Index |Subscribe mailing list | Help | E-mail us

 

 

செல் பேசி - ஓர் கழுகுப்பார்வை

அ. மைந்தன்

 

தொலைத்தொடர்பு சாதனங்கள் பல்கிப் பெருகிக் கொண்டிருப்பது நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகின்றது. எங்கிருந்தும், எப்போதும், யாரிடமும் தொடர்புகொள்ளலாம் என்கிற அளவிற்குச் செல் ஃபோன்கள் நமக்குக் காலத்தைச் சுருக்கித் தந்துவிட்டன. தொலைபேசி (Land Line) இணைப்புகளை முழுமையாகப் பயன்படுத்தாமலேயே ஒரு தலைமுறை சென்றுகொண்டிருக்கையில் இன்று பிறந்த குழந்தைகள் கூட செல் ஃபோன்களில் பேசத் தொடங்கிவிட்டன. உங்கள் பேர் என்ன? என்று கேட்பதற்குப் பதில் உங்கள் செல் நெம்பரைச் சொல்லுங்கள் என்று கேட்கும் அளவிற்கு இன்று காலம் மாறிவிட்டது.


2004-டிசம்பர் மாதம் எடுத்த கணக்கெடுக்கின்படி இந்தியாவில் செல் ஃபோன் பயன்படுத்துவோர்கள் 4.74 கோடி பேர். இது கடந்த 2003-ஐ காட்டிலும் 68% அதிகம்.(1) இந்த அளவிற்குச் செல் ஃபோன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை வேகமாக வளர்ந்து வருகிறது.


இப்போதெல்லாம் செல் ஃபோன் திருடர்கள் பெருகிவிட்டார்கள். சாலையோரம் பேசிக் கொண்டிருக்கும் போதே பிடுங்கிச் சென்று விட்டார்கள் என்று ஒரு பெங்காலி நண்பருக்கு நேர்ந்த சோகக்கதையைச் சொல்லி விழிப்பூட்டும் நண்பர்.., குளியலறையில் கேட்கும் ஹலோ சப்தங்கள், செல் ஃபோனை கழிவறையில் தவறவிட்டு பல்வேறு பழுதுபார்க்கும் கடைகள் ஏறிஇறங்கி அதன் ஈமச்சடங்குகளை முடிந்து சோகமாய் அமர்ந்திருக்கும் என் தொழிற்சாலைத் தோழன். செல் ஃபோன் வாங்க கடைகளில் மொய்ந்து கொண்டிருக்கும் இளைஞர் கூட்டம்.


"சொல் இல்லார்க்கு உய்வுண்டாம் - உய்வில்லை
Cell இல்லாதவர்க்கு"


என்று எனது துபாய் தோழர் செல் ஃபோனில் உதிர்த்த நகைச்சுவை... என்று நம் வாழ்க்கையின் நிகழ்வுகள் ஏதாவது ஒரு வகையில் செல் ஃபோன்களுடன் தொடர்பு கொண்டுள்ளதாகவே தோன்றுகிறது.


"செல்" வைத்துக் கொள்வது அவசியமா? என்று சிலரிடம் கேட்டபோது, ஆம்! ஹாஜிகளுக்குச் சேவை செய்ய! தவறியவர்களை கண்டெடுக்க! புதிய முகவரிகளைக் கண்டுபிடிக்க! உறவுகளுடன் தொடர்பு கொள்ள!.. என்று பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது, என்றாலும் செல் ஃபோன்கள் முழுக்க முழுக்கப் பலன்களை மட்டுமே கொண்டுள்ளது அல்ல! என்ற குற்றச் சாட்டையும் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. செல் ஃபோன் பற்றிய நன்மைகளை நாம் நிறையவே அறிந்து வைத்திருக்கின்றோம். ஆகவே அதில் உள்ள தவறான உபயோகங்கள் பற்றிய ஒரு விழிப்புணர்வு ஊட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம்.


பல பேர் "செல்" வாங்கிவிடுகின்றனர். அதை முறையாகப் பயன்படுத்தத் தெரியவில்லை. குறிப்பாக ரிங் டோன் (Ring Tone)ஐ அலறவிடுகின்றனர். இரவெல்லாம் (Night Shift) வேலை பார்த்துவிட்டு அயர்ந்து தூங்கும் அறைத்தோழர்களை Fire Alarm போல செல் ஃபோனை அலறவிட்டு எழுப்பக்கூடிய சூழல்.
பள்ளிவாசல்கள், கல்விச்சாலைகள், மருத்துவமனைகள் என்று இடவேறுபாடு பாராமல் செல் ஃபோன் சப்தங்கங்ளை அலறவிடுவதை தவிர்க்க வேண்டும். இடத்திற்குத் தகுந்த முறையில் சப்தங்களை சரிசெய்ய வேண்டும். இந்த நேரத்தில் பள்ளிவாயில்களில் நடக்கும் செல் ஃபோன் இடையூறுகளை சுட்டிக்காட்டுவது அவசியமாகிறது.


இமாம் தக்பீர் கட்டியவுடனேயே இந்த செல் ஃபோன் ஆலாபனைகள் ஆரம்பமாகிவிடுகின்றன. சிலபேர்கள் இமாமத் செய்யும்போதுகூட செல் ஃபோன் கதற தொழுகையில் நெழிய வேண்டிய சூழல்.
Ring Tone என்று பல சப்தங்கள் இருந்தாலும் பெரும்பாலானோர் விரும்புவது சங்கீதத்தைத்தான். குறிப்பாக சினிமா மெட்டுக்களை(தான்) Ring Tone ஆக உபயோகிக்கின்றனர். இதை முஸ்லிம்களும் ஏன் விபரம் அறிந்தவர்களும் கூட இதற்கு விதிவிலக்கல்ல என்ற அளவுக்கு நிலைமை போய்விட்டது. காலணிகளை கழற்றிவிட்டு உள்ளே வரவும் என்று எழுதுவது போன்று செல் ஃபோன்களை அமர்த்திவிட்டு உள்ளே வரவும், என்று பள்ளிவாயில்களில் அறிவிப்புப் பலகை வைக்கும் நிலைமை!
தொழுகை என்பது இறைவனுடன் அடியான் உரையாடுவது. பள்ளிவாயில்கள் இறைவனை நினைவுகூறும் இடம் என்பதை எல்லாம் ஏனோ இவர்கள் மறந்துவிடுகின்றனர்.


"என்னை நினைவுகூறுவதற்காக தொழுகையை நிறைவேற்றுவீராக!" (2)


என்று இறைவன் கூற இவர்கள் இடையூறு செய்பவர்களாக உருவானது ஏன்? இதேபோல் மார்க்கச் சொற்பொழிவு நடக்கும் இடங்களில் கூட பேச்சாளரை மிஞ்சும் வகையில் இடையிடையே ஹலோ! சப்தங்களையும், சம்பாஷனைகளையும் கேட்க முடிகிறது. மலக்குகள் சூழ்ந்துள்ள சபையல்லவா! இடையூறு தரும் இந்த இசைத் தொல்லைகள் இறைவனைக் கோபமூட்டுமல்லவா!
அன்புக்குரியவர்களே! இத்தகைய செயல்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். முதலாளியுடன் பேசும்போது அமர்த்திவைக்க ஆர்வம் காட்டும் "செல்"களை இறைவனுடன் உரையாடும்போது அலறவிடுவது முறைதானா? சிந்தியுங்கள்!


இப்போதெல்லாம் மிகச்சிறிய "செல்" வைத்துக்கொள்வது ஃபேஷன் ஆகிவிட்டது. என்னுடைய செல் தான் மிகச் சிறியது, என்னிடத்தில் கலர் ஸ்கிரீன் செல் உள்ளது, என்னிடத்தில் கேமரா செல் உள்ளது, என்னிடத்தில் வீடியோ கேமரா செல் உள்ளது என்று பெருமை பாராட்டுவதே சிலரின் வழக்கமாகிவிட்டது. சாதாரணமாக மிஸ் கால்(Missed Call) கொடுப்பதற்கும், நேரம் பார்ப்பதற்கும் மட்டுமே "செல்"ஐ உபயோகப்படுத்தும் எத்தனையோ நண்பர்கள். ஆயிரங்களை செலவழித்து செல் ஃபோன் வாங்குவதைப் பார்க்கிறோம். மிகக் குறைந்த சம்பளத்தில் வேலை செய்யும் ஏழைகள் கூட எங்கே நம்மை வறுமைக்கோட்டிற்கு கீழே சேர்த்து விடுவார்களோ?! எனப்பயந்து தன்மானப் பிரச்சனையாகக் கருதி செல் ஃபோன் வாங்கிவிடுகின்றனர். இன்னும் சிலபேரிடம் வர்ண செல்கள், வகைவகையாக (ஒன்றுக்கும் மேற்பட்ட) செல்களைக் காணமுடிகிறது.

 
இனிவரும் காலங்களில் ஒரே ஒரு செல் ஃபோன் (Cell Phone) வைத்திருப்பவர்களை ஒரு செல் (Cell) உயிரினம் என்று அழைக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை! ஒரு சாதாரண தொடர்பு சாதனத்துக்கு பல்லாயிரம் செலவழிக்க வேண்டுமா? வார்த்தைகளை புரியவைக்க வர்ணங்கள் அவசியம்தானா? இது ஒரு பெருமையின் சாயலைப் பிரகடனப்படுத்துவதே அன்றி வேறல்ல. தமது தேவைகளுக்கேற்றவாறு செல் ஃபோன் வாங்கிக் கொள்வதே சிறந்தது.


யாரின் உள்ளத்தில் ஓர் அணுஅளவு பெருமையுள்ளதோ, அவர் சுவர்க்கததில் நுழைய மாட்டார் என நபி(ஸல்) கூறினார்கள். (3)


சிலர் தகுதிக்கு மீறி ஆசைப்பட்டு (Bill) பணம் கட்ட கஷ்டப்படுவதும், கட்டாமல் தலைமறைவானதும் கூட நடக்கின்றது. தலைநகர் சென்னையில் மட்டும் பணம் கட்டாத 550 பேர் மீது BSNL நிறுவனம் வழக்குத் தொடர்ந்துள்ளது. இந்த 550 பேரும் 25,000 ரூபாய்க்கு மேல் பாக்கி வைத்தவர்கள். இதுபோல் 2 கோடி ரூபாய் சென்னையில் மட்டும் பாக்கி, இது தேவைதானா? (4)


அடுத்ததாக ளுஆளு எனப்படும் "குறுந்தகவல் சேவை" ஒரு குறிப்பிடத்தக்கது. செல்லில் பேசி பணத்தை விரயம் செய்யாமல் சுருக்கமாக தகவல்களை பரிமாற்றிக்கொள்ள இந்த ளுஆளு வகை செய்கிறது. தொழுகை, நோன்பு போன்றவை சம்மந்தமான நபி மொழிகளை அனுப்பி மக்களுக்கு தஃவா செய்யக்கூட இந்த அறிய ளுஆளுஐ பயன்படுத்தலாம். ஆனால் இன்று இந்த ளுஆளு பயன்படுத்துவதெல்லாம் முறை தவறிய செயல்களுக்குத்தான்.


என்னுடன் பணிபுரியும் தமிழ்ச் சகோதரருக்கு வந்த ஆங்கில SMS, (குறுந்தகவல்) "தோழி தேவையென்றால் தொடர்புகொள்ளவும் இப்படிக்கு லாரா" .நல்லவேளை அவருக்கு ஆங்கிலம் தெரியாது. நான் அந்தத் தகவலை அழித்துவிட்டேன். இது ஒரு மாதிரிதான். இதைப்போன்று பல்வேறு தகவல்கள் ஆண், பெண் பேதமின்றி பரிமாற்றிக் கொண்டிருக்கின்றனர். சமீபத்திய காதலர் தினக் களியாட்டங்களில் கூட இந்த SMS பங்கு அதிகம் என்றால் அது மிகையாகாது. நல்ல குடும்பப் பெண்களுக்கும், தொழுகையாளிகளுக்கும் கூட சில விஷமிகள் கெட்ட படங்களை அனுப்பி விடுகின்றனர். இதனால்தான் கிரைம் பிரான்ச் (Crime Branch) காலம் போய் சைபர் கிரைம் பிரான்ச் (Cyber Crime Branch) குற்றப்பிரிவுகள் காவல்துறையால் ஏற்படுத்தப்பட்டுள்ள.


சமீபத்தில் சென்னையில் வசிக்கும் ஒரு குடும்பப் பெண்ணுக்கு தினமும் வரும் நிர்வாணப்படங்களை தொடர்ந்து Cyber Crime Police வட பழனியைச் சேர்ந்த கண்ணன் என்ற வாலிபனை கைது செய்தனர். அவர் கிரெடிட் கார்டுகளுக்கு பணம் வசூலிப்பவர். அப்போது தனிமையில் இருக்கும் பெண்களை நோட்டமிட்டு செல் நெம்பர் வாங்கி பின் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக அறியப்படுகிறது.


கேமரா செல் ஃபோன்கள் மார்க்கெட்டில் வந்த புதிதில் அதன் விபரீதம் புரியாமல் பலர் வாங்கினார்கள். பாஸி.காம் என்ற இணையதளத்தின் உரிமையாளர் அஸ்வின் பஜாஜ் என்பவர் கைது செய்யப்படும்வரை அரசாங்கமும் ஏதும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. புது டில்லியில் ஒரு மாணவனும், மாணவியும் பள்ளியறையில்(!?) ஏடாகூடாமாக இருந்ததை சகமாணவர்கள் வீடியோ கேமரா செல்"லில் கிளிக் (Video Clip) செய்து சேவை(?) நோக்கில் பலருக்கும் இதை அனுப்ப இது பாஸி.காம் என்ற இணையத்தளம் உபயோகிப்போருக்கு எட்டிவிட்டது. உலகம் முழுவதும் இணையதளம் உபயோகிப்போருக்கு விருந்தளித்தபின்தான் இது சர்ச்சையானது. மாணவி பெரிய இடத்து பெண் என்பதால் வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டு, இணையதள உரிமையாளர் அஸ்வின் பஜாஜ் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் நடந்தபின்தான் அரசாங்கமும், கல்வி நிறுவனங்களும் விழித்துக்கொண்டன. பல மாநிலங்களில் கல்லூரிக்குள் கேமரா மொபைல் கொண்டு வருவது தடை செய்தன. முட்டிய பின் குனிவதுதான் நம் மக்களின் கலாச்சாரம் போலும். மாணவ மாணவியருக்கு இது ஒரு அதிர்ச்சி என்றுதான் நினைக்கத் தோன்றுகின்றது. இது பற்றி கல்லூரி வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்த எலெக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் பயிலும் ராம்குமார் கூறுகிறார்... "இந்த உத்தரவை முன்பே பிறப்பித்திருக்க வேண்டும். ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்தபின்தான் நடவடிக்கை எடுப்பது வழமையாகிவிட்டது. யார் வேண்டுமானாலும் துப்பாக்கி வைத்துக்கொள்ளலாம் என்பது எப்படி ஆபத்தானதோ அதேபோன்றுதான் கேமரா செல் ஃபோன் வைத்துக்கொள்வதும். முதலில் இது பள்ளிக்கூடங்களிலே தடைசெய்யவேண்டும்". (5)


இது மட்டுமல்ல, பொது இடங்களில் செல்லும் குடும்பப் பெண்களின் இடை போன்ற பகுதிகளை அவர்களுக்குத் தெரியாமல் படம் எடுப்பதுகூட நடக்கின்றது. இவ்வளவு அசம்பாவிதங்கள் போதாதென்று சினிமாத்துறையும் தனது திரைப்படங்களை கேமரா செல் மூலம் ரிலீஸ் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.


"சீனாவில் SMS மூலம் தொடராக வெளியான அவுட் சைடு தி ஃபோர்ட்ரஸ் பீ ஸீஜ்டு (Out Side the Portress Seized) என்ற நாவல் திரைப்படமாக்கப்பட்டு இதை செல் ஃபோன் மூலமே 30-40 தொடராக காட்டப்படும். திருமணமானவர்கள் புரியும் தவறான உறவுகளை சித்தரிக்கிறது இத்திரைப்படம்."
தேவைதானா இந்த கேமரா செல்ஃபோன்கள்." செல்ஃபோன்" என்ற இந்த அரிய சாதனம் மக்களை எப்படியெல்லாம் பாதிக்கிறது. திரையரங்குகளில் பலர் முன்னிலையில் காண வெட்கப்படுபவர்கள் கூட செல் ஃபோன் உதவியால் தனிமையில் ஆபாச காட்சிகளையும், செய்திகளையும் பார்க்கலாம், கேட்கலாம். எவ்வளவு பெரிய விபரீதத்திற்கான வித்துக்கள் தூவப்பட்டுள்ளன.


இறைவன் தன் மாமறையில்

"இறுதியாக (நரகமாகிய) அதன்பால் அவர்கள் வந்து சேர்ந்துவிடுவார்களாயின் (பாவம்) செய்த அவர்களுக்கு விரோதமாக அவர்களது செவிப்புலனும், பார்வைகளும், தோலும் அவர்கள் செய்து கொண்டிருந்ததைப் பற்றி சாட்சி சொல்லும்". (6)


எனவே அன்புள்ளம் கொண்டவர்களே! செல் ஃபோன் என்பது இறைவன் நமக்களித்த இந்த நூற்றாண்டின் அருட்கொடை எனலாம். அதைப் பயன்படுத்தும் முறையில்தான் அது ஹராமா? ஹலாலா? என தீர்மானிக்க முடியும். நிச்சயமாக இதை தவறாக பயன்படுத்தினால் மறுமை மன்றத்தில் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்படுவோம்.


நபி(ஸல்) அவர்களும், அபூபக்கர்(ரலி), உமர்(ரலி) ஆகியோர் அபுல் ஹைதம் பின் அத்தீஹான்(ரலி) அவர்களின் வீட்டில் விருந்துண்டபின் நபி(ஸல்) அவர்கள் கூறிய வாசகம் இங்கே நினைவுகூற ஏற்றம். "நிச்சயமாக அல்லாஹ்வின்மீது ஆணையாக இந்த அருட்கொடை பற்றி மறுமையில் விசாரிக்கப்படுவீர்கள்" (7)

 
சாதாரண பேரிச்சம் பழத்தினை உணவாக உட்கொண்டதற்கே (அருட்கொடையாக) விசாரணை உண்டென்றால்.. செல் ஃபோன் என்ற இந்த அரிய தொடர்புச்சாதனம் பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை!


எனவே! பெருமைக்காக அனாச்சாரங்களில் பயன்படுத்துவது, தவறான வழியில் பயன்படுத்துவது, Cell-லில் தேவைக்கதிகமாகப் பேசி வீண்விரயம் செய்வது போன்றவற்றைத் தவிர்ப்போம். செல் ஃபோன் இறைவனின் அருட்கொடை என்பதை கருத்தில் கொண்டு முறையாகப் பயன்படுத்துவோம்!

செல் ஃபோன் பயன்படுத்துவோர் கவனிக்க வேண்டியவை

-Ring Tone-களில் இசையை முழுமையாகத் தவிர்க்கவேண்டும். சாதாரணமான Ring Tone அல்லது மணியோசை போன்றவற்றை பயன்படுத்தலாம்


-சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் Ring Tone சப்தத்தை வைத்துக் கொள்ளவேண்டும். தொழுகை நடக்கும் இடம், மார்க்கச் சொற்பொழிவு அரங்கங்கள், மருத்துவமனைகள் போன்றவற்றில் அதிர்வூட்டலை (Vibration Mode) பயன்படுத்தலாம். அமர்த்திவிடுவது சாலச்சிறந்தது.


-எதிர் முனையில் நாம் தொடர்பு கொள்ளக்கூடிய நபர் துக்கம் அல்லது முக்கியமான சந்திப்பில் (Meeting) இருக்கலாம், அல்லது வாகனத்தை ஓட்டிக்கொண்டோ அல்லது பயணத்திலோ இருக்கலாம். முன் அனுமதி பெறுவது நல்லது.


-நாம் Dial செய்யும்முன் தொழுகைக்குரிய நேரமா என்பதைப் பார்த்துக் கொள்ளவேண்டும்.


-பேசும் போது பொருளாதார வீண்விரயம் கருதி சுருக்கமாகப் பேசவேண்டும், சிலர் பத்து நிமிடம் பேசினால் 5 நிமிடம் சிரிப்பில் கழிந்துவிடுகிறது.


-எதிர் முனையில் நாம் தொடர்பு கொள்ள வேண்டிய நபர் இல்லாமல் அவரது மனைவி மற்றும் பெண்கள் எடுக்கும் பட்சத்தில் நீட்டாமல் சுருக்கமாகச் செய்தியைக் கூறி முடிக்கவேண்டும்.

 
-பிறர் செல் ஃபோன் எண்களை வாங்கும் போதும், பிறருக்கு நாம் சொல்லும் போதும் சரியாகக் கொடுக்க வேண்டும். டயல் செய்யும் முன் டயல் செய்யும் எண்ணைச் சரிபார்த்துக் கொள்ளவேண்டும்.


-வாகனம் ஓட்டும்போது செல் பேசிகளில் பேசுவது அல்லது ரிசீவ் செய்வதைத் தவிர்க்கவும்.


-நிர்பந்தம் எற்படாவிட்டால் தவிர நமது செல் பேசிகளை மற்றவர்கள் சுதந்திரமாக பாவிக்க அனுமதிக்க வேண்டாம். அதேபோல் நாம் மற்றவர்கள் செல் ஃபோன்களை உபயோகிக்க நேர்ந்தால் மென்மையாக உபயோகிப்பது நல்லது.

 
-அறிமுகமில்லாதவர்களிடம் தங்கள் செல் ஃபோனில் பேச அனுமதிக்க வேண்டாம். செல் பேசிக்கொண்டே அவர்கள் ஓடிப்போய்விடுவது... அல்லது நமது தனிப்பட்ட எண்களைக் குறித்துக் கொண்டு தவறான முறையில் பயன்படுத்தவும் வாய்ப்புள்ளது.


-பேசும் போது நடுத்தரமான குரலில் பேசுவது நல்லது. அதிக சப்தமாக பேசினால் நம் பேச்சை மற்றவர்கள் கேட்கவும், மற்றவர்களுக்கு இடைஞ்சலாகவும் இருக்கும்.


-உரையாடலுக்கு முன்னும், பின்னும் முகமன் (சலாம்) சொல்ல மறவாதீர்கள்.


Reference:

(1) தினமணி

(2) அல்-குர்அன் : 20:14

(3) அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊது(ரலி), ஆதாரம் : முஸ்லிம்)

(4) தினமணி-அக்டோபர் 26, 2005

(5) தினமணி

(6) அல்-குர்ஆன் : 41:20

(7) ஹதீஸின் சுருக்கம், அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), ஆதாரம் : முஸ்லிம்