Index |Subscribe mailing list | Help | E-mail us

புகையும் நுரையீரல்கள்

மாலிக் கான் MSc

 

நீங்கள் உங்களையே கொலை செய்துக் கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 4:29)

இஸ்லாத்தில் தற்கொலை செய்துக் கொள்வது நிரந்தர நரகத்தைத் தேடித்தரும் பாவம் என்பதை அனைவரும் அறிந்ததே. இன்று விஷம் சாப்பிட்டு நாளை இறந்து போனாலும் அதை தற்கொலையாகவே நாம் கருதுவோம். அதே போல மெதுவாக கொல்லக்கூடிய விஷம் (Slow poision) சாப்பிட்டு வாரம், வருடம், 10 வருடம் அல்லது 30 வருடம் சென்று இறந்து போனாலும் நாம் இதை தற்கொலையாகவே கருதுவோம். சிகரெட் புகைப்பதால் மனிதன் தன் வாழ்நாளை மிகப்பெரிய அளவில் குறைத்துக் கொள்கின்றான் என்பது விஞ்ஞானத்தில் நிறூபிக்கப்பட்ட உண்மை.

ஆனால் நின்று கொல்லக் கூடிய சிகரெட், இஸ்லாமிய சமுதாயத்திலும் மற்றவர்களிடமும் புத்துணர்வு ஊட்டும் மருந்தாக கருதப்படுவதுதான் விந்தையிலும் விந்தை. எனவே மனித சமுதாயத்தில் குறைந்தது ஒரு நபரையாவது இக்கெட்ட பழக்கத்திலிருந்து விடுபட வைக்கவேண்டும் என்ற எண்ணத்தில் இந்த கட்டுரையை உங்கள் முன் வைக்கிறேன்.

சிலர்களது கருத்து சிகரெட் புகைப்பதால் மனதிற்கும், உடலுக்கும் புத்துணர்வு ஏற்படும் என்பதும் வேலையின் பளு தெரியாமல் இருக்கும் என்பதும் வேலையை உற்சாகமாக செய்ய உதவும் என்பதாகும்.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், இது ஒரு நவீனக் கலாச்சாரம் என நினைக்கிறார்கள். ஒரு சிகரெட் பலர் பகிர்ந்து தங்கள் சகோதரத்துவத்தை(?!) வெளிப்படுத்துகிறார்கள். பசித்தவனுக்கு உணவு கொடுக்கிறார்களோ இல்லையோ சிகரெட் தேவைப்படுபவனுக்கு தாராளமாக பாக்கெட்டை நீட்டுகிறார்கள். குறிப்பாக தேர்வு நேரங்களில் அதிக நேரம் கண்விழித்துப் படிக்க புகைப்பழக்கம் ஒரு பக்கபலம் என்று நினைப்பவர்கள் அதிகம். இன்னும் சிலர் காலையில் இது இருந்தால்தான் மற்ற கடமைகள் என்கிறார்கள். இவையெல்லாம் மனதளவில் ஏற்படும் மாயை என்பதில் இவர்களுக்கே சந்தேகமில்லை. இவர்கள் தெரிந்து கொண்டே தங்களை அழிவின் பக்கம் தங்களை நகர்த்துகிறார்கள்.

நான் செயின் ஸ்மோக்கர் என்றும் நாளொன்றுக்கு எனக்கு இரண்டு பாக்கெட் சிகரெட் வேண்டும் என்று சிலர் பெருமையாகக் கூறுகிறார்கள். இன்னும் சிலரோ நான் நினைத்தால் இப்பழக்கத்தை இன்றே நிறுத்திவிடுவேன், நான் ஒன்றும் இதற்கு அடிமையல்ல ஏதோ ஓய்வு நேரத்தில் மன ஆறுதலுக்கு புகைக்கின்றேன் என்கிறார்கள். உண்மையில் இவர்களும் புகைப்பழக்கத்திற்கு அடிமைகளே.

இது போன்ற புகைப்பழக்கத்திற்கு பலர் அடிமையாவதற்கு அடித்தளம் இட்டுக் கொடுத்தவர்கள் யார் என ஆராய்ந்தால் தொலைக்காட்சி மற்றும் திரைப்படத்துறை என்று கூறலாம். புகைபிடிப்பதால் உற்சாகமாய் சண்டையிடும் காட்சிகள், புகைப்பிடிப்பதைக் கண்டு காதல் வயப்படும் பெண்கள், சோக மற்றும் சந்தோஷ சந்தர்ப்பங்களில் புகைப்பிடித்தல் சம்மந்தப்பட்ட காட்சிகள் போன்றவை சின்னத்திரையும் வெள்ளித்திரையும் தவறாமல் இடைச்செருகல் செய்ததன் விளைவு 15 முதல் 19 வயது வரையுள்ளவர்களின் மனதில் புகைப்பழக்கம் ஒரு சிறந்த பழக்கம் என்ற தாக்கத்தை மறைமுகமாக ஏற்படுத்துகிறது.

இதனால் ஆரம்பத்தில் ஜாலிக்காக ஆரம்பிக்கின்ற ஒருவர் காலப்போக்கில் புகைப்பழக்கத்திற்கு அடிமையாகிவிடுகிறார். இப்பழக்கத்திற்காக ஒரு தொகையை தினமும் செலவழிக்கின்றார். இப்பழக்கம் சற்று அதிகமாகி போதைப் பொருட்களைத் தேட ஆரம்பிக்கின்ற சிலரும் உண்டு. சமீப காலங்களாக போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் அதிகமாக கைது செய்யப்படுகின்ற இடம் கல்லூரி வாசல்களாகவே இருக்கின்றன. இனியாவது தணிக்கைத்துறை சினிமாவில் இது போன்ற காட்சிகளையும், விளம்பரங்களையும் தடை செய்யது வருங்கால இளைஞர் சமுதாயத்தை ஆரோக்கியமான சமுதாயமாக வளர வழி வகுக்கட்டும்.

இத்தீய புகைபழக்கத்தின் காரணமாக தான்மட்டும் தீமையைத் தேடிக்கொள்ளாமல் 'யான் பெற்ற இன்பம்(?!) பெறட்டும் இவ் வையம்' என்பதற்கினங்க அருகில் இருப்பவருக்கும் அதைப் பகிர்ந்தளிக்கிறான். இதைத் தடுக்க தமிழக அரசு உள்பட பல்வேறு மாநிலங்களில் மருத்துவமனைகள், பேருந்துகள், வணக்கத்தலங்கள், ரயில்வே சந்திப்புகள் மற்றும் மக்கள் கூடும் பொது இடங்களில், புகைத்தால் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என அறிவித்திருக்கிறது. எனினும் இந்த அரசுகள் சிகரெட் விற்பனைக்குத் தடைவிதிக்க முன்வராததன் நோக்கம் என்னவென்று பார்த்தால் அரசு கஜானாவை அதிகமாக நிரப்புவதில் புகையிலைச் சுங்கவரி பெரும்பங்களிப்பதே ஆகும்.


விற்பனைக்குத் தடைவிதித்தால் அதன் உற்பத்தியாளர்களும், விற்பனைதாரர்களும் மற்றும் அதையே தொழிலாக மேற்கொண்டு வாழ்வை நடத்திவரும் மக்களும் சாலைமறியல், உன்ணாநோன்பு போன்ற போராட்டங்களில் இறங்குகிறார்கள். வீர வசனங்களை தேர்தல் அறிக்கைகளாக வெளியிடும் அரசியல் வாதிகள் உயிர்களை அழிக்கும் இத்தொழிலை முடக்கி ஆக்கப்பூர்வமான பல தொழிற் சாலைகள் திறக்க முன் வருவார்களா?

 

கருத்துக்களும் ஆய்வுகளும்
உலக சுகாதார மையம் (
World Helth Organization) கருத்தாய்வு ஒன்று கீழ்கண்டவாறு தெரிவிக்கின்றது, தற்போது உலகத்தில் ஆண்டொன்றுக்கு 4 மில்லியன் மக்கள் இக்கொடிய கேன்ஸர் நோயால் இறக்கின்றனர். இது வருங்காலத்தில் கி.பி. 2025 வாக்கில் 10 மில்லியனாக மாறலாம். இக்கொடிய நோயுக்கு முதல்காரணமே புகைப்பழக்கம் தான் என்கிறது.

 

2050-ஆம் ஆண்டு வாக்கில் எய்ட்ஸின் மூலம் எவ்வளவு மக்கள் இறக்க நேரிடுமோ அதேபோன்று இந்த கேன்ஸர் மூலமும் இறக்க நேரிடும் என்கிறார்கள். தாய்லாந்தில் நடைபெற்ற கருத்தரங்கில் உலக சுகாதார மையம் சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கை தெரிவிக்கும் விஷயம் தற்போது மட்டும் உலகில் 250 மில்லியனுக்கும் அதிகமாக குழந்தைகள் புகைப்பழக்கத்திற்கு அடிமையாகிக் கொண்டிருக்கிறார்கள். ஆசிய நாடுகளானது புகையிலை இறக்குமதி செய்வதில் முன்னிலை வகுக்கின்றன.

 

புகைப்பிடித்தல் விளைவாக ஏற்படும் இதய நோய்களால் ஆண்டுதோறும் 600,000-க்கும் மேலான மக்கள் அமெரிக்காவில் மட்டும் மரணிக்கின்றனர். வருடத்திற்கு 150,000 பேர் நுரையீரல் சம்பந்தப்பட்ட புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு இறக்க நேரிடுகிறார்கள்.


சீனாவில் ஆராய்ச்சிக் கழகம் ஒன்று வெளியிட்ட அறிக்கையில், சீனாவில் 70 சதவீதம் ஆண்கள் புகைபிடிப்பவர்களாகவே இருக்கின்றனர். அவர்கள் தங்கள் பழக்கத்தை மாற்றிக் கொள்ளாதவர்களாகவே உள்ளனர். சீனாவில் சுமார் 30 வயதுகளில் இறப்பவர்களில் மூன்றில் ஒருவர் புகைபிடிப்பதால் ஏற்படும் கேன்ஸர் நோய் பாதிக்கப்பட்டு இறப்பவராகவே உள்ளார்.


அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் போன்ற மேலை நாடுகளில் புகைபிடிக்கும் ஆண்களைப் போன்று பாதியளவு பெண்களும் இப்பழக்கத்திற்கு அடிமையாகிக் கொண்டிருக்கின்றனர். தாய்லாந்தில் இருக்கும் 80 சதவித புகைபிடிப்பவர்கள் தங்கள் 20 வயதுக்கு முன்பே இப்பழக்கத்தை ஆரம்பித்ததாக சொல்கிறார்கள்.


பெருவாரியான நகரங்களில் புற்றுநோய் மையங்கள் பரவலாகத் தோன்றுவதற்குக் காரணம் கேன்ஸர் பாதிப்புக்குள்ளானவர்கள் அதிகரிப்பதேயாகும். யார் ஒருவர் நாளொன்றுக்கு 15 முறைக்கும் மேல் புகைக்கின்றாரோ அவர் பிற்காலத்தில் இதுபோன்ற புற்று நோய் மையத்தில் நோயாளியாக சேர்க்கப்படுவார், என மருத்துவ வட்டாரங்கள் அறிவிக்கின்றன. கேன்சரின் ஒருவகை பாதிப்பைத்தான் கீழ்கண்ட படத்தில் பார்க்கிறீர்கள்.

 

பி.பி.ஸி செய்திக் குறிப்பு ஒன்று தெரிவிக்கின்றது, இங்கிலாந்தில் புகைப்பிடிக்கும் 30 முதல் 49 வயதுக்குட்பட்டவர்கள் ஆண்மையிழந்தவர்களின் எண்ணிக்கை 120,000. பெரும்பாலானோர் இதை அறியாமலே செய்கிறார்கள். மேலும் அதிகமாகப் புகைபிடிப்பவர்களுக்குப் பிறக்கின்ற குழந்தைகள் ஆரோக்கியமற்ற நிலையிலேயே பிறக்க நேரிடுகின்றன.


புகைப்பழக்கமும் ஆரோக்கியத்தின் பாதிப்பும்
புகைப்பழக்கம் உடல் நலத்திற்கு பல எதிர்விளைவுகளை உண்டாக்குகின்றது. இதயம் பாதிப்பு, புற்று நோய், நுரையீரல், முகத்தோல் சுருக்கம், குடலில் ஏற்படும் அல்சர், பற்களில் பாக்டீரியாக்களின் தாக்குதல், கல்லீரல் மற்றும் மண்ணீரல் பாதிப்பு, ஆண்மையிழப்பு, இரத்த அழுத்தம் போன்ற பல்வேறு நோய்களுக்கு புகைப்பழக்கம் காரணியாக அமைகிறது.

மனிதன் பிறந்தது முதல் இறக்கின்ற வரை எந்த ஓய்வும் எடுக்காமல் இடைவிடாது வரையறுக்கப்பட்ட விதத்தில் அனிச்சையாக இயங்குகின்ற உறுப்புகள் எனப் பார்த்தால் நுரையீரல் மற்றும் இதயம். புகைப்பழக்கத்தின் மூலம் முதலில் பாதிப்புக்குள்ளாவதும் இவையேதான்.

 

நுரையீரல் புற்றுநோய் (Lung Cancer)

புகைபிடித்தலினால் முதலில் பாதிப்படையும் பகுதி நுரையீரல் தான். காற்றை உள்ளிழுப்பதால் நுரையீரல் விரிந்தும், வெளியிடுவதால் சுருங்கியும் செயல்படுகிறது. ஆக்ஸிஜனை கிரகித்துக் கொண்டு கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியிடுகிறது. புகைபிடிப்பதால் காற்றுடன் சேர்ந்து வரும் கார்பன்-டை-ஆக்ஸைடு மற்றும் மோனாக்ஸைடு துகள்கள் நுரையீரல் பகுதியில் படிந்து கட்டிகளாக மாறுகிறது. இதனால் சுவாசக் கோளாறு ஏற்பட்டு காசநோய் (Tuber Classes) ஏற்படுகிறது. காலப்போக்கில் நுரையீரல் ஜவ்வுகளில் சிறிய துளைகளை இக்கட்டிகள் ஏற்படுத்துகின்றன. ஆக்ஸிஜனை உட்கிரகிக்கும் சிறிய பைகளில் துளைகள் ஏற்படுத்தும் இந்நோயை (Pulmonary Emphysema) என்று அழைக்கின்றனர். இந்நோயிற்கான அறிகுறிகள் உடல் இளைத்தல், தூக்கமின்மை, காசம், வாழ்வில் தன்னம்பிக்கை இழைத்தல் ஆகியவை என்று மருத்துவ நிபுணர்களின் ஆய்வு குறிப்பிடுகிறது.


இரத்தப் புற்றுநோய் (
Blood Cancer)
நுரையீரலுக்குள் வரும் காற்றுதான் இதயத்திற்குச் சென்று ரத்தத்தைச் சுத்தம் செய்து ஆரிக்கிள்ஸ், வெண்ட்ரிகிள்ஸ் மூலமாக சுத்த இரத்தத்தை உடலின் பல்வேறு பகுதிகளுக்கு பம்ப் செய்கிறது. புகைப்பதினால் ஆக்ஸிஜனோடு கார்பன்-டை-ஆக்ஸைடு மற்றும் கார்பன் மோனாக்ஸைடு ஆகியவை சுத்தமான ரத்தத்தோடு கலக்க நேரிடுகிறது. இதன் விளைவு இதயத்துடிப்பு சாதாரண நிலையிலிருந்து சற்று அதிகரிக்கிறது. கார்பன்-டை-ஆக்ஸைடை விட கார்பன் மோனாக்ஸைடின் விஷத்தன்மை அதிகமாகும். புகைபிடிப்பதால் இந்த விஷவாயுவானது நுரையீரல் மூலமாக இரத்தத்தில் கலக்கிறது. இது ஆக்ஸிஜன் பரவுவதைவிட அதி விரைவாக இரத்த நாளங்கள் மூலமாக உடலின் அனைத்து பகுதிகளுக்கும் பரவுகிறது. ஆக்ஸிஜனின் அடர்த்தியை விட கார்பன் மோனாக்ஸைடின் அடர்த்தி அதிகமாக இருப்பதால் இரத்தத்திலுள்ள செல்களைச் சுற்றி இது படர்கிறது. இது போன்ற பாதிக்கப்பட்ட செல்கள் பிளவுபட்டு பிளவுபட்டு கட்டிகளாக உருவாகிறது. இக்கட்டிகளை முற்றிலுமாக அறுவை சிகிச்சைகள் மூலம் நீக்குவது மிகவும் சிரமமான ஒன்று. நவீன கதிர்வீச்சு முறையில் இதை அழித்தல் என்பது அதிகப்படியான செலவுகளுக்கு வழிவகுக்கும்.


எலும்புருக்கி நோய் - லூக்கேமியா (
Leukemia)
மனிதனின் ஒரு துளி இரத்தத்தில் சுமார்
7,000 முதல் 25,000 வரை இரத்த வெள்ளையணுக்கள் அடங்கியுள்ளன. இந்த வெள்ளையணுக்களின் மிக முக்கியமான செயல் நோயை எதிர்ப்பதுதான். மனித உடலில் இதன் ஆயுட்காலம் சில வாரங்கள் மட்டுமே. இரத்த சுழற்சியின் காரணமாக இவை புதிப்பித்துக் கொண்டே இருக்கும். புகைபிடித்தலின் மூலமாக பாதிக்கப்படுகின்ற இவ்வகைச் செல்கள் எலும்புகளின் ஓரங்களின் தங்கி பிளவுபட்டு கட்டிகளை உருவாக்கின்றன. இந்நோயினால் பாதிக்கப்பட்ட மனிதனின் ஒரு துளி இரத்தத்தில் 50,000 வரை உள்ளன. இவை எலும்புகளின் வலுத்தன்மையை இழக்கச் செய்கின்றன. நோய் எதிர்ப்புச் சக்தியையும் குறைக்கின்றன. இதனால் இந்நோய் பாதிக்கப்பட்டவர்கள் விரைவிலேயே மரணத்தை முத்தமிட்டு விடுகிறார்கள்.


குடல் நோய்கள் (
Stomach Ulcers)

உள்ளிழுக்கின்ற புகையில் கலந்திருக்கின்ற மோனாக்ஸைடு மற்றும் நிக்கோடின் துகள்கள் வாயில் சுரக்கும் உமிழ்நீருடன் கலந்து குடல் வழியாக வயிற்றுக்குச் செல்கிறது. இது குடலில் ஜீரணிப்பதற்காக சுரக்கின்ற என்ஸைம்களுடன் இணைந்து அதன் இயற்க்கைத் தன்மையை மாறச் செய்கின்றது. இதனால் குடலில் கெட்ட பாக்டீரியாக்கள் உருவாகி குடலுறிஞ்சிகளை அழிக்கின்றன. இதனால் குடல் பாதிப்படைகிறது. சில சமயம் அப்பெண்டிக்ஸ் என்னும் குடல் வளர்ச்சிக்கும் இதுவே காரணமாக அமைந்துவிடுகிறது.


உயர் இரத்த அழுத்தம் மற்றும் படபடப்புத்தன்மை (
Hyper Tension)

ஆரோக்கியமான ஒவ்வொறு மனிதனின் உடலிலும் சராசரியாக 5 லிட்டர் இரத்தம் இருக்கும். இந்த இரத்தத்தின் பருப்பொருளாக ஹீமோகுளோபின், பிளாஸ்மா, குளுக்கோஸ், வெள்ளை அணுக்கள், சிவப்பணுக்கள் மற்றும் இதர பொருட்கள் இருக்கின்றன. இதயம் இரத்தத்தை பம்ப் செய்வதன் மூலம் ரத்த நாளங்கள் மூலம் உடலின் பல்வேறு பகுதிக்கும் இரத்தம் சுழன்று உடலின் வெப்பநிலையை சீராக வைத்துக் கொள்கிறது. இவ்வாறு இரத்தத்தை பம்ப் செய்ய இதயம் நுரையீரலிலிருந்து ஆக்ஸிஜனை எடுத்துக் கொள்ளும். புகைப்பதால் ஆக்ஸிஜனின் அளவு குறைந்து கார்பன்-டை-ஆக்ஸைடின் அளவு கூடுகிறது. இதனால் உயர் இரத்த அழுத்தமும் படபடப்புத்தன்மையும் ஏற்படுகிறது.

தசைச் சுருக்கம்
இரத்தத்தில் இது போன்று ஆக்ஸிஜன் குறைந்து கார்பனின் அளவு கூடும் போது தோலில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் புரோட்டீனின் அளவு குறைகிறது. இதனால் சீரான இரத்த ஓட்டம் பாதிப்படைகிறது. விளைவு கண்களைச் சுற்றிலும் உள்ள மெல்லிய தசைகளிலும் மற்றும் கன்னங்கள், உதடுகளின் தோல் சுருங்கி வரிகள் போன்ற பள்ளங்கள் ஏற்படுகின்றன. புகைப்பிடிப்பவர்களின் முகம் எப்பொழுதும் வரண்ட நிலையிலேயே காணப்படும். இதனால் வயது முதிர்ந்தவர்கள் தோற்றத்தை மிகவும் விரைவிலேயே பெற்று விடுகிறார்கள்.

 

பற்கள் பாதிப்பு மற்றும் வாயில் ஏற்படும் அலர்ஜி
புகையை உள்ளிழுத்து வெளியிடுவததால் இவர்களின் உதடுகளின் தோல்களின் மெலேனியம் பாதிப்படைந்து கருக்கின்றன. பற்களின் உள்ளும் புறமும் நிக்கோடின் படிவதால் பற்கள் மஞ்சள் நிறமடைந்து விகாரமாகின்றன. காலப்போக்கில் பற்களின் நிறம் நிரந்தரமாக கருப்பாக மாறுகிறது. மேலும் நிக்கோடின் படிவதால் பற்களில் உள்ள கால்சியம் குறைகிறது, பற்களின் ஈறுகளில் பாக்டீரியாக்கள் உருவாகி பற்களின் வலுத்தன்மையை இழக்க வைக்கின்றன.


மேலும் இத் தீய பழக்கம் மண்ணீரல், கல்லீரல், நரம்புத்தளர்ச்சி, கடுங் குளிர்காய்ச்சல் போன்ற பல பாதிப்புகள் ஏற்படுவதற்கு சாத்தியமாக அமைகிறது.


வீண் விரையம்
புகை பிடிக்கின்ற ஒவ்வொருவரும் நாளொன்றுக்கு எவ்வளவு பொருட்செலவு செய்கிறார்கள். மாதம் மற்றும் ஒரு வருடத்திற்கு எவ்வளவு வீண்விரையம் செய்கிறார்கள் என ஒரு நிமிடம் தாங்களே கணக்கிட்டுப்பார்த்தால் அவர்களே வியக்கும் வகையில் வீண்விரையம் செய்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.


சராசரியாக 30 வருடம் புகைப்பிடிக்கும் மனிதர்கள் தனது வாழ்வில் கீழ்கண்டவாறு சிகரெட்டிற்கு செலவழித்திருக்கிறார்கள்.

 

சராசரியாக புகைத்த
ஆண்டுகள்

சராசரியாக 1 நாளைக்கு
புகைபிடிக்க ஆன செலவு

மொத்தம் கரியாக்கிய
ரூபாயின் மதிப்பு

30 ஆண்டுகள்

10 ரூபாய்

1,09,800.00 ரூபாய்

30 ஆண்டுகள்

25 ரூபாய்

2,74,500.00 ரூபாய்

30 ஆண்டுகள்

50 ரூபாய்

5,49,000.00 ரூபாய்


இதுவல்லாமல் புகைத்ததால் வந்த நோயிற்கு மருத்துவம் பார்க்க செலவழிக்கும் ரூபாய்கள் மேற்குறிப்பிட்ட லட்சங்களைத் தாண்டிவிடும்.


எனவே நீங்கள் இதற்காகச் செலவழிக்கும் பணத்தை உங்கள் குடும்ப வளர்ச்சிக்காகப் பயன்படுத்தலாமே. ர்மம் செய்தால் கூட மறுமையில் ஒன்றுக்கு பல மடங்காகப் பெறலாம் என்பது உங்கள் சிந்தனைக்கு எட்டவில்லையா?


சிந்தித்து நல்லறிவு பெரும் மக்களுக்கு ஆரம்பத்தில் குறிப்பிட்ட அல்லாஹ்வின் கட்டளையே போதுமானதாகும். அன்புச் சகோதரர்களே இத்தீய பழக்கத்திலிருந்து நீங்கள் உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள்.


இறைவன் தன் திருமறையில் கூறுகின்றான்
நிச்சயமாக வீண் விரயம் செய்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாவார்கள். ஷைத்தானோ தன்னுடைய இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 17:27)


மேலும் கூறுகின்றான்
எவரேனும் (அல்லாஹ்வின்) வரம்பை மீறி அநியாயமாக இவ்வாறு செய்தால், விரைவாகவே அவரை நாம் (நரக) நெருப்பில் நுழையச் செய்வோம் அல்லாஹ்வுக்கு இது சுலபமானதேயாகும். (அல்குர்ஆன் 4:30)