Featured Posts
Home » நூல்கள் » இஸ்லாம் – நேற்று, இன்று, நாளை! (9)

இஸ்லாம் – நேற்று, இன்று, நாளை! (9)

பிளவுபட்ட தலைமை

முடியாட்சி தாபிக்கப்பட்டதினால் விளைந்த முதல் கேடு தலைமை இருகூறாகப் பிளவுபட்டமையாகும். அண்ணலாரதும் தொடக்க காலக் கலீபாக்களதும் ஆட்சிக்காலத்தில் முஸ்லிம் சமுதாயம் ஒரே தலைமையின் கீழ் இருந்தது. மத்திய அதிகாரபீடமே யாவற்றுக்கும் மேலானதாகத் திகழ்ந்தது. ஒழுக்கம், அறிவு, சமூகம், அரசியல் முதலிய அத்தனை வாழ்க்கைத் துறைகளும் அம்மத்திய அதிகார பீடத்தின் நேரடி மேற்பார்வையின் கீழ் இருந்தன. மக்களால் தெரிவு செய்யப்பட்டவரான கலீபாவே மதத் தலைவராகவும், ஆட்சியாளராகவும் விளங்கினார். அவர் மக்களின் உலகாயுத வாழ்க்கைத் துறையின் மேம்பாட்டுக்கு மட்டுமன்றி அவர்களின் ஆன்மீக உயர்வுக்கும் உழைத்தார். எல்லாவித இன்னல்கள் தோன்றும் போதும் அவரது உதவி நாடப்பட்டது. முஸ்லிம் சமுதாயம் பிரச்சினைகளை எதிர் நோக்கிய போதெல்லாம் அவரது மதியுரை பெறப்பட்டது. ஓர் ஆலோசனைச் சபை இவ்விடயங்களில் அவருக்கு உதவி புரிந்தது. ஆலோசனைச் சபை உறுப்பினர்களாக பயபக்தியும், மதிநுட்பமும் மிக்கோரே தெரிவு செய்யப்பட்டனர். எனினும் எவ்விடயத்திலும் கலீபா அவர்களது தீர்ப்பே முடிவானதாகக் கொள்ளப்பட்டது. ஒரு நிர்வாகியாகவும், நீதிபதியாகவும், மதபோதகராகவும், ஒழுக்கத்துறை வழிகாட்டியாகவும் அவர் பணியாற்றினார். குர் ஆனுக்கு அதிகார பூர்வமான விளக்கம் தரவும் அது குறிப்பிட்ட விடயங்களில் எவ்வாறு பிரயோகிக்கப் படவேண்டும் எனத் தீர்ப்பளிக்கவும் மக்கள் அவரையே எதிர்பார்த்தனர். அவர் அதிகாரத்தின் உச்சத்தில் அமர்ந்திருந்தாராயினும் சாதாரண முஸ்லிம்களைக் கூடத் தமக்குச் சமமானவர்களாகவே கருதி நடத்தினார். பொதுமக்கள் அனுபவிக்காத எந்த உரிமையையும் அவர் மட்டும் அனுபவிக்கவில்லை. சமுதாயத்தின் விவகாரங்களை நடத்துவதற்கான மிக உயர்ந்த அதிகாரம் அவருக்கு அளிக்கப் பட்டிருந்தது. எனினும் அவர் சாதாரண மக்களோடும் தங்கு தடையின்றி கலந்து பழகினார். அவர் ஒரு வல்லரசின் பெருந்தலைவராயினும் அவருக்கு மெய்காப்பாளர்களோ பரிவாரங்களோ இருக்கவில்லை.

இத்தகைய கிலாபத் ஆட்சி முறையிலிருந்து பரம்பரை முடியாட்சி முறைக்கு இஸ்லாமிய சாம்ராச்சியம் மாறியமை பேரிழப்பாகும். கலீபா அவர்களின் தவறுகளைச் சுட்டிக் காட்டும் சுதந்திரமும் அஞ்சா நெஞ்சமும் படைத்த தோழர்களின் இடத்தில் அரசரின் அடிவருடிகள் நியமிக்கப் பட்டனர். மனித கண்ணியம் மறைந்தது. அரசனின் அரசியல் அதிகாரம் எல்லையற்றதாகவும் முழுமையானதாகவும் இருந்தது. அதே வேளையில் நன்னடத்தையால் பெறப்படும் அவரது அதிகாரம் வீழ்ச்சியுற்றது. ஒழுக்கத்துக்கு எடுத்துக்காட்டாக அவர் திகழவில்லை என்பதை மக்கள் கண்டனர். அதனால் அவர்கள் மார்க்கத் துறை வழிகாட்டலுக்கு பிறரை நாடினர். இவ்வாறாக சன்மார்க்கத்துறை அதிகாரம் ஆலிம்கள், சூபிகள், சட்ட அறிஞர்கள் ஆகியோரின் கைக்கு மாறியது.

அரசியல் அதிகாரத்திலிருந்து சமய அதிகாரம் இவாறு பிரிக்கப்பட்டமை, முஸ்லிம் சமுதாயத்தில் பெரும் பிளவுகளை ஏற்படுத்தியது. முற்கால கிறிஸ்தவர்கள் சிந்தித்த அதே அடிப்படையில் முஸ்லிம்களும் சிந்திக்கத் தொடங்கி, அவர்கள் அரசுக்கும் சமயத்துக்கும் செய்ய வேண்டிய கடமைகளை வேறுபடுத்தி நோக்கினர். முஸ்லிம்களின் ஒழுக்கத்துறைக்குத் தலைமை தாங்கும் பொறுப்பு தமக்கு இனி இல்லை எனக் கருதிய அரசர்கள் சொகுசான, இடாம்பீக வாழ்க்கை மீது தமக்கு ஏற்பட்ட ஆசையைக் கட்டுப்படுத்த முடியாமல் அதற்கு இரையாகினர். அழகுற விளங்கிய முஸ்லிம் சமுதாயத்தின் எழில் தோற்றம் மாசுபடுத்தப்பட்டது. அதன் பின்னர் அச்சமுதாயம் தனது எழிற் கோலத்தை இதுவரை மீண்டும் பெறவில்லை.

ஏனைய அரசர்களுடன் ஒப்பிட்டுப் பார

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *