Featured Posts
Home » நூல்கள் » உண்மை உதயம் மாத இதழ் » பிக்ஹ் துறையினருக்கம் ஹதீஸ் துறையினருக்கும் இடையில் நபிகளார் சுன்னா (4)

பிக்ஹ் துறையினருக்கம் ஹதீஸ் துறையினருக்கும் இடையில் நபிகளார் சுன்னா (4)

Nool Vimarsanamநூல் விமர்சனம்:
– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்
ஷெய்க் முஹம்மத் அல் கஸ்ஸாலி அவர்கள் தன்னை பிக்ஹ் துறை அறிஞராக இனங்காட்டிக் கொள்கின்றார். இந்த அடிப்படையில் அவர் பிக்ஹ் தொடர்பான விடயங்களில் இந்த நூலில் விட்ட சில தவறுகளை இனம் காட்டி வருகின்றோம்.

இசை தொடர்பான நிலைப்பாடு:
இந்தப் பகுதியில் இது தொடர்பாக வெளியிட்டுள்ள கருத்து தவறானது என்று நிறுவுவதை விட அவர் இதில் மாற்றுக் கருத்து உடையவர்களை எப்படிப் பார்க்கிறார் என்பது அவசியம் அறிந்திருக்க வேண்டியதாகும்.

பாடல் என்ற தலைப்பில் இசை தொடர்பாக 92-116 பக்கம் வரை எழுதியுள்ளார். நல்ல பாடல் அனுமதிக்கப்பட்டது என்பதில் அபிப்பிராயப் பேதம் இல்லை. இசை தொடர்பில்தான் சர்ச்சையே இருக்கிறது. எனவே இந்தப் பகுதிக்குப் பாடல் எனத் தலைப்பிடுவதை விட இசை எனத் தலைப்பிடுவதே பொருத்தமானதாகும்.

இசை தொடர்பில் வரும் அனைத்து அறிவிப்புக்களையும் ஷெய்க் அவர்கள் பலவீனமானவையாகக் காண்கின்றார். பலவீனமான அறிவிப்புகள் சட்டம் இயற்ற தகுதியற்றவை என்றும் விபரிக்கின்றார். இதிலும் எமக்கு மாற்றுக் கருத்து இல்லை. இதைக் கூறிவிட்டு,

“இதனால்தான் நாம் எமது தலைமுறையினர் பொருட்படுத்தாது விட்ட சில விடயங்களுக்காக பொதுமக்கள் இன்று கொதித்தெழுவதைப் பார்க்கின்றோம்.” (பக்:93) என்று குறிப்பிடுகின்றார்.

இதன் மூலம் இசைபற்றி பாமர மக்கள் சிலர் இன்று கொதித்தெழுகின்றனர். ஆரம்ப கால அறிஞர்களிடம் இது ஒரு பிரச்சினையாக இருந்ததில்லை என சித்தரிக்க முற்படுகின்றார். ஆனால் ஆரம்பகால அறிஞர்களில் ழாஹிரி மத்ஹபைச் சேர்ந்த அறிஞர் இப்னு ஹஸ்ம்(ரஹ்) மற்றும் வழிகெட்ட சூபிகள் சிலரைத் தவிர அங்கீகரிக்கத்தக்க அறிஞர்கள் எவரும் இசையை ஹலாலாகக் கருதவில்லை.

“பலவீனமான ஹதீஸ்கள் மக்கள் மத்தியில் பரவியமையே அவர்கள் ஆரம்பகால சான்றோர்களின் நெறியை விட்டும் தூரமாவதற்குக் காரணமாகும் என்பதை எம்மால் அவதானிக்க முடியுமாயுள்ளது.” (பக்:93)

இந்தக் கூற்றின் மூலம் ஆரம்பகால அறிஞர்களிடம் இது ஒரு பொருட்டாகவே இருக்கவில்லை. பலவீனமான ஹதீஸ்களை தூக்கிப் பிடிப்பவர்களே இது குறித்து குழம்பிக் கொண்டிருக்கின்றனர் என்ற மனப்பதிவை ஏற்படுத்த முயன்றுள்ளார். இசை தொடர்பான அவரது தவறான நிலைப்பாடு இந்தப் பகுதி பூராக பிரதிபலிக்கின்றது. பின்வரும் உரையாடலைப் பாருங்கள்.

ஷஃபான் மாதத்து நடுப்பகுதி இரவை எகிப்தில் மக்கள் கொண்டாடுகின்றனர். அந்த இரவுக்கு பொதுமக்கள் கொடுக்கும் அந்தஸ்தும் கண்ணியமும் உண்மையில் அதற்குக் கிடையாது. மத்திய கிழக்கு அறிஞர்களில் ஒருவரான சகோதரருடன் நான் கதைத்துக் கொண்டிருக்கும் போது “புனையப்பட்ட மற்றும் பலவீனமான ஹதீஸ்களுக்கு உங்களிடத்தில் சிறந்த சந்தை வாய்ப்புக்கள் உள்ளனவே” என்று கூறினார். “உங்களிடத்திலும் அவ்வாறான சந்தை இருப்பதுதான் கவலைக்குரியது” என்று நான் சொன்னேன். “நம்பகமான ஹதீஸ்களை சந்தைப்படுத்துவதிலும் பிக்ஹ் சட்டங்களை வெளிப்படுத்துவதிலும் நாங்கள் மிகக் கவனமாகவே நடந்து கொள்கின்றோம்” என அவர் கூறினார்.

“பாடல் ஹராம் என்ற வகையில் வந்திருக்கும் ஹதீஸ்களை விட ஷஃபான் மாத நடு இரவு பற்றி வந்திருக்கும் ஹதீஸ்கள் நம்பகமானவை என நினைக்கின்றேன்” என்று சிரித்துக் கொண்டே மிக விரைவாக நான் பதிலளித்தேன்.”

இதன் மூலம் இசை ஹராம் என்ற கருத்தை உடையவர்கள் போலியான ஹதீஸ்களில்தான் தொங்கிக் கொண்டிருக்கின்றனர் என்ற மனப்பதிவை ஆழமாகப் பதியச் செய்கின்றனர்.

பின்னர் அவரைப் பார்த்து இந்த விடயம் தொடர்பாக இப்னு ஹஸ்ம் கூறியுள்ளதை நாம் இருவரும் சேர்ந்து வாசித்துப் பார்ப்போம் வாருங்கள். பிறகு என்ன செய்வதென்று நீங்கள் யோசித்துப் பாருங்கள். (பக்: 97) இவ்வாறு கூறினாராம்.

இசை தொடர்பாக அறிஞர்கள் என்ன கூறியிருக்கிறார்கள் என்று ஆய்வு செய்து பார்ப்போம் என இவர் அவரை அழைத்திருந்தால் நடுநிலையான சிந்தனையாளராக நாம் இவரை மதிக்கலாம். இசை தொடர்பில் இப்னு ஹஸ்ம் அனைவருக்கும் மாற்றமான கருத்தில் இருக்கின்றார். தனது கருத்துக்கு சாதகமானதை மட்டும் எடுத்து வாசித்துப் பார்ப்போம் என்கின்றார். பிறகு என்ன செய்வதென்று நீங்கள் சிந்தித்துப் பாருங்கள் எனக் கூறி இது தொடர்பில் தனது முடிவுக்கு மாற்றமாக நான் சிந்திக்கத் தயார் இல்லை என்பதையும் தெளிவுபடுத்துகின்றார். இது ஒரு பக்கச்சார்புச் சிந்தனையாகப் படுகின்றது. தனக்கு சார்பான அறிஞரை மட்டும் ஏன் அவர் தேர்ந்தெடுக்க வேண்டும்?

இவ்வாறு கூறியவர் இப்னு ஹஸ்ம் அவர்களது கூற்றுக்களை முன்வந்து இசை ஹராம் என்று வந்திருக்கக்கூடிய ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானது என்ற கருத்தை நிறுவ முற்படுகின்றார். இசை தொடர்பில் பல ஹதீஸ்களும் பவவீனமானவை என்பது உண்மையே. இருப்பினும் ஸஹீஹான ஹதீஸே இல்லையென்று கூறிவிட முடியாது.

“அப்துர் ரஹ்மான் பின் ஃஙனம் அல் அஷ்அரீ(ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.

“ஆமிர் (ரழி) அவர்கள் அல்லது அபூ மாலிக் அல் அஷ்அரீ (ரழி) அவர்கள் என்னிடம் கூறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக அவர்கள் என்னிடம் பொய் சொல்லவில்லை. (அவர்கள் கூறியதாவது)

நான் நபி(ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டேன், என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபச்சாரம், மது, பட்டு, இசைக் கருவிகள் ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள். இன்னும் சில கூட்டத்தார் மலை உச்சியில் தங்குவார்கள். அவர்களின் ஆடுகளை இடையன் (காலையில் மேய்த்துவிட்டு) மாலையில் அவர்களிடம் ஓட்டிச் செல்வான். அவர்களிடம் தன் தேவைக்காக ஏழை (உதவிக்காகச்) செல்வான். அப்போது அவர்கள் “நாளை எங்களிடம் வா!” என்று கூறுவார்கள். (ஆனால்) அல்லாஹ் இரவோடு இரவாக அவர்கள் மீது மலையைக் கவிழ்த்து அவர்க(ளில் அதிகமானவர்க)ளை அழித்து விடுவான். (எஞ்சிய) மற்றவர்களைக் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் மறுமை நாள்வரை உருமாற்றி விடுவான்.” (புஹாரி: 5590)

இந்த ஹதீஸ் புஹாரியில் இடம்பெற்றுள்ளது. இமாம் இப்னு ஹஸ்ம்(ரஹ்) இந்த ஹதீஸ் குறித்து விமர்சனம் செய்துள்ளார்கள்.

“இமாம் புஹாரி முஅல்லகாக பதிவு செய்திருக்கும் ஹதீஸ்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டவையாகும். ஏனெனில் இவற்றில் மிகப் பெரும்பாலானவை இணைந்த அறிவிப்பாளர் வரிசைகளைக் கொண்டவையாகும். இருந்தபோதும் இப்னு ஹஸ்ம் கூறுகின்றார், “இங்கு அறிவிப்பாளர் வரிசை துண்டிக்கப்பட்டுள்ளது. ஹதீஸின் அறிவிப்பாளரான ஸதகா பின் காலிதிற்கும் புஹாரிக்கும் இடையில் அறிவிப்பாளர் வரிசை துண்டிக்கப்பட்டுள்ளது.” (பக்: 102)

இமாம் இப்னு ஹஸ்ம் கூறக்கூடிய இக்கூற்றை ஹதீஸ்கலை அறிஞர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்த ஹதீஸ் ஸஹீஹானது. ஸஹீஹ் என்பதற்குரிய ஷர்த்தான அறிவிப்பாளர் தொடர் இணைந்தது என இமாம் இப்னு ஸலாஹ் கூறுகின்றார்.

இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) இப்னு ஹஸ்ம் அவர்களது கூற்றை மறுப்பதுடன் இவர் கூறும் அறிவிப்பாளர் அல்லாத மற்றும் பல அறிவிப்பாளர் தொடருடன் இந்த ஹதீஸ் அறிவிக்கப்பட்டிருப்பதாகக் கூறுகின்றார்கள். இந்த ஹதீஸ் ஸஹீஹானது. அதில் குறைவு எந்த வழியிலும் இல்லையென தக்லீகுல் தஃலீக் என்ற நூலில் விபரிக்கின்றார்கள். இவ்வாறே இமாம் இப்னுல் கையும் (ரஹ்) அவர்களும் தமது தஹ்தீபில் இப்னு ஹஸ்மின் கூற்றுக்கு மறுப்புக் கூறியுள்ளதுடன் ஆறு வழிகளில் இந்த ஹதீஸ் ஸஹீஹானது என நிறுவுகின்றார்கள். இவ்வாறே இமாம் இப்னு ஹிப்பான் (ரஹ்) மற்றும் அல் ஈராக்கி (ரஹ்), இமாம்களான நவவி, இப்னு தைமிய்யா (ரஹ்) போன்றோரும் இந்த ஹதீஸ் ஸஹீஹானது என்பதை உறுதி செய்துள்ளனர். இது குறித்து அறிஞர் நாஸிருத்தீன் அல்பானி (ரஹ்) அவர்கள் “தஹ்ரீமு ஆலாதுத் தர்ப்” என்ற நூல் மூலம் இப்னு ஹஸ்ம் (ரஹ்) மற்றும் அவரை தக்லீத் பண்ணுபவர்களுக்கான மறுப்பாகத் தனி நூலையே வெளியிட்டுள்ளார்கள். இப்னு ஹஸ்மின் கூற்று தவறானது என்பது குறித்து விரிவாக இந்த நூல் பேசுகின்றது. 182 பக்கங்களைக் கொண்ட இந்நூல் இசை குறித்த ஷெய்க் கஸ்ஸாலி அவர்களின் கூற்றுக்கு மிக விரிவான பதிலாக அமைந்துள்ளது.

இமாம் இப்னு ஹஸ்மின் கூற்றில் ஷெய்க் அவர்களுக்கே முழு நம்பிக்கை இல்லை போலும். அதனால்தான் அவர் மாற்று விளக்கம் ஒன்றைக் கூறுகின்றார். அது அதைவிட ஆச்சர்யமாகும்.

நாங்கள் கூறுகின்றோம் சிலவேளை இமாம் புஹாரி இங்கு கூறப்பட்ட தோற்றத்தில் அனைத்துப் பகுதிகளையும் அதாவது மது, பாட்டு, பாவகாரியம் என அனைத்தையும் உள்ளடக்கிய முழுமையான விழாவை நாடியிருக்கலாம். (பக்: 102)

அதாவது இந்த ஹதீஸ் ஸஹீஹ் என்றாலும் பாட்டுக்காக அவர்கள் அறிவிக்கப்பட்டிருக்க மாட்டார்கள். மது, பாட்டு, பாவகாரியம் அனைத்தும் ஒரு சேர நடந்தால்தான் அவர்கள் அழிக்கப்பட முடியும் என்று கூற வருகின்றார்.

“எனது சமூகத்தில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபச்சாரம், பாட்டு, மது, இசைக் கருவிகள் ஆகியவற்றை ஹலாலாக்குவார்கள்” என்று இந்த ஹதீஸில் இடம்பெற்றுள்ளது. (புஹாரி: 5590, 5268)

அவர்கள் ஹலாலாக்குவார்கள் என்றால் மார்க்கத்தில் அது ஹராமாக இருந்தேயாக வேண்டும். மார்க்கத்தில் தடுக்கப்பட்ட பாடல், இசை, மது, விபச்சாரம் என்பவற்றை அவர்கள் ஹலாலாக்குவதால் கண்டிக்கப்படுகின்றனர். ஹதீஸின் வாசகமே இசைக் கருவிகள் தடுக்கப்பட்டுள்ளது, அதை ஆகுமானது எனக் கூறக்கூடிய வழிகெட்ட கூட்டங்கள் உருவாகும் என்றுதானே கூறுகின்றது. ஷெய்க் முஹம்மது அல்கஸ்ஸாலி அவர்களும் அவரைப் பின்பற்றுபவர்களும் தங்களையும் ஏன் அந்தக் கூட்டத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும்.

ஷெய்க் கஸ்ஸாலி அவர்கள் இமாம் புஹாரி மீது கூறிய கூற்று கற்பனையும், ஆதாரத்திற்கு முரண்பட்டதும், தனது கருத்தை நியாயப்படுத்துவதற்காகக் கூறிய அவதூறுமாகும்.

இசை குறித்து முழுமையாக விளக்குவது இந்தப் பகுதியின் நோக்கம் அல்ல. இருப்பினும் இசை குறித்த மற்றும் சில ஹதீஸ்களை இங்கே உதாரணத்திற்காகத் தருகின்றேன்.

“நாஃபிவு (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள். ஒரு ஆட்டிடையனின் குழலோசை இப்னு உமர் (ரழி) அவர்களின் காதில் விழுந்தது. அப்போது அவர்கள் தம் இரு காதுகளிலும் விரலை வைத்துக் கொண்டு அந்தப் பாதையை விட்டுவிட்டு (வேறொரு பாதையின் பக்கம்) வாகனத்தைத் திருப்பினார்கள்.

அவர்கள் “(அந்தச் சப்தம்) உனக்குக் கேட்கிறதா?” என்று வினவினார்கள். அதற்கு நான் ஆம்! என்றேன். பிறகு, “எனக்குக் கேட்கவில்லை” என்று நான் கூறினேன். கைகளை (காதிலிருந்து) எடுத்துவிட்டு மறுபடியும் அதே பாதைக்கு வாகனத்தைத் திருப்பினார்கள்.

“அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஒரு ஆட்டிடையனின் குழலோசையைக் கேட்டபோது அவர்கள் இதைப் போன்று செய்ததை நான் பார்த்தேன்” என்று கூறினார்கள்.” (அஹ்மத்: 4307)

“அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ் உங்களுக்கு மதுவையும், சூதாட்டத்தையும், மத்தளத்தையும் தடை செய்துள்ளான். போதையூட்டக்கூடிய அனைத்தும் தடை செய்யப்பட்டவையாகும்.” (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரழி), ஆதாரம்: அஹ்மத்: 2494)

எனவே, இசை ஹராமானது என்பதுதான் ஆரம்பகால அறிஞர்களின் உறுதியான முடிவாகும். மக்கள் இசையில் மூழ்கியுள்ளனர் அல்லது அதைவிட்டும் யாராலும் தப்பிக்கொள்ள முடியாது என்பதற்காக ஹராமை ஹலாலாக்க முடியாது. அல்லது ஹதீஸின் பெயரிலோ, தஃவாவின் பெயரிலோ இந்தத் தவறைச் செய்யவும் முடியாது. இசை கூடாது என்ற இஸ்லாமிய அறிஞர்களின் சரியான கருத்தை அறிஞர் முஹம்மத் அல் கஸ்ஸாலி அவர்கள் “குறுகிய வட்டத்திற்குள் அமைந்த நாட்டுப்புறச் சட்டமாகப் பார்க்கிறார். இதே அவர் கூறும் இந்த நீண்ட சம்பவத்தைப் படித்துப்பாருங்கள்.

பாடலா? இசையா?
எனது நினைவுக்கு வருகின்றது. நான் மக்கதுல் முகர்ரமாவில் ஆசிரியராக இருந்தபோது ஒருநாள் பிரச்சினைகளினால் வீட்டில் துவண்டு போய் உட்கார்ந்திருந்தேன். ஏதாவதொன்றின் மூலம் கவலைகளை மறப்போம் என எனக்குள் சொல்லிக் கொண்டேன். வானொலியைத் திறந்தேன். அதில் எனக்குப் பிடித்தமான பாடல் ஒன்று ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. மகிழ்ச்சியைத் தந்தது. பாடலின் சில வரிகள்தான் சென்றிருக்கும் அதற்குள்ளால் ஒரு மாணவன் வந்து கதவைத் தட்டினார். அவரது ஆய்வுக் கட்டுரைக்கு நான் மேற்பார்வையாளராக இருந்தேன்.

அவரின் முன்நிலையில் பாடலைக் கேட்க முடியும் என எனக்குத் தோன்றியது. ஆனால், அவரோ வானொலியை நிறுத்தும்படி கூறினார்.

அவரை மதிக்கும் வகையில் அவரது விருப்பத்தை நிறைவேற்றினேன். பாடலின் சில வரிகளை நானாகப் பாடிப் பூர்த்தி செய்தேன்.

இருளின் தோழனே
நீ எம்மை அழைக்கும் இருள் எங்கே?
அல்லாஹ்வின் ஒளிதான் என்னுடைய
உள்ளத்தில் இருக்கிறது.
நான் காண்பதெல்லாம் ஒளிமயமானதாகவே உள்ளது. . .

“இது என்ன?” என மாணவர் சப்தமிட்டார். நான் அவருக்குக் கூறினேன், “ஒவ்வொருவரும் படைப்பினங்களில் அவரது லைலாவையே பாடுகின்றனர். ஆனால், நானோ வேறொன்றை நாடுகின்றேன். பாடல் அனைத்தும் ஹராம் என்று உங்களுக்குத் தெரியாதா?” என அவர்கள் கேட்டார். “எனக்குத் தெரியாதே!” என்று அவருக்கு நான் கூறினேன்.

பின்னர் நான் அவரை நோக்கி கடுமையாகக் கூறினேன், “இஸ்லாம் உங்களுக்கு மட்டும் சொந்தமான பிராந்திய மார்க்கமல்ல. உங்களிடமுள்ள குறுகிய வட்டத்திற்குள் அமைந்த நாட்டுப்புறத்து சட்டமாகும். அதனை இஸ்லாத்துடன் ஒரு தட்டில் போடுகின்றீர்கள். அதுமட்டுமன்றி, இதில் ஒன்றை விட்டு மற்றொன்றைப் பிரிக்க முடியாது என நீங்கள் கூறுகின்றீர்கள். இதனால் இஸ்லாத்தின் தட்டு பறந்துவிடப் போகின்றது. மக்கள் அதனை விட்டும் திரும்பி விடுவர். இது அல்லாஹ்வின் தூதிற்கும், வழிகாட்டலுக்கும் செய்யும் பெரும் துரோகமாகும்.”

பாடல் ஹராம், இசை கூடாது என்ற கூற்று குறுகிய வட்டத்திற்குள் அமைந்த நாட்டுப்புறச் சட்டமாம். அப்படியென்றால் இசை ஹராம் என்று கூறிய பிக்ஹ்துறை அறிஞர்கள் எல்லோரும் குறுகிய வட்டத்திற்குள் சிக்குண்டவர்களா? அவர்கள் அறிவாற்றல் அற்ற நாட்டுப்புற பாமரர்களா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *