Featured Posts
Home » இஸ்லாம் » அகீதா » அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை (தொடர்-31)

அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை (தொடர்-31)

– M.T.M.ஹிஷாம் மதனீ
இருவகை நாட்டங்களுக்கிடையிலான வேறுபாடுகள்

இருவகை நாட்டங்களுக்கிடையிலான வேறுபாடுகளை ஒப்பீட்டு ரீதியில் புரிந்து கொள்வதற்காக அவற்றைப் பின்வருமாறு பட்டியல் படுத்தலாம்.

அமைப்பு மற்றும் தீர்வு சார் நாட்டம்

  • இவ்வகை நாட்டத்தின் கீழ் இடம்பெறக்கூடியவற்றை அல்லாஹ் பொருந்திக் கொள்ளவோ, பொருந்திக் கொள்ளாமல் இருக்கவோ முடியும். உதாரணமாக அல்லாஹ்வுக்கு மாறுசெய்வதை அவன் அமைப்பு ரீதியில் மத்திரம் நாடுவதைக் குறிப்பிடலாம்.
  • இவ்வகை நாட்டம் பிரிதொரு விடயத்தை மையப்படுத்தி நாடப்படகின்றது. உதாரணமாக ஷைத்தான் மற்றும் ஏனைய தீங்கிழைக்கக் கூடியவற்றைப் படைத்தது அவற்றின் மூலம் மக்களுக்கு மத்தியில் முயற்சித்தல், பாவமன்னிப்புக் கோரல் போன்ற அவன் விரும்புகின்றவற்றை நிலைநாட்ட நாடுவதைக் குறிப்பிடலாம்.
  • இவ்வகை நாட்டம் அவசியம் இடம் பெற்றாக வேண்டும்.

மார்க்கம் மற்றும் சட்டம் சார் நாட்டம்

  • இவ்வகை நாட்டத்தின் கீழ் இடம்பெறக்கூடியவற்றை அல்லாஹ் அவசியம் பொருந்திக் கொண்டிருப்பான். உதாரணமாக அல்லாஹ்வுக்கு மாறு செய்வதை அவன் சட்டரீதியில் பொருந்திக் கொள்ளாததைக் குறிப்பிடலாம்.
  • இவ்வகை நாட்டம் தன்னை மையப்படுத்தி நாடப்படுவதாகும். உதாரணமாக அல்லாஹ் தன்னை வழிப்படுவதை அமைப்பு மற்றும் சட்ட ரீதியில் பொருந்திக் கொண்டு நாடுவதைக் குறிப்பிடலாம்.
  • இவ்வகை நாட்டம் கட்டாயம் இடம்பெறவேண்டிய அவசியம் கிடையாது. சில சமயம் இடம்பெறலாம் இடம்பெறாமலும் இருக்கலாம்.

குறிப்பு:

  • இவ்விரு நாட்டங்களும் அல்லாஹ்வுக்கு கட்டுப்படும் மனத்தூய்மை மிக்க ஒருவரில் சங்கமிக்கும், அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் பாவி விடயத்தில் தனித்து நிற்கும்.
  • எவர்கள் இவ்விரு நாட்டங்களையும் உறுதிப்படுத்தாது அவற்றுக்கிடையில் வேற்றுமையை ஏற்படுத்துகின்றார்களோ நிச்சயமாக அவர்கள் வழிதவறிச் செல்வார்கள். இந்நிலையே இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய பிரிவினர்களான அல்ஜபரிய்யா, மற்றும் அல்கதரிய்யா ஆகியோருக்கு ஏற்பட்டது.

மேலும், இவ்விரு நாட்டங்கள் விடயத்தில் அஹ்லுஸ் ஸுன்னாத், அல்ஜபரிய்யா, அல்கதரிய்யா ஆகியோர் வேறுபட்ட கருத்தைக் கொண்டிருக்கின்றனர். அந்தவிதத்தில் அல்ஜபரிய்யாகள், அமைப்பு மற்றும் தீர்வு சார் நாட்டத்தை மாத்திரம் உறுதிப்படுத்தக் கூடியவர்களாகவும், அல்கதரிய்யாக்கள், மார்க்கம் மற்றும் சட்டம் சார் நாட்டத்தை உறுதிப்படுத்தக் கூடியவர்களாகவும், அஹ்லுஸ் ஸுன்னத்தைச் சேர்ந்தோர், இவ்விரு நாட்டங்களையும் உறுதிப்படுத்தி அவற்றுக் கிடையலான வேறுபாட்டை ஏற்றுக் கொள்ளக் கூடியவர்களாகவும் இருக்கின்றனர்.

 

وقوله : {وأحسنوا إن الله يحب المحسنين} البقرة :195 {وأقسطوا إن الله يحب المقسطين} الحجرات: 9 {فما استقاموا لكم فاستقيموا لهم إن الله يحب المتقين} التوبة: 7 {إن الله يحب التوابين ويحب المتطهرين} البقرة: 222 وقوله: {قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله} آل عمران: 31 وقوله: {فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه} المائدة: 54 وقوله: {إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص} الصف :4 وقوله: {وهو الغفور الودود} البروج: 14

விளக்கம்:
அல்லாஹ்வின் நேசம் மற்றும் அவனது இறை நேசர்கள் மீதான அன்பு ஆகியவற்றை தனது அந்தஸ்திற்குத் தக்கவிதத்தில் வெளிப்படுத்துகின்றான் என்பதை உறுதி செய்யும் சான்றுகள்.
மேற்குறிப்பிடப்பட்ட வசனங்களின் மொழி பெயர்ப்புக்களாவன:

  • நன்மையும் செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோரை நேசிக்கின்றான். (அல்பகரா: 195)
  • மேலும், நீதியாக நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துவோரை நேசிக்கின்றான். (அல்ஹுஜுராத்: 9)
  • அவர்கள் உங்களுடன் நேர்மையாக நடந்து கொள்ளும் வரை நீங்களும் அவர்களுடன் நேர்மையாகவே நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியாளர்களை நேசிக்கின்றான். (அத்தவ்பா: 7)
  • நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்புத் தேடுபவர்களை நேசிக்கின்றான். மேலும், தூய்மையாளர்களையும் நேசிக்கின்றான். (அல்பகரா: 222)
  • நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான். (ஆலஇம்றான்: 31)
  • வேறொரு சமுகத்தை (அதற்குப் பதிலாக) அல்லாஹ் கொண்டுவருவான். அவன் அவர்களை நேசிப்பான் அவர்களும் அவனை நேசிப்பார்கள். (அல்மாயிதா: 54)
  • ஈயத்தால் வார்க்கப்பட்ட உறுதியான ஒரு கட்டிடம் போன்று, ஒரே அணியாக நின்று தனது பாதையில் போரிடுவோரை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கின்றான். (அஸ்ஸப்: 4)
  • அவன் மிக்க மன்னிப்பவன், மிக்க நேசிப்பவன். (அல்புரூஜ்: 14)

மேற்குறிப்பிடப்பட்ட வசனங்களில் அல்லாஹுத்தஆலாவின் அன்பு, நேசம் ஆகியன உறுதி செய்யப்பட்டுள்ளன. மேலும், அவன் சில நபர்களையும் மற்றும் சில செயற்பாடுகளையும் விரும்புகின்றான் என்பதையும் புரிந்து கொள்ளலாம். இன்னும், அவனது ஞானத்திற்குத் தக்க வித்தில் சிலவற்றை மாத்திரம் நேசிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் அல்லாஹுத்தஆலா நன்மை செய்வோர், நீதி செலுத்துவோர், பயபக்தியுடையோர், நபியவர்களைப் பின்பற்றுவோர், அவனது பாதையில் போரிடுவோர், மன்னிப்புத் தேடுவோர், தூய்மையானோர் போன்றோரை நேசிப்பதாக மேற்குறிப்பிடப்பட்ட வசனங்களில் இருந்து புரிந்து கொள்ளலாம்.

மேலும், ஏலவே குறிப்பிடப்பட்ட வசனங்களில் இருந்து மற்றுமொரு விடயத்தைப் புரிந்து கொள்ளலாம். அதாவது, நேசமானது இறைவன் மற்றும் அடியான் ஆகிய இரு சாராலும் ஒருவருக்கொருவர் இடம்பெறலாம் என்பதாகும். இதனை நாம் முன்பு குறிப்பிட்ட அல்மாயிதா அத்தியாயத்தின் 54 ஆவது வசனம் தெளிவுபடுத்துகின்றது. மேலும், இப்படியான இரு சாராரினதும் நேசம் ஜஹ்மிய்யாக்கள் மற்றும் முஃதஸிலாக்கள் ஆகியோருக்கு மறுப்பாகவும் அமைகின்றது. ஏனெனில், அவர்கள் இப்படியான இரு சாராரினதும் நேசத்தையும் மறுக்கக் கூடியவர்களாக உள்ளார்கள். இதனை அடிப்படையாகக் கொண்டே அவர்கள் பின்வருமாறு கருத்துத் தெரிவிக்கின்றார்கள். “அல்லாஹ் ஆகிறவன் நேசிக்காதவனாகவும் நேசிக்கப்படாதவனாகவும் உள்ளான்” என்கிறார்கள்.

இவர்கள் அல்லாஹ் மீதுள்ள அடியார்களின் நேசத்தை வணக்கிவழிபாடுதல், அடிபணிதல் ஆகியவற்றில் கொண்டுள்ள ஆர்வமாக விபரிக்கின்றனர். மேலும், அல்லாஹுத்தஆலா அடியார்கள் மீது கொண்ட அன்பை அவர்களுக்கு அவன் செய்த நலவாகவும், அவர்களை சத்தியத்தில் உறுதிப்படுத்தியதையும் கொண்டும் வலிந்துரைக்கின்றனர்.

இது தவறான வியாக்கியானமாகும். அவனது நேசத்தையும் அன்பையும் எதார்த்தமான கருத்தைத் கொண்டே அணுக வேண்டும். எப்படி ஏனைய பண்புகள் அவனது அந்தஸ்திற்குத் தக்கவிதத்தில் அணுகப்படுகின்றனவோ அப்படியே இப்பண்பும் அணுகப்பட வேண்டும்.

3 comments

  1. அஸ்ஸலாமு அலைக்கும்,
    இப்புத்தகத்தை தொடர் 01 முதல் 31 வரை PDF வடிவில் பெற்றுக்கொள்ள dawahsalaffiyyah@yahoo.com முகவரியுடன் தொடர்பு கொள்ளவும்.

    01-31 PDF – Please contact dawahsalaffiyyah@yahoo.com

  2. al akeedathul wasidhiya tamil

  3. continuation???????????????????????????

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *