Featured Posts
Home » வரலாறு » பிற வரலாறு » முகலாய மன்னர் அக்பரின் தீனே இலாஹி – ஒரு விமர்சனப் பார்வை தொடர் – 2

முகலாய மன்னர் அக்பரின் தீனே இலாஹி – ஒரு விமர்சனப் பார்வை தொடர் – 2

எம்.ஏ.ஹபீழ் ஸலபி  (M.A)

முகலாய மன்னர்கள் இந்திய தேசத்தை ஆட்சி செய்த காலகட்டத்தில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டுள்ளனர் என்பதற்கான வலுவான சான்றுகள் இன்றுவரை உள்ளன. ஆனால், அவர்கள் இஸ்லாமிய நன்நெறியில் ஆட்சியை மேற்கொள்ளவில்லை என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. எனினும், இந்தியாவை அவர்கள் வளப்படுத்தினார்கள் என்பதை யாரும் மறுக்கக முடியாத வகையில் வரலாற்றுப் பதிவுகள் உள்ளன. நாட்டின் அபிவிருத்தி, முன்னேற்றம் என்பன கருதி பல சந்தர்ப்பங்களில் இஸ்லாத்தின் அடிப்படைகளைக் கூட விட்டு விலகி நின்றனர் என்ற கண்டனங்கள் பதிவாகியுள்ளன. ஆனால், இந்துத்துவ சிந்தனையுள்ளோர் அவர்கள் மேற்கொண்ட அனைத்து நற்பணிகளையும் மறுதலித்துவருகின்றனர். சில பார்ப்பன சிந்தனையாளர்கள் அக்பரை மட்டும் உயர்வாகப் பேகின்றனர். அதற்கான காரணம் என்ன?

விமர்சனம்:

”முகலாய மன்னர்கள் இந்திய தேசத்தின் இறைமையையும், வரையறையற்ற உரிமைகளையும் தமதாக்கிக் கொண்டனர். அரசவைப் பிரதானிகளின் சொகுசான, படாடோப வாழ்க்கை, சட்ட விரோதமான முறையில் செல்வம் சேர்த்தல், அநீதியாகச் செலவு செய்தல், கொடுங்கோலாட்சி, அடக்குமுறை, இறைவனை மறந்து, நேர்வழியிலிருந்து விலகி நடத்தல் போன்ற அத்தனை தீமைகளும் அவர்களிடையே பரவியிருந்தன. சமய நோக்கில் சட்ட வரம்புக்குக் கட்டுப்படாத அவலநிலை அக்பரின் காலத்தில் அதன் உச்ச கட்டத்தை அடைய, சீர் குலைவுகள் அவற்றின் எல்லைகளையே அண்மித்தன ” என்று பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

அக்பரின் அரசவையில் பொதுவாக இஸ்லாத்தைப் பற்றி நிலவிய கருத்து: ‘இஸ்லாமிய கலாசாரம் அரேபிய நாடோடிக் கூட்டத்தில் பிறந்ததாகும். ஆகையால், அது ஒரு நாகரிகமான, பண்பட்ட சமுதாயத்திற்குப் பொருத்தமற்றது’ என்றும், நரகமும்-சுவர்க்கமும் கேலியும், நையாண்டியும் செய்யப்பட்டன. குர்ஆன் இறைவனின் வாக்கு என்பதும், அது இறைவனால் அருளப்பட்டது என்பதும் சந்தேகத்திற்குள்ளாக்கப்பட்டது. மரணத்தின் பின் தண்டனையோ, வெகுமதியோ அளிக்கப்படும் என்பது நிச்சயமற்றதாகக் கொள்ளப்பட்டது. இறைதூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் மிஃராஜ் நடைபெறாத ஒன்றாகக் கருதப்பட்டது.

நபிகள் (ஸல்) அவர்கள் பலதார மணத்திற்காகவும், அவர்கள் தொடுத்த புனிதப் போர்களுக்காககவும் பகிரங்கமாகக் கண்டனத்துக்கு உள்ளாக்கப்பட்டார்கள். அஹ்மத், முஹம்மத் போன்ற பெயர்கள் கூட வழக்கொழிக்கப்பட்டு, இவ்வாறான பெயர்கள் மாற்றப்பட்டன. உலகாசை பிடித்த ஆலிம்கள் தமது உரைகளிலும் எழுத்துக்களிலும் முஹம்மத் (ஸல்) அவர்களின் திருநாமத்தை உபயோகிக்கும் இடங்களில் அன்னாரைப் புகழ்ந்து, ஸலவாத்துச் சொல்லும் சொற்களைச் சேர்த்துக் கொள்ளும் வழக்கத்தைக் கைவிட்டுவிட்டனர். சிலர், இறைதூதர் (ஸல்) அவர்களில் தஜ்ஜாலின் அடையாளங்கள் காணப்படுவதாகக் கூறும் அளவுக்கு துரோகிகளாக மாறிவிட்டிருந்தனர்.’

அக்பரின் நம்பிக்கைக்குரிய அரசவைப் பிரதானியான அபுல் பஸல் தொழுகை, நோன்பு, ஹஜ் முதலிய கடமைகளை அவமதித்து, அவற்றை இழித்துரைத்தார். அக்பரின் மாளிகை வளாகத்திற்குள் யாரும் தொழுகை நடத்தத் துணியவில்லை. ஆஸ்தான கவிஞர்கள், இஸ்லாத்தின் கடமைகளை கிண்டல் செய்து, புனைந்த கவிதைகள் பொது மக்களையும் அடைந்தன.

அக்பரின் காலத்திலேயே ‘பஹாய்’ கொள்கை முதன் முதலில் தோன்றியது. ‘இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் காலமுதல் இஸ்லாத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்த ஆயிரம் ஆண்டுகால எல்லை முடிவடைந்து விட்டது. ஆகையால், இஸ்லாம் காலங்கடந்ததாகிவிட்டது. எனவே, அதற்குப் பதில் புதியதொரு சமயக் கொள்கை அவசியமாகும்’ என்பது பஹாய்கள் கருத்தாகும். இக்கருத்து,அக்காலத்தில் மிகச் சக்தி வாய்ந்த பிரசார சாதனங்கள் எல்லாவற்றின் மூலமும் பரப்பப்பட்டது.

இந்து, முஸ்லிம்கள் கொள்கைகளை ஒன்றாகக் கலந்து, முகலாயச் சாம்ராஜ்யத்தைப் பலப்படுத்திப் பாதுகாக்கும் ஒரே நோக்கத்திற்காக, ஒரு புதிய கொள்கையுடைய, புதியதொரு சமயக் கொள்கை உருவாக்கப்பட்டது. முகஸ்துதிபாடும் இந்து அரச சபைப் பிரதானிகள், சக்கரவர்த்தியை மகிழ்விப்பதற்காக இந்து வேதாகமங்களிலிருந்து சில தீர்க்க தரிசனக் கூற்றுக்களை எடுத்துக்காட்ட முற்பட்டனர். ‘மகாத்மாவைக் கொண்ட ஒர் அரசன் பிறப்பான். அவன் பசுவைக் காப்பான்’ என்று கவிதை பாடினர்.

சில முஸ்லிம் அறிஞர்கள் ‘அக்பரே வாக்களிக்கப்பட்ட மஹ்தி (அலை)’ என்றும், அக்பர்தான் ‘இமாமுல் முஜ்தஹித்’ என்றும் நிரூபிக்க முனைந்தனர். அரசவைப் பிரதானிகளில் ஒருவரான ‘சூஃபி’ ஒருவர், அக்பரை ‘பரிபூரண மனிதன்’ என்றும் ‘தற்கால கலீபா’ என்றும், ‘பூமியில் இறைவனின் அவதாரம்’ என்றும் பிரகடனப்படுத்தினார்.

நீதியும், உண்மையும் எல்லாச் சமயங்களுக்கும் பொதுவானவை. ஆகையால், எந்தச் சமய நெறியும் இவ்வாறான பண்புகளுக்கு ஏகபோக உரிமை கோர முடியாது என்று, பொதுமக்கள் நம்பும்படி செய்யப்பட்டன.

எனவே, பல்வேறு சமய நெறிகளிலும் காணப்படும் நல்ல அம்சங்களை ஒன்று சேர்த்து, விரிவான ஒரு மதக் கொள்கையை உருவாக்கினால், பல்வேறு கருத்துக்களையும், மத நம்பிக்கைகளையும் கொண்ட மக்கள், அதனை விரும்பி ஏற்றுக் கொள்வர் என்றும் இதன் மூலம் பிரிவினை மனப்பான்மையையும் வகுப்புவாத வேறுபாடுகளையும் மறந்துவிடுவர் என்றும் கருதப்பட்டது. இப்புது மதத்துக்கு ‘தீனே இலாஹி’ என்று பெயர் சூட்டப்பட்டது.

அதன் அடிப்படைக் கொள்கை ‘லாஇலாஹ இல்லல்லாஹ் அக்பர் கலீபத்துல்லாஹ்’ என்பதாகும். (வணக்கத்துக்குரிய இறைவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை அக்பர் அவனது பிரதிநிதி)

இப்புது மார்க்கத்தைத் தழுவியவர்கள் தம் பாரம்பரிய மார்க்கமும் மூதாதையரிடமிருந்து கேட்டும், பார்த்தும் அறிந்து கொண்ட மார்க்கமுமாகிய இஸ்லாத்தைப் பகிரங்கமாகத் துறந்து விட்டு, அக்பரின் ‘தீனே இலாஹியில் பக்தி சிரத்தையோடு நுழைய வேண்டும். இம்மதத்தைத் தழுவியவர்கள் ‘சேலர்’ என அழைக்கப்பட்டனர்.

இம்மதத்தில் முகமன் கூறும் முறையும் மாற்றப்பட்டது . ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்பதற்குப் பதில் ஒருவர் ‘அல்லாஹு அக்பர்’ என்று கூற, மற்றவர் பதிலுக்கு ‘ஜல்ல ஜலாலுஹு’ என்பார். இச்சொற்கள் மன்னனின் ஜலாலுத்தீன் அக்பர் என்ற பெயரிலிருந்து பெறப்பட்டவையாகும்.

சேலர்கள் தமது தலைப்பாகைகளில் சக்ரவர்த்தியின் உருவத்தை ஒத்த உருவங்களை அணியுமாறு பணிக்கப்பட்டனர். அரசனை வழிபடல் அடிப்படைக் கடமைகளில் ஒன்றாகும். அரசனை அதிகாலையில் தரிசிப்பதன் மூலம் மக்கள் இதனை நிறைவேற்றினர். அரசனின் சன்னிதானத்தில் ஆஜராவதற்கு யாருக்காவது அனுமதி கிடைத்து விட்டால், முதலாவதாக அவர் அரசருக்குச் சாஷ்டாங்கம் செய்வார். அவரே தம் பிரார்த்தனைகளையும் வேண்டுதல்களையும் நிறைவேற்றுபவர் போல ஆலிம்களும், சூஃபிகளும் கூட அரசனுக்குச் சாஷ்டாங்கம் செய்தனர்.

இஸ்லாத்திற்கு முரணான இச்செயலை அவர்கள் ‘ஸஜ்தா தஹிய்யா’ (கண்ணியப்படுத்துவதற்காகச் செய்யும் ஸஜ்தா) ‘ஸமீன் போஸீ’ (பூமியை முத்தமிடல்) எனும் சொற்களைக் கொண்டு மறைக்க முயற்சி செய்தனர். இவை: ‘ஒரு காலம் வரும் அக்காலத்தில் மக்கள் சட்ட விரோதமானவற்றை சட்ட பூர்வமானவையாக ஆக்குவதற்காக, அவற்றின் பெயர்களை மாற்றி விடுவார்கள்’ என்ற நபியவர்களின் வாக்கை உறுதிப்படுத்தி நிற்கின்றன.

அக்பர் ‘எவ்வித பாராபட்சமும் பக்கச் சார்பும் இன்றி எல்லாச் சமய நெறிகளதும் நல்லம்சங்கள் யாவற்றையும் கொண்டே இப்புதிய மதம் உருவாக்கப்படும்’ என்று கூறியே ‘தீனே இலாஹியைத்’ தோற்றுவித்தார். துர்பாக்கியம் என்னவென்றால், இஸ்லாத்தை முற்றாக ஒதுக்கிவிட்டு மற்றெல்லா மதக் கொள்கைகளும் உள்ளடக்கப்பட்டன.

தீ வழிபாடு ஸொரஸ்திரியர்களிடமிருந்து இரவல் பெறப்பட்டு, எப்பொழுதும் அரச மாளிகையில் தீ எரிந்து கொண்டிருக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மாலைப் பொழுது கிரியைகளுக்காக விளக்கு, மெழுகுதிரி எனபன ஏற்றப்படும் போது, அரண்மனையினர் எழுந்து நின்று, மரியாதை செய்யும் முறைமை உருவாக்கப்பட்டது. மணி அடித்தல், திரி மூர்த்திகளை வழிபடல் போன்ற சில கிரியைகள் கிறிஸ்தவ மதத்திலிருந்து இரவல் பெறப்பட்டன. எனினும், இந்து மதமே கூடிய ஆதரவைப் பெற்றது. ஏனெனில், அதுவே நாட்டின் பெரும்பான்மையினரின் மதமாக அப்போது காணப்பட்டது. அவர்களின் உள்ளங்களை வென்று, சக்கராதிபத்தியத்தை உறுதிப்படுத்த வேண்டிய நிலை அக்பருக்கு ஏற்பட்டது. அதனால், இஸ்லாத்தைப் புறக்கணித்து, இந்து மதத்திற்கு கூடிய ஆதரவை வழங்கினார்.

பசுக்கள் அறுப்பதற்கு அக்பர் தடை விதித்தார். தீபாவளி, துஷேரா, ராகிபூணம், சிவராத்ரி போன்ற பண்டிகைகள் மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டன. அரச மாளிகையில் ‘ஹவான்’ கிரமமாக நடைபெற்றது. தினமும் நான்கு வேளை சூரிய நமஸ்காரம் இடம் பெற்றது. சூரியனின் ஆயிரம் பெயர்களும் பக்தி சிரத்தையோடு ஜெபிக்கப்பட்டன. யாராவது சூரியனின் ஒரு பெயரைச் சொன்னால், அதைக் கேட்டவர்கள் ‘அதன் புகழ் ஓங்குவதாக’ என்பர். நெற்றியில் திருநீறு தடவி தோளில் பூணூள் அணியப்பட்டதோடு, காமதேனு-பசுவுக்கு மிக உயர்ந்த கண்ணியம் அளிக்கப்பட்டது.

மறுபிறப்புக் கொள்கை முற்றாக ஏற்றுக் கொள்ளப்பட்டதுடன், பிராமணியத்திலிருந்து வேறு பல நம்பிக்கைகளும் சேர்த்துக் கொள்ளப்பட்டன. இவ்வாறாகத்தான் பிற மதங்களுக்கு ஆதரவு அளிக்கப்பட்டது. அதேவேளை மன்னனும் அரசவைப் பிரதானிகளும் இஸ்லாத்தைக் கேவலமாகவும் இழிவாகவுமே நடத்தினர். இஸ்லாத்தின் உண்மையான போதனைகள் அவமதிக்கப்பட, அரச சபைச் சூழலுக்கு ஏற்ப, இஸ்லாத்தை அவமதிக்கும் ஏதேனும் ஒன்று தத்துவரீதியாகவும், புரியாத புதிராகவும் சமர்ப்பிக்கப்பட்டால், அதுவே வானத்திலிருந்து அருளப்பட்ட போதனையாகக் கொள்ளப்பட்டது. உணர்வுள்ள ஆலிம்கள் உண்மயான இஸ்லாத்தை எடுத்துரைத்தால், அல்லது ஒரு தீமையை அங்கீகரிக்காவிட்டால், அத்தகைய ஆலிம்களுக்கு தீண்டத்தகாத முட்டாள் எனப் பட்டம் சூட்டப்பட்டது.

அரசாங்கத்தின் கல்விக் கொள்கையும் இஸ்லாத்திற்கு நேரெதிராகவே தயாரிக்கப்பட்டது. அரபு, இஸ்லாமிய சட்டம், ஹதீஸ் ஆகிய பாடங்கள் போதிப்பதற்கு ஆதரவளிக்கப்படவில்லை. இக்கலைகளைக் கற்றோர் கீழ்த்தரமானவர்களாகவும் பிற்போக்கானவர்களாகவும் கருதப்பட்டனர். அதே வேளை முற்றிலும் உலகியல் பயனுள்ள தத்துவவியல், கணிதம், வரலாறு, கலை போன்ற பாடங்களுக்கு அரசாங்கம் பேராதரவளித்தது. மொழியைப் பொறுத்தவரை சமஸ்கிருதம், இந்தி என்பன வளர்ப்பதற்குப் பேராவல் கொள்ளப்பட்டது.

அரபு மொழிச் சொற்கள் படிப்படியாகக் கைவிடப்பட்டன. இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் இஸ்லாமிய சமயத்துறைக் கல்விக் கூடங்கள் கைவிடப்பட்டன. இவ்வாறு, அக்பரின் ஆட்சிக்காலம் காணப்பட்டபோது செய்க் அஹ்மத் ஷிர்ஹிந்தி பிறந்தார்கள்.

ஷெய்க் அஹ்மத் ஷிர்ஹிந்தியும் அக்பரும்:

அக்பரின் ஆட்சியின் தொடக்க காலத்தில் இருந்து மேற்கூறப்பட்ட சூழ்நிலையில்தான் சிர்ஹிந்த் என்னுமிடத்தில் ஷெய்க் அஹ்மத் அவர்கள் பிறந்தார்கள். அவர், அவரது காலத்தில் வாழ்ந்த பயபக்தி மிக்கவர்களின் மத்தியிலேயே வளர்ந்தார். அவர் தம்மைச் சூழ்ந்து, வளர்ந்து வந்த தீமைகளைத் தடுத்து நிறுத்துவதற்குச் சக்தியற்றவராக இருந்த போதும், ஈமானில் உறுதியானவராகவும், செயலில் சிறந்தவராகவும் விளங்கினார். அத்துடன் மற்றவர்களையும் நேர்வழி நடக்கத்தூண்டிக் கொண்டும் இருந்தார்.

ஷெய்க் அஹ்மத்  (1563 -1624) அவர்கள், அக்பரின் காலத்தில்  ஆன்மீகத் துறையில் மேலோங்கி நின்ற ஹஸ்ரத் பகீஹ் பில்லாஹ் அவர்களிடமிருந்த ஆழ்ந்த உணர்ச்சியும் பயனும் பெற்றார். ஷெய்க் அஹ்மத் அவர்கள் பல்வகை ஆற்றல்களும் திறமைகளும் வாய்ந்தவராகத் திகழ்ந்தார்.

ஷெய்க் அஹ்மத் அவர்கள் முதன் முறையாக பகீஹ் பில்லாஹ் அவர்களைச் சந்தித்த போது – ஷெய்க் அஹ்மத் அவர்களால் பெரிதும் கவரப்பட்ட பகீஹ் பில்லாஹ் பின்வருமாறு தமது நண்பர் ஒருவருக்கு எழுதினார்.

‘ஷெய்க் அஹ்மத் என்ற ஓர் இளைஞர் ஷிர்ஹிந்தியிலிருந்து சமீபத்தில் இங்கு வந்துள்ளார். அவர் அறிவும் பேராற்றலும் நிறைந்தவராகக் காணப்படுகிறார். அவர், ஒரு சில நாட்களாக என்னுடன் பழகி வருகிறார். நான் அவதானித்த வரை, அவர் எதிர்காலத்தில் மக்களுக்கு ஒரு கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்து, முழு உலகையும் ஒளிமயமாக்குவார் எனத் தோன்றுகிறது.’

இத்தீர்க்க தரிசனம் முழுமையாக உண்மையாயிருந்தது. அக்காலத்தில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் சத்தியத்தை விரும்பும் ஆலிம்களும் சொற்ப அளவு சூஃபிகளும் வாழ்ந்து வந்தனர். எனினும், அக்காலத்தில் மலிந்திருந்த சீர்கேடுகளுக்கு முற்றுப்புள்ளியிட்டு, ஷரீஅத்தை மேலோங்கச் செய்ய, மன உறுதியோடு முன்வந்த ஒரே மனிதர், ஷெய்க் அஹ்மத் அவர்கள் ஆவார்.

அவர், அக்கால அரசாங்கக் கொள்கைகளைப் பலமாக எதிர்த்து, உண்மையான சமய நெறிக்குப் புத்துயிரளிக்கப் பெருமுயற்சி செய்தார். அப்போது, தீயபோக்குகள் அனைத்தையும் அவர் எதிர்த்துப்போராடியதோடு, ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.

எனவே, அரசாங்கம் முழுச்சக்தியையும் திரட்டி, அவரை அடக்கியொடுக்க முயன்று, சிறையிலும் தள்ளியது. இறுதியில் தீமைகளை ஒழித்துக் கட்டுவதில் அவர் வெற்றி பெற்றார்.

மன்னர் அக்பரின் மரணத்தின் பின்னரும், ஷெய்க் அஹ்மதின் பணி தொடர்ந்து கொண்டே இருந்தது. மன்னர் ஜஹாங்கீருக்கு சாஷ்டாங்கம் செய்ய, ஷெய்க் அஹ்மத் மறுத்தார் என்பதற்காக அவரை குவாலியர் கோட்டை சிறையில் அடைத்தனர். செய்க்கின் நன்னடத்தை காரணமாக மன்னர் அவரின் சீடரானார். பிற்காலத்தில் ஷாஜஹான் என்ற பெயரில் மன்னர் ஜஹாங்கீர் ஆன்மிகப் பயிற்சிக்காக தனது மகனை ஷெய்க் அஹ்மத் அவர்களிடம் ஒப்படைத்தார். இவையெல்லாம் இஸ்லாமியப் பிரசாரப் பணிக்குப் பெருந்துணையாக அமைந்தன. இஸ்லாத்தை மரியாதைக் குறைவாகவும் கேவலமாகவும் நடாத்திய அரசாங்கத்தின், மன்னர்களின் மனப்பான்மை, இப்பொழுது இஸ்லாத்தை மதித்து நடக்கும் வகையில் மாற்றமடைந்தது.

அரசவைச் சட்டகர்த்தாக்கள் புனைந்த புதுக்கோட்பாடுகள், சட்டவிதிகள் அனைத்தோடும் கூடிய அக்பரின் ‘தீனே இலாஹி’ என்ற புதிய மதம் செயல்படாமல் தடுக்கப்பட்டது. இஸ்லாமிய கட்டளைகளுக்கு எதிரான எல்லாத் திருத்தங்களும், விலக்குகளும் தாமாகவே இரத்தாகி, செல்லுபடியாகாதவையாகி விட்டதாக அறிவிக்கப்பட்டது.

ஆட்சிமுறை முடியாட்சியாகவே தொடர்ந்தாலும், சமயக் கலைகள் மற்றும் ஷரீஅத் சட்டங்களைப் பொறுத்தவரை, அரசாங்கத்தின் மனப்பான்மை சகிப்புத் தன்மையும் மரியாதையும் உள்ளதாக மாறிற்று.

ஷெய்க் அஹ்மத் அவர்கள் மரணித்து நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் அவ்ரங்கஷீப் ஆலம்கீர் பிறந்தார். பெரும்பாலும் ஷெய்க் அஹ்மத் அவர்களின் நற்செல்வாக்குக் காரணமாக தைமூர் குடும்பத்தின் இவ்வரசர் சிறந்த அறிவு, ஒழுக்கப் பயிற்சிகளைப் பெறுவது சாத்தியமாயிற்று. இஸ்லாமிய ஷரீஅத்தை ஒழித்துக் கட்டும் செயலில் ஈடுபட்டவர், அக்பராயினும் அவரது கொள்ளுப் பேரனான அவ்ரங்கஷீப் இஸ்லாத்தின் பாதுகாவலராக ஆனார்.

ஷெய்க் அஹ்மத் ஷிர்ஹிந்தி அவர்கள் இந்தியாவின் முஸ்லிம் அரசாங்கம் முற்றாக ஜாஹிலியத்தின் கைகளுக்கு மாறுவதைத் தடுத்தார். அத்தோடு, மற்றிரு சாதனைகளை நிலைநாட்டிய பெருமையும் அவரைச் சாரும்.

01.            அக்காலத்தில் தஸவ்வுபுடன் இரண்டறக் கலந்திருந்த தத்துவச் சிந்தனை தொடர்பான மாசுமறுக்களையும், துறவி மடப் பயிற்சிகளையும் களைந்து, இஸ்லாத்தின் உண்மைகளை மக்களுக்கு எடுத்துக் காட்டினார்.

02.            பொதுமக்களிடையே நிலவிய சன்மார்க்கத்துக்கு முரணான எல்லாப் பழக்க வழக்கங்களையும், கடும் தீவிரமாக எரித்துக் கருத்துத் தெரிவித்தார். அத்துடன், ஆன்மீக வழிகாட்டி ஒருவரின் கீழ் ஷரீஅத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சக்திவாய்ந்த ஓர் இயக்கத்தினைத் தோற்றுவித்தார்.

ஷெய்க் அஹ்மத் அவர்கள் நன்கு பயிற்சி வழங்கிய பல இஸ்லாமிய ஊழியர்களை உருவாக்கினார். இவர் இந்தியாவில் மட்டுமன்றி மத்திய ஆசியா வரை மக்களின் நம்பிக்கைகளையும் ஒழுக்கத்தையும் சீர்திருத்துவதில் பெரும் பங்காற்றினார். மன்னர் அக்பரின் தீனே இலாஹியை தர்க்க ரீதியாக விமர்சனம் செய்து, தூய இஸ்லாமிய ஷரீஆவுக்கு அது எவ்வாறெல்லாம் மாறுபடுகிறது, முரண்படுகிறது என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்தி, அப்புதிய மதத்தை வழக்கொழியச் செய்தமையில் ஷெய்க் அஹ்மத் ஷிர்ஹிந்தியின் பங்களிப்பு மகத்தானதும் மனங்கொள்ளத்தக்கதுமாகும்.

உசாத்துணைகள்

1.கி.நெடுஞ்செழியன்(2007) முஸ்லிம் மன்னராட்சியில் இந்தியாவின் முன்னேற்றம் – இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் -சென்னை.

2.சையித் இப்றாஹீம் (2012) இந்தியாவில் முஸ்லிம் ஆட்சி (முதற் பகுதி) யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் – சென்னை.

3. அல்ஜன்னத்

4.மௌதூதி, அபுல் அஃலா(2001) இஸ்லாமிய மறுமலர்ச்சி ஒரு வரலாற்று நோக்கு – இலங்கை ஜமாஅதே இஸ்லாமி- கொழும்பு.

5.தாழை மதியன் (2013) முஸ்லிம் மன்னர்கள் ஆண்ட இந்தியா – சென்னை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *