Featured Posts
Home » இஸ்லாம் » பித்அத்தின் வகைகள் (பகுதி-2)

பித்அத்தின் வகைகள் (பகுதி-2)

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி)
பித்அத் ஹகீகிய்யா; பித்ஆ இழாபிய்யா
‘பித்அத்’ என்பது மார்க்கத்தில் புதிதாக நுழைவிக்கப்பட்ட அம்சமாகும். நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின்னர் மார்க்கத்தின் பெயரில் உருவான ஆதாரமற்ற அனைத்து வழிபாடுகளும், கொள்கைகளும் பித்அத்துகளாகும். பித்அத்துகள் அனைத்தும் வழிகேடுகள் என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடாகும். எனினும் பித்அத்தில் அதன் தன்மைக்கு ஏற்பவும், அதன் பாரதூரத்திற்கு ஏற்பவும் பல வகைகள் உள்ளன. எத்தனை வகைகள் இருந்தாலும் அத்தனையும் தவிர்க்கப்பட வேண்டியவை என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

மேலதிகத் தெளிவுக்காகவும், எமது சகோதரர்கள் ‘பித்அத் கூடாது!’ என்றதும், ‘பித்அத்தில் எத்தனை வகைகள் உள்ளன என்று உங்களுக்குத் தெரியுமா?’ ‘அந்த பித்அத்தைத் தெரியுமா-இந்த பித்அத்தைத் தெரியுமா’ என மாற்றுக் கருத்துடைய அறிஞர்கள் எமது சகோதரர்களை மடக்கிப் பிடிக்க முற்படுவதனாலும் பித்அத்தின் வகைகள் பற்றி இங்கே விபரிக்கப்படுகின்றது.

பித்அத்தின் வகைகள்:
பொதுவாக எல்லா பித்அத்துகளையும் இரண்டு வகைகளாகப் பிரிப்பார்கள்;
1. பித்அதுல் ஹகீகிய்யா (யதார்த்தமான பித்அத்)
2. பித்அதுல் இழாஃபிய்யா (இணைவதனால் ஏற்படும் பித்அத்)

‘பித்ஆ ஹகீகிய்யா’ எனும் முதல் வகையைப் பொறுத்த வரையில் அதற்குக் குர்ஆனிலோ, ஸுன்னாவிலோ எந்த விதமான ஆதாரமும் இருக்காது. ஏதேனும் குர்ஆன் வசனத்திலோ, ஹதீஸிலோ அது குறித்து மறைமுகமாகவோ, வெளிப்படையாகவோ பேசப்பட்டிருக்காது. நம்பத் தகுந்த அறிஞர்கள் எவரும் அதற்கான ஆதாரம் எதையும் கண்டிருக்கவும் மாட்டார்கள். எனவேதான் அது ‘பித்அத்’ என அழைக்கப்படுகின்றது. இதற்கு அல்லாஹ்விடம் நெருக்கத்தை நாடித் துறவறம் இருப்பதை உதாரணமாகக் கூறலாம். திருமணம் முடிக்காமல் பிரமச்சாரியாக இருப்பதை இபாதத்தாகக் கருதிய ஒரு துறவிகள் கூட்டம் ‘சூஃபிகள்’ என்ற பெயரில் இஸ்லாமிய உம்மத்தில் உருவானது. ‘துறவறம்’ என்பது பித்அத்தாகும். இவ்வாறே நன்மை நாடி மக்களை விட்டும் ஒதுங்கி மலைகளிலும், காடுகளிலும் தனித்து வாழும் போக்கையும் இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். இவ்வாறே அல்லாஹ் ஹலாலாக்கிய பல அம்சங்களை விடுவதுதான் நல்லது எனக் கருதி இபாதத்தாக எண்ணித் தனக்குத் தானே தடுத்துக் கொள்ளும் போக்கையும் இத்தகைய பித்அத்களுக்கு உதாரணமாகக் கூறலாம்.

‘பித்அதுல் இழாஃபிய்யா’ எனும் இரண்டாவது பித்அத்களுக்கு இரண்டு முகங்கள் உள்ளன. ஒரு புறத்தில் பார்க்கும் போது ஸுன்னாவாகவும், மறு புறம் பார்க்கும் போது பித்அத்தாகவும் இருக்கும். உதாரணமாக ‘திக்ர்’ செய்வதைக் குறிப்பிடலாம். திக்ர் செய்வதற்கு மார்க்கத்தில் ஆதாரம் உள்ளது. அதைச் சிலர் குறிப்பிட்ட நேரமொதுக்கிக் கூட்டாக ஒருவர் ஓத, மற்றவர் பின்தொடரும் அமைப்பில் சத்தமிட்டுச் செய்கின்றனர். திக்ர் எனப் பார்க்கும் போது ஸுன்னாவாகவும், அதைச் செய்யும் முறையைப் பார்க்கும் போது இது பித்அத்தாகவும் திகழ்கின்றது.

இவ்வாறே ‘துஆ’ என்பது மார்க்கத்தில் உள்ள முக்கிய அம்சம். அதை ஐவேளைத் தொழுகைக்குப் பின்னர் கூட்டாகக் கேட்பது புதிய விஷயம். துஆ எனப் பார்க்கும் போது ஸுன்னாவாகவும், செய்யும் முறையைப் பார்க்கும் போது அது பித்அத்தாகவும் மாறி விடுகின்றது.

இவ்வாறே நோன்பு மார்க்கத்தில் உள்ள ஓரம்சம். அதை ஷஅபான் 15 இல் பிடிக்க வேண்டும் என்ற நடைமுறை பித்அத்தானதாகும். நோன்பு என்ற வகையில் மார்க்கமாகவும், ‘ஷஅபான் 15 ஐச் சிறப்பித்தல்’ என்ற வகையில் அது பித்அத்தாகவும் மாறுகின்றது.

இவ்வாறே தொழுகை ஒரு வணக்கம். றஜப் மாதம் முதல் வெள்ளி இரவில் ‘ஸலாதுர்ரகாயிப்’ என்ற பெயரில் தொழ வேண்டும் என்பது பித்அத்தாகும்.

இத்தகைய பித்அத்கள்தான் மக்கள் மத்தியில் மலிந்து காணப்படுகின்றன. இதில் எதைக் கூடாது என்று கூறினாலும் மக்களும், மக்களைத் தவறாக வழிநடத்தும் மர்க்க அறிஞர்களும் ‘தொழுகை கூடாதா? நோன்பு கூடாதா? துஆ-திக்ர் கூடாதா?’ என எது மார்க்கத்தில் உள்ளதோ அது குறித்துக் கேள்வி எழுப்புகின்றனர். பித்அத் என அறிஞர்கள் குறிப்பிடுவது தொழுகையை அல்ல; தொழுகை மார்க்கத்தில் உள்ளது. அதை இன்ன நேரத்தில்-இன்ன அமைப்பில் தொழ வேண்டுமென இல்லாத சட்டத்தைப் போடும் போது அது பித்அத்தாகின்றது. மறுக்கப்படுவது தொழுகையல்ல; அதைச் செய்யும் முறை என்பதைப் புரிந்துகொள்கின்றார்களில்லை.

கூட்டு துஆக் கூடாது என்றதும் துஆ ஓதாத கூட்டம், துஆக் கேட்கக் கூடாது என்று கூறுகின்றனரே எனப் பேசுகின்றனர். மறுக்கப்படுவது கூட்டு துஆதான்; துஆ அல்ல. துஆ என்பது இபாதத். அதைத் தொழுகைக்குப் பின்னர் இமாம் ஓத மஃமூம்கள் ஆமீன் கூறும் அமைப்பில் செய்வது பித்அத். இந்தக் கூட்டு துஆ முறைதான் மறுக்கப்படுகின்றதே தவிர துஆ அல்ல என மக்கள் புரிந்துக் கொள்கின்றார்களில்லை. மார்க்க அறிஞர்களும் புரிந்துகொள்ள விடுகின்றார்களில்லை.

இந்தத் தவறான அணுகுமுறையின் அடிப்படையில்தான் ஸலவாத்து ஓதாதவர்கள், நபியைப் புகழாதவர்கள், துஆக் கேட்காதவர்கள், திக்ர் செய்யாதவர்கள், அவ்லியாக்களை அவமதிப்பவர்கள் என்றெல்லாம் அவதூறுகள் பரப்பப்படுகின்றன.

சிலர் பித்ஆ இழாஃபிய்யா மார்க்கத்தில் கூடும் என்ற அடிப்படையில் பேசுகின்றனர். இது தவறாகும். இதை அங்கீகரித்தால் இஸ்லாத்தில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களை அவரவர் விரும்பும் நேரத்தில் விரும்பும் விதத்தில் செய்து இஸ்லாத்தின் ரூபத்தையே அழித்து விட அனுமதிப்பதாக அமைந்து விடும்.

அடுத்து நபி(ஸல்) அவர்கள் ‘எல்லா பித்அத்களும் வழிகேடுகளே!’ என கூறிய தீர்ப்புக்கு அது முரணாகவும் அமைந்து விடும். நபி(ஸல்) அவர்கள் வழிகேடு எனக் கூறியதன் பின்னர் அதில் சிலதை அனுமதிக்கவோ, அழகானதாகக் காட்டவோ யாருக்கும் உரிமையில்லை என்பது அல்லாஹ்வின் வேதம் சொல்லும் இறுதித் தீர்மானமாகும்.

‘அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தில் முடிவு செய்து விட்டால் தமது காரியத்தில் சுய அபிப்பிராயம் கொள்வதற்கு முஃமினான எந்த ஆணுக் கும், முஃமினான எந்தப் பெண்ணுக்கும் உரிமை இல்லை. எவன் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்கின்றானோ நிச்சயமாக அவன் மிகத் தெளிவான வழிகேட்டில் சென்று விட்டான்.’ (33:36)

மேலே நாம் குறிப்பிட்டது போன்று பித்அத்தை ஹகீகிய்யா, இழாஃபிய்யா என இரண்டாகப் பிரிப்பார்கள். இவை இரண்டையும் பொதுவாக மற்றும் இரு வகைகளாகப் பிரிப்பார்கள்.

1. அல் பித்அதுல் ஃபிஅலிய்யா (செயல் ரீதியான நூதனம்)

2. அல் பித்அதுல் தர்கிய்யா (தவிர்த்தல் ரீதியான நூதனம்)

செய்வதால் ஏற்படும் பித்அத்:
முதல் பித்அத்தைப் பொறுத்தவரை இதுதான் அதிகமாகும். மார்க்கத்தில் இல்லாத செயல்களைச் செய்வதால் இது ஏற்படுகின்றது. அல்லது மார்க்கத்தில் உள்ள ஒரு இபாதத்தை மார்க்கம் சொல்லாத நேரத்தை நிர்ணயித்து, அதற்கென நாமாக ஒரு வடிவத்தை வைத்துச் செய்யும் போது இந்த பித்அத் ஏற்படுகின்றது.

விடுவதால் ஏற்படும் பித்அத்:
மார்க்கம் அங்கீகரித்த ஒன்றை அல்லது ஏவிய ஒன்றை அல்லது ஆகுமாக்கிய ஒன்றை மார்க்கம் என்ற எண்ணத்தில் இபாதத்தாகக் கருதி விடுவதை இது குறிக்கும்.

இஸ்லாத்தில் இல்லாத ஒன்றை இபாதத்தாகச் செய்யும் போது பித்அத்தாகுவது போன்றே மார்க்கத்தில் இருக்கின்ற ஒன்றை விடுவதுதான் இபாதத்-நன்மை தருமென எண்ணி விடும் போதும் பித்அத் உண்டாகின்றது.

இஸ்லாம் மாமிசம் உண்பதை ஹலாலாக்கியுள்ளது. ஒருவர் மாமிசம் தனது உடலுக்கு ஒத்துவராது என்பதற்காக விடுகின்றார் என்றால் அது பித்அத் ஆகாது.

அதே வேளை தனது உணவு முறைக்கு மாற்றமானது என்பதற்காக விடுகின்றார். அப்போதும் அது பித்அத்தாகாது. அல்லது தனது பொருளாதார நிலைக்காகத் தவிர்த்து விடுகின்றார். இதுவும் பிரச்சினையில்லை. எனினும் மாமிசம் உண்பது கூடாது. அதைத் தவிர்ப்பதன் மூலம் அல்லாஹ்விடத்தில் நெருக்கத்தைப் பெறலாம் என்ற எண்ணத்தில் விடுவார் என்றால் அது பித்அத்தாக மாறுகின்றது. விடுவதால் ஏற்படுகின்ற பித்அத் என இது கருதப்படுகின்றது.

ஸலாம் கூறுவது இஸ்லாத்திலுள்ளது. இன்னின்ன நபர்களுக்கு ஸலாம் சொல்லக் கூடாது என மார்க்கத்தில் உள்ள ஒன்றை நாமாக விடுவதுதான் நல்லது என்று நம்பி விடும் போது பித்அத்தாகின்றது.

கட்டப்பட்ட கப்றுகள் உள்ள பள்ளியில் தொழ முடியாது. ஆனால் எந்தத் தடையும் இல்லாத நிலையில் பள்ளி இருக்கும் போது இந்தப் பள்ளியில் தொழக் கூடாது என்று இஸ்லாத்தில் இல்லாத கொள்கையை உருவாக்கிப் பள்ளிகளைப் புறக்கணித்தால் அது இந்த வகை பித்அத்தில் சேரும்.

ஒருவர் ஜும்ஆத் தொழுவது கடமை. அதை எந்தப் பள்ளியில் வேண்டுமானாலும் தொழலாம். நாம் எமது வசதிக்கும், தேவைக்கும் ஏற்ப ஒரு பள்ளிக்குச் செல்கின்றோம். இதில் ஏனைய பள்ளிகள் புறக்கணிக்கப்படுவதில்லை. நான் கண்டியிலிருந்தால் அங்கே ஒரு பள்ளியிலும், கொழும்பிலிருந்தால் அங்கே ஒரு பள்ளியிலும் தொழுகின்றேன். இது எனது வசதிக்காக நான் செய்த முடிவு.

எந்த வித பித்அத்தோ, ஷிர்க்கோ இல்லாத நிலையில் இந்தப் பள்ளியில் தொழுவது கூடாது! ஜும்ஆவுக்குச் செல்வது கூடாது என்ற முடிவுடன் இன்னொரு இடத்தை விரும்பும் போது இந்த பித்அத் உண்டாகின்றது.

பொதுவாக, தவ்ஹீத் சகோதரர்கள் ‘செய்வதால் ஏற்படும் பித்அத்’களில் மட்டும் அக்கறை காட்டுகின்றனர். விடுவதால் உண்டாகும் பித்அத்கள் பற்றி அலட்சியமாக இருப்பதால் அவர்களும் பித்அத்களில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

திருமணம் என்பது மார்க்கத்தில் ஏவப்பட்டதாகும். ஒருவன் தனக்கு வசதி இல்லை என்பதற்காகவோ, தனக்கு அதில் நாட்டம் இல்லை என்பதற்காகவோ திருமணம் செய்யாமல் இருந்தால் குற்றமில்லை. ஆனால் திருமணம் செய்யாமல் இருந்தால் அதிக அமல் செய்து அல்லாஹ்வின் அன்பைப் பெறலாம் என எண்ணித் திருமணத்தை விட்டால், விடுவதால் ஏற்படும் பித்அத்தில் அவர் வீழ்ந்து விடுவார்.

இது குறித்து இமாம் ஷாதிபி(றஹ்) அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்;

‘விடுவதுதான் மார்க்கம் என்ற நிலைப்பாட்டில் ஒரு செயலை விட்டால் அது மார்க்கத்தில் பித்அத்தாகும். விடப்பட்ட அந்தச் செயல் மார்க்கத்தில் ஏவப்பட்டதாகவோ, அங்கீகரிக்கப்பட்டதாகவோ இருக்கலாம். விடப்படும் அந்தச் செயல் இபாதத்தாகவோ, ஆதத்தாகவோ, முஆமலாத்தாகவோ, சொல்லாகவோ, செயலாகவோ, கொள்கையாகவோ இருக்கலாம். அதை விடுவதன் மூலம் அல்லாஹ்வை வணங்குவது நோக்கமாக இருந்தால் அவர் பித்அத்காரராவார்!’ (பார்க்க: அல் இஹ்திலாம் 1ஃ58)

நபி (ஸல்) அவர்களது மனைவியர் இல்லத்திற்கு மூவர் வந்து நபி (ஸல்) அவர்களது இபாதத் பற்றி விசாரித்தனர். பின்னர், ‘நபி(ஸல்) அவர்களுக்கும், எமக்கும் எவ்வகை வித்தியாசங்கள் உள்ளன? அவரது முன்-பின் பாவங்களை அல்லாஹ் மன்னித்து விட்டான் (நாம் அவரை விட அதிகம் அமல் செய்ய வேண்டும்)’ எனப் பேசிக் கொண்டனர். அவர்களில் ஒருவர், ‘நான் எந்நாளும் இரவில் தொழுவேன்!’ எனக் கூறினார். மற்றவர், ‘நான் காலம் பூராக நோன்பு நோற்பேன்!’ என்றார். அடுத்தவர், ‘நான் பெண்களை விட்டும் ஒதுங்கி இருப்பேன்! திருமணம் முடிக்க மாட்டேன்!’ என்றார்.

இது அறிந்த நபி (ஸல்) அவர்கள், ‘நான் உங்கள் அனைவரை விடவும் அல்லாஹ்வை அதிகம் அஞ்சக் கூடியவன். நானே நோன்பு நோற்கவும் செய்கின்றேன்; நோன்பு இல்லாமலும் இருக்கின்றேன். இரவில் வணங்கவும் செய்கின்றேன்; உறங்கவும் செய்கின்றேன். நான் பெண்களைத் திருமணமும் செய்துள்ளேன். யார் எனது வழிமுறையை விட்டு விடுகின்றாரோ அவர் என்னைச் சேர்ந்தவரில்லை!’ எனக் கண்டித்தார்கள்.
(புகாரி, 5063, 1020, 1401)

இந்த வகையில் இஸ்லாம் ஏவிய அல்லது இஸ்லாம் அங்கீகரித்த ஒன்றை விடுவதுதான் அல்லாஹ்வின் அன்பைப் பெற்றுத் தரும் என்ற அடிப்படையில் ஒரு செயலை விடுவதும் பித்அத்தாகும். இந்த பித்அத்தில் சில பித்அத் எதிர்ப்பாளர்களும் வீழ்ந்துள்ளனர். இவ்வாறு தாமாக உருவாக்கிய ஒரு பித்அத்துக்காகவே அமைப்புகளையும், ஜமாஅத் களையும் துண்டாடியவர்களும் இருக்கின்றார்கள். பித்அத்தை எதிர்ப்பவர்களும் எல்லா வகையான பித்அத்களை விட்டும் விலகி வாழ அல்லாஹ் அருள் புரிவானாக!

3 comments

  1. My native place there is one mosque on juma prayer in masjid immam during “qutuba” allmost” bayan was not related quran and sunna always bayan some aaoliyas, and others topics speach. Shall I avoid go to masjd for (juma prayer) or?….please explain.

    jazakallah.
    faiz

  2. Abdul Salam sarif

    aslamu alikum

    (இந்த விடயம் விளாங்கவில்லை)

    எந்த வித பித்அத்தோ, ஷிர்க்கோ இல்லாத நிலையில் இந்தப் பள்ளியில் தொழுவது கூடாது! ஜும்ஆவுக்குச் செல்வது கூடாது என்ற முடிவுடன் இன்னொரு இடத்தை விரும்பும் போது இந்த பித்அத் உண்டாகின்றது.

    பொதுவாக, தவ்ஹீத் சகோதரர்கள் ‘செய்வதால் ஏற்படும் பித்அத்’களில் மட்டும் அக்கறை காட்டுகின்றனர். விடுவதால் உண்டாகும் பித்அத்கள் பற்றி அலட்சியமாக இருப்பதால் அவர்களும் பித்அத்களில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

  3. மவ்லுாத் ஓதுவது ஷிா்க்கா?பித்அத்? மவ்லுாத் ஓதுயும் பள்ளியில் தொழுலாமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *