Featured Posts
Home » இஸ்லாம் » அகீதா » அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை (தொடர்-16)

அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை (தொடர்-16)

– M.T.M.ஹிஷாம் மதனீ

விதி பற்றிய நம்பிக்கை

மேலும், விதியாக அமையப்பெற்ற ஓர் அம்சம் சில சமயங்களில் தன்னிலே தீங்குடையதாக இருந்தாலும், வேறு ஒர் கோணத்தில் நோக்குகையில் அது நன்மை பயக்கக்கூடியதாகவும் இருக்கும். இவ்வடிப்படையை பின்வரும் திருக்குர்ஆன் வசனம் ஒப்புவைக்கின்றது.

‘மனிதர்களின் கைகள் சம்பாதித்த (தீய)வற்றின் காரணமாகக் கரையிலும், கடலிலும் (அழிவு) குழப்பம் வெளிப்பட்டுவிட்டன, அவர்கள் செய்த (தீய)வற்றில் சிலவற்றை அவர்களுக்கு அவன் சுவைக்கும்படிச் செய்வதற்காக (இவ்வாறு சோதித்தான், அதன் மூலம்) அவர்கள் (தவ்பாச் செய்து அவன் பால்) திரும்பிவிடலாம்’. (அர்ரூம்: 41)

எனவே, இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள பிரகாரம் கரையிலும் கடலிலும் வெளிப்பட்டிருக்கும் அழிவு, மற்றும் குழப்பம் ஆகியன ஒரு விதத்தில் தீங்கானவையாக இருந்தாலும், மற்றொரு விதத்தில் மனிதனுக்கு நன்மை பயக்கக்கூடியனவாக இருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ளலாம். அதனடிப்படையில், விதியாக அமையப்பெற்ற ஓர் அம்சத்தில் காணப்படும் தீங்கானது, அதனுடன் இணைக்கப்பட்ட ஓன்றாக அன்றி எதார்த்தமான தீங்காக இருக்காது என்ற முடிவுக்கு வரலாம். இதற்கான சில எடுத்துக்காட்டுகளாவன,

திருமணம் செய்யாத ஒருவர் விபச்சாரம் செய்யும்போது அவருக்கு வழங்கப்படும் தண்டனையை சற்று சிந்தித்துப் பாருங்கள். உண்மையில் அத்தண்டனையானது குறித்த அந்நபருக்கு தீங்குடையாதாக இருந்தாலும் அவருக்கும், அத்தண்டனையை கண்ணுறக்கூடியவர்களுக்கும் அதில் பல நலவுகள் உள்ளன. அந்நலவுகளாவன,

1. விபச்சாரம் செய்தவனுக்கு குறித்த அத்தண்டனை குற்றப்பரிகாரமாக அமைகின்றது.
2. விபச்சாரத்திற்கு மறுமையில் வழங்கப்படவிருக்கும் தண்டனையைவிட உலகில் வழங்கப்படும் தண்டனை மிக இலகுவானது.
3. குறித்த அத்தண்டனையைக் கண்ணுறக்கூடியவர்களுக்கு சிறந்த படிப்பினை கிடைக்கின்றது. அதனால் அவர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபடுவதைவிட்டும் தூரமாவதற்கு வழியமைக்கின்றது.
4. விபச்சாரம் செய்தவர் கூட இனிவரும் காலங்களில் தன்னால் இவ்வீனச் செயல் நடைபெறாதவிதத்தில் தற்காத்துக் கொள்வார்.

மேலும், எமக்கேற்படக்கூடிய நோய்களை ஒரு கணம் சிந்தித்துப்பாருங்கள். உண்மையில் அந்நோய்கள் எமக்கு தீங்களிக்கக்கூடியனவாக இருந்தாலும், அவை தம்மிலே பல நலவுகளை கொண்டனவாகத் திகழுகின்றன. அந்நலவுகளாவன,

1. எமது சிறுபாவங்களுக்கான குற்றப்பரிகாரமாக அமையும்.
2. அல்லாஹ் எமக்களித்த ‘ஆரோக்கியம்’ என்ற அருட்கொடையின் பெறுமதியைப் புரிந்து கொள்ளலாம்.
3. எமது உடம்பில் காணப்படுகின்ற சில வகையான கிருமிகளை அழிப்பதற்கு அந்நோய்கள் உறுதுணையாக இருக்கின்றன. இக்கருத்தை மருத்துவர்களின் ஆய்வுகளில் இருந்து புரிந்து கொள்ளலாம்.

விதிபற்றிய மேலும் பல விளக்கங்கள் இருக்கின்றன. இமாமவர்கள் அடுத்து கூற இருக்கின்ற விடயம் விதியைப்பற்றியதாகவுள்ளதால் அதனைத் தெளிவுபடுத்தும் போது மேலதிக விளக்கங்களைக் காண்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *