Featured Posts
Home » சட்டங்கள் » ஷஃபான் » ஷஃபான் மாதமும் மூட நம்பிக்கையும்!

ஷஃபான் மாதமும் மூட நம்பிக்கையும்!

-மவ்லவி யூனுஸ் தப்ரீஸ்-
ஷஃபான் மாதம் வந்து விட்டால் பல விதமான தவறான செயல்களையும் அமல்களாக அள்ளி வீசுவார்கள். மார்க்கம் படித்த மவ்லவிமார்கள் மிம்பர்களிலும், ஏனைய பயான் நிகழ்ச்சிகளிலும், மார்க்கம் என்ற பெயரில் கட்டுக் கதைகளை பேசுவதை அவதானிக்கலாம். ஷஃபான் மாதம் பிரை 15-ம் நாள் நோன்பு பிடிப்பது, நின்று வணங்குவது. போன்ற விடயங்கள் அனைத்தும் இட்டுக்கட்டப் பட்ட செய்திகள் இது ஒரு புறம் இருக்க, அன்றைய இரவில் மஃரிப் தொழுகைக்குப் பின் மூன்று யாசீன் ஓதுவார்கள். ஒன்று உணவு விஸ்திரணத்திற்கு, இரண்டாவது ஆயுள் நீடிப்புக்கு, மூன்றாவது கப்ரில் வேதனை நீங்கவாம்? மூன்று யாசீனுக்கு இடை, இடையே துஆ ஓதிக்கொள்வார்கள். மூன்று யாசீனையும் ஓதியப் பின் ரொட்டி சுட்டு, மூன்று வாழை பழத்துடன் பங்குவைப்பார்கள். இதற்காக இரண்டு விஷேசமான கதையைக் கட்டி வைத்துள்ளார்கள்.

“யார் மூன்று யாசீனை ஒதி, ரொட்டியும், வாழைப் பழத்தையும் கொடுக்கிறரோ, அவைகள் மறுமை நாளில் குடையாக நிழல் தரும். அதாவது வாழைப் பழம் குடையின் பிடியாகவும், ரொட்டி மேல் துண்டாகவும், வருமாம்?

இரண்டாவது கட்டுக் கதை அதாவது,
யார் அன்றிரவு ரொட்டியும், வாழைப் பழமும், கொடுக்கிறாரோ அவைகள் கப்ரில் மலக்குமார்கள் இரும்பால் அடிக்கும் போது கொடுத்த ரொட்டி கேடயமாக வருமாம்?

புராணங்கள் தோற்றுப் போகும் அளவுக்கு நம்மவர்களிடம் கதைகளும், கப்ஸாக்களும் கொடிக் கட்டி பறக்கிறது. இப்படி மார்க்கத்தை விற்று பிழைப்பு நடத்துவதை விட பிச்சை எடுத்து சாப்பிடுவது மேலாகும். ஏன் எனறால் யாசகத்தை இஸ்லாம் அனுமதிக்கிறது.

பொதுமக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் உலக தர வரிசையில் மத குருமார்கள் தான் முன்னணியில் உள்ளார்கள்? இந்த ஏமாற்றுபவர்களை நம்பி சுட்ட ரொட்டியையும், வாழைப் பழத்தையும், வீடு, வீடாகவும், பள்ளிவாசல்தோறும் பங்கு வைப்பதையும் காணலாம். கூடுதலாக பள்ளிக்கு அனுப்புவார்கள். எவ்வளவுதான் பள்ளி இமாமும், முஅத்தினும் சாப்பிடுவார்கள். காலையில் பார்த்தால் குப்பையிலும், காண்களிலும் வீசப்பட்டு கிடக்கும். அல்லாஹ்வுடைய ரிஸ்க் சீரழிவதை காணலாம். அதிலும் நெட்டி உடையாத வாழைப் பழம் அனுப்ப வேண்டுமாம்? அப்ப தான் இரண்டு, மூன்று நாளைக்கு வைத்து சாப்பிடலாம்? மேலும் இந்த பராத் இரவை உறுதிப் படுத்த ஒருகுர்ஆன் வசனத்தையும் ஆதாரமாக காட்டுவார்கள்.

அதாவது “ஹா மீம் இது தெளிவான வேதநூல், இதை நாம் பரகத் பொருந்திய இரவிலே இறக்கினோம். நாம் அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறோம். நுட்பமான எல்லா காரியங்களும் பிரித்தறிவிக்கப்படுகிறது…” (44 : 1, 2)

“இந்த வசனம் பராஅத் இரவுப் பற்றி பேசுகிறது. ஏன் என்றால் பராத் இரவில் தான் மனிதர்களுடைய சகல காரியங்களும் மீண்டும் தீர்மானிக்கப்படுகிறது. இந்த வசனமும் இந்த பரக்கத் பொருந்திய இரவில் தான் காரியங்கள் பிரித்தறிவிக்கப்படுகிறது என்று கூறுகிறது” என்று கண்மூடித்தனமாக விளக்கம் சொல்வதை காணலாம்.

உண்மையில் இவர்கள் சொல்லும் இந்த விளக்கம் சரிதானா என்று பார்த்தால், இது தெளிவான பிழையான விளக்கமாகும். ஏன் என்றால் மீண்டும் அந்த வசனத்தை சற்று அவதானியுங்கள். ஹா மீம் இது தெளிவான வேதநூலாகும். அதை பரகத் பொருந்திய இரவிலே இறக்கினோம். என்று அல்லாஹ் கூறி விட்டு, அந்த பரகத் பொருந்திய இரவிலே காரியங்கள் பிரித்தறிவிக்கப் படுகிறது என்று கூறுகிறான். அப்படியானால் அந்த பரகத் பொருந்திய இரவை கண்டு பிடித்து விட்டால், இந்த வசனத்திற்கும், பராத் இரவுக்கும் தொடர்புள்ளதா? இல்லையா? என்று விளங்கி விடலாம்.

இந்த வசனம் குர்ஆனோடும், லைலதுல் கத்ர் இரவோடும் சம்பந்தப் படுவதை காணலாம். குர்அன் அருளப்பட்ட மாதத்தைப் பற்றி அல்லாஹ் இப்படிக் கூறுகிறான்.

“ரமலான் மாதத்தில் தான் இந்த குர்ஆன் அருளப்பட்டது…” (02 : 185)

இந்த வசனத்தில் குர்ஆன் அருளப்பட்ட மாதத்தைப் பற்றி பேசுகிறான். எந்த இரவில் இந்த குர்ஆன் அருளப்பட்டது என்று 97 ம் அத்தியாயத்தில் இப்படி கூறுகிறான். லைலதுல் கத்ர் இரவில் இறக்கினோம் என்று 97ம் அத்தியாயமான சூரத்துல் கத்ரில் சுட்டிக் காட்டுகிறான். எனவே நாம் ஏற்கனவே எடுத்துக் காட்டிய 44 ம் அத்தியாயம் பராத் இரவுப் பற்றி பேசவில்லை, மாறாக லைலதுல் கத்ர் இரவைப்பற்றி தான் பேசுகிறது. என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

எனவே பராத் என்ற மாதமோ, பராத் என்ற இரவோ, கிடையாது என்பதோடு, தாயியுடைய கர்ப அறையிலே மனிதனின் சகல விடயங்களும் எடுத்து எழுதப்பட்டு விடுகிறது. மீண்டும், மீண்டும் ஒவ்வொரு வருடமும் புதுசு, புதுசா எழுதப்படுவது கிடையாது. (அதிகமாக நோன்பு நோற்பதைத் தவிர) ஷஃபான் மாதத்தில் எந்த விசேட அமல்களும் கிடையாது என்பதை விளங்கி, வழமையான அமல்களை நிறைவாக செய்வோமாக!.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *