Featured Posts
Home » மீடியா » இயேசுவை இழிவுபடுத்தும் பைபிள் » இயேசுவை இழிவுபடுத்தும் பைபிளும் கண்ணியப்படுத்தும் குர்ஆனும் – 5

இயேசுவை இழிவுபடுத்தும் பைபிளும் கண்ணியப்படுத்தும் குர்ஆனும் – 5

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்
இயேசு அன்பானவர்; பண்பானவர்; அமைதியான சுபாவம் கொண்டவர் என்றே குர்ஆன் கூறுகின்றது. இயேசு மக்களை எப்படி விழித்துப் பேசினார் என்பதை பைபிள் ஊடாக ஆராய்ந்து பார்த்தால் அவர் முரட்டு சுபாவமும், அசிங்கமாகவும், ஆபாசமாகவும் பேசும் குணம் கொண்டவர் என்றும் பைபிள் அறிமுகம் செய்கின்றது.

விரியம் பாம்புகளே!:
‘விரியன் பாம்புக் குட்டிகளே, நீங்கள் பொல்லாதவர்களாயிருக்க, நலமானவைகளை எப்படி பேசுவீர்கள்? இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்.’
(மத்தேயு: 12:34)

இயேசுவின் இந்த உரை முழுமையாக ஏச்சும் பேச்சுமாகவே அமைந்துள்ளது. மாயக்காரராகிய வேத பாரதரே! பரிசேயரே! (மத்தேயு: 23:14) மாயக்காரராகிய வேத பாரகரே (மத்தேயு 23:15) மதிகேடரே!, குருடரே! (மத்தேயு 23:17,19) இவ்வாறே இந்த தேசம் பூராக இயேசு கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தியிருப்பதைக் காணலாம்.

விசுவாசமில்லாத மாறுபாடுள்ள சந்ததியே!:

‘இயேசு பிரதியுத்தரமாக, விசுவாசமில்லாத மாறுபாடுள்ள சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடு இருப்பேன்? எதுவரைக்கும் உங்களிடத்தில் பொறுமையாயிருப்பேன்? அவனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார்.’
(மத்தேயு 17:17)

இதே செய்தி (மாற்கு 9:19, லூக்கா (9:19) ஆகிய இடங்களிலும் இடம்பெற்றுள்ளது. விசுவாசமில்லாத மாறுபாடான சந்ததியினரே! என இயேசு தனது சீடர்களைத்தான் விழித்துப் பேசுகின்றார். இவற்றையாவது ஓரளவு சகித்துக் கொள்ளலாம். பின்னால் வருவதைக் கவனியுங்கள்.

விபச்சார சந்ததிகளே!:
இயேசுவிடத்தில் மக்கள் அடையாளத் தைக் கேட்கின்றனர். அதற்கு இயேசு சொல்லும் பதிலைப் பாருங்கள்.

‘அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இந்தப் பொல்லாத விபசாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள்;. ஆனாலும், யோனா தீர்க்கத்தரிசியின் அடையாளமேயன்றி வேறு அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப் படுவதில்லை.’ (மத்தேயு 12:39)

இதே செய்தி மத்தேயு 16:4 இலும், இதே செய்தி சற்று வித்தியாசமாக லூக்கா 11:29 இலும் இடம் பெற்றுள்ளது.

‘ஜனங்கள் திரளாய்க் கூடி வந்திருக்கிற பொழுது அவர், இந்தச் சந்ததியார் பொல்லாதவர் களாயிருக்கிறார்கள்; அடையாளத்தைத் தேடுகிறார் கள்; ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையாள மேயன்றி வேறு அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை.’ (லூக்கா 11:29)

அடையாளத்தைக் கேட்டால் அடையாளத்தைக் காட்ட வேண்டும் அல்லது அதற்கான நியாயமான காரணத்தைச் சொல்ல வேண்டும். அதை விட்டு விட்டு அடையாளத்தைக் கேட்டவர்களைப் பொல்லாதவர்கள் என்றும் விபச்சார சந்ததியினர் என்றும் திட்டுவது நாகரீகமான போக்காகுமா?

முஹம்மது நபியிடம் பலர் அத்தாட்சிகளைக் கேட்டனர். இதோ அவர்கள் என்ன கேட்டார்கள், முஹம்மது நபி என்ன பதில் சொன்னார் என்பதைப் பாருங்கள்.

‘நீர் ‘எமக்காகப் பூமியில் ஒரு நீரூற்றைப் பீறிட்டுப்பாயச் செய்யும் வரை உம்மை நாம் நம்பிக்கை கொள்ளவே மாட்டோம்’ என்று அவர்கள் கூறுகின்றனர்.

‘அல்லது, உமக்குப் பேரீத்த மரங்களும், திராட்சையும் கொண்ட தோட்டம் ஒன்று இருந்து, அவைகளின் நடுவே தொடராக ஆறுகளை நீர் ஓடச் செய்ய வேண்டும்.’

‘அல்லது, நீர் எண்ணுவது போன்று வானத்தைத் துண்டு துண்டாக எம்மீது விழச்செய்ய வேண்டும். அல்லது அல்லாஹ்வையும், வானவர்களையும் நேருக்கு நேர் கொண்டுவர வேண்டும்.’

‘அல்லது, தங்கத்தினாலான ஒரு வீடு உமக்கிருக்க வேண்டும். அல்லது வானத் தில் நீர் ஏறி, நாம் வாசிக்கக் கூடிய ஒரு நூலை எமக்கு இறக்கும்வரை நீர் ஏவியதை நாம் நம்பமாட்டோம். (என்றும் கூறுகின்றனர்.) ‘என் இரட்சகன் மிகத் தூய்மையானவன். நான் தூதராகவுள்ள ஒரு மனிதரே தவிர வேறில்லை’ எனக் கூறுவீராக!’ (17:90-93)

இவ்வளவு அடையாளங்களைத் சொல்லி அவர்கள் கேட்ட போதும் முஹம்மது நபி கோபம் கொள்ளவில்லை. அவர்களைப் பொல்லாதவர்கள் என்றும் விபச்சார சந்ததியினர் என்றும் கூறவில்லை.

அல்லாஹ் தூய்மையானவன். நான் சராசரி மனிதன்தான். நினைத்ததையெல்லாம் செய்யும் இறைவன் அல்ல. இறைவன் புறத்திலிருந்து வந்துள்ள தூதன் அவ்வளவுதான் எனப் பதிலுரைத்தார்கள்.

முஸ்லிம்கள் முஹம்மது நபியையும் மதிக்கின்றனர். இயேசுவையும் மதிக்கின்றர். இயேசுவிடம் அற்புதத்தை அந்த மக்கள் கேட்டிருந்தால் இறைவன் அங்கீகரித்திருந்தால் இயேசு அவர்கள் கேட்ட அற்புதத்தைச் செய்து காட்டியிருப்பார்கள். இறைவனின் அனுமதி கிடைக்காவிட்டால் முஹம்மது நபி கூறியது போல் கூறியிருப்பார். இதை விட்டு விட்டு கேள்வி கேட்டவர்களை விபச்சார சந்ததியினரே என இயேசு இழிவாகப் பேசியிருக்கமாட்டார் என்பதே இஸ்லாமியர்களின் நம்பிக்கையாகும்.

சரி, இயேசு சொன்ன இந்த அற்புதமாவது முறையாக நடந்ததா என்றால் இல்லையென்றே பைபிள் கூறுகின்றது.

யூனுஸ் நபி ஒரு மீன் வயிற்றில் மூன்று இரவுகளும் மூன்று பகல்களும் இருந்தது போல் இயேசு பூமிக்கடியில் மூன்று பகல்களும் மூன்று இரவுகளும் இருந்து உயிர்த்தெழுவார். அதுதான் அடையாளம் என்று கூறுகின்றார்.

‘யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷ குமாரனும் இரவும் பகலும் மூன்று நாள் பூமியின் இருதயத்தில் இருப்பார்.’ (மத்தேயு 12:40)

இயேசு சொன்னபடி மூன்று இரவுகள் மூன்று பகல்கள் கல்லறையில் இருந்து உயிர்த்தெழுந்தாரா? பைபிள் சொல்லும் தகவல்களை வைத்துப் பார்க்கும் போது சொன்னபடி நடக்கவில்லை என்பது உறுதியாகின்றது.

இன்ஷா அல்லாஹ் தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *