Featured Posts
Home » இஸ்லாம் » அகீதா » அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை (தொடர்-2)

அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை (தொடர்-2)

M.T.M.ஹிஷாம் மதனீ

அல் அகீததுல் வாஸிதிய்யா நூலின் ஆசிரியர்ஷைஹுல் இஸ்லாம் இப்னு தைமியா’ (ரஹ்) அவர்கள் பற்றிய குறிப்பு:

இவரின் பெயர் ‘அஹ்மத்’ ஆகும். இவரின் தந்தையின் பெயர் ‘அப்துல் ஹலீம்’ ஆகும். இவரின் பாட்டனார் ‘அப்துஸ்ஸலாம்’ ஆவார். இவரின் பூட்டனார் ‘தைமியா’ ஆவார். மேலும், இவர் ஹிஜ்ரி 661ம் ஆண்டு ரபீஉல் அவ்வல் மாதம் 10ந் நாள் ‘ஹர்ரான்’ என்ற இடத்தில் பிறந்தார். பின்பு தனது குடும்பம் சகிதம் ‘திமஸ்ஸுக்’ நகரை நோக்கிப் புறப்பட்டு அங்கேயே வாழ்ந்து வந்தார்.

இமாமவர்கள் மிகப்பெரிய அறிஞராகவும் பிரசித்திபெற்ற போராளியாகவும் இருந்தார்கள். இவர் உயிர்வாழும் காலத்தில் தனது சிந்தனை, அறிவு, தேகம் ஆகியவற்றைக் கொண்டு அல்லாஹ்வின் மார்க்கத்திற்காகப் போராடக்கூடியவராக இருந்தார். மேலும், இமாமவர்கள் அறிவின் உச்சநிலையை அடைந்திருந்தார்கள். தனக்கு மார்க்கத்திலிருந்து தெளிவான விடயங்களை செயலுருப்படுத்துவதில் மிகவும் துணிச்சல் மிக்கவராகக் காணப்பட்டார்;. இதனால் இவருக்கு அதிகமான விரோதிகள் காணப்பட்டனர்.

இவரின் பிற்பட்ட கால வரலாற்றில் இவருக்கு ஆட்சியாளர்களால் பல இடைஞ்சல்கள் நிகழ்ந்தன. பலமுறைகள் சிறையில் அடைக்கப்பட்டார். ஈற்றில் ஹிஜ்ரி 728ம் ஆண்டு ஸவ்வால் மாதம் 20ந் நாள் ‘திமஸ்க்’ கோட்டையில் சிறைவாழ்க்கை அனுபவித்துக் கொண்டிருக்கையில் மரணத்தைத் தழுவினார். அல்லாஹ் அன்னாரது பாவங்களை மன்னித்து சுவனபதியில் நுழையச் செய்வானாக.

இது இமாமவர்களின் அகீதா தொடர்பான பிரதான நூலாகும். அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள், பண்புகள், மற்றும் அல்லாஹ்வையும் மறுமைநாளையும் ஈமான் கொள்வது தொடர்பான விடயங்களில் ‘அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்’தினரின் நிலைப்பாடு, அவர்களின் செயல்சார்ந்த அம்சங்களுடன் தொடர்புபட்ட விடயங்கள் போன்றவற்றைத் தெளிவுபடுத்தக்கூடியதாக இந்நூல் அமைந்துள்ளது.

‘வாஸித்’ என்ற பிரதேசத்தைச் சேர்ந்த சில நீதிபதிகள் இமாமவர்களிடத்தில் வந்து, மக்கள் மன்றத்தில் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் நூதன அனுஸ்டானங்கள், மற்றும் மார்க்கத்திற்குப் புறம்பான அம்சங்கள் பற்றிக்கூறி அங்கலாய்த்தார்கள். அவர்களின் அங்கலாய்ப்பின் முடிவுரையில் அல்லாஹ்வின் திருநாமங்கள், பண்புகள், மற்றும் இந்நூலில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் தொடர்பாக ‘அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்’தினரின் கொள்கை கோட்பாடுகளைப்பற்றி எழுதித்தருமாறு விண்ணப்பித்தார்கள். இதன் பேறாகவே இந்நூல் பிரசவித்தது. இக்குழந்தைக்கு ‘அல் அகீததுல் வாஸிதிய்யா’ என்றும் நாமம் சூட்டப்பட்டது.

இன்ஷா அல்லாஹ் தொடரும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *