Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » இஸ்லாத்தைப் புதிதாக ஏற்றோருக்கு உதவுதல்.

இஸ்லாத்தைப் புதிதாக ஏற்றோருக்கு உதவுதல்.

632. ஹவாஸின் குலத்தாரின் செல்வத்தை அல்லாஹ், தன்னுடைய தூதருக்கு (ஹுனைன் போரில்) அளித்தபோது அவர்கள் குறைஷிகளில் சிலருக்கு நூறு ஒட்டகங்களைக் கொடுக்கலானார்கள். உடனே அன்சாரிகளில் சிலர், ‘தன் தூதரை அல்லாஹ் மன்னிப்பானாக! நம்முடைய வாட்களில் எதிரிகளுடைய இரத்தம் சொட்டிக் கொண்டிருக்க குறைஷிகளுக்குக் கொடுக்கிறார்; நம்மைவிட்டு விடுகிறாரோ” என்று பேசிக் கொண்டார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் அவர்களின் இந்தப் பேச்சு தெரிவிக்கப்பட்டது. உடனே நபி (ஸல்) அவர்கள் அன்சாரிகளிடம் ஆளனுப்பி அவர்களை வரச் சொல்லி அவர்களை முழுதாகப் பதனிடப்பட்ட தோலால் ஆன கூடாரம் ஒன்றில் ஒன்று திரட்டினார்கள். அவர்களுடன் வேறெவரையும் அவர்கள் அழைக்கவில்லை. அவர்கள் ஒன்று திரண்டுவிட்டபோது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வந்து, ‘உங்களைப் பற்றி எனக்கு எட்டியுள்ளதே, அச்செய்தி என்ன?’ என்று கேட்டார்கள். அன்சாரிகளிடையே இருந்த அறிஞர்கள், ‘எங்களில் யோசனையுடையவர்கள் எதுவும் சொல்லவில்லை, இறைத்தூதர் அவர்களே! ஆயினும், எங்களிடையேயுள்ள இளம் வயது வாலிபர்கள், ‘தன் தூதரை அல்லாஹ் மன்னிப்பானாக! நம்முடைய வாட்களில் ஹவாஸின் குலத்தாருடைய இரத்தம் சொட்டிக் கொண்டிருக்க குறைஷிகளுக்குக் கொடுக்கிறார். ஆனால், நம்மைவிட்டு விடுகிறாரே’ என்று பேசிக் கொண்டார்கள்” என்று பதில் கூறினர். அதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘நிராகரிப்பைக் கைவிட்டு இப்போது தான் புதிதாக இஸ்லாத்தைத் தழுவியவர்களுக்கு கொடுக்கிறேன். மக்கள், செல்வங்களை எடுத்துச் செல்ல, உங்கள் வசிப்பிடத்திற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்களை (உங்களுடன் அழைத்துக்) கொண்டு செல்வதை நீங்கள் விரும்பவில்லையா? அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் எடுத்துக் கொண்டு திரும்பிச் செல்பவற்றை விட நீங்கள் எடுத்துக் கொண்டு திரும்பிச் செல்வதே சிறந்ததாகும்” என்றார்கள். உடனே அன்சாரிகள், ‘இறைத்தூதர் அவர்களே! ஆம்; நாங்கள் (தாங்களே எங்களுக்குப் போதுமென்று) திருப்தியடைந்தோம்” என்று பதிலளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘எனக்குப் பின், (ஆட்சிப் பொறுப்பிலும் போரில் கிடைக்கும் செல்வங்களைப் பங்கிடுவதிலும்) உங்களை விட மற்றவர்களுக்கு மிக அதிகமாக முன்னுரிமை வழங்கப்படுவதை நீங்கள் காண்பீர்கள். அந்நிலையில் அல்லாஹ்வையும் ‘ஹவ்ளுல் கவ்ஸர்’ தடாகத்தின் அருகே அவனுடைய தூதரை (என்னை)யும் சந்திக்கும் வரை பொறுமையைக் கைக் கொள்ளுங்கள்” என்றார்கள்.இதை அறிவித்துவிட்டு அனஸ் (ரலி), ‘ஆனால், நாங்கள் பொறுமையைக் கைக் கொள்ளவில்லை” என்றார்கள்.

புஹாரி: 3147 அனஸ் (ரலி).

633. (ஏதோ பேசுவதற்காக ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் அன்சாரிகளைத் (தனியாக) அழைத்தார்கள். (அவர்கள் வந்த) பின்னர், ‘உங்களிடையே எவரேனும் உங்கள் (கூட்டாத்தார்) அல்லாதவர் (இங்கே வந்து) இருக்கிறாரா?’ என்று கேட்டார்கள். அதற்கு அன்சாரிகள், ‘எங்கள் சகோதரி ஒருத்தியின் மகனை (நுஃமான் இப்னு முக்ரினை)த் தவிர வேறெவருமில்லை” என்று பதிலளித்தார்கள். அதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘ஒரு சமுதாயத்தினரின் சகோதரி மகன் அவர்களைச் சேர்ந்தவரே” என்று கூறினார்கள்.

புஹாரி : 3528 அனஸ் (ரலி).

634. மக்கா வெற்றியடைந்த ஆண்டில் (ஹுனைன் போரில் கிடைத்த செல்வங்களை) நபி (ஸல்) அவர்கள் (அன்சாரிகளுக்கு வழங்காமல், புதிதாக இஸ்லாத்தைத் தழுவியிருந்த) மக்கா குறைஷிகளுக்கு கொடுத்தபோது அன்சாரிகள் ‘அல்லாஹ்வின் மீதாணையாக! உண்மையில், இது வியப்பாகத் தான் இருக்கிறது. எங்கள் வாட்களில் குறைஷிகளின் இரத்தம் கொட்டிக் கொண்டிருக்க, எங்கள் போர்ச் செல்வங்கள் அவர்களுக்கல்லவா கொடுக்கப்படுகின்றன?’ என்று பேசிக் கொண்டார்கள். அவர்கள் இப்படிப் பேசிக் கொண்டது. நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. உடனே அன்சாரிகளை அழைத்து, ‘உங்களைப் பற்றி எனக்கெட்டிய செய்தி என்ன?’ என்று கேட்டார்கள். அவர்கள் (நபித் தோழர்கள்) பொய் சொல்லாதவர்களாய் இருந்தனர். எனவே, அவர்கள், ‘(உண்மையில் நாங்கள் பேசிக் கொண்டதும்) உங்களுக்கு எட்டியதே தான்” என்று பதிலளிதார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘மக்கள் போர்ச் செல்வங்களைப் பெற்றுக் கொண்டு தம் வீடுகளுக்குத் திரும்பிச் செல்ல, நீங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடனேயே உங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் செல்வதை நீங்கள் விரும்பவில்லையா? அன்சாரிகள் ஒரு பள்ளத்தாக்கிலோ ஒரு கணவாயிலோ நடந்து சென்றால் அவர்கள் செல்கிற பள்ளத்தாக்கிலோ கணவாயிலோ தான் நானும் நடந்து செல்வேன்” என்று கூறினார்கள்.

புஹாரி : 3778 அனஸ் (ரலி).

635. ஹுனைன் போரின்போது ஹவாஸின் குலத்தார் (நபி-ஸல் அவர்களைப்) போர்க்களத்தில் சந்தித்தனர். அப்போது நபி (ஸல்) அவர்களுடன், (புனிதப் போர் வீரர்கள்) பத்தாயிரம் பேர் இருந்தனர். (மக்கா வெற்றியின் போது) மன்னிப்பளிக்கப்பட்டவர்களும் இருந்தனர். அப்போது (ஹவாஸின் குலத்தாரின் அதிரடித் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல்) அவர்கள் பின்வாங்கிச் சென்றனர். நபி (ஸல்) அவர்கள், ‘அன்சாரிகளே! (என்னாயிற்று உங்களுக்கு?)” என்று கேட்க, அவர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! உங்கள் அழைப்புக்கு பதிலளித்து உங்களுக்கு அடிபணிந்தோம். இதோ, உங்களுக்கு உதவக் காத்திருக்கிறோம். உங்கள் முன்னால் இருக்கிறோம்” என்று பதிலளித்தனர். நபி (ஸல்) அவர்கள் (தம் வாகனத்தைவிட்டு இறங்கி, ‘நான் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவேன்” என்று கூறினார்கள். (பிறகு, அந்தப் போரில்) இணைவைப்பவர்கள் தோற்றுவிட்டனர். பின்னர், நபி (ஸல்) அவர்கள் (மக்கா வெற்றியில்) மன்னிப்பளிக்கப்பட்டு (புதிய முஸ்லிம்களாக) இருந்தவர்களுக்கும் முஸாஜிர்களுக்கும் (போர்ச் செல்வத்தில் பங்கு) கொடுத்தார்கள். அன்சாரிகளுக்கு எதையும் கொடுக்கவில்லை. அன்சாரிகள் (தமக்குக் கொடுக்காததைக் குறித்து அதிருப்தியுடன்) பேசினர். உடனே நபி (ஸல்) அவர்கள், அன்சாரிகளை அழைத்து (தாமிருந்த) கூடாரத்தினுள் இருக்கச் செய்து, ‘இந்த மக்கள் ஆடுகளையும் ஒட்டகங்களையும் கொண்டு செல்ல, நீங்கள் அல்லாஹ்வின் தூதரையே கொண்டு செல்வதை விரும்பவில்லையா?’ என்று கேட்டார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள், ‘மக்கள் ஒரு கணவாயில் நடந்து செல்ல, அன்சாரிகள் வேறொரு கணவாயில் சென்றால், நான் அன்சாரிகளின் கணவாயையே தேர்ந்தெடுப்பேன்” என்று கூறினார்கள்.

புஹாரி: 4333 அனஸ் (ரலி).

636. அல்லாஹ், தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஹுனைன் நாளில் போர்ச் செல்வங்களை வழங்கியபோது உள்ளங்கள் இணக்கமாக்கப்பட்ட வேண்டிய (மக்கா வெற்றியின்போது புதிதாக இஸ்லாத்தை தழுவிய)வர் களிடையே (அவற்றைப்) பங்கிட்டார்கள். (மதீனாவாசிகளான) அன்சாரிகளுக்கு எதுவும் கொடுக்கவில்லை. மற்றவர்களுக்குக் கிடைத்தது போல் தமக்கும் கிடைக்காமல் போனதால் அவர்கள் கவலையடைந்தவர்களைப் போல் காணப்பட்டார்கள். எனவே, அவர்களிடையே (ஆறுதலாக) நபி (ஸல்) அவர்கள் உரையாற்றினார்கள். (அவ்வுரையில்), ‘அன்சாரிகளே! உங்களை வழிதவறியவர்களாக நான் காணவில்லையா?’ அல்லாஹ் என் மூலமாக உங்களுக்கு நேர் வழியை அளித்தான். நீங்கள் பிரிந்து (சிதறிக்) கிடந்தீர்கள். அப்போது அல்லாஹ் என் மூலமாக உங்களைப் பரஸ்பரம் நேசமுடையவர்களாக்கினான். நீங்கள் ஏழைகளாக இருந்தீர்கள். அல்லாஹ், என் மூலமாக உங்களுக்கு நேர்வழியை அளித்தான். நீங்கள் பிரிந்து (சிதறிக்) கிடந்தீர்கள். அப்போது அல்லாஹ் என் மூலமாக உங்களைப் பரஸ்பரம் நேசமுடையவர்களாக்கினான். நீங்கள் ஏழைகளாக இருந்தீர்கள். அல்லாஹ், என் மூலமாக உங்களைத் தன்னிறைவுடையவர்களாய் ஆக்கினான் (அல்லவா?)” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் (தம் வருகையால் அன்சாரிகள் அடைந்த நன்மைகளை) ஒவ்வொன்றாகச் சொல்லும் போதெல்லாம், ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே அதிக உபகாரம் புரிந்தவர்கள்” என்று அன்சாரிகள் கூறினர். நபி (ஸல்) அவர்கள், ‘அவ்வாறிருக்க, அல்லாஹ்வின் தூதருக்கு நீங்கள் பதிலளிக்கமாலிருப்பது எதனால்?’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் ஒன்றைச் சொல்லும் போதெல்லாம் அவர்கள், ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே மிகப் பெரும் உபகாரிகள்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘நீங்கள் விரும்பினால் இன்னின்னவாறெல்லாம் (நீங்கள் எனக்குச் செய்த உபகாரங்களை நினைவுபடுத்தும் வகையில்) சொல்ல முடியும். ஆனால், (இந்த) மக்கள் (நான் கொடுக்கும்) ஆடுகளையும் ஒட்டகங்களையும் (ஓட்டிக்) கொண்டு போக நீங்கள் உங்கள் இல்லங்களுக்கு இறைத்தூதரையே (என்னையே) உங்களுடன் கொண்டு செல்வதை விரும்பமாட்டீர்களா? ஹிஜ்ரத் (நிகழ்ச்சி) மட்டும் நடந்திருக்காவிட்டால் நான் அன்சாரிகளில் ஒருவனாய் இருந்திருப்பேன். மக்களெல்லாம் ஒரு கணவாயிலும் ஒரு பள்ளத்தாக்கிலும் சென்றாலும் நான் அன்சாரிகள் செல்லும் கணவாயிலும் பள்ளத்தாக்கிலும் தான் செல்வேன். அன்சாரிகள் (மேனியுடன் ஒட்டிய) உள்ளாடைகள் (போன்றவர்கள்) நீங்கள் எனக்குப் பின்னால் விரைவிலேயே (ஆட்சியதிகாரத்தில்) உங்களை விடப் பிறருக்கு முன்னுரிமை தரப்படுவதைக் காண்பீர்கள். எனவே, (எனக்குச் சிறப்புப் பரிசாக மறுமையில் கிடைக்கவிருக்கும்) ‘ஹவ்ள் (அல் கவ்ஸர்’ என்னும்) தடாகம் அருகே என்னைச் சந்திக்கும் வரை (நிலை குலையாமல்) பொறுமையுடன் இருங்கள்” என்று கூறினார்கள்.

புஹாரி :4330 அப்துல்லாஹ் பின்ஜைது பின் ஆஸிம் (ரலி).

637. ஹூனைன் போரின்போது நபி (ஸல்) அவர்கள் மக்கள் சிலருக்கு முன்னுரிமை வழங்கி அதிகமாகக் கொடுத்தார்கள். அக்ரஉ இப்னு ஹாபிஸ் (ரலி) அவர்களுக்கு நூறு ஒட்டகங்களைக் கொடுத்தார்கள். உயைனா (ரலி) அவர்களுக்கும் அது போன்றே கொடுத்தார்கள். (போரில் கிடைத்த பொருட்களைப்) பங்கிடும்போது பிரமுகர்களில் சிலருக்கு முன்னுரிமை வழங்கி அதிகமாகக் கொடுத்தார்கள். அப்போது ஒருவர், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! இது நீதியுடன் நடந்து கொள்ளாத ஒரு பங்கீடாகும். இது அல்லாஹ்வின் திருப்தி நாடப்படாத ஒரு பங்கீடாகும்” என்று கூறினார். நான், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் நபி (ஸல்) அவர்களுக்கு (இதைத்) தெரிவிப்பேன்” என்று கூறினேன். பிறகு நபி (ஸல்) அவர்களிடம் சென்று அதைத் தெரிவித்தேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நீதியுடன் நடந்து கொள்ளாவிட்டால் வேறு யார் தான் நீதியுடன் நடந்து கொள்வார்கள்? அல்லாஹ், (இறைத் தூதர்) மூஸா அவர்களுக்குக் கருணை புரிவானாக! அவர்கள் இதை விட அதிகமாக மனவேதனைக்கு ஆளாக்கப்பட்டார்கள். ஆயினும் (அதைச்) சகித்தார்கள்” என்று கூறினார்கள்.

புஹாரி: 3150 இப்னு மஸ்ஊத் (ரலி).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *