Index |Subscribe mailing list | Help | E-mail us

விவாதமும் சத்தியமும்

பஹ்ரைனிலிருந்து தேங்கை முனீப் மற்றும் அபூ முஹம்மத்

 

To Play video/audio without any trouble please Download Latest RealOne player

 

உம் இறைவனின் பால் மக்களை ஞானத்தைக் கொண்டும் அழகிய உபதேசத்தைக் கொண்டும் அழைப்பீராக! இன்னும் அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக. மெய்யாக உம் இறைவன் அவன் வழியை விட்டுத் தவறியவர்களையும் நேர்வழி பெற்றவர்களையும் நன்கறிவான் (அத்தியாயம் 16 அந்நஹ்ல் - வசனம் 125)

அழைப்புப் பணி என்பது மிகவும் புனிதமான ஓர் அறப்பணியாகும். இதற்கு மிகச்சிறந்த முன்மாதிரியாகத் திகழ்ந்தவர்கள் இறைத்தூதர்கள். சமுதாய நன்மையைக் கருத்தில் கொண்டு அவர்களது பணி அமைந்திருந்தது. புனிதமான இந்தப் பணியை அதாவது அல்லாஹ்வின் பால் மக்களை அழைக்க மிகச்சிறந்த வழிமுறைகளை அளவற்ற அருளாளனாகிய அல்லாஹ் நமக்குக் கற்றுத் தருகின்றான். அவற்றைப் பின்வருமாறு வரிசைப்படுத்தலாம்.

1. ஹிக்மத் அதாவது ஞானம் என்னும் திடமான அறிவைக் கொண்டு அழைக்கவேண்டும் (ஹிக்மத் என்றால் தந்திரத்தைக் கையாள்வது என்ற தவறான பொருள் பலராலும் வழங்கப்படுகின்றது. இதற்குக் குர்ஆனிலோ நபிவழியிலோ எந்த ஆதாரமும் கிடையாது என்பதே உண்மை)

2. அழகிய உபதேசங்கள்: மக்களுக்குப் பயன் உள்ள உபதேசங்களை கருத்தில் கொள்ள வேண்டும். அவர்களுக்கு முழுக்க முழுக்க நன்மையை நாடவேண்டும்

3. எது நல்லதோ அதனைக் கொண்டு விவாதித்தல்: அழகிய முறையிலான விவாதங்கள் அழைப்புப் பணியில் அனுமதிக்கப் பட்டவையாகும்.


ஒவ்வொரு காலகட்டத்திலும் வழிகேட்டின் தலைவர்களும் அவர்களைப் பின்பற்றக்கூடியவர்களும் தாங்கள் செல்லும் வழிகேட்டிற்கு சாதகமாகத் திருக்குர்ஆன் வசனங்களின் அர்த்தத்தை திரித்துக் கூறுவது வாடிக்கை.

தாங்கள் மட்டுமே தவ்ஹீத்வாதிகள் மற்றவர்கள் அதனை விட்டும் வெளியேறியவர்கள் என்று தம்பட்டம் அடிக்கும் சிலர், இறைவன் கூறிய விவாதம் என்ற வழிமுறையை தவறாகப் பயன்படுத்தி வருவதுதான் இக்கட்டுரை உருவாகக் காரணமாகும்.

தங்களின் ஆதரவாளர்களை தக்க வைத்துக்கொள்வதற்காக, எதற்கெடுத்தாலும் விவாத அழைப்பு விடுத்துவிட்டு, விவாதம் நடக்காமலிருப்பதற்கான நடைமுறைகளையும் கடைபிடித்துக் கொண்டு, அதன்பிறகு விவாதத்துக்கு வராமல் ஒடிவிட்டார்கள் என்று கூப்பாடு போடுவதும், உட்கார்ந்து பேசி முடிவு செய்துக் கொள்ளக்கூடிய சிறு விஷயத்திற்கும் கூட, "விவாதத்திற்குத் தயாரா?" என்று தமது சீடர்களை தூண்டிவிட்டு சவால் விடுவதும் வாடிக்கையாகிவிட்ட நிலையில் உண்மையில் இஸ்லாமிய விவாத நடைமுறைகள் என்னவென்பதையும், இவர்களின் விவாதச் சவடால்கள் அதற்கு எவ்வாறு முரண்பட்டு நிற்கின்றன என்பதையும் மக்கள் மன்றத்தில் வைக்க வேண்டியது அவசியமாகின்றது.


அழைப்புப் பணியின் வழிமுறைகளில் ஒன்றே விவாதம் என்றாலும்கூட, எடுத்த எடுப்பிலேயே விவாதத்தில் ஈடுபட வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடவில்லை. விவாதத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில் அதற்கான விதிமுறைகளையும் சேர்த்தே அல்லாஹ் குறிப்பிடுகின்றான். அதோடு மிகச்சிறந்த முறையில் நடைபெற்ற சில விவாதங்களைம் நமக்குப் படிப்பினையாகக் குறிப்பிடுகின்றான். உதாரணத்திற்காக ஒரு சம்பவம் மட்டும்.


தவ்ஹீதின் தந்தை இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் நடத்திய விவாதம்


أَلَمْ تَرَ إِلَى الَّذِي حَآجَّ إِبْرَاهِيمَ فِي رِبِّهِ أَنْ آتَاهُ اللّهُ الْمُلْكَ إِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّيَ الَّذِي يُحْيِـي وَيُمِيتُ قَالَ أَنَا أُحْيِـي وَأُمِيتُ قَالَ إِبْرَاهِيمُ فَإِنَّ اللّهَ يَأْتِي بِالشَّمْسِ مِنَ الْمَشْرِقِ فَأْتِ بِهَا مِنَ الْمَغْرِبِ فَبُهِتَ الَّذِي كَفَرَ وَاللّهُ لاَ يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ

 

அல்லாஹ் தனக்கு அரசாட்சி கொடுத்ததின் காரணமாக (ஆணவங்கொண்டு), இப்ராஹீமிடத்தில் அவருடைய இறைவனைப் பற்றித் தர்க்கம் செய்தவனை (நபியே!) நீர் கவனித்தீரா? இப்ராஹீம் கூறினார்; "எவன் உயிர் கொடுக்கவும், மரணம் அடையும்படியும் செய்கிறானோ, அவனே என்னுடைய ரப்பு(இறைவன்)" என்று. அதற்கவன், "நானும் உயிர் கொடுக்கிறேன், மரணம் அடையும் படியும் செய்கிறேன்" என்று கூறினான்; (அப்பொழுது) இப்ராஹீம் கூறினார்; "திட்டமாக அல்லாஹ் சூரியனைக் கிழக்கில் உதிக்கச் செய்கிறான், நீ அதை மேற்குத் திசையில் உதிக்கும்படிச் செய்!" என்று. (அல்லாஹ்வை) நிராகரித்த அவன், திகைத்து வாயடைப்பட்டுப் போனான். தவிர, அல்லாஹ் அநியாயம் செய்யும் கூட்டத்தாருக்கு நேர் வழி காண்பிப்பதில்லை. (2:258)

மாமேதை இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அளித்த ஒரே ஒரு பதிலால் நிராகரிப்பாளனாகிய நம்றூது மன்னன் வாயடைபட்டுப் போகின்றான் என மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் தெளிவுபடுத்துகின்றான். மேடை போட்டு நாட்கணக்கில் மணிக்கணக்கில் விவாதம் நடத்துவது மட்டுமே விவாதமாகும் என்று கருதியிருப்பவர்களுக்கு மேற்கண்ட விவாதச் சம்பவம் ஒரு பாடமாக அமையட்டும். தவறான கொள்கைகள் உண்மையான ஆதாரங்களைக் கொண்டு நியாயமான கேள்விகளைக் கொண்டு ஆணித்தரமான பதில்களைக் கொண்டு தகர்க்கப் படுவதே விவாதம் என்பதை மேற்கண்ட வசனம் நமக்குத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகின்றது. விவாதம் என்னும் போது அதில் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் இடையே நடைபெறும் விவாதத்தில் சத்தியவாதிகளின் ஆணித்தரமான கேள்விகள் ஆதாரப்பூர்வமான பதில்களிலேயே அசத்தியம் உடைந்து சிதறி சின்னாபின்னமாகிவிடும் என்பதே நபிமார்கள் நடத்திய விவாதங்கள் நமக்கு அளிக்கும் படிப்பினையாகும். இததகைய விவாதங்கள் நேரடியாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ நடைபெறலாம்.

தவ்ஹீதின் பெயரால் புதிய கொள்கைகளை தமிழகத்தில் அறிமுகப்படுத்திய த.த.ஜ வின் தவறான கொள்கைகளுக்கு, இன்று பல மார்க்க அறிஞர்களும் நியாயமான முறையில் பதிலளித்துக் கொண்டிருக்கின்றார்கள். இதுவும் ஒருமுறையில் விவாதம் தான். அவ்வறிஞர்கள் வைக்கும் கேள்விகளுக்கு ததஜவினரிடம் நியாயம் இருந்தால் அதனை மக்கள் மத்தியில் சமர்ப்பிக்கலாம். ஆனால் ததஜவினரின் தவறான கொள்கைகள் அம்பலப்படுத்தப்பட்டு பதில் சொல்ல முடியாத நிலையில் இவர்களால் கையிலெடுக்கப்பட்ட முனை மழுங்கிய ஆயுதமாக இவர்களின் தற்போதைய விவாதப் பூச்சாண்டிகள் அமைந்துள்ளதைக் காண்கின்றோம்.

ஆனால் இவர்களின் எதிர் தரப்பு அறிஞர்களோ இத்தகைய விவாதத்தில் குர்ஆன் ஹதீஸ் கூறும் நியாயமான போக்கைக் கடைபிடித்து வருவதையே நாம் கண்டு வருகின்றோம். இது அவர்களைப் புகழ்வதற்காக அல்ல. மாறாக விவாதக் கூப்பாடு போடுபவர்களின் வழிமுறை தவறானது எனக் காண்பிக்கவேதான். ததஜவினரிடம் காணப்படும் தவறுகளை மிகவும் கண்ணியமான முறையில் சுட்டிக்காட்டினார்கள். நேசத்துடன் அழகிய முறையில் உட்காந்து விவாதிக்க இவர்களுக்கு அன்புடன் அழைப்பு விடுத்தார்கள். ஆனால் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராகப் போகவே, சத்தியத்தை நியாயமான முறையில் மக்கள் மன்றத்தில் எடுத்து வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

உதாரணமாக ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுவதாக இருந்தால் ஜகாத் விஷயத்தில் பி.ஜைனுல் ஆபிதீன் என்பவர் கூறிய தவறான கருத்துக்களைப் பற்றி விவாதிக்க பிலால் பிலிப்ஸ் அவர்கள் சென்னைக்கு வந்திருந்தபோது அழைத்தது. ஆனால் மக்களுக்கு முன்னால் விவாதிக்க வேண்டும் என்று கூறி பி.ஜைனுல் ஆபிதீன் என்பவரால் இது மறுக்கப்பட்டது.

ஒரு புதிய கருத்து மக்கள் மன்றத்தில் வைக்கப்படுகின்றது. அது மார்க்கத்தின் அடிப்படைக் கடமைகளுள் ஒன்றான ஜகாத் பற்றியது. மக்களிடம் அது செல்வதற்கு முன் அதனை மார்க்க அறிஞர்கள் சபை உட்கார்ந்து அலசி ஆராய வேண்டும். ஏனெனில் மக்களிடம் தர்க்க வாதங்களும் வார்த்தை ஜாலங்களும் மட்டுமே எடுபடும். எல்லோரும் ஹதீஸில் புலமை பெற்றவர்களாகவோ ஹதீஸ் கலையைக் கற்றுத் தேர்ந்தவர்களாகவோ இல்லை. இந்த நியாயமான உண்மையை மறந்து அல்லது புறக்கணித்து மக்களிடம் பிலால் பிலிப்ஸ் அவர்கள் விவாதத்துக்கு வராமல் ஒடிவிட்டதாக செய்தியை கசிய விட்டார்கள்.


அடுத்ததாக தங்களுடைய தவறான கொள்கைகளுக்கு ஏற்ப சில சம்பவங்களையும் வரலாறுகளையும் ஹதீஸ்களையும் வளைத்து திரித்து தவறான ஒரு புரிதலை மக்களிடம் விதைத்தபோது அது பற்றி விவாதிக்க அறிஞர்கள் சபை அழைப்பு விடுத்தது. நீங்கள் அளிக்கும் ஆதாரங்கள் அனைத்தும் அரபு மொழியை மூலமாகக் கொண்டுள்ளது. எனவே முதலில் அரபு மொழி அறிஞர்களிடம் கலந்துரையாடலுக்குத் தயாராகுங்கள். நீங்கள் தவறாக விளக்கம் கொடுக்கும் ஹதீஸ்களில் உங்களது பிழைகளை சுட்டிக்காட்டி அதன் உண்மையான விளக்கத்தை உங்களுக்கும் பின்னர் மக்களுக்கும் உணர்த்துவதற்கு அதுவே வழிமுறை என்று கூறியபோது அதனையும் புறக்கணித்து தமிழ் நாட்டில் அதுவும் தமிழில் மக்கள் மன்றத்தில் வைத்துதான் விவாதம் நடக்க வேண்டும் என்று அடம்பிடிப்பதற்கு என்ன காரணம்? குர்ஆன் சுன்னா எந்த மூல மொழியில் நமக்கு கிடைக்கிறதோ அந்த மூல மொழிபற்றி ஆழமான அறிவு இல்லாது மக்களிடம் தர்க்கவாதங்களை வைத்து நியாயப்படுத்துவதற்காகவும் அதன் மூலம் இவர்களின் ஆதரவாளர்களைத் தக்க வைத்துக் கொள்ளவும்தானே?

விவாதத்தில் நாங்கள் சளைத்தவர்களல்ல என்று கூறக்கூடியவர்களின் நோக்கம் எதிர் தரப்பினர் விவாத்திற்குத் திறமையற்றவர்கள், விவாதம் என்றால் ஒடிவிடுபவர்கள் என்ற மாயையை மக்களிடம் ஏற்படுத்துவது ஒன்றே தவிர சத்தியத்தை நிலைநாட்டுவதற்காக அல்ல. இதற்கு சில உதாரணங்கள்.

முஜீபுர் ரஹ்மான் உமரியிடம் விவாத அழைப்பு விடுத்து அவர் கொடுத்த தேதியில் விவாதத்துக்கு தயாராகமல் புறக்கணித்தவர்கள் அவர் ஓடிவிட்டார் என்று பொய்ப் பிரச்சாரம் செய்தார்கள். ஹாமித் பக்ரி அவர்கள் பகிரங்க விவாதத்திற்கு அழைப்பு விடுத்தபோது அதிலிருந்தும் தந்திரமாக நழுவி விட்டவர்கள். கேரள ஆலிம்களிடமும் தங்களது கைவரிசைகளைக் காட்டியுள்ளனர் என்பது சமீபத்தில் நாம் அறிந்துள்ள செய்தியாகும்.

ஸஹாபாக்களை மட்டம் தட்டி திருவனந்தபுரத்தில் பீ.ஜே உரையாற்றிய போது, அது கேரள முஜாஹித் அறிஞர்களால் விமர்சிக்கப்பட்டது. தங்களது நிலைபாட்டைத் தெளிவுபடுத்தத் தயங்கிய ததஜவினர் அவர்களையும் விவாதத்துக்குத் தயாரா? என்று வாய்ச் சவடால் விட்டதுடன் "முஜாஹிதுகளுக்குச் சாபம்" என்று தலைப்பிட்டு அவர்களை விமர்சித்து நோட்டீஸ் வெளியிட்டுள்ளனர். விவாதத்திற்கான நியாயமான வழிமுறைகளுடன் அணுகாததால் முஜாஹிதுகளுடன் விவாதம் நடைபெறவில்லை. ஆகவே முஜாஹிதுகளும் ஓடிவிட்டார்கள் என்பதும் இவர்களின் புதிய பொய்ப் பிரச்சாரமாகும். ஆக த.த.ஜ என்றாலே விவாத அழைப்பு விடுக்கும் அமைப்பு என்றும் மற்றவை விவாதத்தை விட்டும் ஓடும் அமைப்புகள் என்ற நிலையை மக்களிடம் ஏற்படுத்தும் முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

நுர் முஹம்மத் பாக்கவி - பீ.ஜே விவாத ஒப்பந்தம்


ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் கொடுக்கத் தேவையில்லை என்ற கருத்தை பீ.ஜே வெளியிட்டபோது அவரின் கருத்துக்களில் உள்ள குறைபாடுகளை பகிரங்கமாகச் சுட்டிக்காட்டினார் நூர் முஹம்மத் பாக்கவி. அவருக்கும் விவாத சவால் விட்டவர்களின் சவாலை அவர்களது மேடையிலேயே ஏறி ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து விவாதத்திற்கு ஒப்பந்தம் செய்ய ஒரு நாளை தேர்ந்தெடுத்து அங்கு வருவதற்கான ஒப்புதலை பீ.ஜே மற்றும் நூர் முஹம்மத் பாக்கவி ஆகியோரால் அளிக்கப்பட்டது. இதனைத்தான் விவாத ஒப்பந்தம் என்று வழக்கமான பொய் அறிமுகத்துடன் ஓடிவிட்ட அவரைப் பிடித்துக் கொண்டு வந்தது போன்ஒரு மாயையை ஏற்படுத்தியிருந்தனர். இதனை பீ.ஜேவின் தளத்தில் வெளியிடப்பட்ட வீடியோவில் காண முடிந்தது.

ஒப்பந்தம் செய்ய ஒத்துக்கொண்ட தேதியில் நூர் முஹம்மத் பாக்கவி அவர்கள் வந்து 10, 11 பிப்ரவரி 2007 அன்று விவாதம் செய்வதென ஒப்பந்தம் எழுதப்பட்டு கையெழுத்தாயின. பாக்கவியுடன் நடைபெற இருக்கும் விவாதத்தில் தாம் தோற்றதாக ஆகிவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையில் சில தந்திரங்களை பீ.ஜேயும் அவர் உடன் இருந்தவர்களும் செய்ததை விவாத ஒப்பந்த வீடியோ மூலம் மக்களுக்கு வெளிப்பட்டுவிட்டன.


நிலைபாடு மாற்றம்

 

ஜகாத் சம்மந்தமாக பீ.ஜே தரப்பினரால் படிப்படியாக மாற்றப்பட்ட நிலைபாடுகள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளக் கூடாது என்ற நிபந்தனை பீ.ஜேதரப்பினரால் வைக்கப்படுகின்றது. இவர்களால் மாற்றப்பட்ட நிலைபாடுகளை இன்னும் நம்பியிருக்கும் மக்களுக்கும் உண்மை சென்றடைய வேண்டும் எனவே அதுவும் விவாதிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை ஏதோ உளறல் என்று சித்தரிக்கும் முயற்சி. ஆனாலும் ஜகாத் ஒருமுறை மட்டும் என்பதை நிலைநாட்ட எடுத்து வைக்கப்பட்ட தர்க்க வாதங்களே இவர்களால் மாற்றப்பட்டுவிட்ட நிலைபாடுகளாகும். நிலைபாடு மாற்றத்தைத் தங்களது பணிவுக்குக் காரணமாகக் காட்டுபவர்கள் இனிமேல் தர்க்க வாதங்களையே வைப்பதில்லை என்று தங்களது நிலைபாட்டை மாற்றிவிட்டார்களா? என்பதையும் தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். காரணம் இனியும் தர்க்கவாதங்களைக் காரணம் காட்டி நிராகரிக்கப்படும் ஹதீஸ்கள் மற்றும் அல்லாஹ்வின் சிஃபத்துக்கள் உட்பட ஏராளமான கொள்கை வியங்களும் உள்ளன. அவற்றுக்கெல்லாம் ஆதாரங்களை விடுத்து தர்க்க வாதங்களே இவர்களால் எடுத்துக் காட்டப்படுகின்றன.

தேவைப்படும் வசதிகளில் பாக்கவி அவர்கள் புரொஜக்டர் வேண்டும் என்று கேட்டபோது அதையும் விவகாரமாக்கிவிட்டனர். புரொஜக்டர் வழங்கப்பட்டால் தங்களது முரண்பாடுகள் வீடியோ மூலம் மக்களுக்குக் காட்டப்படுவதை பயந்துவிட்டனர் போலும்.

நேரடி ஒளிபரப்பு:

 

விவாதத்தை நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யவேண்டும் என்ற கோரிக்கையையும் கேலிக் கூத்தாக்கி அதில் பாக்கவியை மிரட்டும் தொனி காணப்படுகின்றது. விளைவுகள் என்ன ஏற்படும் என்ற அவரது நியாயமான கேள்விக்கு, விளைவு அரசாங்க தரப்பிலிருந்து ஏற்படும் என்று மிரட்டியவர்கள் பிறகு போலீஸ் பாதுகாப்பையும் மீறி கலவரம் ஏற்படும் என்று முரண்படுகின்றனர்.

"போலீஸ் பாதுகாப்பை மீறி எவ்வாறு கலவரம் ஏற்படும்? அவ்வாறு ஏற்பட்டால் யார் அதற்குப் பொறுப்பு?" என்று K.S. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி மடக்கியதும் சப்பைக் கட்டுடன் நேரடி ஒளிபரப்புக்கு ஒத்துக் கொண்ட நிலையையும் காணமுடிகின்றது.

ஆக ஒப்பந்தத்திலேயே இவ்வளவு முரண்பாடுகளை உடைய இவர்கள் விவாதத்தில் நேர்மையைக் கடைபிடிப்பார்களா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

 

கீழ்கண்ட விஷயங்களை இங்குள்ள வீடியோவில் பார்வையிடலாம்.

 

1) நேரடி ஒளிபரப்பு பற்றிய சர்ச்சை முதல் கிளிப்பின் 57 ஆம் நிமிடத்திலிருந்து ஆரம்பமாகின்றது. இரண்டாவது கிளிப் 8:56 ல் கலவரம் என்று திசை திருப்பி ரஹ்மதுல்லா இம்தாதி குறுக்கு கேள்வி கேட்பது. மூன்றாம் கிளிப் 8 ஆம் நிமிடம் வரை நேரடி ஒளிபரப்பு விவாதம் நீளுகின்றது.

2) கடந்த காலத்தின் முரண்பட்ட (தர்க்க) வாதங்கள் விவாதத்தில் உட்படுத்தக் கூடாது என்ற சர்ச்சை மூன்றாம் கிளிப் 55 ஆம் நிமிடத்திலிருந்து ஆரம்பமாகின்றது. 5 ஆம் கிளிப் 5 ஆம் நிமிடம் வரை நீண்டு செல்கின்றது. விவாதத்தில் தோற்றுவிடாமலிருக்க செய்யும் முயற்சிகள் அதில் அம்பலமாகின்றன.

3) புரொஜக்டர் விவகாரம் 5 ஆம் கிளிப் 5:25 ல் ஆரம்பமாகின்றது. அதனை ஒத்துக் கொண்டாலும் அதனைக் கேலி செய்து விவகாரமாக்குகின்றனர்.

4) பீ.ஜே வாய் கொடுத்து மாட்டிக்கொண்டால் கலீல் ரசூல் என்பவர் குறுக்கே புகுந்து அவரை காப்பாற்றுகிறார். (பீ.ஜேவின் புழுகு மூட்டைகளை தூக்கி சுமக்கும் அற்புதமான கைத்தடிகள்)

 

பொய் சொல்பவர்கள், இட்டுக்கட்டி சம்பவங்களை திரிப்பவர்கள் இன்னும் இதுபோன்றவர்கள் சொன்ன நபிமொழிகளை ஏற்காமல் இருப்பது ஹதீஸ் கலையில் முக்கிய சட்டமாகும். ஆனால் வெட்கமில்லாமல் இலங்கை மக்களிடம் இட்டுக்கட்டி கீழ்கண்ட பொய்யை கூறிவிட்டு, அதனை பொய் சொல்கிறோமே என்ற சிறிதுகூட கூச்சமில்லாமல் தொலைகாட்சியில் ஒளிபரப்பிய இந்த மாமேதைதான் ஹதீஸ்களைப் பற்றி மற்றவர்களுக்கு பாடம் நடத்திக்கொண்டிருக்கிறார்.

திருவிதாங்கோடு என்ற ஊரில் ஜாக் என்ற இயக்கம் தவ்ஹீத் பள்ளி கட்டிக் கொடுத்ததாகவும் அதில் இன்று குத்பியத் என்ற இருட்டு திக்ர் நடப்பதாகவும் பீ.ஜே சொன்ன பொய்யிற்கு வீடியோ ஆதாரம் உள்ளது.  இந்த ஒரு விஷயத்தை விசாரித்துவிட்டு இந்த மாமேதையின் இலட்சணத்தை தெரிந்துக்கொள்ளுங்கள்.

 

இதனைப் படிப்பவர்கள், ஒரு சவாலாக ஏற்று, திருவிதாங்கோட்டில் ஜாக் இயக்கத்திற்கு பள்ளி இருக்கிறதா என்று விசாரித்துவிட்டு ஒரு முடிவுக்கு வரவேண்டும்.

 

மேற்கண்ட திருவிதாங்கோடு பற்றிய பொய் ஒரு உதாரணத்திற்கு மட்டுமே. பொதுவாழ்வில் இந்த அளவுக்கு பொய் சொல்லும் ஒரு நபர் சாமானியர்கள் சோதித்து பார்க்க முடியாத இஸ்லாமிய ஆதாரங்களில் எந்த அளவுக்கு பொய் சொல்லுவார் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். 

 

இலங்கைக்கு சென்று இந்தியாவில் உள்ளவரை மட்டும்தான் புழுகுவார் என்று யாரும் தவறாக எண்ணிவிட வேண்டாம். இலங்கையில் உள்ளவரைப் பற்றியும் புழுகுவதற்கு தயங்கமாட்டார் என்பதற்கான ஆதாரம் இதோ.

 

இவரின் பொய்களுக்கென்றே அசைக்க முடியாத ஆதாரங்களுடன் "இவரைத் தெரிந்துக் கொள்ளுங்கள்" என்ற ஒரு விவரணப்படத்தை தயாரித்துள்ளார்கள். அந்த அளவுக்கு இவர்களின் பொய்கள் மக்கள் மத்தியில் பிரசித்திப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. வழிக்கெட்ட கூட்டத்தினரின் பட்டியலில் ததஜவினர் இவ்வளவு அவசரமாக இடம் பிடிப்பார்கள் என்று பீ.ஜேவின் சிஷ்யர்களே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

 

இதிலும் இவர்களை உங்களால் புரிந்துக்கொள்ள முடியவில்லையென்றால், குடந்தை குலுங்கியது என்று வயிறு குலுங்க சிரிக்க வைத்த இவர்களின் பொய்யைப் பார்த்தாவது சிந்திக்கவேண்டும்.

ததஜவினரின் விவாதங்கள் எப்படியிருக்கும்?

ததஜவினர் மார்க்க ஆதாரங்களுக்கு முதலிடம் கொடுப்பதை விட, பெண்கள் விஷயங்கள் என்றால் மிகுந்த ஆர்வமுடன் பேசுவார்கள் என்பதை, களியக்காவிளை விவாதத்தில் காண முடிந்தது. "தடவினார் தடவினார்" என்ற கூறி அதிக சிரத்தை எடுத்து அசிங்கமான வர்ணனைகள் செய்த மாவீரர்கள் இவர்கள்.

 

இலங்கை மார்க்க அறிஞர்கள் பீ.ஜே.தரப்பினரின் "தடவினார் தடவினார்" என்ற நாரச பேச்சைக் கேட்டு, உங்கள் நாட்டு அறிஞருக்கு குர்ஆனிலும் சுன்னாவிலும் மவ்லூது ஓதக்கூடாது என்பதற்கு ஆதாரம் கிடைக்கவில்லையா என்று சிரிக்கிறார்கள்.
 

விவாதம் என்பது யுத்தமாம்?

 

விவாதம் என்றால் யுத்தம் என்று பி.ஜைனுல் ஆபிதீன் புரிந்து வைத்துள்ளார். அப்படித்தான் அவரின் மாணவர்களுக்கும் அவர் போதித்துள்ளார். பீ.ஜே கலந்துக்கொண்ட ஒரு மதுரை பொதுக்கூட்டத்தில் நூர் முஹம்மத் பாக்கவி அவர்கள் இருக்கிறார் என்று தெரிந்தவுடன், நூர் முஹம்மது பாக்கவியை விவாதத்திற்கு அழைத்து வருகின்றவருக்கு ஒரு லட்சம் பரிசு என்று அறிவிப்பு செய்தார்கள். இவர்கள் விவாதத்திற்கு மற்றவர்களை அழைக்கும் இங்கிதமும் லட்சணம் இதுதான் போலும். இது போன்ற அநாகரிக செயல்களுக்கு கொடிபிடிக்கும் ஒரு கூட்டம் இவர்களுடன் இருக்கும்போது, இதுவும் செய்வார். இன்னமும் செய்வார்.

ஆனால், பீ.ஜே எதிர்பார்த்ததற்கு மாற்றமாக, விவாதத்திற்கு தயார் என்று நூர் முஹம்மது பாக்கவி அவர்கள், ததஜவினரின் மேடையிலேயே ஏறி அறிவிப்பு செய்துவிடவே, விவாதம் செய்வதற்காக ஒப்பந்தம் போட ஒரு நாளை குறிக்கிறார்கள். அந்த பேச்சின்போது விவாதம் என்றால் யுத்தம் என்கிறார் பீ.ஜே. (வீடியோ கிளிப்-ஐ பார்க்க இங்கு சொடுக்கவும்). யுத்தத்தில் பொய் சொல்வது அனுமதிக்கப்பட்டுள்ளதால், சூழ்நிலைக்கு தகுந்தார்போல் விவாதம் மற்றும் அது சார்ந்த விஷயங்களில் இட்டுக்கட்டி பொய்கள் சொல்வதை பீ.ஜே மற்றும் அவரின் மாணவர்களிடமிருந்து வெளிப்படுவதை பார்க்கிறோம்.
இன்னும் இதுபோன்ற பல பொய்களை வருகிற (2007) பிப்ரவரி 10, 11 அன்று நூர் முஹம்மது பாக்கவி அவர்களுடன் ஜக்காத் விஷயத்திற்காக மதுரையில் நடக்கவிருக்கும் விவாதத்தில் பார்க்கலாம்.

அதனால்தான், நூர் முஹம்மது பாக்கவி அவர்கள் விவாதத்திற்கு நழுவுவது போலவும், ததஜவினர் அவரை சம்மதிக்க வைத்தது போலவும் ஒரு அறிமுகத்தை கொடுத்து வீடியோ வெளியிட்டார்கள்.
மற்றவர்களை இழுத்து வரவேண்டும் என்ற அஃறினைக்கான வார்த்தையை பயன்படுத்தும் ததஜவினர், பி.ஜேவை மட்டும் அழைத்து வருகிறோம் என்பார்கள். மற்றவர்களும் இவர்களைப் போன்றே "பீ.ஜே.வினை விவாதத்திற்கு இழுத்து வாருங்கள்" என்ற எழுத ஆரம்பித்துவிட்டால் அதற்கான காரணமும் இவர்களேயாகும்.

 

நூர் முஹம்மத் பாக்கவி அவர்கள் தாயிஃபில் (சவுதி அரேபியா) இருந்தபோது, ததஜவினரின் விவாத அழைப்பு இலட்சணம் எப்படியிருந்தது என்பதை தெரிந்துக்கொள்ள இங்கு சொடுக்கவும்.

 

விவாதத்தின் தலைப்பு எப்படியிருக்கும்?

 

வெட்ட வெளிச்சமாக உள்ள விஷயத்தில்கூட பொய்கள் சொல்லும் இவர்களை நோக்கி நீங்கள் சுட்டிக்காட்டினால், அதற்கும் இவர்கள் விவாதம் செய்யத் தயார். "பீ.ஜே அதிகம் பொய் சொல்கிறாரா? மற்ற இயக்கங்கள் அதிகம் பொய் சொல்கிறார்களா?" என்ற தலைப்பில் விவாதிக்கலாமா? என்று கேட்பார்களே தவிர, பீ.ஜே சொன்னதில் பொய்கள் இல்லை என்று நிரூபிக்க முன்வர மாட்டார்கள்.

இதனை நான் கற்பனையில் சொல்லவில்லை. களியக்காவிளை விவாதத்தில் பீ.ஜே மொழிப்பெயர்த்த குர்ஆனிலிருந்தும் அவரின் புத்தகங்களிலிருந்தும் பொய்களையும் முரண்பாடுகளையும் எடுத்து மக்கள் மன்றத்தில் அடுக்குகிறார்கள். அதற்கு "நீங்கள் வைத்திருக்கிற தர்ஜுமாவையும் இந்த தர்ஜுமாவையும் வைத்து பேசுவோமா? என்று பி.ஜைனுல் ஆபிதீன் மிகுந்த கோபத்துடன் கர்ஜிக்கிறார்.

 

இவர் உண்மையானவர் என்றால், இவரின் குர்ஆன் மொழிப்பெயர்ப்பில் தவறுகள் இல்லை என்று நிரூபிக்கத் தயார் என்றல்லவா கர்ஜிக்க வேண்டும். சிஷ்யர்களால், தங்கள் தலைவரின் பொய்களை ஒத்துக்கொள்ள முடியாமலும் ஏற்றுக்கொள்ள முடியாமலும் சமாளிக்கும் நிலை.

சுன்னத்வல் ஜமாஅத்தினர் என்று சொல்லிக்கொண்டு தர்ஹா வழிபாட்டில் மூழ்கித் திளைத்தவர்கள் பின்பற்றுவது முன்னோர்களின் தவறான வழிமுறை என்பது நாமறிந்த உண்மையாகும். ஆனால் மனோ இச்சைக்கு ஆட்பட்டு, தலைவரை அப்படியே தக்லீத் செய்யும் மோசமான ஒரு கூட்டம் ததஜ என்ற பெயரில் உருவாகியிருப்பது களியக்காவிளை விவாதத்தின் மூலம் மக்களுக்கு தெரிந்திருக்கிறது. ததஜவினரின் ரவுடியிஷத்தை புரிந்துக்கொள்ள சரியான உதாரணம்தான் களியக்காவிளை விவாதம்.

 

களியக்காவிளை விவாதத்தின் மூலம் தர்ஹாவாதிகள் தலைநிமிரக் காரணமாக பீ.ஜே அமைந்துவிட்டார். அவ்விவாதத்தின் போது தர்ஹாதிகளால் அம்பலமாக்கப்பட்டவை பீ.ஜேவின் தடுமாற்றங்களும் பொய்களும்தான்.

உதாரணத்திற்கு ஒன்று:

 

"பொய்கள் உள்ள புத்தகங்களை கொளுத்த வேண்டும் என்றால், ஆதாரப்பூர்வமான புகாரி போன்ற ஹதீஸ் தொகுப்புகளில் பொய்கள் உள்ளதாக நம்பும் நீங்கள் புகாரி போன்ற புத்தகங்களை என்ன செய்யப்போகிறீர்கள்?" என்பது போன்ற தர்ஹாவாதிகளின் கேள்விகளுக்கு, பீ.ஜேவிடம் ஏற்பட்டிருக்கும் சமீபகால தடுமாற்றம்தான் முக்கியக் காரணமாகத் திகழ்கிறது என்பது வெளிப்படையான உண்மையாகும்.

யாராவது ததஜவினருடன் விவாதம் செய்ய ஆசைப்பட்டால் களியாக்காவிளை விவாதத்தின் முதல் 3 சி.டி.களை அவசியம் பார்க்க வேண்டும்.


விவாதத்தை அழைப்புப் பணிக்கான ஒரு வழிமுறையாகக் கற்றுத் தந்த திருமறை சிலரிடம் விவாதிப்பதை விட்டும் ஒதுங்கிவிட வேண்டும் என்றும் நமக்குக் கட்டளையிடுகின்றது.


لِكُلِّ أُمَّةٍ جَعَلْنَا مَنْسَكًا هُمْ نَاسِكُوهُ فَلا يُنَازِعُنَّكَ فِي الأمْرِ وَادْعُ إِلَى رَبِّكَ إِنَّكَ لَعَلَى هُدًى مُسْتَقِيمٍ وَإِنْ جَادَلُوكَ فَقُلِ اللَّهُ أَعْلَمُ بِمَا تَعْمَلُونَ اللَّهُ يَحْكُمُ بَيْنَكُمْ يَوْمَ الْقِيَامَةِ فِيمَا كُنْتُمْ فِيهِ تَخْتَلِفُونَ


(நபியே!) ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் வணக்க வழிபாட்டு முறையை ஏற்படுத்தினோம்; அதனை அவர்கள் பின்பற்றினர்; எனவே இக்காரியத்தில் அவர்கள் திடனாக உம்மிடம் பிணங்க வேண்டாம்; இன்னும்; நீர் (அவர்களை) உம்முடைய இறைவன் பக்கம் அழைப்பீராக! நிச்சயமாக நீர் நேர்வழியில் இருக்கின்றீர். (நபியே!) பின்னும் அவர்கள் உம்மிடம் தர்க்கம் செய்தால்; ''நீங்கள் செய்வதை அல்லாஹ்வே நன்கறிந்தவன்'' என்று (அவர்களிடம்) கூறுவீராக. ''நீங்கள் எ(வ் விஷயத்)தில் முரண்பட்டுக் கொண்டிருக்கிறீர்களோ, அதைப்பற்றி அல்லாஹ் கியாம நாளில் உங்களுக்கிடையே தீர்ப்பளிப்பான்.'' (22: 67-69)

 


وَمِنَ النَّاسِ مَنْ يُعْجِبُكَ قَوْلُهُ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَيُشْهِدُ اللَّهَ عَلَى مَا فِي قَلْبِهِ وَهُوَ أَلَدُّ الْخِصَامِ


(நபியே!) மனிதர்களில் ஒருவ(கையின)ன் இருக்கிறான்; உலக வாழ்க்கை பற்றிய அவன் பேச்சு உம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்; தன் இருதயத்தில் உள்ளது பற்றி(சத்தியஞ் செய்து) அல்லாஹ்வையே சாட்சியாகக் கூறுவான். (உண்மையில்) அ(த்தகைய)வன் தான் (உம்முடைய) கொடிய பகைவனாவான். (2:204)



وَعِبَادُ الرَّحْمَنِ الَّذِينَ يَمْشُونَ عَلَى الأرْضِ هَوْنًا وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلامًا


இன்னும் அர்ரஹ்மானுடைய அடியார்கள் (யாரென்றால்) அவர்கள்தாம் பூமியில் பணிவுடன் நடப்பவர்கள்; மூடர்கள் அவர்களுடன் பேசி(வாதா)ட முற்பட்டால் ''ஸலாம்'' (சாந்தியுண்டாகட்டும் என்று) சொல்லி (விலகிப் போய்) விடுவார்கள். (25:63)

பீ.ஜே போன்ற அதிகப் பிரசங்கிகளிடமும் மார்க்கத்தில் வரம்பு மீறுபவர்களிடமும் விவாதம் புரியும்போது அவர்களால், அல்லாஹ்வின் வல்லமைகளும், தூதரின் வழிமுறைகளும், சஹாபாக்களின் கண்ணியங்களும் தெருவுக்கு வரும் நிலைதான் ஏற்படும்.

 

சிறு வயதிலிருந்து வளர்ப்பு பிள்ளையாக வளர்க்கப்பட்ட ஸாலிம் (ரலி) என்ற கண்ணியமிக்க நபித்தோழரும் தத்தெடுத்த தாயாக உள்ள சஹாபியப் பெண்மணியும் (ரலி), எவ்வளவு கேவலமாக பீ.ஜேவினால் விமர்சிக்கப்படுகிறார்கள் என்பதை இங்கு சொடுக்கிப் பார்வையிடுங்கள்.

 

மேலும் விளக்கங்களை கேட்க பீ.ஜே.யின் அல்குர்ஆன் விரிவுரையும் விபரீதங்களும் மற்றும் திரித்துக் கூறப்படும் திருக்குர்ஆன் தொகுப்பு வரலாறு என்ற வீடியோ தலைப்புகளை பார்வையிடவும்.

 

சஹாபாக்கள் விஷயத்தில் இவரின் பழைய நிலை என்னவென்று தெரிந்துக்கொள்ள இங்கு சொடுக்கவும்.

 

நபிமார்கள் அனைவரும் சத்தியத்தைக் கொண்டு வந்த போது அதனை நிராகரித்தவர்கள் அதனைப் பொய்யாக்கும் முயற்சியில் தர்க்க வாதத்தையே ஆயுதமாகப் பயன்படுத்தினார்கள் என்பதையும் குர்ஆன் நமக்குக் கற்றுத் தருகின்றது.


كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوحٍ وَالأحْزَابُ مِنْ بَعْدِهِمْ وَهَمَّتْ كُلُّ أُمَّةٍ بِرَسُولِهِمْ لِيَأْخُذُوهُ وَجَادَلُوا بِالْبَاطِلِ لِيُدْحِضُوا بِهِ الْحَقَّ فَأَخَذْتُهُمْ فَكَيْفَ كَانَ عِقَابِ


இவர்களுக்கு முன்னரே நூஹின் சமூகத்தாரும், அவர்களுக்குப் பிந்திய கூட்டங்களும் (நபிமார்களைப்) பொய்ப்பித்தார்கள்; அன்றியும் ஒவ்வொரு சமுதாயமும் தம்மிடம் வந்த தூதரைப் பிடிக்கக் கருதி, உண்மையை அழித்து விடுவதற்காகப் பொய்யைக் கொண்டும் தர்க்கம் செய்தது. ஆனால் நான் அவர்களைப் பிடித்தேன்; (இதற்காக அவர்கள் மீது விதிக்கப் பெற்ற) என் தண்டனை எவ்வாறு இருந்தது? (40:5)

மார்க்க காரியங்களில் விவாதத்திக்கான நடைமுறை இவ்வளவு தெளிவாக இருக்கும் நிலையில் இன்று மேடையேறி பகிரங்க விவாதம் என்ற பெயரில் தர்க்கவாதத்தை மட்டுமே அடிப்படையாக வைத்து மக்களை குழப்பும் இவர்களை அறிவுடையோர் உதாசீனம் செய்யட்டும். அதற்கு பதிலாக, அமைதியாகத் சத்தியத்தை எடுத்துக் கூறுவதுடன் அசத்திய வாதிகளின் அசத்தியங்களுக்கு எதிரான உறுதியான ஆதாரங்களை மக்கள் மன்றத்தில் அறிஞர்கள் எடுத்து வைத்துக்கொண்டே இருக்கட்டும். இல்லையென்றால், இது போன்ற தடம் மாறிய கூட்டம் உருவாகக் காரணமாக இருந்துவிட்டற்காக இறைவனுக்கு பதில் சொல்வதோடு மட்டுமல்லாமல், நமக்கு பின்னால் வரும் சமுதாயம் நம்மை நோக்கி சாபம் இடும் நிலையும் ஏற்படலாம். (அந்நிலைமையை விட்டும் இறைவன் காப்பாற்றட்டும்).


எல்லாம் வல்ல அல்லாஹ் அதற்கு உதவிபுரிவானாக.