Index | Subscribe mailing list | Help | E-mail us

கழிப்பறை ஒழுக்கங்கள்

 

மலஜலம் கழிக்கும் முறை உட்பட உங்களின் நபி உங்களுக்கு கற்றுக்கொடுத்து விட்டார்களா என ஸல்மான் (ரலி) அவர்களிடத்தில் யூத மதத்தை சேர்ந்த ஒருவர் கேட்டபோது ஆம் மல ஜலம் கழிக்கும் போது கிப்லாவை நாங்கள் முன்னோக்கக் கூடாதென்றும், வலது கையினால் சுத்தம் செய்யக்கூடாதென்றும், மூன்று கற்களுக்கு குறைந்த கற்களைக்கொண்டு சுத்தம் செய்யக்கூடாதென்றும், இன்னும் எலும்பு (மிருகங்களின்) விட்டைகளைக் கொண்டு சுத்தம் செய்யக்கூடாதென்றும் எங்கள் நபி எங்களைத் தடை செய்தார்கள் என ஸல்மான்(ரலி) அவர்கள் விடையளித்தார்கள். (ஆதாரம்-முஸ்லிம்)


அன்புள்ள சகோதர, சகோதரிகளே! சிந்தித்துப்பாருங்கள்! மல ஜலம் கழிக்கும் முறையைக்கூட நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்திருக்கின்றார்கள் என்றால் இஸ்லாத்தில் கற்றுத்தரவேண்டிய எதையாவது நபியவர்கள் கற்றுத்தராமல் விட்டிருப்பார்களா? இல்லவே இல்லை.

 
ஆகவே நபியவர்களின் ஒவ்வொரு சுன்னத்துக்களையும் நாம் பேணி நடக்கும் போது மல ஜலம் கழிப்பது கூட நற்கூலிக்கான ஒன்றாக கருதப்படும். நபியவர்களின் ஒவ்வொரு சுன்னத்துக்களையும் பேணி நடப்பதற்கு நம் அனைவருக்கும் அல்லாஹ் வாய்ப்பளிப்பானாக.
முறைகள்

1. கிப்லாவை முன்னோக்கியோ பின்னோக்கியோ மல ஜலம் கழிக்கக்கூடாது (திறந்த வெளியில்)
- நீங்கள் மல ஜலம் கழிக்கும் போது கிப்லாவை முன்னோக்கவும் வேண்டாம், பின்னோக்கவும் வேண்டாம் என நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். (ஆதாரம் - நஸயி)


2. கட்டிடத்திற்குள் கிப்லாவை முன்னோக்கி, பின்னோக்கி மல ஜலம் கழிப்பதில் தவறில்லை.
- ஒரு நாள் ஹஃப்ஸா(ரலி) அவர்களின் வீட்டிற்கு மேல் நான் ஏறினேன், அப்போது நபி(ஸல்) அவர்கள் ஷாம் தேசத்தை முன்னோக்கியும் கிப்லாவை பின்னோக்கியும் மல ஜலம் கழிப்பதை நான் பார்த்தேன் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதாரம் - திர்மிதி)


3. கழிவறைக்குள் நுழையும் போது இடது காலை முன் வைத்து பின் வரும் துஆவை ஓத வேண்டும்


اَللَّهُمَّ إِنِّـيْ أَعُوْذُ بِكَ مِنَ الْـخُبْثِ وَالْـخَبَائِث


அல்லாஹும்ம இன்னி அஊது பி(க்)க மினல் குபுஸி வல் கபாயிஸி
பொருள்:- இறைவா! ஆண் பெண் ஷைத்தான்களின் தீங்குகளை விட்டும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.


4. கட்டடமில்லாத வெளி இடங்களில் மல ஜலம் கழிக்கும் போது மற்றவர்கள் பார்க்காத அளவுக்கு தூரமாகிக் கொள்ள வேண்டும்.


- நபி (ஸல்) அவர்கள் மலம் கழிக்கச் சென்றால் மற்ற யாரும் அவர்களை பார்க்காத அளவுக்கு (தூரமாக) செல்வார்கள். (ஆதாரம் - அபூதாவூத்)


- நபியவர்கள் மல ஜலம் கழிக்க விரும்பினால் பூமியை (அவ்விடத்தை) நெருங்கும் வரைக்கும் தன் ஆடையை உயர்த்தமாட்டார்கள். (ஆதாரம் - திர்மிதி, அபூதாவூத்)


5. வலது கரத்தால் சுத்தம் செய்யக்கூடாது
- உங்களில் ஒருவர் மல ஜலம் கழிக்க நுழைந்தால் தன் ஆண் உறுப்பை தன் வலது கையினால் தொடக்கூடாது என நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். (ஆதாரம் - அபூதாவூத், நஸாயி)


6. கற்களைக் கொண்டும் சுத்தம் செய்யலாம். ஆனால் தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்வதே சிறந்தது.
- உங்களில் ஒருவர் மல ஜலம் கழிக்கச் சென்றால் சுத்தம் செய்யக்கூடிய மூன்று கற்களைக் எடுத்துச் செல்லட்டும், அது சுத்தம் செய்வதற்குப் போதுமானது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் - அபூதாவூத்)


தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்த குபா வாசிகளை அல்லாஹ் புகழ்ந்து கூறுகிறான்.

- பரிசுத்தமாக இருப்பதையே விரும்பும் (சிறந்த) மனிதர்கள் அதில் இருக்கின்றனர், அல்லாஹ்வும் (இத்தகைய) பரிசுத்தமாக இருப்போரை நேசிக்கின்றான். (9:108)


- நபி(ஸல்) அவர்கள் கழிப்பறைக்குள் நுழைந்தால் நானும் என்னைப் போன்ற ஒரு சிறுவரும் நபியவர்களுக்கு தண்ணீர் பாத்திரத்தை சுமந்து செல்வோம். நபியவர்கள் அதைக் கொண்டு சுத்தம் செய்வார்கள். (ஆதாரம் - நஸாயி)


7. மூன்று கற்களை விட குறைந்த கற்களைக் கொண்டும் சுத்தம் செய்யலாம் (மூன்று கற்கள் கிடைக்காதபோது)
- நபி(ஸல்) அவர்கள் மல ஜலம் கழிப்பதற்கு செல்லும்போது மூன்று கற்களைக் கொண்டு வரும்படி என்னிடம் கூறினார்கள், நான் இரண்டு கற்களையும் ஒரு விட்டையையும் கொண்டு வந்தேன். இரண்டு கற்களை எடுத்துக் கொண்டு விட்டையை (பார்த்து இது) அசுத்தமான தென்று வீசிவிட்டார்கள் என அபூ உபைதா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதாரம் - திர்மிதி)


8. உட்கார்ந்து கொண்டு மல ஜலம் கழிக்க வேண்டும் (நிர்ப்பந்தமான சூழ்நிலைகளில் தவிர)
- நபி(ஸல்) அவர்கள் நின்று கொண்டு சிறுநீர் கழித்ததாக யாராவது உங்களுக்கு கூறினால் அதை நீங்கள் நம்ப வேண்டாம், நபியவர்கள் உட்கார்ந்து கொண்டுதான் சிறுநீர் கழித்திருக்கிறார்கள் என ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதாரம் - நஸாயி)

9. நிர்ப்பந்தமான சூழ்நிலைகளில் நின்று கொண்டு சிறுநீர் கழிக்கலாம்
- நபி(ஸல்) அவர்கள் ஒரு கூட்டத்தாரின் குப்பை மேட்டுக்கு வந்து அதன் மீது நின்று கொண்டு சிறுநீர் கழித்தார்கள். (ஆதாரம் - திர்;மிதி, அபூதாவூத்)

10. மனிதர்கள் களைப்பாறும் இடம், நடைபாதை, மர நிழல் போன்ற இடங்களில் மல ஜலம் கழிக்கக்கூடாது.
- மனிதர்கள் களைப்பாறும் இடம், நடைபாதை, நிழல் (போன்ற) இம் மூன்று இடங்களில் மல ஜலம் கழித்து (அதனால் மக்களின்) சாபத்தை பெறுவதை தவிர்ந்து கொள்ளுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் - அபூதாவூத்)

11. குளிப்பறையில் சிறுநீர் கழிக்கக்கூடாது.
- குளிக்கக்கூடிய குளிப்பறையில் உங்களில் ஒருவர் சிறுநீர் கழிக்கக்கூடாது என நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். (ஆதாரம் - அபூதாவூத்)


- உளு செய்யக்கூடிய குளிப்பறையில் உங்களில் ஒருவர் சிறுநீர் கழிக்கக்கூடாது, காரணம் அதன் மூலமாகத்தான் அதிகமான வஸ்வாஸ் (சந்தேகங்கள்) ஏற்படுகின்றன என நபி(ஸல்) கூறினார்கள். (ஆதாரம் - அஹ்மத்)

12. தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் சிறு நீர் கழிக்கக்கூடாது.
- உளூ செய்யக்கூடிய, அல்லது குளிக்கக்கூடிய தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் சிறுநீர் கழிக்கக் கூடாது என நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். (ஆதாரம் - நஸாயி)

13. மல ஜலம் கழித்த பின் கையை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
- நபி(ஸல்) அவர்கள் மல ஜலம் கழித்து (சுத்தம் செய்த) பின் மண்ணில் தன் கையை தேய்த்து (சுத்தம் செய்தார்கள்) (ஆதாரம் - நஸாயி)

14. சிறுநீர் கழிக்கும் போது ஸலாம் சொல்லப்பட்டால் அதற்கு விடையளிக்கக்கூடாது
- நபி(ஸல்) அவர்கள் சிறுநீர் கழித்துக் கொண்டிருக்கும் போது அவர்களுக்கு பக்கத்தில் சென்று கொண்டிருந்த ஒரு மனிதர் நபியவர்களுக்கு ஸலாம் கூறினார், அதற்கு நபியவர்கள் விடையளிக்கவில்லை. (ஆதாரம் - நஸாயி)

15. சிறுநீர் கழித்து சுத்தம் செய்யாததினால் கிடைக்கும் தண்டனை.
- நபி(ஸல்) அவர்கள் இரண்டு கப்ருகளுக்கு பக்கத்தில் சென்று கொண்டிருக்கும் போது அவ்விரு கப்ருகளிலுள்ளவர்களும் வேதனை செய்யப்படுகின்றார்கள், (ஆனால்) பெரும் விஷயத்தில் அவ்விருவரும் வேதனை செய்யப்படவில்லை, அதில் ஒருவர் சிறுநீர் கழித்தால் சுத்தம் செய்ய மாட்டார், மற்றவர் கோள் செல்லித் திரிபவராக இருந்தார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் - நஸாயி)

16. கழிப்பறையிலிருந்து வெளியாகும் போது வலது காலை முன்வைத்து பின் வரும் துஆவை ஓத வேண்டும்


غُفْرَانَكَ

குஃப்ரான(க்)க (ஆதாரம் - திர்மிதி)
பொருள்:- உன்னிடம் பாவ மன்னிப்புத் தேடுகிறேன்.


 

உளு செய்வதின் உளுங்குகளும் சட்டங்களும்