Featured Posts
Home » நூல்கள் » உண்மை உதயம் மாத இதழ் » ஆயிஷா(ரலி) மீதான அவதூறுச் செய்தியும்… அது கற்றுத் தரும் பாடங்களும்…

ஆயிஷா(ரலி) மீதான அவதூறுச் செய்தியும்… அது கற்றுத் தரும் பாடங்களும்…

அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் மீது விபச்சாரக் குற்றம் சுமத்தப்பட்டது. அந்நிகழ்வையொட்டி சூறா அந்நூரின் 10 வசனங்கள் அருளப்பட்டன. அந்நிகழ்வு மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதனாலேயே அல்லாஹ்வும் இதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளான். முதலில் இந்நிகழ்வு குறித்து ஆயிஷா(ரலி) அவர்கள் கூறுவதைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

ஆயிஷா(ரலி) அறிவித்தார், ‘இறைத்தூதர்(ச) அவர்கள் ஒரு பயணம் புறப்பட விரும்பினால் தம் மனைவிமார்களிடையே (எவரைப் பயணத்தில் தம்முடன் அழைத்துச் செல்வது எனத் தீர்மானித்திட) சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். அவர்களில் எவருடைய (பெயருள்ள) சீட்டு வருகிறதோ அவரைத் தம்முடன் அழைத்துக் கொண்டு பயணம் புறப்படுவார்கள். இவ்வாறே, அவர்கள் செய்த ஒரு புனிதப் போரின்போது (பயணத்தில் உடன் அழைத்துச் செல்ல) எங்களுக்கிடையே சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். என்னுடைய (பெயருள்ள) சீட்டு வந்தது. எனவே, நான் அவர்களுடன் (பயணம்) புறப்பட்டுச் சென்றேன். இது (பெண்கள் பர்தா முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்னும்) ஹிஜாபின் சட்டம் அருளப்பட்ட பிறகு நடந்ததாகும். நான் ஓர் ஒட்டகச் சிவிகையில் வைத்துச் சுமந்து செல்லப்படுவேன். நான் அதில் இருக்கும் நிலையிலேயே கீழே இறக்கி வைக்கப்படுவேன். நபி(ச) அவர்கள் அந்தப் போர் முடிந்து புறப்பட்ட போது நாங்கள் மதீனாவை நெருங்கிய வேளையில் இரவு நேரத்தில் (ஓரிடத்தில்) தங்கும்படி அறிவித்தார்கள்.

நான் (சிவிகையிலிருந்து) எழுந்து (மலஜலம் கழிப்பதற்காக மறைவிடம் தேடி) படையைக் கடந்து சென்றேன். என் தேவையை நான் முடித்த போது முகாமிட்டிருந்த இடத்தை நோக்கிச் சென்றேன். அப்போது என் நெஞ்சை நான் தொட்டுப் பார்த்த போது, (என் கழுத்திலிருந்த) யமன் நாட்டு முத்து மாலை யொன்று அறுந்து (விழுந்து) விட்டிருந்தது. எனவே, நான் திரும்பிச் சென்று என் மாலையைத் தேடலானேன்; அதைத் தேடிக் கொண்டிருந்தது (நான் சீக்கிரம் திரும்பிச் சென்று படையினருடன் சேரவிடாமல்) என்னைத் தாமதப்படுத்திவிட்டது. எனவே, என்னை எடுத்துச் சென்று ஒட்டகத்தில் வைப்பவர்கள், என் சிவிகைக்குள் நான் இருப்பதாக எண்ணிக் கொண்டு அதைச் சுமந்து சென்று, நான் வழக்கமாக சவாரி செய்கிற என் ஒட்டகத்தின் மீது வைத்துக் கட்டிவிட்டனர்.

(அந்தக் கால கட்டத்தில் பெண்கள் பருமனாக இன்றி மெலிந்தவர்களாக இருந்தனர். அவர்களுக்கு சதை போட்டிருக்கவில்லை. சிறிதளவு உணவே அவர்கள் உண்பார்கள்) எனவே, சிவிகையைத் தூக்கிய போது அதன் (இலேசான) கனத்தை மக்கள் வித்தியாசமாகக் கருதவில்லை. மேலும், நான் வயது குறைந்த சிறுமியாக இருந்தேன். அவர்கள் ஒட்டகத்தை (முன்னே) அனுப்பிவிட்டு நடக்கலானார்கள்.

படையினர் சென்ற பிறகு நான் (தொலைந்து போன) என் மாலையைப் பெற்றுக் கொண்டேன். பிறகு, நான் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு வந்தேன். அப்போது, அங்கு ஒருவரும் இல்லை. நான் ஏற்கனவே தங்கியிருந்த இடத்தைத் தேடிச் சென்று அங்கு அமர்ந்து கொண்டேன். படையினர், நான் காணாமல் போயிருப்பதைக் கண்டு என்னிடம் திரும்பி வருவார்கள் என்று நான் கருதினேன். நான் அப்படியே உட்கார்ந்தபடி இருந்த பொழுது என் கண்கள் (உறக்கம்) மிகைத்து நான் தூங்கி விட்டேன். ஸஃப்வான் இப்னு முஅத்தல் அல் ஸலமீ என்பவர் படையின் பின் அணியில் இருந்தார். அவர், நான் தங்கியிருந்த இடத்தில் காலை வரை தங்கி விட்டிருந்தார்.

அவர் (காலையில் விழித்தெழுந்தவுடன்) தூங்கிக் கொண்டிருந்த ஓர் உருவத்தை (என்னை)ப் பார்த்துவிட்டு என்னிடம் வந்தார். பர்தாவுடைய சட்டம் அருளப்படுவதற்கு முன்னால் அவர் என்னைப் பார்த்திருந்தார். (எனவே, என்னை அடையாளம் புரிந்து கொண்டு) அவர், “இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்” என்று கூறும் சப்தத்தைக் கேட்டு நான் கண் விழித்தேன். நாங்கள் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. அவரிடமிருந்து இந்த வார்த்தையைத் தவிர வேறெதையும் நான் கேட்கவும் இல்லை பிறகு, அவர் தம் ஒட்டகத்தை மண்டியிடச் செய்து, அதன் முன்னங்காலை (தன் காலால்) மிதித்துக் கொள்ள நான் அதன் மீது ஏறிக் கொண்டேன். அவர் என்னுடன் ஒட்டகத்தை ஒட்டிக் கொண்டு நடக்கலானார். இறுதியில் நாங்கள் படையினரை வந்தடைந்தோம்.

அதற்குள் அவர்கள் (மதிய ஓய்வுக்காக) நடுப்பகல் நேரத்தில் (ஓரிடத்தில்) தங்கி விட்டிருந்தார்கள். (இப்போது எங்களைக் கண்டு அவதூறு பேசி) அழிந்தவர்கள் அழிந்தார்கள். என் மீது அவதூறு (பிரசாரம்) செய்ய (தலைமைப்) பொறுப் பேற்றிருந்தவன் அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி ஸலூல் (எனும் நயவஞ்சகர்களின் தலைவன்) ஆவான். நாங்கள் மதீனாவை வந்தடைந்தோம். அங்கு ஒரு மாத காலம் நான் நோயுற்று விட்டேன். மக்களோ அவதூறு கற்பித்தவர்களின் சொல்லைப் பரப்பிக் கொண்டிருந்தார்கள்.

நான் நோயுற்று விடும் போது நபி(ச) அவர்கள் வழக்கமாக என்னிடம் காட்டுகிற பரிவை (இந்த முறை) நான் நோயுற்றிருக்கும் போது அவர்களிடம் காண முடியாமல் போனது எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவர்கள் வருவார்கள்; சலாம் சொல்வார்கள்; பிறகு, “அவள் எப்படி இருக்கிறாள்?” என்று கேட்பார்கள்; (பிறகு போய்விடுவார்கள்.) அவ்வளவுதான். (என்னைக் குறித்து வெளியே பேசப்பட்டு வந்த அவதூறில்) ஒரு சிறிதும் எனக்குத் தெரியாது. இறுதியில், நான் (நோயிலிருந்து குணமடைந்து விட, நானும் உம்மு மிஸ்தஹ்(ரலி) அவர்களும் நாங்கள் கழிப்பிடமாகப் பயன்படுத்தி வந்த ‘மனாஸிஉ” என்னுமிடத்தை நோக்கிச் சென்றோம். நாங்கள் இரவு நேரங்களில் மட்டும் இவ்வாறு செல்வோம்.

எங்கள் வீடுகளுக்கு அருகிலேயே கழிப்பிடங்களை அமைத்துக் கொள்வதற்கு முன்னால் நாங்கள் இவ்வாறு அங்கு சென்று கொண்டிருந்தோம். எங்களுடைய இந்த வழக்கம் வனாந்திரங்களில் வசித்து வந்த முற்கால அரபுகளின் வழக்கத்தை ஒத்ததாயிருந்தது. நானும் அபூ ருஹ்மின் மகளாகிய உம்மு மிஸ்தஹம் நடந்து முன்னால் சென்று கொண்டிருந்தோம்.

உம்மு மிஸ்தஹை அவர் அணிந்திருந்த கம்பளி அங்கி இடறியது. அப்போது அவர், ‘மிஸ்தஹ் நாசமாகட்டும்’ என்று கூறினார். நான், ‘மிக மோசமான சொல்லைச் சொல்லிவிட்டாய். பத்ருப் போரில் பங்கெடுத்த ஒரு மனிதரையா நீ ஏசுகிறாய்’ என்று கூறினேன். அதற்கு அவர், “அம்மா! அவர் என்ன சொன்னார் என்று நீங்கள் கேள்விப்படவில்லையா?” என்று கூறிவிட்டு, அவதூறு கற்பித்தவர்கள் சொன்ன (அபாண்டத்)தை எனக்குத் தெரிவித்தார். அதைக் கேட்டு என் நோய் இன்னும் அதிகரித்துவிட்டது. நான் என் வீட்டிற்குத் திரும்பி வந்த போது இறைத்தூதர்(ச) அவர்கள் என்னிடம் வந்து, “அவள் எப்படி இருக்கிறாள்?” என்று கேட்டார்கள். நான் “என் தந்தையரிடம் செல்ல எனக்கு அனுமதி கொடுங்கள்” என்று கேட்டேன்.

அப்போது நான் அவ்விருவரிடமிருந்தும் (உண்மையிலேயே அப்படியொரு வதந்தி உலவுகிறதா என்று விசாரித்து என் மீதான அவதூறுச்) செய்தியை உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பினேன். இறைத்தூதர்(ச) அவர்கள் எனக்கு அனுமதியளிக்கவே நான் என் தாய் தந்தையரிடம் சென்றேன்.

என் தாயாரிடம், ‘மக்கள் (என்னைப் பற்றி) என்ன பேசிக் கொள்கிறார்கள்?” என்று கேட்டேன். என் தாயார், ‘என் அன்பு மகளே! உன் மீது இந்த விஷயத்தை பெரிதுபடுத்திக் கொள்ளாதே. அல்லாஹ்வின் மீதாணையாக! சக்களத்திகள் பலரும் இருக்க, (தன்) கணவரிடம் பிரியத்துக்குரியவளாக இருக்கும் அழகுமிக்க பெண்ணொருத்தியைக் குறித்து அவளுடைய சக்களத்திகள் அதிகமாக (வதந்திகள்) பேசத் தான் செய்வார்கள். அவ்வாறு பேசாமலிருப்பது (பெரும்பாலும்) குறைவேயாகும்” என்று கூறினார்கள். நான், ‘சுப்ஹானல்லாஹ் (இறைவன் தூய்மையானவன்!) இப்படியா மக்கள் பேசிக் கொள்கிறார்கள்?’ என்று கேட்டேன். அன்றிரவை இடைவிடாமல் அழுது கொண்டும் தூக்கம் சிறிது மின்றியும் காலை வரை கழித்தேன்.

காலை நேரம் வந்தது. இறைத்தூதர்(ச) அவர்கள் தம் மனைவியை (என்னை)ப் பிரிந்து விடுவது குறித்து ஆலோசனை கேட்பதற்காக அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) அவர்களையும், உஸாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களையும் அழைத்தார்கள். அப்போது ‘வஹீ’ (தற்காலிகமாக) நின்று போயிருந்தது. உஸாமா(ரலி) அவர்களோ தம் உள்ளத்தில் நபி(ச) அவர்களின் மனைவிமார்கள் மீதிருந்த பாசத்தை அடிப்படையாகக் கொண்டு ஆலோசனை கூறினார்கள். ‘இறைத்தூதர் அவர்களே! தங்கள் துணைவியரிடம் நல்ல (குணத்)தைத் தவிர வேறெதையும் நான் அறிய மாட்டேன்” என்று அவர்கள் கூறினார்கள்.

அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) அவர்களோ (நபி(ச) அவர்களின் மனக் கவலையைக் குறைத்து ஆறுதல் கூறும் நோக்குடன்), ‘இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ் உங்களுக்கு எந்த நெருக்கடியையும் ஏற்படுத்தவில்லை. அவர் (ஆயிஷா) அன்றிப் பெண்கள் நிறையப் பேர் இருக்கின்றனர். பணிப் பெண்ணைக் கேளுங்கள். அவள் உங்களிடம் உண்மையைச் சொல்வாள்” என்று கூறினார்கள்.

எனவே, இறைத்தூதர்(ச) அவர்கள் (பணிப் பெண்ணான) பரீராவை அழைத்து, ‘பரீராவே! நீ ஆயிஷாவிடம் உனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் (செயல்) எதையாவது பார்த்திருக்கிறாயா?’ என்று கேட்டார்கள். அதற்கு பரீரா(ரலி), ‘தங்களை சத்திய(மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீது ஆணையாக! அவர் (குழைத்து வைத்த) மாவை அப்படியே போட்டுவிட்டு உறங்கிப் போய்விடுவார்; வீட்டிலுள்ள ஆடு வந்து அதைத் தின்றுவிடும்; அத்தகைய (விபரமறியாத) இள வயதுச் சிறுமி என்பதைத் தவிர அவரைக் குறை சொல்லக் கூடிய விஷயம் எதையும் அவரிடம் நான் பார்க்கவில்லை” என்று பதில் கூறினார்.

உடனே, அன்று இறைத்தூதர்(ச) அவர்கள் (மிம்பரில் ஏறி) நின்று, அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி சலூலை தண்டிப்பதற்கு (தமக்கு) உதவும்படி (தம் தோழர்களிடம்) கோரினார்கள். இறைத்தூதர்(ச) அவர்கள், ‘என் வீட்டார் விஷயத்தில் (வதந்தி கிளப்பி) எனக்கு மன வேதனையளித்த ஒரு மனிதனை தண்டித்திட எனக்கு உதவிபுரிபவர் யார்? அவர்கள் (அவதூறு) கூறியுள்ளனர். ஆனால், அவரைப் பற்றி நல்லதையே அறிவேன்.

அவர் என் வீட்டாரிடம் என்னுடனேயல்லாமல் (நான் வீட்டிலிருக்கும் போதே தவிர) வந்ததில்லை’ என்று கூறினார்கள். உடனே, ஸஅத் இப்னு முஆத்(ரலி) எழுந்து வின்று, ‘இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! அவனை தண்டிக்க நான் தங்களுக்கு உதவுகிறேன். அவன் (எங்கள்) அவ்ஸ் குலத்தைச் சேர்ந்தவனாயிருந்தால் நாங்கள் அவனுடைய கழுத்தைத் துண்டித்து விடுகிறோம். எங்கள் சகோதரர்களான கஸ்ரஜ் குலத்தைச் சேர்ந்தவனாக இருந்தால் (என்ன செய்ய வேண்டுமென்று) தாங்கள் உத்தரவை நாங்கள் நிறைவேற்றுகிறோம்’ என்று கூறினார்கள்.

உடனே, கஸ்ரஜ் குலத் தலைவராயிருந்த ஸஅத் இப்னு உபாதா(ரலி) எழுந்து நின்று, ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நீர் பொய்யுரைத்தீர்; அவனை நீர் கொல்லமாட்டீர். அது உம்மால் முடியாது’ என்று கூறினார். அதற்கு முன் அவர் நல்ல மனிதராகத் தான் இருந்தார்; ஆயினும், குலமாச்சரியம் அவரை அவ்வாறு பேசத் தூண்டிவிட்டது.

உடனே, உசைத் இப்னு ஹூளைர்(ரலி) எழுந்து நின்று, உபாதா(ரலி) அவர்களை நோக்கி, ‘நீர் தாம் பொய்யுரைத்தீர். அல்லாஹ்வின் மீதாணையாக! அவனை நாங்கள் கொன்றே தீருவோம். நீர் ஒரு நயவஞ்சகர். (அதனால்தான்) நயவஞ்சகர்களின் சார்பாக வாதிடுகிறீர்’ என்று கூறினார். இறைத்தூதர்(ச) அவர்கள் மிம்பரின் மீது நின்று கொண்டிருக்க, அவ்ஸ், கஸ்ரஜ் ஆகிய இரண்டு குலத்தாரும் ஒருவர் மீதொருவர் பாய்ந்து சண்டையிட முற்பட்டனர். நபி(ச) அவர்கள் மிம்பரிலிருந்து இறங்கி அவர்கள் மௌனமாகும் வரை அவர்களை அமைதிப்படுத்தினார்கள். பிறகு அவர்களும் மௌனமானார்கள். அன்று நான் இடைவிடாமல் அழுது கொண்டிருந்தேன்; சிறிதும் உறங்கவில்லை.

காலையானதும் என் தாய் தந்தையர் என் அருகேயிருந்தனர். நானோ இரண்டு இரவுகள் ஒரு பகல் (முழுக்க) என் ஈரல் பிளந்து விடுமோ என்றெண்ணும் அளவிற்கு அழுதிருந்தேன். நான் அழுதவண்ணமிருக்கும்போது என் தாய்தந்தையார் என்னிடம் அமர்ந்திருக்க, அன்சாரிப் பெண்ணொருத்தி வந்து உள்ளே வர அனுமதி கேட்டாள். நான் அவளுக்கு அனுமதியளித்தவுடன் என்னோடு சேர்ந்து அவளும் அழுதபடி அமர்ந்தாள்.

நாங்கள் இவ்வாறு இருந்து கொண்டிருக்கும் போது இறைத்தூதர்(ச) அவர்கள் வந்து அமர்ந்தார்கள். என்னைப் பற்றி அவதூறு சொல்லப்பட்ட நாளிலிருந்து அவர்கள் என்னருகே அமர்ந்ததில்லை. மேலும், ஒரு மாத காலம் வரை என் விஷயத்தில் (அல்லாஹ்விடமிருந்து தீர்ப்பு) எதுவும் அவர்களுக்கு வஹீயாக அருளப்படவில்லை. பிறகு நபி(ச) அவர்கள், ‘லாஇலாஹ இல்லல்லாஹ்” (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை)” என்று கூறிவிட்டு, ‘ஆயிஷாவே! உன்னைக் குறித்து இன்னின்னவாறு எனக்குச் செய்தி கிடைத்துள்ளது.

நீ நிரபராதியாக இருந்தால் அல்லாஹ் விரைவில் உன்னைக் குற்றமற்றவள் என்று அறிவித்து விடுவான். நீ குற்றமேதும் செய்திருந்தால் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி, அவன் பக்கம் திரும்பிவிடு. ஏனெனில், அடியான் தன் பாவத்தை ஒப்புக் கொண்டு (மனம் திருந்தி) பாவ மன்னிப்புக் கோரினால் அவனுடைய கோரிக்கையை ஏற்று அல்லாஹ் அவனை மன்னிக்கிறான்” என்றார்கள்.

இறைத்தூதர்(ச) அவர்கள், தம் பேச்சை முடித்த போது என் கண்ணீர் (முழுவதுமாக) நின்று போய் விட்டிருந்தது. அதில் ஒரு துளியும் எஞ்சியிருக்கவில்லை. நான் என் தந்தையிடம், ‘அல்லாஹ்வின் தூதருக்கு என் சார்பாக பதில் கூறுங்கள்” என்று சொன்னேன். அதற்கு என் தந்தை, ‘அல்லாஹ்வின் தூதரிடம் என்ன (பதில்) சொல்வது என்று கூறினார்கள். நான் என் தாயாரிடம், ‘இறைத்தூதர் சொன்னதற்கு என் சார்பாக பதில் கூறுங்கள்’ என்று சொன்னேன். அதற்கு என் தாயார், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர்(ச) அவர்களுக்கு என்ன (பதில்) சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை’ என்று கூறினார்கள்.

நானோ இளவயதுடைய சிறுமியாக இருந்தேன். குர்ஆனிலிருந்து அதிகமாக (ஓதத்) தெரியாதவளாகவும் இருந்தேன். எனவே, ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள், மக்கள் என்னைப் பற்றிப் பேசியவற்றைக் கேட்டிருக்கிறீர்கள் என்பதையும் அது உங்கள் மனதில் பதிந்து போய், அதை உண்மையொன்று நம்பி விட்டீர்கள் என்பதையும் அறிவேன்.

நான் குற்றமற்றவள் என்று நானே தங்களிடம் சொன்னால் நீங்கள் அதை நம்பப் போவதில்லை. நான் குற்றமற்றவள் என்பதை அல்லாஹ் அறிவான்… நான் குற்றமேதும் புரிந்திருப்பதாக ஒப்புக் கொண்டால் (நான் சொல்வதை அப்படியே உண்மையொன்று ஏற்று) என்னை நம்பி விடுவீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்கும் உங்களுக்கும் (நபி) யூசுஃப்(ர) அவர்களின் தந்தையை (யஃகூப்(ர) அவர்களை)யே நான் உவமையாகக் கருதுகிறேன். (அதாவது): (இதை) சகித்துக் கொள்வதே நல்லது. நீங்கள் புனைந்து சொல்லும் விஷயத்தில் அல்லாஹ்விடம் தான் நான் பாதுகாப்புத் கோர வேண்டும். (திருக்குர்ஆன் 12:83)

பிறகு, அல்லாஹ் நான் குற்றமற்றவள் என அறிவிப்பான் என்ற நம்பிக்கையுடன் நான் என் படுக்கையில் (வேறு பக்கமாகத்) திரும்பிப் படுத்துக் கொண்டேன். ஆயினும், திருக்குர்ஆனில் என் விஷயத்தைப் பற்றிப் பேசுகிற அளவிற்கு நான் ஒன்றும் முக்கியத்துவமுடையவளல்ல மிகச் சாதாரணமானவள் தான் என்று என்னைக் குறித்து நான் கருதிக் கொண்டிருக்க, அல்லாஹ்வின் மீதாணையாக! இறைவன் என் விஷயத்தில் வஹீயையே -வேத வெளிப்பாட்டையே (திருக்குர்ஆனில்) அருளுவான் என்று நான் நினைத்தும் பார்க்கவில்லை. மாறாக, ‘இறைத்தூதர்(ச) அவர்கள் என்னை அல்லாஹ் குற்றமற்றவள் என்று உணர்த்தும் கனவு எதையாவது தூக்கத்தில் காண்பார்கள்’ என்றே எதிர்பார்த்தேன்.

அல்லாஹ்வின் மீதாணையாக! நபி(ச்) அவர்கள் தாம் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்திருக்கவுமில்லை; வீட்டிலிருந்து எவரும் வெளியே செல்லவுமில்லை; அதற்குள் அல்லாஹ், நபி(ச) அவர்களின் மீது (திருக்குர்ஆன் வசனங்களை) அருள ஆரம்பித்துவிட்டான். உடனே, (வேத வெளிப்பாடு வருகிற நேரங்களில்) ஏற்படும் கடும் சிரமமான நிலை அவர்களுக்கு ஏற்பட்டது. அது கடும் குளிர் காலமாயிருந்தும் அவர்களின் மேனியிலிருந்து முத்துக்களைப் போல் வியர்வைத் துளிகள் வழியத் தொடங்கின.

அந்த நிலை அல்லாஹ்வின் தூதரைவிட்டு நீங்கியவுடன் அவர்கள் சிரித்துக் கொண்டே முதல் வார்த்தையாக, ‘ஆயிஷாவே! அல்லாஹ்வைப் புகழ்ந்து நன்றி செலுத்து. உன்னை அல்லாஹ் குற்றமற்றவள் என அறிவித்துவிட்டான்’ என்று கூறினார்கள். என் தாயார், ‘அல்லாஹ்வின் தூதரிடம் எழுந்து செல்’ என்று கூறினார்கள். நான், “மாட்டேன்; அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்களிடம் செல்ல மாட்டேன். அல்லாஹ்வை மட்டுமே புகழ்ந்து, அவனுக்கே நன்றி செலுத்துவேன்” என்றேன்.

அப்போது அல்லாஹ், ‘(ஆயிஷாவின் மீது) அவதூறு பரப்பியவர்கள் உங்களில் ஒரு குழுவினர் தான்’ என்று தொடங்கும் (திருக்குர்ஆன் 24:11) வசனங்களை அருளியிருந்தான். என் குற்றமற்ற நிலையைத் தெளிவுபடுத்தி அல்லாஹ் இதை அருளியபோது (என் தந்தை) அபூ பக்ர்(ரலி), “அல்லாஹ்வின் மீதாணையாக! (என் மகள்) ஆயிஷாவைப் பற்றி (அவதூறு) கூறிய பின்பு ஒருபோதும் மிஸ்தஹக்காக செலவிட மாட்டேன்” என்று கூறினார்கள்.

மிஸ்தஹ் இப்னு உஸாஸா தம் உறவினர் என்பதால் அவருக்காக அபூபக்கர்(ரலி) செலவிட்டு வந்தார்கள்… உடனே அல்லாஹ், “உங்களிடையேயுள்ள (பொருள்) அருளப் பெற்றோரும் (பிறருக்கு உதவும்) இயல்புடையோரும், (தங்கள்) உறவினர்களுக்கோ, ஏழைகளுக்கோ, இறைவழியில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கோ (எதுவும்) கொடுக்க மாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம். (அவர்களால் தங்களுக்கு ஏதும் வருத்தம் ஏற்பட்டிருந்தால்) அதனை மன்னித்துப் (பிழைகளைப்) பொருட்படுத்தாமல்விட்டு விடட்டும். அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பளிப்பதை நீங்கள் விரும்பமாட்டீர்களா? அல்லாஹ் மிகவும் மன்னிப்போனும் கிருபையுடையோனுமாய் இருக்கிறான்” என்னும் (திருக்குர்ஆன் 24:22) இறைவசனத்தை அருளினான்.

அதன் பிறகு அபூபக்கர்(ரலி), ‘ஆம், அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் எனக்கு மன்னிப்பளிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்’ என்று கூறிவிட்டு, மிஸ்தஹ்(ரலி) அவர்களுக்கு ஏற்கனவே தாம் செய்து வந்த (பொருள்) உதவியைத் தொடரலானார்கள்.

திருக்குர்ஆனில் என்னைப் பற்றிய வசனங்கள் அருளப்படுவதற்கு முன்னால்) இறைத்தூதர் என் விஷயத்தில் (தம் இன்னொரு மனைவியான) ஸைனப் பின்த்து ஜஹ்ஷ்(ரலி) அவர்களிடம் விசாரித்தார்கள்; “ஸைனபே! நீ (ஆயிஷாவைப் பற்றி) என்ன அறிந்திருக்கிறாய்? (அவர் விஷயத்தில்) என்ன பார்த்திருக்கிறாய்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “இறைத்தூதர் அவர்களே! என் காதுகளையும் என் கண்களையும் (அவற்றின் மீது பழி சுமத்தாமல்) பாதுகாத்துக் கொள்வேன். அல்லாஹ்வின் மீதாணையாக! ஆயிஷாவைக் குறித்து நல்லதையே அறிவேன்” என்று பதிலளித்தார்கள்.

ஸைனப்(ரலி) தாம் எனக்கு (அழகிலும் நபி(ச) அவர்களின் அன்பிலும்) போட்டியாக இருந்தார்கள். ஆயினும், அல்லாஹ் அவர்களை இறையச்சமுடைய, பேணுதலான பண்பையளித்துப் பாதுகாத்திருந்தான். இந்த அறிவிப்பு இன்னும் பலர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.” (புகாரி 2661)

இந்த நிகழ்வில் இருந்து பிக்ஹ் ரீதியான பல முடிவுகளை எடுக்கலாம்.

  • பெண்கள் பயணம் செய்வது ஆகுமானது. 33:41 வசனத்தை மையமாக வைத்து பெண்கள் பயணம் செய்வதையே (மஃஸியா) பாவமாகப் பார்க்க முடியாது.
  • சீட்டுக் குழுக்கித் தெரிவு செய்வது ஆகுமானது. ஒரு விடயத்திற்குத் தகுதியானவர்கள் பலர் இருக்கும் போது ஒருவரை மட்டுமே தெரிவு செய்ய வேண்டும் என்றிருந்தால் சீட்டுக் குழுக்கி அதில் வரும் முடிவை ஏற்க வேண்டும். அது ஒருவருக்கு சாதகமாகவும் பலருக்கு பாதகமாகவும் இருப்பினும் சரியே!
  • மனைவியருடன் பயணம் செல்லும் போது யாரை அழைத்துச் செல்வது? மனைவியருடன் பயணம் செய்யும் போது எவரை அழைத்துச் செல்வது என்று தீர்மானிப்பதற்கு சீட்டுக் குழுக்கி முடிவு செய்வது ஆகுமானதாகும்.
  • பல மனைவியர் உள்ள ஒருவர் சீட்டுக் குழுக்கி ஒரு மனைவியைப் பயணத்திற்கு அழைத்துச் செல்கின்றார். பயணத்தில் அந்த மனைவியருடன் சில தினங்கள் தங்குகின்றார். இந்தத் தங்கிய காலத்தைக் கணிப்பிட்டு பயணத்தில் கலந்து கொள்ளாத ஏனைய மனைவியருடன் அதைக் கழா செய்ய வேண்டியதில்லை.
  • கணவன் தன் மனைவியருடன் பயணம் செய்வது ஆகுமானதும் விரும்பத் தக்கதுமாகும்.
  • பெண்கள் போர்க்களங்களில் பங்கு கொள்ள அனுமதி உண்டு.
  • பெண்கள் பள்ளக்கில் பயணிப்பது ஆகுமானது.
  • உலக ஆடம்பரங்களில் ஒன்று எமது மார்க்கத்திற்கு உதவி செய்வதாக இருக்குமானால் அதை நாம் பயன்படுத்துவது ஆகுமானதாகும். பல்லக்கு அந்தக் கால மக்களின் பெருமைக்குரிய பொருளாக இருந்தது. பெண்கள் மறைவாகப் பயணிக்க அது உதவுகின்றது என்ற வகையில் நபி(ச) அவர்கள் அதை அனுமதித்துள்ளார்கள்.
  • ஒரு பிராணி சக்தி பெறும் என்றிருந்தால் அதன் மீது அதிக பாரத்தை ஏற்றுவதற்கு அனுமதியுண்டு.
  • ஒரு பெண் தனக்குரிய பாதுகாப்பு உண்டு எனக் கருதினால் தனித்துப் பயணிக்கலாம். ஆயிஷா(ரலி) அவர்கள் தனது தேவையை முடிக்க தனித்துச் சென்றுள்ளார்கள்.
  • ஒரு பெண் தனது அடிப்படையான தேவையைக் கழிக்க கணவனின் அனுமதி இன்றி வெளியில் செல்லலாம். ஆனால், அது வழக்கத்தில் அனுமதி கேட்கத் தேவை இல்லை என்ற நிலையில் உள்ளதாக அமைய வேண்டும்.
  • மலசல தேவைகளை நிறைவேற்றுபவர்கள் அடுத்தவர்கள் காணாத இடத்திற்குச் செல்வது மார்க்க ஒழுங்காகும்.
  • பெண்கள் பயணத்திலும் வீட்டில் இருக்கும் போதும் மாலை அணிவது ஆகுமானது.
  • காணாமல் போன பொருளைத் தேடலாம். அது உலக மோகமாகக் கருதப்பட மாட்டாது.
  • ஒரு இடத்தில் தங்கிவிட்டு பயணிப்பவர்கள் ஈற்றில் ஏதேனும் விடுபட்டுள்ளதா என்பதை அவதானிக்க ஒருவரைப் பொறுப்பாக்குக்குவது சுன்னாவாகும்.
  • பாதிப்புக்கள், இழப்புக்கள் சோதனைகள் ஏற்படும் போது இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் என்று கூறுவது சுன்னாவாகும்.
  • அந்நிய ஆணுக்கு முன்னால் அவர் நல்லவராக இருந்தாலும் அது அல்லாதவராக இருந்தாலும் முகத்தை மூடுவது அனுமதிக்கப்பட்டதாகும்.
  • கணவன் மனைவியுடன் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும். அன்பையும் அரவணைப்பையும் காட்ட வேண்டும்.
  • ஒரு விடயம் பரவி இருந்தால் அது குறித்துப் பேசும் போது சுருக்கமான வார்த்தைகளைப் பயன்படுத்துவது போதுமானது.
  • நோயாளியிடம் அவரது உள்ளம் பாதிப்பு அடையத்தக்க விடயங்களைச் சொல்லாமல் மறைக்கலாம்.
  • நோயாளியிடம் அல்லது அவர்களுடன் நெருங்கியவர்களிடம் சுகம் விசாரிக்கலாம்.
  • ஒரு பெண் தன் தேவைக்காக வெளியில் செல்லும் போது மற்றொரு தோழியைத் துணைக்கு அழைத்துக் கொள்வது நல்லது.
  • ஒருவருக்கு எதிராகப் பிரார்த்திப்பதும் திட்டுதல் என்பதற்குள் அடங்கும்.
  • பெண்கள் கரண்டைக்குக் கீழ் ஆடை அணிவது குற்றம் அன்று.
  • பொய் எனத் தெரிந்த விடயத்தைக் கேட்கும் போது சுப்ஹானல்லாஹ் எனக் கூறுவது ஆகுமானதாகும்.
  • ஒரு பெண் தன் தாய்-தந்தை வீட்டுக்குச் செல்வதாக இருந்தாலும் கணவனின் அனுமதியைப் பெற வேண்டும்.
  • குடும்ப விடயங்களில் அறிவும் அனுபவமும் உள்ளவர்களிடம் ஆலோசனை கேட்கலாம்.
  • பொதுவான பிரச்சினைகளின் போதும் இமாம் குத்பா ஓதலாம்.
  • அந்நிய ஆண்கள் திரைக்குப் பின்னால் இருந்து ஒரு பெண்ணுக்கு உதவலாம்.
  • பிறரைப் பற்றி நற்சான்று வழங்கும் போது அவரைப் பற்றி நல்லதைத் தவிர வேறு எதுவும் எனக்குத் தெரியாது என்று கூறலாம்.
  • குற்றம் சுமத்தப்பட்டவர் பற்றிய உண்மையை அறிவதற்காக ஆராயலாம். அது புறமாகப் பார்க்கப்பட மாட்டாது.
  • பணியாட்களை வைத்துக் கொள்ள அனுமதியுண்டு.
  • முக்கிய விடயத்தில் பணியாளிடம் கருத்துக் கேட்க அனுமதியுண்டு.
  • சுதந்திரமான ஒரு பெண் தனது பணிகளைத் தானே செய்வதற்கு அனுமதியுள்ளது.
  • ஆட்சியாளன் தன் சுய விருப்பப்படி செயற்பட முடியாது. ஆட்சியாளன் தன் அறிவுக்கு ஏற்பவும் தீர்ப்புக் கூற முடியாது.
  • சுபஹக்குப் பின்னர் நேரகாலத்துடன் நோய் விசாரிப்பது ஆகுமானது.
  • வீட்டுக்குள் வருவதற்கு அனுமதி கேட்பது சுன்னாவாகும்.
  • தீமைக்குத் துணை போகின்றவர்களைத் திட்டுவது ஆகுமானதாகும்.
  • பெரிய பாதிப்பில் இருந்து விடுபட சிறிய பாதிப்பைத் தேர்ந்தெடுக்கலாம்.
  • சோதனைகளைத் தாங்கித் கொள்வதில் சிறப்பு இருக்கின்றது.

மேற்போன்ற பிக்ஹூடன் சம்பந்தப்பட்ட பல விடயங்களை இந்நிகழ்வில் இருந்து படிப்பிணையாகப் பெறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *