Index |Subscribe mailing list | Help | E-mail us

 

 

இஸ்லாமும் இந்துமதமும் ஓர் ஒப்பீடு

 

பொதுவாக இந்துக்கள் முஸ்லீம்களைப் பற்றிக் கேட்கும் கேள்வி

 

கேள்வி 1:

ஒவ்வொரு காலகட்டத்திலும் அல்லாஹ் வேதங்களை அருளினானா? இந்தியாவுக்கு எந்த வேதம் அருளப்பட்டது? வேதங்களையும் இதர புராணங்களையும் அல்லாஹ்விடம் இருந்து அருளப்பட்ட வாக்குகளாகக் கொள்ளலாமா?

 

பதில்: வேதவாக்குகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் அருளப்பட்டன. குர்ஆன் கூறுகிறது:

 

(நபியே!) நிச்சயமாக உமக்கு முன்னரும், நாம் தூதர்களை அனுப்பி வைத்தோம் அவர்களுக்கும் மனைவியரையும், சந்ததிகளையும் நாம் ஏற்படுத்தியிருந்தோம் மேலும், எந்தத் தூதரும் அல்லாஹ்வின் அனுமிதியில்லாமல் எந்த அத்தாட்சியையும் கொண்டுவந்ததில்லை. ஒவ்வொரு தவணைக்கும் ஒரு (பதிவு) ஏடு உள்ளது.(13:38)

 

நான்கு வேதங்கள் பற்றி குர்ஆன் கூறுவது தெளராத், ஸபூர், இன்ஜீல், குர்ஆன்.

தவ்ராத் - மூஸா(அலை)

ஸபூர் - தாவூத்(அலை)

இன்ஜீல் - ஈஸா(அலை)

குர்ஆன் - முஹம்மது(அலை)

 

முந்திய எல்லா வேதங்களும் அந்ததந்த சமுதாய மக்களுக்கு அருளப்பட்டன. குர்ஆனுக்கு முன்பு அருளப்பட்ட வேதங்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு மட்டுமே அருளப்பட்டது. குர்ஆன் மட்டும் ஒட்டு மொத்த உலக சமுதாயத்தாருக்கும் அருளப்பட்டது. குர்ஆன் இறைவனிடமிருந்து அருளப்பட்ட இறுதி வேதம். இது முஸ்லிம்களுக்கு மட்டும் வேதநூல், அரபிகளுக்கு மட்டுமே வேதநூல் என்ற வாதங்கள் தவறு குர்ஆன் கீழ்கண்ட வசனங்களில் குறிப்பிடுகிறது.

 

அலிப், லாம், றா. (நபியே! இது) வேதமாகும் மனிதர்களை அவர்களுடைய இறைவனின் அனுமதியைக் கொண்டு இருள்களிலிருந்து வெளியேற்றப் பிரகாசத்தின் பால் நீர் கொண்டுவருவதற்காக இ(வ் வேதத்)தை நாமே உம்மீது இறக்கியிருக்கின்றோம் புகழுக்குரியவனும், வல்லமை மிக்கோனுமாகிய (அல்லாஹ்வின்) பாதையில் (அவர்களை நீர் கொண்டுவருவீராக!)(14:1)

 

இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப் படுவதற்காகவும் (வணக்கத்திற்குரிய) அவன் ஒரே நாயன் தான் என்று அவர்கள் அறிந்து கொள்வதற்காகவும் அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காகவும் மனிதர்களுக்கு இது ஓர் அறிவிப்பாகும்.(14:52)

 

ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. (2:185)

 

நிச்சயமாக நாம் மனிதர்களுக்காக உண்மையைக் கொண்டு இந்த வேதத்தை உம்மீது இறக்கியருளினோம் எனவே, எவர் (இந்த) நேர்வழியைப் பின்பற்றி நடக்கிறாரோ, அது அவருக்கே (நல்லது) எவர் வழிதவறி கெடுகிறாரோ அவர் தனக்கு பாதகமாகவே வழி கெட்டுப் போகிறார்; அன்றியும் நீர் அவர்கள் மீது பாதுகாவலர் அல்லர். (39:41)

 

கேள்வி 2:

எந்த வேதம் இந்தியாவில் அருளப்பட்டது? ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் வேதம் அருளப்பட்டதை குர்ஆன் கூறியதை அறிந்தோம். அப்படியானால் இந்தியாவுக்கு அருளப்பட்ட வேதம் எது? இந்துக்களின் புனித வேதங்களையும், புராணங்களையும் கடவுள் அருளிய வேதங்களாகக் கொள்ளலாமா?

 

பதில்: இந்தியாவுக்கு அருளப்பட்ட வேதங்கள் குறித்து குர்ஆன் அல்லது ஹதீஸில் தெளிவான சான்றுகள் ஒன்றுமில்லை. வேதங்களின் பெயர்களே அல்லது புராணங்களின் பெயர்களோ குர்ஆனிலும், ஹதீஸிலும் காணப்படவில்லை. ஆகவே அவைகள் இறைவனிடமிருந்து வந்த வேதவாக்குகளாக இருக்கவும் செய்யலாம், இல்லாமலும் இருக்கலாம்.

 

கேள்வி 3:

வேதங்கள் இறைவாக்காக இருந்தாலும் கூட குர்ஆனைப் பின்பற்ற வேண்டுமா?

 

பதில்: வேதங்களும், புராணங்களும் கடவுளினால் அருளப்பட்ட உண்மை வேத வாக்குகளாக இருந்தாலும் கூட அவை அச்சமுதாய மக்களை நேர்வழிப் படுத்த அந்த நேரத்தில் அருளப்பட்ட இறைவாக்குகளாகும். இருப்பினும் குர்ஆனோ பழைய வேதங்களை உண்மைப்படுத்தி ஒட்டு மொத்த உலக சமுதாயம் பின்பற்றுவதற்காக அருளப்பட்டது. மேலும் பழைய வேதங்கள் இன்றையவும் முழுமையாகப் பாதுகாக்கப்படவில்லை. அவைகள் அருளப்பட்ட மூல நிலையிலுமில்லை. தம்மை இறைவேதம் எனும் வாதிடும் எந்த வேதமும் அதன் மூலமொழியில் பாதுகாக்கப்படவில்லை. கால சூழ்நிலைகளுக்கேற்ப மாறுதல், கூட்டுதல், குறைத்தல், திரித்தல், கழித்தல், சேர்த்தல், நீக்குதல் ஆகியவை நிகழ்ந்துள்ளன. இது போன்ற குறைகள் நேராமல் குர்ஆனை மட்டும் பாதுகாத்து இருப்பதாக அல்லாஹ் கூறுவதைக் கீழ்கண்ட குர்ஆன் வசனம் தெளிவுபடுத்துகிறது.

 

நிச்சயமாக நாம்தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம் நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம். (15:9)

 

கேள்வி 4:

ராமரும், கிருஷ்ணரும் இறைவனின் திருத்தூதர்களா? இறைத்தூதர்கள் ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும், ஒவ்வொரு மொழியிலும் உலகெங்கும் அனுப்பட்டிருக்கும் போது இந்தியாவுக்கு அனுப்பட்டிருப்பார்கள். ஆகவே ராமரையும், கிருஷ்ணரையும் இறைத்தூதர்களாக ஏற்றுக் கொள்ளளாமா?

 

பதில்: இதனை கீழ் கண்ட குர்ஆன் வசனங்கள் தெளிவுபடுத்துகிறது.

 

நிச்சயமாக நாம் உம்மை உண்மையைக் கொண்டு, நன்மாராயங் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமே அனுப்பியுள்ளோம் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் வராத எந்த சமுதாயத்தவரும் (பூமியில்) இல்லை (35:24)

 

இன்னும் (நபியே! உம்மைப்பற்றி இந்நிராகரிப்போர் ''அவருக்கு அவருடைய இறைவனிடமிருந்து (நாம் விரும்பும்) அத்தாட்சி இறக்கப்பட வேண்டாமா?" என்று கூறுகிறார்கள் நீர் அச்சமூட்டி எச்சரிப்பவரே ஆவீர், மேலும், ஒவ்வொரு சமூகத்தவருக்கும் ஒரு நேர்வழி காட்டியுண்டு(13:7)

 

இவர்களைப் போன்றே வேறு) தூதர்கள் சிலரையும் (நாம் அனுப்பி) அவர்களுடைய சரித்திரங்களையும் உமக்கு நாம் முன்னர் கூறியுள்ளோம் இன்னும் (வேறு) தூதர்கள் (பரரையும் நாம் அனுப்பினோம் ஆனால்) அவர்களின் சரித்திரங்களை உமக்குக் கூறவில்லை. இன்னும் மூஸாவுடன் அல்லாஹ் பேசியும் இருக்கின்றான்.(4:164)

 

திட்டமாக நாம் உமக்கு முன்னர் தூதர்களை அனுப்பியிருக்கின்றோம் அவர்களில் சிலருடைய வரலாற்றை உமக்குக் கூறியுள்ளோம் இன்னும் எவர்களுடைய வரலாற்றை உமக்குக் கூறவில்லையோ (அவர்களும்) அத்தூதர்களில் இருக்கின்றனர்; (இவ்விருசாராரில்) எந்தத் தூதரும் அல்லாஹ்வின் அனுமதியின்றி எந்த அத்தாட்சியையும் கொண்டு வருவதற்கு (அதிகாரமும்) இல்லை. ஆகவே அல்லாஹ்வுடைய கட்டளை வரும் போது, (அனைவருக்கும்) நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படும் அன்றியும், அந்த இடத்தில் பொய்யர்கள் தாம் நஷ்டமடைவார்கள்.(40:78)

 

25 நபிமார்கள் பெயரே குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. (உ-ம்) ஆதம்(அலை), நூஹ்(அலை), இப்ராஹீம்(அலை), மூஸா(அலை), தாவூத்(அலை), சுலைமான்(அலை), ஈஸா(அலை), முஹம்மது(ஸல்) போன்ற இறைத்தூதர்கள்.

 

ஹதீஸின்படி உலகிற்கு இதுவல்லாமல் பல நபிமார்கள் இறைவனால் அனுப்பபட்டதை தெளிவுபடுத்துகிறது. அவ்வாறு அனுப்பட்ட இறைத்தூதர்கள் அவர்கள் சார்ந்திருந்த சமூகத்தை ஒரு குறிப்பிட்ட காலம் வாழும் வரை நேர் வழிப்படுத்தவே வந்தனர். அருள்மறை குர்ஆன் கூறுகிறது:

 

இஸ்ராயீலின் சந்ததியனருக்குத் தூதராகவும் (அவரை ஆக்குவான் இவ்வாறு அவர் ஆகியதும் இஸ்ரவேலர்களிடம் அவர்) ''நான் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன் நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி நான் அதில் ஊதுவேன் அது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு (உயிருடைய) பறவையாகிவிடும். பிறவிக் குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன் அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு இறந்தோதையும் உயிர்ப்பிப்பேன் நீங்கள் உண்பவற்றையும், நீங்கள் உங்கள் வீடுகளில் சேகரம் செய்து வைப்பவற்றையும் பற்ற நான் உங்களுக்கு எடுத்துக் கூறுவென். நீங்கள் முமின்கள் (நம்பிக்கையாளர்) ஆக இருந்தால் நிச்சயமாக இவற்றில் உங்களுக்குத் திடமான அத்தாட்சி இருக்கிறது" (என்று கூறினார்). (3:49)

 

நபி முஹம்மது(ஸல்) இறுதி இறைத்தூதராவார் என்பதை கீழ்கண்ட குர்ஆனி வசனம் தெளிவுபடுத்துகிறது.

 

முஹம்மது(ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை; ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார்; மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன்.(33:40)

 

நபி முஹம்மது(ஸல்) ஒட்டுமொத்த மனித சமுதாயத்துக்கும் நபி ஆவார் என்பதை கீழ்கண்ட குர்ஆனி வசனம் தெளிவுபடுத்துகிறது.

 

(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை. (21:107)

 

இன்னும், (நபியே!) நாம் உம்மை மனித குலம் முழுமைக்கும் நன்மாராயங் கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே யன்றி (வேறெவ்வாரும்) அனுப்பவில்லை; ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்.(34:28)

 

ஹதீஸ்: ஒவ்வொரு நபிமார்களும் அவர்களின் சமுதாய மக்களுக்காக மட்டுமே அனுப்பபட்டனர். நான் மனித சமுதாயம் அனைத்துக்கும் நபியாவேன். (புகாரி: ஜாபிர்(ரலி))

 

குர்ஆனிலோ அல்லது ஸஹீஹான எந்த நபி மொழிகளிலும் தெளிவான ஆதாரங்கள் எதுவும் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் குறித்து காணப்பட்வில்லை. மேலும், இராமர் குறித்தோ கிருஷ்ணர் குறித்தோ எந்தப் பெயரும் கூட குர்ஆன், ஹதீஸ்களில் தென்படவில்லை. ஆகவே அவர்கள் இறைத்தூதர்களாக இருக்கவும் செய்யலாம் இல்லாமலும் இருக்கலாம். உறுதியாக இருவரும் இறைத்தூதர்கள் தான் என்று எவரும் கூற வியலாது. சில முஸ்லீம்கள் அரசியல்வாதிகள் மாற்று மதத்தாரின் ஓட்டுக்களைப் பெற அவர்களின் மனதில் இடம் பிடிக்க ராம்(அலை) எனக்கூறி வருகின்றனர். இது முற்றிலும் தவறே. ஏனெனில் ராம் இறைத்தூதரா? ஏன்பதே தெளிவு செய்யப்பட்டாத போது குர்ஆன் ஹதீஸின் தெளிவின்றி மனோ இச்சைப் பிரகாரம் இவ்வாறு கூறுவது முரணானது. அநேகமாக அவர்களும் இறைத்தூதர்களாக இருந்திருக்கலாம், அல்லாஹ் அறிந்தவன் என்றே கூறவேண்டும்.

 

இராமரும், கிருஷ்ணரும் இறைத்தூதர்களாகயிருந்தாலும் கூட இன்றும் நாம் முஹம்மது (ஸல்) அவர்களையே பின்பற்றுதல் வேண்டும். ஏனெனில் இராமரும், கிருஷ்ணரும் இறைத்தூதர்களாக இருந்திருப்பினும் அவர்கள் குறிப்பிட்ட கால கட்டத்துக்கு குறிப்பிட்ட சமுதாய மக்களுக்கே இறைத்தூதர்களாக இருந்திருப்பார்கள். ஆனால் இன்றோ ஒட்டு மொத்த உலக மனித சமுதாயத்தாருக்கும் (இந்தியா உட்பட) இறுதி இறைத்தூதராக அனுப்பப்பட்ட முஹம்மது(ஸல்) அவர்களையே பின்பற்றுதல் வேண்டும்.

 

இத்தலைப்பில் சில கேள்விகளும் விளக்கங்களும் - 2