Featured Posts
Home » வரலாறு » இலங்கை முஸ்லிம்கள் » ஈரமுள்ள தமிழ் இதயங்கள் எங்கே!

ஈரமுள்ள தமிழ் இதயங்கள் எங்கே!

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ்
தமிழ்-சிங்கள இனப் பிரச்சினையின் போது முடிந்தவரை நாம் இரு தரப்பு மக்களுக்கும் உயிர்களைப் பாதுகாக்கும் விடயத்தில் ஒத்துழைப்பு வழங்கியுள்ளோம். தமிழ் இளைஞர் ஒருவருக்காக ஒரு முஸ்லிம் கிராமமே பாரிய சவாலைச் சந்தித்த ஒரு நிகழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன்.

நடந்த ஆண்டு நினைவில் இல்லை. நான் சின்னப் பிள்ளை. அப்போது திருகோணமலை ஜமாலிய்யா நாம் வசித்து வந்தோம். எமது வீட்டு வேலியுடன் சிரிமாபுர என்ற சிங்களப் பகுதி ஆரம்பமாகியது. இனக் கலவரக் காலம் அது. ஒரு தமிழ் இளைஞர் முஸ்லிம் கடைக்கு பொருள் வாங்க வருகின்றார். இதை அறிந்த சிங்கள இளைஞர்கள் மானைக் கண்ட வேங்கை போன்று விரட்டுகின்றனர். உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடிய தழிழ் இளைஞர் ஒரு முஸ்லிமின் வீட்டிற்குள்; புகுந்து விடுகின்றார். என் ஞாபகம் சரியாக இருந்தால் ரஊப் காக்கா என்பது அவர் பெயராக இருக்கலாம்.

இப்போது சிங்கள இளைஞர்கள் அவனை வெளியே அனுப்பு என்று வீட்டுக்கார முஸ்லிமிடம் கூறிய போது வீட்டுக்கு வந்தவர்களை வெளியே போ என்று நான் கூற மாட்டேன் என்று உறுதியாக மறுத்துவிட்டார். நாம் உள்ளே வருவோம் என சிங்கள இளைஞர்கள் கூறிய போது நான் செத்த பின் தான் நீங்கள் உள்ளே செல்ல முடியும் என அவரும் சண்டைக்குத் தயாராகிவிட்டார். கூட்டம் கூடிவிட்டது. ரஊப் காக்கா மீது கை வைக்க விடமாட்டோம் என்று முஸ்லிம் இளைஞர்கள் கூறிவிட்டனர். அன்று ஒரு தழிழ் இளைஞனின் உயிரைக் காக்க முஸ்லிம் ஊரே அணி திரண்டு தமக்கு அருகில் வாழ்ந்த சிங்கள மக்களைப் பகைத்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டது.

நிலைமை மோசமாகிச் சென்று கொண்டிருக்கையில் தன்னால் இவர்களுக்குப் பிரச்சனையென அந்த தமிழ் இளைஞன் கருதியிருக்க வேண்டும். வீட்டுக்குப் பின் புறத்தால் பாய்ந்து அவன் ஓடினான். ஆனால், சிங்கள இளைஞர்களிடம் அவன் மாட்டிக் கொண்டான். அவனைக் கொலை செய்து முஸ்லிம்கள் மாடு அறுத்துவிட்டு எச்சங்கள் போடும் இடத்தில் அவனது பிணம் போடப்பட்டதாக அறிந்தேன்.

அன்று இரவு புலிகள் (அல்லது ஏதோ ஒரு ஆயுதக்குழு) சிங்கள ஊரைத் தாக்கப் போவதாகவும் முஸ்லிம்களை விலகி இருக்குமாறு தகவல் வந்ததாகவும் நாம் வேறு இடம் செல்ல முற்படும் போது சிங்கள மக்கள் எங்கும் போகக் கூடாது, போனால் மீண்டும் இங்கே வரவிடமாட்டோம் வீட்டையெல்லம் உடைத்துவிடுவோம் என்று கூறியதால் சிறுவர்களாகிய எங்களை மட்டும் தூர இடங்களுக்கு அனுப்பிவிட்டு எமது பெற்றோர்கள் வீட்டில் இருந்தனர். ஆனால் குறிப்பிட்டபடி எந்தத் தாக்குதலும் இடம் பெறவில்லை.

“இணைவைப்பாளர்களில் எவரேனும் உம்மிடம் புகலிடம் கோரினால், அவர் அல் லாஹ்வின் வார்த்தையைச் செவியேற்கும் வரை அவருக்கு புகலிடம் அளிப்பீராக! பின்னர் அவருக்குப் பாதுகாப்பான இடத் தில் அவரைச் சேர்த்து விடுவீராக! நிச்சய மாக அவர்கள் அறியாத கூட்டத்தினராக இருப்பதே இதற்குக் காரணமாகும்.” (9:6)

இந்தக் குர்ஆன் வசனத்தின் படி உயிர் ஆபத்தில் புகலிடம் கேட்டால் அவர் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவராக இருந்தாலும் பாதுகாப்பு அளிக்க வேண்டியது முஸ்லிம்களின் கடமையாகும். இதைத்தான் அன்று அந்த முஸ்லிம்கள் செய்தார்கள். ஒரு தழிழ் இளைஞனுக்காக ஒரு முஸ்லிம் ஊரே சிங்கள மக்களின் கோபத்திற்கு ஆளாக நேரிட்டது. இப்படி எத்தனையோ சம்பவங்கள் பலரது வாழ்வில் ஏற்பட்டிருக்கும். தமிழ் சகோதரர்களே! பிரச்சனையான சந்தர்ப்பங் களில் உங்களுக்காக நாம் நிறையவே இழந்திருக்கின்றோம். எமது பெற்றோர்கள், பெண்கள் உங்களுக்காகப் பிரார்த்தித்ததை சின்ன வயதில் பார்த்திருக்கின்றோம்ளூ கேட்டிருக்கின்றோம்.

எனது கவலை என்னவென்றால், உங்களது வழிபாட்டு உரிமை மேர்வின் சில்வா மூலம் மறுக்கப்பட்ட போது கூட அதற்கு எதிராக எம்மவர்கள் எழுதினார்கள்ளூ பேசினார்கள். ஆனால், ஒரு வருட காலமாக தொடராக முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத செயற்பாடுகளும் பிரச்சினைகளும் தொடரப் பட்டும் கூட தமிழ் சமூகப் புத்திஜீவிகள், அரசியல் காவலர்கள், மார்க்க ஞானிகள், ஊடகவியலா ளர்கள் மூலமாக இதற்கு எதிரான எந்தக் கருத்தும் வரவில்லை என்பதுதான்.

சோனிக்குப் பட்டால்தான் தெளிவு பிறக்கும், ஒரு முறை அனுபவித்துப் பார்க்கட்டும் என்ற எண்ணத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக ஒரு கலவரம் வர வேண்டும் என்கின்ற எதிர்பார்ப்பில் இருக்கின்றீர்களோ என்ற சந்தேகம் வருகின்றது.

உங்களுக்காக நாம் அழுதோம்ளூ அடிபட்டோம்ளூ உயிர்களைக் கூட போராட்டத்தில் இழந்தோம். எங்களுக்காக ஒரு வார்த்தை பேசாமல் இருப்பது இதயத்தைப் பிழிகிறது சகோதரா!

ஈரமான இதயமுள்ள தமிழ் சகோதரர்களைத் தேடித் துடிக்கின்றது எம் இதயம் நடுநிலையோடு சிந்தித்துப் பார்க்கும் எந்தத் தமிழ் இதயமும் எமக்காக ஒரு முறை கசிந்து போகும் என்கின்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது!….

(இவ்விடத்தில் ஹலால் குறித்து நடுநிலை கருத்துக் கூறிய திரு சம்பந்தன் ஐயா அவர்களுக்கும் தினேஷ; குணவர்தன, வாசுதேவ நாணயக்கார, விக்ரமபாகு, கருணாரத்ன போன்ற நடுநிலை அரசியல் தலைவர்களுக்கும் சிங்கள வாக்குகளை மட்டும் நம்பி அரசியல் செய்யும், முஸ்லிம் வாக்குகளைப் பெரிதும் பெறாத துஏP கட்சியின் நடுநிலைப் பார்வைக்காவும் முஸ்லிம் சமூகத்தின் ஆழமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *