Featured Posts
Home » மதங்கள் ஆய்வு » விமர்சனம் விளக்கம் » இறைவன் மன்னிக்காத குற்றம்.

இறைவன் மன்னிக்காத குற்றம்.

மனித குலத்துக்கு வழி காட்டியாக ஏக இறைவனால் அருளப்பட்ட மார்க்கம் இஸ்லாமென்பது, இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட முஸ்லிம்களின் நம்பிக்கை. ஏக இறைவனை ஏற்று, அவன் வழி காட்டியாகத் தேர்ந்தெடுத்த இறைத்தூதர்களையும் நம்பிக்கை கொண்டு அவர்களைப் பின்பற்ற வேண்டும். என்பதே இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை!

இஸ்லாம் மார்க்கத்தின் கொள்கையை வாழ்க்கை நெறியாக் கொண்டவர்கள் ”முஸ்லிம்கள்” என்றும், இஸ்லாத்தின் கொள்கையை ஏற்காதவர்கள் ”காஃபிர்கள்” அதாவது, இஸ்லாத்தை நிராகரித்தவர்கள் – மறுத்தவர்கள் என்றும் இஸ்லாம் குறிப்பிடுகிறது. இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட முஸ்லிம்கள், இஸ்லாத்தின் சட்டங்களைப் பின்பற்றிச் சரியாக உலக வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் அதற்குப் பகரமாக மறுமையில் சொர்க்கத்தை வழங்குவதாக இறைவன் வாக்களித்திருக்கிறான்.

இஸ்லாம் மார்க்கத்தை நிராகரித்தவர்கள் – மறுத்தவர்கள் இஸ்லாத்தின் கட்டளைகளைப் புறக்கணித்து, தங்கள் மனோ இச்சைகளைப் பின்பற்றி இவ்வுலக வாழ்க்கையை அமைத்துக் கொண்டதால் இவர்கள் இறைவனை நிராகரித்தவர்கள் என்பதால் மறுமையில் தண்டனை பெறுவார்கள் என்பதையும் இறைவன் வாக்களித்திருக்கிறான்.

இஸ்லாத்தை ஏற்று அம்மார்க்கத்தை சரியாகப் பின்பற்றியவர்களுக்கு பரிசாக சொர்க்கமும், இஸ்லாத்தை நிராகரித்தவர்களுக்கு தண்டனையாக நரகமும் வழங்கப்படும் என்று எவ்வித ஒளிவு, மறைவு இல்லாமல், வெளிப்படையாக இஸ்லாம் இவ்வாறு கூறுகிறது. இதில் யாருக்காகவும், எதற்காகவும் எவ்வித சலுகையும் இல்லை. எனவும் உலக மக்கள் முன் இவ்வாறு பிரகடனப்படுத்துகிறது.

இது பற்றி திருக்குர்ஆன் வசனங்களிலும், நபிமொழிகளிலும் சொல்லப்பட்டுள்ளது. இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் இந்த ஆதாரங்களை எடுத்துக் கொண்டு, ”இஸ்லாத்தை ஏற்காதவர்களையெல்லாம் இஸ்லாம் மறுமையில் தண்டிப்பதாகச் சொல்கிறது பாருங்கள்” என விமர்சிக்கின்றனர். திருக்குர்ஆன் முழுவதையும் மறுக்கும் இவர்கள் சில வசனங்களை மட்டும் நம்புகிறார்களா? ஆச்சரியந்தான்!

இறைவன் மன்னிக்காத குற்றம்.
ஏக இறைவனை மறுத்தவர்கள், பல கடவுட்க் கொள்கையுடைவர்கள் இவர்கள் நல்லவர்களா? கெட்டவர்களா? என்று இஸ்லாம் பார்க்கவில்லை. ”இறைவனுக்கு இணை கற்பித்தவர்கள்” என்ற வட்டத்திற்குள் ஒன்று சேர்த்து, இவர்கள் செய்த நன்மைகளும், தீமைகளும் மறுக்கப்படுகிறது. ஏக இறைவனுக்கு இணை வைத்தவர்களின் செயல்பாடுகளை இறைவன் ஏற்றுக் கொள்வதில்லை. மாறாக மறுத்து விடுகிறான் – இணை வைத்தவர்கள் ஏக இறைவனை மறுத்தது போல!

இறைவனுக்கு இணையாக எதையும் எவரையும் வணங்கக்கூடாது! இஸ்லாம் இந்தக் கொள்கையை அடிப்படையாக நிறுவியுள்ளது. ஓரிறைக் கொள்கையின் அஸ்திவாரத்தின் மீது இஸ்லாம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஓரிறைக் கொள்கையைப் புறக்கணித்தவர்கள், இறைவனால் புறக்கணிக்கப்படுவார்கள் எனும் போது அவர்களின் நன்மைகள், தீமைகள் கணக்கிடப்பட வேண்டும் என்பதும் அர்த்தமற்றதாகும்.

ஏக இறைவனை ஏற்க மாட்டோம், ஆனால் நல்லவன், கெட்டவன் என்ற கோணத்தில் இறைவன் தீர்ப்பளிக்க வேண்டும் என்பது முரண்பாட்டின் மொத்த உருவமாக இருக்கிறது. இஸ்லாம் இதை ஏற்றுக் கொள்ளவில்லை! இறைவனுக்கு இணை கற்பிப்பதை, பெரும் பாவங்களின் வரிசையில் முதல் இடத்தில் இஸ்லாம் நிறுத்தியுள்ளது.

”நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை கற்பிப்பதை மன்னிக்க மாட்டான்அதற்கு கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்கிறார்.” (திருக்குர்ஆன், 004:048,116)

”அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் (உண்மையை விட்டும்) தூரமான வழி கேட்டில் விழுந்து விட்டார்.” (திருக்குர்ஆன், 004:116)

லுக்மான் தம் புதல்வருக்கு, நல்லுபதேசம் செய்யும் போது ” என் அருமை மகனே! அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காதே! இணை கற்பித்தல் மாபெரும் அநீதியாகும்” என்று கூறியதை நினைவூட்டுவீராக! (திருக்குர்ஆன், 031:013)

”அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான்.” (திருக்குர்ஆன், 005:72)

ஏக இறைவனுக்கு இணை வைக்கும் செயல்பாடுகளை:- பெரும் பாவம், வழிகேடு, மாபெரும் அநீதியாகவும் இறை வசனங்கள் குறிப்பிடுகிறது. இறைவனுக்கு இணை கற்பிக்கும் எவரும் மன்னிக்கப்பட மாட்டார், இணை கற்பித்தவருக்கு சொர்க்கம் விலக்கப்பட்டுள்ளது என்பதும் இறைவனின் வாக்கு!

முஸ்லிம்களுக்கும், முஸ்லிமல்லாதவர்களுக்கும்.
எவர் இறைவனுக்கு இணை கற்பிக்கின்றாரோ அவருடைய நல்லறங்கள் அழிந்து விடும், அவர் நஷ்டமடைந்தவராவார். இதற்கு முஸ்லிம், முஸ்லிமல்லாதோர் என விதி விலக்கு இல்லை!

”இதுவே அல்லாஹ்வின் நேர் வழியாகும், தனது அடியார்களில் தான் நாடியோரை, இதன் மூலம் நேர்வழி காட்டுகிறான். (பின்னர்) அவர்கள் இணை கற்பித்தால், அவர்கள் செய்து வந்ததெல்லாம், அவர்களை விட்டு அழிந்துவிடும்.” (திருக்குர்ஆன், 006:088)

”நம்பிக்கை கொண்ட பின்னர் மறுத்து, பின்னர் (இறை) மறுப்பை அதிகமாக்கிக் கொண்டோரின் மன்னிப்பு ஒரு போதும் எற்கப்படாது. அவர்களே வழி தவறியவர்கள்.” –

– (ஏக இறைவனை) ”மறுத்து, மறுத்தவராகவே மரணித்தவர்கள் பூமி நிரம்பும் அளவுக்குத் தங்கத்தை ஈடாகக் கொடுத்தாலும் அது ஏற்கப்படாது. அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு. அவர்களுக்கு உதவுவோர் யாருமில்லை.” (திருக்குர்ஆன், 003:090,091)

இறைத்தூதர்களுக்கும் இதே எச்சரிக்கை!

”நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும், நீர் நஷ்டமடைந்தோராவீர். மேலும் அல்லாஹ்வை வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!” என்று (முஹம்மதே) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது. (திருக்குர்ஆன், 039:065,066)

இறைவனுக்கு இணை கற்பிப்பவர் அவர் எந்த மதத்தவராக இருந்தாலும், அவரின் நல்லறங்கள் – நன்மைகள் அழிக்கப்படும் என்று சொல்லி, இதில் இறைத்தூர்களுக்கும் எவ்வித சலுகையும் வழங்கவில்லை என ஆணித்தரமாக இறைச் சட்டங்களைப் பதித்துள்ளது இஸ்லாம்.

அன்புடன்,
அபூ முஹை

58 comments

  1. வஹ்ஹாபி

    ஷிர்க் என்னும் இணை கற்பித்தலுக்கு சுருக்கமான ‘நறுக்’ பதிவு.

    வாழ்த்துகள்!

  2. //முஸ்லிம்களுக்கும், முஸ்லிமல்லாதவர்களுக்கும்.

    எவர் இறைவனுக்கு இணை கற்பிக்கின்றாரோ அவருடைய நல்லறங்கள் அழிந்து விடும், அவர் நஷ்டமடைந்தவராவார். இதற்கு முஸ்லிம், முஸ்லிமல்லாதோர் என விதி விலக்கு இல்லை!//

    தொடர்புடையதாக திருக்குர்ஆனின் ஒரு வசனத்தை இன்று கண்டேன்:

    நிச்சயமாக, விசுவாசங்கொண்டார்களே அவர்களும், யூதர்களாக இருந்தார்களே அவர்களும், கிறிஸ்தவர்களும், ஸாபியீன்களும் (அவர்களில்) எவர்கள் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் விசுவாசித்து, நற்கருமத்தையும் செய்தார்களோ அத்தகையவர்கள்-அவர்களுக்கு கூலி அவர்களுடைய இரட்சகனிடத்தில் உண்டு. மேலும் அவர்களுக்கு (மறுமையைப் பற்றி) எவ்விதப் பயமுமில்லை; (இன்னும் உலகில் எதை விட்டுச் செல்கிறார்களோ அது பற்றி) அவர்கள் கவலையும் அடைய மாட்டார்கள். (002:62)

    மேலும் விளக்கம் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  3. திருவடியான்

    அபு,

    “கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் ” என்று சாவைப் பற்றிச் சொல்வர். அதாவது மறுமை என்று ஒன்று இருக்கிறதா என்று, சத்தியமாக இந்த உலகில் யாருக்கும் தெரியாத போது, அறியாத போது.. இல்லாத ஒன்றை நாம் நம்பி என்ன ஆகப் போகிறது.

    ஏன் சுவனம் நரகம் என்ற கற்பனைக் கதைகளை நாம் நம்ப வேண்டும். மாறாக.. இப்பூவுலகில் 100 சதவீதம் சரியாக வாழ்ந்த மனிதன் யாருமில்லை, இனியும் பிறக்கப் போவதில்லை. ஆக நடப்புலகில் வாழ்வதற்குரிய ஒரு ஒழுங்கினை இஸ்லாம் போதிக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாமா?

  4. உங்களுடைய வலைப்பூவிற்கு மிகத் தேவையான பதிவு இது என்பது என் கருத்து. அல்லாஹ் எல்லோருக்கும் அருள்பாலிக்கட்டும்!

  5. என் சிறு வயதில் நான் சார்ந்திருந்த மதமும் இதே கோட்பாட்டைத்தான் சொல்லி வந்தது. காந்திகூட நரகத்துக்கா போவார் என்று எனக்கு (catechism) வேத பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியரிடம் கேட்டது நினைவுக்கு வருகிறது. நல்லவேளை இப்போது அப்படியெல்லாம் சொல்லுவதில்லை. ஒரு மழுப்பலான பதிலே வரும்.

    பிறப்பால் வேறொரு மதத்தில் பிறந்து, வளர்ந்து நம் மதத்தைப் பற்றிய தெரிதல் இல்லாமலேயே வளர்ந்த ஒரு நல்ல மனிதருக்கும் இத்தனை கொடூரமான தண்டனைதானா என்று அன்று கேட்டதும் நினைவுக்கு வருகிறது.

    இன்று அப்படி ஒருவன் இஸ்லாமைப் பற்றிய தெரிதல் ஏதும் இல்லாது வாழ்ந்து முடிப்பதும் அந்த “இறைவனின் வல்லமையால்”தானே இருக்க முடியும். இதில் அந்த மனிதனின் தவறாக எதைச் சொல்ல முடியும்?

    முகமதுவின் பிறப்புக்கு முந்திய மனிதர்கள் என்ன ஆவார்கள்?

    இன்றாவது communication எல்லாம் நல்லா இருக்கு. இது எதுவும் இல்லாத காலத்தில் (கி.பி. 1000 என்று கொள்வோமே) நம் இன்றைய இந்தியாவில் பிறந்த நம் முன்னோர் என்ன ஆவார்கள்?

    இஸ்லாமைத் தெரிந்து கொள்ளாமலேயே வாழ்ந்து மறைந்தது அந்த பாவப்பட்ட மனிதனின் தவறா? அல்லது அப்படி அவனை அப்படிப் படைத்த இறைவனின் தவறா?

  6. //இஸ்லாம் மார்க்கத்தை நிராகரித்தவர்கள் – மறுத்தவர்கள் இஸ்லாத்தின் கட்டளைகளைப் புறக்கணித்து, தங்கள் மனோ இச்சைகளைப் பின்பற்றி இவ்வுலக வாழ்க்கையை அமைத்துக் கொண்டதால் இவர்கள் இறைவனை நிராகரித்தவர்கள் என்பதால் மறுமையில் தண்டனை பெறுவார்கள் என்பதையும் இறைவன் வாக்களித்திருக்கிறான்.//

    இஸ்லாம் என்றொரு மார்க்கம் இருப்பதையே அறியாமல் இவ்வுலகில் பலர் இருக்கலாம் .அல்லது பிறப்பு ,அல்லது இருப்பிடத்தின் காரணமாக இஸ்லாம் பற்றி தெளிவாக அறிய வாய்ப்பில்லாமல் இருக்கலாம் .அவர்கள் இஸ்லாமை நிராகரித்ததாக எப்படி சொல்ல முடியும் ?அவர்களுக்கும் தண்டனை தானா? அவர்கள் செய்த குற்றம் என்ன ?

  7. அபூ முஹை

    வஹ்ஹாபி, உங்கள் வருகைக்கு நன்றி!

    ராஜ், உங்கள் வருகைக்கு நன்றி!

    திருக்குர்ஆன், 002:062வது வசனம் பற்றி முன்பு விளக்கப்பட்டிருக்கிறது

    ”அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டவர்களின் நல்லறங்கள் அவர்களுக்கு உண்டு.

    நீங்கள் யாராக இருந்தாலும் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பிக்கை கொள்ளாமல் உங்களின் நல்லறங்கள் ஏற்கப்படாது என்பதையே திருக்குர்ஆன், 002:062வது வசனம் விளக்குகிறது.

    மேலும் விளக்கம் தேவையெனில் எழுதுங்கள் நன்றி!

    அன்புடன்,
    அபூ முஹை

  8. இப்னு பஷீர்

    //”கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் ” என்று சாவைப் பற்றிச் சொல்வர். அதாவது மறுமை என்று ஒன்று இருக்கிறதா என்று, சத்தியமாக இந்த உலகில் யாருக்கும் தெரியாத போது, அறியாத போது.. இல்லாத ஒன்றை நாம் நம்பி என்ன ஆகப் போகிறது. //

    மறுமை இருக்கிறது என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை. உலகின் எல்லா மதங்களுமே மறுமை, சொர்க்கம், நரகம் ஆகியவற்றைப் பற்றி போதிக்கத்தான் செய்கின்றன.

    மறுமை இருக்கிறது என்பதை நம்பி, அதற்கேற்றாற்போல் வாழ்வை சீர்படுத்தி நல்ல மனிதனாக வாழ்ந்து, உயிர்நீத்தபின் மறுமை என்ற ஒன்று இல்லை என்பது தெரிய வருமானால், அதனால் எனக்கு நஷ்டம் ஒன்றுமில்லை. அதே சமயம், மறுமை என்பதே கிடையாது என்ற எண்ணத்தில் என் மனதுக்கு தோன்றியவாறு வாழ்ந்து பின் மறுமையை நான் சந்திக்க நேர்ந்தால் அன்று மிக நஷ்டமடைந்தவனாக இருப்பேன்.

    அதனால், மறுமை இருக்கிறது என்று நம்பி வாழ்வதே புத்திசாலித்தனம்.

  9. அபூ முஹை

    திருவடியான் உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!

    //ஏன் சுவனம் நரகம் என்ற கற்பனைக் கதைகளை நாம் நம்ப வேண்டும். மாறாக.. இப்பூவுலகில் 100 சதவீதம் சரியாக வாழ்ந்த மனிதன் யாருமில்லை, இனியும் பிறக்கப் போவதில்லை. ஆக நடப்புலகில் வாழ்வதற்குரிய ஒரு ஒழுங்கினை இஸ்லாம் போதிக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாமா?// – திருவடியான்.

    மனிதன் தவறே செய்ய மாட்டான் என்று இஸ்லாம் சொல்லவில்ல. மனிதன் தவறு செய்வான் என்பதால் அவனுக்கு வழிகாட்டல் அவசியமாகிறது. செய்த தவறை திருத்தித் திருந்திக் கொள்ள வேண்டும் இல்லையேல் நீ தண்டிக்கப்படுவாய் என்றே இஸ்லாம் கூறுகிறது.

    நல்லவனும், கெட்டவனும் ஒரு போதும் சமமாக மாட்டார்கள். முறையாக வாழ்க்கை நெறியை மேற்கொள்ளும் நல்லவனுக்கு அவனுடைய முயற்சி கடினமாகவே இருக்கும் இந்த நேர்மையான முயற்சிக்குப் பரிசு வழங்கும் நாள், இறைவனின் முன்னால் ஒன்று கூடும் மறுமைநாள்.

    நேர்மையான வாழ்க்கை நெறியை அமைத்துக் கொள்ளாத தீயவனுக்குத் தண்டனை வழங்கும் நாள் மறுமைநாள்.

    இந்த மறுமையை யாரும் பார்த்து விட்டு மறுமையை நம்பவில்லை! மறுமையை நம்பாமல் இறை நம்பிக்கை முழுமை பெறாது என்று இஸ்லாம் போதிக்கிறது. அதனால் முஸ்லிம்கள் மறுமையை நம்புகிறார்கள் – நம்ப வேண்டும்.

    மறுமையை நம்பாதவர்களை இஸ்லாம் நிர்ப்பந்திக்கவில்லை! மறுமைநாள் என்பதே இல்லை என்று சொல்பவர்கள் இன்னும் அதைப் பார்க்கவில்லை என்பதால் அந்நாளை நம்பவில்லை.

    மறுமைநாளை நம்புபவர்களும் அந்நாளைப் பார்த்துவிட்டு நம்புவதாகச் சொல்லவில்லை. இருக்கிறது, அல்லது இல்லை என்பதை உறுதிபடுத்தும் காலம் இறைவனிடம் இருக்கிறது. அதுவரை அவரவரின் நம்பிக்கை அவர்ளுக்கு.

    இது பற்றி சுருக்கமாக முன்பு நான்கு பகுதி எழுதியிருக்கிறோம்.

    ஜாஃர் அலி உங்கள் வருகைக்கு நன்றி!

    இப்னு பஷீர் உங்கள் வருகைக்கு நன்றி! மறுமை நாளின் நம்பிக்கை கொள்வதன் அவசியத்தை அருமையாக விளக்கியுள்ளீர்கள் நன்றி!

    அன்புடன்,
    அபூ முஹை

  10. அபூ முஹை

    tamilreber உங்கள் வருகைக்கு நன்றி! உங்கள் கருத்தை தமிழில் எழுதும்படிக் கேட்டுக் கொள்கிறேன் நன்றி!

  11. திருவடியான்

    அபுமுஹை.. தங்களின் விலாவாரியான விளக்கத்திற்கு நன்றி.
    அவரவர் நம்பிக்கை அவரவருக்கு. அடுத்தவரை அது பாதிக்காத வரையில் சுமுகமான சூழலே நிலவும்.

    அதெப்படிங்க… பொறுமையா, அமைதியா, தெளிவா எல்லாவிதமான வாதங்களுக்கும் பதில் சொல்றீங்க. நீங்க வெகுஜனத் தொடர்புத் துறையில் இருக்கிறீர்களா?..

  12. செந்தில் குமரன்

    இறைவன் அன்புமயமானவர் என்று தான் எனக்குத் தெரியும். எனக்குத் தெரிந்து வேறு எந்த மதமும் தன்னுடைய மார்கத்தை பின்பற்றாதவர்களுக்கு தண்டணைகள் கிடைக்கும் என்று சொல்வதில்லை. மேலும் உங்களுடைய இன்னொரு பதிவில் மனிதனின் கருத்துக்கள் இறைவன் கருத்துகளாக மாறி விட்டதால் மற்ற வேதங்கள் அழிந்ததாக கூறி இருந்தீர்கள். இந்தக் கருத்து மனிதனின் கருத்தாகவே தோன்றுகிறது.

    இந்து மதத்திலும் இது போன்ற கருத்துக்கள் வேதத்தில் உண்டு. வேதங்களின் அந்தக் கருத்து போலவே இதுவும் எனக்கு மூடத்தனமாக படுகிறது.

  13. அபூ முஹை

    தருமி, மற்று ஜோ உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்!

    இருவரும் ஒரே மாதிரியானக் கேள்வியையே கேட்டிருக்கிறீர்கள். இங்கே ஒரு உதாரணத்தை முதலில் சொல்லிக் கொள்கிறேன்.

    பள்ளியில் சேர்ந்து தொடர்ந்து அந்த வருடத்தின் இறுதி வரை படித்த மாணவனுக்குத்தான், தேர்வு நடக்கும் போது கேள்வித்தாள் கொடுக்கப்படும். பள்ளிக்கே செல்லாத மாணவன் பரீட்சை எழுத வேண்டிய அவசியமில்லை, கேள்வித்தாளும் அவனுக்கு அவசியமில்லாமல் போய் விடுகிறது.

    ”இஸ்லாம் பற்றி எதுவும் அறிந்திராத மக்களுக்கு ”இறைவனுக்கு இணை கற்பிக்கும்” சட்டம் பொருந்துமா? என்றே கேட்கப்பட்டிருக்கிறது”!

    //இன்றாவது communication எல்லாம் நல்லா இருக்கு. இது எதுவும் இல்லாத காலத்தில் (கி.பி. 1000 என்று கொள்வோமே) நம் இன்றைய இந்தியாவில் பிறந்த நம் முன்னோர் என்ன ஆவார்கள்?

    இஸ்லாமைத் தெரிந்து கொள்ளாமலேயே வாழ்ந்து மறைந்தது அந்த பாவப்பட்ட மனிதனின் தவறா? அல்லது அப்படி அவனை அப்படிப் படைத்த இறைவனின் தவறா?// -தருமி

    //இஸ்லாம் என்றொரு மார்க்கம் இருப்பதையே அறியாமல் இவ்வுலகில் பலர் இருக்கலாம் .அல்லது பிறப்பு ,அல்லது இருப்பிடத்தின் காரணமாக இஸ்லாம் பற்றி தெளிவாக அறிய வாய்ப்பில்லாமல் இருக்கலாம் .அவர்கள் இஸ்லாமை நிராகரித்ததாக எப்படி சொல்ல முடியும் ?அவர்களுக்கும் தண்டனை தானா? அவர்கள் செய்த குற்றம் என்ன ?// – ஜோ

    தருமி மற்றும் ஜோ இவர்களின், இந்தக் கேள்வி மிகப் பழமையானக் கேள்வி. கி.மு சுமார் 2000 ஆண்டு வாக்கில், இறைத்தூதர் மோசே என்ற மூஸா(அலை) அவர்கள் ஓரிறைக் கொள்கையைப் பிரச்சாரம் செய்த போது ஃபிர் அவ்ன் இதேக் கேள்வியைத்தான் மூஸா நபியிடம் கேட்டான்…

    ”மூஸாவே உங்களிருவரின் இறைவன் யார்”? என்று கேட்டான் (திருக்குர்ஆன், 20:49)

    ”ஒவ்வொரு பொருளுக்கும் அதற்குரிய தோற்றத்தை வழங்கி பின்னர் வழி காட்டியவனே எங்கள் இறைவன்” என்று கூறினார். (திருக்குர்ஆன், 20:50)

    ”முன் சென்ற தலைமுறையினரின் நிலை என்ன”? என்று அவன் கேட்டான். (திருக்குர்ஆன், 20:51)

    ”அது பற்றிய ஞானம் எனது இறைவனிடம் உள்ளது. என் இறைவன் தவறிட மாட்டான். மறக்கவும் மாட்டான்” என்று அவர் கூறினார். (திருக்குர்ஆன், 20:52)

    ஓரிறைக் கொள்கையைப் பிரச்சாரம் செய்த நபி மோசே (அலை) அவர்களிடம் ”நீர் பிரச்சாரம் செய்யும் இந்த ஓரிறைக் கொள்கையை இதற்கு முந்தய தலைமுறையினர் அறிந்திருக்கவில்லையே அவர்களின் நிலை என்ன”? என்ற கேள்வி முன் வைக்கப்படுகிறது.

    அது பற்றி இறைவன் நன்கு அறிந்தவன் அவன் தவறு செய்ய மாட்டான், எதையும் மறக்கவும் மாட்டான் என்றும் மிகத் தெளிவாகத் திருக்குர்ஆன் பதிலளிக்கிறது.

    ஒரு விஷயத்தைத் தெரியாதவர் – அதைப்பற்றி அறிந்திராதவர், அதை எப்படிப் பின்பற்ற முடியும்? தெரியாத விஷயத்தை ஒருவர் பின்பற்றவில்லை என்பதற்காக அவரைத் தண்டித்து இறைவன் தவறு செய்பவனல்ல என்பதை மேற்கண்ட இறை வசனங்களிலிருந்து விளங்கலாம்!

    ஓரிறைக் கொள்கை பற்றி அறியாததால் பின்பற்றவில்லையா? அல்லது அறிந்தே பின் பற்றவில்லையா? என்பதையும் இறைவன் மறந்து விட மாட்டான் என்பதும் இறைவனால் அறிவிக்கப்படுகிறது.

    இதையே தருமி, மற்றும் ஜோ அவர்களுக்கும் விளக்கமாக வைக்கிறேன் நன்றி!

    அன்புடன்,
    அபூ முஹை

  14. அபூ முஹை

    குமரன் உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!

    //இந்து மதத்திலும் இது போன்ற கருத்துக்கள் வேதத்தில் உண்டு. வேதங்களின் அந்தக் கருத்து போலவே இதுவும் எனக்கு மூடத்தனமாக படுகிறது.// – குமரன் எண்ணம்.

    அவரவர் எண்ணங்களில் தோன்றுவதை அவர் ஏற்றுக் கொள்வது நம்பிக்கை! அதுவே மற்றவருக்கு மூட நம்பிக்கை!! சரியாகத்தான் சொல்லியுள்ளீர்கள் நன்றி!

    அன்புடன்,
    அபூ முஹை

    *********************

    சுல்தான் உங்கள் வருகைக்கு நன்றி!
    நீங்கள் எழுதிய விளக்கங்கள் வருவதற்கு முன் எம்முடைய விளக்கங்கள் மறுமொழியில் பதியப்பட்டு விட்டது.

    //தருமி ஐயாவுடைய கேள்விக்கு நான் இங்கு பதிலளித்துள்ளேன்.

    அன்பின் அபூமுஹை!, தேவையேற்படின் மேலதிக விபரம் தாருங்கள்.// – சுல்தான்.

    நீங்கள் எழுதிய மறுமொழியை நிறுத்தி வைத்துள்ளேன் நன்றி!

    அன்புடன்,
    அபூ முஹை

  15. அபூ முஹை

    //நீங்க வெகுஜனத் தொடர்புத் துறையில் இருக்கிறீர்களா?..//

    திருவடியான், நம்மள எங்காவது கொண்டு போய் கவுத்தறாதீங்கய்யா! ஆமா.. வெகுஜனத் தொடர்புத் துறைன்னா என்ன..? :)

    அன்புடன்,
    அபூ முஹை

  16. சகோதரர் அபுமுஹை,

    எனது எள்ளல் என்று சில வரிகளை குறித்திருக்கிறீர்கள். அது உங்களுக்கு எள்ளலாக பட்டிருக்கலாம் என்பதனை உணரும்போதிலும், அவற்றில் எள்ளலை வைத்து எழுதவில்லை என்பதை கூறிக்கொள்கிறேன்.

    ஆரம்பத்திலேயே “இன்னாருக்கு இந்த காலத்திலிருந்து இந்த காலம் வரைக்கும் இந்த நியதிகள்” என்று எழுதிவைத்து அதனை ஆரம்பத்திலிருந்தே பாதுகாத்திருக்கலாம் என்று எழுதியிருந்தேன்.

    அல்லா அப்படி செய்யாததற்கு “அது அல்லாவின் நியதி” என்று பதில் கூறியிருக்கிறீர்கள். இதுவரை அழகாக உதாரணம் மூலம் விளக்கி வந்த தாங்கள் இங்கே வேறு வழியின்றி “அது அப்படித்தான்” என்று முடித்திருக்கிறீர்கள். இது எனக்கு ஏமாற்றத்தையே தந்திருக்கிறது. இது ஒரு பதிலாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் எந்த கேள்விக்கும் விளக்கம் எழுத வேண்டாமே? “அது அப்படித்தான்” என்று முடித்திருக்கலாம் அல்லவா?

    நண்பர் சிராஜுதீன் என்ன பதில் கூறுகிறார் என்று காத்திருக்கிறேன்.


    இந்து மதத்தில் குரு என்ற கருத்து உண்டே தவிர இறைதூதர் என்ற கருத்து இல்லை. குரு சொல்வது ஒரு ஆசிரியர் சொல்வது போன்றது. ஐன்ஸ்டீனுக்குச் கணிதம் சொல்லித்தந்த குருவை விட ஐன்ஸ்டீன் என்ற சீடன் அதிகம் அறிந்தார். அவர் குருவாக இருந்து இன்னும் பல ஐன்ஸ்டீன்களை உருவாக்குவார். அது போல இந்து மதத்தில் குருக்கள் முந்தைய குருக்களை விட அதிக ஞானமும் கல்வியும் கொண்டவர்கள். இவர்களுக்கு அடித்தளமாக வேதங்கள் இருக்கின்றவே தவிர வேதங்களே கட்டிடங்கள் அல்ல.

    இறைதூதர் என்ற கருத்தே தவறு என்பது என் கருத்து. அதுவும் இறுதி இறைதூதர் என்ற கருத்து மிக மிகத்தவறு என்பது என் கருத்து.

    எல்லோரையும் சமமாக பாவிக்கும் இறைவன் ஒருவரை மட்டும் உயர்த்தி மற்றவர்களை தாழ்த்துவது எல்லோரையும் சமமாக பாவிக்கும் இறைவனுக்கு சரியாகாது.

    தன்னை மனிதன் கும்பிடவில்லை என்று வருந்தும் இறைவன், தன்னை மனிதன் கும்பிடவில்லை என்று கோபம் கொள்ளும் இறைவன், இறைவன் என்ற கருத்துருவத்துக்கு ஒவ்வாதது என் கருத்து.

    அதே வேளையில் முற்பிறவியின் பயனாக, நற்கருமத்தின் காரணமாய் இறைவனை தொழும் இப்பிறவி பாக்கியம் பெற்று பலர் அவ்வாறு பாக்கியம் பெற்றிராத பலரை இறைவனை நோக்கி திருப்புகிறார்கள்.

    அப்படிப்பட்ட ஒரு குருவாகவே என் கண்ணுக்கு ஜனாப் முகம்மது நபிகள் தெரிகிறார். வாழ்க்கையில் குருவுக்கு வந்தனம் செய்யவேண்டும். ஆனால், குருவையும் தாண்டி சிந்திக்கத்தான் குரு சொல்லித்தர வேண்டும். குரு சொன்னதில் வரிக்கு வரி அப்படியே எடுத்துக்கொண்டு மேலே சிந்திக்க, பரிணாமம் அடைய மறுப்பவன், குருவுக்கு துரோகம் இழைக்கிறான். குரு சூரியனை காட்டுகிறார். சீடன் விரலை மட்டுமே பார்க்கிறான்.

    நன்றி

  17. இறை நம்பிக்கை, மத நம்பிக்கை இல்லாமல் ஒருவர் வாழ முடியும்.பகுத்தறிவு கொண்டு நல்லது, கெட்டது அறிந்து கொண்டு ஒழுக்கம்மிக்க நல்ல வாழ்க்கை வாழ முடியும்.மதத்தின் பெயரால்
    அச்சுறுத்துவது, இந்த இறைவனை தொழாவிட்டால் நரகத்திற்குப் போவாய் என்பதெல்லம்
    தேவையே இல்லை.மதவாதிகளான உங்களைப் போன்றோர் நம்பிக்கையின் அடித்தளமாக
    அச்சுறுத்தலையும், பயத்தையும் முன்னிறுத்துகிறீர்கள். பல ஞானியரும், தத்துவ வாதிகளும்
    காட்டும் பாதை வேறு. உங்கள் பதிவுகளைப் படிக்கும் போது உங்களிடையே ஆழ்ந்த நம்பிக்கையும்,
    அச்சமும் சேர்ந்தே இருப்பதாக உணர்கிறேன். என்னைப் பொருத்த வரை மத நம்பிக்கை இல்லாமல்
    ஒருவர் வாழ முடியும், பலர் அப்படி வாழ்கின்றனர். அவர்களிடமிருந்து கற்க வேண்டியவை அனேகம்.
    மத நம்பிக்கையற்ற மார்க்சும், பெரியாரும், ஜித்து கிருஷ்ணமூர்த்தியுன், இன்ன பிறரும் கூறியுள்ளவை எனக்கு இந்த மதங்களை விட மிக அர்த்தமுள்ளவையாகவும், பொருத்தமாகவும் இருக்கின்றன.
    இப்படியெல்லாம் சிந்திப்பதே இறை விரோதம், இறை நிந்தனை என்று கூட உங்களுக்குத்
    தோன்றலாம்.

  18. அறிவுடைநம்பி

    அபு,

    1) மற்ற மதங்களைப்போல் இசுலாம் மதம் இறைவழிபாட்டை மட்டும் வலியுறுத்துவதோடு நில்லாமல் ஏன் எல்லா விடயங்களிலும் தலையிட வேண்டும்?

    2) யூதமதத்திற்குப்பின் கிறித்தவமும், அதன்பின் இசுலாமும் உங்கள் இறை மார்க்கமாகச் சொல்கிறீர்கள்.நிற்க, முசுலிம்களின் பார்வையில் யூதர்களும், கிறித்தவர்களும் கூட உங்களவர்தானே? அவற்றையும் பின்பற்றலாமா?

    மன்னிக்கவும், நான் இந்து மதத்தின் மூடநம்பிக்கை போதனைகளிலிருந்து அயர்வுற்று மதங்களுக்கு அப்பாற்பட்ட சிந்தனையில் உள்ளவன். உங்கள் பார்வையில் நான் யார்? காபிரல்லாத எவரும் முசுலிமா? இவற்றை அறிந்துகொள்ளவே கேட்கிறேன்.

    நன்றியுடன்,

  19. அபூ முஹை

    சகோதரர் எழில்

    உங்கள் மறுமொழியின் முற்பகுதி ”இறைவனின் நியதிகள்” என்ற பதிவிற்குரியது இந்தப்பதிவில் சேர்த்துள்ளீர்கள். இதை அங்கு பேசுவதுதான் சரியாக இருக்கும் முடிந்தால் இந்தக் கருத்தை அங்கேயே சொல்லுங்களேன்!

    உங்கள் மறுமொழியின் அடுத்த பகுதியில் உங்கள் நம்பிக்கைப் பற்றி எழுதியுள்ளீர்கள். அதோடு மனிதனின் சுதந்திரமான சிந்தனைக்கு இஸ்லாம் தடை செய்திருப்பது போலவும் உங்கள் கருத்து பிரதிபலிக்கிறது. இது விஷயமாக நாளை எழுதுகிறேன் நன்றி!

    ரவி சிரினிவாஸ், மற்றும் அறிவுடை நம்பி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! உங்கள் கருத்துக்கும் நாளை மறுமொழியில் பதிலளிக்கிறேன். இன்ஷா அல்லாஹ்.

    அன்புடன்,
    அபூ முஹை

  20. அபூ முஹை

    சகோதரர் எழில்,

    //இறைதூதர் என்ற கருத்தே தவறு என்பது என் கருத்து. அதுவும் இறுதி இறைதூதர் என்ற கருத்து மிக மிகத்தவறு என்பது என் கருத்து.//

    சுய புத்தியோடுதான் இதை எழுதினீர்களா..? உங்களின் மேற்கண்ட கருத்து மொத்த உலக முஸ்லிம்களின் அடிப்படை நம்பிக்கையைத் தகர்த்தெறிகிறதே கவனித்தீர்களா..?

    ”முஹம்மது அல்லாஹ்வின் அடியாரும், அவனது தூதருமாவார்” என்று சாட்சி கூறுகிறேன். இந்த வாக்கியத்தை ஏற்காமல் ஒருவன் முஸ்லிமாக இருக்க முடியாது. ஆனால் நீங்களோ ”அல்லாஹ்வின் தூதர்” என்று சொல்லக்கூடாது என்று எழுதியுள்ளீர்கள். அதுவும் இறுதி இறைத்தூதர் என்பதும் மிகத்தவறு என்றும் சொல்லியுள்ளீர்களே..? எதன் அடிப்படையில் உங்களுக்கு இவ்வாறு தோன்றுகிறது. விளக்கம் தாருங்கள்.

    //இந்து மதத்தில் குரு என்ற கருத்து உண்டே தவிர இறைதூதர் என்ற கருத்து இல்லை. குரு சொல்வது ஒரு ஆசிரியர் சொல்வது போன்றது. ஐன்ஸ்டீனுக்குச் கணிதம் சொல்லித்தந்த குருவை விட ஐன்ஸ்டீன் என்ற சீடன் அதிகம் அறிந்தார். அவர் குருவாக இருந்து இன்னும் பல ஐன்ஸ்டீன்களை உருவாக்குவார். அது போல இந்து மதத்தில் குருக்கள் முந்தைய குருக்களை விட அதிக ஞானமும் கல்வியும் கொண்டவர்கள். இவர்களுக்கு அடித்தளமாக வேதங்கள் இருக்கின்றவே தவிர வேதங்களே கட்டிடங்கள் அல்ல.//

    உங்கள் மதத்திலிருக்கும் அதே கருத்துதான் இஸ்லாத்திலும் இருக்க வேண்டுமென்று கட்டாயமில்லை. எந்த விஞ்ஞானியானாலும், சீடரானாலும் உலக விஷயங்களில் குரு, சிஷ்யன் என இருப்பதை இஸ்லாம் மறுக்கவில்லை! உலக விஷயங்களில் புதிய கண்டு பிடிப்புகள், தொழில்கள், விவசாயங்கள் போன்றவற்றில் இறைத்தூதரைப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை.

    மார்க்கமல்லாத உலக விஷயங்களில் என்னை விட நீங்களே நன்கறிந்தவர்கள் என்று இறுதி இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் சொல்லியுமிருக்கிறார்கள்.

    கல்வி கற்கும் மாணவன் ஆசிரியரைக் குரு என்று சொல்வதிலும், அவரை மதித்து கண்ணியப்படுத்துவதையும் இஸ்லாம் சொல்லித்தந்துள்ளது. தொழில்களைக் கற்றுத்தருபவர்களையும் குருவாகக் கருதுவதை இஸ்லாம் தடை செய்யவில்லை. ஆனால் இறைத்தூதர்கள் – என்பது இறைவன் மட்டுமே தேர்ந்தெடுத்து வழங்கும் உயர் பதவி – இறைச் செய்தியைப் பெற்று அதன்படி தாமும் வாழ்ந்து காட்டி, மக்களையும் இறை மார்க்கத்தின் பக்கம் அழைத்தவர்கள்.

    என்ன முயன்றாலும் மனிதர்களால் அறிந்த கொள்ள முடியாத, எந்த விஞ்ஞானியின் சிந்தனைக்கும் எட்டாத சில மறைவான விஷயங்களையும் இறைவனிடமிருந்து பெற்று அதைப் பற்றி மக்களுக்கு அச்சமூட்டி எச்சரிப்பவர்கள் இறைத்தூதர்கள். எத்தனை குருமார்கள் ஒன்று சேர்ந்தாலும் இறைத்தூதர் என்ற அந்தஸ்தை ஒரு போதும் அடைய முடியாது. ஏனென்றால், இந்தப் பதவி இறைவன் மட்டுமே தெர்ந்தெடுத்து வழங்கும் பதவி மனிதர்களுக்கு இதில் எவ்வித பங்குமில்லை!

    //எல்லோரையும் சமமாக பாவிக்கும் இறைவன் ஒருவரை மட்டும் உயர்த்தி மற்றவர்களை தாழ்த்துவது எல்லோரையும் சமமாக பாவிக்கும் இறைவனுக்கு சரியாகாது.//
    – இதை விளங்கும்படி விவரமாகச் சொல்லுங்கள்! ”யாரை உயர்த்தி யாரைத் தாழ்த்தினான் இறைவன்..?”

    //தன்னை மனிதன் கும்பிடவில்லை என்று வருந்தும் இறைவன், தன்னை மனிதன் கும்பிடவில்லை என்று கோபம் கொள்ளும் இறைவன், இறைவன் என்ற கருத்துருவத்துக்கு ஒவ்வாதது என் கருத்து.// – தன்னை வணங்கவே மனிதர்களைப் படைத்ததாக இறைவன் சொல்கிறான்! அப்படியிருக்கும்போது தனக்கு மாறு செய்தவர்களை தண்டிப்பேன் என்பதில் என்ன குறை கண்டீர்கள்..?

    //அதே வேளையில் முற்பிறவியின் பயனாக, நற்கருமத்தின் காரணமாய் இறைவனை தொழும் இப்பிறவி பாக்கியம் பெற்று பலர் அவ்வாறு பாக்கியம் பெற்றிராத பலரை இறைவனை நோக்கி திருப்புகிறார்கள்.//

    – எங்கே! உங்கள் முற்பிறவியின் பயனாக, நற்கருமத்தின் இப்பிறவியின் காரணத்தின் அடிப்படையை கொஞ்சம் விளக்குங்களேன் தெரிந்து கொள்வோம்!

    //அப்படிப்பட்ட ஒரு குருவாகவே என் கண்ணுக்கு ஜனாப் முகம்மது நபிகள் தெரிகிறார். வாழ்க்கையில் குருவுக்கு வந்தனம் செய்யவேண்டும். ஆனால், குருவையும் தாண்டி சிந்திக்கத்தான் குரு சொல்லித்தர வேண்டும். குரு சொன்னதில் வரிக்கு வரி அப்படியே எடுத்துக்கொண்டு மேலே சிந்திக்க, பரிணாமம் அடைய மறுப்பவன், குருவுக்கு துரோகம் இழைக்கிறான். குரு சூரியனை காட்டுகிறார். சீடன் விரலை மட்டுமே பார்க்கிறான்.//

    இஸ்லாம் ஒரு போதும், நம்பிக்கை என்ற வட்டத்திற்குள் நிறுத்தி சிந்திக்காதே, மாற்றுக் கருத்து கொள்ளாதே என்று மக்களை முடக்கியதில்லை. சிந்தித்து, விவாதித்துத் தெளிவு பெற்ற பின், ”விரும்பியவர் ஏற்கட்டும், விரும்பியவர் மறுக்கட்டும்” என்ற கருத்து சுதந்திரத்தை வழங்கிய மார்க்கம் இஸ்லாம்.

    எனவே குருவையும் தாண்டி சிஷ்யன் சிந்தித்து, குருவையும் தாண்டி சாதனை செய்வதில் இஸ்லாத்துக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. எல்லாரும் ஒரு வகையில் குருவாகவும், ஒரு வகையில் சிஷ்யனாகவும் இருக்கிறோம்.

    ஆனால் இறைத்தூதர் என்ற தகுதியில் இறைத்தூதர்கள் மட்டுமே இருக்க முடியும். மார்க்க விஷயத்தில் வேறு எவருடையக் கருத்தும் புறக்கணிக்கத்தக்கது. வரிக்கு வரி இறைத்தூதர் மட்டுமே பின்பற்றத்தக்கவர். மார்க்கத்தில் இறைத்தூதர் குருவாக இருக்கிறார் என்று பொருள் கொள்வதில் ஆட்சேபனை இல்லை! ஆனால் இறைத்தூதர் என்று சொல்வது தவறு, குரு என்று சொல்ல வேண்டும் என்ற உங்களின் பொடு போக்கானக் கருத்தை முஸ்லிம்கள் சார்பாக ஆட்சேபிக்கிறேன்!

    ஜனாப் முஹம்மது நபிகள் உங்கள் கண்ணுக்கு குருவாகத் தெரிந்தால் தெரிந்து விட்டு போகட்டும். இஸ்லாத்தை நம்பிக்கை கொள்ளாத நீங்கள் எப்படி வேண்டுமானாலும் கருதிக் கொள்ளலாம். இறைவனைத் தவிர வணக்கத்தை யாருக்கும் செலுத்த மாட்டோம், அவர் இறைத்தூதராக இருந்தாலும் சரியே!

    மற்றவை சகோதரர் எழில் அவர்களின் விளக்கங்களைக் கண்ட பின்… நன்றி!

    அன்புடன்,
    அபூ முஹை

  21. மிக்க நன்றி சகோதரர் அபுமுஹை

    நிச்சயம் இவற்றைப்பற்றி பேசலாம்.
    அதற்கு முன்னால் ஒரு சின்ன மன பரிசோதனை செய்யலாம்.

    நீங்கள் இயேசு கிரிஸ்து பிறப்பதற்கு முந்தைய காலத்தில் வாழ்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.

    அப்போது உங்கள் சமூகத்தில் 4 மனிதர்கள் (ஒரு சில குறைகளும் ஒரு சில நிறைகளும் கொண்ட மனிதர்கள்) தன்னை உண்மையான இறைதூதர் என்று அழைத்துக்கொண்டு போதிக்கிறார்கள்.

    நீங்கள் யாரை உண்மையான இறைதூதர் என்று பின்பற்றுவீர்கள்? எப்படி? ஏன்?

  22. எழில்,

    //இறைதூதர் என்ற கருத்தே தவறு என்பது என் கருத்து. அதுவும் இறுதி இறைதூதர் என்ற கருத்து மிக மிகத்தவறு என்பது என் கருத்து.//

    வேடிக்கை மனிதரய்யா நீர், இஸ்லாமியர்களை வம்புக்கிழுக்கவே வலைப்பதிவு தொடங்கிவிட்டு 90% அதன்படியே செய்துவிட்டு நான் செய்வது ‘எள்ளலாக’த் தோன்றினாலும் ‘எள்ளல்’ இல்லை என்கிறீர். என்ன ஒரு கள்ளத்தனம்? நீங்கள் மிகவும் மதிக்கிறவர்களைப் பற்றியும் யாரும் எதுவும் எழுதிவிட்டு ‘எள்ளலா’க த் தோன்றினாலும் ‘எள்ளல்’ இல்லை என்று சொன்னால் அதையும் நம்புவீர்கள் போலும்.

    அதென்ன, லாஜிக்கலாக சாத்தியமுள்ள, இறைத்தூதர் கருத்தை மறுக்கத்துணிகிற/வம்பு வளர்க்கிற உம்மால் ‘ஆணுக்கும் ஆணுக்கும் அவதாரமே பிறக்கும்’ கடவுள் எந்த கேடுகெட்ட வடிவிலும் அவதாரமெடுக்கலாம் என்ற நாற்றத்தையெல்லாம் கிரகிக்க முடிகிறது?

  23. //உங்கள் சமூகத்தில் 4 மனிதர்கள் (ஒரு சில குறைகளும் ஒரு சில நிறைகளும் கொண்ட மனிதர்கள்) தன்னை உண்மையான இறைதூதர் என்று அழைத்துக்கொண்டு போதிக்கிறார்கள்.

    நீங்கள் யாரை உண்மையான இறைதூதர் என்று பின்பற்றுவீர்கள்? எப்படி? ஏன்? //

    ‘காலத்தை’ தன் கரத்தில் வைத்திருக்கிற இறைவன் தன் தூதருடைய விடயத்தில் அத்தாட்சிகளை அனுப்பி உண்மையை நிலைநாட்டுகிறான். அநேக தீர்க்கதரிசிகள் இறை அத்தாட்சிகளால் நிரூபிக்கப்பட்டிருக்கிறார்கள். நோவா, யோசேப், மோஸஸ், ஜீஸஸ், முஹம்மது போன்ற தூதர்கள் எல்லோருமே ‘சோதனை’யில் வென்று தம்மை நிரூபித்தவர்கள் தாம்.

  24. சவூதி தமிழன்

    சகோ அபூமுஹை

    எழில் என்பவர், உங்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்லாதவரை அவரது திசை திருப்பும் கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டாம். அநேகமாக இவர் இப்போது ‘உள்வாங்கு’கிறார் என நினைக்கிறேன்.

  25. இப்னு பஷீர்

    //இறைதூதர் என்ற கருத்தே தவறு என்பது என் கருத்து. அதுவும் இறுதி இறைதூதர் என்ற கருத்து மிக மிகத்தவறு என்பது என் கருத்து.//

    படைப்பாளன் தனது உயர்ந்த படைப்பாகிய மனிதனுடன் தொடர்பு கொள்ள, தனது வழிகாட்டுதல்களை தெரிவிக்க, தேர்ந்தெடுத்த வழிமுறைதான் தூதுத்துவம் என்பது. ‘தாம் குரங்கின் வழித்தோன்றல்கள்’ என இன்னும் நம்பிக் கொண்டிருப்பவர்களுக்கு இது விளங்காமல் போனதில் வியப்பொன்றுமில்லை.

    //இந்து மதத்தில் குரு என்ற கருத்து உண்டே தவிர இறைதூதர் என்ற கருத்து இல்லை. குரு சொல்வது ஒரு ஆசிரியர் சொல்வது போன்றது. ஐன்ஸ்டீனுக்குச் கணிதம் சொல்லித்தந்த குருவை விட ஐன்ஸ்டீன் என்ற சீடன் அதிகம் அறிந்தார். அவர் குருவாக இருந்து இன்னும் பல ஐன்ஸ்டீன்களை உருவாக்குவார். அது போல இந்து மதத்தில் குருக்கள் முந்தைய குருக்களை விட அதிக ஞானமும் கல்வியும் கொண்டவர்கள். இவர்களுக்கு அடித்தளமாக வேதங்கள் இருக்கின்றவே தவிர வேதங்களே கட்டிடங்கள் அல்ல.//

    ஒரு உதாரணத்திற்கு, இவ்வுலக வாழ்வை மேடு பள்ளங்கள் நிறைந்த ஒரு பயணத்திற்கு ஒப்பிடுவோம். பயணத்தை வடிவமைத்த இறைவனே பயண வழிகாட்டியாக ஒரு வேதத்தை அருளி, செயல்முறை விளக்கத்திற்காக தனது தூதரையும் அனுப்பியிருக்கிறான். இறைவனின் வழிகாட்டுதல்களைத்தான் இறைத்தூதர் போதிக்கிறார்.

    குரு என்பவர் அப்படி அல்ல. அவர் தனது சிற்றறிவுக்கு எட்டிய ஞானத்தை மட்டும்தான் அவரால் போதிக்க முடியும். அது சரியான வழியா அல்லவா என்பதைக்கூட அவரால் உறுதிப் படுத்த இயலாது. ஏனெனில் ‘கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்’.

    இறைவனின் வழிகாட்டுதல்களைக் கொண்ட இறைத்தூதரே குருக்களிலெல்லாம் மிக மேலானவர். அவரது போதனைகள் இருக்கும்வரை இன்னொரு குருவிற்கு வேலையில்லை.

    //எல்லோரையும் சமமாக பாவிக்கும் இறைவன் ஒருவரை மட்டும் உயர்த்தி மற்றவர்களை தாழ்த்துவது எல்லோரையும் சமமாக பாவிக்கும் இறைவனுக்கு சரியாகாது.//

    இறைவனுக்கு முன் எல்லோரும் சமமானவரே. இறைவனிடத்தில் மிகச்சிறந்தவர் மனிதர்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான் என்பது இஸ்லாமின் கொள்கை.

    //அதே வேளையில் முற்பிறவியின் பயனாக, நற்கருமத்தின் காரணமாய் இறைவனை தொழும் இப்பிறவி பாக்கியம் பெற்று பலர் அவ்வாறு பாக்கியம் பெற்றிராத பலரை இறைவனை நோக்கி திருப்புகிறார்கள்.//

    என்ன.. டார்வின் முற்பிறவி இப்பிறவி பற்றியெல்லாம் சொல்லியிருக்கிறாரா? தற்செயலாக தோன்றிய ஒருசெல் உயிரியிலிருந்து பல்கிப் பெருகியதாக நம்பப்படும் உயிரினங்களுல் முற்பிறவி, இப்பிறவி என்பதெல்லாம் உண்டு என்று இன்னுமா நம்பிக் கொண்டிருக்கிறீர்கள்?

  26. இப்னு பஷீர்

    //இறை நம்பிக்கை, மத நம்பிக்கை இல்லாமல் ஒருவர் வாழ முடியும்.பகுத்தறிவு கொண்டு நல்லது, கெட்டது அறிந்து கொண்டு ஒழுக்கம்மிக்க நல்ல வாழ்க்கை வாழ முடியும்.//

    வாழலாம்தான். ஆனால், இந்த ‘நல்லது / கெட்டது’ என்பது நாட்டிற்கு நாடு, காலத்திற்கு காலம், கலாச்சாரத்திற்கு கலாச்சாரம் மாறுபாடு அடையும் ஒரு விஷயம். உங்களுக்கு நல்லதாக தெரியும் ஒன்று எனக்கு கெட்டதாக தெரியலாம். இதை யார்தான் வரையறை செய்ய முடியும் இறைவனைத் தவிர?

    //மதத்தின் பெயரால்
    அச்சுறுத்துவது, இந்த இறைவனை தொழாவிட்டால் நரகத்திற்குப் போவாய் என்பதெல்லம்
    தேவையே இல்லை.மதவாதிகளான உங்களைப் போன்றோர் நம்பிக்கையின் அடித்தளமாக
    அச்சுறுத்தலையும், பயத்தையும் முன்னிறுத்துகிறீர்கள். பல ஞானியரும், தத்துவ வாதிகளும்
    காட்டும் பாதை வேறு. உங்கள் பதிவுகளைப் படிக்கும் போது உங்களிடையே ஆழ்ந்த நம்பிக்கையும்,
    அச்சமும் சேர்ந்தே இருப்பதாக உணர்கிறேன்//

    ஒரு தேர்வுக்கு தயார் செய்து கொண்டிருக்கும் மாணவனுக்கு ‘இந்தத் தேர்வில் தவறி விடுவோமோ’ என்ற அச்சம் கொஞ்சமாவது இருந்தால்தான் அவனால் தன்னை ஒழுங்காக தயார் செய்து கொள்ள முடியும். அந்த அச்சத்தைத்தான் இஸ்லாம் முஸ்லிம்களுக்கு வலியுறுத்துகிறது.

    //என்னைப் பொருத்த வரை மத நம்பிக்கை இல்லாமல்
    ஒருவர் வாழ முடியும், பலர் அப்படி வாழ்கின்றனர். அவர்களிடமிருந்து கற்க வேண்டியவை அனேகம்.//

    வாழ முடியுமே! ஆனால் மரணத்திற்கு பிறகு என்ன நிகழ்கிறது என்பதை யாரும் உறுதி படுத்தாத சூழ்நிலையில், நான் முன்பு சொன்னதுபோல, ‘மறுமை இருக்கிறது’ என்ற நம்பிக்கையில் வாழ்வை அமைத்துக் கொள்வதே புத்திசாலித்தனம்.

    //மத நம்பிக்கையற்ற மார்க்சும், பெரியாரும், ஜித்து கிருஷ்ணமூர்த்தியுன், இன்ன பிறரும் கூறியுள்ளவை எனக்கு இந்த மதங்களை விட மிக அர்த்தமுள்ளவையாகவும், பொருத்தமாகவும் இருக்கின்றன.
    இப்படியெல்லாம் சிந்திப்பதே இறை விரோதம், இறை நிந்தனை என்று கூட உங்களுக்குத் தோன்றலாம்.//

    இவர்களின் கொள்கைகள் இஸ்லாம் மார்க்க கொள்கைகளுக்கு முரண்படாத வரையில் இவற்றை ஏற்றுக் கொள்ள முஸ்லிம்களுக்கு தடையேதும் இல்லை. மார்க்கத்திற்கு முரண்படும் கருத்துக்கள் முஸ்லிம்களுக்கு ஒரு பொருட்டே அல்ல.

  27. இப்னு பஷீர்

    //அப்போது உங்கள் சமூகத்தில் 4 மனிதர்கள் (ஒரு சில குறைகளும் ஒரு சில நிறைகளும் கொண்ட மனிதர்கள்) தன்னை உண்மையான இறைதூதர் என்று அழைத்துக்கொண்டு போதிக்கிறார்கள்.

    நீங்கள் யாரை உண்மையான இறைதூதர் என்று பின்பற்றுவீர்கள்? எப்படி? ஏன்?//

    தூதரை அனுப்பியவனுக்குத் தெரியாதா அவரை எப்படி மெய்ப்படுத்துவது என்று? தனது உண்மையான தூதரை தக்க சான்றுகளுடன் வெளிப்படுத்தும் பொறுப்பு இறைவனுக்கே உண்டு.

  28. அபூ முஹை

    /இறை நம்பிக்கை, மத நம்பிக்கை இல்லாமல் ஒருவர் வாழ முடியும்.பகுத்தறிவு கொண்டு நல்லது, கெட்டது அறிந்து கொண்டு ஒழுக்கம்மிக்க நல்ல வாழ்க்கை வாழ முடியும்.மதத்தின் பெயரால் அச்சுறுத்துவது, இந்த இறைவனை தொழாவிட்டால் நரகத்திற்குப் போவாய் என்பதெல்லம் தேவையே இல்லை.மதவாதிகளான உங்களைப் போன்றோர் நம்பிக்கையின் அடித்தளமாக அச்சுறுத்தலையும், பயத்தையும் முன்னிறுத்துகிறீர்கள். பல ஞானியரும், தத்துவ வாதிகளும காட்டும் பாதை வேறு. உங்கள் பதிவுகளைப் படிக்கும் போது உங்களிடையே ஆழ்ந்த நம்பிக்கையும்,
    அச்சமும் சேர்ந்தே இருப்பதாக உணர்கிறேன். என்னைப் பொருத்த வரை மத நம்பிக்கை இல்லாமல்
    ஒருவர் வாழ முடியும், பலர் அப்படி வாழ்கின்றனர். அவர்களிடமிருந்து கற்க வேண்டியவை அனேகம்.
    மத நம்பிக்கையற்ற மார்க்சும், பெரியாரும், ஜித்து கிருஷ்ணமூர்த்தியுன், இன்ன பிறரும் கூறியுள்ளவை எனக்கு இந்த மதங்களை விட மிக அர்த்தமுள்ளவையாகவும், பொருத்தமாகவும் இருக்கின்றன. இப்படியெல்லாம் சிந்திப்பதே இறை விரோதம், இறை நிந்தனை என்று கூட உங்களுக்குத் தோன்றலாம்.// –

    – ரவி சிரினிவாஸ், உங்கள் கருத்துக்கு நன்றி!

    இறைத்தூதுப் பணியின் முக்கியப் பிரச்சாரம் ”அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதுதான்” திருக்குர்ஆனின் பல வசனங்களில், இதைக் காணலாம். ஏன்னா..? நாளைக்கு ”எனக்கு, எவரும் ஓரிறைக் கொள்கை பற்றி எச்சரிக்கவில்லை” என்று நழுவி விடுவான் என்பதால் மனிதனை எவ்வளவு அச்சமூட்டி எச்சரிக்க முடியுமோ அந்தளவுக்கு இஸ்லாம் எச்சரிக்கிறது.

    மனிதன் வாழ்வதற்கு – அதாவது உயிர் வாழ்வதற்கு தண்ணீர், உணவு இவைகள் போதும். மதங்கள் அவசியமில்லை பகுத்தறிவும் அவசியமில்லை! பகுத்தறிவில்லாத மற்ற உயிரினங்கள் வாழத்தான் செய்கின்றன. மதங்கள் இல்லையென்றால் மனிதன் செத்து விடுவான் என்று நாம் சொல்லவில்லை.

    நீங்கள் மேற்கோள் காட்டும் ஞானியரும், தத்துவவாதிகளும் ஒத்தக்கருத்தில் இருக்கிறார்களா? பெரியார் இஸ்லாத்தை சிபாரிச செய்திருக்கிறாராமே அதை ஏன் நீங்கள் பின்பற்றுவதில்லை? சரி போகட்டும்.

    இந்த உலகில் எவ்வளவோ அக்கிரமங்கள். அநியாயங்கள் நடக்கின்றன. கொலை, கொள்ளை, மோசடிகள், எளியவனை வலியவன் நசுக்குவது உட்பட அநீதிகள் நடந்தேறிக் கொண்டிருக்கிறது. இதில் அதிசயம் என்னவென்றால். குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டவன் பணபலத்தால் தண்டனையிலிருந்து தப்பி விடுகிறான்.

    தப்பித்துக் கொள்வது மட்டுமல்ல இந்த உலக வாழ்க்கையில் சகல வசதிகளோடு எல்ல சொளகர்யங்களையும் பெற்று ஜாலியாக வாழ்கிறான். இவர்களோடு அயோக்கிய அரசியவாதிகளையும் சேர்த்துக் கொள்வோம்.

    இவர்களுக்கெல்லாம் தண்டனையே கிடையாதா..? இதற்கு உங்கள் பகுத்தறிவு என்ன தீர்ப்பு சொல்கிறது?

    தண்டனையிலிருந்துத் தப்பித்துக் கொள்ளும் அக்கிரமக்காரனுக்கும், அநியாயக்காரனுக்கும் தண்டனையே கிடையாது என்றால் நல்லவனாய் வாழ்வதில் என்ன புண்ணியம்..? இதையும் உங்கள் தத்துவவாதிகளிடம் கேட்டுச் சொல்லுங்கள் நன்றி!

    அன்புடன்,
    அபூ முஹை

  29. அபூ முஹை

    அன்பின் இப்னு பஷீர், உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி! ரமளான் மாதத்தின் கடைசி வாரம் இது. பெருநாள் நெருங்கி, பெருநாள் விடுமுறைக்கு இன்னும் 3 நாட்கள் மீதமிருக்கிறது. விடுமுறைக்கு முன் முடிக்க வேண்டிய வேலைப்பளு கூடிவிட்டது. எழுத நேரமில்லை நன்றி!

    அன்புடன்,
    அபூ முஹை

  30. புதுப் பார்வை

    சகோதரர் அபூமுஹை! உங்களின் இந்தப் பதிவும் பதிவு சார்ந்த கருத்தோட்டங்களும் பிற மத சகோதரர்களுக்கு அவசியமானதாகும். குறிப்பாக சகோதரர் எழில் நடுநிலையோடு கருத்துக்களை சிந்திப்பார் என்று நம்பலாம். சிந்திக்க வேண்டும்.

    இறைத்தூதர்கள் பற்றியும் அவர்களை கண்டெடுத்து அவர்கள் மீது மனிதர்கள் வைக்க வேண்டிய நம்பிக்கைப் பற்றியும் இன்னும் சற்று ஆழமாக எழுதப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். கருத்து வைக்கும் மாற்றுமத சகோதரர்களை குத்திக் காட்ட வேண்டாம். அவர்கள் புரிந்துக்கொள்ளும் விதத்தில் விளக்குவதே நமது கடமை.

    தொடருங்கள்.

  31. புதுப் பார்வை

    //இஸ்லாம் என்றொரு மார்க்கம் இருப்பதையே அறியாமல் இவ்வுலகில் பலர் இருக்கலாம் .அல்லது பிறப்பு ,அல்லது இருப்பிடத்தின் காரணமாக இஸ்லாம் பற்றி தெளிவாக அறிய வாய்ப்பில்லாமல் இருக்கலாம் .அவர்கள் இஸ்லாமை நிராகரித்ததாக எப்படி சொல்ல முடியும் ?அவர்களுக்கும் தண்டனை தானா? அவர்கள் செய்த குற்றம் என்ன ? //

    இது பரவலாக சிந்தனைவாதிகளின் மனதை குடையும் கேள்வியாகும். ஆனால் இறைவன் நீதி மிக்கவன். **எந்த ஒரு சமுதாயத்திற்கும் சத்தியத்தை எத்தி வைக்காதவரை அவர்களை தண்டிக்க மாட்டேன்** என்று குர்ஆனில் கூறுகிறான் (வசன எண் நினைவில்லை. தெரிந்தவர்கள் குறிப்பிடவும். எனவே பழங்குடி மக்கள் காட்டுவாசிகள் போன்றவர்களுக்கு இஸ்லாம் எப்படி தெரியும்? என்ற கேள்வி நம்மைப் பொருத்தவரை நியாயமாக தெரிந்தாலும் இறைவன் ஏதோ ஒரு விதத்தில் அவனைப் பற்றியும் – அவனை ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் பற்றியும் எத்தி வைக்கத்தான் செய்வான்.

  32. அபூ முஹை

    //அப்போது உங்கள் சமூகத்தில் 4 மனிதர்கள் (ஒரு சில குறைகளும் ஒரு சில நிறைகளும் கொண்ட மனிதர்கள்) தன்னை உண்மையான இறைதூதர் என்று அழைத்துக்கொண்டு போதிக்கிறார்கள்.

    நீங்கள் யாரை உண்மையான இறைதூதர் என்று பின்பற்றுவீர்கள்? எப்படி? ஏன்?//

    சகோதரர் எழில்,
    முஹம்மது (ஸல்) அவர்களை இறைத்தூதர் என்று முஸ்லிம்களாகிய நாங்கள் நம்புகிறோம். அதற்கான சான்றுகள் வரலாற்று நிகழ்வுகளில் பதியப்பட்டுள்ளது. முஹம்மது (ஸல்) அவர்களை இறைத்தூதர் என்று, அன்றைய இஸ்லாத்தை சாராத அறிஞர்களும் அடையாளம் கண்டு இஸ்லாத்தைத் தழுவினார்கள். முஹம்மது (ஸல்) அவர்கள் இறைத்தூதர்தாம் என எதிரிகளும் சரியாக அடையாளம் கண்டிருந்தார்கள் என்பதற்கான ஆவணங்கள் பதியப்பட்டள்ளன.

    சகோதரர் எழில் அவர்கள் சற்று அவகாசம் எடுத்து இவற்றையெல்லாம் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். தெரியாது என்றால் அதைத் தெரியப்படுத்துங்கள், நோன்புப் பெருநாள் விடுமுறை கழிந்து தனிப்பதிவில் அவற்றை விளக்குவோம். இன்ஷா அல்லாஹ்!

    நன்றி
    அன்புடன்,
    அபூ முஹை

  33. அபூ முஹை

    //அபு,
    1) மற்ற மதங்களைப்போல் இசுலாம் மதம் இறைவழிபாட்டை மட்டும் வலியுறுத்துவதோடு நில்லாமல் ஏன் எல்லா விடயங்களிலும் தலையிட வேண்டும்?

    2)யூதமதத்திற்குப்பின் கிறித்தவமும், அதன்பின் இசுலாமும் உங்கள் இறை மார்க்கமாகச் சொல்கிறீர்கள்.நிற்க, முசுலிம்களின் பார்வையில் யூதர்களும், கிறித்தவர்களும் கூட உங்களவர்தானே? அவற்றையும் பின்பற்றலாமா?

    மன்னிக்கவும், நான் இந்து மதத்தின் மூடநம்பிக்கை போதனைகளிலிருந்து அயர்வுற்று மதங்களுக்கு அப்பாற்பட்ட சிந்தனையில் உள்ளவன். உங்கள் பார்வையில் நான் யார்? காபிரல்லாத எவரும் முசுலிமா? இவற்றை அறிந்துகொள்ளவே கேட்கிறேன். நன்றியுடன்,// – அறிவுடை நம்பி

    ஐயா அறிவுடை நம்பி அவர்களே, உங்கள் கருத்துக்கு நன்றி!

    இஸ்லாத்தை எற்றுக் கொண்ட முஸ்லிம்கள் என்ன பாவங்கள் செய்தாலும் அதை இறைவன் மன்னிக்கிறான் என்றும். இஸ்லாத்தை ஏற்காதவர்கள் என்ன நன்மைகள் செய்தாலும் அவற்றை இறைவன் ஏற்றுக் கொளவதில்லை எனவும் சில இஸ்லாத்தின் எதிரிகள் தவறானப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதற்கு விளக்கமாகவே ”இறைவன் மன்னிக்காத குற்றம்” என்ற தலைப்பில் இந்தப் பதிவை எழுதினேன்.

    இறைவனுக்கு இணை வைத்தல் என்ற குற்றத்தைச் செய்தவர்களின் நல்லறங்களை இறைவன் அழித்து விடுவான். இணை கற்பித்தல், முஸ்லிமல்லாதவர்கள் செய்தாலும் சரி. முஸ்லிம்கள் செய்தாலும் சரியே! இறைத்தூதர்கள் செய்தாலும் அவர்களின் நல்லறங்களும் அழிந்து விடும் என்றே இறைவன் கூறுகிறான். இதில் இஸ்லாம் எவ்வித பாகுபாடின்றி நூல் பிடித்த மாதிரி நேர் கோட்டில் நடுநிலையாக சட்டங்களை வகுத்துள்ளது என்பது வெள்ளிடை மலை. ஆனாலும் பாருங்கள் சில அறிவுசீவிகளின் பின்னூடடங்கள் எப்படியிருக்கிறது..?

    //1) மற்ற மதங்களைப்போல் இசுலாம் மதம் இறைவழிபாட்டை மட்டும் வலியுறுத்துவதோடு நில்லாமல் ஏன் எல்லா விடயங்களிலும் தலையிட வேண்டும்?//

    மனிதனுக்கு எது நல்லது என்பது மனிதனைப் படைத்த இறைவனுக்குத்தான் தெரியும். மனிதன் வெறும் மந்திரத்தைச் சொல்லும் சடங்காக இஸ்லாத்தை உபயோகித்தால் போதும் என்று கருதாமல், அவனுக்கு எல்லா வகையிலும் இறை மார்க்கமான இஸ்லாம் வழிகாட்டுகிறது.

    //2) யூதமதத்திற்குப்பின் கிறித்தவமும், அதன்பின் இசுலாமும் உங்கள் இறை மார்க்கமாகச் சொல்கிறீர்கள்.நிற்க, முசுலிம்களின் பார்வையில் யூதர்களும், கிறித்தவர்களும் கூட உங்களவர்தானே? அவற்றையும் பின்பற்றலாமா?//

    இது முற்றிலும் தவறானக் கருத்துக்கள். யூதர்களும், கிறித்தவர்களும் ஆப்ரஹாம் என்ற இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்களின் மார்க்கத்தைப் பின்பற்றுவதாகச் சொல்வார்கள். ஆனால் நபி இப்ராஹீம் (அலை) யூதராகவோ, கிறித்தவராகவோ இருக்கவில்லை நேர்மையான முஸ்லிமாக அவர் இருந்தார் என்று இஸ்லாம் கூறுகிறது.

    யூத, கிறித்தவ மதத்துக்கும் இஸ்லாத்துக்கும் எள் முனையளவும் சம்பந்தமில்லை. இது பற்றி ”யூத, கிறித்தவ மதங்களின் தழுவலா இஸ்லாம்?” என்ற தொடரில் விளக்கப்படும் இன்ஷா அல்லாஹ்!

    மற்ற மதத்தில் நீங்கள் அயர்வுற்றது அது உங்கள் சொந்த விவகாரம். நன்றி!

    அன்புடன்,
    அபூ முஹை

  34. உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி சகோதரர் அபுமுஹை,
    என்னுடைய முழு கேள்வியையும் படித்தீர்கள் என்று கருதுகிறேன்.

    உங்களுக்காக மீண்டும் முழுமையாக கேட்கிறேன்.

    //நீங்கள் இயேசு கிரிஸ்து பிறப்பதற்கு முந்தைய காலத்தில் வாழ்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.

    அப்போது உங்கள் சமூகத்தில் 4 மனிதர்கள் (ஒரு சில குறைகளும் ஒரு சில நிறைகளும் கொண்ட மனிதர்கள்) தன்னை உண்மையான இறைதூதர் என்று அழைத்துக்கொண்டு போதிக்கிறார்கள்.

    நீங்கள் யாரை உண்மையான இறைதூதர் என்று பின்பற்றுவீர்கள்? எப்படி? ஏன்?
    //

    இந்த கேள்வி முகம்மது நபி பெருமானார் பற்றியோ குரானில் என்ன கூறப்பட்டிருக்கிறது என்பதோ அல்ல. அதற்கும் முன்பு நீங்கள் வாழ்ந்திருக்கும்போது நான்கு பேர்கள் நானே உண்மையான இறைதூதர் என்று கோரினால், எப்படி உண்மையான இறைதூதரை கண்டு பின் செல்வீர்கள் என்பதே கேள்வி.

    உங்கள் பதிலுக்கு முன்கூட்டிய நன்றி

    அன்புடன்
    எழில்

  35. அபூ முஹை

    //இந்த கேள்வி முகம்மது நபி பெருமானார் பற்றியோ குரானில் என்ன கூறப்பட்டிருக்கிறது என்பதோ அல்ல. அதற்கும் முன்பு நீங்கள் வாழ்ந்திருக்கும்போது நான்கு பேர்கள் நானே உண்மையான இறைதூதர் என்று கோரினால், எப்படி உண்மையான இறைதூதரை கண்டு பின் செல்வீர்கள் என்பதே கேள்வி.//

    சகோதரர் எழில்

    இந்தக் கேள்வியை ஏதாவது கேஜி படிக்கும் குழந்தைகளிடம் கேளுங்கள்.

    நன்றி
    அன்புடன்,
    அபூ முஹை

  36. அபூ முஹை

    ஐயா kulakkodan, உங்கள் வருகைக்கு நன்றி!

    நான் useless என்றால் நீங்கள் எந்த அளவுக்கு உபயோகமானவர் என்பதை அறிவிக்கலாமே..? நன்றி!

    அன்புடன்,
    அபூ முஹை

  37. //இந்தக் கேள்வியை ஏதாவது கேஜி படிக்கும் குழந்தைகளிடம் கேளுங்கள்.

    நன்றி
    அன்புடன்,
    அபூ முஹை//

    நன்றி சகோதரர் அபுமுஹை

    ஏன் அவ்வாறு கூறுகிறீர்கள் என்று தெரிந்துகொள்ளலாமா?

    நன்றி
    நட்புடன்
    எழில்

  38. அபூ முஹை

    வாங்க புதுப்பார்வை, வலைப்பூவைப் பற்றிய உங்கள் பார்வையும் புதுசாத்தான் இருக்கு.

    //கருத்து வைக்கும் மாற்றுமத சகோதரர்களை குத்திக் காட்ட வேண்டாம். அவர்கள் புரிந்துக்கொள்ளும் விதத்தில் விளக்குவதே நமது கடமை.// – புதுப்பார்வை

    நாமும் பொறுமையாகத்தான் சொல்லி வருகிறோம். அப்படியிருந்தும் கருத்தை கருத்தால் எதிர் கொள்ள முடியாதவர்கள் நம்மை ஒருவர் ”யூஸ்லெஸ்” என்று சாடியிருக்கிறார். இவர் யாருக்கு எவ்வளவு ”யூஸாக” இருந்தார்னு, வாங்க கேட்டுச் சொல்லுங்கப்பா..?

    அன்புடன்,
    அபூ முஹை

  39. அபூ முஹை

    //நன்றி சகோதரர் அபுமுஹை
    ஏன் அவ்வாறு கூறுகிறீர்கள் என்று தெரிந்துகொள்ளலாமா//
    – எழில்

    நீங்கள் கேட்ட கேள்விக்கும் சேர்த்தே இங்கு தெளிவு கிடைக்கும்.

    //சகோதரர் எழில் அவர்கள் சற்று அவகாசம் எடுத்து இவற்றையெல்லாம் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். தெரியாது என்றால் அதைத் தெரியப்படுத்துங்கள், நோன்புப் பெருநாள் விடுமுறை கழிந்து தனிப்பதிவில் அவற்றை விளக்குவோம். இன்ஷா அல்லாஹ்!// – அபூ முஹை

    அன்புடன்,
    அபூ முஹை

  40. இப்னு பஷீர்

    //அப்போது உங்கள் சமூகத்தில் 4 மனிதர்கள் (ஒரு சில குறைகளும் ஒரு சில நிறைகளும் கொண்ட மனிதர்கள்) தன்னை உண்மையான இறைதூதர் என்று அழைத்துக்கொண்டு போதிக்கிறார்கள்.

    நீங்கள் யாரை உண்மையான இறைதூதர் என்று பின்பற்றுவீர்கள்? எப்படி? ஏன்?//

    ‘இறைத்தூதர்கள் எப்படிப் பட்டவர்கள்? ‘

  41. வாசகன்

    ராஜ் said…
    //உங்கள் சமூகத்தில் 4 மனிதர்கள் (ஒரு சில குறைகளும் ஒரு சில நிறைகளும் கொண்ட மனிதர்கள்) தன்னை உண்மையான இறைதூதர் என்று அழைத்துக்கொண்டு போதிக்கிறார்கள்.

    நீங்கள் யாரை உண்மையான இறைதூதர் என்று பின்பற்றுவீர்கள்? எப்படி? ஏன்? //

    ‘காலத்தை’ தன் கரத்தில் வைத்திருக்கிற இறைவன் தன் தூதருடைய விடயத்தில் அத்தாட்சிகளை அனுப்பி உண்மையை நிலைநாட்டுகிறான். அநேக தீர்க்கதரிசிகள் இறை அத்தாட்சிகளால் நிரூபிக்கப்பட்டிருக்கிறார்கள். //

    மிஸ்டர் எழில்,
    ராஜ் அளித்த பதில்கள் உங்களுக்கு ஏற்புடையதாக இல்லையா?
    இறைவனை நீங்கள் நம்பினால் தன்னுடைய இறைத்தூதரை அவன் உண்மைப்படுத்துவான் என்பதும் விளங்கும். போலிகளும் வரலாற்றில் தூக்கி எறியப்பட்டுத்தான் இருக்கிறார்கள்.

    உங்களுடைய இக்கேள்வியின் மூலம் என்ன வாதிக்க/சாதிக்க வருகிறீர்கள்?

    இப்னு பஷீர் என்பவரும் தன் புதிய பதிவில் அருமையாக விளக்கமளித்துள்ளாரே, பார்த்தீர்களா?

  42. “You are either with us or with them”. 9/11 -க்குப் பிறகு ஜார்ஜ் புஷ் சொன்ன இந்த வாக்கியத்தின் பொருளை நான் விளக்க வேண்டியதில்லை. மதத்தின் பெயரால் ஒசாமா செய்ததால் அந்த மதத்தையும், மதத்தைச் சார்ந்தவர்களையும், விரோதிகளாக அவர் பார்த்தார்; அதே போல்தான் எல்லோரும் பார்க்க வேண்டும் என்றும் எதிர்பார்த்தார். அவரின் இந்தக் கூற்றுக்கு உலகத்தின் பல நாட்டவரும், பல நாட்டுத் தலைவர்களும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். அவரைப் பொருத்தவரை அவருக்குச் சரியானதாகத் தோன்றும் ஒன்று, உலகத்தில் எல்லோருக்கும் அதே போல்தான் தோன்ற வேண்டுமென அவர் எதிர்பார்த்ததை உலகம் ஒப்புக் கொள்ளவில்லை. இல்லையா?

    இப்போது உங்கள் பதிவின் இரண்டாம், மூன்றாம் பத்திகளை வாசித்துப் பாருங்கள். இந்த இரண்டிற்கும் என்ன வித்தியாசம் – ஒன்று மனிதன் கூறியது; இன்னொன்று கடவுளால் கூறப்பட்டதாக நம்பிக்கையாளர்களால் கருதப்படுவது என்பதைத் தவிர. இரண்டுமே கருத்துக்கள் என்ற வரையில் ஒன்றுதானே? ஆனால் ஒன்றை தவறென்று கூறி, இன்னொன்றை எப்படி புனித வார்த்தையாகக் கொள்ளுவது?

  43. அபூ முஹை

    தருமி உங்கள் மறு வருகைக்கு நன்றி!

    //இப்போது உங்கள் பதிவின் இரண்டாம், மூன்றாம் பத்திகளை வாசித்துப் பாருங்கள். இந்த இரண்டிற்கும் என்ன வித்தியாசம் – ஒன்று மனிதன் கூறியது; இன்னொன்று கடவுளால் கூறப்பட்டதாக நம்பிக்கையாளர்களால் கருதப்படுவது என்பதைத் தவிர. இரண்டுமே கருத்துக்கள் என்ற வரையில் ஒன்றுதானே? ஆனால் ஒன்றை தவறென்று கூறி, இன்னொன்றை எப்படி புனித வார்த்தையாகக் கொள்ளுவது?// – தருமி.

    நீங்கள் எழுதியதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ”விரும்புவர் நம்பட்டும், விரும்புவர் மறுக்கட்டும்” என்ற பிறகு இது இறைவனால் வார்த்தைகள்” என நம்புவதும், நிராகரிப்பதும் அவரவர் சுய சிந்தனைக்கு. ஆனால் இங்கே எஞ்சியிருப்பது தர்க்க ரீதியாகவும், அறிவுப்பூர்வமாகவும் எது சரி? என்பது பற்றி வாருங்கள் பேசலாம்.

    பேசலாமெனில், மறுமையை நம்புவதில், நம்பி செயலாற்றுவதிலும் மனித குலத்துக்கு அளப்பறிய நன்மைகள் இருக்கின்றன என்பது என் கருத்து. (நான் முஸ்லிம் என்பதாலும் மறுமையை சரிகாணும் நிர்ப்பந்தம் எனக்கு இருக்கிறது என்று நீங்கள் எண்ணலாம்) இது பற்றி இதே பதிவின் ரவி சிரினிவாஸ் பின்னூட்டத்தில் மறுமையை நம்பாதவர்களை நோக்கி சில கேள்விகள் வைத்திருக்கிறேன், நீங்கள் மறுமையை நம்பாதவராக இருந்தால் அதற்கான விளக்கங்களை எனக்கு அறியத் தாருங்கள்! அப்படியே பாவம், புண்ணியம் இரண்டும் சமமாகி விடுமா? நல்லவன், கெட்டவன் இருவரும் சமமாகி விடுவார்களா? என்பதையும் சேர்த்தே சொல்லி விடுங்கள்!

    மறுமையை நம்புவதால் மனித குலத்துக்கு என்னென்ன நன்மைகள்? என்பதை மீண்டும் விளக்குகிறேன், நன்றி!

    அன்புடன்,
    அபூ முஹை

  44. மன்னிக்கணும்; நீங்க சொல்ல வர்ரது எனக்குப் புரியவில்லை.

    //மறுமையை நம்பாதவர்களை நோக்கி சில கேள்விகள் வைத்திருக்கிறேன்,..//

    நானும் இதைப் பற்றிய என் கருத்தை, ஆபிரஹாமிய மதங்கள் சொல்லும் நித்திய பரிசு / தண்டனை பற்றிய என் கருத்தை கிறித்துவத்திற்கு எதிரான என் பதிவில் சொல்லியுள்ளேன். காண்க.

  45. தொடர்கிறேன்.

    நான் கேட்ட கேள்வியே வேறல்லவா? அதற்கும் நீங்கள் அளித்துள்ள பதிலில் ஏதும் விடைகாண முடியவில்லை.

    இன்னொரு சந்தேகம்; உங்களிடம் பதில் இருக்குமென நினைக்கிறேன். பைபிள்-குரான் சம்பந்தப் பட்டது. தனி மயிலில் அனுப்ப முயல்கிறேன். நன்றி

  46. அபூ முஹை

    //தொடர்கிறேன்.

    நான் கேட்ட கேள்வியே வேறல்லவா? அதற்கும் நீங்கள் அளித்துள்ள பதிலில் ஏதும் விடைகாண முடியவில்லை.//

    முதல் பத்தி.

    //இஸ்லாம் மார்க்கத்தின் கொள்கையை வாழ்க்கை நெறியாக் கொண்டவர்கள் ”முஸ்லிம்கள்” என்றும், இஸ்லாத்தின் கொள்கையை ஏற்காதவர்கள் ”காஃபிர்கள்” அதாவது, இஸ்லாத்தை நிராகரித்தவர்கள் – மறுத்தவர்கள் என்றும் இஸ்லாம் குறிப்பிடுகிறது. இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட முஸ்லிம்கள், இஸ்லாத்தின் சட்டங்களைப் பின்பற்றிச் சரியாக உலக வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் அதற்குப் பகரமாக மறுமையில் சொர்க்கத்தை வழங்குவதாக இறைவன் வாக்களித்திருக்கிறான்.//

    இரண்டாம் பத்தி.

    //இஸ்லாம் மார்க்கத்தை நிராகரித்தவர்கள் – மறுத்தவர்கள் இஸ்லாத்தின் கட்டளைகளைப் புறக்கணித்து, தங்கள் மனோ இச்சைகளைப் பின்பற்றி இவ்வுலக வாழ்க்கையை அமைத்துக் கொண்டதால் இவர்கள் இறைவனை நிராகரித்தவர்கள் என்பதால் மறுமையில் தண்டனை பெறுவார்கள் என்பதையும் இறைவன் வாக்களித்திருக்கிறான்.//

    தருமி நீங்கள் குறிப்பிட்ட இரண்டு பத்திகளும் இறைவன் கூறியதாகத்தான் எழுதப்பட்டுள்ளது. நம்பிக்கைக் கொண்டவர்களுக்கு இஸ்லாம் இறைவனின் வார்த்தைகள். நிராகரித்தவர்களுக்கு இஸ்லாம் முஹம்மது என்ற மனிதரின் வார்த்தைகள் என்று நீங்கள் சொல்வதாகப் புரிந்து கொண்டேன். உங்கள் எழுத்தும் அப்படித்தான் இருக்கிறது. அப்படியில்லையா? அப்போ நான் தவறாக விளங்கிக் கொண்டேனா?

    //இன்னொரு சந்தேகம்; உங்களிடம் பதில் இருக்குமென நினைக்கிறேன். பைபிள்-குரான் சம்பந்தப் பட்டது. தனி மயிலில் அனுப்ப முயல்கிறேன். நன்றி//

    அனுப்புங்கள் தெரிந்தால் விளக்கம் தருகிறேன். பொதுவானது என்றால் மறுமொழியிலேயே நீங்கள் பதியலாம் நன்றி.

    அன்புடன்,
    அபூ முஹை

  47. 1. Revelation என்ற பைபிளில் இருக்கும் பகுதி குரானிலும் உண்டா?

    2. எப்படியிருப்பினும், இப்பகுதி பற்றிய இஸ்லாமியர்களின் கருத்து யாது?

    இன்னுமொரு கேள்வியும் உண்டு; உங்கள் பதிலைப் பொருத்து அதை அமைக்க வேண்டியதுள்ளாதால் பிறகு கேட்கிறேன்.

  48. அபூ முஹை

    //1. Revelation என்ற பைபிளில் இருக்கும் பகுதி குரானிலும் உண்டா?//

    நீங்கள் கேட்டுள்ளது போல் திருக்குர்ஆனில் அதற்கெனத் தனிப் பகுதியில்லை!

    //2. எப்படியிருப்பினும், இப்பகுதி பற்றிய இஸ்லாமியர்களின் கருத்து யாது?//

    திருக்குர்ஆன் முழுவதுமே வெளிப்பாடுதான் – வேத வெளிப்பாடு. இறைவனிடமிருந்து பெற்ற வஹி எனும் இறைச் செய்தியை மனிதர்களுக்கு தெரிப்படுத்துவது, இதுதான் முஸ்லிம்களின் கருத்து!

    ”நூஹுக்கும் அவருக்குப் பின் வந்த நபிமார்களுக்கும் வஹி அறிவித்தது போலவே உமக்கும் வஹி அறிவித்தோம்” (திருக்குர்ஆன், 004:163)

    மேலும் ஹதீஸ் நூல்களில் வஹி – வெளிப்பாடு பற்றிய பகுதிகள் இடம் பெற்றுள்ளது. அது, ஹதீஸ் நூல்களைத் தொகுத்த ஆசிரியர்கள் அவ்வாறுத் தலைப்பிட்டு அந்தப் பாடங்களை இடம் பெறச் செய்திருக்கிறார்கள். நன்றி!

    அன்புடன்,
    அபூ முஹை

  49. Revelation 13:16-17
    He causes all, both small and great…
    என்று ஆரம்பிக்கும் வாசகங்கள் பற்றி உங்கள் கருத்து..?

  50. அபூ முஹை

    தருமி, நீங்கள் பொடி வெச்சு எழுதுவதைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு நான் புத்திசாலி இல்லை! எதுவாக இருந்தாலும் நேரடியாக விளக்கமாக எழுதுங்கள்.

    ”வானங்களுக்கும், பூமிக்கும் இறைவன் யார்?” என்று (முஹம்மதே) கேட்டு, அல்லாஹ் என்று கூறுவீராக! ”அவனன்றி பாதுகாவலர்களைக் கற்பனை செய்து கொண்டீர்களா? அவர்கள் தமக்கே நன்மை செய்யவும், தீமை செய்யவும் ஆற்றல் பெற மாட்டார்கள்” என்று கூறுவீராக! ”குருடனும், பார்வையுள்ளவனும் சமமாவார்களா? இருள்களும், ஒளியும் சமமாகுமா? அவர்கள் அல்லாஹ் படைத்ததுப் போல் படைத்து அதன் காரணமாக படைத்தது யார்? என்று இவர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டு விட்டதா? ஒவ்வொரு பொருளையும் அல்லாஹ்வே படைத்தவன். அவன் தனித்தவன், அடக்கியாள்பவன்” என்று கூறுவீராக!

    ”வானத்திலிருந்து அவன் தண்ணீரை இறக்கினான். அது வாய்க்கால்களின் அளவுக்கேற்ப ஓடுகிறது. மிதக்கும் நுரைகளை வெள்ளம் சுமக்கிறது. நகை அல்லது தளவாடம் செய்வதற்காக நெருப்பில் அவர்கள் உருக்குவதிலும் இது போன்ற நுரைகள் ஏற்படுகிறது. இவ்வாறே உண்மைக்கும், பொய்க்கும் அல்லாஹ் உதாரணம் காட்டுகிறான். நுரையோ மறைந்து விடுகின்றது. மனிதர்களுக்குப் பயன் தரக் கூடியதோ நிலத்தில் தங்கி விடுகிறது. அல்லாஹ் இவ்வாறே உதாரணங்களைக் கூறுகிறான். (திருக்குர்ஆன், 013:016,017)

    நீங்கள் குறிப்பிட்டுள்ள 013வது அத்தியாயத்தின் 016,017வது திருக்குர்ஆன் வசனங்கள். இதில் உங்களுக்கு என்ன தெரிய வேண்டுமென்பதை சும்மா உடைச்சு சொல்லுங்கள் நன்றி!

    அன்புடன்,
    அபூ முஹை

  51. நான் கேட்டது பைபிளின் வெளிப்: 13: 16-17.
    நீங்கள் குரானிலிருந்து அந்த மேற்கோளைக் கொடுத்துள்ளீர்கள் என்று நினைக்கிறேன்.

    //..பொடி வெச்சு எழுதுவதைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு நான் புத்திசாலி இல்லை!..//

    அடடே! அப்போ நீங்களும் என் மாதிரிதானா? :)

    விசயம் என்னென்னா எனக்கு ஒரு மயில் வந்தது. அது பவர் பாயிண்டில் வந்திருக்கிறது. அதை உங்களுக்கு மயிலில் அனுப்பி உங்கள் கருத்தைக் கேட்க நினைத்தேன். அதனால் தான் முதலில் தனி மயிலி என்று கூறியிருந்தேன். உங்களுக்கு அதில் ஏதும் பிரச்சனை உண்டா என்னவென்று தெரியவில்லை. அதனால்தான் முதலில், பைபிளில் உள்ளது உங்கள் நூலிலும் இருக்கிறதா என்று தெரிந்து கொண்டால்தான் அதை உங்களுக்கு பார்வர்ட் செய்வதில் அர்த்தம் இருக்குமா இல்லையா என்று தெரியும். அதனால்தான் இந்த தலையைச் சுத்தி மூக்கைத் தொடும் முயற்சி.

  52. அபூ முஹை

    //அடடே! அப்போ நீங்களும் என் மாதிரிதானா? :)//

    இப்போ புரிந்து கொண்டீர்களா? நான் உங்கள மாதிரி இல்லே! உங்களுக்கும் மேல்! :)))

    பைபிள் பத்தி எதுவும் தெரியாத ஞான சூன்யம் நான். அதனால் நீங்கள் குறிப்பிட்ட வெளிப்பாடு, 13: 16-17 பைபிள் வசனங்களை தமிழில் அறியத்தாருங்கள். இன்ஷா அல்லாஹ் திருக்குர்ஆனோடு ஒப்பிட்டுப் பார்த்து விளக்கம் எழுதுகிறேன்.

    மேலும், இது தனி மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளும் அளவுக்கு நம் இருவரின் தனிப்பட்ட விஷயமில்லை. இரு மதங்கள் சம்பந்தப்பட்டது என்பதால் அதை பொதுவாக வைத்துப் பேசலாம் என்பதே என் விருப்பம். மற்றபடி நீங்கள் புரிந்து கொண்ட மாதிரி :) எனக்குப் பிரச்சனை எதுவுமில்லை நன்றி!

    அன்புடன்,
    அபூ முஹை

  53. ////அடடே! அப்போ நீங்களும் என் மாதிரிதானா? :)//

    இப்போ புரிந்து கொண்டீர்களா? நான் உங்கள மாதிரி இல்லே! உங்களுக்கும் மேல்! :)))//

    விடுங்க.. இந்த விஷயத்துல நமக்குள்ள எதுக்குப் போட்டி !!:)

    பிரச்சனை என்னவென்றால் என் கேள்வி ஒரு பவர் பாய்ண்டில் இருக்கிறதே..என்பதுதான்.

    அதற்குப் பிறகு வருவோம். பைபிளின் அந்த வாக்கியங்களைத் தருகிறேன். அதற்கு ஒப்பாக குரானில் இருக்கிறதா என்று மட்டும் சொன்னால் பயனுள்ளதாயிருக்கும்.

    வெளிப்; 13; 16-17

    “16. சிறியோர், பெரியோர், செல்வர், வறியவர், உரிமைக் குடிமக்கள், அடிமைகள் ஆகிய அனைவரும் அவரவர் வலக் கையிலாவது நெற்றியிலாவது குறி ஒன்று இட்டுக் கொள்ளுமாறு செய்தது.

    17. இவ்வாறு அந்த விலங்கைன் பெயரையோ அப்பெயருக்குரிய எண்ணையோ குறியாக இட்டுக் கொள்ளாத எவராலும் விற்கவே வாங்கவோ முடியவில்லை.

    18.இதைப் புரிந்து கொள்ள ஞானம் தேவை. புரிந்து கொள்ளும் ஆற்றல் கொண்டோர் அவ்விலங்குக்குரிய எண்ணைக் கணித்துப் புரிந்து கொள்ளட்டும். அந்த எண் ஓர் ஆளைக் குறிக்கும். அது அறுநூற்று அறுபத்தாறு.

  54. அபூ முஹை

    //வெளிப்; 13; 16-17

    “16. சிறியோர், பெரியோர், செல்வர், வறியவர், உரிமைக் குடிமக்கள், அடிமைகள் ஆகிய அனைவரும் அவரவர் வலக் கையிலாவது நெற்றியிலாவது குறி ஒன்று இட்டுக் கொள்ளுமாறு செய்தது.

    17. இவ்வாறு அந்த விலங்கைன் பெயரையோ அப்பெயருக்குரிய எண்ணையோ குறியாக இட்டுக் கொள்ளாத எவராலும் விற்கவே வாங்கவோ முடியவில்லை.

    18.இதைப் புரிந்து கொள்ள ஞானம் தேவை. புரிந்து கொள்ளும் ஆற்றல் கொண்டோர் அவ்விலங்குக்குரிய எண்ணைக் கணித்துப் புரிந்து கொள்ளட்டும். அந்த எண் ஓர் ஆளைக் குறிக்கும். அது அறுநூற்று அறுபத்தாறு. //

    மேற்கண்ட, பைபிள் கூறும் கருத்தில் திருக்குர்ஆனில் வசனங்கள் இல்லை!

    அன்புடன்,
    அபூ முஹை

  55. நன்றி
    தடங்கலுக்கு வருந்துகிறேன் :)

  56. இன்னொரு சந்தேகம்; அதை இங்கே கேட்பதில் ஒரு வசதி. அதனால் இந்தப் பழைய பதிவுக்கே, தொடர்ச்சியாக இருக்கட்டுமே என்று வந்துள்ளேன்.

    இஸ்லாமிய பதிவர்களின் பதிவுகளிலிருந்து அறிந்தவை: இறக்கும் போது நபி சொத்துக்கள் ஏதுமற்றவராக, எளியவராக, படுத்த வெறும் பாயின் அழுத்தங்கள் முதுகில் பதிந்தவராக இருந்தார்; கடனாளியாக இறக்கக் கூடாதென்பதற்காக கடைசியில் கையில் இருந்த சொற்ப காசை தனக்குக் கடன் கொடுத்தவர்களிடம் திரும்பக் கொடுத்தார்.

    சரியாகச் சொல்லியுள்ளேனா?

    மேலும் அறிந்தவை: முஸ்லீம் ஒன்றுக்கு மேல் பெண்களை மணம் செய்யலாமென்றாலும் அவர் தான் மணக்கப் போகும் பெண்ணை / பெண்களை நல்லபடியாகக் காப்பாற்றும் அளவுக்கு வசதியோடு இருக்கவேண்டியது அவசியம்.

    (கேள்வி: 1)அந்த அளவு தரித்திரத்தில் வாழ்ந்தவரென்றால் அவரால் எப்படி அத்தனை பெண்களை மனைவியாக்க முடிந்தது? அது தடை செய்யப்பட்டதல்லவா?

    நபி இறந்த பிறகு அவருக்குப் பின் வந்தவர்கள் நபிக்கு வழித்தோன்றல்கள் என்று யாரையும் சொல்ல முடியாது. அதனால் அவரது சொத்தின் மேல் அவரது மனைவியர்களுக்கு எந்த வித பாத்தியதையும் கிடையாது என்று சொல்லிவிட்டதாகவும் வாசித்தேன்.

    (கேள்வி: 2)இறந்தபிறகு தர்க்கம் வரும் அளவு சொத்தை விட்டு விட்டுச் சென்று விட்டதாகத் தெரிகிறதே? பரம ஏழையாயிருந்து இறந்ததாகச் சொல்லப்பட்டவரிடம் எப்படி dispute வரும் அளவு சொத்து?

  57. அபூ முஹை

    தருமி உங்கள் வரவுக்கு நன்றி!

    முந்தாநாள் அனுமதித்தப் பின்னூட்டம் இன்றுதான் தமிழ் மணம் திரட்டியில் தெரிகிறது உங்கள் கேள்விக்கு இங்கு விளக்கம் எழுதியுள்ளேன்!

    அன்புடன்,
    அபூ முஹை

  58. Any muslim can have other communities “Prasatham” like LADDU?

    warm/regards,

    Abdul Kareem

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *