Featured Posts

52.சாட்சியங்கள்

பாகம் 3, அத்தியாயம் 52, எண் 2637

இப்னு ஷிஹாப்(ரஹ்) அறிவித்தார். உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்), இப்னுல் முஸய்யப்(ரஹ்), அல்கமா இப்னு வக்காஸ்(ரஹ்) மற்றும் உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) ஆகியோர் எனக்கு (மக்கள் சிலர்) ஆயிஷா(ரலி) அவர்களை (அவதூறு பேசியது) பற்றிய ஹதீஸை அறிவித்தார்கள். ஒருவர் அறிவித்த ஹதீஸ் மற்றவர் அறிவித்த ஹதீஸை உறுதிப்படுத்துவதாக இருந்தது. ‘அபாண்டப் பழி சுமத்தியவர்கள் தாங்கள் பேசிய அவதூறுகளையெல்லாம் சொன்னபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் மனைவியை (ஆயிஷாவை)ப் பிரிந்து விடுவது குறித்து ஆலோசனை கலப்பதற்காக அலீ(ரலி) அவர்களையும், உஸாமா(ரலி) அவர்களையும் அழைத்தார்கள். அப்போது ‘வஹீ’ (தற்காலிகமாக நின்று போய், வரத்) தாமதமாம்க் கொண்டிருந்தது. உஸாமா(ரலி), ‘அவர்கள் (ஆயிஷா), தங்கள் மனைவி. (அவர்களைப் பற்றி) நல்லதைத் தவிர வேறெதையும் நாங்கள் அறிய மாட்டோம்” என்று கூறினார்கள். மேலும், (ஆயிஷா(ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட) பரீரா(ரலி), ‘அவர்கள் (ஆயிஷா), தம் வீட்டாரின் குழைத்தமாவை (அப்படியே)விட்டுவிட்டு உறங்கி விடுகிற இளவயதுச் சிறுமி என்பதையும் (அப்படி அவர்கள் தூங்கும் போது) வீட்டு ஆடு வந்து அதைத் தின்றுவிடும் என்பதையும் தவிர அவர்களின் மீது குறைசொல்லக் தக்க விஷயம் எதையும் நான் பார்க்கவில்லை” என்று கூறினார்கள். (அதன்பின்னர்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘என் வீட்டாரின் விஷயத்தில் எனக்கு (மன) வேதனை தந்துவிட்ட ஒரு மனிதனை தன் சார்பாக தண்டிக்கக் கூடியவர் யார்? அல்லாஹ்வின் மீதாணையாக! என் மனைவியிடமிருந்து நன்மையைத் தவிர வேறெதையும் நான் அறியவில்லை. மேலும், எந்த மனிதரைக் குறித்து நன்மையைத் தவிர வேறெதையும் நான் அறிய மாட்டேனோ அவரைப் போய் (ஆயிஷாவுடன் இணைத்து) அவர்கள் (அவதூறு) கூறியுள்ளனர்” என்றார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 52, எண் 2638

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களும் உபை இப்னு கஅப்(ரலி) அவர்களும் இப்னு ஸய்யாத் இருந்த பேரீச்சந் தோட்டத்தை நாடிச் சென்றார்கள். (தோட்டத்தில்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நுழைந்தவுடன் இப்னு ஸய்யாத் தம்மைப் பார்ப்பதற்கு முன்பு, அவனிடமிருந்து (அவனுடைய சொற்களைக்) கேட்க உபாயம் செய்தவர்களாய், பேரீச்ச மரங்களுக்கிடையே தம்மை மறைத்து நடக்கலானார்கள். இப்னு ஸய்யாத் தன் படுக்கையில் ஒரு பூம்பட்டுப் போர்வைக்குள் (குறிகாரர்கள் முணு முணுப்பதைப் போல்) எதையோ முணு முணுத்தபடி படுத்துக் கொண்டிருந்தான். நபி(ஸல்) அவர்கள் பேரீச்ச மரங்களுக்கிடையே தம்மை மறைத்துக் கொண்டு வருவதை இப்னு ஸய்யாதின் தாய் பார்த்துவிட்டாள். அவள் தன் மகனை நோக்கி, ‘ஸாஃபியே! இதோ முஹம்மத் (வந்து கொண்டிருக்கிறார்)” என்று கூறிவிட்டாள். உடனே, இப்னு ஸய்யாத் விழிப்படைந்து முணுமுணுப்பதை நிறுத்திவிட்டான்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘அவள் (இப்னு ஸய்யாதின் தாய்) அவனை (உஷார்படுத்தாமல்) விட்டுவிட்டிருந்தால் (தன் உண்மை நிலையை அவனே) அம்பலப்படுத்தி விட்டிருப்பான்” என்று கூறினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 52, எண் 2639

ஆயிஷா(ரலி) அறிவித்தார். ரிஃபாஆ அல் குரழீ(ரலி) அவர்களின் மனைவி நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘நான் ரிஃபாஆவிடம் (அவரின் மண பந்தத்தில்) இருந்தேன். பிறகு, அவர் என்னை மணவிலக்கு செய்து மணவிலக்கை முடிவானதாக்கிவிட்டார். எனவே, நான் அப்துர் ரஹ்மான் இப்னு ஸபீர்(ரலி) அவர்களை மணந்தேன். அவரிடம் இருப்பதெல்லாம் (உறுதியின்றித் தொங்கும்) முந்தானைத் தலைப்பைத் போன்றது தான் (அவர் ஆண்மை குறைந்தவர்)” என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘நீ ரிஃபாஆவிடம் திரும்பிச் செல்ல விரும்புகிறாயா? (தற்போதையை உன் கணவரான) அவரின் இனிமையை நீ சுவைக்காத வரையிலும் உன்னுடைய இனிமையை அவர் சுவைக்காத வரையிலும் உன் முன்னாள் கணவரை நீ மணந்து கொள்வதென்பது முடியாது” என்று கூறினார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி), நபி(ஸல்) அவர்களிடம் அமர்ந்து கொண்டிருந்தார்கள். காலித் இப்னு ஸயீத் இப்னு ஆஸ்(ரலி), தமக்கு உள்ளே நுழைய அனுமதியளிக்கப்படும் என்று எதிர்பார்த்த வண்ணம் வாசலில் நின்றிருந்தார்கள். அவர்கள், ‘அபூ பக்ரே! இந்தப் பெண் நபி(ஸல்) அவர்களிடம் எதை பகிரங்கமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறாள் என்பதைக் கேட்க மாட்டீர்களா?’ என்று (வாசலில் நின்றபடியே) சொன்னார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 52, எண் 2640

உக்பா இப்னு ஹாரிஸ்(ரலி) அறிவித்தார். நான் அபூ இஹாப் இப்னு அஸீஸ் அவர்களின் மகளை மணந்துகொண்டேன். ஒரு பெண் என்னிடம் வந்து, ‘உனக்கும் நீ மணந்த பெண்ணுக்கும் நான் பாலூட்டியிருக்கிறேன்” என்று கூறினாள். நான், ‘நீ எனக்குப் பாலூட்டியதை நான் அறியமாட்டேன்; (நான் மணந்தபோது) நீ எனக்கு (இதை) அறிவிக்கவில்லையே” என்று கூறிவிட்டு, அபூ இஹாபின் குடும்பத்தாரிடம் (இது உண்மை தானா என்று) கேட்டனுப்பினேன். அவர்கள், ‘எங்கள் பெண்ணுக்கு அவள் பாலூட்டியதாக நாங்கள் அறியவில்லை” என்று கூறினர். உடனே (மக்காவில் இருந்த) நான், மதீனாவிலிருந்த நபி(ஸல்) அவர்களிடம் (மார்க்கத் தீர்ப்புப் பெறுவதற்காக) பயணித்துச் சென்று அவர்களிடம் (இது குறித்துக்) கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘(நீயும் உன் மனைவியும் ஒரே செவிலித் தாயிடம் பால்குடித்தாகச்) சொல்லப்பட்டுவிட்ட பின்னால், (நீங்கள் இருவரும் இணைந்து வாழ்வது) எப்படி (செல்லும்)?’ என்று கூறினார்கள். எனவே; நான் அவளைப் பிரிந்துவிட்டேன். அவள் வேறொரு கணவனை மணந்தாள்.

பாகம் 3, அத்தியாயம் 52, எண் 2641

உமர் இப்னு கத்தாப்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் மக்கள் வஹீயின் (வேத வெளிப்பாடு அல்லது இறையறிவிப்பின்) வாயிலாக (ரகசியமாகச் செய்த குற்றங்கள் அம்பலமாகி) தண்டிக்கப்பட்டு வந்தார்கள். இப்போது நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின்) வஹீ (இறைச்செய்தி) (இறைச்செய்தி) வருவது நின்று போய்விட்டது. இப்போது நாம் உங்களைப் பிடி(த்து தண்டி)ப்பதெல்லாம் உங்கள் செயல்களில் எமக்கு வெளிப்படையாகத் தெரிபவற்றைத் கொண்டே. எனவே, தம்மிடம் நன்மையை வெளிப்படுத்துகிறவரை நம்பிக்கைக்குரியவராக்கி கெரளவித்துக் கொள்வோம். அவரின் இரகசியம் எதையும் கணக்கிலெடுக்க மாட்டோம். அவரின் அந்தரங்கம் குறித்து இறைவனே கணக்குக் கேட்பான். நம்மிடம் தீமையை வெளிப்படுத்துகிறவரைக் குறித்து நாம் திருப்தியுடனிருக்க மாட்டோம்; தம் அந்தரங்கம் அழகானது என்று அவர் வாதிட்டாலும் சரியே.

பாகம் 3, அத்தியாயம் 52, எண் 2642

அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் இருந்த இடத்தின் வழியாக ஜனாஸா (பிரேதம்) ஒன்று கொண்டு செல்லப்பட்டது. மக்கள் அதைக் குறித்து நல்லவிதமாகப் (புகழ்ந்து) பேசினார்கள். இதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள், ‘உறுதியாகிவிட்டது” என்று கூறினார்கள். பிறகு, மற்றொரு ஜனாஸா கொண்டு செல்லப்பட்டது. மக்கள் அது குறித்து (இகழ்ந்து) கெட்டவிதமாகப் பேசினார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘உறுதியாகிவிட்டது” என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! அதற்கும் ‘உறுதியாகிவிட்டது’ என்று கூறினீர்கள்; இதற்கும் ‘உறுதியாகிவிட்டது’ என்று கூறினீர்களே. (இரண்டிற்குமே இவ்வாறு கூறக் காரணமென்ன)?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘இது சமுதாயத்தின் சாட்சியமாகும். இறைநம்பிக்கையுடையவர்கள் பூமியில் அல்லாஹ்வின் சாட்சிகள் ஆவர்” என்று கூறினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 52, எண் 2643

அபுல் அஸ்வத்(ரஹ்) அறிவித்தார். மதீனா நகரை (கொள்ளை) நோய் பீடித்திருக்கும் நிலையில் நான் அங்கு சென்றேன். மக்கள் பரவலாகவும் விரைவாகவும் இறந்து கொண்டிருந்தார்கள். நான் உமர்(ரலி) அவர்களிடம் சென்று அமர்ந்தேன். அப்போது ஒரு ஜனாஸா சென்றது. அதைக் குறித்து நல்லவிதமாகப் (புகழ்ந்து) பேசப்பட்டது. உடனே, உமர்(ரலி), ‘உறுதியாகிவிட்டது” என்று கூறினார்கள். பிறகு மற்றொரு ஜனாஸா அவர்களைக் கடந்து சென்றது. அதைக் குறித்தும் நல்ல விதமாகப் பேசப்பட்டது. அதற்கும் உமர்(ரலி), ‘உறுதியாகிவிட்டது” என்று கூறினார்கள். பிறகு, மூன்றாவது ஜனாஸா அவர்களைக் கடந்து சென்றது. அதைக் குறித்து (இகழ்ந்து) கெட்ட விதமாகப் பேசப்பட்டது. உமர்(ரலி), ‘உறுதியாகிவிட்டது” என்று கூறினார்கள். நான், ‘விசுவாசிகளின் தலைவரே! என்று உறுதியாகிவிட்டது?’ என்று கேட்டேன். அவர்கள் (பின்வருமாறு) பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் சொன்னதைப் போன்றே நானும் சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், ‘எந்த முஸ்லிமுக்கு நான்கு பேர், ‘அவர் நல்லவர்’ என்று சாட்சி சொல்கிறார்களோ அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் புகுத்துவான்” என்று கூறினார்கள். நாங்கள், ‘மூன்று பேர் சாட்சி சொன்னாலுமா?’ என்று கேட்டோம். நபி(ஸல்) அவர்கள், ‘ஆம்; மூன்று பேர் சாட்சி சொன்னாலும் சரி (அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் புகுத்துவான்)” என்று கூறினார்கள். நாங்கள், ‘இரண்டு பேர் சாட்சி சொன்னாலுமா?’ என்று கேட்டோம். அவர்கள், ‘ஆம்; இரண்டு பேர் சாட்சி சொன்னாலும் சரியே” என்று கூறினார்கள். பிறகு, நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் ஒருவரைப் பற்றி (“ஒருவர் சாட்சி சொன்னாலுமா?’ என்று) கேட்கவில்லை.

பாகம் 3, அத்தியாயம் 52, எண் 2644

ஆயிஷா(ரலி) அறிவித்தார். என் வீட்டில் நுழைவதற்கு ‘அஃப்லஹ்’(ரலி) அனுமதி கேட்டார்கள். நான் அவர்களுக்க அனுமதி தரவில்லை. அவர்கள், ‘நன் உன் தந்தையின் சகோதரராயிருக்க, நீ என்னிடமே திரையிட்டு (மறைத்து)க் கொள்கிறாயா?’ என்று கேட்டார்கள். நான், ‘அதெப்படி (நீங்கள் என் தந்தையின் சகோதரராக முடியும்)?’ என்று கேட்டேன். அதற்கவர், ‘என் சகோதரரின் மனைவி என் சகோதரரின் (வாயிலாக அவரிடம் ஊறிய) பாலை உனக்குப் புகட்டியுள்ளார்” என்று கூறினார். நான் அல்லாஹ்வின் தூதரிடம் அதைப் பற்றிக் கேட்டேன். அவர்கள், ‘அஃப்லஹ் உண்மையே சொன்னார். (நீ திரையின்றி இருக்கும் நிலையில் உன் முன்னால் வர) அவருக்கு அனுமதி கொடு” என்று கூறினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 52, எண் 2645

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள், ஹம்ஸா(ரலி) அவர்களின் மகளின் விஷயத்தில், ‘அவள் எனக்கு ஹலாலாக (மணந்து கொள்ள அனுமதிக்கப்பட்டவளாக) ஆக மாட்டாள். (ஏனெனில்) இரத்த பந்தத்தின் காரணத்தால் எவையெல்லாம் விலக்கப்பட்டதாகுமோ அவையெல்லாம் (செவிலித் தாயிடம்) பால்குடிப்பதாலும் விலக்கப்பட்டதாகும். அவள் என் பால்குடிச் சகோதரரின் மகள் ஆவாள்” என்று கூறினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 52, எண் 2646

ஆயிஷா(ரலி) அறிவித்தார். (ஒரு நாள்) நபி(ஸல்) அவர்கள் என்னிடம் இருந்தார்கள். நான் ஹஃப்ஸா(ரலி) அவர்களின் வீட்டில் (யாரோ) ஒருவர் உள்ளே செல்ல அனுமதி கேட்கும் குரலைச் செவியுற்றேன். நான் நபி(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! அவர் (ஹஃப்ஸாவின் வீட்டுக்குள் செல்ல அனுமதி கேட்பவர்) ஹஃப்ஸாவின் பால்குடித் தந்தையின் சகோதரர் என்று நான் நினைக்கிறேன்” என்று கூறினேன். நபி(ஸல்) அவர்களும், ‘அவர் ஹஃப்ஸாவின் பால்குடித் தந்தையின் சகோதரர் என்றே நானும் நினைக்கிறேன்” என்று கூறினார்கள். நான், ‘இன்னார் என் பால்குடித் தந்தையின் சகோதரர் உயிருடன் இருந்தால் நான் திரையின்றி இருக்கும்போது என்னிடம் அவர் வரலாமா?’ என்று கேட்டேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘ஆம். (வரலாம்.) இரத்த உறவின் காரணத்தால் ஹராமாகிற அனைத்துமே பால்குடி உறவின் காரணத்தாலும் ஹராமாகி விடும்” என்று கூறினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 52, எண் 2647

ஆயிஷா(ரலி) அறிவித்தார். என்னிடம் ஒருவர் அமர்ந்திருக்க, நபி(ஸல்) அவர்கள் என் வீட்டிற்கு வந்தார்கள். ‘ஆயிஷாவே! இவர் யார்?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான், ‘என் பால் குடிச் சகோதரர்” என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள், ‘ஆயிஷாவே! உங்கள் சகோதரர்கள் யார் என்று ஆராய்ந்து பாருங்கள். ஏனெனில், பால் குடிப்பதென்பதே பசியினால் தான்” என்று கூறினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 52, எண் 2648

உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்.

மக்காவை வெற்றி கொண்ட போரின்போது (மக்ஸூமி குலத்தவரான ஃபாத்திமா பின்த்து அஸ்வத் என்னும் பெயருடைய) திருட்டுக் குற்றம் புரிந்த ஒருவர் இறைத்தூதர் அவர்களிடம் கொண்டு வரப்பட்டார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவரின் கையைத் துண்டிக்கும்படி உத்தரவிட்டார்கள். அதன்படி அவரின் கை துண்டிக்கப்பட்டது.

(அவரைப் பற்றி) ‘அவள் அழகிய முறையில் தவ்பா செய்திருந்தாள்; திருமணமும் செய்தாள். அதன் பிறகு அவள் (எங்களிடம்) வந்து கொண்டிருந்தாள். நான் அவளுடைய தேவையை (அறிந்து) நபி(ஸல்) அவர்களிடம் சொல்வேன்” என்று ஆயிஷா(ரலி) கூறினார்.

பாகம் 3, அத்தியாயம் 52, எண் 2649

ஸைத் இப்னு காலித்(ரலி) அறிவித்தார். திருமணமாகாத நிலையில் விபச்சாரம் செய்தவன் விஷயத்தில், அவனுக்கு நூறு கசையடிகள் கொடுக்கவேண்டும் என்றும் ஓராண்டுக் காலத்திற்கு அவனை நாடு கடத்த வேண்டும் என்றும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 52, எண் 2650

நுஃமான் இப்னு பஷீர்(ரலி) அறிவித்தார். என் தாயார் என் தந்தையிடம் அவரின் செல்வத்திலிருந்து எனக்கு சிறிது அன்பளிப்பு வழங்கும்படி கேட்டார்கள். பிறகு, அவருக்கு (இதுவரை கொடுக்காமலிருந்து விட்டோமே என்ற வருத்தம் மனதில்) தோன்றி எனக்கு அதை அன்பளிப்புச் செய்தார். என் தாயார், ‘நீ நபி(ஸல்) அவர்களை சாட்சியாக்காத நரை நான் திருப்தி கொள்ள மாட்டேன்” என்று கூறினார்கள். எனவே, என் தந்தை நான் சிறுவனாயிருந்ததால் என் கையைப் பிடித்து இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் என்னை அழைத்துச் சென்று, ‘இவனுடைய தாயாரான (அம்ர்) பின்த்து ரவாஹா இவனுக்கு சிறிது அன்பளிப்புத் தரும்படி என்னிடம் கேட்டாள்” என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘இவனைத் தவிர வேறு குழந்தை ஏதும் உங்களுக்கு உண்டா?’ என்று கேட்டார்கள். என் தந்தை, ‘ஆம் (உண்டு)” என்று பதிலளித்தார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘என்னை அக்கிரமத்துக்கு சாட்சியாக்காதீர்கள்” என்று கூறினார்கள் எனக் கருதுகிறேன்.

இன்னோர் அறிவிப்பில், ‘நான் அக்கிரமத்துக்கு சாட்சியாக இருக்கமாட்டேன்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என வந்துள்ளது.

பாகம் 3, அத்தியாயம் 52, எண் 2651

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” உங்களில் (மக்களில்) சிறந்தவர்கள் என் தலைமுறையைச் சேர்ந்தவர்கள்; பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள்; பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள்.

-இந்த ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பாளர் இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி), ‘இரண்டு தலைமுறைக்குப் பிறகு மூன்றாவதாக ஒரு தலைமுறையை நபி(ஸல்) அவர்கள் சொன்னார்களா என்று எனக்குத் தெரியாது” என்று கூறுகிறார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக, உங்களுக்குப் பின் ஒரு சமுதாயத்தார்(வர) இருக்கிறார்கள். அவர்கள் நம்பிக்கை மோசடி செய்வார்கள். அவர்களிடம் எதையும நம்பி ஒப்படைக்கப்படாது. அவர்கள் சாட்சியாக இருக்கத் தாமாகவே முன் வருவார்கள். ஆனால், சாட்சியம் அளிக்கும்படி அவர்களை யாரும் கேட்கமாட்டார்கள். அவர்கள் நேர்ச்சை செய்வார்கள்; ஆனால் அதை நிறைவேற்ற மாட்டார்கள். அவர்களிடையே பருமனாயிருக்கும் (தொந்தி விழும்) நிலை தோன்றும். என இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 52, எண் 2652

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” மக்களில் சிறந்தவர்கள் என் தலைமுறையினர். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு சில சமுதாயங்கள் வரும். அவர்களின் சாட்சியம் அவர்களின் சத்தியத்தையும், அவர்களின் சத்தியம் அவர்களின் சாட்சியத்தையும் முந்திக் கொள்ளம். என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

இப்ராஹீம் நகயீ(ரஹ்), ‘(சிறுவர்களான) எங்களை அவர்கள் (நபித் தோழர்கள்), ‘அஷ்ஹது பில்லாஹ்’ அல்லாஹ்வைக் கொண்டு சாட்சியம் அளிக்கிறேன்’ என்றோ, ‘அல்லாஹ்வுடன் செய்த ஒப்பந்தப்படி’ என்றோ கூறினால் கடிந்து (கண்டித்து) வந்தார்கள்” என்று கூறினார்.

பாகம் 3, அத்தியாயம் 52, எண் 2653

அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடம் பெரும் பாவங்கள் பற்றிக் கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வுக்கு இணை வைப்பது, பெற்றோருக்குத் துன்பம் கொடுப்பது, தற்கொலை செய்து கொள்வது, பொய்சாட்சி சொல்வது ஆகியன (பெரும் பாவங்களாகும்)” என்று கூறினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 52, எண் 2654

அபூ பக்ரா(ரலி) அறிவித்தார். (ஒரு முறை) ‘பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?’ என்று நபி(ஸல்) அவர்கள் (மூன்று முறை) கேட்டார்கள். மக்கள், ‘ஆம், இறைத்தூதர் அவர்களே! (அறிவியுங்கள்)” என்றார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வுக்கு இணைவைப்பதும், பெற்றோருக்குத் துன்பம் தருவதும் (தான் அவை)” என்று கூறிவிட்டு, சாய்ந்து கொண்டிருந்தவர்கள் எழுந்து அமர்ந்து, ‘அறிந்து கொள்ளுங்கள்; பொய் சாட்சியமும் (மிகப் பெரும்பாவம்) தான்” என்று கூறினார்கள். ‘நிறுத்திக் கொள்ளக் கூடாதா’ என்று நாங்கள் சொல்கிற அளவுக்கு அதை (இறுதியாகச் சொன்னதை) திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டேயிருந்தார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 52, எண் 2655

ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஒருவர் பள்ளிவாசலில் குர்ஆன் ஓதுவதைக் கேட்டு, ‘அல்லாஹ் அவருக்குக் கருணை புரியட்டும். நான் இன்னின்ன அத்தியாயத்திலிருந்து (சற்று) மறந்து விட்டிருந்த இன்னின்ன வசனத்தை எனக்கு அவர் நினைவூட்டிவிட்டார்” என்று கூறினார்கள்.

ஆயிஷா(ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பில் பின்வரும் வரிகள் அதிகப்படியாக இடம் பெற்றுள்ளன:

நபி(ஸல்) அவர்கள் என் வீட்டில் தஹஜ்ஜுத் தொழுகை தொழுதார்கள். அப்பாத் இப்னு பிஷ்ர்(ரலி) பள்ளிவாசலில் தொழுது கொண்டிருக்க, அவரின் (குர்ஆன் ஓதுகின்ற) குரலைச் செவிமடுத்து (என்னிடம்), ‘ஆயிஷாவே, இது அப்பாதின் குரலா?’ என்று கேட்டார்கள். ‘ஆம் (இது அப்பாதின் குரல் தான்)” என்று நான் பதிலளித்ததும் நபி(ஸல்) அவர்கள், ‘இறைவா! அப்பாதிற்குக் கருணை செய்” என்று பிரார்த்தித்தார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 52, எண் 2656

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். பிலால்(ரலி) இரவில் பாங்கு சொல்வார்கள். எனவே, அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம்(ரலி) (ஃபஜ்ருக்கு) பாங்கு சொல்லும் வரை (ஸஹருக்காக) உண்ணுங்கள்; பருகுங்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மேலும், இப்னு உம்மி மக்தூம்(ரலி) கண்பார்வையற்றவராக இருந்தார்கள். மக்கள் ‘காலை நேரம் வந்துவிட்டது’ என்று அவரிடம் கூறும் வரை அவர் பாங்கு சொல்லமாட்டார்.

பாகம் 3, அத்தியாயம் 52, எண் 2657

மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) கூறினார். நபி(ஸல்) அவர்களிடம் சில அங்கிகள் வந்தன. என் தந்தை மக்ரமா(ரலி) என்னிடம், ‘நாம் நபி(ஸல்) அவர்களிடம் செல்வோம். அவர்கள் நமக்கு அவற்றிலிருந்து எதையேனும் தருவார்கள்” என்று கூறினார்கள். என் தந்தை (நபி(ஸல்) அவர்களின் வீட்டு) வாசலருகே நின்று பேசினார்கள். நபி(ஸல்) அவர்கள் அவரின் குரலைப் புரிந்து கொண்டு, தம்முடன் ஓர் அங்கியை எடுத்துக்கொண்டு, அதன் நிறைகளைக் காட்டியபடி வெளியே வந்தார்கள். அப்போது அவர்கள், ‘உனக்காக இதை நான் எடுத்து வைத்தேன்; உனக்காக இதை நான் எடுத்து வைத்தேன்” என்று கூறிக் கொண்டிருந்தார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 52, எண் 2658

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். “பெண்களின் சாட்சியம் ஆண்களின் சாட்சியத்தில் பாதியளவு அல்லவா?’ என்று நபி(ஸல்) அவர்கள் (பெண்களை நோக்கிக்) கேட்டார்கள். அவர்கள், ‘ஆம் (பாதியளவு தான்)” என்று பதிலளித்தார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அதுதான் அவளுடைய அறிவின் குறைபாடாகும்” என்று கூறினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 52, எண் 2659

உக்பா இப்னு ஹாரிஸ்(ரலி) அறிவித்தார். நான் உம்மு யஹ்யா பின்த்து அபீ இஹாபை மணந்தேன். ஒரு கருப்பு நிற அடிமைப் பெண் வந்து, ‘நான் உங்கள் இருவருக்கும் (உனக்கும் உன் மனைவிக்கும்) பாலூட்டியிருக்கிறேன்.” என்று கூறினாள். இச்செய்தியை நான் நபி(ஸல்) அவர்களிடம் கூறினேன். அவர்கள் (முகம் திருப்பி) என்னை அலட்சியம் செய்தார்கள். நான் (என் இருப்பிடத்திலிருந்து விலம் (அவர்களின் முகம் இருக்கும் பக்கம்) சென்று அவர்களிடம் அதை (திரும்பக்) கூறினேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அவள் உங்கள் இருவருக்கும் பாலூட்டியிருப்பதாக வாதிட்டுக் கொண்டிருக்கும் நிலையில் எப்படி (நீங்கள் இருவரும் கணவன் மனைவியாக வாழ முடியும்)?’ என்று கேட்டார்கள்; என்னை அவளுடன் சேர்ந்து வாழக் கூடாதென்று விலக்கினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 52, எண் 2660

உக்பா இப்னு ஹாரிஸ்(ரலி) அறிவித்தார். நான் ஒரு பெண்ணை மணமுடித்தேன். வேறொரு பெண் வந்து, ‘நான் உங்கள் இருவருக்கும் (உனக்கும், உன் மனைவிக்கும்) பாலூட்டியிருக்கிறேன்” என்று கூறினார். நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன்; (அவர்களிடம் இது பற்றிக் கேட்டதற்கு), ‘(நீயும் உன் மனைவியும் ஒரே செவிலித்தாயிடம் பால் குடித்ததாகக்) கூறப்பட்டுவிட்டு பிறகு, எப்படி (நீங்கள் இருவரும் சேர்ந்து வாழ முடியும்)? அவளை உன்னிடமிருந்து பிரித்து விடு” என்றோ அது போன்றதையோ கூறினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 52, எண் 2661

ஆயிஷா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு பயணம் புறப்பட விரும்பினால் தம் மனைவிமார்களிடையே (எவரைப் பயணத்தில் தம்முடன் அழைத்துச் செல்வது எனத் தீர்மானித்திட) சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். அவர்களில் எவருடைய (பெயருள்ள) சீட்டு வருகிறதோ அவரைத் தம்முடன் அழைத்துக் கொண்டு பயணம் புறப்படுவார்கள். இவ்வாறே, அவர்கள் செய்த ஒரு புனிதப் போரின்போது (பயணத்தில் உடன் அழைத்துச் செல்ல) எங்களுக்கிடையே சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். என்னுடைய (பெயருள்ள) சீட்டு வந்தது. எனவே, நான் அவர்களுடன் (பயணம்) புறப்பட்டுச் சென்றேன். இது (பெண்கள் பர்தா முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்னும்) ஹிஜாபின் சட்டம் அருளப்பட்ட பிறகு நடந்ததாகும். நான் ஓர் ஒட்டகச் சிவிகையில் வைத்துச் சுமந்து செல்லப்படுவேன். நான் அதில் இருக்கும் நிலையிலேயே கீழே இறக்கி வைக்கப்படுவேன். நபி(ஸல்) அவர்கள் அந்தப் போர் முடிந்து புறப்பட்டபோது நாங்கள் மதீனாவை நெருங்கிய வேளையில் இரவு நேரத்தில் (ஓரிடத்தில்) தங்கும்படி அறிவித்தார்கள்.

நான் (சிவிகையிலிருந்து) எழுந்து (மலஜலம் கழிப்பதற்காக மறைவிடம் தேடி) படையைக் கடந்து சென்றேன். என் (மலஜலத்) தேவையை நான் முடித்தபோது முகாமிட்டிருந்த இடத்தை நோக்கிச் சென்றேன். அப்போது என் நெஞ்சை நான் தொட்டுப் பார்த்தபோது, (என் கழுத்திலிருந்த) யமன் நாட்டு முத்துமாலையொன்று அறுந்து (விழுந்து) விட்டிருந்தது. எனவே, நான் திரும்பிச் சென்று என் மாலையைத் தேடலானேன்; அதைத் தேடிக் கொண்டிருந்தது (நான் சீக்கிரம் திரும்பிச் சென்று படையினருடன் சேரவிடாமல்) என்னைத் தாமதப்படுத்திவிட்டது. எனவே, என்னை எடுத்துச் சென்று ஒட்டகத்தில் வைப்பவர்கள், என் சிவிகைக்குள் நான் இருப்பதாக எண்ணிக் கொண்டு அதைச் சுமந்து சென்று, நான் வழக்கமாக சவாரி செய்கிற என் ஒட்டகத்தின் மீது வைத்துக் கட்டிவிட்டனர். அந்தக் கால கட்டத்தில் பெண்கள் பருமனாக இன்றி மெலிந்தவர்களாக இருந்தனர். அவர்களுக்கு சதை போட்டிருக்கவில்லை. சிறிதளவு உணவே அவர்கள் உண்பார்கள். எனவே, சிவிகையைத் தூக்கியபோது அதன் (இலேசான) கனத்தை மக்கள் வித்தியாசமாகக் கருதவில்லை. மேலும், நான் வயது குறைந்த சிறுமியாக இருந்தேன். அவர்கள் ஒட்டகத்தை (முன்னே) அனுப்பிவிட்டு நடக்கலானார்கள். படையினர் சென்ற பிறகு நான் (தொலைந்து போன) என் மாலையைப் பெற்றுக் கொண்டேன்.

பிறகு, நான் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு வந்தேன். அப்போது, அங்கு ஒருவரும் இல்லை. நான் ஏற்கனவே தங்கியிருந்த இடத்தைத் தேடிச் சென்று அங்கு அமர்ந்து கொண்டேன். படையினர், நான் காணாமல் போயிருப்பதைக் கண்டு என்னிடம் திரும்பி வருவார்கள் என்று நான் கருதினேன். நான் அப்படியே உட்கார்ந்தபடி இருந்த பொழுது என் கண்கள் (உறக்கம்) மிகைத்து நான் தூங்கி விட்டேன். ஸஃப்வான் இப்னு முஅத்தல் அல் ஸுலமீ என்பவர் படையினர் பின் அணியில் இருந்தார். அவர், நான் தங்கியிருந்த இடத்தில் காலை வரை தங்கி விட்டிருந்தார். அவர் (காலையில் விழித்தெழுந்தவுடன்) தூங்கிக் கொண்டிருந்த ஓர் உருவத்தை (என்னை)ப் பார்த்துவிட்டு என்னிடம் வந்தார். பர்தாவுடைய சட்டம் அருளப்படுவதற்கு முன்னால் அவர் என்னைப் பார்த்திருந்தார். (எனவே, என்னை அடையாளம் புரிந்து கொண்டு) அவர், ‘இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் நாம் அல்லாஹ்விற்கே உரியவர்கள்; மேலும், நாம் அவனிடமே திரும்பிச் செல்லவிருக்கிறோம்” என்று கூறும் சப்தத்தைக் கேட்டு நான் கண் விழித்தேன். பிறகு, அவர் தம் ஒட்டகத்தை மண்டியிடச் செய்து, அதன் முன்னங்காலை (தன் காலால்) மிதித்துக் கொள்ள நான் அதன் மீது ஏறிக் கொண்டேன். அவர் என்னுடன் ஒட்டகத்தை ஒட்டிக் கொண்டு நடக்கலானார். இறுதியில் நாங்கள் படையினரை வந்தடைந்தோம். அதற்குள் அவர்கள் (மதிய ஓய்வுக்காக) நடுப்பகல் நேரத்தில் (ஓரிடத்தில்) தங்கி விட்டிருந்தார்கள். (இப்போது எங்களைக் கண்டு அவதூறு பேசி) அழிந்தவர்கள் அழிந்தார்கள். என் மீது அவதூறு (பிரசாரம்) செய்ய (தலைமைப்) பொறுப் பேற்றிருந்தவன் அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி ஸலூல் (எனும் நயவஞ்சகர்களின் தலைவன்) ஆவான். நாங்கள் மதீனாவை வந்தடைந்தோம். அங்கு ஒரு மாத காலம் நான் நோயுற்று விட்டேன். மக்களோ அவதூறு கற்பித்தவர்களின் சொல்லைப் பரப்பிக் கொண்டிருந்தார்கள். நான் நோயுற்று விடும்போது நபி(ஸல்) அவர்கள் வழக்கமாக என்னிடம் காட்டுகிற பரிவை (இந்த முறை) நான் நோயுற்றிருக்கும்போது அவர்களிடம் காணமுடியாமல் போனது எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவர்கள் வருவார்கள்; சலாம் சொல்வார்கள்; பிறகு, ‘அவள் எப்படி இருக்கிறாள்?’ என்று கேட்பார்கள்; (பிறகு போய் விடுவார்கள்.) அவ்வளவு தான். (என்னைக் குறித்து வெளியே பேசப்பட்டு வந்த அவதூறில்) ஒரு சிறிதும் எனக்குத் தெரியாது. இறுதியில், நான் (நோயிலிருந்து குணமடைந்து விட, நானும் உம்மு மிஸ்தஹ்(ரலி) நானும் உம்மு மிஸ்தஹ்(ரலி) அவர்களும் நாங்கள் கழிப்பிடமாகப் பயன்படுத்தி வந்த ‘மனாஸிஉ’ என்னுமிடத்தை நோக்கிச் சென்றோம். நாங்கள் இரவு நேரங்களில் மட்டும் இவ்வாறு செல்வோம். எங்கள் வீடுகளுக்கு அரும்லேயே கழிப்பிடங்களை அமைத்துக் கொள்வதற்கு முன்னால் நாங்கள் இவ்வாறு அங்கு சென்று கொண்டிருந்தோம். எங்களுடைய இந்த வழக்கம் வனாந்திரங்களில் வசித்து வந்த முற்கால அரபுகளின் வழக்கத்தை ஒத்ததாயிருந்தது. நானும் அபூ ருஹ்மின் மகளாகிய உம்மு மிஸ்தஹும் நடந்து முன்னால் சென்று கொண்டிருந்தோம். உம்மு மிஸ்தஹை அவர் அணிந்திருந்த கம்பளி அங்கி இடறியது. அப்போது அவர், ‘மிஸ்தஹ் நாசமாகட்டும்” என்று கூறினார். நான், ‘மிக மோசமான சொல்லைச் சொல்லிவிட்டாய். பத்ருப் போரில் பங்கெடுத்த ஒரு மனிதரையா நீ ஏசுகிறாய்” என்று கூறினேன். அதற்கு அவர், ‘அம்மா! அவர்கள் என்ன சொன்னார்கள் என்று நீங்கள் கேள்விப்படவில்iயா?’ என்று கூறிவிட்டு, அவதூறு கற்பித்தவர்கள் சொன்ன (அபாண்டத்)தை எனக்குத் தெரிவித்தார். அதைக் கேட்டு என் நோய் இன்னும் அதிகரித்துவிட்டது. நான் என் வீட்டிற்குத் திரும்பி வந்தபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம் வந்து, ‘அவள் எப்படி இருக்கிறாள்?’ என்று கேட்டார்கள். நான் ‘என் தந்தையரிடம் செல்ல எனக்கு அனுமதி கொடுங்கள்” என்று கேட்டார்கள். நான் ‘என்று கேட்டேன். அப்போது நான் அவ்விருவரிடமிருந்தும் (உண்மையிலேயே அப்படியொரு வதந்தி உலவுகிறதூ என்று விசாரித்து என் மீதான அவதூறுச்) செய்தியை உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பினேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எனக்கு அனுமதியளிக்கவே நான் என் தாய்யதந்தையரிடம் சென்றேன். என் தாயாரிடம், ‘மக்கள் (என்னைப் பற்றி) என்ன பேசிக் கொள்கிறார்கள்?’ என்று கேட்டேன். என் தாயார், ‘என் அன்பு மகளே! உன் மீது இந்த விஷயத்பை; பெரிதுபடுத்திக் கொள்ளாதே. அல்லாஹ்வின் மீதாணையாக! சக்களத்திகள் பலரும் இருக்க, (தன்) கணவரிடம் பிரியத்துக்குரியவளாக இருக்கும் அழகுமிக்க பெண்ணொருத்தியைக் குறித்து அவளுடைய சக்களத்திகள் அதிகமாக (வதந்திகள்) பேசத் தான் செய்வார்கள். அவ்வாறு பேசாமலிருப்பது (பெரும்பாலும்) குறைவேயாகும்” என்று கூறினார்கள். நான், ‘சுப்ஹானல்லாஹ் (இறைவன் தூய்மையானவன்!) இப்படியா மக்கள் பேசிக் கொள்கிறார்கள்?’ என்று கேட்டேன். அன்றிரவை இடைவிடாமல் அழுது கொண்டும் தூக்கம் சிறிது மின்றியும் காலை வரை கழித்தேன். காலை நேரம் வந்தது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் மனைவியை (என்னை)ப் பிரிந்து விடுவது குறித்து ஆலோசனை கேட்பதற்காக அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) அவர்களையும், உஸாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களையும் அழைத்தார்கள். அப்போது ‘வஹீ’ (தற்காலிகமாக) நின்று போயிருந்தது. உஸாமா(ரலி) அவர்களோ தம் உள்ளத்தில் நபி(ஸல்) அவர்களின் மனைவிமார்கள் மீதிருந்த பாசத்தை அடிப்படையாகக் கொண்டு ஆலோசனை கூறினார்கள். ‘இறைத்தூதர் அவர்களே! தங்கள் துணைவியரிடம் நல்ல (குணத்)தைத் தவிர வேறெதையும் நான் அறிய மாட்டேன்” என்று அவர்கள் கூறினார்கள். அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) அவர்களோ (நபி(ஸல்) அவர்களின் மனக் கவலையைக் குறைத்து ஆறுதல் கூறும் நோக்குடன்), ‘இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ் உங்களுக்கு எந்த நெருக்கடியையும் ஏற்படுத்தவில்லை. அவர் (ஆயிஷா) அன்றிப் பெண்கள் நிறையப் பேர் இருக்கின்றனர். பணிப் பெண்ணைக் கேளுங்கள். அவள் உங்களிடம் உண்மையைச் சொல்வாள்” என்று கூறினார்கள். எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (பணிப் பெண்ணான) பரீராவை அழைத்து, ‘பரீராவே! நீ ஆயிஷாவிடம் உனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் (செயல்) எதையாவது பார்த்திருக்கிறாயா?’ என்று கேட்டார்கள். அதற்கு பரீரா(ரலி), ‘தங்களை சத்திய(மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீது ஆணையாக! அவர் (குழைத்து வைத்த) மாவை அப்படியே போட்டுவிட்டு உறங்கிப் போய்விடுவார்; வீட்டிலுள்ள ஆடு வந்து அதைத் தின்றுவிடும்; அத்தகைய (விபரமறியாத) இளவயதுச் சிறுமி என்பதைத் தவிர அவரைக் குறை சொல்லக்கூடிய விஷயம் எதையும் அவரிடம் நான் பார்க்கவில்லை” என்று பதில் கூறினார். உடனே, அன்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மிம்பரில் ஏறி) நின்று, அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி சலூலை தண்டிப்பதற்கு (தமக்கு) உதவும்படி (தம் தோழர்களிடம்) கோரினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘என் வீட்டார் விஷயத்தில் (வதந்தி கிளப்பி) எனக்கு மன வேதனையளித்த ஒரு மனிதனை தண்டித்திட எனக்கு உதவிபுரிபவர் யார்? அவர்கள் (அவதூறு) கூறியுள்ளனர். ஆனால், அவரைப் பற்றி நல்லதையே அறிவேன். அவர் என் வீட்டாரிடம் என்னுடனேயல்லாமல் (நான் வீட்டிலிருக்கும் போதே தவிர) வந்ததில்லை” என்று கூறினார்கள். உடனே, ஸஅத் இப்னு முஆத்(ரலி) எழுந்து வின்று, ‘இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! அவனை தண்டிக்க நான் தங்களுக்கு உதவுகிறேன். அவன் (எங்கள்) அவ்ஸ் குலத்தைச் சேர்ந்தவனாயிருந்தால் நாங்கள் அவனுடைய கழுத்தைத் துண்டித்து விடுகிறோம். எங்கள் சகோதரர்களான கஸ்ரஜ் குலத்தைச் சேர்ந்தவனாக இருந்தால் (என்ன செய்ய வேண்டுமென்று) தாங்கள் உத்தரவை நாங்கள் நிறைவேற்றுகிறோம்” என்று கூறினார்கள்.

உடனே, கஸ்ரஜ் குலத் தலைவராயிருந்த ஸஅத் இப்னு உபாதா(ரலி) எழுந்து நின்று, ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நீர் பொய்யுரைத்தீர்; அவனை நீர் கொல்லமாட்டீர். அது உம்மால் முடியாது” என்று கூறினார். அதற்கு முன் அவர் நல்ல மனிதராகத் தான் இருந்தார்; ஆயினும், குலமாச்சரியம் அவரை அவ்வாறு பேசத் தூண்டிவிட்டது. உடனே, உசைத் இப்னு ஹுளைர்(ரலி) எழுந்து நின்று, உபாதா(ரலி) அவர்களை நோக்கி, ‘நீர் தாம் பொய்யுரைத்தீர். அல்லாஹ்வின் மீதாணையாக! அவனை நாங்கள் கொன்றே தீருவோம். நீர் ஒரு நயவஞ்சகர். (அதனால்தான்) நயவஞ்சகர்களின் சார்பாக வாதிடுகிறீர்” என்று கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மிம்பரின் மீது நின்று கொண்டிருக்க, அவ்ஸ், கஸ்ரஜ் ஆகிய இரண்டு குலத்தாரும் ஒருவர் மீதொருவர் பாய்ந்து சண்டையிட முற்பட்டனர். நபி(ஸல்) அவர்கள் மிம்பரிலிருந்து இறங்கி அவர்கள் மௌனமாகும் வரை அவர்களை அமைதிப்படுத்தினார்கள். பிறகு அவர்களும் மௌனமானார்கள். அன்று நான் இடைவிடாமல் அழுது கொண்டிருந்தேன்; சிறிதும் உறங்கவில்லை. காலையானதும் என் தாய் தந்தையர் என் அருகேயிருந்தனர். நானோ இரண்டு இரவுகள் ஒரு பகல் (முழுக்க) என் ஈரல் பிளந்து விடுமோ என்றெண்ணும் அளவிற்கு அழுதிருந்தேன். நான் அழுதவண்ணமிருக்கும்போது என் தாய்தந்தையார் என்னிடம் அமர்ந்திருக்க, அன்சாரிப் பெண்ணொருத்தி வந்து உள்ளே வர அனுமதி கேட்டாள். நான் அவளுக்கு அனுமதியளித்தவுடன் என்னோடு சேர்ந்து அவளும் அழுதபடி அமர்ந்தாள். நாங்கள் இவ்வாறு இருந்து கொண்டிருக்கும்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வந்து அமர்ந்தார்கள். என்னைப் பற்றி அவதூறு சொல்லப்பட்ட நாளிலிருந்து அவர்கள் என்னருகே அமர்ந்ததில்லை. மேலும், ஒரு மாத காலம் வரை என் விஷயத்தில் (அல்லாஹ்விடமிருந்து தீர்ப்பு) எதுவும் அவர்களுக்கு வஹீயாக அருளப்படவில்லை. பிறகு நபி(ஸல்) அவர்கள், ‘லாஇலாஹ இல்லல்லாஹ்’ (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை)” என்று கூறிவிட்டு, ‘ஆயிஷாவே! உன்னைக் குறித்து இன்னின்னவாறு எனக்குச் செய்தி கிடைத்துள்ளது. நீ நிரபராதியாக இருந்தால் அல்லாஹ் விரைவில் உன்னைக் குற்றமற்றவள் என்று அறிவித்து விடுவான். நீ குற்றமேதும் செய்திருந்தால் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி, அவன் பக்கம் திரும்பி விடு. ஏனெனில், அடியான் தன் பாவத்தை ஒப்புக் கொண்டு (மனம் திருந்தி) பாவ மன்னிப்புக் கோரினால் அவனுடைய கோரிக்கையை ஏற்று அல்லாஹ் அவனை மன்னிக்கிறான்” என்றார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், தம் பேச்சை முடித்தபோது என் கண்ணீர் (முழுவதுமாக) நின்று போய் விட்டிருந்தது. அதில் ஒரு துளியும் எஞ்சியிருக்கவில்லை. நான் என் தந்தையிடம், ‘அல்லாஹ்வின் தூதருக்கு என் சார்பாக பதில் கூறுங்கள்” என்று சொன்னேன். அதற்கு என் தந்தை, ‘அல்லாஹ்வின் தூதரிடம் என்ன (பதில்) சொல்வது என்று கூறினார்கள். நான் என் தாயாரிடம், ‘இறைத்தூதர் சொன்னதற்கு என் சார்பாக பதில் கூறுங்கள்” என்று சொன்னேன். அதற்கு என் தாயார், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு என்ன (பதில்) சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை” என்று கூறினார்கள். நானோ இளவயதுடைய சிறுமியாக இருந்தேன். குர்ஆனிலிருந்து அதிகமாக (ஓதத்) தெரியாதவளாகவும் இருந்தேன். எனவே, ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள், மக்கள் என்னைப் பற்றிப் பேசியவற்றைக் கேட்டிருக்கிறீர்கள் என்பதையும் அது உங்கள் மனதில் பதிந்து போய், அதை உண்மையொன்று நம்பி விட்டீர்கள் என்பதையும் அறிவேன். நான் குற்றமற்றவள் என்று நானே தங்களிடம் சொன்னால்… நான் குற்றமற்றவள் என்பதை அல்லாஹ் அறிவான்… நீங்கள் அதை நம்பப் போவதில்லை; நான் குற்றமேதும் புரிந்திருப்பதாக ஒப்புக் கொண்டால் (நான் சொல்வதை அப்படியே உண்மையொன்று ஏற்று) என்னை நம்பி விடுவீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்கும் உங்களுக்கும் (நபி) யூசுஃப்(அலை) அவர்களின் தந்தையை (யஃகூப்(அலை) அவர்களை)யே நான் உவமையாகக் கருதுகிறேன். (அதாவது): (இதை) சகித்துக் கொள்வதே நல்லது; நீங்கள் புனைந்து சொல்லும் விஷயத்தில் அல்லாஹ்விடம் தான் நான் பாதுகாப்புத் கோர வேண்டும். (குர்ஆன் 12:83) பிறகு, அல்லாஹ் நான் குற்றமற்றவள் என அறிவிப்பான் என்ற நம்பிக்கையுடன் நான் என் படுக்கையில் (வேறு பக்கமாகத்) திரும்பிப் படுத்துக் கொண்டேன். ஆயினும், திருக்குர்ஆனில் என் விஷயத்தைப் பற்றிப் பேசுகிற அளவிற்கு நான் ஒன்றும் முக்கியத்துவமுடையவளல்ல் மிகச் சாதாரணமானவள் தான் என்று என்னைக் குறித்து நான் கருதிக் கொண்டிருக்க, அல்லாஹ்வின் மீதாணையாக! இறைவன் என் விஷயத்தில் வஹீயையே -வேத வெளிப்பாட்டையே (திருக்குர்ஆனில்) அருளுவான் என்று நான் நினைத்தும் பார்க்கவில்லை. மாறாக, ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னை அல்லாஹ் குற்றமற்றவள் என்று உணர்த்தும் கனவு எதையாவது தூக்கத்தில் காண்பார்கள்” என்றே எதிர்பார்த்தேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நபி(ஸல்) அவர்கள் தாம் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்திருக்கவுமில்லை; வீட்டிலிருந்து எவரும் வெளியே செல்லவுமில்லை; அதற்குள் அல்லாஹ், நபி(ஸல்) அவர்களின் மீது (திருக்குர்ஆன் வசனங்களை) அருள ஆரம்பித்துவிட்டான். உடனே, (வேத வெளிப்பாடு வருகிற நேரங்களில்) ஏற்படும் கடும் சிரமமான நிலை அவர்களுக்கு ஏற்பட்டது; அது கடும் குளிர் காலமாயிருந்தும் அவர்களின் மேனியிலிருந்து முத்துக்களைப் போல் வியர்வைத் துளிகள் வழியத் தொடங்கின. அந்த நிலை அல்லாஹ்வின் தூதரைவிட்டு நீங்கியவுடன் அவர்கள் சிரித்துக் கொண்டே முதல் வார்த்தையாக, ‘ஆயிஷாவே! அல்லாஹ்வைப் புகழ்ந்து நன்றி செலுத்து. உன்னை அல்லாஹ் குற்றமற்றவள் என அறிவித்துவிட்டான்” என்று கூறினார்கள். என் தாயார், ‘அல்லாஹ்வின் தூதரிடம் எழுந்து செல்” என்று கூறினார்கள். நான், ‘மாட்டேன்; அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்களிடம் செல்ல மாட்டேன். அல்லாஹ்வை மட்டுமே புகழ்ந்து, அவனுக்கே நன்றி செலுத்துவேன்” என்றேன். அப்போது அல்லாஹ், ‘(ஆயிஷாவின் மீது) அவதூறு பரப்பியவர்கள் உங்களில் ஒரு குழுவினர் தான்” என்று தொடங்கும் (திருக்குர்ஆன் 24:11) வசனங்களை அருளியிருந்தான். என் குற்றமற்ற நிலையைத் தெளிவுபடுத்தி அல்லாஹ் இதை அருளியபோது (என் தந்தை) அபூ பக்ர்(ரலி), ‘அல்லாஹ்வின் மீதாணையாக! (என் மகள்) ஆயிஷாவைப் பற்றி (அவதூறு) கூறிய பின்பு ஒருபோதும் மிஸ்தஹுக்காக செலவிட மாட்டேன்” என்று கூறினார்கள். மிஸ்தஹ் இப்னு உஸாஸா தம் உறவினர் என்பதால் அவருக்காக அபூ பக்ர்(ரலி) செலவிட்டு வந்தார்கள்… உடனே அல்லாஹ், ‘உங்களிடையேயுள்ள (பொருள்) அருளப் பெற்றோரும் (பிறருக்கு உதவும்) இயல்புடையோரும், (தங்கள்) உறவினர்களுக்கோ, ஏழைகளுக்கோ, இறைவழியில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கோ (எதுவும்) கொடுக்க மாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம். (அவர்களால் தங்களுக்கு ஏதும் வருத்தம் ஏற்பட்டிருந்தால்) அதனை மன்னித்துப் (பிழைகளைப்) பொருட்படுத்தாமல்விட்டு விடட்டும். அல்லாஹ் உங்களுக்கு மன்னிபளிப்பதை நீங்கள் விரும்பமாட்டீர்களா? அல்லாஹ் மிகவும் மன்னிப்போனும் கிருபையுடையோனுமாய் இருக்கிறான்” என்னும் (திருக்குர்ஆன் 24:22) இறைவசனத்தை அருளினான். அதன் பிறகு அபூ பக்ர்(ரலி), ‘ஆம், அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் எனக்கு மன்னிப்பளிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என்று கூறிவிட்டு, மிஸ்தஹ்(ரலி) அவர்களுக்கு ஏற்கனவே தாம் செய்து வந்த (பொருள்) உதவியைத் தொடரலானார்கள்.

(திருக்குர்ஆனில் என்னைப் பற்றிய வசனங்கள் அருளப்படுவதற்கு முன்னால்) இறைத்தூதர் என் விஷயத்தில் (தம் இன்னொரு மனைவியான) ஸைனப் பின்த்து ஜஹ்ஷ்(ரலி) அவர்களிடம் விசாரித்தார்கள்; ‘ஸைனபே! நீ (ஆயிஷாவைப் பற்றி) என்ன அறிந்திருக்கிறாய்? (அவர் விஷயத்தில்) என்ன பார்த்திருக்கிறாய்?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘இறைத்தூதர் அவர்களே! என் காதுகளையும் என் கண்களையும் (அவற்றின் மீது பழி சுமத்தாமல்) பாதுகாத்துக் கொள்வேன். அல்லாஹ்வின் மீதாணையாக! ஆயிஷாவைக் குறித்து நல்லதையே அறிவேன்” என்று பதிலளித்தார்கள். ஸைனப்(ரலி) தாம் எனக்கு (அழம்லும் நபி(ஸல்) அவர்களின் அன்பிலும்) போட்டியாக இருந்தார்கள். ஆயினும், அல்லாஹ் அவர்களை இறையச்சமுடைய, பேணுதலான பண்பையளித்துப் பாதுகாத்திருந்தான்.

இந்த அறிவிப்பு இன்னும் பலர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகம் 3, அத்தியாயம் 52, எண் 2662

அபூ பக்ர்(ரலி) கூறினார். ஒருவர் இன்னொரு மனிதரைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் புகழ்ந்து பேசினார். நபி(ஸல்) அவர்கள், ‘அழிந்து போவீர். உம் தோழரின் கழுத்தை நீர் துண்டித்து விட்டீர். உம் தோழரின் கழுத்தை நீர் துண்டித்து விட்டீர்” என்று (பலமுறை) கூறினார்கள். பிறகு, ‘தன் சகோதரனைப் புகழ்ந்தே ஆகவேண்டும் என்ற நிலையில் உங்களில் இருப்பவர், ‘இன்னாரை நான் இப்படிப்பட்டவர் என்று எண்ணுகிறேன். அல்லாஹ்வே அவருக்குப் போதுமானவன். அல்லாஹ் (உண்மை நிலையை அறிந்தவனாக) இருக்க, அவனை முந்திக் கொண்டு நான் யாரையும் தூய்மையானவர் என்று கூற மாட்டேன். அவரை இன்னின்ன விதமாக எண்ணுகிறேன்” என்று கூறட்டும். அந்தப் பண்பை அவர் அந்த மனிதரிடமிருந்து அறிந்திருந்தால் மட்டுமே இப்படிக் கூறட்டும்” என்றார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 52, எண் 2663

அபூ மூஸா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஒருவர் மற்றொரு மனிதரைப் புகழ்ந்து கொண்டிருப்பதையும் அவரை மிகைப்படுத்தி (ஒரேயடியாக உயர்த்திப்) புகழ்ந்து கொண்டிருப்பதையும் செவியுற்றார்கள். உடனே, ‘நீங்கள் அந்த மனிதரின் முதுகை நாசமாக்கி விட்டீர்கள் – அல்லது – துண்டித்து விட்டீர்கள்” என்று கூறினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 52, எண் 2664

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நான் பதினான்கு வயதுடையவனாக இருக்கும்போது, உஹுதுப் போர் நடந்த காலகட்டத்தில் நபி(ஸல்) அவர்கள் என்னைத் தமக்கு முன்பாக வரவழைத்தார்கள்; ஆனால், (போரில் கலந்து கொள்ள) எனக்கு அனுமதியளிக்கவில்லை. அகழ்ப் போரின் போதும் என்னைத் தமக்கு முன்பாக வரவழைத்தார்கள். அப்போது நான் பதினைந்து வயதுடையவனாயிருந்தேன். அப்போது, போரில் கலந்துகொள்ள எனக்கு அனுமதியளித்தார்கள்.

அறிவிப்பாளர் நாஃபிஉ(ரஹ்) கூறினார்: உமர் இப்னு அப்தில் அஸீஸ்(ரஹ்) கலீஃபாவாக இருந்தபோது அவர்களிடம் நான் சென்றேன். (இப்னு உமர்(ரலி) அவர்களின்) இந்த ஹதீஸை அவர்களுக்கு அறிவித்தேன். அவர்கள், ‘(அப்படியென்றால்) இதுதான் சிறியவருக்கும் பெரியவருக்குமிடையில் (வேறுபடுத்திக் காட்டும்) எல்லைக் கோடாகும்” என்று கூறிவிட்டு, பதினைந்து வயதை அடைந்தவர்களுக்கு (ராணுவப் பணிக்கான ஊதியத் தொகையை) நிர்ணயிக்கும்படி தம் ஆளுநர்களுக்கு எழுதினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 52, எண் 2665

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்”‘ஜும்ஆ’ நாளில் குளிப்பது பருவ வயதை அடைந்துவிட்ட ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும். என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 52, எண் 2666-2667

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: ஒரு முஸ்லிமின் செல்வத்தைப் பறித்துக் கொள்வதற்காக, ஒரு பிரமாணத்தின்போது பொய் சொல்லி சத்தியம் செய்கிறவர், அல்லாஹ் அவரின் மீது கோபம் கொண்டிருக்கும் நிலையில் அவனை மறுமையில் சந்திப்பார்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறுகிறார்: அஷ்அஸ் இப்னு கைஸ்(ரலி) (வந்து), ‘அல்லாஹ்வின் மீதாணையாக! என் விவகாரத்தில் தான் இப்படி (நபி(ஸல்) அவர்கள் சொன்னது) நடந்தது. எனக்கும் ஒரு யூதருக்குமிடையே ஒரு நிலம் (பற்றிய தகராறு) இருந்து வந்தது. அந்த யூதர் என் உரிமையை மறுத்தார். நான் நபி(ஸல்) அவர்களிடம் வழக்கைக் கொண்டு சென்றேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘உனக்கு ஆதாரம் ஏதும் உண்டா?’ என்று என்னைக் கேட்டார்கள். நான், ‘இல்லை” என்று பதிலளித்தேன். எனவே, அந்த யூதரிடம் நபி(ஸல்) அவர்கள், ‘(நிலம் உன்னுடையது என்று) சத்தியம் செய்” என்று கூறினார்கள். நான், ‘இறைத்தூதர் அவர்களே! அப்படியென்றால், அவன் (தயங்காமல் பொய்) சத்தியம் செய்து என் செல்வத்தை எடுத்தச் சென்று விடுவானே” என்று கூறினேன். அப்போதுதான், ‘அல்லாஹ்விடம் செய்த ஒப்பந்தத்தையும் தம் சத்தியங்களையும் சொற்ப விலைக்கு விற்பவர்களுக்கு மறுமையில் எவ்வித நற்பேறுமில்லை. இறுதித் தீர்ப்பு நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். மாறாக, அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனை தான் இருக்கிறது” என்னும் திருக்குர்ஆனின் (திருக்குர்ஆன் 03:77) வசனத்தை அல்லாஹ் அருளினான்.

பாகம் 3, அத்தியாயம் 52, எண் 2668

இப்னு அபீ முலைக்கா(ரஹ்) அறிவித்தார். பிரதிவாதி தான் சத்தியம் செய்ய வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் தீர்ப்பளித்ததாக இப்னு அப்பாஸ்(ரலி) எனக்கு (கடிதம்) எழுதினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 52, எண் 2669-2670

அபூ வாயில்(ரஹ்) கூறினார். “ஒரு செல்வத்தை அநியாயமாக அடைவதற்காக, ஒரு பிரமாணத்தின்போது பொய் சத்தியம் செய்பவர், அல்லாஹ் அவரின் மீது கோபம் கொண்டிருக்கும் நிலையில் அவளை (மறுமையில் அவர் சந்திப்பார்)” (என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.) பிறகு, அதை உறுதிப்படுத்தும் விதத்தில் அல்லாஹ், ‘அல்லாஹ்விடம் செய்த ஒப்பந்தத்தையும் தம் சத்தியங்களையும் அற்ப விலைக்கு விற்பவர்களுக்கு மறுமையில் எவ்வித நற்பேறுமில்லை. இறுதித் தீர்ப்பு நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும்மாட்டான்; அவர்களைப் பார்க்கவும் மாட்டான். மாறாக, அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனை தான் இருக்கிறது’ என்னும் (திருக்குர்ஆன் 03:77) வசனத்தை அருளினான்” என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார்: பிறகு அஷ்அஸ்பின் கைஸ்(ரலி) எங்களிடம் வந்து, ‘அபூ அப்திர் ரஹ்மான் (அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) உங்களிடம் என்ன சொல்கிறார்?’ என்று கேட்க, நாங்கள் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) சொன்னதைத் தெரிவித்தோம். அவர் உண்மையே சொன்னார். என் விவகாரத்தில் தான் அந்த வசனம் அருளப்பட்டது. எனக்கும் ஒரு மனிதருக்குமிடையே ஒரு விஷயத்தில் தகராறு இருந்து வந்தது. நாங்கள் அல்லாஹ்வின் தூதரிடம் வழக்கைக் கொண்டு சென்றோம். அவர்கள், ‘உன்னுடைய இரண்டு சாட்சிகள் அல்லது அவரின் சத்தியம் (தீர்ப்பளிக்கத் தேவைப்படுகின்றன”) என்று கூறினார்கள். நான், ‘அப்படியென்றால், அவர் (அந்த யூதர், தயங்காமல்) பொய் சத்தியம் செய்வாரே. (பொய் சத்தியம் செய்வதைப் பற்றி) கவலைப்பட மாட்டாரே” என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘ஒரு பிரமாணத்தின்போது அதன் மூலம் ஒரு சொத்தை அடைந்து கொள்வதற்காகப் பொய் சத்தியம் செய்கிறவன், தன் மீது கோபமுற்ற நிலையில் (மறுமையில்) அல்லாஹ்வைச் சந்திப்பான்” என்று கூறினார்கள்.

“அல்லாஹ், நபி(ஸல்) அவர்களின் இச்சொற்களை உறுதிப்படுத்தி (திருக்குர்ஆனில் ஒரு வசனத்தை) அருளினான்” என்று கூறிவிட்டு அந்த (திருக்குர்ஆன் 03:77) இறைவசனத்தை ஓதிக் காட்டினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 52, எண் 2671

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். ஹிலால் இப்னு உமய்யா(ரலி) தம் மனைவியை ஷரீக் இப்னு சஹ்மாவுடன் இணைத்து விபசாரக் குற்றம் சாட்டினார். நபி(ஸல்) அவர்கள், ‘ஆதாரம் கொண்டுவா! இல்லையென்றால் (அவதூறு செய்ததற்கு தண்டனையாக) உன் முதுகில் கசையடி தரப்படும்” என்று கூறினார்கள். அதற்கு அவர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! எங்களில் ஒருவர், தன் மனைவியின் மேல் ஒரு மனிதரைப் பார்த்தாலும் ஆதாரம் தேடிச் செல்ல வேண்டுமா?’ என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், ‘ஆதாரம் கொண்டு வா! இல்லையென்றால் உன் முதுகில் கசையடி தரப்படும்” என்று மீண்டும் கூறினார்கள்.

அறிவிப்பாளர் கூறுகிறார்: இந்த ஹதீஸை அறிவித்துவிட்டு இப்னு அப்பாஸ்(ரலி) ‘லிஆன்’ தொடர்பான ஹதீஸைக் கூறினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 52, எண் 2672

‘மூன்று பேரிடம் (மறுமை நாளில்) அல்லாஹ் பேசவும் மாட்டாள்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனை உள்ளது. ஒருவர், (மக்களின் போக்குவரத்துப்) பாதையில் உள்ள (தன் உபயோகத்திற்குப் போக, தேவைக்கு மேலுள்ள) மீதமான தண்ணீரை வழிப் போக்கர்களுக்குத் (தராமல்) தடுத்துக் கொள்ளும் மனிதராவார். மற்றொருவர், உலக லாபங்களுக்காக மட்டும் ஓர் ஆட்சியாளரிடம் விசுவாசப் பிரமாணம் செய்தவராவார். அவர் தனக்கு, தான் விரும்புவதைக் கொடுத்தால் (பிரமாணத்தின் அடிப்படையில்) அவரிடம் விசுவாசமாக நடந்து கொள்வார். இல்லையெனில் விசுவாசமாக நடந்து கொள்ளமாட்டார். இன்னொருவர் ஒரு மனிதரிடம் அஸர் தொழுகைக்குப் பிறகு ஒரு பொருளுக்கு விலை கூறி, அந்தப் பொருளுக்கு இன்ன விலையைக் கொடுத்ததாக அல்லாஹ்வின் மீது (பொய்) சத்தியம் செய்ய, (அதை நம்பி) அந்த மனிதர் (அவர் சொன்ன விலைக்கு) அதை எடுத்துக் கொள்ளும்படி செய்தவராவார்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 52, எண் 2673

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” (பிரமாண வாக்குமூலத்தின் போது) ஒரு செல்வத்தை அபகரித்துக் கொள்ளும் நோக்கத்துடன் சத்தியம் செய்பவர், அல்லாஹ் அவரின் மீது கோபமுற்ற நிலையில் (மறுமையில்) அவனை அவர் சந்திப்பார். என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 52, எண் 2674

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஒரு கூட்டத்தாரை சத்தியப் பிரமாணம் அளிக்கும் படி அழைத்தார்கள். அவர்கள் (ஒருவரையொருவர்) முந்திக் கொண்டு வந்தார்கள். அவர்களில் யார் சத்தியம் செய்வதென்று அவர்களிடையே (முடிவு செய்வதற்காகச்) சீட்டுக் குலுக்கிப் பேகுதிபடி நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 52, எண் 2675

அபூ அவ்ஃபா(ரலி) அறிவித்தார். ஒருவர் (கடைத் தெருவில்) தம் சரக்கை (மக்கள் முன்) வைத்து, அல்லாஹ்வின் பெயரால் சத்தியமிட்டு, அதற்கு அவர் தராத விலையைத் தந்திருப்பதாக (பொய்) கூறினார். அப்போது மேற்கண்ட (திருக்குர்ஆன் 03:77) இறைவசனம் அருளப்பட்டது.

பாகம் 3, அத்தியாயம் 52, எண் 2676-2677

அபூ வாயில்(ரஹ்) அறிவித்தார். “ஒரு மனிதரின் செல்வத்தை அபகரித்துக் கொள்வதற்காக, ஒரு பிரமாண (வாக்குமூலத்)தின்போது பொய்யாக சத்தியம் செய்பவர் அல்லாஹ் அவரின் மீது கோபமுற்ற நிலையில் (மறுமையில்) அவனைச் சந்திப்பார்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ் இந்த வாக்கை உறுதிப்படுத்தி, திருக்குர்ஆனின் மேற்கண்ட (திருக்குர்ஆன் 03:77) வசனத்தை இறக்கினான். அப்போது அஷ்அஸ்(ரலி) என்னைச் சந்தித்து, ‘அப்துல்லாஹ் இன்று உங்களிடம் என்ன பேசினார்?’ என்று கேட்க, நான். ‘இன்னின்ன விஷயங்களைப் பேசினார்” என்று கூறினேன். அதற்கு அவர்கள், ‘அந்த வசனம் என் விவகாரத்தில் தான் இறங்கியது” என்று கூறினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 52, எண் 2678

தல்ஹா இப்னு உபைதில்லாஹ்(ரலி) கூறினார். ஒருவர் அல்லாஹ்வின் தூதரிடம் வந்து, இஸ்லாத்தைப் பற்றிக் கேட்கலானார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘பகலிலும் இரவிலும் ஐந்து தொழுகைகள் (தான் இஸ்லாத்தில் கட்டாயக் கடமையான வணக்கம்)” என்று பதில் கூறினார்கள். அவர், ‘இதைத் தவிர (வணக்கம்) ஏதும் என் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?’ என்று கேட்க, ‘இல்லை; நீ தானாக விரும்பிச் செய்யும் (உபரியான) வணக்கத்தைத் தவிர’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மேலும், ரமளான் மாதம் நோன்பு நோற்க வேண்டும் என்றும் அவருக்குக் கூறினார்கள். அவர், ‘இதைத் தவிர வேறேதும் என் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?’ என்று கேட்க, ‘இல்லை; நீ தானாக விரும்பிச் செய்யும் (உபரியான) வணக்கத்தைத் தவிர’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மேலும், ரமளான் மாதம் நோன்பு நோற்க வேண்டும் என்றும் அவருக்குக் கூறினார்கள். அவர், ‘இதைத் தவிர வேறெதும் என் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?’ என்று கேட்க, ‘இல்லை; நீ தானாக விரும்பி நோற்கும் (உபரியான) நோன்பைத் தவிர’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மேலும், இறைத்தூதர் ஸகாத்தையும் அவருக்கு (எடுத்துக்) கூறினார்கள். அவர் ‘இதைத் தவிர வேறெதும் என் மீது (கடமையாக்கப்ப்டடு) உள்ளதா?’ என்று கேட்டார். ‘இல்லை; நீ தானாக விரும்பிச் செலுத்தும் (உபரியான) ஸகாத்தைத் தவிர’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்த மனிதர், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! இதற்கு மேல் நான் அதிகமாகச் செய்யவும் மாட்டேன்; இதைக் குறைத்துச் செய்யவும் மாட்டேன்” என்று கூறியபடி திரும்பிச் சென்றார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘அவர் உண்மையாகவே (இதைக்) கூறியிருந்தால், அவர் வெற்றியடைந்துவிட்டார்” என்றார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 52, எண் 2679

‘சத்தியம் செய்கிறவர் அல்லாஹ்வின் மீதே சத்தியம் செய்யட்டும்; அல்லது வாய்மூடி இருக்கட்டும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 52, எண் 2680

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” நீங்கள் என்னிடம் வழக்குகளைக் கொண்டு வருகிறீர்கள். உங்களில் ஒருவர் மற்றொருவரை விட வாக்கு சாதுர்யம் மிக்கவராக இருக்கக் கூடும். எனவே, எவருடைய (சாதுர்யமான) சொல்லை வைத்து அவரின் சகோதரனின் உரிமையில் சிறிதை (அவருக்குரியது) என்று தீர்ப்பளித்து விடுகிறேனோ அவருக்கு நான் நரக நெருப்பின் ஒரு துண்டைத் தான் துண்டித்துக் கொடுக்கிறேன். எனவே, அவர் அதை எடுத்துக் கொள்ள வேண்டாம்.

பாகம் 3, அத்தியாயம் 52, எண் 2681

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். அபூ சுஃப்யான்(ரலி) என்னிடம் கூறினார்: (ரோம மன்னர்) ஹிராக்ளியஸ் என்னைப் பார்த்து, ‘உம்மிடம், ‘அவர் (முஹம்மது – ஸல்) எதையெல்லாம் கட்டளையிடுகிறார்?’ என்று கேட்டேன். நீர், ‘அவர் தொழுகை தொழும்படியும், வாய்மையையும் நல்லொழுக்கத்தையும் கைக் கொள்ளும் படியும், ஒப்பந்தத்தையும், வாக்குறுதியையும் நிறைவேற்றும்படியும், நம்பி ஒப்படைக்கப்பட்ட அடைக்கலப் பொருளைச் சரிவரப் பாதுகாத்துத் திரும்பத் தரும்படியும் கட்டளையிடுகிறார்’ என்று சொன்னீர். இதுதான் ஓர் இறைத்தூதரின் பண்பாகும்” என்று கூறினார்.

பாகம் 3, அத்தியாயம் 52, எண் 2682

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” நயவஞ்சகனின் அடையாளம் மூன்றாகும்: அவன் பேசும்போது பொய் பேசுவான். அவனிடம் ஒரு பொருள் (அல்லது பணி) நம்பி ஒப்படைக்கப்பட்டால் (அதில்) மோசடி செய்வான். அவன் வாக்களித்தால் மாறு செய்வான். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 52, எண் 2683

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் இறந்தபோது அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் அலா இப்னு ஹள்ரமீ(ரலி) அவர்களிடமிருந்து (சிறிது) செல்வம் வந்தது. அபூ பக்ர்(ரலி), ‘யாருக்காவது நபியவர்கள் கடன் பாக்கி தர வேண்டியதிருந்தால் அல்லது நபியவர்களின் தரப்பிலிருந்து யாருக்காவது வாக்குறுதி ஏதும் தரப்பட்டிருந்தால் அவர் நம்மிடம் வரட்டும் (அவரின் உரிமையை நாம் நிறைவேற்றுவோம்)” என்று கூறினார்கள். (இந்த அறிவிப்பைக் கேட்டு) நான், ‘எனக்கு இவ்வளவும், இவ்வளவும், இவ்வளவும் தருவதாக நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வாக்களித்திருந்தார்கள்” என்று கூறினேன். – ‘இப்படிக் கூறும்போது, தம் இரண்டு கைகளையும் ஜாபிர்(ரலி) மூன்றுமுறை விரித்துக் காட்டினார்கள்” என்று அறிவிப்பாளர் முஹம்மத் இப்னு அலீ(ரஹ்) கூறினார் – அபூ பக்ர்(ரலி) என் கையில் (முதலில் பொற்காசுகள்) ஐநூறையும், பிறகு ஐநூறையும் பிறகு ஐநூறையும் எண்ணி வைத்தார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 52, எண் 2684

ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார். என்னிடம் ‘ஹீரா’வாசியான யூதர் ஒருவர், ‘மூஸா(அலை) அவர்கள் இரண்டு தவணைகளில் எதை நிறைவேற்றினார்கள்” என்று கேட்டார். நான், ‘எனக்குத் தெரியாது. நான் அரபுகளில் பேரறிஞரிடம் சென்று அவரிடம் கேட்கும் வரை (காத்திரு)” என்று கூறினேன். அவ்வாறே, நான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் சென்று கேட்டேன். அவர்கள், ‘அவ்விரண்டில் அதிகமானதை, அவ்விரண்டில் மிக நல்லதை நிறைவேற்றினார்கள். இறைத்தூதர் (எவராயிருப்பினும் அவர்) சொன்னால் செய்(து முடித்துவிடு)வார்” என்று கூறினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 52, எண் 2685

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். முஸ்லிம்களே! இறைவனின் தூதர்(ஸல்) அவர்களின் மீது இறக்கியருளப்பட்ட உங்கள் வேதம் (குர்ஆன்) இறைவனின் செய்திகளில் மிகவும் புதியதாக இருக்க, அதை நீங்கள் (மனிதக் கருத்துகள்) கலக்கப்படாத நிலையில் ஓதிக் கொண்டிருக்க, நீங்கள் வேதக்காரர்களிடம் எப்படி (வேதங்களின் விபரங்களைக்) கேட்கிறீர்கள்? வேதக்காரர்கள் அல்லாஹ் எழுதியதை மாற்றிவிட்டார்கள். தங்கள் கைகளால் இறைவேதத்தை மாற்றிவிட்டு – (திருக்குர்ஆன் விவரிப்பது போல்) ‘அதன் மூலம் சொற்ப விலையை வாங்கிக் கொள்வதற்காக, இது அல்லாஹ்விடமிருந்து வந்தது’ – என்று கூறினார்கள். (அல்லாஹ்விடமிருந்து) உங்களுக்கு வந்துள்ள அறிவு ஞானம் (இறைவேதமான திருக்குர்ஆன்) உங்களை அவர்களிடம் கேட்பதிலிருந்து தடுக்கவில்லையா? அல்லாஹ்வின் மீதாணையாக! வேதக்காரர்களில் ஒருவரையும் உங்களின் மீது அருளப்பட்டதை (திருக்குர்ஆனைப்) பற்றிக் கேட்பவராக நான் கண்டதேயில்லையே. என உபைதுல்லாஹ் இப்னு உத்பா(ரஹ்) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 52, எண் 2686

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” அல்லாஹ்வின் சட்டங்களில்விட்டுக் கொடுப்பவரும், அதை மீறுபவருக்கும் உதாரணம் ஒரு கூட்டத்தாரின் நிலையாகும். அவர்கள் ஒரு கப்பலில் இடம் பிடிப்பதற்காக சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். அவர்களில் சிலருக்குக் கப்பலின் கீழ்த் தளத்திலும் சிலருக்குக் கப்பலின் மேல் தளத்திலும் இடம் கிடைத்தது. கப்பலின் கீழ்த் தளத்தில் இருந்தவர்கள் தண்ணீரை எடுத்துக் கொண்டு மேல் தளத்தில் இருந்தவர்கள் தண்ணீரை எடுத்துக் கொண்டு மேல் தளத்தில் இருந்தவர்களைக் கடந்து சென்று கொண்டிருந்தார்கள். அதனால் மேல் தளத்திலிருந்தவர்கள் துன்பமடைந்தார்கள். எனவே, கீழ்த் தளத்தில் இருந்த ஒருவன் ஒரு கோடரியை எடுத்து, கப்பலின் கீழ்த் தளத்தைத் துளையிடத் தொடங்கினான். மேல் தளத்திலிருந்தவர்கள் அவனிடம் வந்து, ‘உனக்கு என்ன நேர்ந்தது?’ என்று கேட்டார்கள். அவன், ‘நீங்கள் என்னால் துன்பத்திற்குள்ளானீர்கள். எனக்குத் தண்ணீர் அவசியம் தேவைப்படுகிறது. (அதனால், கப்பலின் கீழ்த்தளத்தில் துளையிட்டு அதில் வரும் தண்ணீரைப் பயன்படுத்தித் கொள்வேன்)” என்று கூறினான். (துளையிடவிடாமல்) அவனுடைய இரண்டு கைகளையும் அவர்கள் பிடித்தால் அவர்கள் அவனையும் காப்பாற்றுவார்கள்; தங்களையும் காப்பறிக் கொள்வார்கள். அவனை அவர்கள் (கப்பலில் துளையிட)விட்டுவிட்டால் அவனையும் அழித்து விடுவார்கள்; தங்களையும் அழித்துக் கொள்வார்கள். என நுஃமான் இப்னு பஷீர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 52, எண் 2687

காரிஜா இப்னு ஸைத் அல் அன்சாரீ(ரஹ்) அறிவித்தார். உம்முல் அலா(ரலி) எங்கள் (அன்சாரிப்) பெண்களில் ஒருவராக இருந்தார்கள்; நபி(ஸல்) அவர்களிடம் பைஅத் (விசுவாசப் பிரமாணம்) செய்திருந்தார்கள்.

அவர்கள் எனக்குத் தெரிவித்தாவது: ‘முஹாஜிர்களை யாருடைய வீட்டில் தங்க வைப்பது’ என்று அன்சாரிகள் சீட்டுக் குலுக்கிப் போட்டபோது (எங்கள் வீடு) உஸ்மான் இப்னு மழ்வூன்(ரலி) அவர்களின் பங்காக வந்தது. எனவே, அவர்கள் எங்களிடம் தங்கினார்கள், அவருக்கு நோய் ஏற்பட்டபோது நாங்கள் அவரை கவனித்துக் கொண்டோம். இறுதியில், அவர் மரணித்துவிட்டபோது அவரை அவரின் துணிகளில் வைத்து (கஃபனிட்டு) விட்டோம். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். (நான் உஸ்மான் இப்னு மழ்வூனை நோக்கி), ‘அபூ சாயிபே! அல்லாஹ் உங்களை கண்ணியப்படுத்தியுள்ளான் என்பதற்கு நான் சாட்சி சொல்கிறேன்” என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள், ‘அவரை அல்லாஹ் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பது உனக்கு எப்படித் தெரியும்?’ என்று கேட்டார்கள். நான், ‘இறைத்தூதர் அவர்களே! எனக்குத் தெரியாது?’ என் தந்தையும், என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்” என்று கூறினேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! உஸ்மானுக்கோ மரணம் வந்துவிட்டது. நான் அவருக்கே நன்மையையே விரும்புகிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அல்லாஹ்வின் தூதராக இருந்தும் ‘அவரிடம் எப்படி நடந்து கொள்ளப்படும்; (மறுமையில் அவரின் நிலை என்னவாகும்?)’ என்று எனக்குத் தெரியாது” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அதன் பிறகு நான் யாரையும் பாராட்டிக் கூறுவதேயில்லை. நபியவர்கள் இப்படிச் சொன்னது எனக்குக் கவலையளித்தது. பிறகு, நான் உறங்கினேன். அப்போது கனவில் உஸ்மான் இப்னு மழ்வூன்(ரலி) அவர்களுக்கு (சொர்க்கத்தில்) ஓடிக் கொண்டிருக்கும் ஒரு நீருற்று (கொடுக்கப்பட்டு) இருப்பதாகக் கண்டேன். அல்லாஹ்வின் தூதரிடம் வந்து அந்தக் கனவைத் தெரிவித்தேன். அதற்கு அவர்கள் ‘அது அவரின் (நற்)செயல்” என்று கூறினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 52, எண் 2688

ஆயிஷா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பயணம் செய்ய விரும்பினால் தம் மனைவிமார்களிடையே சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். அவர்களில் எவருடைய பெயர் வருகிறதோ அவர் நபி(ஸல்) அவர்களுடன் புறப்படுவார். நபி(ஸல்) அவர்கள் (தம்) மனைவிமார்களில் ஒவ்வொருவருக்கும் தம் இரவையும் பகலையும் பங்கிட்டு விட்டிருந்தார்கள். (ஆனால், நபியவர்களின் துணைவியரில் ஒருவரான) சவ்தா பின்த்து ஸம்ஆ(ரலி) மட்டும் தம் பகலையும், இரவையும் எனக்குப் பரிசளித்துவிட்டார். அல்லாஹ்வின் தூதருடைய திருப்தியை (பெற) விரும்பியே அவர்கள் இப்படிச் செய்தார்கள். என உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 52, எண் 2689

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” (தொழுகை அழைப்பான) பாங்கு சொல்வதிலும் (கூட்டுத் தொழுகையில்) முதல் வரிசையிலும் இருக்கும் நன்மையை மக்கள் அறிவார்களாயின் (அதை அடைந்து கொள்ள) சீட்டுக் குலுக்கிப் போடுவதைத் தவிர வேறு வழியில்லாமல் போகுமானால் நிச்சயம் சீட்டுக் குலுக்கிப் போடுவதைத் தவிர வேறு வழியில்லாமல் போகுமானால் நிச்சயம் சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். தொழுகைக்கு அதன் ஆரம்ப வேளையில் விரைந்து செல்வதில் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களாயின் அதற்கு முந்திக் கொள்வார்கள். இஷா தொழுகையிலும். ஃபஜ்ருத் தொழுகையிலும் உள்ள நன்மையை அவர்கள் அறிவார்களாயின் அதற்குத் (தரையில்) தவழ்ந்தாவது அவர்கள் வந்து விடுவார்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.