Featured Posts
Home » இஸ்லாம் » அகீதா » அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை (தொடர்-30)

அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை (தொடர்-30)

– M.T.M.ஹிஷாம் மதனீ

وقوله : (ولولا إذ دخلت جنتك قلت ما شاء الله لا قوة إلا بالله) (ولوشاء الله ما اقتتلوا ولكن الله يفعل ما يريد) (أحلت لكم بهيمة الأنعام إلا ما يتلى عليكم غير محلي الصيد وأنتم حرم إن الله يحكم ما يريد)

விளக்கம்:
அல்லாஹ்வின் நாட்டத்தை உறுதி செய்யும் சான்றுகள்

அல்லாஹ் கூறுகின்றான்: ‘ நீ உன் தோட்டத்தில் நுழைந்த போது, ‘மாஷா அல்லாஹு லாகுவ்வத இல்லா பில்லாஹ்’ (அல்லாஹ் நாடியதே நடக்கும். சக்தி அனைத்தும் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருக்கும் இல்லை) என்று கூறியிருக்கக் கூடாதா?’ (அல்கஹ்ப்: 39)

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்: ‘அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் தமக்குள் சண்;டை செய்திருக்கமாட்டார்கள் என்றும், அல்லாஹ்தான் நாடுவதைச் செய்வான்.’ (அல்பகறா: 253)

இன்னும் அல்லாஹ் கூறுகின்றான்: ‘(பின்னர்) உங்களுக்கு ஓதிக்காட்டப்படுபவற்றையும், நீங்கள் இஹ்ராம் அணிந்த நிலையில், வேட்டையாடுபவற்றையும் தவிர கால்நடைகள் உங்களுக்கு (உண்ண) அனுமதிக்கப்பட்டுள்ளன. நிச்சயமாக அல்லாஹ் விரும்புவதைச் சட்டமாக்குகின்றான்.’ (அல்மாயிதா: 1)

மேற்கூறப்பட்ட வசனங்களில் இருந்து நாடுதல், சக்தி பெற்றிருத்தல், ஞானமிக்கவனாகத் திகழ்தல் ஆகியன அல்லாஹ்வின் பண்புகளில் உள்ளன என்பதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள்.

(وقوله : (فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام ومن يرد أن يضله يجعل صدره ضيقا حرجا كأنما يصعد في النار

விளக்கம்:
அல்லாஹ்வுக்கு நாடுதல் என்ற பண்பு உண்டு என்பதை உறுதி செய்யும் மற்றொரு சான்று

அல்லாஹ் கூறுகின்றான்: ‘யாரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்த விரும்புகின்றானோ, அவரது உள்ளத்தை அவன் இஸ்லாத்தின் பால் விரிவாக்குவான். அவன் யாரை வழிகேட்டில் விட்டுவிட நாடுகின்றானோ, அவனது உள்ளத்தை வானத்திற்கு ஏறிச் செல்பவன் (உள்ளம்) போன்று இறுக்கமானதாகவும் கஷ்டமானதாகவும் ஆக்கிவிடுகின்றான்.’ (அல் அன்ஆம்: 125)

இவ்வசனத்தில் அல்லாஹுத்தஆலாவுக்கு இருக்கின்ற நாடுதல் என்ற பண்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்பண்பானது நேர்வழி காட்டல் மற்றும் வழி சறுகச் செய்தல் ஆகியவற்றில் பூரணமாகக் காணப்படும். அதாவது, தனது பூரணமான ஞானத்தைக் கொண்டு நேர்வழிகாட்டல் மற்றும் வழிசறுகச் செய்தல் ஆகிய விடயங்களை விதியாக நாடுகிறான் என்பதுவாகும்.

இறை நாட்டத்தின் வகைகள்

பொதுவாக இறைநாட்டத்தை இரு வகைகளாகப் பிரிக்கலாம்.
1. அமைப்பு மற்றும் விதி சார் நாட்டம்
2. மார்க்கம் மற்றும் சட்டம் சார் நாட்டம்

அமைப்பு மற்றும் விதி சார் நாட்டம்

இவ்வகை நாட்டத்திற்கு உதாரணங்களாகப் பின்வரும் திருக்குர்ஆன் வசனங்களைக் குறிப்பிடலாம்.

அல்லாஹ் கூறுகின்றான்: ‘ஒரு கிராமத்தை நாம் அழிக்க நாடினால் அதன் சுகபோகிகளை (கட்டுப்படுமாறு) ஏவுவோம். அதில் அவர்கள் பாவம் செய்வர்.’ (பனீஇஸ்ராஈல்: 16)

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்: ‘அல்லாஹ் ஒரு சமூகத்துக்குத் தீமையை நாடிவிட்டால் அதனை யாராலும் தடுக்கமுடியாது.’ (அர்ரஃத்: 11)

இதே வகையை அடிப்படையாகக் கொண்டே நாம் முன்பு விளக்கத்திற்காக எடுத்துக் கொண்ட அல்அன்ஆம் அத்தியாயத்தின் 125-ஆம் வசனத்தின் ‘அவன் யாரை வழிகேட்டில் விட்டுவிட நாடுகிறானோ ………….’ என்று ஆரம்பிக்கும் தொடர் அமைந்துள்ளது.

மார்க்கம் மற்றும் சட்டம் சார் நாட்டம்

இவ்வகை நாட்டம் குறித்து பல வசனங்கள் அல்குர்ஆனில் இடம்பெற்றுள்ளன. அவற்றில் சில பின்வருமாறு,

அல்லாஹ் கூறுகின்றான்: ‘அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பு வழங்க விரும்புகின்றான்.’ (அந்நிஸா: 27)

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்: ‘அல்லாஹ் உங்களுக்கு எவ்வித சிரமத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை. எனினும், நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு உங்களைத் தூய்மைப்படுத்தவும் தனது அருட்கொடையை உங்களுக்கு முழுமைப்படுத்தவுமே அவன் விரும்புகின்றான்.’ (அல்மாயிதா: 6)

இன்னும் அல்லாஹ் கூறுகின்றான்: ‘அஹ்லுல் பைத் (எனும் நபியின் குடும்பத்)தினராகிய உங்களை விட்டும் அசுத்தத்தை அகற்றி உங்களை முற்றிலும் பரிசுத்தப்படுத்திடவே அல்லாஹ் விரும்புகின்றான்.’ (அல் அஹ்ஸாப்: 33)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *