Featured Posts
Home » வரலாறு » நபித்தோழர்கள் » ஹவாரிஜுகளுக்கும் இப்னு அப்பாஸ் அவர்களுக்கும் நடந்த விவாதம்

ஹவாரிஜுகளுக்கும் இப்னு அப்பாஸ் அவர்களுக்கும் நடந்த விவாதம்

ஸிஃப்ஃபீன் போருக்கு பின்னர் அலீ அவர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்தவர்கள் தான் ஹவாரிஜுகள். அல்லாஹ்வின் வேதத்தைக்கொண்டு தீர்ப்பு வழங்க வேண்டுமென்ற கருத்தின் பால் நபித்தோழர்கள் சென்றபோது அதற்கெதிராக கிளர்ந்தெழுந்தவர்கள் தான் இவர்கள்.

அரபி மொழி அகராதியான முஃஜமுல் வஸீத் என்ற நூலில் அலீ அவர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்த இஸ்லாமிய பிரிவினர்களில் ஒரு பிரிவினர் தான் ஹவாரிஜுகள் ஆவார்கள் கலிஃபாக்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்பவர்களுக்குத் தான் பொதுவாக ஹவாரிஜுகள் என்று சொல்லப்படும். பார்க்க அல் முஃஜமுல் வஸீத் ஹரஜ என்ற சொல்.

ஹவாரிஜ் என்பதற்கு இமாம் ஷஹருஸ்தானி அவர்கள் விளக்கமளிக்கையில் ஒன்றுபட்ட உண்மையான இஸ்லாமிய ஜமாஅத்தின் இமாமுக்கு எதிராக கிளர்ச்சிசெய்பவர்கள் தான் என்று கூறினார்கள் அல் மிலல் வந்நிஹல் 1/113.

முஸ்லிம்களின் ஜமாஅத்தை விட்டு விலகியிருப்பதற்கு அவர்கள் தீர்மனித்து அப்துள்ளாஹ் பின் வாஹிப் அர்ராஸிபி என்பவனை அவர்களுடைய தலைவராகவும் தேர்ந்தேடுத்தார்கள் இன்னும் குர்ஆனுக்கு மாற்று விளக்கமளித்தார்கள், முஸ்லிம்களுக்கு மத்தியில் இருந்து வெளியேறி சென்றார்கள் அவர்களின் வழிமுறைக்கும் கொள்கைக்கும் ஒத்திருக்கக்கூடியவர்களிடம் ஆள் அனுப்பி முஸ்லிம்களுக்கு எதிராக தூண்டினார்கள் அவர்கள் அனைவரும் நஹ்ருவான் என்ற இடத்தில் ஒன்று கூடினார்கள்.

1, الحَرُورية அல் ஹரூரிய்யா

அலீ அவர்களின் படையை விட்டு பிரிந்து ஸிஃப்ஃபீன் போர்களத்திலிருந்து கூஃபாவை நோக்கி திரும்பிய பின்னர் ஹரூரா என்ற ஊரில் தங்கியதனால் இவர்கள் ஹரூரியாக்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.

2, الشُّراة அஷ்ஷுர்ராத்

அல்லாஹ்விற்கு கட்டுப்படுவதில் நாங்கள் எங்களை விற்று விட்டோம் அதாவது தங்களை சுவனத்திற்காக விற்றவர்கள் என்று அவர்கள் கூறியதனால்.

3, المُحكِّمة அல் முஹக்கமத்

அலீ மற்றும் முஆவியா ஆகியோருக்கு மத்தியிலான கருத்து வேறுபாடை தீர்த்துவைக்க அபூமூஸா அல் அஷ் அரி மற்றும் அம்ருபின் ஆஸ்ஆகிய இருவரையும் நீதிபதிகளாக ஆக்கினார்கள் இவர்கள் அவ்விருவரும் அளித்த தீர்ப்பையும் இரு நீதிபதிகளையும் நிராகரித்ததனால் இப்பெயர் சூட்டப்பட்டது.

4, المارقة அல் மாரிகா (வெளியேறிச்செல்பவர்கள்) இப்பெயர் அல்லாஹ்வின் தூதர் அவர்களின் கூற்றிலிருந்து பெறப்பட்டது.

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களுக்கு ஒரு பொருள் அனுப்பி வைக்கப்பட்டது. அதை அவர்கள் (புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய) நான்கு பேருக்கிடையே பங்கிட்டார்கள். மேலும், ‘இவர்களுடைய உள்ளங்களை நான் இணக்கமாக்குகிறேன்‘ என்று கூறினார்கள். (அப்போது பங்கு கிடைக்காத) ஒருவர் ‘நீங்கள் நீதி செய்யவில்லை‘ என்று கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், இவருடைய சந்ததியினரிடமிருந்து (வேட்டைப் பிராணியின் உடலிலிருந்து) அம்பு வெளியேறிச் செல்வதைப் போல் மார்க்கம் வெளியேறிச் சென்றுவிடுகிற கூட்டத்தினர் தோன்றுவர்‘ என்று கூறினார்கள். நூல் ஸஹீஹுல் புஹாரி 4667.

ஹவாரிஜுகளின் தோற்றம்

ஹவாரிஜுகள் நபி அவர்களின் காலத்திலேயே தோற்றினார்கள் என்பதாக அறிஞர்கள் கூறியுள்ளார்கள் நபி அவர்களுடன் முரண்பட்ட துல் ஹுவைஸிரஎன்பவன் ஆவான் இது தொடர்பான அறிவிப்புகள்.

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.

அலீ(ரலி) அவர்கள் வார்க்கப்படாத சிறிய தங்கக் கட்டி ஒன்றை யமன் நாட்டிலிருந்து நபி(ஸல்) அவர்களுக்கு அனுப்பி வைத்தார்கள். அதை நபி(ஸல்) அவர்கள் அக்ரஉ இப்னு ஹாபிஸ் அல்ஹன்ழலீ அல்முஜாஷிஈ(ரலி), உயைனா இப்னு பத்ர் அல்ஃபஸாரீ(ரலி), அல்கமா இப்னு உலாஸா அல் ஆமிரீ அல்கிலாபீ(ரலி), ஸைத் அல்கைல் அத்தாயீ அந்நப்ஹானீ(ரலி) ஆகிய நால்வரிடையே பங்கிட்டார்கள். இதைக் கண்ட குறைஷியரும் அன்சாரிகளும் கோபமடைந்து, நஜ்த்வாசிகளின் தலைவர்களுக்கு இதைக் கொடுக்கிறார்கள்; நம்மைவிட்டுவிடுகிறார்களே‘ என்று கூறினார்கள்.

(இதையறிந்த) நபி(ஸல்) அவர்கள், ‘(புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய) அவர்களை ஈர்ப்பதற்காகவே இவ்வாறு கொடுத்தேன்‘ என்றார்கள். அப்போது கண்கள் பஞ்சடைந்த நெற்றி புடைத்த, அடர்த்தியான தாடி கொண்ட, கன்னங்கள் உப்பிய, தலை முடி மழிக்கப்பட்டிருந்த ஒரு மனிதன் முன்வந்து, ‘முஹம்மதே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்‘ என்று சொன்னான். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நான் அல்லாஹ்வுக்கு மாறு செய்தால் வேறு யார் அவனுக்குக் கீழ்ப்படியப் போகிறார்கள்? பூமியிலிருப்பவர்களில் என்னை அவன் நம்பிக்கைக்குரியவனாக ஆக்கியுள்ளான்; (நான் வானிலிருப்பவர்களின் நம்பிக்கைக்கும் உரியவன்;) ஆனால், நீங்கள் என்னை நம்ப மறுக்கின்றீர்களே?’ என்று கேட்டார்கள். அப்போது மக்களில் ஒருவர் அவனைக் கொன்றுவிட அனுமதி கேட்டார் – அவர் காலித் இப்னு வலீத்(ரலி) என்றே கருதுகிறேன் – ஆனால், நபி(ஸல்) அவர்கள் அவரைத் தடுத்துவிட்டார்கள்.

அந்த மனிதன் திரும்பிச் சென்றபோது நபி(ஸல்) அவர்கள், ‘இந்த மனிதனின் பரம்பரையிலிருந்து ஒரு சமுதாயத்தார் தோன்றுவர். அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களின் தொண்டைக் குழிகளைத் தாண்டி (இதயத்திற்குள்) செல்லாது; வேட்டையாடப்பட்ட பிராணியின் உடலிலிருந்து (அதன் மீது எய்யப்பட்ட) அம்பு வெளியேறிவிடுவதைப் போன்று அவர்கள் இஸ்லாத்திலிருந்து வெளியேறி விடுவார்கள். இஸ்லாமியர்களையே அவர்கள் கொலை செய்வார்கள்; சிலை வணங்கிகளைவிட்டுவிடுவார்கள். நான் அவர்க(ள் வாழும் நாட்க)ளை அடைந்தால் ‘ஆது‘ கூட்டத்தார் அழிக்கப்பட்டதைப் போன்று அவர்களை நிச்சயம் நான் அழிப்பேன்‘ என்றார்கள். நூல்:ஸஹீஹுல் புஹாரி 7432

இந்த நபிமொழியில் கண்கள் பஞ்சடைந்த நெற்றி புடைத்த, அடர்த்தியான தாடி கொண்ட, கன்னங்கள் உப்பிய, தலை முடி மழிக்கப்பட்டிருந்த ஒரு மனிதன் அல்லாஹ்வின் தூதருக்கு மாறு செய்தான் என்றும் அந்த மனிதனின் சமுதாயத்திலிருந்து ஒரு கூட்டம் தோன்றுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது வேறு அறிவிப்பில் அவனது பெயர் துல்ஹுவைஸிரா என்றும் கூறப்பட்டுள்ளது.

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் (ஹவாஸின்) போரில் கிடைத்த செல்வங்களை ஒரு நாள் பங்கிட்டுக் கொண்டிருந்தபோது பனூ தமீம் குலத்தைச் சேர்ந்த, ‘துல்ஹுவைஸிரா‘ எனும் மனிதர், ‘இறைத்தூதர் அவர்களே! நீதியுடன் நடந்துகொள்ள வில்லையென்றால் வேறு யார்தாம் நீதியுடன் நடந்துகொள்வார்கள்?’ என்று கூறினார்கள். உடனே (அங்கிருந்த) உமர்(ரலி) அவர்கள், ‘இவரின் கழுத்தைக் கொய்ய என்னை அனுமதியுங்கள் (இறைத்தூதர் அவர்களே!)‘ என்றார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘இல்லை, (இவரைவிட்டுவிடுங்கள்). நிச்சயமாக இவருக்குத் தோழர்கள் சிலர் இருக்கின்றனர். அவர்களின் தொழுகையுடன் உங்களுடைய நோன்பையும் அற்பமானவையாகக் கருதுவீராக. (அந்த அளவுக்கு) அவர்களின் வழிபாடு அதிகமாக இருக்கும். ஆயினும்) வேட்டைப் பிராணியைவிட்டு (அதன் உடலைத் துளைக்கின்ற) அம்பு (உடலின் மறுபக்கம்) வெளிப்பட்டுச் சென்று விடுவதை போன்று மார்க்கத்திலிருந்து அவர்கள் வெளியேறிச் சென்றுவிடுவார்கள். (அந்தப் பிராணியின் உடலைத் துளைத்து வெளிவந்தற்கான அடையாளம் ஏதும் இருக்கிறதா என்று அறிய) அம்பின் முனை பார்க்கப்படும். அதில் (அடையாளம்) எதுவும் காணக் கிடக்காது.

பிறகு (அம்பில்) அதன் (முனையைப் பொருத்தப் பயன்படும்) நாணைப் பார்க்கப்படும். அதிலும் (அடையாளம்) எதுவும் காணக் கிடைக்காது. பிறகு அம்பின் (அடிப்பாகக்) குச்சியைப் பார்க்கப்படும் அதிலும் எதுவும் காணக் கிடைக்காது. பிறகு, அம்பின் இறகைப் பார்க்கப்படும். அதிலும் (அடையாளம்) எதுவும் கிடைக்காது. அ(ம்பான)து, சானத்தையும் இரத்தத்தையும் (அவை தன் மீது படாதவாறு) முந்தியிருக்கும். அவர்கள் மக்களிடையே பிரிவினை ஏற்படும் வேளையில் கிளம்புவார்கள். அவர்களின் அடையாளம் ஒரு (கறுப்பு நிற) மனிதராவார். அவரின் இரண்டு (புறக்) கைகளில் ஒன்று ‘பெண்ணின் கொங்கை போன்றிருக்கும்‘ அல்லது ‘துடிக்கம் இறைச்சித்துண்டு போன்றிருக்கும்” என்றார்கள்.

நான் நிச்சயமாக இந்த நபிமொழியை நபி(ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றேன். என்று சாட்சியம் அளிக்கிறேன். மேலும் அந்தக் கூட்டத்தாருடன் அலீ(ரலி) அவர்கள் போரிட்டபோது அலீ(ரலி) அவர்களுடன் நானும் இருந்தேன். (அந்தப் போரில்) கொல்லப்பட்டவர்களிடையே (நபி(ஸல்) அவர்கள் இனங்காட்டிய) அந்த மனிதரைத் தேடிக் (கண்டுபிடித்துக்) கொண்டு வரப்பட்டது. நபி(ஸல்) அவர்களின் வர்ணனையின்படியே அவர் இருந்தார் என்றும் நான் சாட்சியம் அளிக்கிறேன். . நூல்:ஸஹீஹுல் புஹாரி 6163

அவனது கூட்டத்தார்கள் தான் ஹவாரிஜுகள் என்பதையும் நபி மொழி தெளிவுபடுத்துகிறது.

யுசைர் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.

நான் ஸஹ்ல் இப்னு ஹுனைஃப்(ரலி) அவர்களிடம், ‘ஹவாரிஜு கூட்டத்தார் குறித்து நபி(ஸல்) அவர்கள் கூற ஏதேனும் கேட்டுள்ளீர்கள்‘ என்று கேட்டேன். அதற்கு அன்னார், நபி(ஸல்) அவர்கள் இராக் நாட்டின் திசையில் தம் கையை நீட்டியவாறு இப்படிக் கூறினார்கள் என்றார்கள்: இங்கிருந்து ஒரு கூட்டத்தார் புறப்படுவார்கள். அவர்கள் குர்ஆன் ஓதுவார்கள். ஆனால், அது அவர்களின் தொண்டைக் குழியைத் தாண்டிச் செல்லாது. வேட்டைப் பிராணியைவிட்டு (அதன் உடலைத் துளைத்த) அம்பு (உடலின் மறுபுறம்) வெளியேறிச் செல்வதைப் போன்று இஸ்லாத்திலிருந்து அவர்கள் (சுவடே தெரியாமல்) வெளியேறிச் சென்றுவிடுவார்கள். நூல்:ஸஹீஹுல் புஹாரி6934

ஹவாரிஜுகள் தொடர்பாக ஏராளமான ஸஹீஹான ஹதீஸ்கள் வந்துள்ளது அதில் சிலதை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளோம் இதில் அவர்களின் வழிகேடும் மோசமான தனமைகளும் விவரிக்கப்பட்டுள்ளது.

அவர்களின் வழிகேட்டிற்கு அவர்கள் சத்தியத்தையும் நேர்வழியையும் விட்டு தூரமானார்கள் என்பதுதான் முக்கிய காரணம் என்பதை நபி அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

عَنْ سَهْلِ بْنِ حُنَيْفٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «يَتِيهُ قَوْمٌ قِبَلَ الْمَشْرِقِ مُحَلَّقَةٌ رُءُوسُهُمْ»1068

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கிழக்கு (இராக்) திசையிலிருந்து வழிதவறிய ஒரு கூட்டத்தார் கிளம்புவார்கள். அவர்களுடைய தலைகள் மழிக்கப்பட்டு (மொட்டையாக) இருக்கும்.

இதை சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் .நூல் ஸஹீஹ் முஸ்லிம் 1938

இமாம் நவவி அவர்கள் கிழக்கு திசையிலிருந்து வழிதவறிய ஒரு கூட்டத்தார் கிளம்புவார்கள் என்பதற்கு விளக்கமளிக்கையில் அவர்கள் நேர்வழியை விட்டும் சத்தியத்தை விட்டும் தூரமாகச்சென்றவர்கள் என்பதாக கூறினார்கள் .ஷரஹ் ஸஹீஹ் முஸ்லிம் 7/175.

அவர்கள் இஸ்லாத்திலிருந்து வெளியேறி விடுவார்கள். இஸ்லாமியர்களையே அவர்கள் கொலை செய்வார்கள்; சிலை வணங்கிகளைவிட்டுவிடுவார்கள் என்பதும் அவர்களின் இழிவான பண்புகளில் ஒன்றாகும். பார்க்க: ஸஹீஹுல் புஹாரி 3344

நபி வழிக்கும் நேர்வழி நடந்த கலீஃபாக்களின் வழிமுறைக்கும் முரணான ஹவாரிஜுகளின் கொள்கை.

1,நபி அவர்களை குறைகூறுவது அவர்களை கண்டிப்பது அவரின் பங்கீட்டை பொருந்திக்கொள்ளாமல் இருப்பது துல் ஹுவைஸிரா வின் சம்பவம் இதற்கு எடுத்துக்காட்டாகும்.

2,குர்ஆன் வசனங்களுக்கு தவறான விளக்கமளிப்பது.

3,பெரும் பாவம் செய்தவனை காஃபிராக்குவது இன்னும் நிரந்தர நரகவாசி என்று தீர்ப்பளிப்பது. ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமியா அவர்கள் கூறினார்கள் இஸ்லாமிய சமுதாயத்தில் ஆரம்பத்தில் தோன்றிய பித் அத் ஹவாரிஜுகளால் தோற்றுவிக்கப்பட்ட பித்அத் ஆகும். அது அவர்கள் குர்ஆனை தவறாக விளங்கியதன் விளைவாகும் குர்ஆனுக்கு மாறு செய்யவேண்டுமென்று அவர்கள் நாடவில்லை ஆனாலும் அவர்கள் அதனை தவறாக விளங்கிக்கொண்டார்கள் அதன் காரணமாக பெரும் பாவங்கள் செய்வோரை காஃபிராக்குவது கட்டாயம் என்று எண்ணினார்கள் முஃமினாக இருந்தால் இறையச்சமுடையவராகவும் நல்லவராகவும் இருக்கவேண்டும் என்றும் அவர்கள் எண்ணினார்கள் .யார் இறையச்சமுடையவராகவும் நல்லவராகவும் இருக்கவில்லையோ அவன் காஃபிராவான் இன்னும் நிரந்தர நரகவாசியும் ஆவான் என்று அவர்கள் கூறினார்கள் .மஜ்மூஉல் ஃபதாவா 13/30.

4,முஸ்லிம்களுக்கு எதிராக கிளம்புவது. ஹவாரிஜுகள் கடுமையான போக்குடையவர்கள் கடினமானவர் என்று வரலாற்றில் அறியப்பட்டவர்கள். இது (முஸ்லிம்கள் பற்றி) அல்லாஹ்வின் வார்த்தைக்கு முரணாகும்.

முஹம்மது அல்லாஹ்வின் தூதராகவே இருக்கின்றார்; அவருடன் இருப்பவர்கள், காஃபிர்களிடம் கண்டிப்பானவர்கள், தங்களுக்கிடையே இரக்கமிக்கவர்கள்.48:29

5, நியாமின்றி முஸ்லிம்களின் இரத்தத்தை சிந்துவதை அவர்கள் ஆகுமானதாக்கினார்கள். இதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு அவர்களின் வழிமுறைக்கு உடன்படவில்லை என்பதாலும் அவர்களின் சிந்தனைக்கு முரண்பட்டார் என்பதாலும் அல்லாஹ்வின் தூதரின் தோழரின் மகன் அப்துல்லாஹ் பின் கப்பாப் பின் அரத் அவர்களை கொலைசெய்தார்கள்.

6,மக்களுக்கு மத்தியில் பயங்கரவாத செயலில் ஈடுபடுவது இன்னும் பெண்கள் உட்பட அவர்களை கொன்றுகுவிப்பது.

இமாம் இப்னு கஸீர் அவர்கள் கூறினார்கள் அவர்கள் பெண்களையும் குழந்தைகளையும் கொன்று குவிக்க ஆரம்பித்தார்கள் இன்னும் கர்பிணிகளின் வயிற்றையும் கிழித்தார்கள் வேறு யாரும் செய்யாத செயலை அவர்கள் செய்தார்கள் . அல்பிதாயா வந்நிஹாயா 12/75

7, உஸ்மான் ,அலீ போன்ற சில மூத்த ஸஹாபாக்களை காஃபிராக்கினார்கள்.

ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமியா அவர்கள் கூறினார்கள்,

ஹவாரிஜுகள் உஸ்மான், அலீ இன்னும் இவ்விருவருடனும் நேசம் பாராட்டியோர் முஃமின்கள் அல்ல ஏனெனில் அவர்கள் அல்லாஹ் இறக்கிவைக்காத ஒன்றைக்கொண்டு தீர்ப்பு வழங்கினார்கள் என்று கூறினார்கள்.

அவர்களின் இந்த பித்அத்திர்க்கு இரண்டு காரணங்கள் உள்ளன

1,யார் ஒருவர் அவரது செயலாலோ, கருத்தாலோ குர்ஆனுக்கு முரண்படுவாரோ அல்லது அதில் தவறிழைப்பாரோ அவன் காஃபிராவான்

2, உஸ்மானும், அலீயும் அவர்களை நேசித்தவர்களும் அப்படித்தான் இருந்தார்கள்

எனவே தவறுகளுக்காகவோ, பாவத்திற்காகவோ, முஃமீன்களை காஃபிர் ஆக்குவதை விட்டும் பேணுதலாக இருப்பது கட்டாயமாகும். இவைதான் இஸ்லாமில் தோன்றிய முதல் பித் அத் ஆகும் .மஜ்மூஉல் ஃபதாவா 13/31

8, குறைஷி அல்லாதவர்கள் தலைமைத்துவம் ஏற்கலாம் என்று கூறி அல்லாஹ்வின் தூதரின் ஹதீஸ்களுக்கு முரண்பட்டார்கள்.

நபி அவர்கள் கூறினார்கள்

‘இந்த ஆட்சியதிகாரம் குறைஷிகளிடம் தான் இருக்கும். அவர்களுடன் (அது தொடர்பாகப் பகைமை பாராட்டுவோர் எவரையும் அல்லாஹ் முகம் குப்புறக் கவிழ்த்தே தீருவான். மார்க்கத்தை அவர்கள் நிலைநாட்டி வரும் வரை இந்நிலை நீடிக்கும்‘ என்று கூற கேட்டிருக்கிறேன் என்று முஆவியா அவர்கள் கூறினார்கள். நூல்: ஸஹீஹுல் புஹாரி 3500

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இந்த ஆட்சியதிகாரம் குறைஷிகளிடம் தான் இருக்கும்; அவர்களில் இருவர் எஞ்சியிருக்கும் வரை.

என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நூல்: ஸஹீஹுல் புஹாரி 3501

ஹவாரிஜுகளும் இப்னு அப்பாஸ் அவர்களும் நடந்த விவாதம்

இப்னு அப்பாஸ் அவர்கள் கூறினார்கள் ஹவாரிஜுகள் அலீ அவர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்து வெளியேறிச்சென்று ஹரூரியா என்ற இடத்தில் ஒரு வீட்டில் ஒன்று கூடினார்கள் அவர்கள் ஆறாயிரம் பேர் இருந்தார்கள். நான் அலீ அவர்களிடம் வந்து அமீருல் முஃமினீன் அவர்களே ளுஹர் தொழுகையை கொஞ்சம் பிற்படுத்துங்கள் நான் அவர்களிடம் பேசிவிட்டு வருகிறேன் என்று கூறினேன். அதற்கு அலீ அவர்கள் உங்களுக்கு எதாவது நேர்ந்துவிடுமோ என்று நான் அஞ்சுகிறேன் என்று கூறினார்கள். அதற்கு நான் அப்படியேதும் ஆகாது என்று கூறினேன். நான் அவர்களை நோக்கிப் புறப்பட்டேன். யெமன் ஆடைகளில் அழகான ஆடையை அணிந்து கொண்டேன் (இப்னு அப்பாஸ் அவர்கள் மிகவும் அழகானவராகவும் நல்ல குரல் வளமுடையவராகவும் இருந்தார் என்று அபூசுமைல் எனபவர் கூறினார்). இப்னு அப்பாஸ் அவர்கள் கூறினார்கள் ஹவாரிஜுகள் அவர்களுக்குரிய வீட்டில் ஒன்று கூடியிருக்கும் நிலையில் நான் அவர்களிடம் வந்து அவர்களுக்கு ஸலாம் கூறினேன் அதற்கு அவர்கள் இப்னு அப்பாஸ் அவர்களே வருக வருக இது என்ன ஆடை என்று கேட்டார்கள். அதற்கு நான் இதை ஏன் நீங்கள் குற்றமாக பார்க்கிறீர்கள், நான் நபி அவர்களை இது போன்ற அழகான ஆடை உடுத்தியவராக பார்த்துள்ளேன் அவர்களுக்குத்தான்

(நபியே!) நீர் கேட்பீராக: “அல்லாஹ் தன் அடியார்களுக்காக வெளிப்படுத்தியுள்ள (ஆடை) அழகையும், உணவு வகைகளில் தூய்மையானவற்றையும் தடுத்தது யார்?” இன்னும் கூறும்: “அவை இவ்வுலக வாழ்க்கையில் நம்பிக்கையாளர்களுக்கு (அனுமதிக்கப்பட்டவையே, எனினும் மறுமையில்) அவர்களுக்கு மட்டுமே சொந்தமானவையாகவும் இருக்கும்” இவ்வாறு நாம் நம் வசனங்களை அறியக்கூடிய மக்களுக்கு விவரிக்கின்றோம். 7:32

இவ்வசனமும் இறங்கியது என்று கூறினேன் நீங்கள் என்ன விஷயமாக வந்தீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு நான் முஹாஜிர்கள் மற்றும் அன்ஸாரிகள் அடங்கிய நபித்தோழகளிடமிருந்து வருகிறேன். அவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை உங்களுக்கு அறிவிக்க வந்துள்ளேன். அவர்கள் கூறுவதைத்தான் நான் கூறுகிறேன். அவர்களிடம்தான் குர்ஆன் அருளப்பட்டது. உங்களை விட வஹியை நன்கறிந்தவர்கள். அவர்கள் விஷயத்தில் தான் குர்ஆன் இறக்கப்பட்டது உங்களில் ஒருவர் கூட நபித்தோழர் இல்லை அப்போது அவர்களில் சிலர் குறைஷிகளிடத்தில் தர்க்கம் புரியாதீர்கள் அல்லாஹ் அவர்களைக்குறித்து

மாறாக அவர்கள் தர்க்கம் புரியும் சமூகத்தார் . 43:௫௮ என்று கூறியுள்ளான் என்று கூறினார்கள் அப்போது இப்னு அப்பாஸ் அவர்கள் நான் ஒரு கூட்டத்தாரிடம் வந்துள்ளேன் வணக்க வழிபாடுகளில் அவர்களைப்போன்று கடும் முயற்சி செய்யக்கூடிய மக்களை நான் பார்த்ததில்லை இரவில் கண் விழித்ததால் அவர்களின் முகங்கள் மாறிவிட்டன அவர்களின் கைகளும் முட்டுக்கால்களும் ஒட்டகத்தைப்போன்று வலிமையானது என்று இப்னு அப்பாஸ் அவர்கள் கூறினார்கள். அப்போது அங்கு வந்திருந்தவர்களில் சிலர் திரும்பிச்சென்றனர் வேறு சிலர் நாம் அவரிடம் பேசுவோம் அவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம் என்று கூறினார்கள் அப்போது இப்னு அப்பாஸ் அவர்கள் நபி(ஸல்) அவர்களின் சிறிய தந்தையின் மகனும் நபியவர்களின் மருமகனுமாகிய அலீயையும் இன்னும் முஹாஜிர்கள் மற்றும் அன்ஸாரிகளையும் ஏன் எதிர்க்கிறீர்கள்? பழிவாங்கத் துடிக்கிறீர்கள்? அதன் காரணத்தை தெரிவியுங்கள் என்று கூறினேன். அதற்கு அவர்கள் நாங்கள் மூன்று விஷயங்களுக்காக அவரை எதிர்க்கிறோம். அதற்காக அவரை பழியும் வாங்குவோம் என்று கூறினார்கள்.

நான் அவை என்ன ? என்று கேட்டேன்

அவர்கள் கூறினார்கள்
முதல் விஷயம் – அலீ(ரலி) அவர்கள் மனிதர்களை அல்லாஹ்வின் மார்க்கத்தில் தீர்ப்பளிப்பவர்களாக ஆக்கிவிட்டார். ஆனால் அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்

தீர்ப்பளிக்கும் அதிகாரம் அல்லாஹ்வுக்கேயன்றி (வேறு) எவருக்குமில்லை.6:57

தீர்ப்பு சொல்வதற்கும் மனிதனுக்கும் என்ன தொடர்புள்ளது ?

நான் இது முதல் விஷயம் வேறு என்ன என்று கேட்டேன்
இரண்டாவது விஷயம் – முஆவியா(ரலி) அவர்களோடும் ஆயிஷா(ரலி) அவர்களோடும் போரிட்ட அலி(ரலி) அவர்கள் போரின் முடிவில் போர்க் கைதிகள் யாரையும் சிறைப் பிடிக்கவும் இல்லை. கனீமத்தையும் எடுத்துக்கொள்ளவில்லை. அவர் போர் புரிந்தது காஃபிர்களுடனாக இருந்தால் அவர்களை கைதியாக ஆக்கிக்கொள்வதும், கனீமத்தை எடுத்துக்கொள்வதும் ஆகுமானது. ஒரு வேளை அவர்கள் முஃமின்களாக இருந்தால் அவர்களுடன் போர் புரிவது கூடாது.

நான் இது இரண்டாவது விஷயம் மூன்றாவது என்ன என்று கேட்டேன்
மூன்றாவது விஷயம் –போர் உடன்படிக்கையில் அமீருல் முஃமினீன் என்ற அவருடைய பட்டத்தை அவரே அழித்து திருத்தம் செய்தார் அப்படியானால் அவர் அமீருல் காஃபிரீனா என்று கேட்டார்கள்.

அதற்கு நான் வேறு ஏதாவது குற்றச்சாட்டு உள்ளதா என்று கேட்டேன்

அதற்கு அவர்கள் இது தான் நாங்கள் அலி(ரலி) அவர்களை எதிர்ப்பதற்கான காரணம், என்று கூறினார்கள் .

அதற்கு நான் உங்களுடைய கேள்விக்கு அல்லாஹ்வின் வேதத்திலிருந்தும் நபியவர்களின் சுன்னாவிலிருந்தும் பதிலை எடுத்துக்காட்டினால் நீங்கள் திருப்தியடைவீர்களா என்று கேட்டேன் அதற்கு அவர்கள் ஆம் என்று பதிலளித்தார்கள்

அலீ(ரலி) அவர்கள் மனிதர்களை அல்லாஹ்வின் மார்க்கத்தில் தீர்ப்பளிப்பவர்களாக ஆக்கிவிட்டார் என்ற உங்கள் கேள்வி

கால் திர்ஹம் விலையுள்ள முயல் போன்றவையை வேட்டையாடியவர் தொடர்பான தீர்ப்பை மனிதனிடம் அல்லாஹ் ஒப்படைத்துள்ளான் என்பதர்க்கான வசனத்தை ஓதிக்காட்டுகிறேன் என்று கூறி

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் இஹ்ராம் உடை உடுத்தியவர்களாக இருக்கும் நிலையில் வேட்டை(யாடி)ப் பிராணிகளைக் கொல்லாதீர்கள்; உங்களில் யாராவது ஒருவர் வேண்டுமென்றே அதைக் கொன்றால், (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகளிலிருந்து அவர் கொன்றதற்கு சமமான ஒன்றை(ப் பரிகாரமாக) ஈடாகக் கொடுக்க வேண்டியது; அதற்கு உங்களில் நீதமுடைய இருவர் தீர்ப்பளிக்க வேண்டும்;5:95

ஆடு, மாடு, ஒட்டகையை கொலை செய்யும் விஷயத்தில் அல்லாஹ் மனிதர்களை தீர்ப்பளிக்கச் சொல்கிறான். நான் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுக் கேட்கிறேன் முஸ்லிம்களின் இரத்தம், அவர்களின் உயிர் சம்பந்தப்பட்ட விஷயத்தில் அவர்களுக்கு மத்தியில் நிகழ்ந்த பிணக்குகளை சரிசெய்வதற்கு மனிதர்களை தீர்ப்பாளிகளாக்குவது, ஆடு, மாடு, ஒட்டகை விஷயத்தில் தீர்பாளிகளாக்குவதை விட மிக சிறந்தது தானே !
ஹவாரிஜ்கள் சொன்னார்கள் ஆம்!தான். மக்களின் நலனுக்காகவும், முஸ்லிம்களின் உயிர்களை பாதுகாக்கவும் மனிதர்களைத் தீர்ப்பளிப்பவர்களாக நியமிப்பது மேற்சொன்ன குர்ஆன் வசனப்படி சரிதான் என்று ஒப்புக் கொண்டார்கள்.

அறிந்துகொள்ளுங்கள் அல்லாஹ் நாடியிருந்தால் மனிதர்களிடம் தீர்ப்பளிக்கும் பொறுப்பை ஒப்படைக்காமல் அவனே தீர்ப்பளித்திருப்பான் அதே போன்று ஒரு பெண்ணிற்கும் அவளது கணவனுக்குமான பிரச்சனைக் குறித்து அல்லாஹ் கூறுகிறான்

(கணவன்-மனைவி ஆகிய) அவ்விருவரிடையே (பிணக்குண்டாகி) பிரிவினை ஏற்பட்டுவிடும் என்று நீங்கள் அஞ்சினால் கணவனின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் மனைவியின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் மத்தியஸ்தர்களாக ஏற்படுத்துங்கள்; அவ்விருவரும் சமாதானத்தை விரும்பினால், அல்லாஹ் அவ்விருவரிடையே ஒற்றுமை ஏற்படும் படி செய்துவிடுவான் – நிச்சயமாக அல்லாஹ் நன்கு அறிபவனாகவும், நன்குணர்கிறவனாகவும் இருக்கின்றான் 4:35

மனிதர்கள் வழங்கும் தீர்ப்பை அல்லாஹ் நம்பிக்கைக்குரிய வழிமுறையாக ஆக்கியுள்ளான் இந்த உங்களுடைய சந்தேகத்தை நான் தெளிவுபடுத்தி விட்டேனா என்று கேட்டேன் அதற்கு அவர்கள் ஆம் என்று கூறினார்கள்

அலீ அவர்கள் போர் புரிந்தான் ஆனாலும் யாரையும் அடிமையாக்கவில்லை, கனீமத்தையும் எடுக்கவில்லை என்ற உங்களது கேள்வியைப் பொறுத்த வரை அதற்கான பதில்

உங்களுடைய தாயான ஆயிஷாவை நீங்கள் அடிமையாக்கி ஏனைய அடிமைப்பெண்ணை நடத்துவதுபோன்று அவரை நடத்துவீர்களா? ஆம் நாங்கள் அப்படிச்செய்வோம் என்று நீங்கள் சொன்னால் நீங்கள் காஃபிர்களாகி விடுவீர்கள் ஏனென்றால் அவர் உங்களுக்கு தாய் ஆவார். அவர் எங்களது தாய் இல்லை என்று சொன்னாலும் நீங்கள் காஃபிர்களாகி விடுவீர்கள் ஏனெனில் அல்லாஹ் கூறுகிறான்

இந்த நபி முஃமீன்களுக்கு அவர்களது உயிரை விட மேலானவர் அவரது மனைவிகள் முஃமீன்களுக்கு தாய்மார்கள் ஆவார்கள் 33:6

இப்போது நீங்கள் இரண்டு வழிகேடை அறிந்து கொண்டீர்கள் இந்த இரண்டில் எதை நீங்கள் தேர்ந்தெடுத்தாலும் நிச்சயமாக அது வழிகேடுதான் .

அப்போது அவர்களில் சிலர் சிலரை பார்த்தார்கள் பின்னர் இந்த விஷயத்தையும் நீங்கள் எங்களுக்கு தெளிவுபடுத்திவிட்டீர்கள் என்று கூறினார்கள்.

மூன்றாவதாக அலீ அவர்கள் அமீருல் முஃமினீன் என்ற பட்டத்தை அழித்தார்கள் என்ற குற்றச்சாட்டு இதற்கு நான் நீங்கள் பொருந்திக்கொள்ளும் ஒருவரை உதாரணம் காட்டுகிறேன்

சுஹைல் இப்னு அம்ர் மற்றும் அபூசுஃப்யான் பின் ஹர்பு ஆகியோரிடத்தில் நபி அவர்கள் சமாதான உடன்படிக்கை எழுதும் போது அலீ அவர்களிடம் “இது அல்லாஹ்வின் தூதர் முஹம்மது செய்யும் சமாதான உடன்படிக்கையாகும்” என்று எழுதும்படி அலீயிடம் கூற அவர்களும் அவ்வாறே எழுதினார்கள். ஆனால், இணைவைப்பாளர்கள் அந்த வாசகத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. “நீர் அல்லாஹ்வின் தூதர் என்று எங்களுக்குத் தெரிந்திருந்தால் நாம். உம்மிடம் போர் செய்திருக்க மாட்டோம். எனவே, முஹம்மதிப்னு அப்துல்லாஹ் என்று எழுதுங்கள்” என்று கூறினார்.

அதற்கு நபியவர்கள், அல்லாஹுவே நான் தூதர் தான் என்பதை நீ நன்கறிவாய் என்று கூறிவிட்டு அலீயிடம் ‘ரஸூலுல்லாஹ்’ என்ற சொல்லை அழித்துவிட்டு முஹம்மது இப்னு அப்துல்லாஹ் என்று எழுதும்படி கூறினார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக அல்லாஹ்வின் தூதர் அவர்கள் அலீயை விட சிறந்தவர் ஆவார்கள் அவர் தன்னுடைய பெயரை அழித்த போது அவர் நுபூவத்திலிருந்து வெளியேறவில்லை .இதனை கூறிய போது அவர்களில் இரண்டாயிரம் பேர் தவ்பா செய்து நேர்வழிக்கு திரும்பினார்கள் எனையவர்கள் அவர்கள் இருந்த வழிகெட்ட கொள்கையிலேயே கொல்லப்பட்டார்கள் என்று இப்னு அப்பாஸ் அவர்கள் கூறினார்கள் . முஸ்தத்ரகுல் ஹாகிம் 2656

இந்த விவாதத்தின் பலன்கள்

இப்னு அப்பாஸ் அவர்களின் இந்த விவாதம் ஏராளமான பயன்களை உள்ளடக்கியுள்ளது என்பதை சிந்திக்கக்கூடியவர்கள் உணர்ந்துகொள்ளலாம் மார்க்கப்பணியாற்றிக்கொண்டிருக்கும் அழைப்பாளர்கள் இதன் மூலம் ஏராளமான பயனை அடையலாம் அதிலும் குறிப்பாக ஏராளம் குழப்பங்கள் நிறைந்த இந்த காலகட்டத்தில் அனைவருக்கும் தேவையான கருத்துக்களை உள்ளடக்கிய விவாதம் இது. இதன் தனிச்சிறப்பைப்பொறுத்தவரை இந்த சமுதாயத்தின் அறிஞர் மார்க்கம் ஞானம் கிடைக்கட்டும் என்று அல்லாஹ்வின் தூதரால் பிராத்தனை செய்யப்பட்ட அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் அவர்கள் தான் இந்த விவாதத்தை நடத்தியவர் என்பது தான்.

முதலாவது பயன்: நேர்வழியில் இருப்பவர்கள் வழிகேட்டில் இருக்கக்கூடிய மக்கள் சத்தியத்தின் பால் கொண்டுவருவதற்கு ஆர்வம் காட்டவேண்டும் எவ்வாறு ஹவாரிஜ்கள் நேர்வழி பெற இப்னு அப்பாஸ் அவர்கள் ஆர்வம் காட்டியதைப்போன்று

இரண்டாவதாக: ஹவாரிஜ்களிடத்தில் விவாதிக்கச்செல்வதற்கு முன் இப்னு அப்பாஸ் அவர்கள் அலீ அவர்களிடத்தில் கலந்தாலோசித்ததைப்போன்று நல்லறிஞர்களிடத்திலும் இஸ்லாமிய ஆட்சியாளர்களிடமும் இது போன்ற விவாதத்திற்குச் செல்லும் முன் கலந்தாலோசிக்கவேண்டும்

மூன்றாவதாக : நன்மை ஏற்படுமென்றிருந்தால் பித் அத் வாதிகளிடமும் நிராகரிப்பாளர்களிடமும் விவாதம் செய்யலாம். அவ்வாறு விவாதம் செய்வது சில நேரம் விரும்பதக்கதாகவும் சில போது கட்டாயமாகவுமுள்ளது.

நான்காவதாக: அழைப்பாளர்கள் சிலர் சிலருக்கு உபதேசம் செய்யவேண்டும். தங்கள் சகோதரர்களின் நலனில் அக்கரைக்காட்டவேண்டும். அலீ அவர்கள் இப்னு அப்பாஸ் அவர்களின் மீது அக்கரைக்கொண்டதைப்போன்று. உங்களுக்கு எதாவது நேர்ந்துவிடுமோ என்று நான் அஞ்சுகிறேன் என்று கூறினார்கள். காரணம் முஸ்லிம்களை கொலை செய்வதை ஹவாரிஜுகள் ஆகுமானதாக ஆக்கினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அவர்களின் பண்பாக அல்லாஹ்வின் தூதர் அவர்கள் இவ்வாறு கூறினார்கள்.

இஸ்லாமியர்களைக் கொல்வார்கள்; சிலைவணக்கம் புரிபவர்களைவிட்டுவிடுவார்கள்.நூல்:ஸஹீஹுல் புஹாரி 3344

இவர்கள் அப்துல்லாஹ் பின் கப்பாப் அவர்களையும் கற்பிணியான அவருடைய அடிமைப்பெண்ணையும் கொலை செய்தார்கள்.

ஐந்தாவதாக : அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைப்பவர்கள் அழைப்புப்பணிக்கான திட்டம் தீட்டவேண்டும் அதைக்குறித்து சிந்திக்கவேண்டும் எவ்வாறு இப்னு அப்பாஸ் அவர்கள் ஹவாரிஜுகளை நோக்கி வரும்போது அழகான ஆடையை உடுத்தி வந்தார்களோ அதே போன்று ஏனெனில் இந்த ஆடையை அவர்கள் விமர்ச்சிப்பார்கள் என்பதை அவர் அறிந்திருந்தார் எனவே நபி அவர்கள் இத்தகைய ஆடையைப் பயன்படுத்தினார்கள் என்பதை அவர்களுக்கு தெளிவுபடுத்தினார்கள் இன்னும் யார் அதனை ஹராமாக்குவார்களோ அவர்களை குர் ஆன் கண்டிப்பதையும் கூறிக்காட்டி அவர்களின் நிலைப்பட்டை பலவீனப்படுத்தினார்கள்

ஆறாவதாக : எதிரிகளுக்கு தாம் கொண்டிருக்கும் கொள்கையின் அடிப்படையை உறுதியாக எடுத்துரைக்கவேண்டும் இப்னு அப்பாஸ் அவர்கள்தான் நபி(ஸல்) அவர்களின் சிறிய தந்தையின் மகனும் நபியவர்களின் மருமகனுமாகிய அலீ, முஹாஜிர்கள் மற்றும் அன்ஸாரிகள் அடங்கிய நபித்தோழகளிடமிருந்து வருகிறேன் அவர்களிடம்தான் குர்ஆன் அருளப்பட்டது உங்களை விட வஹியை நன்கறிந்தவர்கள் அவர்கள் விஷயத்தில் தான் குர்ஆன் இறக்கப்பட்டது உங்களில் ஒருவர் கூட நபித்தோழர் இல்லை குர்ஆனின் விளக்கத்தை உங்களை விட நன்கறிந்தவர்கள் என்று கூறினார்கள்.

ஸஹாபாக்கள் தான் பிறறைவிட சத்தியத்தையும் குர்ஆனையும் நன்கு விளங்கக்கூடியவர்கள் அவர்களைத்தான் அல்லாஹ் புகழ்ந்துரைத்துள்ளான்.

எவர்கள் தம் வீடுகளையும், தம் சொத்துகளையும் விட்டு, அல்லாஹ்வின் அருளையும், அவன் திருப் பொருத்தத்தையும் தேடியவர்களாக வெளியேற்றப்பட்டனரோ அந்த ஏழை முஹாஜிர்களுக்கும் (ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும் அப்பொருளில் பங்குண்டு); அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் உதவி செய்து கொண்டிருக்கின்றனர் அவர்கள் தாம் உண்மையாளர்கள்.

இன்னும் சிலருக்கும் (இதில் பங்குண்டு; அவர்கள் மதீனாவில் முஹாஜிர்களுக்கு) முன்னரே ஈமானுடன் வீட்டை அமைத்துக் கொண்டவர்கள்; அவர்கள் நாடு துறந்து தங்களிடம் குடியேறி வந்தவர்களை நேசிக்கின்றனர்; அன்றியும் அ(வ்வாறு குடியேறி)வர்களுக்குக் கொடுக்கப் பட்டதிலிருந்து தங்கள் நெஞ்சங்களில் தேவைப்பட மாட்டார்கள்; மேலும், தங்களுக்குத் தேவையிருந்த போதிலும், தங்களைவிட அவர்களையே (உதவி பெறுவதற்குத் தக்கவர்களாகத்) தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள் – இவ்வாறு எவர்கள் உள்ளத்தின் உலோபித்தனத்திலிருந்து காக்கப்பட்டார்களோ, அத்தகையவர்கள் தான் வெற்றி பெற்றவர்கள் ஆவார்கள்.59:8,9

முஹாஜிர்களை உண்மையாளர்கள் என்றும் அன்ஸாரிகளை வெற்றியாளர்கள் என்றும் அல்லாஹ் கூறியுள்ளான் அப்படியிருக்கும் போது அவர்களுக்கு எப்படி மாறு செய்யமுடியும் அவர்கள் விளங்கியதைப்போன்று மார்க்கத்தை விளங்கினால் தான் ஒருவர் நேர்வழியில் நிலைத்திருக்க முடியும் எனவே நேர்வழியைப் பற்றிப்பிடிக்க விரும்புபவர்கள் நபித்தோழர்கள் இந்த மார்க்கத்தைப்பின்ப்பற்றியது போன்று கடைபிடித்துக்கொள்ளட்டும்

ஆகவே, நீங்கள் ஈமான் கொள்வதைப்போல் அவர்களும் ஈமான் கொண்டால் நிச்சயமாக அவர்கள் நேர்வழியை பெற்றுவிடுவார்கள்; ஆனால் அவர்கள் புறக்கணித்துவிட்டால் நிச்சயமாக அவர்கள் பிளவில்தான் இருக்கின்றனர். எனவே அவர்களி(ன் கெடுதல்களி)லிருந்து உம்மைக் காப்பாற்ற அல்லாஹ்வே போதுமானவன்; அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், (எல்லாம்) அறிந்தோனுமாகவும் இருக்கிறான்.2:137

ஏழாவதாக: பித் அத் வாதிகளும் வழிகேடர்களும் குர் ஆனையும் சுன்னாவையும் பொருத்தமில்லாத இடத்தில் பயன்படுத்துவார்கள் தவறான முறையில் அதிலிருந்து ஆதாரம்காட்டுவார்கள் என்பதை ஹவாரிஜுகள் காட்டிய ஆதாரங்களிலிருந்து புரிந்துகொள்ளலாம் அவர்கள் இப்னு அப்பாஸ் அவர்களின் பேச்சை கேட்க்கக்கூடாது என்பதற்காக சூரத்துல் சுஹ்ருஃப் வசனத்தை மேற்கோள்காட்டி னார்கள் அல்லாஹ் கூறுகிறான்

“ஆகவே அவர்கள் விதண்டா வாதம் செய்யும் சமூகத்தாரேயாவர்.”43:58

என்றுகூறினார்கள் இவ்வசனம் குறைஷிகளைக்குறித்து பேசுகிறது இப்னு அப்பாஸ் அவர்களும் குறைஷிதான். ஆனால் அல்லாஹ் இவ்வசனத்தில் மக்கா முஷ்ரிகுகளான குறைஷையரைப்பற்றி பேசுகிறான் இவர்கள் அவ்வசனத்தை சத்தியத்தையும் நேர்வழியையும் எடுத்துக்கூற வந்த இப்னு அப்பாஸ் அவர்களுக்கு பொறுத்துகிறார்கள் இப்படியகத்தான் வழிகேடர்கள் குர் ஆனையும் சுன்னாவையும் ஆதாரம் காட்டுவார்கள் என்பதையும் விளங்கிக்கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *