Featured Posts
Home » பொதுவானவை » சட்டத்தின் முன் அனைவரும் சமம்?

சட்டத்தின் முன் அனைவரும் சமம்?

அரியவகை மான்களை வேட்டையாடிதால் இந்தி நடிகர் சல்மான்கானுக்கு ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையை ஜோத்பூர் நீதிமன்றம் விதித்துள்ளது. இதை முன்னாள் மத்திய பிராணி அமைச்சர் மேனகா காந்தியும் ‘மிருகாபிமான’ மனிதர்களும் வரவேற்றுள்ளார்கள்!

நாகரிகச் சமூகத்தில் மனித உயிர், மற்ற உயிர்களைவிட மதிப்புள்ளதாகக் கருதப்படுகிறது! இதே சல்’மான்’கான் சில வருடங்களுக்கு முன் குடித்து விட்டு காரை வேகமாக ஓட்டி ஒரு மனிதனைக் கொன்றதாகப் படித்த நினைவு. அதற்கு என்ன தண்டனை பெற்றார் என்று தெரியவில்லை!

ஜோத்பூர் நீதிபதியின் பார்வையில் மானின் உயிர் அரியதாகத் தெரிந்துள்ளது. ஒருசில மான்களைக் கொன்றதற்கே ஐந்து வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கும் நமது குற்றவியல் சட்டங்கள், குஜராத்திலும் மும்பையிலும் ஆயிரக்கணக்கான மனித உயிர்களைக் கொன்ற மாபாதகர்களுக்கும் கடும்தண்டனை வழங்கும் என்று நம்புவோமாக!

பயங்கர ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருந்ததாகவும் மும்பை குண்டு வெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டக் குற்றவாளிகளுக்கு உதவியதாகவும், வழக்கிற்கான ஆதாரங்களை மறைக்க முயன்றதாகவும் சஞ்சய்தத் என்ற இந்தி சினிமா நடிகருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டது. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு, இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டு அவரும் வீட்டுக்குப் போய் விட்டார்!

வீட்டுக்கு வீடு சூலம் வழங்கியும்,வாள், வேல், அம்பு மற்றும் துப்பாக்கிகளை வைத்து ‘ஸாகா’ எனும் பயங்கர ஆயுதப்பயிற்சியை பள்ளி மைதானங்களில் தீவிரவாத சங்பரிவாரத் தொ(கு)ண்டர்களுக்கு பகிரங்கமாக வழங்கி வருவது சட்டத்தின் பார்வையில் குற்றமாகப் படவில்லையா?

ஊடகங்களால் பரபரப்பாகப் பேசப்பட்டக் குற்றவாளிகள் பிரபலங்களாக இருப்பதனால், தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி, சட்டத்தின் ஓட்டைகள் வழியாக தண்டனைகளிலிருந்து தப்பி விடுகிறார்கள்.

கோவை குண்டு வெடிப்பு வழக்கைப் பற்றியே ஊடகங்கள் முன்னிலைப் படுத்திக் கொண்டிருந்தன. இந்த சைக்கில் கேப்பில் ஜீவஜோதியின் கணவர் கொல்லப்பட்ட வழக்கிலிருந்து, போதுமான ஆதாரங்கள் இல்லாததனால் சரவணபவன் ராஜகோபால் விடுவிக்கப்பட்டார்!

ஜார்கண்ட் முக்தி மோட்சா கட்சியின் தலைவர் சிபுசோரனின் உதவியாளர் கடத்திக் கொல்லப்பட்ட வழக்கில் முதல் குற்றவாளியாகக் கருதப்பட்டு, ஜார்கண்ட் விரைவு நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சிபுசோரன், அதை எதிர்த்து டெல்லி உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்து க்டந்த 22 ஆகஸ்ட் 2007 இல் கொலை வழக்கிலிருந்து விடுவிக்கப் பட்டிருக்கிறார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி “பிரேதப் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது கொலை செய்யப்பட்ட சிபுசோரனின் உதவியாளரின் உடல்தான் என்பதை அரசுத் தரப்பு சரிவர நிரூபிக்கவில்லை” என்பதைக் காரணமாகச் சொல்லி விடுவித்திருக்கிறார்! (“கொலை செய்யப்பட்டுச் செத்துப் போனவன் என் மகனே அல்ல” என்று ஒரு தந்தை எழுதிக் கொடுத்த நிகழ்வு இங்கு உங்களுக்கு நினைவுக்கு வந்து தொலைத்தால் அதற்கு நான் பொறுப்பாளி அல்ல:-).

குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத வழக்குகளில் “காற்றைக் கைது செய்” (Arrest the wind) என்ற வேடிக்கையான குறிப்புடன் வழக்கு முடிவுக்குக் கொண்டு வரப்படும்! சிபுசோரன் மற்றும் ராஜகோபால் வழக்கில் ‘காற்றைக் கைது’ செய்தார்களா? என்று தெரியவில்லை!

சங்கரராமன் கொலை வழக்கில் முதன்மைக் குற்றவாளியாக இருந்து கொண்டே பகுதிநேரத்தொழிலாக அருளாசி வழங்கிக் கொண்டிருக்கும் காஞ்சி மடாதிபதி சங்கராச்சாரியாரையும் விடுவித்து விட்டால், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று வழக்கம் போல் சொல்லிக்
கொள்ளலாம்.

“சங்கராச்சாரியாரின் பக்தன் என்பதால் தன்னால் அவர் மீதான வழக்கை விசாரிக்க மனம் ஒப்பவில்லை” என்று ‘மக்கள்மன்ற அவமதிப்பு’ செய்தார் உச்ச நீதிமன்றநீதிபதி ஒருவர்.

முன்னாள் நடிகையும் முதல்வருமான ஜெயலலிதாவின் ரசிகர் யாராவது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்து தொலைத்து விட்டால் ஜெ.யும் அனைத்து வழக்குகளிலிருந்தும் விடுவிக்கப்படலாம்.

அதேபோல், “சஞ்சய் தத்தின் பரமரசிகன் என்பதால் அவரை விசாரிக்க முடியாது” என்றும்,”சரவணபவனில் விற்கப்படும் 14 இட்லிகளை விரும்பிச் சாப்பிட்ட விசுவாசத்தினால் ராஜகோபாலைத் தண்டிக்க மனம் ஒப்ப வில்லை” என்றும் அந்தந்த நீதிபதிகள் சொல்லாததை, ‘விடுபட்டவை ‘ லிஸ்டில் நாம் சேர்த்து விடத்தான் வேண்டும்.

3 comments

  1. சுல்தான்

    //சங்கராச்சாரியாரின் பக்தன் என்பதால் தன்னால் அவர் மீதான வழக்கை விசாரிக்க மனம் ஒப்பவில்லை’ என்று ‘மக்கள்மன்ற அவமதிப்பு’ செய்தார் உச்ச நீதிமன்றநீதிபதி ஒருவர்.//
    அவருக்கு ஒன்னும் தண்டணையில்லையா?

    //முன்னாள் நடிகையும் முதல்வருமான ஜெயலலிதாவின் ரசிகர் யாராவது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்து தொலைத்து விட்டால் ஜெ.யும் அனைத்து வழக்குகளிலிருந்தும் விடுவிக்கப்படலாம்.//
    ‘ஜெ’க்கு நல்ல ஐடியா கொடுத்துள்ளீர்கள்.

    //அதேபோல்இ ‘சஞ்சய் தத்தின் பரமரசிகன் என்பதால் அவரை விசாரிக்க முடியாது’ என்றும்இ’சரவணபவனில் விற்கப்படும் 14 இட்லிகளை விரும்பிச் சாப்பிட்ட விசுவாசத்தினால் ராஜகோபாலைத் தண்டிக்க மனம் ஒப்ப வில்லை’ என்றும் அந்தந்த நீதிபதிகள் சொல்லாததை, ‘விடுபட்டவை ‘ லிஸ்டில் நாம் சேர்த்து விடத்தான் வேண்டும்.//
    ஒரு வெறுப்பான :)))))))))

  2. மிகச்சரியான தலைப்பு கொடுத்து இருக்கிறீர்கள் நல்லடியார். சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்பது சொல்லடல் தானே தவிர உண்மை இல்லை. சிறையில் சுப்ரமனி (அதுதான் நம்ம ஜெயெந்தரவாள்)கையில் கம்புடன் இருந்ததும், ஞாயிற்று கிழமை நீதி மன்றம் க்Kடியதும், நீதிபதி மாட்டேன் என்று சொன்னபோது இந்திய நீதிமன்றம் சந்தி சிரித்ததும் தெரிந்த செய்தி தான். உண்மையை சொன்னால் வா(ய்மை)யே வெல்லும். இது தான் நிதர்சனம்.

  3. நல்லடியார்

    //….சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்பது சொல்லடல் தானே தவிர உண்மை இல்லை….. உண்மையை சொன்னால் வா(ய்மை)யே வெல்லும். இது தான் நிதர்சனம். //

    Abusithara,

    பீகாரில் பிடிபட்ட சங்கிலித் திருடனைப் பொதுமக்களும் போலீசும் சேர்ந்து நையப்புடைத்தனர். உச்சகட்டமாக அவனை மோட்டார் பைக்கில் கட்டி வீதியில் அடித்து இழுத்துச் சென்றனர். சங்கிலியை பறிகொடுத்தப் பெண் அரண்டு போய் பார்த்துக் கொண்டிருந்தார். திருடனைக் கொடுமைப் படுத்தியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாட்னா காவல் துறை உயரதிகாரி பேட்டி கொடுத்தார்.

    1) சந்தேகத்தின் பேரில் அழைத்துச் செல்லும் பலரும் குற்றத்தை ஒப்புக் கொள்ள என்னென்ன வழிமுறைகளில் சித்திரவதைச் செய்யப்படுகிறார்கள் என்பது நாடறிந்த உண்மை. வீதியில் நடந்தால் மனித உரிமை மீறல்; அதே காவல்நிலையத்தில் நடந்தால் விசாரணை!

    2) குற்றவாளிக்கு தகுந்த தண்டனைகள் வழங்கப்படாத காரணத்தினால்தான் சட்டத்தை, பாதிக்கப்பட்டவர்கள் கையிலெடுத்து தண்டிக்கிறார்கள். இதுவும் தவறே! திருடினால் மணிக்கட்டை வெட்ட வேண்டும் என்பது ஷரீஅத் சட்டம். பல காரணிகளையும் நுணுக்கங்களை ஆய்ந்த பிறகே இத்தீர்ப்பும் வழங்க முடியும்; இஸ்லாமிய நாடுகளிலேயே தற்போது பின்பற்றப் படுவதில்லை என்பதை அறிந்திருந்தும்,இதைக் காட்டுமிராண்டித்தனம் என்பார்கள் சில அறிவு ஜீவிகள்!

    இஸ்லாமிய குற்றவியல் தண்டனைகள் குற்றத்தினால் பாதிக்கப்பட்டவரின் பார்வையிலானவை என்பது குறைபார்வையாளர்களுக்குத் தெரிவதில்லை. திருட்டிற்காக தண்டிக்கப்பட்டிருக்க வேண்டிய திருடன், தற்போது மனித உரிமையாளர்களின் பார்வையில் அப்பாவி! இது சட்டத்தின் குறைபாடா? அல்லது மக்கள் மனோநிலையின் குறைபாடா?

    3) லாலு பிரசாத் பீகார் முதல்வராக இருந்திருந்து மேற்கண்ட சம்பவம் நடந்திருந்தால் சங்கப்ரிவாரங்களால் பாராளுமன்றமும் சட்டமன்றமும் ரணகளமாகி இருக்கும். ஆனால் பா.ஜ.க ஆசிபெற்ற நிதிஷ்குமார் முதல்வர் என்பதால் பா.ஜ.கவினரிடம் மயான அமைதி!

    பெரும்பாலும் வா(ய்மை)யே வெல்லும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *