக்கம் கூற முடியாது என்றால் அது போன்ற சந்தர்ப்பங்களில் ஹதீஸை ஏற்றுக் குர்ஆனை மறுத்து விடாமல், குர்ஆனை ஏற்று அந்த ஹதீஸை மட்டும் நிறுத்தி வைப்பதுதான் நேர்மையான பார்வையாகும். இந்த நேரத்தில் மட்டும் இது போன்ற ஹதீஸ்களை மட்டும் நாம் விட்டுவிட வேண்டும் ‘ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதில் பல விடயங்களை ஒப்புக்கொள்கிறார் :

** குர்ஆனுக்கு ஹதீஸ் நேரடியாக முரண்பட வேண்டும். நாமாகச் சுற்றி வளைத்து முரண் கற்பிக்கும் நிலை இருக்கக் கூடாது.

** எந்த வகையிலும் குர்ஆனையும், குறித்த ஹதீஸையும் இணைத்து விளக்கம் கூற முடியாமல் இருக்க வேண்டும். (இந்த வகையில் இவர் மறுக்கும் ஹதீஸ்களுக்கு எந்த வகையிலும் விளக்கம் கூற முடியாத நிலையில்தான் உள்ளதா என்பது நோக்கத்தக்கது)

** இந்த நிலை இருந்தால், அந்த ஹதீஸை மட்டும் நிறுத்தி வைக்க வேண்டும். (மறுக்க வேண்டும் என்பது அல்ல. அது குறித்து மௌனம் காக்க வேண்டும்.)

இவர், தான் எழுதியதற்கு மாற்றமாக குறித்த ஹதீஸை மறுக்கிறார்; ஏற்பவர்கள் வழிகேட்டில் இருப்பதாகக் கூறுகிறார்; விவாதத்திற்கு அழைக்கிறார் என்றால், இதுதான் நிறுத்தி வைக்கும் நேர்மையான பார்வையா? என நடுநிலையாகச் சிந்தித்துப் பாருங்கள்!

மூஸா நபியும், மலக்குல் மௌத்தும்:

صحيح البخاري ت – 3 / 310
1339
حَدَّثَنَا مَحْمُودٌ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ ابْنِ طَاوُسٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ أُرْسِلَ مَلَكُ الْمَوْتِ إِلَى مُوسَى عَلَيْهِمَا السَّلَام فَلَمَّا جَاءَهُ صَكَّهُ فَرَجَعَ إِلَى رَبِّهِ فَقَالَ أَرْسَلْتَنِي إِلَى عَبْدٍ لَا يُرِيدُ الْمَوْتَ فَرَدَّ اللَّهُ عَلَيْهِ عَيْنَهُ وَقَالَ ارْجِعْ فَقُلْ لَهُ يَضَعُ يَدَهُ عَلَى مَتْنِ ثَوْرٍ فَلَهُ بِكُلِّ مَا غَطَّتْ بِهِ يَدُهُ بِكُلِّ شَعْرَةٍ سَنَةٌ قَالَ أَيْ رَبِّ ثُمَّ مَاذَا قَالَ ثُمَّ الْمَوْتُ قَالَ فَالْآنَ فَسَأَلَ اللَّهَ أَنْ يُدْنِيَهُ مِنْ الْأَرْضِ الْمُقَدَّسَةِ رَمْيَةً بِحَجَرٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَوْ كُنْتُ ثَمَّ لَأَرَيْتُكُمْ قَبْرَهُ إِلَى جَانِبِ الطَّرِيقِ عِنْدَ الْكَثِيبِ الْأَحْمَرِ

pj-tharjama

( பக் 1307-1308 , பீ.ஜே வின் திருக்குர்ஆன் தர்ஜுமா, நான்காம் பதிப்பு )

மேற்படி அறிவிப்பில் முக்கியமான ஒரு பகுதியை மறைத்து விட்டே அவர் மொழியாக்கம் செய்துள்ளார். வேண்டுமென்றே மறைத்து விட்டுத்தான் செய்தார் என்று இனித் துணிந்து கூறலாம். ஏனெனில், ஜம்இய்யா வெளியிட்ட ‘இதுதான் தவ்ஹீத்’ என்ற நூலின் 129 பக்கத்தில் ஒரு ஹதீஸை முபாறக் (ஸலபி) மொழி பெயர்க்கும் போது, சில பகுதிகளை விட்டு விட்டு மொழி பெயர்த்துள்ளார். அதில் தெளிவாகவே ‘ …’ என்று கூறினார் என்று போடப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் ஹதீஸில் இன்னும் சில பகுதிகள் இருக்கின்றன என்பதுதான். அப்படியிருந்தும் திட்டமிட்டு ஹதீஸின் ஒரு பகுதியை மறைத்து விட்டதாக பீஜே எம் மீது குற்றம் சாட்டினார். இப்போது இவர் மொழி பெயர்த்த ஹதீஸில் இன்னும் இருக்கின்றது என்ற குறியீடு இல்லாமலேயே அவர் இருட்டடிப்புச் செய்த பகுதியைப் பாருங்கள்!

‘…அப்படியானால் இப்பொழுதே தயார் எனக் கூறி விட்டு அல்லாஹ்விடம் (பைத்துல் முகத்தஸ் எனும்) புனிதத் தலத்திலிருந்து கல்லெறியும் தூரத்திலுள்ள இடத்தில் தம் உயிரைக் கைப்பற்றுமாறு வேண்டிக் கொண்டார்கள். மேலும் நபி(ஸல்) அவர்கள் கூறும் போது, ‘நான் மட்டும் இப்போது அங்கு (பைத்துல் முகத்தஸில்) இருந்தால் உங்களுக்கு அந்தச் செம்மண் குன்றுக்கருகில் உள்ள பாதையிலிருக்கும் மூஸா(அலை) அவர்களது கப்ரைக் காட்டியிருப்பேன்’ என்று குறிப்பிட்டார்கள்.’

மேற்படி ஹதீஸின் முக்கிய பகுதியை மூடி மறைத்து விட்டு, இந்த ஹதீஸை மறுக்கும் மனநிலைக்கு மக்களைக் கொண்டு வர முயற்சிக்கின்றார். இந்த ஹதீஸில் ஏற்படுத்தப்படும் முக்கிய சந்தேகத்திற்குத் தீர்வாக அமையும் ஹதீஸின் முக்கிய செய்தியை இருட்டடிப்புச் செய்து இந்த ஹதீஸை மறுக்க முனைந்துள்ளார் என்பது இதிலிருந்து உறுதியாகின்றது.

குறிப்பு: தற்பொழுது அவரது வெப்தளத்தில், அவர் இந்த ஹதீஸை முழுமையாக மொழிப்பெயர்த்து வெளியிட்டிருந்தாலும், முன்பு அவர் தனது தர்ஜுமாவில் முக்கிய பகுதியை மறைத்து அதைப் படித்தவர்களின் மனதில், இந்த ஹதீஸை மறுக்கும் மனோ நிலையை உருவாக்கியுள்ளார்.

மரணமும், நபிமார்களுக்குரிய சட்டமும்:
பொதுவாக ஹதீஸ்களை மறுப்போர் அடிப்படையான ஒரு விடயத்தில் முதல் தவறு விடுவர். அந்தத் தவறில் இருந்து நியாயமான சில வாதங்கள் முன்வைப்பர். அந்த வாதங்களால் மக்கள் மயக்கப்படுவர். பொதுவான ஒரு சட்டத்தைக் குறிப்பிட்ட ஒரு சாராருக்குரிய அல்லது நபருக்குரிய சட்டத்துடன் மோத விட்டுத் தமது நியாயத்தை நிறுவ முற்படுவர். உதாரணமாகச் செத்தவைகள் உண்ணத் தடை விதிக்கப்பட்டுள்ளன என்பது பொதுவான சட்டம். மீன் இறந்தாலும் சாப்பிடலாம் என்பது தனியான சட்டம். செத்தவற்றை உண்ணக் கூடாது என்ற பொதுச் சட்டத்திலிருந்து நீர் வாழ் உயிரினங்கள் விதிவிலக்களிக்கப்பட்டுள்ளன என இதைப் புரிந்துகொள்ளாவிட்டால் குர்ஆனும், ஹதீஸும் முரண்படுவதாகத்தான் தென்படும். இந்த அடிப்படையை மனதில் கொண்டு பின்வரும் செய்தியை வாசிக்கவும்.

மரணம் வந்தால் ஒரு நிமிடம் முற்படுத்தப்படவும் மாட்டாது, பிற்படுத்தப்படவும் மாட்டாது என்பது பொதுச் சட்டம். ஆயினும், நபிமார்கள் மரணத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பெற்றுள்ளனர்.

மரணமும், நபிமார்களுக்குரிய சட்டமும்

‘இம்மை-மறுமை (இரண்டுக்கும்) இடையில் (மறுமையைத்) தேர்ந்தெடுக்காத வரையில் எந்த நபியும் மரணிப்பதில்லை என்பதை நான் செவியுற்றிருந்தேன். நபி(ஸல்) அவர்கள், தான் மரணித்த அவர்களது அந்த நோயின் போது, ‘அல்லாஹ் அருள் புரிந்தவர்களுடன்…’ என்ற ஆயத்தை ஓதினார்கள். அப்போது, நபி(ஸல்) அவர்கள் மரணத்தைத் தேர்ந்தெடுத்து விட்டார்கள் என நான் நினைத்தேன்’ என ஆயிஷா(ரலி)அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஸஹீஹ் புகாரி)

முஅதா

‘(மரணத்தைத்) தானாகத் தேர்ந்தெடுக்காத வரையில் எந்த நபியும் மரணிப்பதில்லை’ என நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள்.’ (முஅதா)

நபி(ஸல்) அவர்கள், தான் மரணத்தைத் தேர்ந்தெடுத்தது குறித்துக் கூறும் போது ‘ஒரு அடியாரிடம் இம்மையும், அதன் அலங்காரமும் காட்டப்பட்டது. அவரோ மறுமையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்’ எனக் கூறினார்கள். (ஹாகிம்)

ஹாகிம்

இந்தச் செய்தியை நபி(ஸல்) அவர்கள் கூறிய போது நபி(ஸல்) அவர்கள் தனது நிலை குறித்துத்தான் கூறுகின்றார்கள் என்பதை அபூபக்கர்(ரலி)அவர்கள் மட்டுமே உடனே புரிந்து கொண்டார்கள்.

எனவே நபிமார்களின் மரணத்திற்கும், பொதுவானவர்களின் மரணத்திற்குமிடையில் வேறுபாடு உள்ளது என்பதை நினைவில் கொள்ளவும்! அவர்கள் மரணத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பெற்றுள்ளனர்.

மனித உருவில் மலக்குகள்:

அடுத்ததாக, மலக்குகள் சில போது மனித உருவில் வருவார்கள். வந்தவர் தன்னை மலக்கு என்று கூறும் வரை அவர் வானவர் என்ற உண்மை பார்ப்பவருக்குத் தெரியாமல் இருக்கலாம் என்பதைக் குர்ஆன் உறுதி செய்கின்றது.

(1) மர்யம்(அலை) அவர்களிடம், ஜிப்ரீல்(அலை) அவர்கள் மனித உருவில் வருகின்றார்கள். கன்னிப் பெண்ணான அவர்கள், வந்தவர் வானவர் என்று அறியாமல் கெட்ட நோக்கத்தில் ஒரு ஆண் தன்னை அணுகுவதாக எண்ணிப் பாதுகாவல் தேடுகின்றார்கள். அதன் பின்னர்தான் வந்தவர், தான் ஒரு வானவர் என்ற உண்மையைக் கூறுகின்றார்.
பார்க்க: (அல்குர்ஆன் 19:17-22)

(2) இப்றாஹீம்(அலை) நபியிடம் மலக்குகள் மனித வடிவில் வருகின்றனர். அவர் அவர்களுக்காக கொழுத்த காளைக் கன்றை அறுத்து விருந்து வைக்கிறார். அவர்கள் உண்ணாமல் இருப்பதைக் கண்டு அச்சமுறுகின்றார். அதன் பின்னர்தான் வந்தவர்கள், தாம் வானவர்கள் என்ற உண்மையைக் கூறுகின்றனர்.
பார்க்க: அல்குர்ஆன் 51:24-30, 15:51-56, 11:69-76, 39:31-32.

(3) இதே வானவர்கள், லூத்(அலை)நபியின் வீட்டிற்குச் செல்கின்றனர். அவரது சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள், மலக்குகளை மனிதர்கள் என எண்ணி தன்னினச் சேர்க்கைக்கு அவர்களைப் பயன்படுத்தப் பலவந்தப்படுத்துகின்றனர். லூத்(அலை)நபி அந்தக் கெட்டவர்களிடம் கெஞ்சிக் கேட்டும், அவர்கள் தமது தவறை விடுவதாக இல்லை.

எனவே, விருந்தாளிகளை விட்டு விட்டுத் தமது மகள்களைத் திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்கின்றனர். அவர்கள் அதற்கும் இணங்காத போது அவரது மனவேதனையை அல்லாஹ்விடம் முறையிடுகின்றார்கள். அதன் பின்னர்தான் வந்தவர்கள் தாம் வானவர்கள் என்றும், இந்த சமுதாயத்தை அல்லாஹ்வின் உத்தரவுப் படி அழிக்க வந்திருப்பதாகவும் கூறுகின்றனர்.

பார்க்க – அல்குர்ஆன் 15:67-74, 11:77-82, 29:33-34.

இறுதிக் கட்டத்தில் அவர்களாகக் கூறும் வரை மேற்குறிப்பிட்ட நபிமார்களுக்கே வந்தவர்கள் வானவர்கள் என்பது தெரியாமல் இருந்துள்ளது என்பதை இதிலிருந்து அறியலாம்.

இந்த வகையில் மூஸா(அலை)நபியிடம் மனித உருவில் வந்த வானவரை அவர் வானவர் என்று தெரிந்தோ அல்லது தெரியாமலோ மூஸா(அலை) தாக்கினார் என்பது மறுக்கக் கூடிய அம்சம் இல்லை என்பதை அறியலாம்.

அடுத்து ‘அனுமதியின்றி ஒருவர் வீட்டிற்குள் உற்றுப் பார்த்தால், அவரது கண்ணைக் குத்துங்கள்!’ எனக் கூறி, உற்றுப் பார்ப்பதன் தீமையை நபி(ஸல்) அவர்கள் உணர்த்துகின்றார்கள். இந்த வகையில் தனது வீட்டிற்குள் அனுமதியின்றி வந்தவர் மீது மூஸா (அலை) கடுமையாக நடந்துகொண்டுள்ளார்கள். அத்துடன் தனது உயிரைப் பாதுகாப்பதற்காகப் போராடுவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது. வந்தவர் வானவர் என்று அறியாமல் தன் உயிரைக் காத்துக்கொள்வதற்காக மூஸா(அலை)நபி வந்தவருக்கு அடித்தால், அது மார்க்க ரீதியில் மறுக்கப்படக் கூடிய அம்சம் அல்ல என்பதை அறியலாம்.

இந்த அடிப்படையைக் கருத்திற்கொள்ளாமல் இந்த ஹதீஸைப் பல்வேறுபட்ட கேள்விகள் மூலம் மறுக்க முனைகின்றார் பீஜே அவர்கள். இவரது வாதங்களை ஏற்றால் குர்ஆன் கூறும் பல சம்பவங்களையும் இதே வாதத்தின் அடிப்படையில் நிராகரிக்க நேரிடும். இது குறித்து அடுத்த தொடரில் விரிவாக நோக்குவோம். இன்ஷா அல்லாஹ்!

2 comments

  1. A.S.Rasool mohideen

    . உங்களிடையே ஒரு கூட்டத்தினர் கிளம்புவார்கள். அவர்களின் தொழுகையுடன் உங்களுடைய தொழுகையையும், அவர்களின் நோன்புடன் உங்களுடைய நோன்பையும், அவர்களின் நற்செயல்களுடன் உங்களின் நற்செயல்களையும் ஒப்பிட்டுப் பார்த்து உங்களுடைய தொழுகை, நோன்பு மற்றும் நற்செயல்களை அற்பமானவையாகக் கருதுவீர்கள். (அந்த அளவிற்கு அவர்களின் வழிபாடு களைகட்டியிருக்கும்.) மேலும், அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களின் தொண்டைக் குழிகளைத் தாண்டிச் செல்லாது. வேட்டைப் பிராணியைவிட்டு (அதன் உடலைத் துளைக்கின்ற) அம்பு (உடலின் மறுபுறம்) வெளிப்பட்டு சென்று விடுவதைப் போன்று மார்க்கத்திலிருந்து அவர்கள் வெளியேறி விடுவார்கள். (அந்தப் பிராணியின் உடலைத் துளைத்து வெளிவந்ததற்கான அடையாளம் ஏதுமிருக்கிறதா என்று) அம்பின் முனையைப் பார்ப்பார். அதில் (அடையாளம்) ஏதும் காணமாட்டார். பிறகு அம்பின் (அடிப்பாகக்) குச்சியைப் பார்ப்பார். அதிலும் (அடையாளம்) ஏதும் காணமாட்டார். அம்பி(ன் முனையி)ல் நாணைப் பொருத்தும் இடம் தொடர்பாகவும் (அது வேட்டைப் பிராணியைத் தைத்ததா) என்று சந்தேகம் கொள்வார். (அந்த அளவிற்கு அம்பில் எந்தத் சுவடும் இராது.) என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.

  2. masha allah superb explanation Mr.S.H.M Ismail (salaphy)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *