Featured Posts
Home » இஸ்லாம் » அகீதா » அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை (தொடர்-15)

அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை (தொடர்-15)

– M.T.M.ஹிஷாம் மதனீ

விதி பற்றிய விளக்கம்

وَالإيْمَانُ بِالقَدَرِ خَيْرِهِ وَشَرِّهِ

விளக்கம்:
இது ஈமானின் கடமைகளில் இறுதிப்பகுதியைத் தெளிவுபடுத்தும் வாசகமாகும். அதன்படி விதியைப்பற்றிய நம்பிக்கை, ஈமான் கொள்ள வேண்டியவற்றில் இறுதியானதும் மிக முக்கியமானதுமாக இருக்கின்றது. விதி எனும் பதத்திற்கு ‘கத்ர்’ என்று அறபு மொழியில் வழங்கப்படும். இப்பதத்தின் மூலம் அல்லாஹுத்தஆலாவினால் அனைத்து வஸ்துக்கள் மீதும் நிர்ணயம் செய்யப்பட்ட அளவீடு நாடப்படுகின்றது.

அல்லாஹுத்தஆலா அந்நிர்ணயத்தை வானங்கள் மற்றும் பூமையைப் படைப்பதற்கு ஐம்பது ஆயிரம் வருடங்களுக்கு முன்னதாக எழுதியுள்ளான். இதனைப் பின்வரும் ஆதாரங்கள் தெளிவுபடுத்துகின்றன. திருமறையில் அல்லாஹுத்தஆலா பிரஸ்தாபிக்கும் போது:

‘நிச்சயமாக அல்லாஹ் வானத்திலும், பூமியிலும் இருப்பவற்றை நன்கறிகிறான் என்பதை நீர் அறியவில்லையா? நிச்சயமாக இவை (லவ்ஹூல் மஹ்பூல் எனும்) ஏட்டில் உள்ளது. நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு எளிதானதாகும்.’ (அல் ஹஜ்: 70)

நபியவர்கள் கூறினார்கள்: ‘அல்லாஹுத்தஆலா வானங்களையும் பூமியையும் படைப்பதற்கு ஐம்பது ஆயிரம் வருடங்களுக்கு முன்னதாக படைப்பினங்களுக்கான விதியை எழுதிவிட்டான்.’ (முஸ்லிம்: 2653)

(خَيْرِهِ وَشَرِّهِ)

இது கத்ரினுடைய பண்புகளைப் பற்றிப் பேசும் வாசகமாகும். அதனடிப்படையில் கத்ரானது, நல்லதைக் கொண்டும் தீயதைக் கொண்டும் வர்ணிக்கப்பட்டுள்ளது. எனினும், அவற்றின் விளக்கங்கள் சற்று வேறுபடுகின்றன. கத்ரானது நல்லதாக இருப்பதைப் பொறுத்தளவில் அதன் விளக்கம் பட்டவர்த்தனமானது. ஆயினும், அது தீயதாக இருப்பதைப் பொறுத்தளவில் அதன் விளக்கத்தைச் சற்று விரிவாகப் பார்க்க வேண்டியுள்ளது.

அல்லாஹுத்தஆலா நிர்ணயம் செய்த கத்ரின் தீய பண்பானது, அல்லாஹ்வின் நாட்டப்படி இடம்பெற்ற செயலில் உள்ள தீய தன்மையை பற்றிக் குறிப்பிடுகிறது. மாற்றமாக, அவனது செயலாகவுள்ள கத்ரின் தீங்கைப் பற்றிக் குறிப்பிடமாட்டாது. ஏனெனில், அல்லாஹ்வின் செயலில் தீயது கிடையாது. அவனது அனைத்துக் காரியங்களும் சிறப்புமிக்கதாகவும், ஞானமுடையாதாகவும் இருக்கின்றன. எனவே, இங்கு தீயதானது, இடம்பெற்ற செயலின் தன்மையைக் கருத்திற் கொண்டேயன்றி அவனின் செயலைக் கருத்திற் கொண்டல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வடிப்படையைக் கருத்திற் கொண்டு தான் நபியவர்கள்: ‘இறைவா! தீங்கு உனக்குறியதன்று’ என்று தனது பிரார்த்தனையில் கூறியுள்ளார்கள். (முஸ்லிம்: 771) மேலும், இவ்விடயத்தை மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ள பின்வரும் விளக்கத்தைக் கூர்ந்து கவனியுங்கள்…..

நாம் அல்லாஹுத்தஆலாவின் படைப்புக்களில் மற்றும் நிர்ணயித்த அம்சங்களில் மனிதனுக்குத் தீங்கிழைக்கக்கூடிய பலவற்றை அவதானித்து வருகின்றோம். அந்தவிதத்தில் அவனது படைப்புக்களில் பாம்புகள், தேள்கள், வேட்டை மிருகங்கள், நோய்கள், ஏள்மை, வறுமை போன்ற பல அம்சங்களை இனங்காட்டலாம். இவை அனைத்தும் மனிதனுக்குக்கு உகந்ததாக அமையாததினால் தீயதாகக் கருதப்படுகின்றன. அதே போன்று பாவமான காரியங்கள், இறை நிராகரிப்பை எற்படுத்தக் கூடியவைகள், கொலை, கொள்ளை போன்றனவும் மேற்கூறப்பட்ட அடிப்படையைச் சாரும். எனவே, இவையனைத்தும் மனிதனுக்குத் தீயதாக இருந்தாலும் அல்லாஹ்விடத்தில் நன்மை பயக்கக்கூடியனவாக இருக்கின்றன. ஏனெனில், அல்லாஹுத்தஆலா இவற்றை மேலான ஞானத்தைக் கொண்டே நிர்ணயித்துள்ளான். அதனைப் புரியக்கூடியவர்கள் புரிந்து கொள்வார்கள், புரியாதவர்கள் மடமையில் சிக்கித்தவிர்ப்பார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *