Featured Posts
Home » நூல்கள் » நூல் விமர்சனம் » நட்புக்கு இலக்கணம் (நூல் அறிமுகம்)

நட்புக்கு இலக்கணம் (நூல் அறிமுகம்)

எம்.ஏ. ஹபீழ் ஸலபி அவர்கள் 2000ம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவனாக கற்றுக் கொண்டிருக்கும் போது, நட்புக்கு இலக்கணம் என்ற தலைப்பில் நூல் ஒன்றை எழுதினார். அது மக்கள் மத்தியில் குறிப்பாக மாணவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் வாசிப்பையும் பெற்றது.

இந்த நூல் வெளிவந்த போது, பிரபல எழுத்தர் அறபாத் ஸஹ்வி அவர்கள் தினகரன் நாளிதழில் அறிமுகப்படுத்தியிருந்தார். அந்த அறிமுகத்தை இங்கு தருகின்றோம்.

நூலின் பெயர் : நட்புக்கு இலக்கணம்
ஆசிரியர் : எம். ஏ. ஹபீழ் ஸலபி

உண்மையான நட்புக்கு என்றும் ஆயுள் அதிகம். இஸ்லாம் இந்த நட்பின் இலக்கணத்தை நன்மையோடு இணைத்து, மறுமைக்கான உயரிய வழியொன்றையும் சொல்லித் தருகின்றது.
கோபம், அன்பு இந்த இரண்டு குணாதிசயங்களும் இறை ஆதரவை ஆசித்து வெளிப்படுத்தப்படும் போது, அதற்கு எப்போதும் ஒரு மகத்துவம் உண்டு. சகோதரர் எம்.ஏ. ஹபீழ் ஸலபி அவர்களால் எழுதப்பட்ட நட்புக்கு இலக்கணம் என்ற நூல் மேற்சொன்ன நட்பின் உணர்வுகளை இஸ்லாத்தின் பார்வையில் அழகாகவும், ஆழமாகவும் உணர்த்துகின்றது.

இன்றைய அவசர உலகில், நகரச் சூழலில் உண்மையான அன்பும், நட்பும் வெறும் எதிர்பார்ப்பு, சுயநலம் ஆகியவற்றிக்கிடையே பட்டும் படாமலும் வளர்ந்திருக்கும் வேளை, தூய்மையான நட்பு எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு இந்நூல் சிறந்ததொரு வழிகாட்டியாகும்.

• அன்பின் அவசியம்
• ஏகாந்தமும் நட்பும்
• நட்புப் பாராட்டுவதற்கான ஒழுங்கு விதி
• அன்பை அறிவித்தல்
• நம்பத் தகுந்த நல்ல நண்பன்
• தீய நண்பன்
• அன்பை அதிகரிக்க
• நட்பிலும் பகைமையிலும் நிதான வழி
• ஆணும்இ பெண்ணும் நண்பர்களாக பழக முடியுமா?
• அன்பு அல்லாஹ்வுக்காக
• அல்லாஹ்வுக்காக பகைமை பாராட்டுதல்
• சத்திய சீலர்களை நேசித்தல்
• நபி(ஸல்) அவர்களை நேசித்தல்
• அல்லாஹ்வுக்காக அன்புப் பயணம் மேற்கொள்ளல்

போன்ற பல்வேறு தலைப்புக்களில் ஆய்வு செய்திருக்கின்றார், ஆசிரியர்.

நட்பு பற்றி இஸ்லாம் இவ்வளவு அக்கறையுடன் கரிசனை காட்டியுள்ளதா என்று படிப்போர் வியக்கும் வண்னம், ஒவ்வொரு தலைப்பிற்கும் அல்குர்ஆனிலிருந்தும் அல்ஹதீஸிலிருந்தும் ஆதாரங்களை மேற்கோள் காட்டியிருப்பது நூலை மெருகுபடுத்துகின்றது.

போலியான நட்புக்கு மனிதர்கள் மயங்கி ஏமாறும் இந்த உலகில் தூய்மையான நட்பை இனங்காட்டி, அந்த நட்பின் ஊடாக இறையாதரவைப் பெற வழிகாட்டுகின்றது இந்நூல்.
நூலாசிரியரின் ஆற்றொழுக்கான தமிழும், விடயங்களை மனதில் புரிய வைக்கும்படி ஆதாரங்களை கோர்த்திருக்கின்ற அழகும் இந்நூலுக்கு அணிசேர்க்கின்றன.

– அறபாத் ஸஹ்வி
(THINAKARAN VARAMANJARY, SUNDAY DECEMBER 31, 2000 PAGE – 10)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *