Featured Posts
Home » இஸ்லாம் » அல்ஹதீஸ் » போலி ஹதீஸ்கள் » சத்தியத்தை தேடி புறப்பட்ட உமர் (ரழி) – புனையப்பட்ட புதிய கதை

சத்தியத்தை தேடி புறப்பட்ட உமர் (ரழி) – புனையப்பட்ட புதிய கதை

-எம்.எஸ்.எம். இம்தியாஸ் ஸலபி
உமர் வாளை ஏந்தியவராக விரைவாக புறப்பட்டுக் கொண்டிருந்தார். வழியில் பனூ ஸஹ்ரா கோத்திரத்தைச் சார்ந்த ஒரு மனிதர் உமரைக் கண்டு, உமரே! எங்கே செல்கிறீர் எனக் கேட்டார். முஹம்மதை கொல்லப் போகிறேன் என உமர் கூறினார். பனூ ஹாஷிம் மற்றும் பனூ ஸஹ்ரா கோத்திரங்கள் முஹம்மதின் விடயத்தில் அமைதியாக இருக்க நீ மட்டும் கொலை செய்ய புறப்படுவது ஏன்? என அந்த மனிதர் வினவினார்.

நீர் உமது மார்க்கத்தை விட்டு விட்டு முஹம்மது கொண்டு வந்த மார்க்கத்திற்கு மாறிவிட்டீரா? என்று உமர் பதில் கேள்வி கேட்டார்.

உமரே! உமக்கு ஆச்சரியமான ஒரு செய்தியை சொல்லட்டுமா? உமது தங்கையும் மைத்துனரும் நீ சார்ந்திருக்கம் மார்க்கத்தை விட்டு விட்டு முஹம்மதின் புதிய மார்க்கத்தை ஏற்றுள்ளனரே என்று கூறினார்.

உமர் கடும் கோபத்துடன் உறுவிய வாளுடன் தங்கையின் வீட்டை நோக்கி விரைந்தார். அங்கே கப்பாப் (ரழி) இஸ்லாத்தை போதித்துக் கொண்டிருந்தார். உமரின் வருகையை உணர்ந்த கப்பாப் (ரழி) உடனே வீட்டினுள்ளே ஒழிந்து கொண்டார்.

தன்னுடைய தங்கையும் மைத்துனரும் ஓதிக் கொண்டிருந்த சூரா தாஹாவின் குர்ஆன் வசனங்களை செவியுற்ற உமர், உங்களிடமிருந்து நான் செவியுற்ற சப்தமென்ன? நீங்கள் இருவரும் மதம் மாறிவிட்டீர்களா? என கேட்டார்.

அப்போது அவருடைய மைத்துனர் உமரே! உமது மார்க்கத்தில் உண்மையில்லையென்றால் என்ன செய்வீர் என கேட்டபோது, கோபப்பட்ட உமர் வேகமாக தமது மைத்துனர் மீது பாய்ந்து கடுமையாக தாக்கத் துவங்கினார். கணவன் தாக்கப்படுவதை கண்ட தங்கை, உமரை விட்டும் தனது கணவனை காப்பாற்ற போராடினார். ஆனால் உமரோ தமது தங்கையை கையினால் வேகமாக தள்ளிவிட, முட்டி மோதி கீழே விழுந்த தங்கையின் முகத்திலிருந்து இரத்தம் வழிந்தோடியது.

உமரே! உமது மார்க்கத்தில் உண்மையில்லை எனில் என்ன செய்வீர்? நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படுவதற்கு தகுதியானவன் யாருமில்லை. நிச்சயமாக முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதரும் அடியாருமாவார் என சாட்சி கூறுகிறேன் என்று தங்கை உரத்த குரலில கோபத்தோடு அதேவேளை தைரியத்துடன் முழக்கமிட்டாள்.

தங்கையின் உறுமிக்க வார்த்தைக்கு முன் உமர் நிலைகுலைந்து போனார். நீங்கள் வைத்துக் கொண்டிருந்த அந்த வேத நூலை தாருங்கள். அதனை நான் படித்துப் பார்க்க வேண்டும் என்றார் உமர். இல்லை! நிச்சயமாக நீ அசுத்தமாக இருக்கின்றீர். தூய்மையானவர்களைத் தவிர யாரும் அதனை தொடக்கூடாது. போய் குளித்துவிட்டு வுழூ செய்து வாரும் என தங்கை கட்டளையிட்டாள்.

உமர் தன்னை தூய்மைப்படுத்திக் கொண்டு வந்து வேதத்தை கையில் ஏந்தி சூரா தாஹாவின் வசனங்களை ஓதலானார். ”நிச்சயமாக நானே இறைவன்! என்னைத் தவிர வேறு கடவுள் இல்லை. எனவே எனக்கே கட்டுப்பட்டு என்னை நினைவுபடுத்துவதற்கு தொழுகையை நிலைநாட்டும்” என்கின்ற வசனம் வரை ஓதினார்.

மாமறையின் வசனங்களால் உமரின் மனிதில் மாற்றங்கள் ஏற்பட்டன. முஹம்மத் எங்கே இருக்கிறார். அது பற்றி எனக்கு கூறுங்கள். அவரைக் காண வேண்டும் என உமர் ஆவலாய் கேட்டார். இத்தனை நிகழ்வுகளையும் வீட்டினுள் ஒரு மூளையில் மறைந்து இருந்து அவதானித்துக் கொண்டிருந்த கப்பாப் (ரழி) வெளியில் வந்து, உமரே! நன்மாராயம் பெற்றுக் கொள்ளும். வியாழன் இரவு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்விடம் பிரார்த்தித்தபோது யா அல்லாஹ்! உமர் இப்னு கத்தாப் அல்லது அம்ர் இப்னு ஹிஷாம் ஆகியோர் மூலம் இஸ்லாத்தை கண்ணியப்படுத்துவாயாக என பிரார்த்தித்தார்கள். தற்போது முஹம்மது நபி (ஸல்) இன்னாருடைய வீட்டில் இருக்கிறார்கள் என கப்பாப் (ரழி) வழியை காண்பித்துக் கொடுத்தார்.

உமர் அந்த வீட்டை தேடி கிளம்பினார். வீட்டின் கதவருகில் ஹம்ஸா (ரழி) தல்ஹா (ரழி) மற்றும் சில ஸஹாபாக்களும் இருந்தனர். ஆம்! இதோ உமர் வருகிறார். உமர் மூலமாக அல்லாஹ் நலவை நாடியிருந்தால் இஸ்லாத்தை ஏற்று முஹம்மது நபி (ஸல்) அவர்களை பின்பற்றுவார். அவர் விடயத்தில் அல்லாஹ் வேறு விதமாக நாடியிருந்தால் அவரை கொன்று விடுவதே எங்கள் கடமை என ஹம்ஸா (ரழி) கூறினார்.

நபி (ஸல்) அவர்கள் வீட்டிலிருந்து வெளியில் வந்து உமரை அணுகி உமரே! வலீத் இப்னு மகீராவுக்கு அல்லாஹ்வினால் விதிக்கப்பட்ட இழிவு மற்றும் தணடனையிலிருந்து நீ விலகி விடக் கூடாதா எனக் கேட்டார்கள். பின்பு, யா அல்லாஹ்! இதோ உமர் இப்னு கத்தாப்! யாஅல்லாஹ்! இந்த மார்க்கத்தை உமர் இப்னு கத்தாப் மூலம் கண்ணியப்படுத்துவாயாக!! எனப் பிரார்த்தித்தார்கள்.

நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வுடைய தூதர் என்று சாட்சி பகர்கிறேன் என்று கலிமாவை மொழிந்து இஸ்லாத்தில் இணைந்த உமர் (ரழி), அடுத்த கனமே, அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் இஸ்லாத்தை பகிரங்கமாக பிரசாரம் பண்ண புறப்படுங்கள் வேண்டுகோள் விடுத்தார்.

உமர் (ரழி) அவர்கள் இஸ்லாத்தில் இணைந்த விதம் இப்படித்தான் என்ற ஒரு கதை பரவலாக கூறப்பட்டு வருவதை பலராலும் கேட்டிருக்கிறார்கள். ஆனால் ஹதீஸ் கலை இமாம்கள் இந்த செய்தி தவறானது, ஆதாரபூர்மற்ற செய்தி என விமர்சனம் செய்கிறார்கள். இது தவிர உமர் (ரழி) இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட வேறு செய்திகளை கொண்டு வந்து அவை ஆதாரபூர்மான சரித்திரக் குறிப்புகள் என்பதை பதிவு செய்து வைத்திருக்கிறார்கள்.
இந்த செய்தி ஆதாரமற்றது நிராகரிக்கப்படக் கூடியது என்பதற்கு ஹதீஸ்கலை இமாம்கள் பின்வரும் வழிகளில் விமர்சிக்கிறார்கள்.

முதலாவது வழி:
-இமாம் தபரானி அவர்கள் அல் மஃஜமுல் கபீர் (2÷98ல்) யசீத் இப்னு ரபீஆ அர் ரஹ்பி என்கிற அறிவிப்பாளர் மூலம் பதிவு செய்கிறார்கள். இவரைப் பற்றி இமாம் புகாரி (ரஹ்) கூறும்போது ”இவரது செய்திகள் நிராகரிக்கப்படக் கூடியவை” என்கிறார்கள். (நூல் அத்தரீகுஸ் ஸகீர் 2÷146)

– இமாம் தாரகுத்னி (ரஹ்) இவர் பலவீனமானவர் என்கிறார் (அல்லுஹாபாஉ லித்தாரகுத்னி 398)

– இமாம் அபூ ஹாதம் (ரஹ்), இவர் பலவீனமாவர். ஹதீஸ் துறையில் நிராகரிக்கப்பட்டவர்

– இமாம் நஸாஈ (ரஹ்), இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி (ரஹ்), இவர் ஹதீஸ் துறையில் மறுக்கப்பட்டவர் என்கிறார். (அல்லுஹபாஉ 245, அல்லிஸான் 6÷286)

இரண்டாவது வழி:
– இச்செய்தியை இமாம் பைஹகி (ரஹ்) அவர்கள், தலாஇலுன் நபவிய்யா (2÷216)லம் இமாம் அபூ நுஹைம் (ரஹ்) ஹி;ல்யா (1÷41)லும் இமாம் பஸ்ஸார் (ரஹ்) ஸவாஹிதுல் பஸ்ஸார் (3÷169)லும் பதிவு செய்துள்ளார்கள்.

– இதில் இஸ்ஹாக் இப்னு இப்றாகீம் அல் ஹுஸைன் என்கிற மற்றொரு அறிவிப்பாளர் என்பவர் இடம் பெறுகிறார். இவர் பலவீனமானவர் என இமாம் நஸாயீ (ரஹ்) குறிப்பிடுகின்றார்.

மூன்றாவது வழி
– இச்செய்தி இஸ்ஹாக் இப்னு அப்துல்லாஹ் இப்னு அபீ பர்வா மூலம் இடம்பெறுகிறது. இவர் எந்த மதிப்புமில்லாதவர் என இமாம் யஹ்பா இப்னு முயீன் (ரஹ்) குறிப்பிடுகிறார்.

– இமாம் தாரகுத்னி அல்லுஹபா (பக்கம் 143)லும் இமாம் ஸஹ்பி (ரஹ்) அல்மீஸான் (1÷193)லம் அல்காஸிம் இப்னு உஸ்மான் என்ற அறிவிப்பாளர் மூலம் இச்செய்தியை பதிவு செய்துள்ளார்கள்.

– இவ்வறிப்பாளர் பற்றி இமாம் புகாரி (ரஹ்) கூறும்போது, இவர் அறிவிக்கம் ஹதீஸ்களை மற்ற எவரும் அறிவித்ததில்லை என்று குறிப்பிடுகிறார்கள்.

– இமாம் தாரகத்னி (ரஹ்) கூறும்போது பலமான அறிவிப்பாளரல்ல என்று குறிப்பிடுகின்றார்கள்.

– இமாம் அஸ்ஸஹ்பி (ரஹ்) அவர்கள் இச்சம்பவத்தை அல் மீஸான் (3÷295) ல் மறுக்கிறார்கள்.

மேலதிகமான விபரங்களை அறியவும் பலவீனமான தன்மையை விளங்கவும் ”மஹ்லுல் ஸவாப் பீ பலாஹிலி அமீருல் முஃமினீன் உமர் இப்னு கத்தாப் (ரழி) எனும் நூலை (1÷48-162) பார்வையிடவும்.

தழுவல்: உம்மதீ அரபு இதழ் (ஹஃபான் ஹி. 1426, செப்டம்பர் 2005)
இது தவிர உமர் (ரலி) இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஆதாரப்பூர்வமான வேறு செய்திகள் உண்டு.

7 comments

  1. Mohammed Eliyas

    اسلام عليكم
    أرجو أنْ تَََََكْتُبَ الأسماءَ با لغة العربية
    جزاك الله خيرًا

  2. good article with evidance , jazakallahu khairan

  3. Hajrath umar islam thlviya vitham theriviungal

  4. Assalamu alaikkum, i want zakath calculator and how culculate ,juwelleries, bank cash also. i have seen lot of sites here but i like to know in tamil please help me.

  5. salam,

    Then their is no explanation from your side How ummar(Raa) revert to islam?

  6. you still have not explained how umar (RA) accepted islam

  7. Hajrath umar islam thaluviya vitham theriviungal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *