Featured Posts
Home » பொதுவானவை » உங்கள் சிந்தனைக்கு » நல்லவற்றை தர்மம் செய்வதில் நபியவர்கள் மிக வேகமானவர்கள்! [உங்கள் சிந்தனைக்கு… – 041]

நல்லவற்றை தர்மம் செய்வதில் நபியவர்கள் மிக வேகமானவர்கள்! [உங்கள் சிந்தனைக்கு… – 041]

நல்லவற்றை தர்மம் செய்வதில் நபியவர்கள் மிக  வேகமானவர்கள்!

இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “நபி (ஸல்) அவர்கள் மக்களிலேயே நல்லவற்றை அதிகமாக வாரி வழங்குபவர்களாகத் திகழ்ந்தார்கள். அவர்கள் ரமழான் மாதத்தில் இன்னும் அதிகமாக வாரி வழங்குவார்கள். ஏனென்றால், (வானவர்) ஜிப்ரீல் ரமழானின் ஒவ்வோர் இரவும் – ரமழான் முடியும் வரை – நபி (ஸல்) அவர்களைச் சந்திப்பது வழக்கம். (அப்போது) அவரிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் குர்ஆனை ஓதிக் காட்டுவார்கள். (அவ்வாறு)  ஜிப்ரீல் தம்மைச் சந்திக்கும்போது தொடர்ந்து வீசும் (மழைக்) காற்றை விட நபி (ஸல்) அவர்கள் அதிகமாக நல்லவற்றை வாரி வழங்குவார்கள்!”.

{ நூல்: புகாரி – 4997 }

அல்லாமா இப்னுல் கைய்யிம் அல்ஜவ்ஸிய்யா (ரஹ்) கூறுகின்றார்கள்:-

“கொடுத்துதவுவதும், தர்மம் செய்வதும் நபி (ஸல்) அவர்களுக்கு அதிக விருப்புக்குரியதாக இருந்தது. தான் கொடுக்கும் பொருள் மூலம் நபியவர்கள் அடையும் சந்தோசமும் மகிழ்ச்சியும், அதை எடுப்பது கொண்டு ஒருவர் அடையும்  மகிழ்ச்சியை விட மிகப் பிரமாண்டமானதாக இருந்தது. மக்களுக்கு  நல்லவற்றை வாரி வழங்கும் மிகப்பெரும் வள்ளலாக அவர்கள் இருந்தார்கள்; வேகமாகத் தொடர்ந்து வீசும் (மழைக்) காற்று போன்று அவர்களது வலக்கரம் இருந்தது; தேவையுள்ள ஒருவர் தன் தேவையை அவர்களிடம் எடுத்துக் காட்டினால் தன்னை விட, தேவையுடையவரின் தேவையையே அவர்கள் முதன்மைப்படுத்துபவர்களாக இருந்தார்கள். சிலபோது தனது உணவைக்கொண்டும், இன்னும் சிலபோது தனது உடையைக்கொண்டும் அவர்கள் உதவுவார்கள்.

நபி (ஸல்) அவர்கள் தர்மம் செய்யும்படி ஏவுபவர்களாகவும், அதைத் தூண்டுபவர்களாகவும், அதற்காக அழைப்பு விடுப்பவர்களாகவும் காணப்பட்டார்கள். இதனால்தான் நபியவர்கள் மனிதர்களிலேயே மிக விரிந்த நெஞ்சுடையவர்களாகவும், மிக நல்ல மனமுடையவர்களாகவும், அவர்களிலேயே மிக்க மகிழ்வுடைய உள்ளமுடையவர்களாகவும் இருந்தார்கள். உள்ளத்தை விரிவாக்கும் விடயத்தில் தர்மம் புரிவதற்கும், நன்மையானவற்றைச் செய்வதற்கும் ஆச்சரியப்படத்தக்க தாக்கம் நிச்சயமாக இருந்து கொண்டிருக்கிறது!”

{ நூல்: ‘ஸாதுல் மஆத்’, 02/ 22,23 }

قال العلّامة إبن القيم الجوزية رحمه الله تعالى:-

[ وكان العطاء والصدقة أحبّ شيئ إليه صلّى الله عليه وسلم، وكان سروره وفرحه بما يعطيه أعظم من سرور الآخذ بما يأخذه. وكان أجود الناس بالخير؛ يمينه كالرّيح المرسلة؛ وكان إذا عرض له محتاج آثره على نفسه؛ تارة بطعامه، وتارة بلباسه.

 وكان صلّى الله عليه وسلّم يأمر بالصّدقة ويحثّ عليها ويدعو إليها. ولذلك كان صلّى الله عليه وسلّم أشرح الخلق صدرا، وأطيبهم نفسا، وأنعمهم قلبا؛ فإن للصّدقة وفعل المعروف تأثيرا عجيبا في شرح الصدر! ]

{ زاد المعاد ، ٢/ ٢٢،٢٣ بتصرف }

தமிழில்:

அஷ்ஷெய்க். N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *