Featured Posts
Home » சட்டங்கள் » ரமளான் » அல்குர்ஆனின் மாதம்

அல்குர்ஆனின் மாதம்

முஸ்லிம்களுக்கு அதிகம் நன்மைகளை ஈட்டிக்கொடுக்கும்
ஒரு குறிப்பிட்ட காலப்பகுதி தான்
இந்த ரமழான்.
இது நோன்பின் மாதமாகும்,
இது அல்குர்ஆனின் மாதமாகும்,
இது பொறுமையின் மாதமாகும்,
இது ஏழைகளுக்கு வாரி வழங்கும் மாதமாகும்,
இது இரவு வணக்கத்தின் மாதமாகும்,
இது ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவை உடைய லைலதுல் கத்ர் இரவின் மாதமாகும்.

இப்படி பல பாக்கியங்களை உள்ளடக்கிய ரமழான் மாதமென்பது அல்லாஹ் அல்குர்ஆனில் குறிப்பிடுவது போன்று: ‘எண்ண முடியுமான சில நாட்களாகும்’ (2: 184). எனவே குறிப்பிட் இந்த நாட்களில் ஒவ்வொரு முஸ்லிமும் நன்மைகளை அதிகம் செய்து அல்லாஹ்வின் பேரருளைப் பெற்ற நல்லடியார்களாக மாறவேண்டும். அதிகம் அதிகம் நன்மை செய்வதற்கு அழகான ஒரு சூழலை அல்லாஹ் அமைத்துத் தரும் போது கூட இதை ஒருவன் பயன்படுத்த தவரினால் அவன் வேரெந்த சந்தர்ப்பத்தை தான் பயன்படுத்துவான்!.

ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது கடமை

1. ‘இறைவிசுவாசிகளே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது எப்படி நோன்பு விதியாக்கப்பட்டதோ அதே போன்று உங்கள் மீதும் நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது நீங்கள் அதன் மூலம் இறையச்சமுடையவர்கள் ஆகலாம்’ (அல்பகரா 2:183).

2. ‘உங்களில் எவர் அம்(ரமழான்)மாதத்தை அடைவாரோ அவர் நோன்பு நோற்கட்டும்’ (அல்பகரா 2: 185).

3. இஸ்லாம் ஐந்து தூண்களின் மீது நிலைபெற்றுள்ளது:

முதலாவது: ‘ஷஹாதது அன்லாஇலாஹ இல்லல்லாஹ் வஅன்ன முஹம்மதர்ரஸுலுல்லாஹ்’ (வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை, முஹம்மத் அல்லாஹ்வின் தூதராகும் என்று சாட்சி கூறுதல்).

இரண்டாவது: தொழுகையை நிரைவேற்றல்,

மூன்றாவது: ஸகாத் கொடுத்தல்,

நான்காவது: ஹஜ் செய்தல்,

ஐந்தாவது: ரமழான் மாதம் நோன்பு நோற்றல்.’

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி), ஆதாரம்: முத்தபகுன் அலைஹி).

4. ஒரு கிராமவாசி பரட்டைத் தலையுடன் நபியிடத்தில் வந்து, அல்லாஹ்வின் தூதரே! தொழுகையில் எதை அல்லாஹ் என் மீது விதியாக்கினான் என வினவினார். அதற்கு நபியவர்கள், ஐந்து நேரத்தொழுகையாகும் அதைத்தவிர உபரியானவைகளை நீ விரும்பி செய்தால் உண்டு. நோன்பில் அல்லாஹ் எதை என் மீது விதியாக்கினான் அதற்கு நபியவர்கள், ரமழான் மாத நோன்பாகும் அதைத்தவிர உபரியானவைகளை நீ விரும்பி நோற்றால் உண்டு. ஸகாதில் அல்லாஹ் எதை என் மீது விதியாக்கினான் அதற்கு நபியவர்கள் இஸ்லாத்தின் அதன் சட்டங்களை தெளிவு படுத்தினார்கள். சத்தியத்தின் மீது அனுப்பி எவன் உங்களை கண்ணியப்படுத்தனானோ அவன் மீது சத்தியமாக அல்லாஹ் எதை என் மீது விதியாக்கினானோ அதில் எந்தக்குறைவும் நான் செய்யமாட்டேன், உபரியானவைகளை நான் செய்யமாட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர், இவர் சொல்வதில் உண்மையாளராக இருப்பாரென்றால் வெற்றி பெற்று விட்டார் என்றோ, அல்லது உண்மையாளராக அவர் இருப்பரானால் சுவர்க்கம் நுழைந்து விட்டார் என்றோ’ கூறினார்கள். (அறிவிப்பவர்: தல்ஹா இப்னு உபைதுல்லாஹ், ஆதாரம்: முத்தபகுன் அலைஹி).

5. அப்துல் கைஸ் குழுவினர் நபியிடத்தில் வந்த போது இவர்கள் யாரென நபியவர்கள் கேட்டார். அவர்கள் ரபீஆ கோத்திரத்தார் என கூறினர். எந்தக்கவலையும் துக்கமும் அற்ற வரவாக உங்கள் வரவு அமையட்டும் என நபியவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! புனிதமான மாதங்களில் தவிர உங்களை சந்திக்க வருவதற்கு எமக்கு முடிவதில்லை. எமக்கும் உங்களுக்கும் மத்தியில் நிராகரிப்பாளர்களான முழர் கூட்டத்தினர் வசிக்கும் இடம் உள்ளது. அல்லாஹ்வின் தூதரே எம்மை சுவர்க்கத்தில் நுழைவிக்கும் காரியங்களை எமக்கு கட்டளையிடுங்கள் அதை நாம் நிறைவேற்றுவதுடன் எம்முடன் இருப்போருக்கும் அதை நாம் அறிவிப்போம். இன்னும் அவர்கள் குடிபானங்களை பற்றியும் கேட்டனர். நபியவர்கள் அவர்களுக்கு நான்கை கட்டளையிட்டதுடன், நான்கை விட்டும் அவர்களை தடுத்தார்கள். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவனை ஒருமைபடுத்துமாறு ஏவினார். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவனை ஒருமைபடுத்துவது என்றால் என்னவென்று உங்களுக்கு தெரியுமா? அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் தான் மிகவும் அறிந்தவர்கள் என அவர்கள் கூறினர், ‘அஷ்ஹது அன்லாஇலாஹ இல்லல்லாஹ் வஅன்ன முஹம்மதர்ரஸுலுல்லாஹ்’ (வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை, முஹம்மத் அல்லாஹ்வின் தூதராகும் என்று சாட்சி கூறுதல்). இரண்டாவது: தொழுகையை நிறைவேற்றல், மூன்றாவது: ஸகாத் கொடுத்தல், நான்காவது: ரமழான் மாதம் நோன்பு நோற்றல், கனீமத்தில் ஐந்தில் ஒன்றை கொடுத்தல்’ என கட்டளையிட்டனர். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி), ஆதாரம்: முத்தபகுன் அலைஹி).

6. குறைஷிகள் அறியாமை காலத்தில் ஆஷுரா தினம் நோன்பு நோற்பவர்களாக இருந்தனர், பிறகு நபியவர்களும் ரமழான் நோன்பு கடமையாகும் வரை அந்த தினத்தில் நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்டதன் பின் உங்களில் நாடியவர்கள் (ஆஷுரா) நோன்பை நோற்கவும், நாடியவர்கள் விடவும் என நபியவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), ஆதாரம்: முத்தபகுன் அலைஹி.

நாம் மேலே குறிப்பிட்ட அனைத்து ஆதாரங்களின் மூலம், ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது கடமையென்பதை விளங்க முடிகிறது. இதை எவர் மார்க்கம் அனுமதித்த தகுந்த காரணமின்றி அலட்ச்சியப்படுத்துவாரோ நிச்சயமாக அவர் அல்லாஹ்விடத்தில் தண்டனைக்குரிய குற்றத்தை செய்தவராவார். நம்மில் சிலர் இந்த ரமழான் மாத நோன்பை அலட்சியமாக விட்டு விடுவதையும் அதைப் பற்றி எந்தக் கவலையுமின்ற இருப்பதும் வேதனைக்குரிய விடயமாகும்.

மார்க்கம் அனுமதித்தக் காரணங்கள் இன்றி நோன்பை விடுவது பெரும் குற்றமாகும்:

காரணமில்லாமல் ரமழானின் நோன்பை விடுவது கூடாது. அது பெரும்பாவங்களில் ஒன்றாகும். வேண்டுமென்று அவர் நோன்பைவிட்டால் அவர் பாவியாகிவிடுவார். அதற்காக அவர் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடுவதுடன் அதை அவர் நோற்க வேண்டும்.

நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘நான் உறங்கிக் கொண்டிருந்தபோது என்னிடத்தில் இரு மனிதர்கள் வந்து எனது மேல்கையை பிடித்து கரடு முரடான ஒரு மலைக்கு கொண்டுசென்று அதில் ஏறுமாறு கூறினார்கள். அதற்கு நான் என்னால் முடியாது என்று கூறினேன். அவ்விருவரும் உமக்கு நாம் வழியமைத்து தருகின்றோம் என்று கூறியதும், நான் மலையின் நடுப்பகுதிக்கு செல்லும்வரை ஏறினேன். அப்போது கடுமையான சத்தத்தைகேட்டு இது என்ன சத்தம் எனக்கேட்டேன். அதற்கவர்கள் இதுதான் நரகவாசிகள் ஓலமிடும் சத்தம் என்றார்கள். மீண்டும் அவ்விருவரும் என்னை நடத்திச் செல்கின்றார்கள். அப்பொழுது நான் ஒரு கூட்டத்தை (கண்டேன்) அவர்களின் குதிகால்கள் கட்டப்பட்டும், அவர்களுடைய கன்னங்கள் கிழிக்கப்பட்டு அதனால் அவர்களின் கன்னங்களிலிருந்து இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அதைப்பார்த்து இவர்கள் யாரென கேட்டேன். (அதற்கு) அவ்விருவரும், இவர்கள்தான் நோன்பு திறக்கும் நேரத்திற்கு முன்பாக நோன்பை திறந்தவர்கள் எனக்கூறினார்கள்.
(அறிவிப்பவர்:- அபூஉமாமா அல் பாஹிலி(ரழி) (அந் நஸாயி பிஃல் குப்ரா)

ரமழான் மாதத்தின் சிறப்பு

அல்குர்ஆன் அருளப்பட்ட மாதம்:
‘ரமழான் மாதம் எத்தகையது என்றால் மனிதர்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய, சத்தியத்தை அசத்தியத்தை பிரித்துக் காட்டும் அல் குர்ஆன் அருளப் பெற்றது, உங்களில் எவர் அம்மாதத்தை அடைவாரோ அவர் அம்மாதத்தில் நோன்பு நோற்கட்டும்’ (அல்பகரா 2: 185).

‘ரமழானின் ஒவ்வொரு இரவிலும் ஜிப்ரீல் (அலை) நபி (ஸல்) அவர்களை சந்தித்து அல்குர்ஆனை ஓதிக்காட்டுவார்கள்’ (புஹாரி).. இச்செய்திகள் அல்குர்ஆனுக்கும் ரமழானுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை தெளிவுபடுத்துகிறது. அல் குர்ஆனுடனான தொடர்பை குறைத்துக்கொண்ட அதிகமான முஸ்லிம்கள் இச் சந்தர்ப்பத்திலிருந்தாவது அல் குர்ஆனை படிப்பதன் மூலம், அதனை ஆராய்வதன் மூலம், அதன் வழி நடப்பதன் மூலம், வாழ்க்கையின் எல்லா சந்தர்ப்பங்களிலும் அதை தீர்வாக ஆக்கிக் கொள்வதன் மூலம் அதன் பக்கம் நெருக்கத்தை அதிகப்படித்துக் கொள்வதற்கு முன்வரவேண்டும்.

சுவர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படும்:
‘ரமழான் மாதம் வந்துவிட்டால் சுவர்க்கத்தின வாயில்கள் திறக்கப்படும், நரகத்தின் வாயில்கள் மூடப்படும், ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி).

நரகத்திற்குரியவர்கள் விடுதலை:
‘ரமழானுடைய ஒவ்வொரு இரவிலும் பகலிலும் நரகத்திற்குரியவர்கள் விடுதலைச் செய்யப்படுகின்றனர், இன்னும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் ஏற்றுக் கொள்ளத்தக்க ஒரு பிரார்த்தனை இருக்கிறது’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்).

பாவங்களுக்கு பரிகாரம்:
‘ஐந்து வேளைத் தொழுகை, ஒரு ஜும்ஆவிலிருந்து மற்றொரு ஜும்ஆ, ஒரு ரமழானிலிருந்து மற்றொரு ரமழான் அவைகளுக்கு மத்தியில் நிகழ்ந்த பாவங்களுக்கு பரிகாரமாகும். பெரும் பாவங்களைத் தவிர’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

‘தன் குடும்பத்தார், தன் செல்வம், தன் குழந்தைகள், தன்னில், தன் அண்டை வீட்டார் ஆகியோர் விஷயத்தில் ஒரு மனிதன் செய்யும் தவறுகளுக்கு தொழுகை, நோன்பு, தர்மம், நன்மையை ஏவி தீமையை தடுத்தல் ஆகியவை பரிகாரமாக அமைகின்றன.’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஹுதைபா (ரலி), ஆதாரம்: புஹாரி).

நன்மைகளை அதிகப் படுத்துவதற்கான அழைப்பு:
‘ரமழானின் முதல் இரவு வந்து விடுமானால் ஷைத்தான்களும், அட்டூழியம் புரியும் ஜின்களும் விழங்கிடப்படுகின்றனர். நரகத்தின் அனைத்து வாயில்களும் மூடப்படும் அதில் ஏதும் திறக்கப்படமாட்டாது, சுவர்க்கத்தின் அனைத்து வாயில்களும் திறக்கப்படும் அதில் ஏதும் மூடப்படமாட்டாது. ஓர் அழைப்பாளர் நன்மையை விரும்புபவர்களே அதிகம் நன்மை செய்யுங்கள், பாவங்களை விரும்புபவர்களே பாவங்களை நிறுத்திக்கொள்ளுங்கள் என்று அழைப்பு விடுப்பார். ஒவ்வொரு இரவும் நரகத்திற்குரியவர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர்.’ என நபிகள் நாயகம் (ஸல்ய) அவர்கள் கூறினார்கள் (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: திர்மிதி, இப்னுமாஜா).

ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவு:
ரமழான் மாதத்தில் லைலதுல் கத்ர் என்ற ஒரு இரவு இருக்கிறது, அது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்ததாகும்.

நன்மையில் நிறைவான மாதம்:
துல் ஹஜ், ரமழான் ஆகிய பெருநாட்களுக்குரிய இரண்டு மாதங்கள் சேர்ந்தாற்போல் குறையாது’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி), புஹாரி).

இந்த ஹதீஸுக்கு இஸ்ஹாக் (ரஹ்) விளக்கமளிக்கும் போது: (எண்ணிக்கையில் இருபத் தொன்பது நாட்களாகக் குறைந்தாலும் (நன்மையில்) அது நிறைவானதாகும்’ என்று இஸ்ஹாக் (ரஹ்) கூறினார்.

ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பதன் சிறப்பு:

முன் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு:
‘எவர் இறைநம்பிக்கையுடனும் மறுமையின் நற்கூலியைப்பெறுகின்ற எண்ணத்துடனும் ரமழான் மாதத்தின் நோன்புகளை நோற்பாராயின், அவர் முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும். எவர் ரமழானின் இரவுக்காலங்களில் இறைநம்பிக்கையுடனும் மறுமையின் நற்கூலியைப் பெற்றுக்கொள்ளும் எண்ணத்துடனும் நின்று வணங்குவாராயின் அவர் முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்).

நோன்பு பரிந்து பேசும்:
‘நோன்பும், அல் குர்ஆனும், மறுமையில் ஓர் அடியானுக்காக பரிந்து பேசும். நோன்பு கூறும், ‘நான் இவ்வடியானை உணவை விட்டும், இச்சைகளை விட்டும் தடுத்திருந்தேன் இவன் விடயத்தில் பரிந்துரைப்பாயாக’! அல் குர்ஆன் கூறும் ‘நான் இவனை இரவில் தூங்கவிடாமல் தடுத்திருந்தேன் எனவே இவனுக்கு பரிந்துரை செய்வாயாக’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்).

நோன்பை போன்ற ஓர் வணக்கம் இல்லை:
‘நான் நபிகளார் (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! எனக்கு அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைத் பெற்றுத் தரும் ஒரு காரியத்தை கட்டளையிடுவீராக எனக் கேட்டேன். அதற்கு அன்னார் நான் உனக்கு நோன்பை உபதேசிக்கிறேன், அதை போன்று ஒன்று இல்லை’ என கூறினார்கள், என அபூ உமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நஸாஈ).

கணக்கின்றி கூலி வழங்கப்படும்:
‘ஆதமுடைய மகனின் ஒவ்வொரு அமலுக்கும் (செயலுக்கும்) பத்திலிருந்து எழு நூறு மடங்கு வரை கூலி பெருக்கி கொடுக்கப்படுகிறது நோன்பைத் தவிர. நிச்சயமாக அது எனக்குரியதாகும், நானே அதற்கு கூலி வழங்குவேன்’ என அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி).

நோன்பின் கூலி சுவர்க்கம்:
‘நிச்சயமாக சுவர்க்கத்தில் ஒரு வாயில் இருக்கிறது, அதற்கு ரய்யான் என்று சொல்லப்படும். அவ்வாயில் வழியாக நோன்பாளிகள் மாத்திரம் நுழைவார்கள், அவர்கள் தவிர வேறு யாரும் அவ்வழியே நுழைய மாட்டார்கள், அவர்கள் நுழைந்தவுடன் அவ்வாயில் மூடப்பட்டு விடும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).

நரகத்தை விட்டு பாதுகாப்பு:
அல்லாஹ்வின் வழியில் ஒருவர் ஒரு நாள் நோன்பு வைத்தால், அந்த நாளிற்கு பகரமாக அவரின் முகத்தை நரகத்தை விட்டும் எழுபது ஆண்டுகள் அல்லாஹ் தூரமாக்குகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஸயீதுல் குத்ரி (ரழி), ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்).

‘நோன்பு ஒரு அடியானை நரகத்தை விட்டு தடுக்கும் கேடயமாகும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அத்தபரானி அல்கபீர்).

மனோ இச்சைகளை விட்டுத் தடுக்கும்:
‘வாலிபர்களே! உங்களில் திருமணம் முடிப்பதற்கு சக்தியுடையவர்கள் திருமணம் செய்து கொள்ளட்டும். நிச்சயமாக அது பார்வையை தாழ்த்தக்கூடியதாகவும், மர்மஸ்தானத்தை தவறான வழியின் பக்கம் செல்வதை விட்டுத் தடுக்கக்கூடியதாகவும் இருக்கும். எவர் திருமணம் முடிக்க சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு இருக்கட்டும், நிச்சயமாக அது அவரை (தவறானவைகளை) விட்டு பாதுகாக்கும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).

நோன்பாளிக்கு ஈருலகிலும் மகிழ்ச்சி:
‘நோன்பாளிக்கு இரு மகிழ்ச்சிகள் உள்ளன: ஒன்று அவன் நோன்பு திறக்கும் நேரத்தில் ஏற்படக்கூடியது, மற்றது (நாளை மறுமையில்) அவனது ரப்பை சந்திக்கும் பொழுது ஏற்படக்கூடியது’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(புஹாரி, முஸ்லிம்).

கஸ்தூரியை விட சிறந்த வாடை:
‘எனது உயிர் எவன் கை வசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக நோன்பாளியின் வாயிலிருந்து வரக்கூடிய வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியை விட சிறந்ததாகும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புஹாரி, முஸ்லிம்).

மேற்கூறப்பட்ட ஹதீஸை சிலர் தவறாக விளங்கியதன் காரணத்தால், பஜ்ருக்கு அதான் சொன்னது முதல் நோன்பை திறக்கும் வரை பல் துலக்காமல் இருக்கின்றனர். இதனால் சிலர் முன்னால் இருந்து பேசுவதோ அவர்களுக்கு பக்கத்திலிருந்து தொழுவதோ பலருக்கு கஷ்டமாக இருக்கின்றது. ‘நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது பல் துலக்குவதை எண்ணிலடங்காத தடவைகள் நான் பார்த்திருக்கிறேன்.’ (அறிவிப்பவர்: ஆமிர் இப்னு ரபீஆ (ரழி), புஹாரி). என்ற இந்தச் செய்தி இவர்களுக்குத் தெரியாததே இதற்குக் காரணம்.

நோன்பு எனக்குரியது என்ற அல்லாஹ்வின் வாக்கு:
‘மனிதனின் அனைத்து செயல்களும் அவனுக்குரியதே. ஆனால் நோன்பைத் தவிர. இது எனக்குரியதாகும். இதற்கும் நானே கூலி கொடுப்பேன் என்று அல்லாஹ் கூறுகிறான்.’ (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்).

ரமழான் மாத நோன்பை நாம் எவ்வாறு உறுதி செய்வது:

இரண்டு அம்சங்களில் ஒன்றைக்கொண்டு ரமழானை உறுதிப்படுத்துதல்

1. நோன்பு மாதத்திற்கான பிறையை காணுதல்:
எவர் நோன்பு மாதத்திற்கான பிறையை காண்கின்றாரோ அவர் மீது நோன்பு நோற்பது கடமையாகும். அல்லது பருவ வயதையடைந்த நீதமான ஒருவர் பிறையைக்கண்டதாக சாட்சி கூறினால் அந்த சாட்சியத்தின் அடிப்படையில் நோன்பு நோற்பது கடமையாகும்.

2. ஷஃபான் மாத முப்பது நாட்களையும் பூரணமாக்குதல்:
இருள் அல்லது மேகம் அல்லது பிறையைக் காண முடியாது தடுக்கக்கூடிய காரணிகள் எதுவும் இல்லாவிட்டால் ஷஃபான் மாத முப்பது நாட்களையும் பூர்த்தியாக்க வேண்டும்.

நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:-
நீங்கள் ரமழான் பிறையைக்கண்டு நோன்பு பிடியுங்கள், ஷவ்வால் பிறையைக்கண்டு நோன்பை விடுங்கள். உங்களுக்கு பிறை தென்படாவிட்டால் ஷஃபான் முப்பது நாட்களை பூர்த்தி செய்யுங்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), புஹாரி, முஸ்லிம்).

‘மனிதர்கள் பிறையை பார்த்தனர், நான் பார்த்ததை நபிகளார் (ஸல்) அவர்களுக்கு அறிவித்தேன். நபிகளார் (ஸல்) அவர்கள் நோன்பு வைத்தார்கள், மக்களையும் நோன்பு நோற்குமாறு ஏவினார்கள்.’ (அறவிப்பவர்: இப்னு உமர் (ரலி), ஆதாரம்: அபூதாவுத், தாரமி, இப்னு ஹிப்பான், ஹாகிம்).

சந்தேகத்திற்குரிய நாளில் நோன்பு நோற்பது தடை:
யார் சந்தேகத்திற்குரிய நாளில் நோன்பு நோற்பாரோ அவர் காஸிமின் தந்தை (நபிகள் நாயகம் (ஸல்) அவர்களு)க்கு மாறு செய்து விட்டார் என அம்மார் (ரலி) கூறினார்கள் (புஹாரி).

‘ரமழானுக்கு ஓரிரு நாட்கள் மாத்திரம் இருக்கும் போது நீங்கள் நோன்பு நோற்க வேண்டாம். வழமையாக நோன்பு வைக்கும் ஒரு மனிதரைத் தவிர, அவர் மாத்திரம் அந்நாளில் நோன்பு வைத்து கொள்ளட்டும்’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), (புஹாரி, முஸ்லிம்).

பிறையை பார்க்கும் போது கூறவேண்டிய பிரார்த்தனை:
நபி (ஸல்) அவர்கள் பிறையைப் பார்த்து விட்டால் ‘அல்லாஹும்ம அஹில்லஹு அலய்னா பில் அம்னி வல் ஈமானி வஸ்ஸலாமதி வல் இஸ்லாமி, ரப்பீ வரப்புகல்லாஹு’ என்று கூறுவார்கள். (இறைவனே! பாதுகாப்பு, இறை நம்பிக்கை, அமைதி இஸ்லாம் ஆகியவை மூலம் இதை எங்கள் மீது தோன்றச் செய்வாயாக! பிறையே! என் இறைவனும், உன் இறைவனும் அல்லாஹ்தான். (அறிவிப்பவர்: தல்ஹா இப்னு உபைதுல்லாஹ், திர்மிதி).

நோன்பின் நிய்யத்:
பர்ழான நோன்பை நோற்பதற்காக இரவில் நிய்யத்தைக் குறிப்பாக்குவது அதாவது நோன்பு நோற்பதாக மனதால் நினைப்பது கடமையாகும். அது ரமழான் மாத நோன்பா? அல்லது குற்றப்பரிகாரத்திற்கான நோன்பா? அல்லது நேர்ச்சைக்குரிய நோன்பா? என்பதை அவரது நிய்யத்தின் மூலம் நாடவேண்டும்.

நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:-
எவர் பஜ்ருக்கு முன் நோன்பு நோற்பதாக நிய்யத் வைக்கவில்லையோ அவருக்கு நோன்பு இல்லை. (அஹ்மத், இப்னு ஹுஸைமா, இப்னு ஹிப்பான்)

இந்த ஹதீஸிலிருந்து, இரவின் ஆரம்பம் அல்லது அதனுடைய மத்தி அல்லது அதன் கடைசி போன்றவற்றிற்கிடையில் நிய்யத் வைப்பதில் எந்த வேறுபாடும் இல்லை என்பதை அறியமுடிகின்றது.

இரவில் நோன்பு நோற்பதாக நிய்யத்வைத்து பஜ்ர் உதயமானதற்குப்பின் அவர் விழித்தால் அவர் உணவைத் தடுத்துக்கொள்ள வேண்டும். அல்லாஹ் நாடினால் அவருடைய நோன்பு சரியானதாகும். ஸுன்னத்தான நோன்பிற்கு பஜ்ர் உதயமானதற்குப் பின்னிருந்து எந்த உணவையும் உண்ணாமலிருந்தால் பகல் வேளையில் நிய்யத் வைப்பது கூடும். இதற்கு ஆதாரமாக பின்வரும் ஹதீஸ் அமைந்துள்ளது.

அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் கூறினார்கள்:
ஒரு நாள் நபிகளார்(ஸல்) அவர்கள் என்னிடம் வந்து உங்களிடம் ஏதாவது உணவு இருக்கின்றதா? என்று கேட்டார்கள். அதற்கு நாம் இல்லை என்று கூறினோம். அதற்கவர்கள் அப்படியென்றால் நான் நோன்பாளி என்று கூறினார்கள். (முஸ்லிம், திர்மிதி, அபூதாவுத், நஸாயி, இப்னுமாஜா).

நிய்யத்தின் இடம் உள்ளமாகும். நிய்யத்தை வாயால் மொழிவது வழி கேடான பித்அத்தாகும். நபிகளார் (ஸல்) அவர்கள் காட்டித்தாரத எந்த ஒன்றும் மார்க்கமாகாது, அவ்வாறு ஒருவர் செய்வாராயின் அது அல்லாஹ்விடத்தில் நிராகரிக்கப்படும். நோன்பிருக்கும் பலர் நிய்யத் வைக்கிறோம் என்ற பெயரில் ‘நவய்து ஸவ்ம அதின் அன்னதாயி பஃர்ழ ரமழானி ஹாதிஹிஸ் ஸனதி லில்லாஹி தஆலா’ (இந்த வருடத்தின் பஃர்ழான ரமழான் நோன்பை அல்லாஹ்விற்காக நாளை பிடிக்க நிய்யத் வைக்கிறேன்) என்று சில வார்த்தைகளை வாயால் மொழிகின்றனர். இது தெளிவான வழிகேடாகும், மாறாக நிய்யத்தை மனதால் என்னுவது தான் நபிகளாரின் வழி முறையாகும்.

ஸஹருடைய நேரத்தின் சிறப்பு

நோன்பிருக்கும் பலர் தெரிந்தோ தெரியாமலோ ஸஹர் செய்வதை தவற விடுகின்றனர். அவர்கள் இரவில் தூங்கச் செல்லும் போதே நோன்பின் நிய்யதை வைத்து விடுகின்றனர். இதன் மூலம் பலருக்கு ஃபஜ்ர் தொழுகை கூட தவறிப் போய் விடுகிறது. எவ்வாறு ஒரு முஸ்லிமின் மீத நோன்பு கடமையோ அதே போன்று பஃஜுருடைய தொழுகையும் அவன் மீது கடமையாகும். எந்த ஒரு முஸ்லிமும் ஃபஜ்ர் தொழுகை விஷயத்தில் அலட்சியமாக இருக்கக்கூடாது.

ஸஹர் நேரத்தின் சிறப்பு, ஸஹர் செய்வோருக்கு கிடைக்கும் அல்லாஹ்வின் அருள் பற்றி இவர்கள் தெரிந்து வைத்திருந்தால் ஒரு போதும் அதை தவர விடமாட்டார்கள். அல்லாஹ் தனது திருமறையில் இறையச்சமுடையோர் பற்றி குறிப்பிடும் போது:

‘(இன்னும் அவர்கள்) பொறுமையுடையோராகவும், உண்மையாளராகவும், அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்படுவோராகவும், (இறைவன் பாதையில்) தான தர்மங்கள் செய்வோராகவும், (இரவின் கடைசி) ஸஹர் நேரத்தில் (வணங்கி, நாயனிடம்) மன்னிப்புக் கோருவோராகவும் இருப்பர்.’ (3: 17).

‘அவர்கள் இரவில் மிகவும் சொற்ப நேரமேயன்றித் தூங்க மாட்டார்கள். அவர்கள் விடியற் காலங்களில் (ஸஹர் நேரத்தில் அல்லாஹ்விடம்) மன்னிப்புக் கோரிக் கொண்டிருப்பார்கள்.’ (51: 17,18).

ஓவ்வொரு இரவிலும், இரவின் மூன்றில் ஒரு பகுதி இருக்கும் போது எமது ரப் (அல்லாஹ்) துன்யாவின் வானத்திற்கு இறங்கி, என்னிடம் யார் பிரார்த்திப்பார்களோ அவர்களது பிரார்த்தனையை நான் ஏற்றுக்கொள்கிறேன், என்னிடம் கேட்கக்கூடியவர்களுக்கு நான் கொடுப்பேன், என்னிடம் பாவ மன்னிப்பு தேடுபவர்களுக்கு நான் மன்னிப்பை வழங்குவேன்.’ என கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: புஹாரி).

மேற்குறிப்பிட்ட இறை வசனங்களின் மூலமும், நபி மொழியின் மூலமும் ஸஹர் நேரத்தின் சிறப்பை நன்றாக புரிந்து கொள்ள முடியும். அந்த நேரம் பிரார்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படும், பாவங்கள் மன்னிக்கப்படும், தேவைகள் நிறைவேற்றப்படும் உயர்ந்த நேரமாக இருக்கின்றது. எனவே அந்த நேரத்தில் அல்லாஹ்விடம் அதிகம் அதிகம் கைகளை ஏந்தி பிரார்த்தித்து அல்லாஹ்வுடைய அருளை பெற்றுக்கொள்ள முனைவோமாக!

ஸஹர் செய்வதன் சிறப்பு:

நீஙகள் ஸஹ்ர் செய்யுங்கள், ஏனெனில் ஸஹ்ர் உணவில் பரக்கத் உள்ளது’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி), ஆதாரம்: புஹாரி).

அல்லாஹ் அருள் புரிகிறான்:
‘ஸஹர் உணவு பரக்கத் நிறைந்ததாகும், அதை நீங்கள் விட்டுவிட வேண்டாம். ஒரு மிடரு தண்ணீரையாவது குடிப்பதை கொண்டு ஸஹர் செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ் ஸஹர் செய்பவர்கள் மீது அருள்புரிகிறான், வானவர்கள் அல்லாஹ்விடத்தில் அவர்களுக்கு அருள்வேண்டி பிரார்த்திக்கின்றனர்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்). முஸ்லிம்கள் பலர் இந்தப் பாக்கியங்களை தவற விடுவது கவலையான விடயமாகும்.

வேதக்காரர்களுக்கு மாற்றம் செய்தல்:
‘நமது நோன்புக்கும் வேதக்காரர்களுடைய நோன்புக்கும் மத்தியில் உள்ள வேறுபாடு ஸஹர் உணவு உட்கொள்வதாகும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).

ஸஹர் செய்வதை பிற்படுத்தல்:
‘எனது சமுதாயத்தினர் ஸஹர் செய்வதை பிற்படுத்தும் காலம் வரையும், நோன்பு திறப்பதை அவசரப்படுத்தும் காலம் வரை நன்மையில் இருக்கின்றனர்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி).

நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் ஸஹர் செய்தோம். பின்பு தொழுகைக்காக நாங்கள் நின்றோம் என்ற ஸைத் (ரலி) கூறியதும், ‘அவ்விரண்டுக்கும் இடையே எவ்வளவு நேரம் இடைவெளி இருந்தது?’ என்று கேட்கப்பட்டது. ‘ஐம்பது வசனங்கள் ஓதும் அளவுக்கு’ என்று பதில் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸைத் இப்னு ஸாபித் (ரலி), ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்).

ஸஹ்ல் பின் ஸஃத் (ரழி) அவர்கள் கூறியதாவது: ‘நான் என் குடும்பத்தாருடன் ஸஹர் செய்து விட்டு நபி (ஸல்) அவர்களுடன் (ஸுப்ஹுத் தொழுகையை அடைவதற்காக விரைவாகச் செல்வேன்’ (புஹாரி).

நபி (ஸல்) அவர்களிடம் பாங்கு கூறுபவர்கள் இருவர் இருந்தனர். ‘பிலால் (ரழி) அவர்கள் (ஃபஜ்ர் நேரத்திற்கு முன்) இரவிலேயே பாங்கு சொல்வார்கள், அப்போது நபி (ஸல்) அவர்கள். ‘இப்னு உம்மி மக்தூம் பாங்கு சொல்லும் வரை உண்ணுங்கள், பருகுங்கள் ஏனெனில் அவர் தாம் ஃபஜ்ர் (வைகறை) நேரம் வந்ததும் பாங்கு சொல்கிறார்’ என்று குறிப்பிட்டார்கள்.’ (அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி), ஆதாரம்: புகாரி, முஸ்லிம்).

வானொலி, தொலைக்காட்சி மூலமாக ஸஹர் முடிவு நேரம் இது என்று பஃஜ்ருடைய அதானுக்கு முன் ஒரு நேரத்தை அறிவிக்கின்றனர், ஒரு சிலர் அறிவிக்கப்பட்ட அந்த நேரத்துக்குப் பின் எழுந்து விட்டால் எந்த ஒன்றையும் சாப்பிடாமல், குடிக்காமல் பசியுடனே நோன்பு இருக்கின்றனர். இது அல்லாஹ்வோ, அல்லாஹ்வின் தூதரோ சுமத்தாத வீணான ஒரு சுமையாகும். மேலே உள்ள ஹதீஸிலிருந்து நமக்கு தெளிவாக விளங்குவது என்னவென்றால் பஃஜுடைய அதான் வரை தாராளமாக ஒருவருக்கு உண்ணுவதற்கு பருகுவதற்கு முடியும் என்பதை. தனது மனோ இச்சைகளை அல்லாஹ்வின் மார்க்கத்தில் நுழைவிப்பவர்களுக்கு அல்லாஹ் பின் வரும் வசனத்தின் மூலம் கடுமையாக எச்சரிக்கின்றான்:

மேலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப் பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை, ஆகவே, அல்லாஹ்வுக்கும், அவனுடைய ரஸுலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். (33: 36).

அதே போன்று இன்னும் சிலர் பஜ்ருடைய அதான் சொல்லப்பட்டுவிட்டது என்பதை உறுதியாக தெரிந்ததன் பின்பும் சாப்பிடுவதை ஆரம்பிக்கின்றனர். இது அவர்களது அன்றைய தின நோன்பை செல்லுபடியற்றதாக ஆக்கிவிடும். நபியவர்கள் பஃஜ்ருடைய அதானை கேட்கும் போது உண்ணுவதை பருகுவதை மேலே உள்ள ஹதீஸில் நிறுத்த சொல்லியிருக்கிறார்கள்.

இங்கே சுற்றிக்காட்டப்பட வேண்டிய மற்றுமொரு விஷயம் என்னவெனில், அபூதாவுத், இப்னு மாஜா போன்ற கிரந்தங்களில் பதிவாகி இருக்கும் ஒரு செய்தியில் ஒருவர் ஸஹருடைய உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது பஃஜ்ருடைய அதான் சொல்லப்பட்டால் அவர் அதில் தேவையானதை எடுத்துக்கொள்ளட்டும் என வந்துள்ளது.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: உங்ளில் எவராவது உணவுத் தட்டு கையில் இருக்கும் போது (பஃஜ்ருடைய) பாங்கோசையை செவிமடுத்தால் அவர் தமக்கு தேவையானதை எடுத்துக் கொள்ளும் வரை தட்டை வைக்க வேண்டாம்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவுத், இப்னு மாஜா). இந்த ஹதீஸ் ஹஸன் ஸஹீஹ் தரத்தில் உள்ளது என ஷைகு அல்பானி (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

நோன்பாளி செய்யவேண்டியவைகள்:

தொழுகையை உரிய நேரத்தில் ஜமாஅத்துடன் நிரைவேற்றல்:
நோன்பிருக்கும் பலர் தொழுகை விஷயத்தில், தொழுகையை கூட்டாக நிறைவேற்றும் விஷயத்தில் அலட்சியமாக இருக்கின்றனர். ஒரு முஸ்லிம் எவ்வாறு நோன்பு என் மீது கடமை என்பதை உணர்ந்து அதை நோற்கின்றானோ அதே போன்று தொழுகையும் என் மீது கடமை என்பதை தெளிவாக விளங்கி அதை உரிய நேரத்தில் நிறைவேற்ற வேண்டும். அனைத்து வணக்கங்களை விட தொழுகைக்கு இஸ்லாத்தில் ஒரு மகத்தான இடமிருக்கின்றது. ‘தொழுகையை ஒருவர் வேண்டுமென்று விடும் போது அவர் காஃபிர், நமக்கும் அவர்களுக்கும் மத்தியில் உள்ள உடன்படிக்கை தொழுகை, எவர் தொழுகையை விட்டு விடுகிறாரோ அவர் காஃபிராகி விட்டார்.’ என்று நபியவர்கள் கூறிய ஆதாரப்பூர்வமான செய்திகள் பதிவாகி இருக்கும் போது எவ்வாறு இதில் ஒரு முஸ்லிம் அலட்சியமாக இருக்க முடியும்? இந்த ஹதீஸ்களை ஆய்வு செய்யும் போது தொழுகையை விடும் ஒரு முஸ்லிமுடைய நோன்பே கேள்விக்குறியாகி விடுகின்றது.

அல்குர்ஆனை ஓதுதல், அதை விளங்குதல், அதன்படி செயல்படுதல்:
அல்குர்ஆனுக்கும், ரமழானுக்கும் உள்ள நெறுங்கிய தொடர்பை நாம் மேலே விளக்கியுள்ளோம். அல்குர்ஆன் அருளப்பட்ட நோக்கத்தை இன்னும் சரியான முறையில் விளங்காமல் முஸ்லிம்களில் பலர் இருப்பது வேதனைக்குரிய விடயமாகும். மரணித்தவர்களுக்கு ஓதுவதற்கும், வீட்டில் பரக்கத்துக்காக வைப்பதற்கும், தொங்கவிட்டு அழகு பார்ப்பதற்கும் அல்குர்ஆன் அருளப்பட்டதாக பலர் தவறாக நினைத்துக்கொண்டிருக்கின்றனர்.

அல்குர்ஆனை ஓதுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்:
‘மேலும் குர்ஆனைத் தெளிவாகவும், நிறுத்தி, நிறுத்தியும் ஓதுவீராக!’ (முஸ்ஸம்மில்: 4)

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘அல்குர்ஆனை ஓதுங்கள், ஏனெனில் யார் அதனை ஓதினார்களோ அவர்களுக்கு அது மறுமையில் பரிந்துரை செய்யும்.’ (முஸ்லிம்).

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘குர்ஆனை ஓதிய மனிதருக்கு மறுமையில் உலகில் நீங்கள் குர்ஆனை ஒதியவாறு, இங்கும் நன்றாக ஓதிக் கொண்டு, சென்று கொண்டேயிருங்கள், நீங்கள் ஓதி இறுதியாக நிறுத்துமிடம் தான் உங்கள் தங்குமிடமாகும் என்று கூறப்படும்.’
(திர்மிதி, அபூதாவூத்).

‘அல்லாஹ்வின் வேதத்தில் ஒரு எழுத்தை ஒருவர் ஓதினால், அவருக்கு பத்து நன்மைகள் அதற்காக வழங்கப்படும்.’ (திர்மிதி, தாரமி).

அல்குர்ஆனை விளங்குவது:
‘அவர்கள் அல்குர்ஆனை ஆய்வு செய்ய வேண்டாமா? அவர்களின் உள்ளங்களுக்கு என்ன பூட்டு போடப்பட்டுள்ளதா?’ (47: 24).

‘அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா? (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.’ (4: 82).

அதன்படி செயல்படுவது:
‘அல்லாஹ் மிக அழகான விஷயங்களை வேதமாக இறக்கியருளினான். (இவை முரண்பாடில்லாமல்) ஒன்றுக்கொன்று ஒப்பான (முதஷாபிஹான)தாகவும், (மனதில் பதியுமாறு) திரும்பத் திரும்பக் கூறப்படுவதாகவும் இருக்கின்றன. தங்கள் இறைவனுக்கு எவர்கள் அஞ்சுகிறார்களோ அவர்களுடைய தொலி(களின் உரோமக்கால் )கள் (இவற்றைக் கேட்கும் போது) சிலிர்த்து விடுகின்றன. பிறகு, அவர்களுடைய தொலிகளும், இருதயங்களும் அல்லாஹ்வின் தியானத்தில் இளகுகின்றன. இதுவே அல்லாஹ்வின் நேர்வழியாகும். இதன் மூலம், தான் நாடியவர்களை அவன் நேர்வழியில் செலுத்துகிறான். ஆனால் எவனை அல்லாஹ் வழிகேட்டில் விட்டு விடுகிறானோ, அவனை நேர்வழியில் நடத்துவோர் எவருமில்லை.’ (39: 23).

‘நாம் ஒரு சாய்ந்திருந்த மனிதனின் பால் வந்தோம், மற்றொருவர் மிகப் பெரிய பாராங்கல்லை எடுத்து அவனது தலையில் போடுகிறார், அவனது தலை சுக்கு நூறாகி விடுகிறது. மறுபடியும் அவர் போய் அந்தப் பெரும் பாராங்கல்லை எடுத்து வருகிறார், அவனது தலை பழைய நிலைக்கு திரும்பி வீடுகிறது, மறுபடியும் அந்த பெரும் பாராங்கல்லை அவனது தலையில் போடுகிறார் அது நொறுங்கிப் போகிறது. இவ்வாறு இவன் தண்டிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறான். நபி (ஸல்) அவர்கள் இவன் யார் என கேட்டபோது, இவன் தான் அல்குர்ஆனைப் படித்து எனினும் அதை புறக்கனித்தவனாக, கடமையாக்கப்பட்ட தொழுகைகளையும் நிறைவேற்றாமல் தூங்கியவன் என பதிலளிக்கப்பட்டது.’ (புஹாரி, முஸ்லிம்).

ஸுன்னத்தான (உபரியான) வணக்கங்களில் அதிகம் ஈடுபடுதல்:
உபரியான வணக்கங்களை செய்வதன் மூலம் ஒரு அடியான் அல்லாஹ்வின் பால் நெறுங்கிக்கொண்டே இருக்கிறான் என்பது நபி மொழியாகும். எனவே நாம் அதிகம் அதிகம் உபரியான வணக்க வழிபாடுகளை செய்வதன் மூலம் அல்லாஹ்வினுடைய நெறுக்கத்தைப் பெற முயலவேண்டும். ரமழான் என்பது குறிப்பிட்ட சில நாட்களாக இருப்பதால் இந்த நாட்களை தூக்கத்தின் மூலம், வீணாண காரியங்களின் மூலம் செலவிடாமல் அல்லாஹ்வின் அன்பை பெற முடியுமான உபரியான வணக்கங்களை அதிகம் அதிகம் செய்வோமாக!

தான தர்மம் செய்தல்:
‘நபி (ஸல்) அவர்கள் மக்களிலேயே அதிகம் தர்மம் செய்பவராக இருந்தார்கள். அவர்களை ஜிப்ரீல் (அலை) சந்திக்கும் வேளையில் ரமழானில் மிக அதிகமாக நன்கொடையளிப்பவர்களாக இருந்தார்கள். ரமழானின் ஒவ்வொரு இரவிலும் அவர்களை ஜிப்ரீல் (அலை) அவர்கள் சந்தித்து, குர்ஆனை அவருக்கு கற்றுக்கொடுப்பார்கள். நபி (ஸல்) அவர்கள் தன்னை ஜிப்ரீல் (அலை) சந்திக்கும் வேளையில் வேகமாக வீசும் காற்றைவிட அதிக தர்மம் செய்பவர்களாக இருந்தார்கள்.’ (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரலி), புஹாரி, முஸ்லிம்).

அல்குர்ஆனின் மூலமும், நபிகளாரின் பொன் மொழிகளின் மூலமும் அதிகம் ஆர்வப்படுத்தப்பட்ட ஒரு விஷயம் தான் தான தர்மமென்பது. நோன்புடைய காலமென்பது ஒவ்வொரு முஸ்லிமும் பசியின், தாகத்தின் கொடுமையை நன்றாக உணரக்கூடிய ஒரு காலப்பகுதியாகும். நமது பல சகோதர முஸ்லிம்கள் பசியாலும், பட்டினியாலும் நமது ஊர்களில், பல நாடுகளில் வாடிக்கொண்டிருக்கின்றனர். எனவே நாம் அவர்களுக்கு உதவுவென்பது மிக உயரிய நன்மைகளை பெற்றுத் தரும் ஒரு செயலாகும். அது ஒவ்வொரு முஸ்லிமுடைய கடமையாகவும் இருந்து கொண்டிருக்கின்றது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. தான தர்மமென்பது ரமழான் காலத்தில் அதிகமாக செய்ய வேண்டிய ஒன்றென்பதை மேற் சொன்ன ஹதீஸ் நமக்கு தெளிவு படுத்துகிறது.

உம்ராச் செய்தல்:
ரமழானில் நிறைவேற்றப்படும் உம்ரா என்பது ஹஜ்ஜுடைய கூலியை பெற்றுத்தரும் என்பதற்கு பின் வரும் ஹதீஸ் ஆதாரமாக உள்ளது.

‘எவர் ரமழானில் உம்ராச் செய்வாரோ அவர் என்னுடன் ஹஜ்ஜை நிறைவேற்றியவர் போன்றாவார்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).

அதிகம் பிரார்த்தனைகளில் ஈடுபடுதல்:
நோன்பு காலங்களில் நோன்பாளியின் பிரார்த்தனைக்கு அல்லாஹ்விடம் தனி இடம் உண்டு என்பதை பின்வரும் ஹதீஸ் தெளிவு படுத்துகின்றது. எனவே நாம் அதிகம் அதிகம் அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டும். பிரார்த்னை என்பது உயரிய ஒரு வணக்கமாகும். நாம் எல்லா நிலைகளிலும் அல்லாஹ்விடம் மாத்திரம் பிரார்த்திக்கக்கூடியவர்களாக, அவனிடம் உதவி தேடுபவர்களாக இருக்க வேண்டும்.

‘ரமழானுடைய ஒவ்வொரு இரவிலும் பகலிலும் நரகத்திற்குரியவர்கள் விடுதலைச் செய்யப்படுகின்றனர், இன்னும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் ஏற்றுக் கொள்ளத்தக்க ஒரு பிரார்த்தனை இருக்கிறது’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்).

நோன்பாளி செய்யக்கூடாதவைகள்

இறை நம்பிக்கையாளனை பொறுத்த வரையில் அவன் எல்லாக்காலங்களிலும் உயரிய பண்புகளுடன் நடப்பதற்கும், அநாகரீமாக, அறிவீனமாக நடப்பதை விட்டு விலகி இருப்பதற்கும் வேண்டப்பட்டுள்ளான். அல்லாஹ் தனது திருமறையில் இறை விசுவாசிகளின், இறை நல்லடியார்களின் உயரிய பண்புகளை பற்றி குறிப்பிடும் போது:

‘இன்னும், அவர்கள் வீணான (பேச்சு, செயல் ஆகிய)வற்றை விட்டு விலகியிருப்பார்கள்.’ (23: 3).

‘அன்றியும் இவர்கள் வீணானதைச் செவியுற்றால், அதைப் புறக்கணித்து, ‘எங்களுக்கு எங்கள் செயல்கள், உங்களுக்கு உங்கள் செயல்கள், ஸலாமுன் அலைக்கும் (உங்களுக்குச் சாந்தி உண்டாகுக!) அறியாமைக்காரர்களை நாங்கள் விரும்புவதில்லை’ என்று கூறுவார்கள்.’ (28: 55).

‘இன்னும் அர்ரஹ்மானுடைய அடியார்கள் (யாரென்றால்) அவர்கள்தாம் பூமியில் பணிவுடன் நடப்பவர்கள், மூடர்கள் அவர்களுடன் பேசி(வாதா)ட முற்பட்டால், ‘ஸலாம்’ (சாந்தியுண்டாகட்டும் என்று), சொல்லி (விலகிப் போய்) விடுவார்கள்.’ (25: 63).

‘அன்றியும், அவர்கள் பொய் சாட்சி சொல்லமாட்டார்கள், மேலும், அவர்கள் வீணான காரிய(ம்நடக்கும் இட)த்தின் பக்கம் செல்வார்களாயின் கண்ணியமானவராக (ஒதுங்கிச்) சென்று விடுவார்கள்.’ (25: 72).

இறை நம்பிக்கையாளனிடம் நோன்பு காலங்களில் அதிகம் அதிகம் இந்தப் பண்பு வேண்டப்படுகிறது என்பதற்கு பின் வரும் ஹதீஸ்கள் ஆதாரமாகும்:

‘நோன்பு ஒரு கேடயமாகும். உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் நாளில் தம் நாவால் தீய வார்த்தைகளை பேச வேண்டாம். சச்சரவில் ஈடுபட வேண்டாம், கூச்சலிட வேண்டாம், அவரிடம் எவராயினும் வசை மொழி பேசினால் அல்லது சண்டையிட முனைந்தால் தாம் ஒரு நோன்பாளி என்பதை சொல்லிவிடட்டும்!’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்).

‘எவர் பொய் பேசுவதையும், பொய்யாக நடப்பதையும் விட்டுவிடவில்லையோ அவர் பசித்திருப்பதிலும், தாகித்திருப்பதிலும் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை.’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: புஹாரி).

‘எத்தனையோ நோன்பாளிகள் தங்கள் நோன்பினால் தாகத்தை தவிர வேறெதையும் பெற்றுக் கொள்ளவில்லை. எத்தனையோ இரவில் நின்று வணங்குபவர்கள் தங்கள் இரவு வணக்கத்தின் மூலமாக கண் விழித்திருந்ததைத் தவிர வேறெதையும் அவர்கள் பெற்றுக்கொள்ள வில்லை’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) ஆதாரம்: தாரமி).

‘நோன்பு ஒரு கேடயமாகும், எவர் (பகல் காலங்களில்) இல்லறத்தில் ஈடுபட வேண்டாம், அறிவீனமாக நடக்கவேண்டாம். எவராவது அவரை ஏசினாலோ, அவருடன் சண்டையிட்டாலோ நான் நோன்பாளி என்று இரண்டு முறை சொல்லட்டும். முஹம்மதின் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக நோன்பாளியின் வாயிலிருந்து வெளியாகும் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரியை விட நறுமணமிக்கதாகும். ஆவன் தனது உணவை, பானத்தை, இச்சை உணர்வை எனக்காகவே விட்டு விடுகிறான். நோன்பு எனக்குரியதாகும். நூன் தான் அதற்கு கூலி கொடுப்பேன், ஒரு நற்செயல் அது பத்து மடங்காக பெறுக்கப்படுகின்றது.’ (புஹாரி).

‘மனிதனின் அனைத்து செயல்களும் அவனுக்குரியதே. ஆனால் நோன்பைத் தவிர. இது எனக்குரியதாகும். இதற்கும் நானே கூலி கொடுப்பேன் என்று அல்லாஹ் கூறுகிறான். மேலும் நோன்பு கேடயமாகும். உங்களில் ஒருவர் நோன்பு வைத்தால், அந்நாளில் அவர் தீயதைப் பேச வேண்டாம். மேலும் கூச்சல் போட வேண்டாம். ஒருவர் நோன்பு வைத்தவரை திட்டினால் அல்லது சண்டை போட்டால், ‘நான் நோன்பாளி’ என்று அவர் கூறட்டும். முஹம்மதின் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக நோன்பாளியின் வாயிலிருந்து வெளியாகும் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரியை விட நறுமணமிக்கதாகும். நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உண்டு 1) நோன்பு திறக்கும் போது ஏற்படுகின்ற மகிழ்ச்சி, 2) அல்லாஹ்வை சந்திக்கும் போது நோன்பின் மூலம் கிடைக்கும் நன்மைகளால் ஏற்படுகின்ற மகிழ்ச்சி’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்).

நோன்பாளியைப் பொறுத்த வரையில் அவன் தனது வாயையும், வயிறையும், (பசியையும், தாகத்தையும்) கட்டுப்படுத்தி தியாகத்திற்கு மத்தியில் செய்யும் நோன்பென்ற வணக்கம் அவனது வீணாண காரியங்களால் பலனற்றுப் போய் விடுகின்றது என்பது மேற்குறிப்பிடப்பட்ட ஹதீஸ்களின் மூலம் விளங்கும் ஒரு உண்மையாகும்.

சினிமாக்கள், கேலிக்கைகள், இசைகளை செவிமடுத்தல், பிறரை பற்றி புறம் பேசுதல் இவ்வாறான வீணாண காரியங்களின் மூலம் நேரத்தை செலவளிப்பது எல்லாக்காலங்களிலும் ஹராமாக்கப்பட்ட செயல்களாக இருக்கும் போது நோன்பு காலங்களில் எவ்வாறு இவ்வாறான கேலிக்கைகளில் நேரத்தை விரயம் செய்ய முடியும்? இவ்வாறு நேரத்தை செலவளிப்பவர்களின் நோன்பில் எந்தப் பயனுமில்லை என்ற எச்சரிக்கை மேற்கூறப்பட்ட பொன் மொழிகளின் மூலம் விளங்க முடிகிறது.

நோன்பு திறத்தல்

நோன்பு திறப்பதை அவசரப்படுத்தல்:
‘மனிதர்கள் நோன்பு திறப்பதை அவசரப்படுத்தும் காலமெல்லாம் நன்மையில் இருப்பர்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஃத் (ரலி), ஆதார நூல்: புஹாரி).

நானும், மஸ்ரூக் அவர்களும் ஆயிஷா (ரழி) அவர்களிடம் வந்தோம். அவர்களிடம் மஸ்ரூக் ‘நபித்தோழர்களில் இருவர் உள்ளனர். அவ்விருவருமே நல்லவற்றில் குறைவு செய்வதில்லை. அவர்களில் ஒருவர், மஃரிப் தொழுகையையும், நோன்பு துறப்பதையும் விரைந்து செய்கிறார். மற்றொருவர் மஃரிப் தொழுகையையும், நோன்பு திறப்பதையும் தாமதப்படுத்துகிறார் என்று கேட்டார். மஃரிபையும் நோன்பு திறப்பதையும் விரைந்து செய்பவர் யார்? என்று ஆயிஷா (ரழி) அவர்கள் கேட்டார்கள். அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி)’ என்று பதில் கூறினார்கள் ‘இவ்வாறே நபி (ஸல்) அவர்களும் செய்தார்கள்’ என ஆயிஷா (ரழி) கூறினார்கள். (முஸ்லிம்).

நிச்சயமாக எனது அடியார்களில் எனது நேசத்திற்குரியவர்கள் நோன்பு திறப்பதை அவசரப்படுத்துபவர்களாவர்’ என அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி).

‘எனது சமுதாயத்தினர் ஸஹர் செய்வதை பிற்படுத்தும் காலம் வரையும், நோன்பு திறப்பதை அவசரப்படுத்தும் காலம் வரை நன்மையில் இருக்கின்றனர்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி).

எதைக்கொண்டு நோன்பு திறப்பது சிறந்தது:
செங்கனிந்த பேரீத்தங்காய், அது இல்லாவிட்டால் பேரீத்தம் பழம், அதுவும் இல்லாவிட்டால் தண்ணீர் அதுவும் இல்லாவிட்டால் ஏதாவது முடியுமான உணவு, பானங்களைக்கொண்டு நோன்பு திறப்பது ஸுன்னத்தாகும்.

‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (மஃரிப்) தொழுகைக்கு முன் செங்கனிந்த பேரீத்தங்காய், அது இல்லாவிட்டால் பேரீத்தம் பழம், அதுவும் இல்லாவிட்டால் தண்ணீரைக் கொண்டு நோன்பு திறப்பார்கள்.’ (அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி), ஆதாரம்: திர்மிதி).

‘உங்ளில் எவராவது நோன்பு திறக்கும் போது பேரித்தப் பழங்களைக் கொண்டு நோன்பு திறங்கள், ஏனெனில் அது பரக்கத் நிறைந்ததாகும். நீங்கள் பேரித்தப்பழங்களை பெற்றுக் கொள்ளவில்லையானால் தண்ணீரைக்கொண்டு திறங்கள், அது பரிசுத்தமானதாகும்.’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி).

‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குளிர் காலத்தில் பேரித்தம் பழங்களைக் கொண்டும், கோடை காலத்தில் தண்ணீரைக் கொண்டும் நோன்பு திறப்பார்கள்.’ (திர்மிதி).

‘இரவு இங்கிருந்து முன்னோக்கி வந்து, பகல் அங்கிருந்து திரும்பிச் சென்று, சூரியன் மறைந்து விட்டால், நோன்பாளி நோன்பு திறப்பார்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: உமர் இப்னு கத்தாப் (ரழி), ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்).

நோன்பு திறந்தவுடன் ஒருவர் ஓத வேண்டிய பிரார்த்தனை:

ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ الْعُرُوقُ وَثَبَتَ الْأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ

‘தஹபல் லமஉ வப்தல்லதில் உரூகு வஸபதல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ்’

பொருள்: நரம்புகள் நனைந்து விட்டன, தாகம் தீர்ந்து விட்டது, கூலி அல்லாஹ்வின் நாட்டத்தின் படி உறுதியாகி விட்டது’ (அபூதாவுத்)

நோன்பாளியை நோன்பு திறக்க வைப்பதன் சிறப்பு:
‘எவர் ஒருவரை நோன்பு திறக்க வைப்பாரோ அவருக்கு அந்த நோன்பாளிக்குக் கிடைக்கும் கூலியைப் போன்றே வழங்கப்படும். அவரது கூலியில் எந்த ஒன்றும் குறைக்கப்பட மாட்டாது’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், திர்மிதி).

பிறரிடத்தில் நோன்பு திறந்தால் ஓத வேண்டிய துஆ:

أَفْطَرَ عِنْدَكُمُ الصَّائِمُونَ وَأَكَلَ طَعَامَكُمُ الْأَبْرَارُ وَصَلَّتْ عَلَيْكُمُ الْمَلَائِكَةُ

‘அஃப்தர இன்தகுமுஸ் ஸாஇமூன வஅகல தஆமுகுமுல் அப்ரார வஸல்லத் அலைகுமுல் மலாஇகா’ (அபூதாவுத்).

பொருள்: நோன்பாளிகள் உங்களிடத்தில் நோன்பு திறந்தனர், உங்கள் உணவை நல்லவர்கள் உண்டனர், உங்கள் மீது வானவர்கள் அருள் வேண்டி பிரார்த்திக்கின்றனர்.’

நோன்பு திறக்கும் போது கேட்கப்படும் பிரார்த்தனை:
‘நிச்சயமாக நோன்பாளிக்கு நோன்பு திறக்கும் போது மறுக்கப்படாத ஒரு பிரார்த்தனை உண்டு’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இந்த ஹதீஸ் இப்னு மாஜா என்ற கிரந்தத்தில் 1753 ஹதீஸாக பதிவாகி உள்ளது. இந்த ஹதீஸ் பலவீனமானது என ஷைகு அல்பானி தனது அல் இர்வாஃ என்ற நூலில் (921) குறிப்பிடுகிறார்.

இரவு வணக்கம்:

இறை நம்பிக்கையாளன்:
நம் வசனங்களின் மேல் நம்பிக்கை கொண்டோர் யாரெனில் அவர்கள், அவற்றின் மூலம் நினைவூட்டப்பட்டால், அவர்கள் விழுந்து ஸுஜுது செய்தவர்களாய் தம் இறைவனைப் புகழ்ந்து, துதிப்பார்கள், அவர்கள் பெருமையடிக்கவும் மாட்டார்கள். அவர்களுடைய விலாக்களைப் படுக்கைகளிலிருந்து (தூக்கத்தைத் துறந்து) உயர்த்தி அவர்கள் தங்களுடைய இறைவனை அச்சத்தோடும் நம்பிக்கை ஆர்வத்தோடும் பிரார்த்தனை செய்வார்கள், மேலும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (தானதர்மங்கள்) செலவும் செய்வார்கள். அவர்கள் செய்த (நற்)கருமங்களுக்குக் கூலியாக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண்குளிர்ச்சியை (மறுமையின் பேரின்பத்தை) எந்த ஓர் ஆத்மாவும் அறிந்த கொள்ள முடியாது. (32: 15,16,17).

ரஹ்மானின் அடியார்கள் யார்?
‘இன்னும், அவர்கள் தங்கள் இறைவனை ஸஜ்தா செய்தவர்களாகவும், நின்றவர்களாகவும் வழிபாடு செய்து இரவிலிருப்பார்களே அவர்கள். எங்கள் இறைவனே! எங்களை விட்டும் நரகத்தின் வேதனையைத் திருப்புவாயாக, நிச்சயமாக அதன் வேதனை நிரந்தரமானதாகும்’ என்று கூறுவார்கள். (25: 64,65).

அறிவுடையோர் யார்?
‘எவர் மறுமையை அஞ்சி, தன் இறைவனுடைய ரஹ்மத்தை ஆதரவு வைத்து இராக்காலங்களில் ஸுஜுது செய்தவராகவும், நிலையில் நின்றவராகவும் வணங்குகிறாரோ அவர் (நிராகரிப்பவரைப் போல்) ஆவாரா? (நபியே!) நீர் கூறும்: ‘அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா?’ நிச்சயமாக (இக்குர்ஆனைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுவோர் அறிவுடையவர்கள் தாம்.’ (அஸ்ஸுமர் 39: 9).

அகிலத்துக்கே வழிகாட்டியாக அனுப்பப்பட்டவரை அல்லாஹ் எவ்வாறு பன்படுத்தினான்?
‘போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே! இரவில் – சிறிது நேரம் தவிர்த்து (தொழுகைக்காக எழுந்து) நிற்பீராக! அதில் பாதி (நேரம்) அல்லது அதில் சிறிது குறைத்துக் கொள்வீராக! அல்லது அதைவிடச் சற்று அதிகப் படுத்திக் கொள்வீராக. மேலும் குர்ஆனைத் தெளிவாகவும், நிறுத்தி, நிறுத்தியும் ஓதுவீராக! நிச்சயமாக நாம் விரைவில் கனமான – உறுதியான – ஒரு வாக்கை உம்மீது இறக்கி வைப்போம். நிச்சயமாக இரவில் எழு(ந்திருந்து வணங்கு)வது (அகத்தையும் புறத்தையும்) ஒருங்கிணைக்க வல்லது. மேலும் வாக்கையும் செவ்வைப் படுத்தவல்லது. (முஸ்ஸம்மில் 1- 7).

இரவு வணக்கம் என்பது எல்லாக் காலங்களிலும் செய்வதற்கு சுன்னத்தாக்கப்பட்ட ஒன்றாகும் என்றாலும் ரமழான் காலத்தில் இரவு வணக்கம் சிலாகித்து சொல்லப்பட்ட ஒன்றாகும் என்பதற்கு பின் வரும் ஹதீஸ் ஆதாரமாகும்:

நபி (ஸல்) அவர்கள் ரமழானில் நின்று வணங்கிட தன் தோழர்களுக்கு உறுதியாக கட்டளையிடாமல் ஆர்வமூட்டினார்கள். அப்போது அவர்கள், ‘எவர் இறைநம்பிக்கையுடனும், நன்மையை நாடியும் ரமழானில் நின்று வணங்குவாரோ அவர் முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்.’ என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம்: முஸ்லிம்).

இரவுத் தொழுகையின் எண்ணிக்கை:
ஆயிஷா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்களுடைய ரமழான் கால (இரவுத்) தொழுகை எவ்வாறு இருந்தது எனக் கேட்கப்பட்டது, அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களுடைய இரவுத் தொழுகை ரமழானிலும் ரமழான் அல்லாத காலங்களிலும் பதினொன்றாகவே இருந்தது’ என கூறினார்கள். (புஹாரி).

இரவுத் தொழுகையின் சிறப்பு:
‘ரமழானுக்குப் பின் சிறப்பான நோன்பு முஹர்ரம் மாதத்தின் நோன்பாகும், கடமையான தொழுகைக்குப் பின் சிறப்பான தொழுகை இரவுத் தொழுகையாகும்.’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), புஹாரி, முஸ்லிம்).

நபியவர்கள் மதீனாவுக்கு வந்த போது மக்களெல்லாம் நபியவர்கள் வருகை தந்து விட்டார்கள், நபியவர்கள் வருகை தந்து விட்டார்கள், நபியவர்கள் வருகை தந்து விட்டார்கள், என்று (மகிழ்ச்சி பொங்க) கூறியவர்களாக விரைந்தனர். நானும் மக்களோடு மக்களாக நபியை பார்ப்பதற்காக சென்றேன், அவரது முகத்தைப் பார்த்த மாத்திரத்தில் இது ஒரு பொய்யரின் முகம் இல்லை என்பதை உணர்ந்துக் கொண்டேன். நபியவர்கள் முதலாவது பேசிய வார்த்தைகள், “மனிதர்களே ஸலாத்தை பரப்புங்கள், உணவின்றி தவிப்போருக்கு உணவலியுங்கள், மனிதர்கள் தூங்குகின்ற போது எழுந்து தொழுங்கள் அமைதியாக சுவர்க்கம் நுழைவீர்கள்” என கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு ஸலாம், ஆதாரம்: திர்மிதி).

இரவுத் தொழுகையை கூட்டாக நிறைவேற்றல்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு நாள் இரவு மஸஜிதில் இரவுத் தொழுகையை நிறைவேற்றிய போது மக்களும் அன்னாருடன் இரவுத்தொழுகையை நிறைவேற்றினர், இரண்டாவது நாள் இரவு கூட்டம் அதிகமாகியது, மூன்றாவது அல்லது நான்காவது நாள் இன்னும் கூட்டம் அதிகமாகவே, நபியவர்கள் ஸுபஹ் நேரம் வரும் வரை தனது வீட்டைவிட்டு வெளியே வரவில்லை, அதன் பின் மக்களை பார்த்து இந்த இரவுத் தொழுகை உங்கள் மீது கடமையாகி விடுமோ என்ற அச்சம் தான் என்னை உங்களிடம் வருவதை தடுத்தது என கூறினார்கள். மற்றோர் அறிவிப்பில், “இந்த இரவுத் தொழுகை உங்கள் மீது கடமையாக்கப்பட்டு அதை உங்களால் நிறைவேற்ற முடியாமல் போய்விடுமோ என்ற அச்சம் தான் (என்னை உங்களிடம் வருவதை தடுத்தது) என வந்துள்ளது. (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்).

இமாமுடன் இறுதி வரை தொழுதவருக்கு இரவு முழுக்க நின்று வணங்கிய நன்மை:
‘நாம் ரமழானில் நபியவர்களுடன் சேர்ந்து நோன்பு நோற்றோம், (ரமழான்) மாதத்தில் ஏழு நாட்கள் மாத்திரம் எஞ்சியிருக்கும் போது நமக்கு நபியவர்கள் இரவினுடைய மூன்றில் ஒரு பகுதி வரை தொழுகை நடத்தினார்கள், ஆறாவது நாள் நபியவர்கள் தொழுகை நடத்தவில்லை. ஐந்தாவது நாள் பாதி இரவு வரை நமக்கு தொழுகை நடத்தினார்கள், நாங்கள் நபியிடத்தில் இரவின் மீதிப்பகுதியிலும் தொழுதிருக்கலாமே என்று சொன்னோம். அதற்கு நபியவர்கள் எவர் இமாமுடன் இறுதி வரை தொழுவாரோ அவர் இரவு முழுக்க நின்று வணங்கிய நன்மையை அல்லாஹ் அவருக்கு எழுதி விடுகிறான் என கூறினார்கள். பிறகு நபியவர்கள் மாதத்தில் மூன்று நாள் எஞ்சியிருக்கும் வரை நமக்கு தொழ வைக்கவில்லை. மூன்றாவது நாள் அவரது உறவினர், மனைவியர் அனைவரையும் ஒன்று சேர்த்து நமக்கு சஹர் தவறிப்போய் விடுமோ என்று நாம் பயப்படுமளவுக்கு இரவில் நமக்கு தொழுகை நடத்தினார்கள்.’ (அறிவிப்பவர்: அபூதர் (ரழி), ஆதாரம்: நஸாஈ).

பித்அத்துக்கு ஆதாரம் தேடுபவர்கள் உமர் (ரழி) அவர்களின் காலத்தில் தான் இரவுத் தொழுகை கூட்டாக நிறைவேற்றப்பட்டது எனவே இஸ்லாத்தின் பெயரால் பித்ஆக்களை உருவாக்க முடியும் என, உமர் (ரழி) அவர்களின் நிகழ்ச்சியை வைத்து வாதிடுகின்றனர். நபியவர்கள் இரவுத் தொழுகையை கூட்டாக நிறைவேற்றிய நாம் மேலே குறிப்பிட்ட ஆதாரத்தை வைத்துத் தான் உமர் (ரழி) அவர்கள் பள்ளியில் பிரிந்து தொழுதவர்களை உபை இப்னு கஃப் (ரழி) அவர்களின் இமாமத்தின் கீழ் ஒன்று படுத்தினார்கள். நபியவர்கள் எந்த அச்சத்தின் காரணத்தால் கூட்டாக நிறைவேற்றுவதை விட்டார்களோ அந்த அச்சம் உமர் (ரலி) அவர்களின் காலத்தில் வர வாய்ப்பில்லை, காரணம் நபியவர்களின் பிரிவோடு இஸ்லாம் என்ற மார்க்கம் முழுமை படுத்தப்பட்டுவிட்டது. எனவே அதற்குப்பின் எதுவும் கடமையாவதற்கு வாய்ப்பில்லை. சில பித்அத் வாதிகள் இந்த உண்மையை புரிந்து கொள்ளத் தவறியதனால் ஏற்பட்ட விளைவாகும்.

2 comments

  1. assalamu alaikum. alhamdulillah! this website is useful for us.

  2. masha allah v.good

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *