Thu
26
Jun
2008

திருக்குர்ஆன் மற்றும் பைபிளில் காணப்படும் வரலாற்றுத் தகவல்கள் – ஓர் ஒப்பீடு (பகுதி-6)

எழுதியவர்/பதிந்தவர்/உரை தேங்கை முனீப்

Article திருக்குர்ஆன் பைபிளிலிருந்து காப்பியடிக்கப்பட்டதா?

திருக்குர்ஆனிலுள்ள கூறப்பட்டுள்ள தீர்க்கதரிசிகளின் வரலாறுகள் பலவும் பைபிளில் சொல்லப்பட்ட தகவலை ஒத்து அமைந்திருக்கிறது, எனவே திருக்குர்ஆன் பைபிளைத் தழுவி முஹம்மது நபி (ஸல்) அவர்களால் காப்பியடிக்கப்பட்டதே! என்ற கிறித்தவ சபைகள் பிரச்சாரம் செய்து வருகின்றன. இதில் எந்தளவுக்கு உண்மை உள்ளது என்பதைப் பின்வரும் சான்றுகளின் அடிப்படையில் ஆராய்வோம்.

1. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எழுதப்படிக்கத் தெரியாதவர்களாக இருந்தனர். பைபிளின் பழய மற்றும் புதிய ஏற்பாடுகளைப் படித்துப் புரிந்து கொண்டு அதைப் பார்த்து எழுதுவதென்பது அவர்களுக்கு இயலாத காரியம் ஆகும். தன் தோழர்கள் எவருடையேனும் உதவியை இது விஷயத்தில் அவர்கள் நாடியிருக்கலாம் என்று கூற இயலுமா? இல்லை. ஏனெனில் அவ்வாறிருப்பின் அவர்களில் சிலருக்கேனும் அவ்விஷயம் (அதாவது அவர்கள் காப்பியடிக்கின்றனர் என்பது) தெரிந்திருக்கும். அதன் விளைவாக நபியைக் குறித்த அவர்களது நம்பிக்கையில் சந்தேகம் ஏற்பட்டு அவர்களுடைய உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கும். முஹம்மது நபி (ஸல்) அவர்களின் உடலில் ஒரு முள் தைத்துவிடுவதைத் தடுப்பதற்குக் கூட தங்கள் இன்னுயிரையும் தியாகம் செய்யத் துணிந்தவர்கள் நபித்தோழர்கள் என்பதை அறிக. உண்மை இவ்வாறிருக்க நபியவர்களைக் குறித்து அவர்களுக்கு ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டிருப்பின் இந்தளவுக்கு தியாகம் செய்யத் துணிந்த ஒரு சமுகத்தை எங்ஙனம் அவர்களால் உருவாக்க முடிந்தது?

அன்றியும் (நபியே!) இதற்கு முன்னர் நீர் எந்த வேதத்திலிருந்தும் ஓதி வந்தவரல்லர்; உம் வலக்கையால் அதை எழுதுபவராகவும் இருக்கவில்லை; அவ்வாறு இருந்திருந்தால் இப்பொய்யர்கள் சந்தேகப்படலாம். (அல்குர்ஆன் 29:48)

2. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் பைபிளின் பழய மற்றும் புதிய ஏற்பாடுகள் அரபி மொழியில் பெயர்க்கப்படவில்லை. இஸ்லாம் உலகெங்கிலும் வியாபித்த பிற்காலகட்டத்திலேயே அரபி மொழியில் பைபிள் மொழிபெயர்க்கப்பட்டது. பைபிளின் பழய ஏற்பாட்டைக் குறித்து தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்ட ஏர்ணஸ்ட் உர்த்வின் என்பவர் பின்வருமாறு கூறுகிறார். ”இஸ்லாமின் வளர்ச்சிக்குப் பின்னர் அரபு மொழியும் வளர்ச்சியடைந்தது. இஸ்லாமிய நாடுகளில் வாழ்ந்த யூதர்கள் மற்றும் கிறித்தவர்களின் அன்றாட வாழ்க்கையின் மொழியாக அரபு மொழி மாறிவிட்டது. அரபு மொழியில் பைபிள் மொழிபெயர்க்கப்படுவது அவசியமாகி விட்ட இக்கால கட்டத்தில்தான் பைபிளின் ஏராளமான பதிப்புகள் அரபியில் வெளிவரத் துவங்கின” (Ernst Wurthewin: Text of The Old Testament Page 104)

ஒன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தான் பழைய ஏற்பாடு அரபியில் மொழிபெயர்க்கப்பட்டது என கிடைத்த கையெழுத்துக் குறிப்புகள் தெளிவு படுத்துகின்றன. (Ibid Page 224-225) பெரும்பாலும் இக்காலகட்டத்தில் தான் புதிய ஏற்பாடும் அரபியில் மொழி பெயர்க்கப்பட்டிருக்க வேண்டும். பிரபல ஆய்வாளர் சிட்னி எச் க்ரிஃபின் என்பவர் கூறுகிறார்: ”அரபு மொழியில் சுவிசேஷங்களைக் கொண்ட மிகப் புராதனமான கையெழுத்து ஆவணம் சினாய் கையெழுத்துப் பிரதி 72 (Sinai Arabic MS72) ஆகும். ஜெருசலேம் சபையின் பிரார்த்தனை காலண்டரின் கால அட்டடவணைப் படி வரிசைப்படுத்தப்பட்ட நான்கு கானானிய சுவிவேஷங்களும் இதில் அடங்கும். இக்குறிப்பானது ரம்லா என்னுமிடத்தைச் சேர்ந்த ஸ்டீபன் (Stephen of Ramlah) என்பவரால் அரபு வருடம் 284 (கி.பி 897) ல் எழுதப்பட்டது என்று இதன் இறுதியில் அமைந்த குறிப்பு தெளிவாகக் கூறுகிறது. (Sidney H Griffith: The Gospel in Arabic: An Enquiry Into its Appearance In the First Abbasi Century Page 132) அதே புத்தகத்தின் இன்னொரிடத்தில் அன்போஸ்தலர்களின் நடபடிகள்,பவுலின் நிருபங்கள் மற்றும் கத்தோலிக்க நிருபங்களை உள்ளடக்கிய Sinai Arabic MS151 என்ற கையெழுத்து ஆவணம் ஹிஜ்ரி 253 (கி.பி 867) ல் பிஸ்ருப்னு ஸிர்ரி என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டதாகவும் காணப்படுகிறது. இதில் சுவிசேஷங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். (Ibid Page 131)

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் காலகட்டத்திற்குப் பின்னர் சுமார் இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின்னரே பைபிள் அரபியில் மொழிபெயர்க்கப்பட்டது. இந்நிலையில் எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபியவர்கள் அரபியில் உள்ள பைபிளைப் வேறு யாரிடமிருந்தோ படிக்கக் கேட்டு பின்னர் அதில் உள்ள கதைகளை உள்ளடக்கிய திருக்குர்ஆனை உருவாக்கினார்கள் என்ற வாதம் இங்கே எடுபடாமல் போகின்றது. அரபியில் இல்லாத ஒரு புத்தகத்தை அவர்கள் வாசிக்கக் கேட்டனர் என்பது அறிவீனமன்றோ?

3. இறை தூதர்களைக் குறித்து அவர்களைப் பாவிகளாகவும் ஒழுக்கமற்றவர்களாகவும் பைபிளின் வரிகள் சித்தரிக்கின்றன. நோவா மது அருந்தி போதையில் புரண்டதாகவும், லோத்து மது அருந்தி சொந்தப் புதல்விகளுடன் சல்லாபித்ததாகவும், யாக்கோபை சதியனாகவும், தாவீதை தந்திரமாக ஏமாற்றக் கூடியவனாகவும், இயேசுவை மதுபானம் விளம்பியவராகவும் பைபிள் சித்தரிக்கின்றது. இத்தகைய குற்றங்கள் யாவும் மக்களை நன்மையின் பால் வழி நடத்தவேண்டிய இறைதூதர்களின் பண்புகளுக்கு உகந்ததல்ல என்பது அனைவரும் அறிந்த விசயமாகும். இதுபோன்ற அபத்தங்களை விட்டு குர்ஆன் பரிசுத்தமாக உள்ளது. இத்தகைய எந்த கற்பனைகளும் குர்ஆன் கூறும் வரலாறுகளில் எள்ளளவும் இல்லை. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பைபிளிலிருந்து காப்பியடித்தார்கள் என்பது உண்மையாயின் இறைதூதர்கள் மீது பைபிள் இட்டுக் கட்டியுள்ள பாவங்கள் குர்ஆன் வசனங்களிலும் இடம் பெற்றிருக்கும் (அல்லாஹ் மிகப் பரிசுத்மானவன்!) அவ்வாறு எதுவும் அபத்தங்கள் குர்ஆனில் இல்லை என்பது மட்டுமல்ல, திருக்குர்ஆன் கூறும் இறை தூதர்களின் வரலாறுகள் அவர்களை தூயவர்களாகவும் மகான்களாகவும் மிகப்பெரிய தியாகிகளாகவும் படம்பிடித்துக் காட்டுகிறது. இது பைபிளிலிருந்து காப்பியடிக்கப்பட்டதே குர்ஆன் என்ற குற்றச்சாட்டின் முதுகெலும்பை முறிப்பதாக உள்ளது.

4. வரலாற்றைப் பொறுத் வரையில் அதன் அடிப்படைக்கு எவ்வகையிலும் பொருந்தாத பல செய்திகளும் வரலாறு என்ற பெயரில் பைபிளில் நிறைந்து காணப்படுகின்றன. பைபிள் பண்டிதர்களே இதனை அங்கீகரித்துள்ளனர். ”பல உறுதியற்ற வரலாற்றுத் தகவல்களும் பைபிளில் உள்ளன” (பார்க்க: பைபிள் வித்ஞான கோஷம் பக்கம் 12) உண்மையில் பைபிளிலிருந்து முஹம்மது நபி (ஸல்) அவர்கள் காப்பியடித்திருந்தால் அத்தகைய பல உண்மைக்கு முரணான செய்திகள் குர்ஆனிலும் இடம் பெற்றிருக்கும். ஆனால் குர்ஆன் கூறும் சரித்திரங்களை நிரூபிக்கும் புவியியல் ரீதியான சான்றுகள் கூட இன்று உலகுக்கே வெளிச்சமாக உள்ளன.

5. அறிவியல் ரீதியாகப் பார்த்தாலும் நிரூபிக்கப்பட்ட பல விஞ்ஞான உண்மைகளுக்கு முரணான பல தகவல்களையும் பைபிள் கொண்டுள்ளது. உதாரணமாக சூரியன் படைக்கப்படும் முன்னரே இரவும் பகலும் உண்டானது என்று ஆதியாகமத்தின் வரிகள் கூறுகின்றன. இன்னும் சூரியன் மற்றும் சந்திரன் சஞ்சரிப்பதால் இரவு பகல் மாற்றம் ஏற்படுகிறது, (யோசுவா 10: 12,13) பூமி விலகிச் செல்லாமால் நாட்டி வைக்கப்படுள்ளது (சங்கீதம் 104:5) முயல் அசைபோடக் கூடிய மிருகம் (உபாகமம் 14:7) போன்ற வரிகள் விஞ்ஞானத்துக்கு முரணான பைபிளின் நிலைபாட்டை தெளிவுபடுத்துகின்றன. இதில் இன்னொரு விசயம் என்னவென்றால் இத்தகைய தகவல்கள் தீர்க்கதரிசிகளின் வரலாற்றைக் கூறும் பகுதிகளில் இடம்பெற்றுள்ளன என்பதாகும். பைபிளைத் தழுவியே குர்ஆன் உருவாக்கப்பட்டது என்ற கூற்று உண்மையாயின் விஞ்ஞான முரணான இத்தகை தகவல்கள் குர்ஆனிலும் இடம் பெற்றிருக்கவேண்டும். இத்தகை தகவல்கள் விஞ்ஞான முரணானவை என்பதைத் தெரிந்து கொண்டு முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அதனை நீக்கியிருப்பார்களா என்று கருதவும் இடமில்லை. காரணம் அவர்கள் வாழ்ந்த காலம் இத்தகைய உண்மைகளை ஆராய்ச்சி செய்து அறியக்கூடிய காலகட்டமாக இருக்கவில்லை. ஆனால் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள எந்தவொரு தகவலும் விஞ்ஞானத்துக்கு முரண்பட்டவை என்று இதுவரை எவராலும் நிரூபிக்க இயலவில்லை. ஒருவேளை நூற்றாண்டுகள் கழிந்து கண்டுபிடிக்கப்பட்ட விஞ்ஞான உண்மைகளை முன்கூட்டியே தெரிந்து வைத்துக் கொண்ட காரணத்தால் முரணான தகவல்களை நீக்கியிருப்பார்கள் என்று கூறுவார்களேயானால், குர்ஆன் இறைவசனமல்ல என்பதை நிரூபிக்க ஆதாரம் தேடியவர்கள் முஹம்மது (ஸல்) அவர்கள் வருங்காலத்தை அறியக் கூடியவராக இருந்தார் என்ற நிலைக்கு வந்துவிடுவர். இதனால் அவர்களுக்கு கடவுள்தன்மையை வழங்கி இன்னும் அதிகமான வழிகேட்டில் விழுந்துவிடுவர்.

6. பைபிளில் காணப்படாத இறைத்தூதர்கள் மற்றும் சமூகங்களின் வரலாறுகளும் திருக்குர்ஆனில் காணப்படுகின்றன. உதாரணம்: ஆது மற்றும் ஃதமூது சமூகங்கள், அவர்களுக்கு மத்தியில் அனுப்பப்பட்ட தூதர்கள் ஹ¨து (அலைஹிஸ்ஸலாம்), மற்றும் ஸாலிஹ் (அலைஹிஸ்ஸலாம். இவர்களைக் குறித்த எந்த தகவலும் பைபிளில் இல்லை. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பைபிளைப் பார்த்து காப்பியடித்தார்கள் என்றிருப்பின் பைபிளில் கூறப்படாத இந்த இரண்டு பெரும் சமூகங்களின் வரலாறுகள் அவர்களுக்கு எங்கிருந்து கிடைத்ததாம்?

7. இறைதூதர்களின் வரலாறுகளில் பைபிளில் காணப்படாத ஏராளமான சம்பவங்களை திருக்குர்ஆன் விவரிக்கின்றது. இவற்றைப் பற்றிய எந்த தகவலும் பைபிளில் இல்லை. உதாரணமாகப் பின்வரும் சம்பவங்களைக் கூறலாம்.

நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் மற்றும் அவர்களை நிராகரித்த அவர்களின் மகனுக்கும் இடையே நடந்த உரையாடல் (அத்தியாயம் 11 வசனங்கள் 42 முதல் 46 வரை) நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் நம்றூது மன்னனுடன் நடத்திய விவாதம் (அத்தியாயம் 2: வசனம் 258) அவர்களின் தந்தை ஆஸருடன் நடந்த உரையாடல் (6:74, 19:41-49, 43: 26-27) மரணத்தவர்களை உயிர்ப்பிக்கும் அல்லாஹ்வின் ஆற்றலை விளக்குவதற்கு நான்கு பறவைகளப் பிடித்து பின்னர் அவற்றைத் துண்டுகளாக ஆக்கி அவற்றில் ஒவ்வொரு பாகத்தையும் ஒவ்வொரு மலையின் மீது வைத்து விட்டுப் பன்னர் அழைத்தால் அவை ஓடி வரும் என்று அல்லாஹ் அவர்களுக்கு விளக்கிக் காட்டியமை (2:260) அவர்கள் நெருப்புக் குண்டத்தில் வீசப்பட்டு பின்னர் அல்லாஹ்வின் ஆற்றலால் அற்புதாமக மீட்கப்பட்டது (21: 69,70) போன்ற சம்பவங்களைக் குறித்த எந்தத் தகவலும் பைபிளில் இல்லை.

இன்னும் இஸ்ராயீலின் சந்ததிகளிடம் ஒரு பசுவை அறுக்குமாறு அல்லாஹ் கட்டளையிட அதனை மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இஸ்ராயீல் சந்ததிகளிடம் கூறுகையில் அவர்கள் பசுவை அறுக்க மனமின்றி அதன் தன்மைகளைக் குறித்து கேள்விகள் எழுப்பிக் கொண்டிருந்தது, (2:67-71) கொலைக் குற்றம் நிரூபிக்க அறுக்கப்பட்ட பசுவின் மாமிசத் துண்டைக் கொண்டு கொலை செய்யப்பட்டவனின் சடலத்தின் மீது அடிக்குமாறு அல்லாஹ் கட்டளையிட்டது (2: 72-73) முதலானவை குறித்த தகவல்களும் பைபிளில் இல்லை.

ஈஸா அலைஹிஸ்ஸலாம் (இயேசு) அவர்களின் பிறப்பு முதல் பைபிளில் காணப்படாத ஏராளமான சம்பவங்களை திருக்குர்ஆன் விவரிக்கின்றது. தனது குழந்தைப் பருவத்தில் ஸகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பொறுப்பில் புனிதப் பள்ளியில் தங்கியிருந்த மர்யம் (அலை) அவர்களுக்கு அற்புதமாக அல்லாஹ் உணவளித்தமை! (3:37) பிரசவ காலத்தில் மர்யம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ்விடமிருந்து கிடைத்த தனிப்பட்ட அருட்கொடைகள் (19: 23-26) ஈஸா (இயேசு) அலைஹிஸ்ஸலாம் அவர்கள்தொட்டில் குழந்தையாக இருக்கும்போதே நான் அல்லாஹ்வின் தூதராவேன் என்று கூறி மக்களிடம் பேசியதன் மூலம் தன் முதல் அற்புதத்தை வெளிப்படுத்தியமை (19: 29-33) களிமண்ணில் ஒரு பறவையைப் போன்ற உருவத்தைச் செய்து அதில் அவர் ஊதியபோது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு அது உயிருள்ள பறவையாக மாறியது (3:49) போன்ற தகவல்களும் பைபிளில் எங்கும் இல்லை. பைபிளைப் பார்த்து காப்பியடித்து முஹம்மது நபி (ஸல்) அவர்கள் திருக்குர்ஆனை உருவாக்கியிருப்பின் பைபிளில் எங்குமே காணக்கிடைக்காத தகவல்களை அவர்கள் எங்கிருந்து பெற்றனர்? திருக்குர்ஆன் முற்றிலும் இறைவனால் அருளப்பட்டது! அதன் காரணமாகவே பைபிளின் எந்தப் பகுதியிலும் இடம்பெறாத பல உண்மைச் சம்பவங்களும் திருக்குர்ஆனில் இடம்பெற்றுள்ளன. இதோ மர்யமின் வரலாற்றை விவரிக்கும் இடத்தில் திருக்குர்ஆன் கூறியது எத்துணை உண்மை!

(நபியே!) இவை (அனைத்தும்) மறைவானவற்றில் நின்றுமுள்ள விஷயங்களாகும்; இவற்றை நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிக்கின்றோம்;. மேலும் மர்யம் யார் பொறுப்பில் இருக்க வேண்டுமென்பதைப் பற்றி (குறி பார்த்தறிய) தங்கள் எழுது கோல்களை அவர்கள் எறிந்த போது நீர் அவர்களுடன் இருக்கவில்லை. (இதைப்பற்றி) அவர்கள் விவாதித்த போதும் நீர் அவர்களுடன் இருக்கவில்லை. (3: 44)

8. திருக்குர்ஆன் விவரிக்கும் இறைதூதர்களின் வரலாறுகள் முரண்பாடுகளுக்கு அப்பாற்பட்டதும் தெளிவான விளக்கங்களை உடையதும் ஆகும். இறைதூதர்களின் வலாற்றை விவரிக்கும் தன்மை பைபிளிலிருந்து முற்றிலும் வேறுபட்டுள்ளது. மோசே (மூஸா அலைஹிஸ்ஸலாம்) ஸினாய் மலைக்குச் சென்றிருந்த சமயத்தில் இஸ்ரவேலர்கள் வணங்குவதற்காக பொன்னால் ஆன ஒரு காளைக் கன்றை உருவாக்கிக் கொடுத்தது மோசேயின் சகோதரனும் தீர்க்கதரிசியும் ஆன ஆரோன் (ஹாரூன் அலைஹிஸ்ஸலாம்) என்று பைபிளின் வரிகள் கூறுகின்றன. திருக்குர்ஆனில் மட்டுமல்ல பைபிள் கூட இறை தூதராக அறிமுகப்படுத்தும் ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் சிலைவணக்கத்துக்கு துணைபோனார்கள் என்பது அறிவுக்குப் பொருந்தாததாகும். இதே சம்பவத்தை திருக்குர்ஆன் விவரிக்குமிடத்து காளைக் கன்றை உருவாக்கி இஸ்ரவேலர்களுக்கு மத்தியில் சிலைவணக்கத்தைத் தூண்டியவன் இஸ்ரவேல் சமூகத்தில் உள்ள சாமிரி என்ற வழிகேடன் என்றும் அதன் காரணமாக அவன் இறைகோபத்திற்கு ஆளாகி நோயினால் பீடிக்கப்பட்டான் என்று கூறுகிறது (20: 85-97)

முடிவுரை

இதுவரை குறிப்பிடப்பட்ட அனைத்து சம்பவங்களிலிருந்தும் திருக்குர்ஆன் கூறும் வரலாற்று சம்பவங்கள் பைபிளிலிருந்து முற்றிலும் வேறுபட்டது, அது முழுக்க முழுக்க இறைவேதம் என்பதும் தெள்ளத் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது. வரலாற்றுச் சம்பவங்களை விவரிக்குமிடங்களில் பைபிளில் காணப்படும் அபத்தங்கள், அறிவுக்குப் பொருந்தாதா விஷயங்கள், முரண்பாடுகள் எதுவும் திருக்குர்ஆனில் இல்லை. திருக்குர்ஆன் கூறும் வரலாறு படிப்பவர்களின் உள்ளத்தை உருக்குவதாகவும் இறையச்சத்தையும் சிறந்த படிப்பினையை வழங்குவதாகவும் உள்ளன. இவை அனைத்தும் திருக்குர்ஆன் முஹம்மது (ஸல்) அவர்களின் கற்பனையல்ல. அல்லாஹ் இறக்கிய உண்மை வேதம் என்பதற்கான சான்றுகளாகும்.

”விழுகின்ற நட்சத்திரத்தின் மீது சத்தியமாக! உங்கள் தோழர் வழி கெட்டுவிடவுமில்லை அவர் தவறான வழியில் செல்லவுமில்லை. அவர் தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை. அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை.” (அல்குர்ஆன் : 53: 1-4)

முற்றும்

மூலம்: M.M.அக்பர் – தமிழில் தேங்கை முனீப், பஹ்ரைன்
For comments write to muneebtpm (at) gmail (dot) com

பிரிவு: அல்குர்ஆன்,பைபிள்,மதங்கள் ஆய்வு | 3 responses so far

Bookmark and Share
தொடர்புடைய பிற இடுகைகள்:
  • திருக்குர்ஆன் மற்றும் பைபிளில் காணப்படும் வரலாற்றுத் தகவல்கள் – ஓர் ஒப்பீடு (பகுதி-5)
  • திருக்குர்ஆன் மற்றும் பைபிளில் காணப்படும் வரலாற்றுத் தகவல்கள் – ஓர் ஒப்பீடு (பகுதி-4)
  • திருக்குர்ஆன் மற்றும் பைபிளில் காணப்படும் வரலாற்றுத் தகவல்கள் – ஓர் ஒப்பீடு (பகுதி-3)
  • மதுபானம் குர்ஆனிலும் பைபிளிலும் (பாகம்-4)
  • மதுபானம் குர்ஆனிலும் பைபிளிலும் (பாகம்-3)

  • 3 Responses to “திருக்குர்ஆன் மற்றும் பைபிளில் காணப்படும் வரலாற்றுத் தகவல்கள் – ஓர் ஒப்பீடு (பகுதி-6)”

    1. ABBASABBASon 21 Oct 2008 at 10:50 am 1

      ASSALAMU ALAIKKUM, THIS IS VERY TRUTH AND USEFUL TO ALL PEOPLES.

    2. Sujath AliSujath Alion 27 Oct 2009 at 1:29 pm 2

      Allah Akbar
      Allah Akbar
      Allah Akbar

    3. Mohamed SiddiqMohamed Siddiqon 14 Dec 2009 at 11:33 am 3

      Assalamu Alaikkum,

      Thank for your answer.it will use for other religions to know about quran.

      Regards / Siddiq

    Comments RSS

    Leave a Reply