Index | Subscribe mailing list | Help | E-mail us

2. இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தின் சிறப்பு

 

பெற்றோரோ, நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்ற (சொத்)தில் ஆண்களுக்குப் பாகமுண்டு. அவ்வாறே பெற்றோரோ, நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்ற (சொத்)தில் பெண்களுக்கும் உண்டு – (அதிலிருந்துள்ள சொத்து) குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரியே, (இது அல்லாஹ்வினால்) விதிக்கப்பட்ட பாகமாகும்.  அல்குர் ஆன் 4:7

அல்லாஹ் இந்த வசனத்தில் இறந்தவர் விட்டுச் சென்ற சொத்தில் ஆண்களுக்கும் பாகமுண்டு என்று கூறுகிறான். அதேபோல பெண்களுக்கும் பாகமுண்டு என்று கூறுகிறான். சொத்து குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரியே என்று குறிப்பிடுகிறான்.

சொத்து குறைவாக இருக்கிறது அல்லது அதிகமாக இருக்கிறது என்பது பிரச்சினை அல்ல. மாறாக, நெருங்கிய உறவினர் விட்டுச் செல்லும் சொத்தில் ஆண் வாரிசுகள், பெண் வாரிசுகள் ஒவ்வொருவருக்கும் நிர்ணயிக்கப்பட்ட பாகம் உண்டு என்று கூறியிருப்பதால் இந்த வாரிசுரிமை பற்றி ஒவ்வொருவரும் அறிந்து கொள்வது கட்டாயம் ஆகும்.

"யூகத்தின் அடிப்படையில் (வாரிசுரிமை பற்றிப்) பேசக் கூடியவர்கள் தோன்றுவதற்கு முன்பு (மிக முக்கிய அடிப்படைக் கல்வியான பாகப்பிரிவினை) கல்வியைக் கற்றுக் கொள்ளுங்கள்" என்று உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஆதாரம் : புகாரி (பாகப்பிரிவினையை கற்றுக் கொள்ளுங்கள் என்ற பாடம்) மற்றும் ரஸீன்

இன்று வரிசுரிமைக் கல்வி எவருக்கும் தெரிவதில்லை. அரபுக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கள் உட்பட அனைவருமே பாடம் படிக்க வேண்டுமென்ற நோக்கத்திலும், பாடம் கற்றுக் கொடுக்க வேண்டுமென்ற நோக்கத்திலும் தான் கற்றுக் கொள்கிறார்களே தவிர இது வாழ்வியல் பிரச்சினை என்ற ரீதியில் கற்றுக் கொடுப்பதில்லை; கற்றுக் கொள்வதுமில்லை. அதனால் கல்வி கற்கும்போது இப்பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் கூட, பின்னாளில் அது பற்றிக் கேட்கும்போது மறந்து விட்டேன் அல்லது தெரியாது என்று கூறுவதிப் பார்க்கிறோம்.

சொத்துரிமை பிரச்சினை சிக்கலாகி குடும்பப் பிரச்சினை தோன்றினால் மட்டுமே அரபுக் கல்லூரிகளுக்கு தீர்ப்புக் கேட்டு எழுதி அதன்படி செயல்படுகின்றனர். இல்லையெனில் யூகத்தின் அடிப்படையில் தான் பாகப்பிரிவினை செய்து கொடுப்பதைப் பார்க்கிறோம்.

சில குடும்பங்களில் ஆண்கள் மட்டுமே பெற்றோரின் சொத்துக்களை எடுத்துக் கொள்கின்றனர். பெண்களுக்கு எதுவும் கொடுப்பதில்லை. காரணம் கேட்டால், பெண்களைத் திருமணம் செய்து கொடுக்கும் போதே சீர்வரிசை, வரதட்சணை, நகை நட்டுக்கள் என அதிகமாகச் செலவு செய்து விட்டோம் என்று கூறி விடுகின்றனர். இது வரதட்சணை மற்றும் சீர்வரிசைகளின் தீய விளைவாகும். சிலர் தாயாரின் சொத்துக்கள் பெண்களுக்கு மட்டுமே உரியவை என்றும், தந்தையின் சொத்துக்கள் ஆண் மக்களுக்கு உரியவை என்றும் (யூகத்தின் அடிப்படையில்) பிரித்து விடுகின்றனர். எனவே, இந்நிலை மாற வேண்டும். வாரிசுகள் யார்? அவர்களுக்குரிய பங்கு என்ன? என்பது பற்றியெல்லாம் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். அதன்படி பிரித்தளிப்பதும் அவசியம்.

இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தின் சிறப்புப் பற்றிப் பேராசிரியர் G.C. வெங்கட சுப்பாராவ் தம்முடைய FAMILY LAW IN INDIA (இந்திய குடும்ப இயல் சட்டம்) என்ற நூலில் கூறியுள்ள கருத்துக்கள் நாம் கவனிக்கத் தக்கவை. "இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டம் மிகுந்த நுண்ணறிவோடு திட்டமிடப்பட்ட ஒன்றாகும். வாரிசுரிமையின் மிகச் சிக்கலான பிரச்சினைகளைப் பயனுள்ள வகையில் கையாளுவதால் அது நமது போற்றுதலுக்குரியதாகும்" என்று அவர் கூறுகிறார். மேலும், "இஸ்லாமியச் சட்டத்தில் கடமையாக்கப்பட்டுள்ள விரிவான வாரிசுரிமை முறை எந்த அளவிற்கு இயலுமோ அந்த அளவிற்குத் துல்லியமாக உள்ளது" என்றும் புகழ்ந்துரைக்கிறார்.

இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தின் மீது கூறப்படும் ஒரேயொரு குறை என்னவெனில் அது பின்னங்களாக இருப்பதும் அதனால் சொத்து சிறு சிறு துண்டுகளாகப் பிரிந்து விடுவதும் தான். குறிப்பாக ஒரு வீடு அல்லது ஒரு வயல் சிறு சிறு துண்டுகளாய்ப் பிரிக்கப்படும்போது யாருக்கும் பயன்படாமல் போய்விடும் என்பது நாம் அறிந்ததே. "ஆனால் அந்தக் குறையும் கூட பிற வாரிசுகளிடம் இருந்து விலைக்கு வாங்கும் முன்னுரிமையை அந்நியரை விட மற்ற வாரிசுதாரர்களுக்கு வழங்குவதன் மூலம் இஸ்லாமிய சட்டம் போக்கிவிடுகிறது" என்றும் G.C. வெங்கட சுப்பாராவ் கூறுகிறார்.

அதாவது, இருவருக்குச் சொந்தமான சொத்தில் தமது பங்கை ஒருவர் விற்க விரும்பினால் அவர் தமது பங்காளிக்குத்தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

"பங்காளிக்குத் தான் விற்க வேண்டும் என்பது, பிரிக்கப்படாத ஒவ்வொரு சொத்திலும் உள்ளது. எல்லைகள் வகுக்கப்பட்டுப் பாதைகள் (பிரித்துக்) குறிக்கப்பட்டு விட்டால் பங்காளிக்குத் தான் விற்க வேண்டும் என்ற நிலை இல்லை" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விதித்தார்கள் என ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஆதாரம் : புகாரி 2257

இந்த முன்னுரிமையால் தான் இந்த விரிவான வாரிசுரிமை முறை காலத்தின் சோதனையைக் கடந்து இன்றுவரை அதன் அசல் வடிவத்தில் நிலைத்திருக்க முடிகிறது என்று அப்பேராசிரியர் வியந்து போற்றுகிறார்.

இந்தச் சொத்துரிமைப் பங்கு விகிதாச்சாரங்கள் நம்மையெல்லாம் படைத்த இறைவனே ஏற்படுத்திய கணக்கீடு ஆகும். மனிதர்களாகிய நாம் அதை ஏற்படுத்தி இருந்தால் நமக்கு வேண்டியவர், வேண்டாதவர் என்ற ரீதியில் பாகுபடுத்தி இருப்போம். ஆனால், கருணையாளனான அல்லாஹ் யாருக்கும் எந்தப் பாதகமுமின்றி எல்லோருக்கும் சொத்துக் கிடைக்கும் வகையில் பங்கீடு செய்துள்ளான்.

நபி (ஸல்) அவர்கள் கூட, ஏன் நபிமார்கள் எவரும் கூட இந்தச் சொத்துப் பங்கீடு பிரச்சினையில் தலையிடவில்லை என்பது மட்டுமின்றி அவர்களின் சொத்து கூட பொதுவுடமைதான். அது எங்களது வாரிசுகளுக்கு வழங்கப்படக் கூடாது என்று உறுதியாகக் கூறிச் சென்றுள்ளனர். இது இஸ்லாமிய மார்க்கத்தின் தனிச் சிறப்பாகும்.

"என் வாரிசுகள் ஒரு தங்க நாணயத்தைக் கூட வாரிசுப் பங்காகப் பெற மாட்டார்கள். என் துணைவியருக்கான வாழ்க்கைச் செலவும் என் ஊழியரின் ஊதியமும் தவிர நான் விட்டுச் செல்பவையெல்லாம் தர்மமேயாகும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஆதாரம் : புகாரி 6729, 2776, 3096; முஸ்லிம் : 1760, 1761;
முஅத்தா; அபூதாவூத் 2974; மற்றும் அஹ்மத்

இது பற்றி மிகத் தெளிவாகப் பின்வரும் நபிமொழியில் வந்துள்ளது.

நபி (ஸல்) அவர்களின் மகள் ஃபாத்திமா (ரலி) அவர்கள் (நபியவர்களின் இறப்பிற்குப் பிறகு கலீஃபா) அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு ஆளனுப்பி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் ஒதுக்கித் தந்திருந்த மதீனா மற்றும் ஃபதக் சொத்திலிருந்தும், கைபரின் ஐந்தில் ஒரு பகுதி நிதியில் எஞ்சியதிலிருந்தும் தமக்குச் சேர வேண்டிய வாரிசுரிமையைக் கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(நபிமார்களான) எங்கள் சொத்துக்களுக்கு வாரிசாக யாரும் வர முடியாது. நாங்கள் விட்டுச் செல்பவையெல்லாம் தர்மம் செய்யப்பட வேண்டியவை ஆகும். இந்தச் செல்வத்திலிருந்தே முஹம்மதின் குடும்பத்தினர் சாப்பிடுவார்கள்" என்று சொல்லியிருக்கிறார்கள். (எனவே) அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தர்மச் சொத்தில் நான் எந்த சிறு மாற்றத்தையும் செய்ய மாட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் எந்நிலையில் அந்த சொத்துக்கள் இருந்து வந்தனவோ, அதே நிலையில் அவை நீடிக்கும். அதில் (அந்தச் சொத்துக்களைப் பங்கிடும் விஷயத்தில்) நபி (ஸல்) அவர்கள் செயல்பட்ட படியே நானும் செயல்படுவேன்" என்று (ஃபாத்திமா அவர்களுக்கு) பதில் கூறி(யனுப்பி)னார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் அவற்றில் எதையும் ஒப்படைக்க அபூபக்ர் (ரலி) அவர்கள் மறுத்து விட்டார்கள். இதனால் அபூபக்ர் (ரலி) அவர்கள் மீது மன வருத்தம் கொண்டு இறக்கும் வரையில் அவர்களுடன் ஃபாத்திமா (ரலி) அவர்கள் பேசவில்லை. (புகாரியிலுள்ள ஹதீஸின் சுருக்கம்)

பார்க்க புகாரி எண் 3092, 3093

 

பயிற்சி வினாக்கள்:

(1) இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தின் சிறப்பு பற்றி G.C. வெங்கட சுப்பாராவ் என்ன கூறுகிறார்?

(2) நபிமார்களின் சொத்துக்களை அவர்களின் வாரிசுகள் பெற முடியுமா?

3. கடனும் வஸிய்யத்தும்..