கதைகள்

 

  

இது கதை அல்ல நிஜம்

அபூ உமர்

 

இண்டோ சவூதி எக்ஸ்போர்ட் கம்பெனியின் பெர்சனல் டிபார்ட்மென்டில் நின்றுக்கொண்டிருந்தேன். இங்குதான் நான் பத்து வருடமாக குப்பைக்கொட்டி கொண்டிருக்கிறேன்.

மியாவ்..... மியாவ்..... மியாவ்...... மியாவ்........

என்னுடைய சாம்சங் மொபைல் போனின் ரிங் டோன் சப்தம்தான் இது.

டிபார்ட்மென்ட் மேனேஜரான சூடானி(யஜோல்) 'யாஹீ! ஃபேன் பிஸா! (சகோதரனே! பூனை எங்கே!)" என்று கலவரத்தோடு டேபிளுக்கு கீழே தேடிக்கொண்டிருந்தார். பெர்சனல் டிபார்ட்மென்ட் என்றால் பேப்பருக்கு பஞ்சமில்லை. பற்றாக்குறைக்கு எல்லா நாட்டு பணியாளர்களின் பாஸ்போர்ட்டும் அங்கேதான் இருக்கின்றது.

கத்துவது பூனை இல்லை நைனா! என்னுடைய மொபைல்போன்தான் என்று சொல்லாமல் டிகால்டி கொடுத்து நழுவலாம் என்றால் அதற்கு என் மனம் ஒப்பவில்லை. பாவம், மனுஷன் பூனையை தேடிக்கொண்டிருப்பார் என்பதால் சொன்னேன். 'வல்லாஹி?" (உண்மையாவா?) என்றார்.

மியாவ்..... மியாவ்.....

மொபைல் ஸ்கிரீனில் 'பக்கீர்ஷா" என்று காட்டியது.

பக்கீர்ஷா என்றதும் என் நினைவுக்கு வந்தது நாகை மாவட்டம்தான். என் பாட்டி வீட்டிற்கு போயிருந்தபோது, ஒரு இளைஞர் சக இளைஞருடன் வந்து அவரின் திருமணத்திற்கு சொல்லிவிட்டு சென்றார்.

மாலைப் போடாமல், நாள் நேரம் பார்க்காமல், ஃபாத்திஹா ஓதாமல், வரதட்சணை இல்லாத நபிவழி திருமணம் என்றது அவரின் பத்திரிக்கை.

திருமணத்திற்கு சொல்லிவிட்டு சென்ற இளைஞர், இரண்டு வீட்டிற்கு மேல் சென்றிருக்க மாட்டார். மீண்டும் வீட்டின் கதவைத் தட்டும் சத்தம் கேட்டு என் பாட்டி கதவைத் திறக்க, அங்கே ஊர் பக்கீர்ஷா நின்றுக்கொண்டிருந்தார்.

என்ன பக்கீர்ஷா பாயி, தப்ஸ் அடிச்சிக்கிட்டு வந்தீங்கன்னா நீங்கதான்னு தெரிஞ்சி அரிசி எடுத்து வருவேன்ல... என்றார் என் பாட்டி.

அடுப்பங்கறைக்கும் வாசலுக்கும் இரண்டு தடவை அலைந்ததால் வந்த எரிச்சலை சற்று அடக்கிக் கொண்டு பேசினார் என் பாட்டி.

'நான் அர்சி வாங்க வர்ல ஆச்சி! நம்மூர் பலக்கத்துக்கு மாத்தமா மாலபோடாம ஃபாத்திஹா ஓதாம நடக்கிற கல்யாணத்துக்கு யாராவது கலந்துக்கிட்டா அஞ்சாயிரம் அவராதன்னு ஊர் பஞ்சாயத்து முடிவ சொல்லிட்டு போகத்தான் வந்தேன்" என்றார்.

அன்று நபிவழி என்றால் என்ன என்று தெரியாது. வேளை என்று சவூதிக்கு வந்துவிட்டாலும் அலுவலக பணி, துணிகழுவுதல், கடிதம் எழுதுதல், சமையல் நேரம் போக மற்ற நேரத்தில் நான் செல்லும் 'அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையத்தின்' வாசம்தான் எனக்கு இஸ்லாத்தை கற்றுக்கொடுத்திருந்தது.

ஆனால் ஊரை பொருத்தவரை அதே பஞ்சாயத்து, அதே ஊர் நீக்கம்தான். பஞ்சாயத்து தலைவர் மாறியிருந்தாலும் அவர்களின் செயல்களில் எதுவும் மாற்றமில்லை. சில ஊர்களில் ஊர்நீக்கம் செய்தால் கோர்ட் கேஸ் என்று இழுத்தடிக்கிறார்கள் என்பதற்காக நாங்கள் இவர்களிடமிருந்து நீங்கிக்கொண்டோம் என்று பஞ்சாயத்தில் முடிவெடுக்கிறார்களாம். பிறகு என்ன! ஊர் நீக்கம் செய்யப்பட்டது போல் அவர் திருமணத்திற்கு போகக்கூடாது. அவர் இறந்துவிட்டால் அவரின் ஜனாஸாவை பொது மையவாடியில் அடக்கம் செய்யக்கூடாது என்று வழக்கமான நிகழ்வுகள்தான்.

ஆனால் சில மூட பழக்க வழக்கங்கள் சற்று குறைந்திருக்கிறது. இன்ஷா அல்லாஹ் ஒருநாள் அவர்களும் திருந்துவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

வாசகர்களுக்கு புரிந்திருக்கும் ஊர் பக்கீர்ஷா என்றால் யார்? என்று. ஊர்பஞ்சாயத்து எடுத்த முடிவை மக்களுக்கு அறிவிப்பதும், இறந்தவருக்கு குழிவெட்டுவதும், ஜோல்னா அரிசி பையைத் தோளில் சுமந்து வீடுவீடாக போய் தப்ஸ் அடித்து கைப்பிடி அரிசி வசூலித்து வாழ்க்கையை ஓட்டும் ஜீவன்தான் அது.

ஆனால் ஜித்தா பக்கீர்ஷா பாய் அப்படியல்ல. பொதுநல ஊழியன். தன்னார்வ தொண்டன்.

மியாவ்..... மியாவ்.....

பழக்கத்தில் என்னையறியாமல் என்விரல் பச்சைகலர் பட்டனை அழுத்தி மொபைல் போனைக் காதுக்கு கொடுத்தது. மறுமுனையில் கரகரப்பான குரல் ஒன்று, அஸ்ஸலாமு அலைக்கும், நான்தான் பக்கீர்ஷா பேசறேன் என்றது.

வஅலைக்கும் ஸலாம், என்ன பக்கீர்ஷா பாய் நல்லா இருக்கீங்களா? என்றேன்.

அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹ்-வுடைய உதவியால நல்லா இருக்கேன் தம்பீ. ஒரு முக்கியமான சேதி. வர செப்டம்பர் மாசம் 'இஸ்லாமிய பல்சுவை நிகழ்ச்சி" இருக்குங்கிறத சொல்லதான் போன் அடிச்சேன்.

செப்டம்பர் மாச நிகழ்ச்சிக்கு இப்ப என்ன அவசரம் பாய். அப்ப எனக்கு ஞாபகப்படுத்தினா பத்தாதா?

அட, அது இல்ல தம்பீ. ஜித்தாவில ஸ்கூலெல்லா லீவு விட்டதால நீங்கல்லாம் கொழந்த குட்டியோட ஊருக்கு போயிடுவீங்க. நீங்க வர்ரத்துக்கும் நிகழ்ச்சி நடக்குறதுக்கும் சரியா இருக்கும். அதனாலதான் முன்னாடியே சொல்றேன்.

நான்தான் செப்டம்பர் மாசம் ஆரம்பத்தில ஜித்தா வந்துடுவேனே, என்றேன்.

இந்த தடவ பல்சுவை நிகழ்ச்சியில நெறைய போட்டி வைக்கிறாங்க. சின்ன புள்ளைங்களுக்கு பேச்சுப்போட்டி, விளையாட்டுபோட்டி, எல்லாருக்கும் குர்ஆன் மனப்பாட போட்டி, கட்டுரைப்போட்டி வைக்கிறாங்க. சின்னகுழந்தைகளுக்கு வரவேற்பு பாட்டு, சின்னப்பசங்கள வைச்சு விபத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி கூட நடத்தப்போறாங்களாம். கட்டுரைப்போட்டியின் தலைப்பு என்னன்னு தெரிஞ்சிக்கிட்டா நீங்கள் ஊர்ல இருந்துக்கிட்டே எழுதி கொண்டுவரலாம்ல. குர்ஆன் போட்டிக்காக தயார் செய்யலாம்ல.

மே மாசம் நடந்த கலாச்சார நிகழ்ச்சில் குர்ஆன் போட்டியில பரிசு கிடைச்சது. சரி சரி இன்ஷா அல்லாஹ் இன்னொரு பரிசு எனக்காக இருக்குன்னு சொல்லுங்க!.

கட்டுரைப் போட்டியோட தலைப்பு என்னென்னு சொல்லலையே?

என்ன தம்பீ! எல்லாத்தையும் போன்லேயே சொன்னா சரியா வருமா? இப்பவே 5 நிமிசமாச்சு. இந்த சவூதி டெலிகாமோட 'சாவா பிரீபெய்டு" கார்டுல பேசினா நிமிசத்துக்கு 1.20 ரியால் என்பதே மறந்து போச்சு. நான் உங்களமேறி ஏசிக்கு கீழே உக்காந்து கப்யூட்டர் தட்டி சம்பாரிக்ல. எல்லாம் ரெத்த வேர்வை தம்பீ என்றார்.

எங்கே இந்த விபரம் அப்ளிகேஷன் எல்லாம் கிடைக்கும்னு சொல்லுங்க பாய்! நானே போய் வாங்கிக்கறேன்.

அட அதுக்கு நாமெல்லாம் கஷ்டப்படக்கூடாதுன்னுதான் ஒரு வெப்சைட் ஆரம்பிச்சிருக்காங்க. இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரத்துக்குள்ள எல்லா வெபரமும் தெரிவிச்சிடுவாங்களாம். அக்பர் பாய் இந்த வாரத்துல ஊருக்கு போய்டுவார்னு கேள்விப்பட்டேன். போறதுக்கு முந்தி அவருக்கும் இந்த செய்தியை சொல்லனும், "மாஸலாமா" என்று தொடர்பை துண்டித்தார்.

பாவம் பக்கீர்ஷா பாய். மக்கள் இந்த நிகழ்ச்சிலேந்து பயனடையனும் என்பதற்காக காச பத்தி கவலைப்படாம மொபைலில் பேசுகிறார். எல்லாவற்றிற்கும் பகரமாக மறுமையில் நிறைய கூலியை பெற்றுக்கொள்வார் என்பதை நினைத்து அவர் மேல் பொறாமையாக இருந்தது.

பக்கீர்ஷா பாய்க்கு கிடைப்பது போல நமக்கு பாதியாவது நன்மை கிடைக்கனும். முதலில் கீழ்வீட்டு முஹம்மதலிக்கு செய்தியை சொல்லனும் என்று நினைக்கும்போதே மீண்டும் மியாவ்... மியாவ்... என்றது என் மொபைல் போன். ஸ்ரீலங்கா இர்ஃபான் பேசினார்.

என்னெ மச்சன்! மிச்ச நேரம் கோல் எடுக்க டிரை பண்றேன், போன் பிஸின்னு வர்து. சாகுல் நானா கதைச்சாங்களா? என்றார்.

பக்கீர்ஷா பாய் முதல் பல்சுவை நிகழ்ச்சி வரை சொன்னேன்.
 

அட்டவணை