Featured Posts
Home » இஸ்லாம் » அகீதா » அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை (தொடர்-8)

அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை (தொடர்-8)

– M.T.M.ஹிஷாம் மதனீ

முர்ஜிஆக்கள்

அறிமுகம்:
முர்ஜிஆ என்பது ‘இர்ஜாஃ’ என்ற பதத்திலிருந்து பிறந்த சொல்லாகும். இதற்கு அறபு மொழியில் ‘பிற்படுத்துதல்’, ‘ஆதரவு வைத்தல்’ போன்ற கருத்துக்கள் உள்ளன. (அல்மிலல் வந்நிஹல்: 139)

கொள்கை:
முர்ஜிஆக்களின் கொள்கை தொடர்பாக இமாம் அஹ்மத் இப்னு அன்பல் (ரஹ்) அவர்கள் கூறுவதாவது : ‘ஈமான் என்பது, கலிமாவை நாவினால் மொழிவது மாத்திரமாகும். மனிதர்கள் மத்தியில் ஈமானின் தரத்தில் வித்தியாசம் கிடையாது. எனவே, மனிதர்கள் நபிமார்கள், மலக்குகள் அனைவருடைய ஈமானும் ஒரே தரத்தையுடையதாக இருக்கும். மேலும், ஈமான் கூடவோ குறையவோ மாட்டாது. இன்னும், எவரேனும் கலிமாவை தனது நாவினால் மாத்திரம் கூறி விசுவாசம் கொண்டு (அமல் செய்யாவிடினும் கூட) அவர் உண்மையான முஃமின் ஆவார். மேலே சொல்லப்பட்ட கருத்துக்களையும் கொள்கைகளையும் கொண்டோர் முர்ஜிஆக்கள் எனப்படுவர்’ என்கிறார்.
மேற்கூறப்பட்ட முர்ஜிஆக்களது கருத்துக்களைப் பார்க்கும் போது, ‘ஈமானுக்கும் அமலுக்கும் இடையில் எந்த உறவும் இல்லை’ என்ற கருத்தை அவர்கள் கூறுகின்ற காரணத்தினால், இறைநிராகரிப்பாளர்களுக்கு தாம் செய்த நல்லறங்கள் பயனளிக்காதது போன்று முஃமின்களுக்கும் தமது பாவச் செயல்கள் எந்தத் தீங்கும் செய்யாது என்று நம்பிக்கை கொள்வதே இவர்களது கோட்பாடாக உள்ளது என்பதை புரிய வைக்கின்றது.

வகைகள்:
இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: முர்ஜிஆக்கள் மூன்று வகைப்படுவர்.

1. ஈமான் என்பது உள்ளத்தில் இருக்கின்ற நம்பிக்கையாகும் என்போர் முதலாம் வகையினர். இவர்களில் பெரும்பாலானோர் ஈமானுக்கும் அமலுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு என்கின்றனர். எனினும், மற்றும் சிலர் ஈமானுக்கும் அமலுக்கும் எந்தத் தெடர்பும் இல்லை என்கின்றனர். மேலே குறிப்பிட்ட இரண்டாது கருத்தையே ‘ஜஹம் இப்னு ஸப்வான்’ என்பவனும் அவனைப் பின்பற்றியோரும் ஏற்றுக் கொண்டிருந்தனர்.

2. ஈமான் என்பது கலிமாவை நாவினால் மொழிவது மாத்திராகும். இவர்கள் ‘கராமிய்யாக்கள்’ என்று அழைக்கப்படுகின்றனர்.

3. ஈமான் என்பது கலிமாவை நாவினால் மொழிந்து அதனை உள்ளத்தல் விசுவாசம் கொள்வதை மட்டுமே குறிக்கும் என்போர் மூன்றாவது வகையினர், இவர்கள் ‘முர்ஜிஅதுல் புகஹா’ என்று அழைக்கப்படுவர்.

முர்ஜிஆக்கள் தொடர்பான மார்க்கத் தீர்ப்பு:
முர்ஜிஆக்கள் முஸ்லிம்களா? அல்லது இறை நிராகரிப்பாளர்களா? என்ற நிலைப்பாட்டில் கீழ்வரும் கருத்துக்கள் காணப்படுகின்றன:

இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறுவதாவது: ‘… முர்ஜிதுல் புகஹாக்கள் பற்றிய தீர்ப்பும் அவ்வாறுதான். இவர்களுடைய பித்அத்துக்கள் புகஹாக்களுடைய பித்அத்களைச் சார்ந்தவைகளோ! அவை இறை நிராகரிப்பை ஏற்படுத்தக் கூடியவைகளல்ல என்பதில் மார்க்க அறிஞர்களுக்கிடையே கருத்து முரண்பாடுகள் காணப்படவில்லை. ஆயினும், இவர்களுடைய பித்அத்துக்கள் இறை நிராகரிப்பை ஏற்படுத்தக் கூடியவைகளே என சில மார்க்க அறிஞர்கள் கருதுகின்றனர், இது மிகவும் தவறான கருத்தாகும். அமல்கள் ஈமான் சார்ந்ததல்ல என்கிற இவர்களது கருத்து குப்ரை ஏற்படுத்தக் கூடியது என்று சில அறிஞர்கள் கூறினர். எனினும், அமல்களை விட்டுவிடுதல் அல்லது அலட்சியம் செய்தல் ஈமானின் கடமையை விட்டுவிடுவதாகக் கருதப்படுமே தவிர ஈமானைப் புறக்கணிப்பதாகக் கருதப்படமாட்டாது. முர்ஜிஆக்களில் சிலர் மறுமையில் தண்டனை வழங்கப்படும் என்கிற விடயத்தைப் புறக்கணிக்கின்றனர். இன்னும் சிலர், அல்குர்ஆன் வசனங்களும் ஹதீஸ்களும் யதார்த்தமாக நடைபெற முடியாத சில தண்டனைகளைக் கூறி மனிதர்களை அச்சுறுத்துவதாகக் கூறுகின்றனர். இவ்வாறு மறுமையில் வழங்கப்படும் தண்டனையைப் புறக்கணிக்கும் கூட்டத்தினர் இறை நிராகரிப்பாளர்களாவர். (மஜ்மூஉல் பதாவா: 20:104)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *