Index |Subscribe mailing list | Help | E-mail us

 

ஷேக் அப்துல்காதர்

ஏன் புறக்கணிக்கப் படுகிறாய்?

 

அன்புள்ள இஸ்லாத்துக்கு...
உன்னை பின்பற்றும்
அல்லாஹ்வின் அடியான்
எழுதிக் கொள்வது...


நீ எங்கிருந்து எப்போது
எதன் வழியாய் வந்தாய்
என்னுடைய மண்ணுக்கு?
 

புத்தகம் புரட்டினேன்...

சிரிக்கத் தோன்றும்
திரிந்த சரித்திரங்களில்
உனது முகவரிகள்

எங்குமே காணப்படவில்லை


உலகச் சீர்திருத்தத்தில்
உன் சேவை - மகத்தானது
நாகரீகப் புத்தகத்தில்
புரட்டும் பக்கமெல்லாம் - உன்
பாதச் சுவடுகள் தான்


உலகம் உன்னை
உற்றுநோக்கத் தொடங்கி விட்டது...
மேற்கத்திய அறிஞர்களின்
ஆய்வு நுண்ணோக்கிகளிலெல்லாம்
உன் பிம்பங்கள்தான்


அலட்சியம் சூழ்ந்த
முஸ்லீம்களால் ஏனோ நீ
தொடர்ந்து...
புறக்கணிக்கப் படுகிறாய்...


என்றாலும்...
அழிந்து விடாது உன்
சாதனைச் சான்றுகள்


யுத்தங்களின்றி...
சத்தங்களின்றி... உன்
வாட்கள் வீழ்த்தியதெல்லாம்
அஞ்ஞானத்தின்
தலைகளைத்தான்


அரபுச் சந்தைகளில்
அடிமைத்தலைகளை
"அழித்து"...
"ஒலித்த"தெல்லாம் - உன்
"அஹத்" எனும் மந்திரம்தான்


குற்றங்கள் குறைந்திட
மறுமையை நினைவூட்டி
மானுடம் காத்து
மகுடமும் சூட்டிக்கொண்டாய்


அனாச்சாரத்தின்
அகன்ற சாலையெங்கும் - உன்
"எச்சரிக்கை"ப் பலகைகள்
இல்லாமலில்லை


அழிவுப் படுகுழியின்
விளிம்பில் நின்றிருந்தும்
உலகம் ஏனோ
பாராமுகம் காட்டுகின்றது...


ஒன்று மட்டும் உறுதி...
சுவனங்களின்
வரவேற்றைகளில்
நுழையும் மார்புகளெல்லாம்
சுமக்கப் போவது - உன்
அடையாள அட்டைகளைத்தான்
 

தொடரட்டும் உன்
ஆக்கங்கள்...


இறை நினைவுடன்.