Download Unicode Font

 

 

Index

13- அதிகமாக இறைவழிபாட்டில் ஈடுபடுதலின் அவசியம்


ஹஜ் செய்ய வருகை தந்திருப்பவர்கள் மக்காவில் இருக்கும் காலம் முழுவதும் அல்லாஹ்வை திக்ர் செய்தல், வழிபடுதல், நல்லறங்கள் புரிதல் போன்றவற்றைக் கடைபிடிப்பது மிகவும் அவசியமாகும். மஸ்ஜிதுல் ஹராமில் தொழுதல், தவாஃப் செய்தல், நபி (ஸல்) அவர்களின் மீது ஸலவாத்துக் கூறுதல் போன்றவற்றை அதிகமாகச் செய்யவேண்டும். ஏனெனில் ஹரமில் செய்யப்படும் நல்லறங்களுக்கு பன்மடங்காக கூலிகள் கிடைக்கின்றன. -கூலிகள் அதிகமாகக் கிடைப்பது போன்று- அங்கே தீமைகள் செய்தால் அதற்கு பெருந் தண்டனைகளும் உள்ளன

ஹஜ் செய்ய வருகை தந்தவர் (அதனை நிறைவேற்றி) மக்காவை விட்டும் புறப்படும் போது தவாஃபுல் விதா -விடைபெறும் தவாஃப்- செய்வது கடமையாகும். ஏனெனில் -பயணத்தின்- இறுதி இடம் ஹரமாக இருக்கவேண்டும். மாதவிடாய் அல்லது பிரசவ இரத்தம் வந்துவிட்ட பெண்களுக்கு தவாஃபுல் விதா செய்வது கடமையில்லை.

( أُمِرَ النَّاسُ أَنْ يَكُونَ آخِرُ عَهْدِهِمْ بِالْبَيْتِ إِلَّا أَنَّهُ خُفِّفَ عَنِ الْمَرْأَةِ الْحَائِضِ )
ஹஜ் செய்பவரின் விடைபெறும் இடம் ஹரமாக இருக்க வேண்டும் என மக்கள் கட்டளையிடப்பட்டிருந்தார்கள். எனினும் மாதவிடாய் வந்துவிட்ட பெண்களுக்கு அது குறைக் கப்பட்டு -சலுகை வழங்கப்பட்டு- விட்டது என இப்னுஅப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள். (நூற்கள் : புகாரீ, முஸ்லிம்)

கஃபாவை (தவாஃப் செய்து) விடை பெற்று, பள்ளியை விட்டும் வெளியேறும் போது (எப்போதும் வெளியேறுவது போன்று) முன்னோக்கி நடந்தவாறுதான் வெளியேறவேண்டும். கஃபாவைப் பார்த்துக் கொண்டே பின்னோக்கி நடப்பது கூடாது. நபி (ஸல்) அவர்களோ, அவர்களின் தோழர்களோ இவ்வாறு செய்ததாக எந்த ஆதரமும் கிடையாது. எனவே இது மார்க்கத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்ட பித்அத் ஆகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

( مَنْ عَمِلَ عَمَلًا لَيْسَ عَلَيْهِ أَمْرُنَا فَهُوَ رَدٌّ )
யாரேனும் நாம் கட்டளையிடாத ஏதேனும் ஒரு செயலைச் செய்தால் அது -அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப் படாமல்- மறுக்கப்பட்டுவிடும்.
(அறிவிப்பவர் : ஆயிஷா -ரலி, நூல் : முஸ்லிம்)

( . . وَإِيَّاكُمْ وَمُحْدَثَاتِ الْأُمُورِ فَإِنَّ كُلَّ مُحْدَثَةٍ بِدْعَةٌ وَكُلَّ بِدْعَةٍ ضَلَالَةٌ )
(மார்க்கத்தில்) புதிதாக ஏற்படுத்தப்பட்டவைகளை விட்டும் உங்களை நான் எச்சரிக்கை செய்கிறேன். நிச்சயமாக மார்க்கத்தில் புதிதாக ஏற்படுத்தப்படும் அனைத்தும் பித்அத் - நூதனச்- செயலாகும். அனைத்து பித்அத்களும் வழிகேடாகும்.
(அறிவிப்பவர் : இர்பாழ் பின் ஸாரியா -ரலி, நூல் : அபூதாவூத்)

அல்லாஹ் நம் அனைவரையும் மார்க்கத்தில் உறுதியாக இருக்கச் செய்வானாக! மார்க்கத்திற்கு மாறு செய்வதை விட்டும் பாதுகாப்பானாக! நிச்சயமாக அவனே கொடையாளன், கருணையுடையோன்.

 

முந்தைய பக்கம்

அடுத்த பக்கம்