Index | Subscribe mailing list | Help | E-mail us

திமிங்கிலம் (Whale)
E. Usman Ali, Jeddah

 

அல்லாஹ் படைத்த பாலூட்டிகள் அனைத்திலும் திமிங்கிலம் மிக வித்தியாசமான சில தகவமைப்புகளைப் பெற்று விளங்குகின்றது. தன் வாழ் நாள் முழுதும் தண்ணீரிலேயே கழிக்கக் கூடிய ஒரே பாலூட்டி திமிங்கிலம் ஒன்றுதான். மேலும் நான்காயிரத்திற்கு மேற்பட்ட பாலூட்டி இனங்களில் மீன்களை ஒத்த உடல் அமையப் பெற்று நடக்கக் கூடிய வகையில் கால்கள் அமைப்பைப் பெறாத ஒரே உயிரினமும் திமிங்கிலம் ஒன்றுதான். இதுவும் அல்லாஹ்வுடைய படைப்புக்களில் விதிவிலக்கான அம்சமாகும். மேலும் இவைகளின் தலையின் மேற்பரப்பில் அமைந்துள்ள Blow hole என்ற சுவாசக் குழாய் அமைப்பு நுரையீரலுடன் நேரடியாக இணைக்கப் பட்டுள்ளதாலும் மற்ற பாலுட்டிகளைப் போன்று தொண்டையின் மூலம் சுவாசம் செல்ல வேண்டிய அமைப்பு இல்லாததனாலும் ஒரே நேரத்தில் இவைகளினால் உண்ணவும் சுவாசிக்கவும் இயலுகின்றது. இந்த அமைப்பும் இவற்றிற்கு இறைவனால் பிரத்யோகமாக கொடுக்கப் பட்ட அருட் கொடையாகும்.

 

பொதுவாக எல்லா பாலூட்டிகளுக்கும் இருக்கக் கூடிய பித்தப் பை (gall bladder) மற்றும் குடல் வால்வு (appendix) போன்ற உள் உறுப்புக்கள் இல்லாத அமைப்புகள் விதிவிலக்கான அம்சமாக திகழ்கின்றது. இந்த உலகில் வாழக்கூடிய உயிரினங்களில் மிகப் பெரியதும் இதுவரை கண்டெடுக்கப்பட்ட டைனோசர்களின் எலும்புக் கூடுகளில் மிகப் பெரிய அளவினை ஒத்த உடல் அளவையும் பெற்று பல சிறப்பு அம்சங்களுடன் அல்லாஹ்வுடைய படைப்பின் வல்லமையைப் பறைச்சாற்றும் இந்த திமிங்கிலங்களை பற்றி விரிவாக பார்ப்போம்.

 


திமிங்கிலம் என்றுச் சொன்னவுடன் நமக்கு மிகப் பெரிய அளவிளான மீனாகத்தான் நினைவுக்கு வருகின்றது. இவைகள் பல வகையிலும் மீன்களை ஒத்திருப்பினும் கூட இது மீன் இனத்தைத் சாராத பாலூட்டி ஆகும். மீன்கள் குளிர் இரத்த உயிரி ஆகும். மேலும் இவைகள் தண்ணீருக்கடியில் தங்கள் செவில்கள் மூலம் ஆக்ஸிஜனை கிரகிக்கும் அமைப்பைப் பெற்றுள்ளவை. ஆனால் திமிங்கிலங்கள் வெப்ப இரத்த பிராணி ஆகும். இவைகளின் உடல் வெப்ப நிலை மனிதனை போன்றே 37 டிகிரி செல்சியஸ் ஆகும். இவைகள் மற்ற பாலூட்டிகளைப் போன்றே நுறையீரல் அமைப்பை பெற்று விளங்குவதால் தங்களுக்குத் தேவையான ஆக்ஸிஜனை தண்ணீரின் மேற்பரப்பில் வந்துதான் பெற்றுக் கொள்ள இயலும்.

திமிங்கிலதில் 75-க்கு மேற்பட்ட வகைகள் இருக்கின்றன. ஓவ்வொன்றும் தனித்தனி குணாதிசியங்களைப் பெற்று விளங்குகின்றன. கருப்பு, வெள்ளை, நீலம் மற்றும் பல வண்ணங்களிலும் 24 மீட்டர் நீளம் முதல் 1.25 மீட்டருக்குக் குறைவான நீளம் வரையும் உப்பு நீர் மற்றும் நன்னீரிலும் வாழக்கூடியதாகவும் உலகில் உள்ள எல்லா கடல்களிலும் மற்றும் சில வகைகள் அமேசான், சீனாவின் மிகப் பெரிய ஆறான யாங்ட்ஜிலும் மற்றும் இந்தியாவின் கங்கை ஆற்றிலும் வாழக்கூடியதாகவும் காணப்படுகின்றன. 10 முதல் 16 மாத கால அளவில் வித்தியாசமான கர்ப்ப காலங்களை உள்ளடக்கியதாகவும் விளங்குகின்றது. டால்பின் புரொபோசிஸ் போன்றவைகள் உட்பட திமிங்கிலம் இனத்தை சேர்ந்தவையாகும். கீழ் காணும் படம் அமேசான் ஆற்றில் வாழும் Pink டால்பின் ஆகும்.

 


அமேசான் ஆற்று Pink dolphin

 

விஞ்ஞானிகள் திமிங்கிலங்களை இருப் பெரும் பிரிவுகளாகப் பிரிக்கின்றார்கள். ஒன்று பற்கள் உள்ளவை. வாயின் இருப் புறங்களிலும் வலிமையான தாடைகளுடன் கூடிய பற்களுடையவை. மற்றது பற்கள் அற்றவை அல்லது baleen என்ற அமைப்பைப் பெற்ற baleen திமிங்கிலங்கள். பற்கள் உள்ள வகைகளில் Sperm whale, Beaked, Narwhals, Beluga, Dolphin மற்றும் Porpoises போன்ற வகைகளும் பற்கள் அற்றவைகளில் Rorquals, Gray whales, Right whales என்ற மூன்று வகைகளும் இருக்கின்றன.

பற்கள் உடையத் திமிங்கில வகைகள்

பற்கள் உள்ள வகைகளில் 1.5 மீட்டருக்கு குறைவான Horbor porpoise முதல் 18 மீட்டர் நீளமும் 55 டன் எடையுடைய Sperm whale வரை பல வகைகள் இருக்கின்றன. இதில் பல வியக்கத்தக்க சிறப்பம்சங்களுடன் விளங்கும் Sperm whale பற்றிப் பார்ப்போம்.


Sperm whale வலிமையான பற்களைக் கொண்ட திமிங்கிலங்களில் முதன்மையான இடத்தை வகிக்கும் வகையைச் சேர்ந்ததாகும். இவை இத்தகைய பற்கள் அமைப்பை பெற்று விளங்குவதனால் மிகப் பெரிய அளவிளான மீன்களைக் கூட ஒரே நேரத்தில் பிடித்து விழுங்க முடிகின்றது. இவை தங்களின் முக்கிய உணவாக உட்கொள்ளும் Gaint squid என்னும் மீன் இனத்தின் நீளம் 10 மீட்டர் என்றுச் சொன்னால் இவற்றின் வாயின் அளவையும் பற்களின் வல்லமையையும் நம்மால் உணர முடிகின்றது.

 

இவை ஒரு முறை சுவாசித்ததன் பின்னர் 80நிமிடங்கள் வரை தண்ணீரின் அடியில் இவைகளினால் தாக்குப் பிடிக்க இயலுகின்றது. இவற்றின் உடல் அளவிடற்கறிய கடல் நீரின் அழுத்தத்தை தாங்கக் கூடிய வகையில் அமைந்துள்ளது. இவை தங்கள் இறையைத் தேடி கடலின் ஆழத்திற்கு செல்லும் தூரம் எந்த பாலூட்டிகளிளாலும் அடைய முடியாத ஒரு இலக்காகும். 1000 மீட்டர் (1 கிலோ மீட்டர்) முதல் 2000 மீட்டர்(இரண்டு கிலோ மீட்டர்) ஆழம் வரை செல்லக் கூடிய ஆற்றல் பெற்றது. சுபஹானல்லாஹ். இவ்வளவு ஆழக் கடலின் வெளிச்சம் அறவே இல்லாத அடர்ந்த இருளில் இரையை பிடிக்க பயன் படுத்தும் உத்தி எதிரொலி (echo location) மூலம் இரையின் இருப்பிடத்தை துல்லியமாக அறிந்துக் கொள்ளும் முறையாகும். இவைகள் சராசரியாக ஒரு நாளைக்கு 1500 கிலோ வரை உணவை உட்கொள்ளுகினன்றன. இதன் முக்கிய உணவான 10 மீட்டர் நீளமுள்ள Gaint squid பிடித்து உண்ணும் போது சில சமயம் இவைகளுக்கிடையே சண்டை ஏற்பட்டு Sperm Whale உடலில் மிக ஆழமான வெட்டுக் காயத்தை ஏற்படுத்தி விடுகின்றது. இருப்பினும் கூட முடிவில் அவற்றை களீபரம் செய்யத் இவைத் தவறுவதில்லை. இவை தங்களின் உணவை பிடித்து உண்டதன் பின்னர் தண்ணீரின் மேற்பரப்பிற்கு வந்து 10 முதல் 15 நிமிடங்கள் வரை காற்றை நன்கு சுவாசித்து ஆக்ஸிஜனை சேமித்து மீண்டும் ஆழ் கடலை நோக்கி தங்கள் பயணத்தை தொடர்கின்றன.

 


Sperm Whale

 

மனிதனின் மூளையைக் காட்டிலும் அளவில் நிறையில் பெரிய மூளையுடைய பாலூட்டிகள் இரண்டே இரண்டுதான். ஓன்று யானை மற்றது திமிங்கிலத்தினுடைய மூளையாகும். உலகில் உள்ள பாலூட்டிகளில் (அல்லது உயிரினங்களில்) மிகப் பெரிய மூளையுடையது என்ற சிறப்பும் இதற்கு உண்டு. திமிங்கில வகைகளில் மிக அதிக கர்ப்பக் காலமான 16 மாத கர்ப்ப காலம் இதனுடையதாகும். இவை 60 முதல் 70 வருடம் உயிர் வாழக்கூடியது.

பற்கள் அற்ற Baleen திமிங்கிலங்கள்
பற்கள் உள்ள திமிங்கிலங்களுக்கும் பற்கள் அற்ற பலீன் திமிங்கலங்களுக்கும் இரையை பிடிக்கப் பயன் படுத்தும் முறையில் மிக பெரிய அளவிளான வித்தியாசங்கள் உள்ளன. Baleen திமிங்கிலங்களின் வாயின் மேற்பரப்பில் தொங்கக் கூடிய அமைப்பில் அமைந்த உறுதியான நீண்ட சீப்புக்களைப் போன்ற வளைந்துக் கொடுக்கக் கூடிய தன்மையைக் கொண்ட இதுதான் பலீன் என்று அழைக்கப்படுகின்றது. Green land Right whale என்றழைக்கப்படும் ஆர்டிக் திமிங்கிலங்களின் பலீன் தகடுகள் அதிக பட்சமாக நான்கு மீட்டர் நீளம் வரை வளரக் கூடியது. இவைகள் பக்கத்திற்கு 270 முதல் 360 எண்ணிக்கை வரையும் வளரக்கூடியது. பலீன் திமிங்கிலங்கள் தங்கள் வாய்களில் உட் கொள்ளும் டன் கணக்கான தண்ணீரை திரும்பப் பீய்ச்சி வெளியேற்றுவதன் மூலம் இந்த பலீன் தகடுகளினால் வடிகட்டப் பட்டுச் சிக்கிக் கொள்ளும் சிறிய பிளாங்டன் மற்றும் சிறிய வகை மீன்களை உணவாக உட்கொள்கின்றன. இந்த பலீன்கள் முக்கோண வடிவில் அமைந்துள்ளன. வாயின் உட்புறத்தில் அமைந்த இவைகளின் வெளிப்புறம் நேரானதாகவும் அதன் உட்புறம் இருப்புறங்களிலும் தேய்ந்த அமைப்பில் அமைந்துள்ளதால் மிகச் சிறிய அளவிளான உயிரினங்கள் கூட இவற்றின் வாயிலிருந்து தப்பிக்க இயலுவதில்லை. (முதலை வாயில் மாட்டுவதை விட இதன் வாயில் மாட்டுவது ஆபத்து போலும்).

 

இந்த பலீன்கள் நீளமாகவும் மிக உறுதியாகவும் எலாஸ்டிக் போன்ற கெரட்டீன் என்ற மூலப் பொருளால் ஆனவை. இந்த கெரட்டீன்தான் மனிதர்களின் முடி மற்றும் விரல் நகங்களை உருவாக்க காரணமாக இருப்பவை. இத்தகைய அமைப்பை அடிப்படையாக கொண்ட பலீன் திமிங்கிலங்களில் மிகப் பெரியதும் பல சிறப்பான அம்சங்களையும் கொண்ட Blue Whale என்றழைக்கப்படும் நீல நிறம் கொண்டு திமிங்கிலத்தை பற்றிப் பார்ப்போம்.


 

பலீன் திமிங்கிலங்களில் Blue Whale என்றழைக்கப்படும் இந்த திமிங்கிலம்தான் இந்த பூமியில் உள்ள உயிரினங்களிலேயே மற்ற எவற்றுடனும் ஒப்பிட இயலாத அளவிற்கு மிகப் பெரியதாகும். 24 மீட்டர் வரை நீளமும் 150 மெட்ரிக் டன் வரை எடையும் கொண்டதாகும். இவற்றின் உள் உறுப்புகளில் ஒன்றான இதயத்தின் அளவு Volks wagen beetle என்றழைக்கப்படும் காருடைய அளவிற்கு ஒப்பான அளவு என்றால் எவ்வளவு பிரமாண்டமான உருவமாக இருக்கும் என்பதை நீங்களே எண்ணிப் பாருங்கள். இவைகள் 100 ஆண்டுகளுக்கு மேலான வாழ் நாளைக் கொண்டவை. பொதுவாக உலகில் உள்ள எல்லா கடல்களிலும் காணப்படும் இவைகள் பல்வேறு காரணங்களுக்காக வேட்டையாடப் பட்டு அழிவின் விளிம்பை நோக்கி விரைந்து செல்லுவதால் எண்ணிக்கையில் மிகக் குறைந்துக் காணப்படுகின்றன. 760 லிட்டர் வரைக் கொள்ளளவு வயிற்றைக் கொண்ட இவைகள் ஒரு நாளைக்கு உண்ணும் உணவின் அளவு 3600 கிலோ வரையாகும்.

 

இவைகள் இனப் பெருக்கத்தில் ஈடுபட்டு ஏறக்குறைய 11 -மாத கால அளவில் வழக்கமாக ஒரு குட்டியை ஈன்றெடுக்கின்றது. இதன் குட்டி பிறக்கும் போது தாயின் எடையில் 30 சதவீத எடையுடன் பிறக்கின்றது. 7.6 மீட்டர் நீளமும் மூன்று டன் எடையுடனும் பிறக்கக் கூடிய இவைகள் 7 முதல் 8 மாதங்கள் வரை தாயின் அரவணைப்பில் வாழுகின்றன. திமிங்கிலங்கள் தங்கள் குட்டிகளுக்குப் பால் கொடுக்கின்றன. விஞ்ஞானிகள் இவற்றைப் பாலூட்டிகளின் பட்டியலில் ஒன்றாகக் கருத இதுவே முழு முதற்காரணமாகும். இந்த Blue Whale தன் குட்டிக்கு ஒரு நாளைக்கு கொடுக்கும் பாலின் அளவு 600 லிட்டர்களாகும். இதனுடையக் குட்டி ஒரு நாளைக்கு 90 கிலோ எடை வரை வளர்ச்சியடைகின்றது.

 

Blue Whale-களுக்கு உள்ள மற்றுமொரு தனிச்சிறப்பு என்னவென்றால் இவை தண்ணீருக்கு அடியில் எழுப்பும் 150-க்கும் மேலான டெசிபலைக் கொண்ட (எந்த ஒரு உயிரினங்களையும் மிகைத்த) ஒலி ஒரு ஜெட் விமானம் கிளம்பும் போது ஏற்படுத்தும் சத்தத்தைக் காட்டிலும் கூடுதலாகும். இந்த ஒலி தண்ணீரின் அடியில் கடக்கும் தொலைவு 1000 கிலோ மீட்டருக்கும் மேலாகும். அல்லாஹ் நாடியதை அதிகப் படுத்தக்கூடியவன் . இதன் மூலம் இவைகள் மிகத் தொலைத் தூர பிரதேசத்தின் தங்கள் இனத்துடன் தொடர்புக் கொள்ள பயன் படுத்துவதாக விஞ்ஞானிகள் அபிப்ராயப் படுகின்றார்கள். இவை தங்கள் தலையின் மேற்பரப்பில் அமைந்த சுவாசக் குழாய் (Blow hole) மூலம் தண்ணீரை 9 மீட்டர் உயரம் வரை நீர் கம்பம் (Water Spout) போல பீய்ச்சி அடிக்கின்றன. இவ்வாறு மிகுந்த சப்தத்துடன் கூடிய இந்த நிகழ்ச்சியும் திமிங்கிலங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்ளும் சாதனமாக பயன் படுத்துவதாக விஞ்ஞானிகளால் நம்பப் படுகின்றது. ஏனென்றுச் சொன்னால் இவை சத்தம் எழுப்பும் போது அதற்கு பதில் அளிக்கும் விதமாக தொலை தூர கூட்டத்தின் திமிங்கிலங்கள் சப்தம் இடுவதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளார்கள்.

இனி திமிங்கிலங்களின் பொதுவான சில அம்சங்களைப் பற்றிப் பார்ப்போம். முதலாவதாக அவற்றின் உடல் அமைப்பை பற்றியும் அதன் செயல்பாடுகளைப் பற்றியும் பார்ப்போம். திமிங்கிலங்களின் உடலின் மேற்புறம் புரதத்தை உள்டக்கிய Bubler என்னும் மிகத்தடித்த அடுக்கு அமைந்துள்ளது. இது இவற்றின் உடல் வெப்பத்தை (உறை நிலையைக் கடந்த துருவப் பகுதிகளிலும்) சீராக வைத்துக் கொள்ளவும் தங்களுக்குத் தேவையான சத்துக்களை சேகரித்து வைத்துக் கொள்ளவும் பயனாகின்றது.

 

கடலின் மிக ஆழத்தில் இவை செல்லும் போது கடல் நீரின் மிக அதிக அளவான அழுத்தத்தை தாங்கக் கூடிய வகையில் இவற்றின் கண் அமைப்பு அமைந்துள்ளது. கண்களைக் சுற்றி அமைந்துள்ள தோல் போன்ற அமைப்பு தண்ணீரின் மிக அதிகமான அழுத்தத்தை தாங்கிக் கொள்ளவும் உப்பு நீரினால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படாமலும் காக்கக்கூடிய பாதுகாப்பு அரணாகவும் விளங்குகின்றது. இதே அமைப்பு கண்ணின் லென்சின் அமைப்பை மாற்றிக் கொடுப்பதன் மூலம் தண்ணீருக்கடியிலும் தண்ணீரின் மேற்பரப்பிலும் தெளிவாக காண வகைச் செய்கின்றது. பொதுவாக எல்லா பாலூட்டிகளுக்கும் அமையப் பெற்ற பித்தப்பை மற்றும் குடல் வால்வு அமைப்பு இவற்றிற்கு இல்லை என்பது குறிப்பிடத் தக்க அம்சமாகும். இவைகள் தண்ணீரின் அடியில் மணிக் கணக்காக தாக்குப் பிடிப்பதானால் இவற்றின் நுரையீரல் அமைப்பை பற்றி அறிந்துக் கொள்வது அவசியமான ஒன்றாகும். இவற்றின் நுரையீரல் மற்ற பாலூட்டிகளைப் போன்று தொண்டையின் இணைப்பின்றி காற்றுக் குழாய் (Blow hole) மூலம் நேரடியாக இணைக்கப் பட்டுள்ளதால் இவற்றினால் ஒரே நேரத்தில் உண்ணவும் சுவாசிக்கவும் இயலுகின்றது. இவற்றின் நுரையீரல் மனிதர்களின் நுரையீரலை விட அமைப்பில் சற்றுக் குறைந்திருப்பினும் கூட செயல் பாட்டில் மனிதர்களின் நுரையீரலை விட மிகைத்த ஒன்றாகும். மனிதர்களின் நுரையீரல் ஒரு சுவாசத்தின் மூலம் 15 முதல் 20 சதவீதம் வரைதான் ஆக்ஸிஜனை கிரகிக்க இயலுகின்றது. ஆனால் திமிங்கிலங்களின் நுரையீரலோ 80 முதல் 90 சதவிகித ஆக்ஸிஜனை கிரகித்துக் கொள்ளுகின்றது.

 

இவற்றின் நுரையீரல் ஆக்ஸிஜனை கிரகிக்கும் அதே வேளையில் கார்பன் டை ஆக்சைடை மிக வேகமாக வெளியேற்றுகின்றது. இதுவும் மனித நுரையீரலை விட வேகமான செயல்பாடாகும். எனவேதான் இவைகளினால் நீண்ட நேரம் தண்ணீரில் தாக்குப் பிடிக்க முடிகின்றது. இவற்றின் இரத்தம் மற்றும் திசுகளில் சேகரிக்கப் படும் அதிகப்படியான ஆக்ஸிஜன் ஹீமோ குலோபின் (hemoglobin) மற்றும் மையோ குலோபின்(Myoglobin) மூலம் 80 முதல் 90 சதவிகிதம் வரை ஆக்சிஜன் வினியோகம் செய்யப் படுவதால் தண்ணீருக்கு அடியில் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்க இயலுகின்றது. மேலும் இவை தண்ணீருக்கு அடியில் தங்கள் உணவுக்காக சென்றதன் பின்னர் இவற்றின் இதயம் நிமிடத்திற்கு 3 லிருந்து 5 முறை வரை மட்டுமே துடிப்பதனால் பல உறுப்புக்களுக்கு ஆக்சிஜன் வினியோகம் நிறத்தப் பட்டு நீண்ட நேரத்திற்கு இவைகளினால் பிராண வாயுவை பயன்படுத்திக் கொள்ள இயலுகின்றது. இதனால் இவற்றின் மூளை மற்றும் இதயத்தின் இயக்கம் குறைந்து இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப் படுவதனால் நீண்ட காலம் வாழ இது வகைச் செய்கின்றது.


மனிதர்களின் மூளையைக் காட்டிலும் அளவில் பெரிய மூளை திமிங்கிலங்களுடையதாகும். மூளையின் அளவிற்கும் அறிவுத் திறனுக்கும் தொடர்பு இருப்பதாக விஞ்ஞானிகளினால் நம்பப்படுகின்றது. 1970 ஆண்டு வாக்கில்தான் திமிங்கிலங்கள் புத்திக் கூர்மையான செயல்பாடுகள் முதல் முதலாக அறியப்பட்டது. விஞ்ஞானிகள் திமிங்கிலங்களை புத்திசாலி உயிரினமாகவே கருதுகின்றார்கள். ஏனென்றுச் சொன்னால் மூளையின் முன் புறமாக அமைந்த cerebral cortex என்ற அடுக்கு யானை, நாய் மற்றும் மனிதர்கள் போன்ற புத்திசாலி உயிரினங்களுக்கு இருப்பது போல ஏன் மனிதர்களுக்கு இருப்பதை விட அதிகமாகவே இவற்றிற்கு இருக்கின்றது. ஆராய்ச்சியின் முடிவுகள் கூட இவற்றை நிரூபிக்கும் வண்ணமாகவே உள்ளன. சில வகை டால்பின்கள் சுயமான சிந்தித்து சமத்யோகமாக செயல்படுவதை ஆராய்ச்சியின் மூலம் கண்டறிந்துள்ளார்கள்.

பாலூட்டிகளின் சாம்ராஜியத்தில் மிக மிக அதிக தூர பயணத்தை மேற்க் கொள்ளக் கூடிய உயிரினம் என்ற சிறப்பம்சமும் திமிங்கிலங்களுக்கு உண்டு. Killer Whale மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகம் வரைச் செல்லக் கூடிய ஆற்றல் பெற்றவை. திமிங்கிலங்கள் தங்கள் இனப்பெருக்கத்திற்காக குளிர்ப் பிரதேசங்களையும் குட்டிகளை ஈன்றெடுக்க வெப்ப பிரதேசங்களையும் தேர்ந்தெடுத்து மிக நீண்ட தூரப் பயணத்தை மேற்கொள்ளுகின்றன. Gray Whale என்ற திமிங்கில வகை தங்கள் குட்டிகளை பெற்றெடுக்க அலாஸ்காவிற்க்கு அப்பாலிருந்து மெக்ஸிகோ கடற்கரைப் பகுதி வரை கடந்து வரக் கூடியத் தொலைவு 10,000 கிலோ மீட்டரை விட அதிகமாகும். இவைகளின் பயணம் சிறிய அல்லது பெரியக் கூட்டமாகவோ அல்லது தனித்தோ அல்லது ஆண்கள் மட்டுமோ அல்லது ஆண், பெண் இரண்டும் கலந்தோ மேற்கொள்ளுகின்றது.

 

இவைகள் பெரும் பயணத்தை மேற்கொள்ளும்போது இவைகளினால் எழுப்பப்படும் பாடல்கள் மிக மிக முக்கியமான வியமாக விஞ்ஞானிகளினால் கருதப்படுகின்றது. ஒவ்வொரு இனத்திற்கும் பிரத்யோகமான பாடல் இருப்பதாகவும் கண்டறிந்துள்ளார்கள். Hump back என்ற திமிங்கிலத்தின் பாடல் வரிகள் விட்டு விட்டோ அல்லது தொடர்சியாகவோ 20 நிமிடங்கள் வரை இவைகளினால் எழுப்பப் படுகின்றது. பயணத்தின் போது ஒரு கூட்டத்தினால் எழுப்பப்படும் இந்த பாடல் வரிகள் ஏறக்குறைய ஒத்திருக்கின்றது. வருடத்திற்கு வருடம் சற்று மாறுதலுடன் ஒலிக்கப்படும் இந்த பாடல்கள் நான்கு அல்லது ஐந்து வருடங்களில் முற்றிலும் புதிய பாடலாக வடிவெடுகின்றது. அலாஸ்காவில் வசிக்கக் கூடிய எக்ஸிமோக்கள் Bowhead திமிங்கிலம் தண்ணீருக்கு அடியில் எழுப்பும் ஓசை guitar என்ற இசை சத்தத்தை ஒத்து இருப்பதை அறிந்துள்ளனர். இவ்வாறு இவை எழுப்பும் பாடல்கள் இவற்றின் இனப் பெருக்கத்தின் ஒரு அங்கமாக இருக்கக் கூடும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றார்கள். இவற்றின் பாடல் வரிகளை வரிசைப் படுத்தும் முயற்சியில் இதுவரை வெற்றி காண முடியவில்லை. இந்த முயற்ச்சியில் வெற்றி கிட்டினால் பல பயன் தரத்தக்க தகவல்கள் தெரியவரலாம். திமிங்கிலங்களின் புத்திக் கூர்மையை கண்டறியும் வியத்தில் மிகவும் பின் தங்கியிருப்பதை அறிவியல் அறிஞர்கள் ஒத்துக்கொள்ளுகின்றார்கள்.

உலகில் அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் திமிங்கிலமும் ஒன்றாகும். இவை இவற்றிலிருந்துக் கிடைக்கும் எண்ணெய் மற்றும் இறைச்சிக்காகவும் அவற்றின் பலீன் தகடுகளுக்காகவும் பெருமளவு வேட்டையாடப் படுகின்றது. இவற்றின் எலும்புகளிலிருந்து 1600க்கு மேற்பட்ட கைவினைப் பொருட்கள் தயாரிக்கப் படுகின்றன. 1849ம் ஆண்டு பெட்ரோலியத்திலிருந்து கெரசின் என்ற மண்ணெண்ணெய் கண்டுப்பிடிப்பதற்கு முன்பு விளக்கெரிக்க பெருவாரியாக உலக மக்களால் திமிங்கில எண்ணெய் பயன் படுத்தப்பட்டு வந்தது. இதற்காகவே பெருமளவு சென்ற காலங்களில் வேட்டையாடப் பட்டும் வந்தது. தற்போது திமிங்கிலங்களை வேட்டையாடுவது சட்டப்படி குற்றமாகும். இந்த இனங்களை அழிவிலிருந்து காப்பாற்ற சர்வதேச அளவில் அமைக்கப்பட்ட I W C (INTERNATIONAL WHALING COMMISSION) என்ற அமைப்பு திமிங்கிலங்களைப் பிடிக்க பல நிபந்தனைகளை விதித்துள்ளது. வேட்டையாட அனுமதிக்கப் பட்ட எண்ணிக்கை அளவு இனம் போன்றவற்றை நிர்ணயித்துள்ளது. இருப்பினும் சட்ட விரோதமாக வேட்டையாடப் படுவதனால் இந்த பிரம்மாண்டமான உயிரினம் அழிவுறும் தருவாயை எட்டியுள்ளது. பின் வரும் படம் Sperm Whale வேட்டையாடப்பட்டு கிடக்கும் காட்சி.

 

 

அல்லாஹ்வின் படைப்பாற்றலின் ஒரு அங்கமாக விளங்கி வரும் இந்த திமிங்கிலங்களை பற்றிய சிந்தனையில் இன்னும் அறிவு ஜீவிகள் என்று சொல்லிக் கொள்ளும் பரிணாமத் தத்துவவாதிகள் ஊகத்தின் அடிப்படையில் பலவாறாக பிதற்றிக் கொண்டு இருப்பதை இன்றளவிலும் விட்டப்பாடில்லை. ஜீனோம் தொழில் நுட்பத்தில் புரட்சி ஏற்பட்டு இந்த நூற்றாண்டில் உலகிற்கு பிரமிப்பை ஏற்படுத்தக் கூடிய உண்மைகள் வந்துக் கொண்டிருக்கும் வேளையில் மீண்டும் பரிணாமத்திற்கு தோள் கொடுக்கும் இவர்கள் முயற்சி நம்மை வியப்படைய வைக்கின்றது.

 

திமிங்கிலங்கள் முன்பு நான்கு கால்கள் உள்ள விலங்காக இருந்ததாகவும் கடற்கரையின் ஓரங்களில் மீன்கள் மற்றும் கடல் வாழ் உயிரினங்களை உண்டு வாழ்ந்து வந்ததாகவும் காலப் போக்கில் இவைகளின் உணவுத் தேவை அதிகரிக்கவே அதை நிறைவு செய்யும் பொருட்டு கடலில் இறங்கி படிப் படியாக இன்றைய உருவ அமைப்பை எட்டியுள்ளதாகவும் சொல்கின்றார்கள். இவை ஹிப்போபொடமஸ் (Hippopotamus) என்ற விலங்கின் ஜீன்களோடு நெருக்கமான அமைப்பில் காணப்படுவதனால் இவை இந்த விலங்கிலிருந்துதான் திமிங்கிலமாக மாறி இருக்க வேண்டும் என்ற கருத்தை எடுத்து வைக்கின்றார்கள். எந்த வியத்தில் ஒரு திட்டவட்டமான முடிவை எட்ட வில்லையோ அதில் எதையாவது ஒரு கருத்தை சொல்லி வருவது கால காலமாக நடந்து வரும் நிகழ்ச்சிதான். முக்கியமாக இதையெல்லாம் ஒரு இறைவன்தான் திட்டமிட்டு படைத்தான் என்பதை இவர்களினால் ஏனோ ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.

 

இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் காலங்களில் இவர்களினால் மறுக்க முடியாத அல்லாஹ்வுடைய அத்தாட்சிகள் வரும் போது அதற்கு என்ன சமாதானத்தைக் கூறப்போகின்றார்கள். அல்லாஹ் நாடியவர்களை தவி நேர்வழிப் பெறக் கூடியவர்கள் யார்? அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு மட்டுமே நேர் வழிக் காட்டக்கூடியவன். நம் இறைவன் மகாத் தூய்மையானவன்.

 
அவர்களில் அதிகமானோர் ஊகத்தை தவிர பின்பற்றுவதில்லை. ஊகம் ஒரு போதும் உண்மையை தேவையற்றதாக்காது. அவர்கள் செய்வதை அல்லாஹ் மிக அறிந்தவன். (அல்குர்ஆன் 10:36)

 

யானை