Featured Posts
Home » இஸ்லாம் » அகீதா » அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை (தொடர்-23)

அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை (தொடர்-23)

– M.T.M.ஹிஷாம் மதனீ
அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் அவனது பண்புகளில் இல்ஹாத்
அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் அவனது பண்புகள் விடயத்தில் மேற்கொள்ளப்படும் இல்ஹாத் செயல்முறையை ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
1. அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் அவனது பண்புகளை சிலைகளுக்குப் பெயராகச் சூட்டுதல்

இச்செயல்முறையின் வெளிப்பாடாகவே அறியாமைக்கால மக்கள் தங்களது சிலைகளுக்குப் பெயர் சூட்டி வந்தனர். அதன்படி ‘இலாஹ்’ என்ற வார்த்தையில் இருந்து ‘லாத்’ என்ற பெயர் பிறந்ததாகவும், ‘அஸீஸ்’ என்ற வார்த்தையில் இருந்து ‘உஸ்ஸா’ என்ற பெயர் பிறந்ததாகவும், ‘மன்னான்’ என்ற வார்த்தையில் இருந்து ‘மனாத்’ என்ற பெயர் பிறந்ததாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

2. அல்லாஹ்வுக்கு பொருத்தமற்ற பெயர்களைச் சூட்டி அழைத்தல்

இதற்கு உதாரணமாக, கிறிஸ்தவர்கள் அல்லாஹ்வை ‘பிதா’ (தந்தை) என்று அழைப்பதையும், தத்துவவியலாளர்கள் அல்லாஹ்வை ‘மூலகாரணி’ என்று அழைப்பதையும் குறிப்பிடலாம்.

3. அல்லாஹ்வின் அந்தஸ்திற்குப் பங்கம் விளைவிக்கும் விதத்தில் அவனை வர்ணித்தல்

இதற்குச் சான்றாக யூதர்கள் அல்லாஹ்வை ஏழை என்றும், அவனது கைகள் கட்டப்பட்டுள்ளன என்றும், அவன் சனிக்கிழமைகளில் ஓய்வு எடுக்கின்றான் என்றும் வர்ணித்தவற்றைக் குறிப்பிடலாம்.

4. அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் அவனது பண்புகளின் கருத்துக்களையும் அதன் எதார்த்த தன்மைகளையும் மறுத்தல்

இல்ஹாதின் இப்பிரிவுக்கு ஜஹ்மிய்யாக்களின் செயற்பாடுகளைச் சான்றாக முன்வைக்கலாம். அவர்கள் அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் அவனது பண்புகள் குறித்துக் குறிப்பிடுகையில், ‘நிச்சயமாக அவை எவ்வித பண்புகளையும், கருத்துக்களையும் உள்ளடக்காத வெற்று வார்த்தைகளாகும்’ என்கின்றனர். மேலும், கூறுகையில்: ‘ஸமீஉ’ என்ற வார்த்தை செவியேற்றலைக் குறிப்பிடாது என்றும், ‘பஸீர்’ என்ற வார்த்தை பார்த்தலைக் குறிப்பிடாது என்றும், ‘ஹய்யு’ என்ற வார்த்தை உயிருடன் இருத்தலைக் குறிப்பிடாது என்றும் கூறுகின்றனர்.

5. அல்லாஹ்வின் பண்புகளைப் படைப்பினங்களின் பண்புகளுக்கு ஒப்பிடுதல்

இதற்கு உதாரணமாக அல்லாஹ்வின் பண்புகளில் ‘அத்தம்ஸீல்’ எனும் செயற்பாட்டை மேற்கொள்ளக்கூடியவர்களின் கருத்துக்களைக் குறிப்பிடலாம். அவர்கள் அல்லாஹ்வின் கையைப் பற்றிக் கூறும் போது, அவனது கை எமது கையைப்போன்றது என்கின்றனர்.

அல்லாஹுத்தஆலா தன்னுடைய பெயர்களிலும் அவனது பண்புகளிலும் இத்தகைய இல்ஹாத் நடவடிக்கையை மேற்கொள்வோரைக் கடுமையான வேதனையைக் கொண்டு எச்சரித்துள்ளான். அல்லாஹ் கூறுகின்றான்:

‘அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. அவற்றைக் கொண்டே அவனைப் பிரார்த்தியுங்கள். அவனது பெயர்களில் திரிபுபடுத்துவோரை விட்டுவிடுங்கள். அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிற்காக அவர்கள் கூலி வழங்கப்படுவார்கள்.’ (அல் அஃராப்: 180)

மேலும் கூறுகையில்:

‘நிச்சயமாக எவர்கள் நமது வசனங்களைத் திரிபுபடுத்துகின்றார்களோ அவர்கள் நம்மிடமிருந்து மறைந்து விட மாட்டார்கள். மறுமை நாளில் நரகத்தில்;; எறியப்படுபவன் சிறந்தவனா? அல்லது அச்சமற்றவராக வருபவரா? நீங்கள் விரும்பியதைச் செய்து கொண்டிருங்கள். நிச்சயமாக அவன் நீங்கள் செய்பவற்றைப் பார்ப்பவன்.’ (புஸ்ஸிலத்: 30)

لأنه سبحانه لا سمي له ولا كفء له ولا ند له , ولا يقاس بخلقه سبحانه وتعالى . فإنه سبحانه أعلم بنفسه وبغيره وأصدق قيلا وأحسن حديثا من خلقه .

விளக்கம்:

அல்லாஹ்வுக்கு ஏன் உவமை கிடையாது?

இவ்வசனத்தின் துவக்கத்தில் இமாமவர்கள் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள் ஏன் அல்லாஹுத்தஆலாவுக்கு ஒப்புவமை கூறுவதில்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தினரைப் பொறுத்தளவில் அவர்கள் பின்வரக்கூடிய அல்குர்ஆன் வசனங்களை கருத்திற்கொண்டு அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் அவனது பண்புகள் விடயத்தில் தமது கொள்கைக்கான காரணங்களைத் தெளிவுபடுத்தியுள்ளனர்.

  • ‘அவனுக்கு நிகராக எவரையேனும் நீர் அறிவீரா?’ (மர்யம்: 65)
  • ‘மேலும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை’ (அல் இஹ்லாஸ்: 4)
  • ‘எனவே, அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கு இணையாளர்களை ஏற்படுத்தாதீர்கள்.’ (அல்பகரா: 22)

இத்திருவசனங்களின் கருப்பொருட்களை மையமாக வைத்து அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத்தினரைச் சேர்ந்தவர்கள் கூறும்போது, அல்லாஹ்வின் பெயருக்குப் பாத்திரமாக உலகில் வேறு எவரும் இல்லை என்றும், அவனுக்கு ஒப்பாக அல்லது நிகராக ஆற்றல்படைத்தவர்கள் எவரும் இருக்க முடியாது எனவும் கூறுகின்றனர்.

இது தவிர ‘எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு உதாரணம் கூறாதீர்கள்.’ (அந்நஹ்ல்: 74) என்ற திருக்குர்ஆன் வசனத்தை வைத்து அவனை படைப்பினங்களுடன் ஒப்பிட முடியாது எனக் கூறுகின்றனர். இப்படியிருக்க சிந்திக்கும் ஆற்றல் படைத்த எவராவது பூரணத்துவம் மிக்க படைப்பாளனை குறைகள் நிறைந்த சிருஷ்டிகளுடன் ஒப்பிடுவாரா? மாற்றமாக அல்லாஹுத்தஆலா, தன்னையும் பிறரையும் பற்றி நன்கறிந்தவனாக இருக்கின்றான். எனவே, அதனைக் கருத்தில் கொண்டு அவன் தன்விடயத்தில் உறுதிப்படுத்தியவற்றை நாமும் உறுதிப்படுத்த வேண்டும்.

மேலும், படைப்பினங்களிடத்தில் அவனைப்பற்றிய பூரண அறிவு கிடையாது. அல்லாஹுத்தஆலாவோ படைப்பினங்களின் சிந்தனைக் கொட்டாத பூரண பண்புகளைக் கொண்டு வரணிக்கப்பட்டுள்ளான். எனவே, அல்லாஹ் தனக்குப் பொருந்திக் கொண்டவற்றை நாமும் அவனுக்குப் பொருந்திக் கொள்ள வேண்டும். ஏனெனில், அவனுக்குத்தகுதியானவற்றை அவனே நன்கறிந்தவனாகவுள்ளான். நிச்சயமாக அவன் அறிவித்தவை அழகானதும் உண்மையானதுமாகும். நாம் என்றென்றும் அவற்றை உண்மைப்படுத்தக்கூடியவர்களாகத் திகழ்வோமாக!

3 comments

  1. Assalamu Alaikum,

    Can we have PDF version of these series of files and also for any articles.

    i mean in addition to print and email

  2. நிர்வாகி

    Dear bro. Sameed,

    Go to each article and use the print button in the right-top corner of article page, then you can create PDF page if you have pdf writer.

    Regards
    Admin

  3. Beautiful series! zazakallahu khairan may ALLAH bring more articles thorough you! may ALLAH increase your knowledge in HIS dheen! thank you brother hishaam! thank you admin! Eagerly waiting for the complete set of ‘aqeedathul waasidiya”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *