Index

17. விரைவாக நோன்பு திறப்பது சுன்னத்தாகும்


1) நோன்பு திறப்பதை, (தாமதிக்காது) அவசரப்படுத்தும் காலம் வரைக்கும் என் உம்மத்தினர் நலவிலேயே இருப்பார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி


2) நானும், மஸ்ரூக் என்பாரும் ஆயிஷா(ரலி) அவர்களிடத்தில் சென்று மூஃமின்களின் தாயே! நபி(ஸல்) அவர்களின் இரு தோழர்கள் நன்மை தேடும் விஷயத்தில் குறைவு செய்வதில்லை, ஒருவர் நோன்பு திறப்பதை அவசரப்படுத்தி நேரத்தோடு தொழுதும் விடுகின்றார். மற்றவர் நோன்பு திறப்பதைப் பிற்படுத்தி தொழுகையையும் பிற்படுத்துகின்றார் என்றனர். யார் நோன்பு திறப்பதையும் தொழுகையையும் அவசரப்படுத்துகின்றார்? என ஆயிஷா(ரலி) அவர்கள் கேட்டார்கள். அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) என்று நாங்கள் கூறினோம். அப்படித்தான் நபி(ஸல்) அவர்கள் செய்தார்கள் என ஆயிஷா(ரலி) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்


இன்னும் ஒரு அறிவிப்பில், மற்ற நபித்தோழர் அபூ மூஸா அல் அஷ்அரி(ரலி) அவர்கள் என்று வந்திருக்கின்றது. ஆதாரம்: திர்மிதீ


விளக்கம்: மஃரிப் நேரம் வந்ததும் நோன்பு திறப்பதே சுன்னத்தாகும். இன்று சிலர் மஃரிப் நேரம் வந்த பின்பும் நோன்பு திறக்காமல் பேணுதல் என்று சொல்லிக் கொண்டு சூரியன் மறைந்த பின்பும் நோன்பு திறப்பதைப் பிற்படுத்துகின்றார்கள். ஆனால் நபியவர்களோ மஃரிப் நேரம் வந்ததும் நோன்பை திறக்கச் சொல்லியிருக்கின்றார்கள். நபி(ஸல்) அவர்கள் கூறியதற்கு மாறாகச் செய்வது பேணுதலாகுமா? இது இஸ்லாத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்ட பித்அத்தாகும் என இப்னு ஹஜர்(ரஹ்) அவர்கள் கூறியிருக்கின்றார்கள். (பத்ஹல் பாரி 2:235)

 

முந்தைய பக்கம்

அடுத்த பக்கம்